Thursday 31 May 2018

சுவர் வகை

சுவர் வகை
மதில் – அரண்மனை, கோயில், நகர் போன்றவற்றைச் சுற்றிப் பாதுகாப்புக்காக எளிதில் ஏறமுடியாதவாறு, உயரமாக அமைக்கப்பட்ட சுவர்.
இஞ்சி – பெருங்கற்களுக்கிடையே செம்பு வார்த்து உருக்கி ஊற்றி உறுதியாக அமைக்கப்பட்ட மதில்
எயில் – கோட்டைச் சுவர், மதில்
கட்டை மண் சுவர் – வீடு, களம் அல்லது சிறு மைதானத்தைச் சுற்றி வெறும் மண்ணைக் குழைத்து கழுத்தளவு உயரத்திற்கு மேற்படாதவாறு அமைக்கப்படுகின்ற மண் சுவர்.
மண்சுவர் – முழுவதும் மண்ணால் கட்டப்படும் சுவர் ; கற்களும் மண்சாந்துமிட்டுக் கட்டப்படும் சுவரும் மண்சுவர் என்றே அழைக்கப்படுகிறது.
கற்சுவர் – கற்களை அடுக்கிக் கட்டப்படும் சுவர்
செங்கல் சுவர் – சுட்ட செங்கல் பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்
பச்சவெட்டுக்கல் சுவர் – சுடாத செங்கல் கொண்டு கட்டப்பட்ட சுவர் (Adobe wall - wall built with sun -dried bricks)
காரைச் சுவர் – சுண்ணாம்புக்காரையைச் சாந்தாகப் பயன்படுத்திக்கட்டப்பட்ட சுவர்
சுண்ணாம்புச் சுவர் – செங்கல் அல்லது கற்களுக்கிடையிலான சந்துகளில் சுண்ணாம்புக் காரையினைச் சாந்தாகப் பயன்படுத்திக் கட்டப்பட்ட சுவர்
சிமெண்ட் சுவர் – செங்கல், கற்களுக்கிடையில் சிமென்ட் காரையினைச் சாந்தாகப் பயன்படுத்திக் கட்டப்பட்ட சுவர்.
சுற்றுச் சுவர் – வீடு, அலுவலகம் மற்றும் கட்டிடங்களுக்கு வெளியே அதனைச் சுற்றி அமைக்கப்படும் சுவர்
கோட்டைச் சுவர் – கோட்டையைச் சுற்றிக்கட்டப்பட்ட சுவர்; பிற்காலத்தில் கோட்டை மதில் போல உயரமாகக் கட்டப்படும் சுற்றுச் சுவர், கோட்டைச் சுவர் என்று அழைக்கப்படுகிறது.
பிள்ளைச் சுவர் – ஒரே அறையினை இரண்டாகப் பிரிக்கின்ற இடுப்பளவு உயரமேயுள்ள சுவர்
கைப்பிடிச் சுவர் – கிணற்றினைச் சுற்றி அமைப்பது (parapet wall) சாய்வான படிக்கட்டுகள், பால்கனி என்னும் மாடம் போன்றவற்றின் ஓரம் கைத்தாங்கலாக அமைக்கப்படும் சுவர்
அணைச்சுவர் – கட்டிடத்தை ஒட்டி சுவரின் பாதுகாப்புக்காக, அதை அணைத்தாற்போல் கட்டப்படும் சிறுசுவர் (buttress)
இடைச் சுவர் – தொழுவம், லாயத்தில் நடுநடுவே அமைக்கும் சுவர், அரங்கம் போன்றவற்றில் வகுப்பு வாரியாகப் பிரிப்பதற்காக அமைக்கப்படும் சுவர்கள்
மாடச் சுவர் – மாடம் அமைந்த சுவர்
தட்டட்டிச் சுவர் – தட்டட்டி(மாடித் தாழ்வாரம்)யினை அமைக்கும் சுவர்.
குட்டிச் சுவர் – இடிந்த சுவர், பயனிழந்த சுவர்;
ஆறு, குளத்தங்கரைச் சுவர்
அணைக்கரைச் சுவர்
தடுப்புச் சுவர் –
தீண்டாமைச் சுவர் – மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்கள் நுழையாமலிருப்பதற்கென அமைத்த சுவர் தீண்டாமைச் சுவர் என அழைக்கப்பட்டது. பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அந்தச் சுவர் இடிக்கப்பட்டது.
கண்ணாடிச் சுவர் –
கல்மரச்சுவர் - இமாசலப் பிரதேசப்பகுதிகளில் கல்லும் மரக்கட்டைகளும் மட்டும் கொண்டு அமைக்கப்படும் சுவர்.
முகநூல் பதிவு 29.05.2018

தடியங்காய் என்னும் வெள்ளைப் பூசணி

தடியங்காய் என்ற சாம்பல் பூசணி
தண்ணீர்ச் சத்து நிறைந்த தடியங்காய் என்று அழைக்கப்படும் சாம்பல் பூசணி பெனின்காசா ஹிஸ்பிடா (Benincasa Hispida) என்ற தாவரவியல் பெயர் கொண்டது. ஆங்கிலத்தில் Ash gourd, Wax gourd, White gourd, Winter Gourd, tallow gourd, Ash pumpkin, Fuzzy gourd எனப் பல பெயர்களில் வழங்கப்படும் இந்தக் காய் தமிழிலும் சாம்பல் தடியங்காய், வெள்ளைப் பரங்கி, வெள்ளைப் பூசணிக்காய், சாம்பல் பூசணிக்காய், திருஷ்டிப் பூசணிக்காய், கும்மளங்காய், தண்ணிக்காய் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்காயின் தாயகம் தென்கிழக்கு ஆசியா எனப்படுகிறது.
தடியங்காய் வகையைச் சேர்ந்ததும் தடியங்காய் என்றும் இளவன்காய் என்றும் அழைக்கப்படுவதான ஒரு வகைக் காய் கேரளாவிலும் நாஞ்சில் நாட்டிலும் கிடைக்கிறது. இளவன்காயும் ஆங்கிலத்தில் ash gourd என்றே அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் நாஞ்சில் தவிர்த்த அனைத்துப்பகுதிகளிலும் சாம்பல் தடியங்காயே கிடைக்கிறது. இளவன் காய் சாம்பல் நிறத்துக்கு மாறுவதில்லை. பசிய நிறத்திலேயே இருக்கிறது. வடிவத்திலும் சாம்பல் தடியங்காயிலிருந்தும் வேறுபட்டு முக்காலடிக்கு மேல் ஒரு அடி விட்டமும் நான்கு முதல் ஆறு அடிவரையிலான நீள்வட்ட உருளை வடிவக் காய்களாகவே கிடைக்கின்றன. காய்கறிக்கடைகளில் வட்டு வட்டாக வெட்டிக் கொடுப்பார்கள். இதே காய்கள் கறுப்பு நிறத்திலும் வெளிநாடுகளில் கிடைப்பதாக இணையத்தில் குறிப்புகள் உள்ளன.
நாஞ்சில் நாட்டுக்கிராமங்களில் இளவன்காய் என்ற இந்தத் தடியங்காயை புளிக்கறி, புளிசேரி என்ற மோர்க்குழம்பு மற்றும் எல்லாக்காய்கறிகளும் சேர்த்துச் சமைக்கும் சாம்பார் என்ற குழம்பு வகைகளிலும் கூட்டவியலிலும் போடுவதுண்டு.
அதிலும் தடியங்காய்ப் புளிக்கறி எப்படியும் வாரத்தில் இரு முறையாவது சமைக்கப்படுவதுண்டு. வேகவைத்த தடியங்காயோடு தேங்காய் சீரகம் மிளகாய்வற்றல் அரைத்துப்போட்டு துவரன் மற்றும் கூட்டு செய்வதும் வழக்கம். தடியங்காயை மிகச்சிறு சிறு துண்டுகளாக அரிந்து வேகவைத்து, அதனுடன் பச்சைமிளகாய், சீரகம், சிறிது தேங்காய் அரைத்துச் சேர்த்துத் தாளித்து இறக்கியபின் தயிர் சேர்த்து தயிர்ப்பச்சடி செய்வார்கள். இந்தத் தயிர்ப்பச்சடி கட்டிப் பருப்பு போட்டுப் பிசைந்து சாப்பிடும் சாதத்துக்கும், இரண்டாவதாகச் சாம்பார் ஊற்றிச் சாப்பிடும் சாதத்துக்கும் மிகப் பொருத்தமான ஒன்று. நாஞ்சில் நாட்டுத் திருமண விருந்துகளில் தயிர்ப்பச்சடி, தவிர்க்கப்படாமல் கண்டிப்பாகச் சேர்க்கப்படுகிற ஒரு தொடுகறி.
ஆகவே எங்கள் வீட்டிலும் இளவன்காய் அடிக்கடி சமைக்கப்படுகின்ற ஒரு காயென்பதால் சிறுவயதிலிருந்தே அந்தக் காயின் சுவை எங்களுக்குப் பழக்கமான ஒன்று.
பொதுவாகவே நாஞ்சில் பகுதியில் தடியங்காய், வெள்ளரிக்காய்(கீரைக்காய்) மற்றும் பூசணிக்காய் ( மஞ்சள் பூசணி, சர்க்கரைப் பூசணி. அரசாணி) வகைகள் உணவில் எவ்வித வெறுப்புமில்லாமல் அதிகமாகவே சேர்க்கப்பட்டு வந்தன. வெள்ளரிக்காய் தடியங்காயைப் போலவே பயன்படுத்தப்பட்டது. உணவுவிடுதிகளில் இட்லி, தோசை, ஆப்பத்துக்கு பெருவாரியாக பூசணிக்காய் சாம்பார் பரிமாறுவார்கள். சாம்பார், தீயல் குழம்புவகைகளிலும் பெரும்பயறு சேர்த்துக் கூட்டாகவும் உளுந்தம்பருப்பு, தேங்காய் வறுத்துப் போட்டு பூசணிக்காய்ப் பொரியலாகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டது. வாரத்தில் ஒருநாள் சுடுகஞ்சி சாப்பிடுவது வழக்கம். அதற்குத் தொட்டுச் சாப்பிடப் பெரும்பயறும் பூசணிக்காயும் போட்டுக் கட்டியாக வைக்கும் தீயல் மிகப் பிரபலம்.
நெல்லைப்பகுதியில் இளவன்காய் கிடையாது; சாம்பல் தடியங்காய்தான். அதுவும் கடலைப் பருப்போடு சிறிதளவு தேங்காய் சீரகம் அரைத்துப் போட்டு கூட்டாகச் செய்து சாப்பிடுவார்கள்.
நெல்லைப்பகுதி திருமண விருந்துகளில் வாழைக்காய் புட்டு, தடியங்காய் கூட்டு, அவியல், வெண்டைக்காய் அல்லது மாங்காய்ப்பச்சடி என்பது கண்டிப்பான நால் வகைக்கறியாகப் பரிமாறப்படும். நெல்லைப் பகுதிக்கடைகளில் தடியங்காயை நீட்டு நீட்டுக்கு அரிந்து தருவார்கள். அதற்குப் பத்தை என்று பெயர். அநேகமாக எல்லாக் காய்கறிக்கடைகளிலும் தடியங்காய்ப் பத்தை கிடைக்கும். சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வேலூர் மற்றும் சென்னைப் பகுதிகளில் சாம்பல் தடியங்காய், வெள்ளைப் பூசணி என்றும் திருஷ்டிப் பூசணி என்றும் அழைக்கப்படுகிறது. இக்காய்கள் இங்கே மிகச் சிறிதளவே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. உழவர் சந்தையில் எல்லாக் காலங்களிலும் இந்தக்காய்கள் விற்பனைக்குக் கிடைத்தாலும் சமையலுக்கு வசதியாகச் சிறு துண்டுகளாக வெட்டித் தருவது மிகக் குறைவே.
குடியிருப்புப் பகுதிகளிலுள்ள சில்லறை விற்பனைக் காய்க்கடைகளில் இக்காய்கள் கிடைப்பதேயில்லை. புதுமனை புகுவிழா வீடுகள், வணிகத் தலங்கள், அலுவலகங்களில் திருஷ்டிக் காயாக முன்வாசலில் கட்டித்தொங்கவிடப்படுகின்றன. வாகனங்களுக்குப் பூஜை போடும்போதும் அமாவாசை, ஆயுத பூஜை போன்ற முக்கிய நாட்களில் திருஷ்டி கழித்துத் தெருவில் உடைத்து மஞ்சள் குங்குமம் தடவி அப்படியப்படியே சாலையில் கிடத்தப்படுகின்றன. அவை கால் நடைகளுக்கு உணவாகின்றன அல்லது நான்கு சக்கர ஊர்திகளின் சக்கரங்களில் மாட்டி அரைபட்டு வீணாகின்றன. இப்படி எறியப்படும் பூசணித்துண்டுகளால் சில நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் தடுமாறி விபத்துகள் ஏற்படுவதுமுண்டு. இவை நம்பிக்கை சார்ந்த விஷயங்களென்பதால் நாம் குறைசொல்வதற்கில்லை. ஆனால் இதனாலும் ஒரு வகையில் இக்காய்களைச் சாகுபடி செய்பவர்களும் சில்லறை வணிகர்களும் ஏதோ ஒரு விதத்தில் பயன்பெறுகின்றனர்.
பொதுவாகவே இப்பகுதியில் உருளைக்கிழங்கு, வாழை, கத்தரி, வெண்டை, அவரைக்காய்கள், சேப்பங்கிழங்கு, கருணை(சேனை)க் கிழங்கு, காரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, பீட்ரூட் முள்ளங்கி போன்ற காய்கறிகளையும் கீரை வகைகளையுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். சௌசௌ, பூசணி, கீரைக்காய், பீர்க்கு, சுரை போன்றவை நீர்க்காய்களென்றும் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதால் நீர்க்கோர்வை ஏற்படலாமென்றும் அவற்றைத் தவிர்க்கின்றனர். ஆரியபவன் போன்ற உணவுவிடுதிகளில் தடியங்காய்க்கூட்டு பரிமாறுகிறார்கள்.
வடநாட்டினர், குறிப்பாக ஆக்ராவில் இத் தடியங்காயைச் சர்க்கரைப் பாகில் வேகவைத்து பேடா செய்கின்றனர். இங்கும் திருமணவீடுகளில் தடியங்காயை அல்வா செய்கின்றனர்.
அம்பாசமுத்திரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலுள்ள ஒரு லாலாக்கடையில் தடியங்காய் முரப்பா கிடைத்து வந்தது. என்னுடைய பெரியப்பா ஒருவருக்கு அந்த முரப்பா பிடிக்கும். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போது அதைத்தான் வாங்கி வருவது வழக்கம்.
அண்மையில் கிடைத்த ஒரு தகவலில் பெண்களின் மாதவிடாய் நாட்களிலேற்படும் சிக்கல்களுக்கு வெண்பூசணிச் சாறு சிறந்த மருந்து எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் முழுதாக ஒரு வெண்பூசணி வாங்கி வந்து அரைக்கிலோ அளவுக்கான காயைச் சுத்தம் செய்து விதை, குடல் பகுதியை நீக்கித் தோலோடு பொடியாக அரிந்து மிக்சியிலிட்டு அரைத்து அப்படியே என் மகளுக்குக் கொடுத்ததில் அதை குடிக்கச் சிறிது சிரமமாக இருப்பதாகக் கூறியதால் வடிகட்டிக்கொடுத்ததில் சோர்வு அகன்று, ஆரோக்கியமான ஒரு மனநிலை ஏற்படுவது தெரிந்தது. அதனால் இப்போது முடிந்த போதெல்லாம் வெண்பூசணி வாங்கி வந்து சாறு எடுத்து நான், என் மனைவி மற்றும் மகள் சாப்பிட்டு வருகிறோம். பேத்தி முகத்தைச் சுழித்து அய்யோ, இதைப்போய்க் குடிக்கிறீர்களேயென்கிறாள்.
காயை அரிந்து நீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே மிக்கியிலிட்டு அரைத்து வலைவடிகட்டியிலிட்டுப் பிழிந்தெடுத்த சாற்றினை அப்படியே அருந்தலாம். குடிப்பதற்கு எந்தச் சிரமமுமில்லை.
தடியங்காய் காலங்காலமாக இந்தியாவில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு காய். இதன் மருத்துவப் பயன்கள் மற்றும் சத்துகள் குறித்து ஆயுர்வேத நூல்களில் வெகுவாகச் சொல்லப்பட்டுள்ளதென்கின்றனர்.
உயிர்ச்சத்து பி- 1, பி- 2, பி- 3 , பி – 5, பி- 6 மற்றும் சி ஆகிய வைட்டமின்களையும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மங்கனீஸ், சோடியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் ஆகிய தாதுக்களையும் வெண்பூசணி கொண்டுள்ளது.
96 சதவீத நீர்ச்சத்து கொண்ட சாம்பல் பூசணி எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு.
ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் டானிக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வலிப்பு, மனநோய் போன்ற நரம்பு மூளை நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரத்தன்மை காரணமாக அமிலத் தன்மை மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு மருந்து. ஆஸ்துமா, சிறுநீரகக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதிலும் உதவுகிறது.
வெண்பூசணிச்சாறு
1. சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும்.
2.மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
3.வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.
4.உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
5.உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால் மூட்டுவலியைக் குறைக்கும்
6. உடலில் அமிலத்தன்மையை சமன்படுத்த பெரிதும் உதவுகிறது.
7. வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து பல நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகிவிடுமென்றும் குறிப்பிடுகின்றனர்.
8. மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களை வெளியேற்றும்
9. கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற்ற உதவுகிறது.
10. தூக்கமின்மைக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல், கபம் போன்றவற்றை நீக்கும்.
இத்தனை நன்மைகள் கிடைக்கமென்னும் போது இக்காயை வாரமிருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது அறிவுடைமையாகுமென்பது உறுதியாகிறது. நாமே இக்காயைச் சாப்பிடாமல் ஒதுக்கிவந்ததால் நமது மகன், மகள் தலைமுறையே இக்காயைச் சாப்பிட முன்வராமல் முகத்தைச் சுழிக்கின்ற நிலைமையிருக்கும்போது அதற்கடுத்த தலைமுறையான பேரப்பிள்ளைகளுக்கு எப்படிப் பழக்குவது?
இக்காயை உணவில் பயன்படுத்துவதோடு, குடும்பத்தினர் எல்லோரையும் உண்ணும் வகையில் அதனைச் சமைப்பதெப்படியென்றும் சிந்திப்பது அவசியமாகிறது. வெண்பூசணிச் சாறு சாப்பிடுவது சாதாரணமாக பழச் சாறு சாப்பிடுவது போன்றதுதான். உண்மையில் சொல்லப்போனால் அது பழம் தான். சமையலுக்கு அதிகம் பயன்படுவதால் அதனைக் காயென்கிறோம். நன்றி.

Sunday 27 May 2018

சங்க இலக்கியத்துளிகள் - 17 ஓரில் பிச்சை

சங்க இலக்கியத் துளிகள் – 17
ஓரில் பிச்சை
கற்பு – பாலை – பொருள்வயிற் பிரிந்த தலைமகன் வருகின்ற பருவம் குறித்து அறிவரிடம், தோழி கேட்டு அறியும் கூற்று. .
அறிவர் ஒருவர், கமண்டலம் மற்றும் பிச்சைப் பாத்திரத்துடன் தலைமகன் வீட்டின் முன்பு வருகிறார். தலைமகனோ, பொருள் தேடி வேற்றுநாடு சென்றிருக்கிறான். வருகின்ற வாடைக்காலத்தில் திரும்பிவிடுவதாகவும், அதுவரையில் தோழியுடன் ஆற்றியிருக்குமாறும் தலைவன் கூறியபடி தலைவி ஆற்றியிருக்கிறாள். தலைவன் இல்லாத வீட்டில் அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் விருந்து எதிர்கோடலுமாகிய அறச்செயல்கள் (சிலம்பு, கொலைக்களக்காதை -71 – 73) செய்வதில்லை. அதனால், தோழி, அறிவரிடம் `மின்னிடை நடுங்கும் கடைபெயல்வாடை எக்கால் வருவது` எனக்கேட்கிறாள். அவரும் பதில் சொல்கிறார். அக்காலமே இந்த வீட்டின் தலைமகனாகிய எங்கள் காதலர் வரும் காலமெனக் கூறும் தோழி, “ குற்றங்களற்ற தெருவில் நாய் இல்லாத அகன்ற நடை வாசலுடைய வீட்டில் நல்ல சம்பா அரிசிச் சோறும் நரை எருமையின் வெண்ணிற வெண்ணெயும் ஓரு வீட்டுப் பிச்சையாகவே கிடைத்து, ஆற அமர அங்கேயே இருந்து உண்டு, குடிப்பதற்காக முன்பனிக்காலத்திற்கு இதமான வெந்நீரும் தங்கள் செப்புக்குவளையில் பெறுவீராக என உளமாற வாழ்த்துகிறாள்.
பாடல் :
ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடைச்
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓரில் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே 5
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை
எக்கால் வருவதென்றி
அக்கால் வருவர் எம் காதலோரே.
குறுந்தொகை 277, ஓரில் பிச்சையார், பாலைத் திணை – தோழிசொன்னது

அடிநேருரை:
ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடை – குற்றங்களற்ற தெருவில் நாய் இல்லாத அகன்ற நடைவாயிலுள்ள வீட்டில்;
செந் நெல் அமலை வெண்மை வெள் இழுது – சிவப்புச் சம்பா அரிசிச் சோறும் நரை எருமையின் வெண்ணெயும்
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – ஒரு வீட்டுப் பிச்சையாகவே கிடைத்து, அங்கேயே ஆற அமர உண்டு முடித்து;
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் – பனிக்காலத்திற்கு இதமாகக் குடிப்பதற்கான வெந்நீரினை;
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே – உங்கள் செப்புக்குவளையில் சேமிக்கவும் பெறுவீராக
மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை – இடையிடையே மின்னல் நடுங்குகின்ற கடைசி மழை பெய்து முடிகின்ற வாடைக்காலம்;
எக்கால் வருவது என்றி – எப்போது வருமெனச் சொன்னீர்கள்
அக்கால் வருவர் எம் காதலோரே – அப்போதே இந்த வீட்டின் தலைமகனான எங்கள் காதலோரும் வருவார்.
அருஞ்சொற்பொருள் :
ஆசு – குற்றம்; வியன்கடை – அகன்ற வாயில்; அமலை - சோற்றுத் திரள் ; வெண் மை – வெண்மை நிறமுள்ள எருமை; நரை எருமை; வெள் இழுது – வெண்ணெய்; அற்சிரம் – பனி; வெய்ய – விரும்பத்தக்க, இதமான; சேமச் செப்பு – மூடியுள்ள செம்புக்குவளை, கமண்டலம்; பெறீஇயர் – பெறுவீராக.
கவிதை நயம் :
அறிவர், பிச்சை கேட்டு வந்திருக்கிறார். தலைவன் இல்லாததால் அறவோர்க்கு அளிக்கும் வீட்டுச் சூழல் இல்லை. சாதாரணமாக வீடுகளில் பிச்சை கேட்டு வருவோரிடம், `இல்லை` எனச் சொல்லாமல், கைச் சோலி, அப்புறம் வா, என்றோ அடுத்த வீட்டில் பாரப்பா என்றோ சொல்வதுதான் இன்றும் வழக்கமாக இருக்கிறது.
வீடான வீட்டில் இருந்துகொண்டு `இல்லை` எனச் சொல்வதை அமங்கலமென்றே கருதுகின்றனர். அதே கருத்தில் தான் தோழி அறிவரிடம் `இல்லை` எனச் சொல்லாமல், வாடைக்காலம் எப்போது வருமெனக் கேட்கிறாள். அவரும் விரைவில் வருமென்றோ, நல்வாக்காக ஏதோ பதில் சொல்கிறார். அக்காலத்தில் தான் எங்கள் காதலர் வருவார் எனக் கூறுவதன் மூலம் வீட்டில் தலைவன் இல்லை, அதனால் அறவோர்க்களித்தல் இல்லையென்பது தெரிவிக்கப்படுகிறது.
அறிவர் நல்வாக்கு தெரிவித்ததில் மகிழ்ந்த தோழி, அறிவருக்கு நல்லது நடக்க வேண்டுமென வாழ்த்துவதுதானே இயல்பு; அதன்படியே தோழி வாழ்த்துகிறாள். பிச்சையேற்று உண்பவருக்குப் பெரிதாக விருப்பம் எதுவாக இருக்க முடியும்? குற்றங்கள் அற்ற தெருவெனில், குற்றங்கள் புரிவோரல்லாத நன்மக்கள் வாழ்கிற தெரு என்றும் அசுத்தங்கள், கறைகள் அற்ற, கண்ணுக்கு மகிழ்ச்சியான தெரு என்றுமாகிறது. பிச்சை கேட்டுச் செல்பவருக்குப் பெருந்தொல்லை இன்றளவும் நாய்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால் நாய்கள் இல்லாத வீடு என்கிறாள் தோழி. அதோடு வியன்கடை எனக்குறிப்பிடுகிறாள். வியன்கடை என்பது அகன்ற வாயிலும் முற்றமும் இருப்பதால் அங்கேயே அமர்ந்து உண்பதற்கு ஏற்ற இடம். உண்பதற்கு வேற்றிடம் தேடவேண்டிய இடர் ஏதுமில்லையாகிறது. அதுவும் நல்ல சிவப்புச் சம்பா அரிசிச் சோறும் எருமை வெண்ணெய், அதுவும் வெள் இழுது என்னும்போது அன்றே கடைந்தெடுக்கப்பட்டதும் வேண்டிய அளவுக்கு ஒரு வீட்டிலேயே கிடைத்து, அங்கேயே அமர்ந்து நிறைவாக உண்டு முடித்து, குடிப்பதற்கும் பனிக்காலத்திற்கு இதமான வெந்நீரும் கமண்டலத்தில் சேமிக்கும் அளவுக்குப் பெறுவீராக` என நெஞ்சம் நிறைய வாழ்த்துவது மிகவும் இயல்பாகவும் உள்ளது.
இந்தப் பாடலின் தொனி மிக இயல்பாகக் கிராமத்து மக்கள், தம் மனம் மகிழ்ந்து பாராட்டும் போது, எட்டுப்பிள்ளை பெறுவாய், நல்ல மனைவி வருவாள் என வாழ்த்துகின்ற பாணியில் அமைந்து இன்புறுத்துவதாயுள்ளது.
இதையே, தலைவன் வந்த பிறகு வாருங்கள், எட்டு கவளங்கள் பெறுவதற்காக எட்டு வீட்டுக்குச் செல்லாமல், எமது ஒரு இல்லத்திலேயே உணவோடு வெந்நீரும் தருகிறோமென்று கூறுவதாகவும் பொருள் கொண்டிருக்கிறார்கள். கவிதையில் வரும் `மின்னிடை நடுங்கும்` என்ற தொடருக்கு மின்னலைப் போன்ற இடையையுடைய தலைவி நடுங்குதற்குக் காரணமான எனப் பொருள் வருவித்துள்ளனர்.
பேராசிரியர் சுந்தர சண்முகனார் என்ற தமிழறிஞரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான `இன்ப வாழ்வு` என்ற நூலில் `ஓரில் பிச்சை` கட்டுரையில் ஒரு வீட்டிலேயே முழு உணவும் கிடைத்துவிட்டால் அது விருந்து என்றும் பல வீட்டில் கிடைத்தால் தான் பிச்சை என்றும் அதனால் ஓரில் பிச்சையில் முரணுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறாகப் பலரும் அவரவர் புரிதலுக்கேற்பப் பொருள் கொண்டுள்ளனர்.
இக்கவிதை இயற்றப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இதுகாறும் எத்தனையோ தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் காலங்காலமாக இப்பாடலை வாசித்து இதன் பொருளை உன்னியறிந்து போற்றிப் பாராட்டி வியந்து, விவாதித்துமிருப்பார்கள். இன்றும் அதன் புதுமைப் பொலிவினை இழந்துவிடாதிருக்கும் இப்பாடல் குறித்து எனக்குள் ஏற்படுகின்ற ஒரு கேள்வி : தலைவி, தலைவன் மீது கொண்ட காதலையும் தோழி தலைவியின் மீதும் தலைவன் மீதும் கொண்டுள்ள அக்கறையினையும் உணர்த்துவதற்காகவா, அக்கவிஞர் இக்கவிதையை யாத்திருப்பார்? `ஓரிற் பிச்சை` குறித்து அவருக்குள் ஏற்பட்ட உணர்வினைப் பதிவு செய்யவிரும்பிக் கவிதையாக்க முனைந்தவருக்கு தமிழ்க்கவிதை மரபின் பாலைத்திணை வசதியானதாகத் தோன்றியிருக்கும். அதன் வரையறைகளுக்குள் அவர் விரும்பிய ஓரிற்பிச்சையைக் கவிதையாக்கிவிட்டாரென்பதே எனது முடிபு.
இப்பாடலிலிருந்து தெரிந்துகொள்ளும் செய்திகள்
1. அழகிய சுத்தமான தெருக்களும் அமைக்கப்பட்டிருந்துள்ளன.
2. வீடுகளில் நாய்கள் வளர்க்கும் பழக்கம் இருந்துள்ளது. நாய்கள் வளர்க்காத வீடுகளும் இருந்துள்ளன.
3. அகன்ற வாயில்கள் உள்ள வீடுகளும் இருந்துள்ளன.
4. பிச்சையேற்பவர்களுக்கு அரிசிச் சோறும் எருமை வெண்ணெயும் வழங்கியுள்ளனர்.
5. எருமை வெண்ணெய் வழங்கியுள்ளதால் அந்த வீட்டில் எருமைகள் வளர்க்கப்பட்டிருக்கலாம்.
6. பிச்சையேற்பவர்களின் வயிறு நிறையுமளவுக்கு சோறு வழங்கி, முன்வாயிலிலேயே அமர்ந்து உண்ணுவதற்கும் அனுமதிக்கும் வீடுகளும் இருந்துள்ளன.
7. குடிப்பதற்கு வெந்நீர் வழங்கப்பட்டிருக்கிறது. அற்சிரம் வெய்ய வெந்நீர் எனக் குறிக்கப்படுவதால் பனிக்காலத்தில் வெந்நீர் குடிப்பதை விரும்பியுள்ளனர்.
8. அறிவரிடம் சேமச்செப்பு இருந்துள்ளது. எனவே செம்பு உலோகம் பாத்திரத் தயாரிப்புப் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட காலமென்பது தெரியவருகிறது.
9. மருத நிலத்திலும் முல்லை நிலத்திலுமே எருமைகள் வளர்க்கப்பட்டன. இப்பாடல் பாலைத் திணையிலுள்ளது. மருதம் பாலையாகத் திரிவதில்லை. குறிஞ்சியும் முல்லையுமே கோடையில் பாலையாகத் திரிந்து தோற்றமளிப்பவை, எனவே அந்த ஊர் முல்லை நிலத்தூர் என்பதை தெளிவு.
10. அறிவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்களென மக்கள் நினைத்திருந்தனர்.
11. கார்காலத்தின் கடைசி மழை முடியும்போது வாடைக்காலம் தொடங்கும்.
முகநூல் பதிவு 22.05.18.

Wednesday 23 May 2018

கோவைக்காய் (அபுனைவு 20)

கோவைக்காய்
கோவை மிகச் சாதாரணமாக எல்லா ஊர்களிலும் வேலிகளில் படர்ந்து கிடப்பதைக் காணமுடியும். கோவைப்பழத்தை கிளி விரும்பி உண்ணும். நாங்கள் உண்டதில்லை. கோவைப்பழத்தை இலேசாக எண்ணெய் தடவிக் கசக்கிக்கொண்டேயிருந்து கடைசியாகச் சிறு துளையிட்டு உள்ளிருக்கும் கூழ் முழுவதையும் வெளியேற்றிய பின் அதனைப் பெண்பிள்ளைகள் சொடக்காக நெற்றியில் அடித்து விளையாடும்.
யாராவது அரளிக் காய் அரைத்துக் குடித்த விபரம் தெரிந்தால் உடனடியாகக் கோவை இலையை அரைத்துச் சாற்றினை செம்பு, செம்பாக உள்ளுக்குக் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். வயிற்றில் கிடப்பது அனைத்தும் வாந்தியாக வெளிவரும்.
கோவைப் பழம், தமிழில் கொவ்வைப் பழம் என்றும் அழைக்கப்படுவதோடு சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதால், பெண்களின் இதழ்களைக் கொவ்வையிதழ் எனத் தமிழ்க்கவிதைகள் கொண்டாடுவதுண்டு.
கோவைக்காயும் சமைத்து உண்ணத்தகுந்த ஒரு காய்வகை என்பதை எனது முப்பதாவது வயதில் வேலூர் வரும் வரையிலும் அறிந்திருக்கவில்லை.
நாஞ்சில், நெல்லை, முகவை, மதுரை, கம்பம் பகுதிகளில் தங்கி வசித்திருந்தாலும் கோவைக்காயை சந்தைகள் மற்றும் காய்கறிக் கடைகள் எதிலும் கண்டதில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் உணவு விடுதிகளிலும் சமைத்துப் பறிமாறப்பட்டதைப் பார்த்ததில்லை.
வேலூர் வந்தபின் நண்பர் ஒருவருக்குத் துணையாக நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்கப் போனபோதுதான் கோவைக்காய்களும் விற்கப்படுவதை அறிந்தேன். இதையுமா சாப்பிடுவார்கள்? என வியந்ததோடு சரி. எங்கள் குடும்பங்களிலும் யாரும் கோவைக்காய் சாப்பிடுவதாகத் தெரியவில்லை.
வருவாய்த்துறைப் பணியென்பதால் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், முதல் அமைச்சர் என முக்கியப் பிரமுகர் வருகைப் பணியிலுமிருந்ததால் வேலூரில் அனைத்து உணவுவிடுதிகளிலும் சமைக்கப்படும் உணவு வகைகள் பற்றி அறிவேன். அப்போதைய புகழ் பெற்ற கன்னா ஓட்டலில் பாகற்காய் சாம்பார் கூடப் போட்டிருக்கிறார்கள். கோவைக்காய் கூட்டு, பொரியல், சாம்பார் எதுவும் எந்த உணவுவிடுதியிலும் பார்த்ததாக நினைவில்லை.
1995 இல் குடும்பச் சுற்றுலாவாக மைசூர், கோவா, ஹம்பி சென்றிருந்தோம். கோவா செல்லும் வழியில் ஒரு உணவுவிடுதியில் மதிய உணவின் போது சக்கை(பலாக்காய்)யும் பெரும்பயறும் போட்டு ஒரு குழம்பும் கோவைக்காய் வதக்கலும் பரிமாறினார்கள். இரண்டுமே புது வகையாக வேண்டுமளவு உண்ணத்தக்கதான சுவையில் இருந்தன. கோவைக்காய்களை நீளவாக்கில் மூன்று அல்லது நான்கு துண்டுகளாக அரிந்து எண்ணெயில் வதக்கி, தேங்காய் சீரகம் அரைத்துப்போட்டிருந்தனர். அந்தப் பக்குவத்தில் எங்கள் குடும்பங்களில் கத்தரிக்காய் வதக்குவதுண்டு. கத்தரிக்காயில் இல்லாத மென்புளிப்புச் சுவையும் சிறிது அதிகமான கடினத்தன்மையும் கோவைக்காய் வதக்கலுக்கு அதிகச் சுவையைக் கொடுக்கின்றது.
வேலூர் மற்றும் சென்னைக் காய்கறிக்கடைகளில் கோவைக்காய் எப்போதும் கிடைப்பதால், கோவைக்காயை மேற்சொன்ன பக்குவத்தில் சமைத்து உண்ணத் தொடங்கினோம்.
1997 இல் சர்க்கரை நோய் இருப்பதாகவும் மாத்திரை உட்கொள்வதோடு உணவு முறையிலும் கட்டுப்பாடுகள் வேண்டுமெனத் தெரிவித்தனர்.
சி.எம்.சியில் உணவுப் பட்டியல் ஒன்றும் கொடுத்தனர். அதன்படி 1997 இல் நான் உணவாக எடுத்துக்கொண்டிருந்த மாவுப்பொருள் உணவில் பாதியும் அதை ஈடுகட்டுவதற்குக் காய்கறியும் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆறு இட்லியை மூன்றாகக் குறைத்துக்கொண்டு மீதி இடத்திற்கு முள்ளங்கி, காரட், வெள்ளரி போன்ற பச்சைக்காய்கறியும் சாம்பார்க் காய்கள், கூட்டு முதலியவற்றையும் சேர்த்துக்கொண்டேன்.
மதிய உணவாக இரண்டு கப் சாதத்தை ஒரு கப் அளவாகக் குறைத்து ரசம் மற்றும் மோர் சாதத்தைத் தியாகம் செய்துவிட்டு பொரியல் மற்றும் கூட்டாக இரு காய்கறிகள் + சாம்பார் அல்லது குழம்புக்காய்கள் என மூன்று காய்களாக மாற்றிக்கொண்டேன். அதனால் கோவைக்காயை வாரத்திற்கு இரு முறையாவது உண்ணும் வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் புதிய செய்முறைகளை முயற்சி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வட்டு வட்டாக அரிந்து வதக்கிப் பின் வேகும் அளவுக்குத் தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைத்து, பாசிப்பருப்பு, தேங்காய், சீரகம், மஞ்சள்பொடி மற்றும் சிறிதளவாக மிளகாய்ப்பொடி சேர்த்து வதக்கிப் பொரியலாக்கிப் பயன்படுத்தினோம்.
ஒரு முழு வெங்காயம் வெட்டிப்போட்டுத் தாளித்து, அதனோடு வட்டுவட்டாக அரிந்த கோவைக்காய், மஞ்சள் பொடி, சிறிது மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி சேர்த்து வதக்கித் தேவையான தண்ணீரைத் தெளித்துத் தெளித்து வதக்கி வேகவைக்கும் தேங்காய், பருப்பு இல்லாத பொரியலுக்கும் விரும்பிச் சாப்பிடும் சுவை கிடைத்துவிடுகிறது.
மதிய உணவுக்கான சாம்பாரில் கோவைக்காய், காரட், குடமிளகாய் (Capsicum) மூன்று மட்டும் போட்டுச் செய்துபார்த்தபோது, அந்த சாம்பாருக்கென ஒரு தனிச் சுவை உருவாகிறது.
கோவைக்காயில் பி1, பி2, பி3, சி உயிர்ச்சத்துக்களும், இரும்பு, சுண்ணாம்பு மற்றும் பொட்டாசியம் சத்துக்களும் கார்போ ஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளன.
கோவைக்காயில், கல்லீரல் சுரப்புக்குத் தேவையான Glucose-6-phosphatase இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது தமிழ் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறையில் கோவைக்காய் சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. Glucose-6-phosphatase தான் இன்சுலின் சுரப்பினை அதிகப்படுத்துவதற்குக் காரணமாக அமைகிறதென்றும் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
கோவைக்காய் சோர்வை அகற்றுவதாகவும், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பதாகவும் நரம்பு மண்டலம் மற்றும் உடலின் உயிரியக்கச் செயல்பாடுகளைச் சீரமைப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
வாரம் இருமுறையாவது கோவைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதெனத் தெரிய வருகிறது.
Major Nutrition
Iron, Fe 1.4 mg (17.50%)
Vitamin B2 0.08 mg (6.15%)
Vitamin B1 0.07 mg (5.83%)
Total dietary Fiber 1.6 g (4.21%)
Calcium, Ca 40 mg (4.00%)
Protein 1.2 g (2.40%)
Carbohydrate 3.1 g (2.38%)
Vitamin C 1.4 mg(1.56%)
Potassium, K 30 mg (0.64%)
Vitamin B3 0.07 mg (0.44%)
Health Benefits
• Prevents Kidney Stones
• Fatigue
• Protects the Nervous System
• Maintains a Healthy Metabolism
• Fiber keeps the digestive tract healthy
Calories in 1cup (100gm) 18
முகநூலில் 22.05.18 ல் பதிவு. விருப்பம் 98 பகிர்வு 23, பின்னூட்டம் 24 

Tuesday 22 May 2018

செம்மொழித் தமிழ், முத்தொள்ளாயிரக் காட்சிகள்

யானையும் கண்புதைக்கும் போர்க்களம்
யானையும் கண்புதைக்கும் போர்க்களம்
போர் முடிந்த நாளின் இறுதியில் மரணமுற்ற வீரர்களின் மனைவியர் எரிபுகுகின்றனர். அதைக் கண்ணுறும் மன்னனும் தன் மேலாடையால் கண்களைத் துடைக்கிறான். அந்தக்களத்தில் பகைவரின் யானைகளும் வெட்டுண்டு செத்துக்கிடக்கின்றன. அவற்றைப் பார்த்து மன்னனின் யானையும் அழுகிறது.
இப்படியொரு காட்சியினை முத்தொள்ளாயிரம் காட்டுகிறது.
பாடல் :
ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையும்
புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே
பல்யானை அட்ட களத்து.
- 109, முத்தொள்ளாயிரம்

யானை நாணிநின்ற ஒரு காட்சி :
எதிரி நாட்டின் கோட்டை மதில்கள் மீது மோதி மோதி உடைத்துத் தள்ளியதில் களிற்று யானையின் கொம்பு உடைந்ததோடு, பகை அரசர்களின் மணிமுடி தரித்த தலைகளை இடறியதில் நகங்களும் தேய்ந்து போயினவாம், உடைந்த கொம்புகளோடும் தேய்ந்த நகங்களோடும் தன் பிடியின் முன்பு போய் நிற்க நாணிய அக்களிறு புறங்கடையில் போய் நின்றதாம்.
பாடல் :
கொடி மதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார் தோட் கிள்ளி களிறு.
- 48, முத்தொள்ளாயிரம்.
தன் முறிந்த கோட்டினைப் பிடிமுன் காட்டுவதற்கு நாணிய அக்களிறு, முடியுடை மன்னரைக் குத்தி அவர் தம் குடலால் தன் கோடுகளை மறைத்துக்கொண்டதாக இன்னொரு பாடல் :
அடுமதில் பாய அழிந்த தன் கோட்டைப்
பிடிமுன் பழகுதலில் நாணி - முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல் வேல்
தென்னவர் கோமான் களிறு.
-- 102. முத்தொள்ளாயிரம்.
போருக்குப் புறப்படுகிற களிற்றினைக் கண்டதும் புலால் உண்ணும் பறவைகள், பருந்துகள், நரி்களோடு பேய்மகளிரும் தமக்கு விருந்து கிடைக்கப்போவதை எண்ணி பெருமகிழ்வு கொள்கின்றனராம். போர்யானை களம் நோக்கி நடந்துவருகிற காட்சியைக் கண்ணுக்குக் கொண்டுவந்து பாருங்களேன். புலால் உண்ணும் பறவைகள் மகிழ்ந்து குரல் எழுப்ப, பருந்துகள் பின்தொடர, நரிகள் நான்குதிசையிலுமாக ஓடித் திரிய, அணிகலங்கள் ஆட வரும் பேய்மகளிர் மகிழ்ச்சிக் கூத்தாட, போர்யானை பெருமித த்தோடு வருகிறதாம்.
பாடல் :
பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப - ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கிலை வேல் களிறு.
-- 50, முத்தொள்ளாயிரம்
( பாற்றினம் - புலாலுண்ணிப்பறவைகள், பேய்மகளிர் - பிணம் உண்ணும் மகளிர்)
முத்தொள்ளாயிரமும் செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ம.வெ, பசுபதி பதிப்பாசிரியர், செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் -2010, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

Thursday 17 May 2018

பள்ளி நினைவுகள்


பள்ளி நினைவுகள்

ச.ஆறுமுகம் பிள்ளை முதுகலை(பொது நிர்வாகம்); முதுகலை (தமிழ்)
வட்டாட்சியர் (பணிநிறைவு)
(தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர்.)

எனக்கு நான்கு வயதே ஆகியிருக்கும்போது பூஜைவைப்பு முடிந்த மறுநாள் காலையில், புது காக்கி நிக்கரும் பிஸ்கெட் நிற சட்டையும் அணிந்து, பிள்ளையார் கோயிலில் பூஜை முடித்து, பாயாசம் குடித்த கையோடு  அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றதும் பள்ளிக்குள் டிரில் மாஸ்டர் இலட்சுமணன் பிள்ளை முன் நின்று வயது விசாரிப்பு முடிந்து, ஐந்து வயது முடிந்துவிட்டதாகச் சேர்க்கை ஆகி, முதல் வகுப்பில் செங்கல் தளம் பாவி, அங்கங்கே உடைந்து மண்தரையுமாக இருந்த அறைக்குள் அமரவைத்ததும் நன்கு ஞாபகம் இருக்கிறது. முதல் வகுப்புக்கு பெஞ்சு எதுவும் கிடையாது. தரையில் தான் அமரவேண்டும். முதல் வகுப்பில் இரண்டு பிரிவுகள்; இரண்டும் அடுத்தடுத்ததாகத் தான் இருந்தன. எனது வகுப்புக்கு சிவகாமி என்பவரும் இன்னொரு பிரிவுக்கு சுகுமாரி என்பவரும் ஆசிரியைகளாக இருந்தனர்.

முதல் நாளில் எனக்கு அருகில் இருந்த பையன் என்னை விடவும் பெரியவனாக இருந்தான். அவன் சட்டை ஏதும் போட்டிருக்கவில்லை. அழுக்கு நிக்கரின் இருமுனைகளையும் இடுப்புக்குக் கீழாக, அரை முடிச்சாக இறுக்கிக் கட்டியிருந்தான். நான்தான் சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். அவன் கால்களை நீட்டி விரித்தவாறுதான் இருந்தான்; நேராக எனது சட்டையைத் தடவி, ”போத்தி, பைக்குள்ள என்ன வச்சிருக்கேரு,” எனக் கேட்டுக்கொண்டே என் பைக்குள் துளாவி, சோற்றுப் பருக்கை ஒன்றை எடுத்துக் காட்டி, “பரவால்லையே, போத்தி தினமும் எனக்கு உம்ம பைக்குள்ள போட்டு சோறு எடுத்து வருவேரா?” என்றவன் அந்தக் காய்ந்த பாயாசப் பருக்கையை அப்படியே வாயில் போட்டு மென்றுதின்றான். எனக்குத் திகைப்பாக இருந்தது. நான் எதுவுமே பேசவில்லை. `சரி, இரண்டு பேரும் விளையாடலாம்` என்றவன் நொண்டிச் சாமி விளையாடலாமா? எனக் கேட்டான். அது எனக்குத் தெரியாது; அதனால் நான் மண்ணாகத் தான் இருந்தேன். ”சரி, உமக்கு அதைச் சொல்லித் தாரேன்,” என்றவன் இடது கைச் சுண்டுவிரல் மீது அடுத்த விரலைக் கொக்கி போட்டு மேலேற்றினான். அப்படியே ஒவ்வொரு விரலாக மேலே மேலே ஏற்றியவன் கோணையாக இருந்த அந்தக் கைவிரல்களோடு பெருவிரலையும் ஒட்டிக்கொண்டான். அதைப் போலவே வலது கைவிரல்களையும் ஒன்றன் மேலொன்றாகக் கொக்கி சேர்த்துச் சப்பாணி போலான இருகைகளையும் கும்பிடுவது போல வைத்துக்கொண்டு, ‘நொண்டி சாமியக் கும்பிடப் போனேன், கை நொண்டியாகிப் போச்சு” என்றவன், நொண்டிக்கையை என் முகத்துக்கு நேராக ஆட்டி, இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக்கொண்டே அதே பாட்டைத் திருப்பித் திருப்பிப் பாடினான். அவன் முகம் வேறு நொண்டிக்கையாகிப் போன வேதனையைக் காட்டியது. இந்த விளையாட்டு தெரியாத நான் அவன் கை உண்மையிலேயே நொண்டியாகித்தான் விட்டதோ எனப் பரக்கப் பரக்க விழிக்கும்போதே, பொசுக்கென்று கைகளைப் பின்பக்கம் கொண்டு சென்றவன்  விரிந்த விரல்களோடு கைகளை என் முகத்தின் முன்னால் காட்டி ஆட்டிக்கொண்டே, ‘நல்ல சாமியக் கும்பிடப் போனேன், நல்ல கையாகிப் போச்சு,” என்று ராகமாகச் சொன்னான். அன்று எனக்குத் தோன்றியது : என்னைவிட அவன் விவரமானவன், எனக்குத் தெரிந்ததைவிட அவனுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரைக்கும் என்னைவிட எல்லோரும் விவரமானவர்கள்; எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு  மாறியதேயில்லை. நண்பர்கள், உறவுகள், தினமும் காணுகிற பிற மனிதர்கள், என எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்பவனாகவே இன்றும் இருக்கிறேன்.

அந்த முதல் நாளுக்குப் பிறகு அவனைப் பள்ளியில் பார்த்ததாக நினைவு இல்லை. ஆனால், பின்னால் ஒருநாள் நான் அப்பாவுடன் வயலுக்குச் செல்லும்போது நம்பிகுளத்துச் சாலை, புதுக்குளம் ரோட்டுக்கு ஏறுகின்ற வளைவில் அவனையும் அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு சிறுமியும் எதிரில் வந்ததைப் பார்த்தேன். அவன் கழுத்தில் இருபுறமுமாக உயிருள்ள தண்ணீர்ப் பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருந்தது. அந்தச் சிறுமியின் கழுத்தில் தண்டினை ஒடித்துச் சங்கிலியாகத் தொடுத்த ஆம்பல் பூ ஒன்று தொங்கியது. அதன் பிறகு அவனை எங்கும் பார்க்கவில்லை. அவன் பெயர் என்னவாயிருக்குமென்று பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். பூதத்தான், புதுக்குணத்தான், யோசேப்பு, மார்க்கு, குணசேகரன், கருப்பையா …. ஊகூம், எனது முதல் ஆசானான அவனது பெயரை மறந்ததற்காக நான் இப்போதும் என்னை நொந்துகொள்கிறேன்.

பள்ளி விடுமுறை விட்ட ஒரு நாளில் அம்மா, அப்பா, எல்லோருமாக எங்கேயோ புறப்பட்டிருந்தோம். நான்கு மணி பேருந்து வரவில்லை. வயல் பத்து பாதைக்கு நடந்து, செக்கடி வழியாக மேலாறு தாண்டி, வீரணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் கரையேறும்போது இரண்டு ஆசிரியைகளும் இறச்சகுளத்துக்கு நடந்து செல்வதைக் கண்டதும் ஓடியே போய், எங்க டீச்சர், எங்க டீச்சர் என்று சிவகாமி டீச்சரின் கையைப் பிடித்துக்கொண்டு ஆடியது நினைவுக்கு வருகிறது. அம்மா, அப்பா அவர்களிடம் ஏதோ பேசினார்கள். பய பரவால்லையே, பயமில்லாம இருக்கானே என்றவர்கள் அந்த இரு ஆசிரியைகளுக்கும் மணமாகவில்லையென்றும் அவர்களின் சாதி குறித்தும் பேசிக்கொண்டதும் நினைவிலிருக்கிறது.

அடுத்த நினைவு என்றால், எனது இரண்டாம் வகுப்பு; வகுப்பாசிரியர், வேலாயுதப் பெருமாள் பிள்ளை, டிரில் மாஸ்டர் இலட்சுமணன் பிள்ளை, இருவருடன் இன்னும் ஒரு சிலருமாக என் வீட்டு வாசலுக்கு வந்தார்கள்; தலைமை ஆசிரியர் ஜோஷ்வா கமலம் வந்தாரா என்பது நினைவில்லை. பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நன்கொடை கேட்டார்கள். அப்பாவுக்கு சுத்தமாகக் காது கேட்காது. நான் அப்பாவின் கையைப் பிடித்து நிறையக் கொடுக்கச் சொல்லிச் சைகை காட்டினேன். அப்பா பத்து ரூபாய் கொடுத்தார்கள். வந்தவர்கள் வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். நான் அப்பாவிடம், கூடக் கொடுத்திருக்கலாமேயென்றேன். அப்பா சிரித்துக்கொண்டே, ‘நீ படிச்சு வேலைக்குப்போவையில்லா, அப்ப நிறையக் கொடு,’’ என்றது நினைவிருக்கிறது. புதிய கட்டிடம் கட்டி முடித்து திறப்பு விழா நடந்தது. அன்று `வேலுத்தம்பித் தளவாய்` நாடகம் நடத்தப்பட்டதும் நினைவில் வருகிறது. திறப்பு விழாவுக்கும் பின்னர் ஒருநாள் தலைமை ஆசிரியர் ஜேசுதாசன் மற்றும் ஆசிரியர்கள் நன்கொடை விவரம், செலவு அனைத்தையும் கணக்கெழுதி அச்சிட்டு வெள்ளை நிறத்தில் நான்கு பக்க நோட்டீசாகக் கொடுத்தார்கள். அந்த நோட்டீசை அப்பா கையில் வைத்திருக்கும்போதே, படிப்புரையில் அவர் பின்பக்கமாக நின்று நானும் பார்த்தேன். ஊர்வகையிலிருந்து 15,000 கொடுத்திருக்கிறார்கள். கிருஷ்ணன் கோவில் டிரஸ்டில் 1000 கொடுத்திருக்கிறார்கள்; வேறு பெரிய வீடுகளிலெல்லாம் 100, 150 தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்பாத்துரை பார்த்தியார் மட்டும் ரூ 1000 கொடுத்திருக்கிறார், அய்யர் ஒன்றும் அவ்வளவு பணக்காரர் இல்லை; அவர் அவ்வளவு கொடுத்திருப்பது ரொம்பப் பெரிசுதான் என அப்பா புகழ்ந்ததும் எனக்கு நினைவிருக்கிறது. அன்று முதல் அப்பாத்துரை அய்யர் வீட்டு வாசலைக் கடக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு உயர் எண்ணம் எழுவதுண்டு. அவரது மகன் பத்து என்ற பத்மநாபன் ஐந்தாம் வகுப்பிலிருந்து பதினொன்று வரையில் என்னுடன்தான் படித்தான். ஒரே பெஞ்ச் தான்; பிறகு வாழ்க்கைச் சுழலில் எங்கெங்கோ சென்றுவிடுகிறோம்; நினைவுகள் மட்டுமே துணையாக மிஞ்சுகின்றன. 1950 களில் உயர்நிலைப் பள்ளிக்காக அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு மனையும் ரூ 15,000 மும் ஊர்வகையில் கொடுத்து, எங்களின் தந்தை தலைமுறையினர் ஆற்றிய அறிவுப்பணிக்கு ஈடு ஏது இருக்க முடியும்! (அன்று ஒரு கோட்டை நெல்லின் விலை ரூ 5 அல்லது பத்துக்குள் தான் இருந்திருக்கும்.)

ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாக வேலாயுதப் பெருமாள் பிள்ளை, சவரி முத்து, வேலாயுதம், பிச்சை ஆகியோரும் அதைத் தொடர்ந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்தியவர்களில் சங்கர மூர்த்தி, நீதி நாயகம், இந்தி ஆசிரியை சுமன் நினைவில் நிற்கின்றனர். இன்னொரு ஆசிரியர் கொச்சங்காய் மண்டை ( முன் நெற்றியில் இருபுறமும் புடைத்திருந்ததால் எங்கள் குறும்புக்கார அண்ணன்கள் அப்படிப் பெயரிட்டு அழைத்தனர்.) மன்னிக்கவும், அந்த ஆசிரியரின் பெயரை மறந்ததற்காக எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம். வெள்ளை ஜிப்பா, வேட்டியுடன் அப்பெருமகன் எனது ஏழாம் வகுப்பில் பூகோளம் பாடம் நடத்திய ஈடுபாடும் அக்கறையும்  இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது. தலைமை ஆசிரியர் அல்லாமல் பள்ளிக்கு முதன் முதலாக முழுநீளக் காற்சட்டையும் மேற்சட்டையும் அணிந்து டிப்டாப்பாக வந்தவர் சுப்பையா என்ற ஆசிரியர். அவரது படைப்பூக்க ஆர்வத்தால்  வகுப்புத் தேர்வுகளுக்கும் அச்சடித்த கேள்வித்தாள், மாறுபட்ட கட்டுரை எழுத்து முறை, வகுப்பை கட்டபொம்மன், சிவாஜி என இரண்டு அணியாகப் பிரித்து மாணவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி ஏற்படச் செய்தது, சிறப்பு அக்கறை மேற்கொண்டு அனைவரையும் நன்கு படிக்கச் செய்வது  என அதிகப்பணியை இழுத்துப் போட்டுச் செய்தவர். தேர்வு இல்லாத குடிமைப்பயிற்சி வகுப்புக்கு டிரில் மாஸ்டர் கொடுத்த அழுத்தம், அதற்காக அவரது முன் தயாரிப்புகள், அந்த வகுப்பினை அவர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய விதம் இப்போதும் அயரவைக்கிறது; ஆனால், அதுதானே குடிமகனாக நாம் தேசத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை உணரவைத்திருக்கிறது. எட்டாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் ஆங்கில இலக்கணத்தில் நல்ல பயிற்சி அளிக்கப்படவேண்டுமென்பதற்காக வாரத்தில் இரண்டு வகுப்புகளை அதற்கென ஒதுக்கிக் கொடுத்து, பயிற்சியளிக்கும் பொறுப்பு அப்போதைய பட்டதாரி ஆசிரியரான திரு வி. சுவாமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதே ரென் & மார்ட்டின் வைத்துக்கொண்டு, அதன் செய்முறைப் பயிற்சிகளையெல்லாம் எங்களுக்கு விளக்கிய அவரது அயராத முயற்சி ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பும் அதிலும் குறிப்பாக மொழிபெயர்ப்பில் ஈடுபடும் எனக்கு இப்போதும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது என நன்றியுடன் குறிப்பிட விழைகின்றேன்.

திரு. வி. சுவாமி அவர்களிடம், எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என நான்கு ஆண்டுகள் பயிற்சி பெறும் நல் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது. அவர் பாடம் நடத்தும் முறையே தனி. ஆங்கிலம், வரலாறு புவியியல் பாடங்களை பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களைப் பெற்று அதனடிப்படையில் பாடத்திட்டத்தை ஒழுங்கமைத்து, விளக்குவது அவருடைய தனிப்பாணி. பாடக் குறிப்புகளை அவர் வாசிக்கும் போதே, மாணவர்கள் புரிந்து எழுதுகின்றனரா அல்லது இயந்திரத்தனமாக எழுதிச் செல்கிறார்களா என்பதைக்கூட இடையிடையே நோட்டமிட்டு உறுதி செய்வார். எடுத்துக்காட்டாக ஆங்கிலக் கட்டுரைக்கு குறிப்பெழுதிச் செல்கையில் are, or போன்றவற்றை ஆர் என்றுதானே உச்சரிப்போம்; ஆனால் எழுதும் போது உரிய முறையில் எழுதினராவெனக் கேட்கவும் பார்க்கவும் செய்வார். மிகவும் கண்டிப்பானவர்; மிகப்பெரிய கனத்த கம்பால் அடித்துத் தண்டனை வழங்கத் தயங்காதவர்; எனினும் அவரது வகுப்புகள் மிகவும் சுவாரசியமானவையாகவே மாணவர்களால் கருதப்பட்டன. நாங்கள் அப்போது 30 பேர்கள் பொதுத் தேர்வு எழுதியதில் 28 பேர் வெற்றி பெற்றோம். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய வெற்றி. எங்களுக்கு முந்தைய ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் முப்பதுக்கு நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்கள்.
எங்கள் ஆசிரியர்கள் திரு சுவாமி, அறிவியல் ஆசிரியர் வேலப்பன் என்ற சுப்பிரமணிய பிள்ளை, கணித ஆசிரியர் சந்திரா, தலைமை ஆசிரியர் ஞானசிரோன்மணி என அநேகமாக, எல்லோருமே (விதிவிலக்குகள் ஒன்றிரண்டு எப்போதுமே இருப்பதுதான்; அதைக் கணக்கில் கொள்ளவேண்டுமா, என்ன?) மிக எளிமையானவர்களாக, எளிதில் அணுகத் தக்கவர்களாக, கண்ணும் கருத்துமாகப் பணியாற்றுவதைத் தலையாய கடமையென உணர்ந்ததோடு, அதனை உணர்த்துவதையும் தலைமேற் பணியாகக் கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர். என்னைப் பொறுத்தவரையில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்ததாகவே உணர்கிறேன். பள்ளியில் எந்த ஆசிரியரைக் கண்டும் எனக்கு அச்சம் தோன்றியதில்லை. பள்ளியில் அல்லாமல் வேற்றிடங்களில் சந்திக்க நேரும்போதும் நான் எவ்விதமான கூச்ச உணர்வும் கொண்டதில்லை.  கடமை, நேர்மை, பணிப்பண்பாடு, விடா முயற்சி போன்ற அனைத்தும்  நான் அவர்களிடமிருந்து பெற்றதென்றே உணர்கிறேன். இப்பள்ளியில் நான் பெற்ற பதினோராண்டுப் பயிற்சியும் தாழக்குடி மக்களிடம் நான் கற்றுக்கொண்ட நன்னெறி வாழ்க்கையும் என்னை நல்லதொரு கடமை தவறாத அரசுப் பணியாளனாக, நேர்மையுடன் மக்கள் பிரச்னைகளை அணுகும் பக்குவத்தை எனக்குள் ஏற்படுத்தி, முப்பதாண்டு வருவாய்த்துறைப் பணியை முடித்து மனநிறைவோடு ஓய்வுபெற வைத்துள்ளது. 

எனது மூத்த தலைமுறையினரின் அறிவுத்திறத்தால் உருவான கிருஷ்ணவிலாசம் நூலகத்தில் நான் பெற்ற உலக இலக்கியப் பரிச்சயம் எனக்கு அரசிடமிருந்து சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற விருதினையும் பெற்றுத் தந்துள்ளது. இப்பள்ளியும் நூற்றாண்டு காணும் நூலகமும் பெருமைக்குரியவை; அவற்றைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியதும் நமது கடமை.

பள்ளியைப் பற்றிய நினைவாக ஒளவையார் பிள்ளைத் தாத்தாவைக் குறிப்பிடாவிட்டால் எப்படி நிறைவு பெறும்? வெள்ளை வேட்டி, கதர்ச்சட்டை, கறுப்புக்குடை சகிதம் தினசரி பள்ளி வளாகத்தில் காணப்பட்ட அவர் கட்டிடப் பணி முதலான அனைத்தையும் மேற்பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.                  

கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவரும் மாபெரும் தமிழ்ப் பேரறிஞரும் தமிழ் இலக்கண நூல்களை மலையாளத்துக்கும் மலையாளத்தின் பல நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தவரும் தமிழின் நவீனப் படைப்பாளிகளில் ஒருவரான நகுலனின் நண்பரும் புதுக்கவிதைகள் படைத்தவருமான திரு மா. இளைய பெருமாள் அவர்களின் தந்தையான திரு மாணிக்கவாசகம் பிள்ளையும் பள்ளிக்கு அவ்வப்போது வந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடிச் செல்வதைக் கவனித்திருக்கிறேன்.  

நூற்றாண்டு விழாக் காணும் இந்நாளில் முன்னாள் மாணவர்களும் இன்றைய பெற்றோரும் இப்பள்ளியின் மீது கொண்டுள்ள அக்கறையினால் ஸ்மார்ட் வகுப்பறைகளும் நூலகமுமாகத் திகழ்வது பெருமகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர், உறுப்பினர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
அன்புடன்,
ச.ஆறுமுகம்.

Tuesday 15 May 2018

ஜிம்பாப்வே சிறுகதை - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஆப்பிரிக்க அதிபர் அவர்களே, - நோவயலெட் புலவாயோ


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஆப்பிரிக்க அதிபர் அவர்களே!  Happy Birthday Africa President by NoViolet Bulawayo
ஆங்கிலம் : நோவயலெட் புலவாயோ (ஜிம்பாப்வே)
தமிழில் ச.ஆறுமுகம்.
Noviolet
ஜிம்பாப்வேயில் பிறந்து வளர்ந்த புலவாயோ அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக்கழகத்தில் நுண்கலைகள் பிரிவில் ஆக்கபூர்வப் படைப்பியலில் 2010 இல் முதுகலைப் பட்டம் (Master of Fine Arts in Creative Writing) பெற்றவர். இவரது Hitting Budapest சிறுகதை ஆப்பிரிக்க ஆங்கிலத்தில் சிறந்த சிறுகதைகளுக்கான கெய்ன் விருதினை வென்றது. அதன் தொடர்ச்சியாக 2013 இல் அவர் வெளியிட்ட We Need New Names நாவல் மான் புக்கர் விருதுக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றது. தற்போது ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் பணிபுரிகிறார்.
இவரது முதல் கதை Hitting Budapest தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே கதைமாந்தர்களே இடம்பெறும் Happy Birthday Africa President சிறுகதை தற்போது தமிழில் தரப்படுகிறது.
**** 


அதிபர் எல்லோருக்கும் மேலாகக் கைமுஷ்டியை உயர்த்தி நிற்பதைக் காண நாங்கள் 10 ஆம் எண்ணுக்குச் சென்றோம். கடந்த ஞாயிறன்று விபத்தில் தீப்பிடித்த மின்நிலையத்தைச் சுற்றியுள்ள பெரிய சுவரில், நீலநிற ஜியோஜா தேவாலயத்தின் உயரமான வாயிற்கதவுகளில், நாங்கள் பம்பரம் விளையாடும் இடத்திலுள்ள பெரிய தூணில் , கிளிஃப்போர்டு முடிவெட்டும் கூடத்தில், வயதான பெண்கள் எல்லா வகையான பொருட்களையும் விற்கும் ஒட்டுக் கடைகளின் சுற்றுச்சுவரில், நகரத்துக்குச் செல்லும் பயண உந்துகளுக்காகக் காத்திருக்கும் நிழற்கூடத்தின் உட்புறமும் வெளிப்புறமும், முக்கியச் சாலையோர மரங்களில் – என எல்லா இடங்களிலும் சுவரொட்டிகள் தெரிந்தன. நாங்கள் மின்நிலையச் சுவர் அருகில் நெருக்கமாக நின்று தலைகளைத் திருப்பித் திருப்பி எல்லா சுவரொட்டிகளையும், அவையனைத்தும் ஒன்றாகவே இருந்தாலும், ஒவ்வொன்றாக, ஒன்றுவிடாமல் பார்த்தோம்.
கடவுளறிவார் சொல்கிறான், அவரைக்கொண்டு போய் அவ்வளவு உயரத்தில் வைத்தது யார்? எதற்காக அங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள்?         
 அதெல்லாம் சரிதான், அது யாரோட முகம்னு சொல், பார்ப்போம், உங்க அப்பாவுடையதா? என்கிறான், வேசிமகன். அவன், அதிபரை உற்றுப் பார்ப்பதற்காக, கடவுளறிவாரை வழியிலிருந்தும் நெட்டித் தள்ளுகிறான். அது அதிகாலை தானென்றாலும், நாங்கள் என்னமோ கடன்காரர்கள் போல வெயில் எங்கள் தலைக்கு மேல் வந்துநின்று வறுத்தெடுக்கிறது. தூரத்தில் வானொலிகள் காலைச் செய்திகளைக் கரகரத்த குரலில் உரத்துச் சொன்னாலும் அந்தச் சத்தம்  நிற்பதற்கு நெடுநேரம் ஆகவில்லை. முன்பென்றால் மக்கள் மின்வெட்டு பற்றிப் பைத்தியக்காரர்கள் போல் பல குரல்களில் பேசுவதைக் கேட்பீர்கள், ஆனால் இனிமேல் அதற்கு இடமேயில்லை.
முக்கியச் சாலையில், கார்கள் குடித்திருப்பதைப் போல, குழிப்பள்ளங்களில் தட்டுத் தடுமாறிச் செல்கின்றன. அவை எங்களை நெருங்கும்போது அவற்றின் சாளரங்களிலிருந்து தலைகள் முளைத்து எங்களைப் பார்க்கின்றன. நாங்கள் சுவரொட்டிகளிலிருந்தும் திரும்பி நின்று வெய்யிலை எங்கள் முகத்தில் தாங்கிக் கண்களை விரித்து, இடுப்பில் கைகளை வைத்து, வீராதி வீரர்களாக, அந்தச் சுவரொட்டிகளை நாங்களே தயாரித்து ஒட்டியது போலப் பார்க்கிறோம். அவ்வப்போது சிலர் ஓவெனக் கத்துகிறார்கள், விசிலடிக்கிறார்கள், சிலர் எங்களை அங்கீகரிப்பதாகக் கை முஷ்டிகளை உயர்த்திக் காட்டுகிறார்கள்; நாங்களும் பதிலுக்கு கை முஷ்டிகளை உயர்த்திக்காட்டுகிறோம். இந்த இடத்தில் அதிபரின் கீழ் இப்படி நிற்பது எங்களுக்கு ஏதோ புதுமையாகவும் எங்கள் வயிற்றுப் பள்ளங்களுக்குள் ஏதோ நிறைவது போலவுமிருக்கிறது.
அந்த நம்பருக்கெல்லாம் அங்கே அவசியமேயில்லை, அது மொத்தத்தில் எல்லாவற்றையும் கெடுக்கத்தான் செய்கிறது என்கிறான் ஸ்போ, சுவரொட்டிகளைப் பார்த்துத் தலையாட்டி, உதடுகளைப் பிதுக்கிக்கொண்டே.  
அது தொண்ணூறு, உனக்குத் தெரியவில்லையா? என்கிறான் கடவுளறிவார்.
அது நமக்குத் தெரியத்தான் செய்கிறது, எந்த ஒரு அடிமுட்டாளும்கூட அதைச் சொல்வானென்கிறேன், நான்.
சரி, அது ஒரு நம்பர், அவ்வளவுதான். அது எதற்கு அங்கே தேவையில்லாமல், அதுமாதிரியே, அதற்கும் கொஞ்சம் மேலே பார், அந்த மஞ்சள் படம் 25 தானே, அதுக்கு மட்டும் ஏதோ அர்த்தமிருக்குமென்று யாராவது சொல்வார்களாயென்ன? என்கிறான், கடவுளறிவார்.  
 ஒருவேளை அது, அவருக்குப் பிடித்த நம்பராயிருக்கலாம், எனக்குப் பன்னிரண்டு போல –
நீங்கள் எல்லோருமே மரமண்டைகள், முதலில் பேச்சை நிறுத்துங்கள் என்கிறாள், சிப்போ. நானும் சிரித்து, கைகளால் கண்களுக்குத் தடுப்பு ஏற்படுத்தி, சேசுவே என்ன வெயில் என்கிறேன்.
அது அவருடைய வயது. நாளை அவருக்குப் பிறந்த நாளென்று உனக்குத் தெரியாதா? பீல்ட்ஸ் ஸ்டேடியத்தில் ஒரு பெரிய விருந்து இருக்குன்னு உனக்குத் தெரியாதா? அதுக்காகத்தான் இந்தச் சுவரொட்டிகளையெல்லாம் ஒட்டியிருக்காங்க என்கிறான் ஸ்டினா. அவன் சுவர் மேல் வசதியாகச் சாய்ந்துகொண்டு, அந்த வெயிலிலும் குளிர்வது போல உள்ளங்கைகளைத் தேய்த்துக்கொள்கிறான். நாங்கள் எங்கள் வாழ்க்கையில் இதுவரையில் அதிபரைப் பார்த்ததேயில்லாத மாதிரி, அவரை இப்போது புதிதாகப் பார்க்கிறோம்.  
 ஸ்டினாவுக்கு எல்லாமே தெரியும், ஆனா, இந்த ஒரு விஷயத்தில மட்டும் அவன் என்ன பேசுகிறானென்பது அவனுக்குத் தெரியவில்லையென்றுதான் நான் நினைக்கிறேன். நான் சொல்றது, எங்க கூலுத்தாத்தா இதுபோலப் பெரிய மனுசத் தோரணையெல்லாமில்லை; அவர் இன்னும் தொண்ணூறுக்குப் பக்கத்தில் கூட வரவில்லை. அவர் ஒரு வயதான மனிதர் போலத் தோன்றுகிறார் – உடம்பு முழுக்கக் கோடு கோடாகச் சுருக்கங்கள், வளைந்த முதுகு, வெள்ளை முடி. அவரது இடதுகால் மூட்டில் ஏதோ வலி, அம்மாவும் வேல, வேலன்னு வேலைசெய்யத் தான் செய்கிறாள். ஆனா தாத்தாவோட கால்ல செய்ய வேண்டிய ஆபரேசனுக்கு ஆஸ்பத்திரில கேக்குற பணத்தக் கொடுக்க முடியல. அதுவும் கூடச் சேர்ந்து கூலுத்தாத்தா ரொம்பவே கிழடாகத் தெரிகிறார். அதுவுமில்லாமல் அவர் எல்லா இடத்திலுமே தூங்கிவழிவதோடு, விஷயங்களை மறந்துவிட்டு, அர்த்தமற்ற பேச்சாகவே பேசுகிறார்; இன்றைக்குக் காலையில் பாருங்களேன், வீட்டில் பால் இல்லாததால் கடுங்காப்பி கொண்டுபோய்க் கொடுத்தேன்; அவர் என்னை உண்மையாகவே கடுங்கோபத்தில் முறைத்து, இப்படிப் பிச்சைக்காரன் போலச் சாப்பிடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது, இதற்காகவா போராடி அவ்வளவு செல்வத்தையும் பெற்றோமென்கிறார். நான் சிரிப்பை அடக்குவதற்காக, அடுத்த வீட்டு வாசலில் நான்க்கோ துணிகளுக்கு இஸ்திரி போடுவதைப் பார்க்கவே, தாத்தா சுத்த பைத்தியமென நான் நினைத்ததை அவர் கவனிக்கவில்லை.
அதிபர் எவ்வளவு அழகு, அவர் எனக்குத் தாத்தாவாக இருந்திருக்கக்கூடாதா? அவர் முகத்தில் பெரிய மடிப்புகளே இல்லை. அவரது கறுப்பு மேனி புத்தம் புதிதாக நல்ல வழவழப்பாக இருக்கிறது. மனிதத் தோல் மட்டும் விலைக்குக் கிடைப்பதாக இருந்தால் அவருடைய மேனியின் தோல் தான் உலகத்திலேயே யாராலும் வாங்க முடியாத அளவுக்கு விலை கூடியதாக இருக்கும். அழகாக வெட்டப்பட்டுள்ள அவருடைய தலைமுடியைத் தான் பாருங்களேன், மெல்லிய  ஒரு சிறு நரை; அதன் பக்கத்திலேயே முன்புறமாக, அவரது மூக்கிலிருந்து மேலுதட்டுக்கு இறங்கும் சிறுபட்டைக் கோடு போலவே உண்மையாகப் பளபளக்கும் கறுப்பு முடி. அப்புறம், இருக்கவே இருக்கிறது, பரிசுத்தப் பளபளப்புடன் கண்ணாடி, அவரது முகத்துக்கு, அது அப்படி ஒரு பொருத்தம். ஸ்டினா என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், எனக்குக் கவலையில்லை, தொண்ணூறு வயதில் இப்படித் தெரிகிற ஒரு தாத்தாவை நான் பார்த்ததேயில்லை.
ஏய், இங்கப் போலீஸ் இருக்காங்க என்று ரோட்டினைச் சுட்டிக்காட்டிய ஸ்போ நேற்று நடந்ததுக்குப் பிறகு, இனிமேல் திரும்பி வரமாட்டாங்கனு நினைச்சேன் என்கிறான்.
அவங்க ஏன் வரமாட்டாங்க? இந்த ரோட்லதான் திருடங்களை எல்லாம் பெத்துப் போட்டிருக்காங்கனு சொல்ற முட்டாள்கள் இங்க தான இருக்கிறாங்க, அதைச் சொல்றன் என்கிறான் வேசிமகன். அவன் குரலில் அவ்வளவு வெறுப்பு, ஏதோ விஷத்தை மென்றுவிட்டதுபோல் வார்த்தைகளைத் துப்பினான், அவன்.
சாலை இறக்கத்தில் மிக அருகிலேயே, நகருக்குச் செல்லும் `கோம்பி` வேன்களுக்காக பயணிகள் காத்திருக்கும் சாலையோர நிழற்கூடத்தில் போக்குவரத்துக் காவலர்கள் ஒன்றாகச் சேர்ந்து நிற்கின்றனர். அவர்கள் அந்தக் கிறுக்குத்தனமான சுண்ணாம்பு நிறக் கைத்தொங்கல்களை அணிவதோடு, ஏதோ கதை எழுத எப்போதுமே தயாராயிருப்பதுபோல  பலகை, நோட்டுப் புத்தகம், பேனாக்களைச் சுமந்து திரிகின்றனர். அங்கே ஐந்து பேர் நிற்கின்றனர் – இருவர் பெண்கள், சாம்பல் நிறச்சட்டைக்கும் இரண்டு கால்பக்கமும் இந்தச் சரக்குப் பைகள் வைத்த கப்பற்படை காற்சட்டைக்கும் பொருத்தமாகத் தொப்பி அணிபவர்கள். ஆண்கள் உலர்ந்த இரத்த நிறத்தில் அரணக்காலணிகளும் சாம்பல்நிற மேற்சட்டையும், சாலைக் குழிப்பள்ளங்களுக்கிணையான காக்கி நிறத்தில் காற்சட்டையும் அணிகின்றனர். நகரத்திலிருந்து மூன்று கார்களும், நகரத்தை நோக்கி இரண்டு கார்களும் வரவே அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து செல்வதை நாங்கள் கவனிக்கிறோம்.  குட்டையான பெண் காவலர் ஏற்கெனவே மாநகரப் பேரவைச் சீருடையிலிருந்தவர்களை ஏற்றிவந்த லாரி ஒன்றை நிறுத்தக் கையாட்டிக் கொண்டிருந்தார்.
நகுலுலேக்கோ அண்ணன், சாலை மேட்டின் மேலாக வருவதை நாங்கள் பார்க்கிறோம். அவன் கழற்றவே கழற்றாத மலிவான மஞ்சள் நிற சைனாச் சட்டையைக்கொண்டும் அவனுடைய நடை மற்றும் அவன் முழங்கையில் எப்போதுமே தொங்கும் பாட்டரி ரேடியோலிருந்தும், அவன்தான் என்பது எங்களுக்குத் தெரியும். பல நாட்களாகவே வேலைசெய்யாத போக்குவரத்து விளக்குக் கம்பத்தைக் கடக்கும் அவன், எங்கள் பக்கமாக வந்து,  டவுன்ஸென்ட் சீருடைச் சிறுமிகள் அருகில் நிற்பதைப் பார்க்கிறோம். அவன் அவர்களிடம் உடலால் பேசத் தொடங்குகிறான். சிறுமிகள் அவர்களின் புத்தகப் பைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, வெறுமனே அவனைக் கவனிக்கின்றனர். அங்கு நின்ற, வளர்ந்த ஒரு சிறுமியை நோக்கி  நகூஸ்து அண்ணன் கையை நீட்டியபோது, அவன் ஒரு நாற்றம்பிடித்தவன் போல, அவள் ஒரு அடி பின்வாங்கினாள். அவன் அடுத்த சிறுமியை நோக்கிக் கையை நீட்டியபோது, அவளும் முதல் சிறுமி போலவே செய்ய, அது அப்படியே தொடர, நாங்கள் சிரிக்கத் தொடங்கினோம்; ஆனால், அவன் கண்ணில்படாத மாதிரி; அவன் கண்ணில் பட்டால் அவன் எங்களை என்ன செய்வானென்று எங்களுக்குத் தெரியும்.
கடைசியாக அவன், அந்தப் பெண்பிள்ளைகளிடம் கெட்டவார்த்தை சொல்வதாக வெறுங்கைகளை வீசிக் காட்டியதோடு, திரும்பி எங்களைப் பார்க்க, அந்தச் சாலை, குழிப்பள்ளங்கள், விளிம்பில் பெயர்ந்த கப்பித்தார் எல்லாமே அவன் ஒருவனுக்கே சொந்தம் போல ஒரு நடையில் வருவதைப் பார்க்கிறோம். கூப்பிடு தொலைவுக்கு வந்ததும் இப்போது அவன் கூறுவதைக் கவனிக்காத அந்தப் பெண்பிள்ளைகள் பக்கமாகத் திரும்பி நின்று கத்துகிறான், என்னமோ உங்க சாமானெல்லாம் வைரத்தில செஞ்சமாதிரி, உங்கள ஸ்கூலுக்கு யார் கூட்டிப்போவான்னு பாக்கலாம், மரமண்டைகளா!    
நகூஸ்து அண்ணன் அதிபரைப் பார்த்ததும், அவனுடைய ரேடியோவை வேசிமகன் கைகளில் திணித்துவிட்டு, சுவரை நோக்கி நடக்கிறான். `என் தந்தையே` என அவன் முணுமுணுப்பது எங்கள் காதுகளில் விழுகிறது. பின்னர், அவன் மிகுந்த மரியாதையுடன் தலை தாழ்த்தி , வணங்கிநிற்கிறான்.
அவன் பிரார்த்தனை செய்கிறானா? நாமும் எல்லோருமாகத் தலையைத் தாழ்த்தவேண்டுமா? என்கிறான், ஸ்போ.
அவன் அதிபரைச் சொல்கிறான், என்கிறான், ஸ்டினா.
என்ன, நகூஸ்து அண்ணனின் உண்மையான அப்பா, அதிபரா? எனக் கடவுளறிவார் கேட்க இல்லையென ஸ்டினா தலையசைக்கிறான். நான் ஒரே இடத்திலேயே நின்றாலும் காலை மாற்றிக்கொண்டேயிருக்கவேண்டியிருக்கிறது, பூமி அவ்வளவு சூடாக இருக்கிறது. அது தீயாகச் சுடுகிறது.
இவர் மனிதர், என நகூஸ்து, ஆட்காட்டி விரலை வளைத்து சுவரொட்டியில் தட்டித் தலையாட்டிக்கொண்டே சொல்கிறான். இவர், இந்த மனிதர் காலங் காலத்துக்கும் வாழ்க, மேன்மைதங்கிய அவர், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஆப்பிரிக்க அதிபர் அவர்களே, என்று சொல்கிறான். இப்போது அவன் கைமுஷ்டி, அதிபரின் கைமுஷ்டிக்கு இணையாக உயர்ந்து நிற்கிறது.  
அவன் அதன்பிறகு எங்களிடம் பேசவில்லை, அந்த வழியில் செல்கின்ற கார்களிடம், கார்களில் செல்வோரிடம், கார்களை வீட்டில் விட்டுவிட்டு வந்தவர்களிடம், கார்களை நிறுத்துகின்ற காவலர்களிடம், அந்தக் கார்களை ஓட்டிவந்த ஓட்டுநர்களிடம் அவர்கள் வாங்கி, பைகளுக்குள் திணிக்கும் பணத்திடம், அவனைப் புறந்தள்ளிய அந்த டவுன்ஸென்ட் சிறுமிகளிடம், அந்தச் சிறுமிகளுக்காக நிற்கும் கார்களிடம், டவுன்ஸென்ட் சிறுமிகள் அவர்களின் பள்ளியில் பார்க்கப்போகிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், அந்தச் சிறுமிகள் மற்றும் ஒவ்வொருவரையும் அவரவர் போய்ச் சேரவேண்டிய இடத்திற்குக் கொண்டுசேர்க்கும் அந்தச் சாலையிடம், அந்தச் சாலையின் குழிப்பள்ளங்களிடம், அந்தச் சாலையை அமைத்த மனிதர்களிடம், மரங்களிடம், பழுப்புநிறப் புல் மற்றும் எங்களைச் சுற்றிச் சிதறிக்கிடந்த குப்பைகளிடம், எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டிருந்த வெயிலிடம் அவன் பேசுகிறான்.
இந்த மனிதர், உங்களுக்கு, நமக்கு, இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறாரென்று உங்களுக்கு ஏதாவது கொஞ்சமாவது சிந்தனை இருக்கிறதா? என நகூஸ்து அண்ணன், அதிபரைச் சுட்டிக்காட்டிக் கேட்கிறான். நான் அவனுடைய வெளிறிப்போய்த் தொளதொளத்த ஜீன்ஸையும் அக்குளில் கறுப்புக் கறைகளுடன்   நூல்நூலாகத் தெரியும் சட்டையையும், தூசிபடிந்து அழுக்கான, மலிவான ஜிங்-ஜாங் ரப்பர் செருப்புகளையும் பார்ப்பதுடன், அவனுடைய திடமாகப் பெருமிதமும் உறுதியும் தெறிக்கும் குரலோடு இது எப்படி ஒத்துப் போகுமென்று நினைத்துப்பார்த்து நிச்சயமாக ஒத்துப் போகவில்லையென நினைக்கிறேன். நீங்கள் கண்களை மூடிக்கொண்டால், அதிபரைப் போலவே, அழகான நீலநிறக் கால்சராயும் வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் புள்ளிகள் கொண்ட கழுத்துப்பட்டைத் தொங்கலும் மார்புப் பையில் பூக்களுமான ஆடையணிந்த ஒருவரிடமிருந்து அந்தக் குரல் வருவதாக நினைத்துக்கொள்வீர்கள்.
அவரும் நமது பாவங்களுக்காக மரித்தாரா, சேசுவைப் போல? என்கிறான், கடவுளறிவார். ஸ்டினாவும் வேசிமகனும் ஹை-ஃபைவ் எனச் சொல்லி ஒருவர் கையை மற்றவர் தட்டிச் சிரிக்கின்றனர். நகூஸ்து அண்ணன் கடவுளறிவாரை உண்மையிலேயே மூர்க்கமாகப் பின்னர், ஸ்டினாவையும் வேசிமகனையும் பார்க்கிறான்.
இது சிரிக்கிற விஷயமில்லை, பசங்களா, நீங்கள் கொஞ்சம் வளர்ந்தால் உங்களுக்குத் தெரியும். இந்த இடத்தை, இந்த இடத்தின் சுற்றுப்புற அமைப்பினை, இந்த நாட்டைப் பாருங்களேன்? இங்குள்ள எல்லாமே நம்முடையது என்கிறான், நகூஸ்து அண்ணன். இப்போது நாங்கள் நகூஸ்து அண்ணனின் பேச்சுக்குக் காதுகொடுக்கவில்லை; மெயின் ரோட்டில் இறங்கிவரும் அழகிய புதுமையான காரினைப் பார்க்கிறோம். அது மேலே சிவப்பாகவும் அடிப்பாகம் கறுப்பாகவும், எங்கெங்கும் மடிப்புகள் மற்றும் நிமிர்வுகளுமாகத் தெரிகிறது. அது காரைவிடவும் மேலான ஒன்றாகத் தெரிகிறது; இது இந்தப் பாழாய்ப்போன குண்டுகுழி ரோட்டில் என்ன செய்யுமென நான் நினைத்து, நினைத்து வியக்கிறேன். அது காவலர்கள் பக்கத்தில் வரும்போது, அவர்கள் கைகளைக் கட்டிக்கொண்டு அது கடந்து செல்வதைக் கவனிக்கின்றனர். நகூஸ்து அண்ணன் விசிலடித்து, தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கிறார்.
இப்ப, பார்த்தீங்களா, பசங்களா? அது இங்கிருப்பதிலேயே விலை உயர்ந்த கார்; இந்த நாட்டிலேயே இதுபோல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அதுவும் இங்கே இருக்கிறது. நம்ம ரோட்டில்  ஓடுகிறது! அந்தக் காரே அவனுடையது போல, நகூஸ்து அண்ணன், பெருமிதம் காட்ட, அவனது முகம் ஒளிர்கிறது.
மிகவும் விலை உயர்ந்த இதை எப்படி இந்த ஆள் வாங்கியிருப்பார்? என்கிறான், கடவுளறிவார்.            
அது எப்படின்னா, அவன் ஒரு திருடன், என்கிறான் ஸ்டினா; அப்படியே, அங்கே கிடந்த செங்கல் ஒன்றை, அது ஏதோ நெகிழிப்பொருள் போலக் கடுமையாக எட்டி உதைக்கிறான். அவன் கொஞ்சங்கூட வலியைக் காட்டவில்லை. நகூஸ்து அண்ணனின் முகத்திலிருந்த ஒளி மறைகிறது. அவனது அம்மாவை ஸ்டினா அவமானப்படுத்திவிட்டது போல அவன் மூர்க்கம் கொள்வது நன்றாகவே தெரிகிறது.
 டேய், டேய், பையா, அளந்து பேசுடா. அது திருவாளர். எம்மோட கார். அவர் திருடனெல்லாம் இல்லை. இப்படித்தான் நிறையப் பேரு எதுவுமே தெரியாமப் பேசி, மாட்டிக்கிறாங்க என்கிறான், நகூஸ்து அண்ணன். அவன் குரலில் தெரிகிற எரிச்சலை உடனேயே சொல்லிவிடலாம். ஸ்டினா தோள்களைக் குலுக்கி, வெயிலை வெறிக்கிறான்.
திருவாளர் எம். என்கிறது யார்? என்கிறான், ஸ்போ. 
சுரங்க அமைச்சர்டா, நண்பா. இந்த வங்கி, அந்த வணிக அலுவலகம், நிறுவனங்கள் எல்லாம் அவருக்குச் சொந்தம்டா. அவங்க எல்லாருமே, ஒன்னு விடாம எல்லாருமே திருடனுங்கதாண்டா அவங்க எவ்வளவு சம்பளம் எடுத்துக்கிடறாங்கனு தெரியுமா? நீ கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டாய்? என்கிற ஸ்டினாவின் முகம் அருவருப்பைக் காட்டுகிறது. அப்போதுதான் சற்றுமுன் நாங்கள் பார்த்த அந்த வித்தியாசமான கார் அவனுடையது போலவும் அவன் திருட்டுக் கொடுத்ததுபோல், அவன் குரல் உடைகிறது. வேசிமகன் தலையை உலுப்பிக்கொண்டு அதிபரை நோக்கி நடக்கிறான்.
யோவ், மனுஷா. நானும் வளர்ந்து அரசாங்கத்துலதான் உண்மையிலேயே சேரப்போறேன்யா, கக்கூசு, என்கிறான், வேசிமகன்.
டேய் பையா, உனக்கு என்னதான்டா பிரச்னை? எதுக்காக இவ்வளவு அவமரியாதை பண்ற? இப்போது நகூஸ்து அண்ணனின் குரல் இறுகுகிறது. ஸ்போவும் நானும் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம்.
யோவ், நிதானமாக் கண்ணத் தொறந்து பாரு, கக்கூஸ், கக்கூசாப் பேசறது நிறுத்து, என்கிறான், ஸ்டினா. அவனது குரலில் தெரிந்த உயிர்ப்பும் ஒருவகைக் கோபமும், எனக்குக் கைதட்டவேண்டும் போலிருந்தாலும் நகூஸ்து அண்ணனின் முகம் போகிற போக்கைப் பார்த்து அப்படிச் செய்யக்கூடாதென முடிவு செய்கிறேன். எல்லோரும் ஸ்டினாவை மதிப்போடு பார்க்கிறோம்; அவன் இப்படித் திடமாகச் சத்தமாகப் பேசி, அதுவும் முழுதாக வளர்ந்த ஒரு ஆணிடம் பேசியதை நாங்கள் கேட்டதேயில்லை.
நகூஸ்து அண்ணன், நான் சொல்றது, உன்னையே பார்த்துக்கோன்னுதான். ஒரு நாடான நாடுன்னா, நீ ஒரு வேலையில இருக்கணும், குடும்பத்தைக் கவனிச்சுப் பார்க்கிற அளவுக்கு வருமானமுள்ள ஒரு மரியாதையான வேலை இருக்கணும். எலக்ட்ரிசிட்டி கிடைக்கிற ஓரளவுக்காவது வசதியான வீட்ல இருக்கணும், குறைந்தது உனக்குக் கக்கூசுக்கு வந்தா போறதுக்கு ப்ளஷ் அவுட் உள்ள ஒரு கக்கூசு இருக்கணும்,  -
ஸ்டினா அதைச் சொல்லிமுடிக்கும் முன்பாகவே, நகூஸ்து அண்ணன் அவனது இரண்டு காலையும் தட்டிக் கீழே தள்ளி, ஓங்கி ஓங்கிக் குத்த, அவன் தரையில் நகூஸ்து அண்ணனுக்கடியில் தத்தளிக்கிறான். நாங்கள் எல்லோரும் ஸ்டினாவை விட்டுவிடுமாறு நகூஸ்து அண்ணனிடம் கெஞ்சிக் கத்துகிறோம். வேசிமகன் அவனைப் பிடித்து முடியுமட்டும் இழுக்கிறான். ஆனால், அவனோ ஓங்கி ஓங்கிக் குத்திக்கொண்டேயிருக்கிறான். அவனை இழுக்கவே முடியவில்லை. ஸ்டினா கத்திக்கத்தித் திட்டுகிறான்; அவன் திட்டத் திட்ட, நகூஸ்து அண்ணனுக்குப் பைத்தியம் ஏற, ஏற அடி பலமாக விழுந்துகொண்டேயிருக்கிறது. நான் பின்னால் திரும்பி அதிபரைப் பார்க்கிறேன், ரோட்டில் காவலர்கள் பணம் வசூலிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.  எங்கள் அருகில் வரும்போது கார்கள் வேகம் குறைத்து ஒலிக்கின்றன; ஆனாலும் நிற்காமல் போய்க்கொண்டேயிருக்கின்றன. பெருக்குமாறுக் கட்டு ஒன்றைச் சுமந்துகொண்டு எங்கிருந்தோ ஒரு வயதான பாட்டி வருகிறாள். அவள் ஒரு பெருக்குமாறால் நகூஸ்து அண்ணனை, மொத்து மொத்தென்று வெளுக்கத் தொடங்கி, அவன் ஸ்டினாவை விட்டு விலகி, திட்டிக்கொண்டும் கைமுஷ்டியைக் கொண்டும் போய்த் தொலையும் வரை அடிக்கிறாள். அவன் அவனுடைய செத்துப்போன ரேடியோவை மறந்துவிட்டுப் போவதை யாருமே அவனுக்கு நினைவுபடுத்தவேயில்லை.
அந்த வயதான பாட்டி சென்ற பின், ஸ்டினா தூசி, மண்ணையெல்லாம் தட்டிச் சுத்தப்படுத்திக்கொண்ட பிறகு, அவன் உடம்பில் சிறு இரத்தத்துளிகள் தெரிந்த இடங்களிலெல்லாம் மண்ணைத் தெளித்து அப்பி மூடி, எங்களுக்குத் தெரிந்த எல்லா வசவுகளாலும் நகூஸ்து அண்ணனை பதிலுக்குப் பதிலாகத் திட்டிய பிறகு, அதிபரின் கீழ் சுவரில் வரிசையாகச் சாய்ந்து உட்கார்ந்து மெயின் ரோட்டை, சும்மா, வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறோம். வெயில்தான் எங்களை இப்படிச் சோர்ந்து போகச்செய்திருக்கிறது. யாரோ ஒருவருடைய வயிறு இரைந்து கூப்பிடவும், நாங்கள் சிரிக்கிறோம்.
ஸ்டினா, அவன் தொடைகளின் மீது கைமுட்டுகளை ஊன்றி, உள்ளங்கைகளால் முகத்தை மூடி அமர்ந்திருக்கிறான். அப்படியென்றால் அவன் சிந்திக்கிறானென்று அர்த்தம். நாங்கள் கவனித்துக்கொண்டும் காத்துக்கொண்டும் அமர்ந்திருக்கிறோம். அடுத்து என்ன செய்வதென ஸ்டினா முடிவுசெய்வதுதான் நல்லதாயிருக்குமென நாங்கள் காத்திருக்கிறோம். கடைசியில், வெயிலில் நாங்கள் மக்காச்சோளப் பொரியைப் போல வெடித்துச் சிதறப்போகிறோமென நான் நினைக்கையில், ஸ்டினா எழுந்து சுவரைப் பார்த்து நிற்கிறான். பின்பு ஒரு வார்த்தை கூடப் பேசாமல், கையை உயர்த்தி அதிபரைப் பிடித்துக் கிழிக்கத் தொடங்குகிறான். ஆனால், சுவரொட்டி நல்ல இரும்புத் தகரத்தாலடித்து ஒட்டியிருப்பதுபோலக் கிழிய மறுக்கிறது. ஸ்டினா பற்றிப் பற்றி இழுக்கிறான். நாங்கள் எல்லோருமாக எழுகிறோம்.