Saturday 7 October 2017

காற்றின் உட்பக்கம் - மிலோராட் பாவிச் (செர்பியா) The Inner side of the Wind - Milorod Pavic (Serbia)

காற்றின் உட்பக்கம் (The Inner Side of the Wind)
செர்பிய மொழி : மிலோராட் பாவிச் (Milorod Pavic)
ஆங்கிலம் வழி தமிழில் ச. ஆறுமுகம் 




காற்றின் உட்பக்கம் 
வயதுவந்த லியாண்டர் வாசிக்கக் கற்றுக்கொண்டபோது, இரு புகழ்பெற்ற காதலர்களின் கதையைக் கண்டுணர்கிறான். “ஒருவேளை லியாண்டர் தண்ணீரில் அல்லாமல் காலத்தில் நீந்திவந்திருக்கவேண்டும்” என்கிறார், அவர், அவனது ஆசிரியரிடம். இந்தப் பயணத்தைத்தான் திரு. பாவிச் அவரது அற்புத நாவலில் நமக்குக் கருவாக்குகிறார்.
டபிள்யூ. எஸ். டி பியாரோ, நியூயார்க் டைம்ஸ் புக் ரிவ்யூ
முழுமை மற்றும் பாதியின் கருத்தாக்கத்தினைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், காற்றின் உட்பக்கம், உலகம் மற்றும் நூல் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பார்வையினையும் உருவாக்குகிறது.

Milorad Pavic Interaktivni Milorad Pavi

                           















காற்றின் உட்பக்கம் அல்லது கதாநாயகன் மற்றும் லியாண்டரின் நாவல்
மிரோலாட் பாவிச்















உள்ளடக்கம்
காற்றின் உட்பக்கம் அல்லது கதாநாயகன் மற்றும் லியாண்டரின் நாவல்
1
2
3
கதாநாயகன்
1
2   காப்டன் பீட்டர் டி விட்கோவிச்சின் கதை
3  சகோதரன் மற்றும் சகோதரியின் கதை













அவன் ஏதோ ஒன்றின் பாதி. அந்த ஏதோ ஒன்றின் வலிமைமிக்க, அழகுவாய்ந்த, திறமைமிக்க ஒரு பாதி, ஒருவேளை, அவனைவிடவும் வலிமையானதாக, மேன்மை மிகுந்து, அழகும் வாய்ந்ததாக இருக்கலாம். அப்புறம், அவன் நேர்த்திமிக்கதும் ஆழம் காணமுடியாததுமான ஏதோ ஒன்றின் மாயமந்திரப் பாதியாகவுமிருந்தான். அவளோ முற்று முழுதான ஒரு முழுமையாக இருந்தாள்.  சிறிய,  நெகிழ்வான, மிகவும் வலுவாகவோ அல்லது இணக்கமானதாகவோயில்லாத ஒரு முழுமை, ஆனால் அதேநேரத்தில் முழுமையான ஒரு முழுமை.
                







1
” எதிர்கால வாய்ப்புகள் எல்லாமே சிறப்பான ஒரு பண்புநலத்தினைக் கொண்டுள்ளன; அவற்றை நீங்கள் கற்பனைசெய்கிற மாதிரியில், அவை ஒருபோதுமே அமைவதில்லை.” என்றார், லியாண்டரிடம் அவனது அப்பா.
அந்த நேரத்தில், லியாண்டர் முழுவதுமாக வளர்ந்துவிட்ட ஒரு ஆணாக இல்லை; அவன் அப்போதும் கல்லாதவனாகவேயிருந்தான்; ஆனால், ஏற்கெனவேயே அழகானவனாகியிருந்தான்; அவன் அப்போது லியாண்டர் என அழைக்கப்பட்டுவிடவில்லை, ஆனால், அவனது அம்மா அவனது தலைமுடியை, அவன் பயணத்தின் போது வாரிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாதபடி டச்சு லேஸ் போலப் பின்னி, இறுகக் கட்டியிருந்தாள். அவன் வெளியே செல்வதைப் பார்த்த அவனது அப்பா, “அவனுக்கு அன்னம் போல நீண்ட, அழகான ஒரு கழுத்து;  வாளுக்கு இரையாகிச் சாகாமல் கடவுள் தடுப்பாராக.” என்றார்.
அதோடு, லியாண்டர் அந்த வார்த்தைகளை அவனது வாழ்நாள் முழுவதும் நினைவுவைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
தலைமுறை, தலைமுறையாக, லியாண்டரின் சிகோரிச் குடும்பத்தினரில் அவனது அப்பாவைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே, கொத்தனாராக, கருமாராக மற்றும் தேனீ வளர்ப்பவராகத் தான் இருந்திருக்கிறார்கள். சிகோரிச்கள், மொழியின் முதலெழுத்துக்களைக் கற்பதற்கு முன்னதாகவே, தேவாலயப் பிரார்த்தனை கீதங்களைக் கற்றுக்கொள்வதும் உச்சியிலிருந்து இறங்கும் தண்ணீர் இரண்டு கடல்களுக்குள் வழிவதான, உச்சிமேட்டின் ஒருபக்கம் மழை மேற்காகப் பெய்து நெரெட்வா ஆற்றுக்குள்ளும் ஏட்ரியாடிக் கடலுக்குள்ளும் இறங்குவதான, உச்சிமேட்டின் மறுபக்கத்தில் மழை கிழக்காகப் பெய்து, ட்ரினா வழியாக சாவா ஆற்றில் இறங்கி டான்யூப்பில் புகுந்து கருங்கடலுக்குள் சேர்கிற  ஹெர்செகோவினா பகுதியிலிருந்து பெல்கிரேடின் அடிப்பகுதியில் ஓடும் டான்யூப் பகுதிக்கு வந்து சேர்ந்தவர்கள். குடும்பத்தினரில் வழிமாறி, வீடு கட்டுமானம் குறித்து காதிலே போட்டுக்கொள்ளக்கூட மறுத்துவிட்ட ஒரே நபர், லியாண்டரின் அப்பாதான்.  
” வியன்னாவில், அல்லது புடாவில் நான் துணிச்சலுடன் வெளியிறங்கிய உடனேயே, எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நீங்கள் சிறிது கூடக் கருணையின்றி எழுப்பியுள்ள கட்டிடங்கள் மத்தியில், நான் என்னைத் தொலைத்துவிட்டு, பெப்ருவரியில் பைக் மீன்கள் முட்டாள்தனமாக மொய்க்கின்ற, நான் யார், எங்கிருந்து வருகிறேனென நான் உணர்கிற டான்யூபில் தான் முகிழ்த்து வெளிவருகிறேன்.”
சிகோரிச்கள் குடும்பத்தின் தந்தை யாரென்றோ, அல்லது  எங்கிருந்தாரென்றோ அல்லது அவர்கள் எங்கே வசித்திருந்தார்களென்றோ ஒருபோதும் தெரிந்துகொண்டதில்லை. அவன் அவர்களுக்குச் சொன்ன ஒரே விஷயம், அவர்கள் தண்ணீர் மற்றும் மரணத்தின் மீதே வாழ்ந்தார்கள் என்பதுதான்; ஏனென்றால், எப்போதுமே மனிதன் மரணத்தின் மீதுதான் வாழ்கிறான். அப்புறம், லியாண்டரின் அப்பா உண்மையிலேயே டான்யூப் அல்லது சாவாவில் நனைந்து, - ஒவ்வொரு ஆறும் அததற்கேயுரிய தனித்த மணம் கொண்டிருப்பதால் அவற்றைத் தனித்தனியாகக் கண்டுகொள்வது மிக எளிதானது – ஈரம் சொட்டச்சொட்ட, மிகப் பிந்திய பின்னிரவில் வீட்டுக்கு வந்தார். அவர் நனைந்திருந்ததால் நடு இரவிலும் எண்ணிவைத்தது போல் பத்து முறை தும்முவார். 
சிறுவயதில் ரடாச்சா, மில்கோ போன்ற பெயர்களையும் கொண்டிருந்த லியாண்டர், குழந்தைப் பருவத்திலிருந்தே அவனது தாத்தாக்கள் மற்றும் மாமா, பெரியப்பாக்கள் வழியில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குமாறும் அவர்களது குடும்பத் தொழிலான கட்டுமானத் தொழிலினைத் தொடருமாறும் கற்பிக்கப்பட்டிருந்தான். அவன் கட்டுமானத்திலும் சலவைக்கல் செதுக்குவதிலும் நுண்திறன் பெற்றவனாக இருந்தான்; புனிதச்  சின்னங்களைக் கல்லறைகளில் புதைக்கும் சடங்குகளில் அவனால் உதவமுடியும் என்பதோடு தேன்கூடுகள் மீது ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்துவதிலும், தேனீக்களை மிக எளிதாகவும் விரைவாகவும் அப்படியே கூட்டமாகப் பிடிப்பதிலும் இயல்பார்ந்த திறமை பெற்றிருந்தான். கோடை காலத்தின் எரிக்கும் வெயிலில், ஹெர்செகோவினாவின் ஆற்றுக்குள் மீன் பிடிக்க, துப்பாக்கிச் சுடு வரம்பின் இருபது மடங்கு தூரம் வரையிலும் செல்லவேண்டியிருக்கும்போது, லியாண்டரைத்தான் அனுப்புவார்கள்; அவனும் தனியாளாகவே சமாளித்து, மீன்பிடித்து, அதற்கான நெட்டில் என்னும் தழைகளுக்குள் பொதிந்து, அவற்றிலிருந்து நாற்றமெழும் முன்னரே கொண்டுவந்துவிடுவான். பிற்காலத்தில், அவனது பல கடற்பயணங்களில் ஒன்றின்போது, முடியரசன்  தூர்த் பிராங்கோவிச் (despot Djurdje Brankovich) நினைவாக டான்யூபில் நீரெடுத்துப் பிசைந்த மாவில் தயாரித்து, ஸ்மெடெரேவோவின் நமது மாதா தேவாலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட ரொட்டியினை அவாலா மலைக்குச் செல்லும் வழி முழுவதும் குதிரைவண்டிக்காரர்கள் ஆளாளுக்குக் கை மாற்றிச் சுமந்துசென்றதைக் (என்றென்றும் அவன் நினைவில் நிற்கப்போகிற காட்சியினைக்) கண்டான். டான்யூபிலிருந்து வருகின்ற அந்த ரொட்டி, சூடு தணியும் முன்பாகவே அரசனின் உணவு மேஜைக்கு அவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கே நறுக்கப்பட்டு ஜர்நோவா கிராமத்தில் காய்ச்சப்பட்ட உப்புடன் பரிமாறப்பட்டது.
“நாம் எல்லோருமே கட்டிட வேலைசெய்பவர்கள் தாம்,” இரவு உணவின்போது லியாண்டரிடம் பேசுகிற தாத்தா எப்போதும் சொல்வது, “ஆனால், கட்டுமானத்திற்கு, வழக்கத்திலேயே இல்லாத சலவைக்கல்லைப் பெற்றிருக்கின்றோம் : மணிக்கணக்கான நேரங்கள், நாட்கள் மற்றும் ஆண்டுகள், தூக்கமும் ஒயினுமே சாந்து. நாம் எல்லோரும் காலத்தின் கட்டுமானக்காரர்கள், நிழலினை அண்டவிடாமல் துரத்தி, கொப்பூழ்களில் நீரைத் தேக்குகிறோம்; மணித்தியாலங்களால் அவரவர் வீட்டினைக் கட்டி எழுப்புகிறோம், காலத்தால் அவரவர் தேன்கூட்டினைக் கட்டி, அவரவர் தேனைச் சேகரிக்கிறோம், வயிற்றுத் தீக்காக, அடிவயிற்றில் காலத்தைச் சுமக்கிறோம். ஒரே பைக்குள் செம்புடன் கலந்துவிட்ட தங்க நாணயங்கள் போல், வெள்ளை மறிகளும் கறுப்பும் போல், அப்படியே நமது வெள்ளைச் சலவைக்கல்லுடன் கறுப்பும் கட்டிடத்துக்காகக் கலக்கப்படுகின்றன. அவனது பைக்குள் அவனது செம்பே அவனது தங்கத்தை விழுங்குவது அல்லது அவனது இரவுகள் அவனது பகல்களைக் கபளீகரம் செய்கிற துயரமே அவனுக்கு மிஞ்சுகிறது. காலம் மற்றும் காரணகாரியத்துக்கப்பாற்பட்டு அவன் கட்டவேண்டும்………”
இதையெல்லாம் கேட்டு, மறுநாளைப்பற்றியல்ல, அதற்கும் மறுநாளைப் பற்றிய யோசனையில் எப்போதுமே ஆழ்ந்திருந்த லியாண்டர், அவனது தந்தை மூன்று கரண்டிகளுக்கு ஒருமுறையே மொச்சையினை எடுத்துச் சாப்பிடுவதை வியப்புடன் கவனித்தான். அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் எத்தனை கரண்டி என முன்கூட்டியே அளவிட்டு எடுத்துவைத்துவிடுவர்; எவரும் அவருக்கென ஒதுக்கப்பட்ட உணவின் அளவினை மீறுவதேயில்லை; ஆனால் லியாண்டர், மற்றவர் சாப்பிடுகிற அதே அளவினை மூன்றிலொரு பங்கு நேரத்திலேயே சாப்பிட்டுவிடுவான். கொஞ்சம் கொஞ்சமாக, மிருகங்களில் கூட வேகமாக உண்பவை, மெதுவாக உண்பவை, வேகமாக நகருபவை, மெதுவாக நகருபவை என இருப்பதையும், அவனைச் சுற்றியுள்ள உலகத்தில் இருவேறு வகையான உயிரோட்டங்கள், ஒன்றுக்கொன்று சமமில்லாத இரண்டுவித நாடித் துடிப்புகளுடனான இரத்த ஓட்டம், அதுவே தாவரங்களிலெனில் உயிர்ச்சாறு  இருப்பதையும், எல்லோருக்கும்  சமநீளமுள்ள ஒரே மாதிரியான இரவுபகல்கள் என்ற ஒரே சட்டத்துக்குள் இருவேறு மாதிரியான நபர்கள் இறுக அழுத்தமாகப் பதிக்கப்பட்டுள்ளதையும், இப்படியாகச் சிலர் தேவைக்கும் குறைவாகப் பெறுவதும், மற்றவர்கள் ஏராளமாக அளிக்கப்படுவதையும் மெதுமெதுவாகப் பிரித்து அறிந்துகொள்ளத் தொடங்குகிறான். அதன் தொடர்ச்சியாக, அவனது இயக்கத் துடிப்பு வகையல்லாத மனித, மிருக, தாவரங்கள் எல்லாவற்றின் மீதான சகிப்புத்தன்மை அவனுக்குள் தன்னுணர்வின்றியே குறைவதினை உணரத் தொடங்கினான். அவன் பறவைகளைக் கவனித்து, அவனுக்கேயுரிய பாடல்முறையில் இசைக்கின்றவற்றைத் தனியாகப் பிரித்தெடுத்தான். ஒரு நாள் காலையில், அவனது தந்தை நீர் அருந்திக்கொண்டிருந்த குவளைக்காகக் காத்திருக்கையில், அவர் எத்தனை மிடறுகளாக விழுங்குகிறார் என எண்ணிக்கையிடும்போது, வீட்டைவிட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தான். அவனது அப்பா ஏற்கெனவேயே  அதிக அளவிலான  அன்பினையும் அறிவினையும் அவனுக்குள்ளும் அவனது உடன்பிறப்புகளுக்குள்ளும் புகுத்தி முதலீடாக்கியிருக்கிறார்; அதுவே அவனது வாழ்க்கை முழுவதற்கும் மகிழ்ச்சியையும் உணவினையும் அளிக்கப் போதுமானதாக இருக்கும்; அதுவுமில்லாமல் எதிர்காலத்தில், இந்த அன்பின் நோக்கமும் பயனாளருமான லியாண்டரே கூட வாழ்கிறவர்களில் ஒருவராக இல்லாமல் போகலாமென்கிறபோது, பெற்ற பாசமென்பது வீணாகவே, அதன் இலக்குக்கும் அதிகமாகி, காற்றிலடித்துப் போகலாமென்கிற நிலையில் அந்த அன்பின் ஒரு பகுதியை மேற்கொண்டும் அனுபவிப்பதை நீட்டிப்பதில் எந்த நியாயமும் இல்லையென அவன் திடீரென்று உணர்ந்தான்.          
லியாண்டரின் வெளியேறுகை பின்வருமாறு நிகழ்ந்தது. `சான்டிர்` என்ற நரம்பிசைக் கருவியை அவனுக்கு மீட்டத்தெரியும்; விடுமுறைநாட்களில் அவனது இசைப்பினில் மகிழ்ந்தவர்கள் அந்தக் கருவிக்குள் செம்பு நாணயங்களை விட்டெறிவதுண்டு. அந்தக் காலத்தில் சாவா ஆற்றின் கப்பல் துறையில் வாழ்ந்த நான்கு முன்னாள் வணிகர்கள் சான்டிர் இசைப்பதில் புகழ்பெற்றிருந்தனர். வெளியூர்ப்பயணம் ஒன்றுக்குச் செல்லவிருந்தநேரத்தில் அவர்களில் ஒருவர் நோயுற்றுவிடவே, அக்குழுவுக்கு சான்டிர் இசைக்க நான்காவதாக ஒரு ஆள் தேவைப்பட்டார். தந்தை சிகோரிச், அவரது மகனுக்கு எழுதக் கற்றுக்கொடுப்பதெனத் தீர்மானித்து, அப்போதுதான் அவனது முதன்முதல் எழுத்தான, தியோடோகாஸ் (கடவுளின் தாய்) என்ற வார்த்தை தொடங்கும் மொழிமுதல் `ஓ` வினைக் காட்டிய ஒரு காலைநேரத்தில், அதே, அதே காலை நேரத்தில் விருந்தினர் வந்தனர். லியாண்டர் அவனது பேனாவினைச் சரியாகக்கூட மூடாதபொழுதில்  சிகோரிச் வீட்டுக்குள் நுழைந்த வணிகர்களில் மூத்தவர், சுவரிலிருந்து லியாண்டரின் சான்டிரை எடுத்துக் கையாலேயே எடை பார்த்தார். அதற்குள்ளிருந்த நாணயங்களின் எடையே இளம் இசைக்கலைஞனுக்குப் போதிய பரிந்துரையாக அமைந்தது. அந்த வணிகர், கான்ஸ்டான்டிநோபிளுக்கு ஒரு முறை சென்றுவர நான்காவது சான்டிர் கலைஞராக அவரது மகனை அனுப்புமாறு மூத்த சிகோரிச்சிடம் கோரினார். லியாண்டர் இரண்டாம் யோசனைக்கே இடம்கொடுக்காமல், உடனே ஒப்புக்கொண்டான்; இப்படியாகத்தான், அவனது எழுத்துக் கல்விக்கு ஆரம்பத்திலேயே தடையேற்பட்டது; அதன்பிறகும், அவன் ஒருபோதும் அந்த முதலெழுத்தினைத் தாண்டவேயில்லை. ஆனால், அவனை வெளியே இழுத்துவந்த மூத்த வணிகர் அந்த நேரத்திலேயே நோய்வாய்ப்பட, அந்த இடத்தை நிரப்ப ஹெர்செகோவினியன் எல்லையான டியோமிடஸ் சுபோட்டாவிலிருந்து லியாண்டரின் நண்பன் ஒருவனை சான்டிர் கலைஞனாகச் சேர்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று.   
அந்த வணிகர்கள் பெல்கிரேடிலிருந்து கான்ஸ்டன்டைன் நகருக்கு பழைய கான்ஸ்டான்டிநோபிள் ரோடு வழியாக சலோனிகா பாதையில் புறப்பட்டனர். அவர்கள் செஸ்டோஸ் மற்றும் அபிடோஸ் நகரங்களுக்கிடையே   ஹெல்லெஸ்பாண்ட் கடற்கால்வாயினைப் பார்த்துவிட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பினர்; ஆனால், பயணத்தின் போதே எஞ்சியிருந்த  சான்டிர் இசைக்கும் வணிகர் இருவரில் ஒருவர் வினோதமான முறையில் அவரது மரணத்தைச் சந்தித்தார். பின்னால் நேரப்போவது தெரியாமலே, அவரது சொந்தத் தேவைகளுக்காகவே அவர், ஒட்டகத்தை முழங்காலிடுமாறு பணித்தார்; அவர் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோதே ஒட்டகம் அவர் மீது அப்படியே விழுந்து அவரைக் கொன்றுவிட்டது. அடுத்த ஆண்டு, அவர்கள் கான்ஸ்டான்டிநோபிளுக்கு மீண்டும் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவருக்குப் பதிலாளாக ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டிருந்தனர்; ஆனால் பயணம் புறப்படுகின்ற நாளில் கடைசியானவராக எஞ்சியிருந்த சான்டிர் கலைஞரான அந்த நான்காவது வணிகர், பயணக்குழுவில் சேர்ந்துவரத் தவறிவிட்டார். சான்டிர் கலைஞர்களான வணிகர்களுக்குப் பதிலாட்களாக அங்கு வந்திருந்த இளைஞர்கள்,  பழைய சான்டிர் கலைஞர்கள் ஒருவர் கூட அங்கு இல்லையென்பது தெரிந்ததும் ஒருவருக்கொருவர் பார்வையாலேயே வியப்பினைப் பரிமாறிக்கொண்டு அவர்களுக்குள் ஏற்கெனவே ஏதோ ஒப்பந்தம் செய்திருந்ததுபோல் அனைவருமே வாத்தியங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, இசைஞர்களாக அல்லாமல் வணிகர்களாகப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
துருக்கிய வலிமை வியன்னாவுக்கு எதிராகச் செயல்பட்டபோது, மேற்கும் கிழக்கும், ஐரோப்பாவும் ஆசியாவும் என்ற இரு உலகங்களுக்கிடையே நிகழ்ந்த அபாயகரமான பயணமும் லாபகரமான வணிகமும் நல்ல வருமானத்தைக் கொடுத்தன; அந்தப் பயணத்தில்தான், லியாண்டர், அவனது தந்தையின் அன்பினையும் அதுபோலவே இசையினையும் வாழ்நாள் முழுவதுக்குமாக வேண்டிய அளவுக்கு நிறைத்துக்கொண்டுள்ளதாகவும் அதற்கும் மேலாக வேறு எதனைக் கொண்டுபோய்ச் சேர்த்தாலும் பொங்கித்தான் வழிவதோடு, வெற்றுப் பாழில் மறைந்துவிடுகிறதென்பதையும் உணர்ந்தான். அப்படியாக, வணிகத்தால் வரவேற்பும் மகிழ்வும் பெற்ற அவன் மீண்டும் சான்டிர் பக்கம் திரும்பவோ, அதைக் கையில் கூட எடுக்கவோ, இந்த உலகத்தில் அவனைச் சுற்றியிருக்கும் நாட்களையெல்லாம் விழுங்கிக்கொண்டிருந்த இசையைக் கேட்கவேண்டுமென்று உணரவோ கூட இல்லை. புதிய வணிகத்தில், பயணத்தில், உண்மையில் பிரபஞ்சத்தையே விழுங்கிவிடுவதான, ஒருவகை வேகம் மற்றும் செயல்திறனில் நம்ப இயலாதபடிக்கு அளவிலாத வலுவினை மறைப்பதான, ஒட்டகங்களின் மெதுவான, வலுவாக அழுந்த நடக்கும் நடையில் வசீகரிக்கப்பட்ட அவன், அவற்றைப் போலவே அவனுடைய உள்ளூக்கத் துடிப்பினை, அவனது உட்பக்கக் கால ஓட்டத்தினை, அவனது வேகத்தினை மெதுவான, அதிராத மென்னடை கொண்ட நீண்ட அசைவுகளில் உள்ளடக்கி, ஒட்டகங்களின் நடையினைப் பிரதிபலிக்க முயற்சி செய்தான். சோம்பலுக்குள் முகம்மூடி, மறைக்கப்பட்ட வேகம் என்பதே, அவனது பண்பொழுக்க இலக்காக இருந்தது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, அதுவே சிறந்த வழியெனத் தெரிந்துகொண்ட அவன், எப்போதுமே அவனது திரி எவ்வளவு குறைவாக எரிந்திருக்கிறதென்பதை மறைத்ததுடன், காற்றின் முதுகுக்குப் பின்னால், கால ஓட்டத்தில் அவன் கண்டவற்றைப்பற்றி மவுனமே சாதித்தான். ஆக, ஒட்டகங்களைக் கவனித்துணர்ந்ததன் மூலமும், பல்லாண்டுகளாகச் செயல்படுத்திவந்ததன் மூலமும் அவனுடைய அசாதாரணச் செயல்திறனை,  அவனுடையதைப் போன்றதான அச் செயல் வேகத்தினை மக்கள் அபாயகரமான ஒரு ஆயுதமாகக் கருதுவதாக அவன் உணர்ந்து, அவனுக்குக் கிடைத்த மேம்பட்ட ஒன்றினைக் கெட்ட ஒரு அம்சத்தைப் போல முழுவதுமாக மறைத்து நடந்துகொண்டான். அதுவே, அவனைப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்தது; கடினமான நேரங்களின் போதும், இரத்தம் தோய்ந்த ஆடைகளால் நிரம்பியிருந்த சாலைகளிலிருந்தும் பாதுகாத்தது. வணிக சாத்துகளை வழிமறித்து வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பெரும் அழிவினை ஏற்படுத்துகின்ற வளைந்த வாள்களை வீசுகின்ற துருக்கியர்கள், வேகம் நிறைந்த வேட்டைக்காரர்கள், தலைகளைக் கொய்பவர்களைப் பற்றித் தேவைக்கும் அதிகமாகவே பயங்கரக் கதைகளை, வர்த்தகர்களிடமிருந்து லியாண்டர் கேள்விப்பட்டிருந்தான். வளைந்த வாளினை வைத்திருப்பவன் எப்போதுமே சுயமைதுனக் கையினை விலைமதிப்பற்ற ஒன்றினைப் போலப் பின்பக்கமாக மறைத்துக்கொண்டு, அது சோர்வடைந்துவிடாமலிருப்பதற்காக, அக்கைக்கு அதிகபட்சமாக எந்த வேலையும் கொடுக்காமல், மறுகையாலேயே வெட்டி வீழ்த்துவானென அவர்கள் சொன்னார்கள். சாத்தானால் உயிரைக் கொல்ல முடியாதே, கடவுளால் மட்டும்தானே உயிரைப் போக்கமுடியுமென, லியாண்டர் வீணாகச் சிந்தித்தான்; அவன் பயந்துபோனான்; வளைந்த வாள்காரனின் நினைப்பு ஏற்பட்டபோதே அவனது முகம் மற்றும் கன்னங்கள் முழுவதற்குமாகக் கண்கள் பயத்தில் பிதுங்கி வெளித்தெரிந்தன.
அவனுக்குள்ளிருந்த பயம் குறிகாரன் ஒருவனால் அதிகமாகியது.
அந்தக் குறிகாரன் இடிந்துபோன ஒரு தண்ணீர்த்தொட்டிக்குள் வசித்தான்; அவனால் இரவுகளில் தூங்க முடியாதபோது எழுந்து கத்திகளைத் தீட்டவோ அல்லது அவனது கால் பாதங்களைக் காலுறைகளால் துடைக்கவோ செய்வான்; உடனேயே அவனது தனிமை பாலாடைக்கட்டியைப் போலக் கரைந்துபோய்விடும். லியாண்டர் கேள்விப்பட்டது ; “நீங்கள் அவனுக்கு ஒரு நாணயம் கொடுத்தால் அவன் உங்களுக்கு முடி மழித்துவிடுவான், இரண்டு கொடுத்தால், மழிக்கும்போதே உங்கள் அதிர்ஷ்டத்தையும் சொல்வான். ஆனால், கவனமாக இருங்கள், அவன் ஒரு நல்ல நாவிதன் என்பதைவிட நல்ல ஒரு குறிகாரன்.”
தொட்டியின் முன்பாக, லியாண்டர் ஒரு கல்மீது அமர்ந்து, இரண்டு நாணயங்களை எடுத்து நீட்டினான். குறிகாரன் புன்னகைத்தான்; அவனிடம் அந்தப் புன்னகை மட்டுமே முதுமையடையாத ஒரே விஷயம் என்பதை எவராலும் கண்டுகொள்ள முடியும். அவன் லியாண்டரிடம் வாயை விரியத் திறக்குமாறு சொல்லி, அதனுள் திடீரெனத் துப்பிவிட்டுத் தனது வாயை அகலத் திறந்தான். லியாண்டர் எதிர்வினையாகக் குறிகாரனின்  வாய்க்குள் துப்பியதும், குறிகாரன் லியாண்டரின் இரு கன்னங்களிலுமாகத் துப்பி எச்சிலைப் பரப்பித் தேய்த்துவிட்டுப் பின் மழிக்கத் தொடங்கினான்.
‘துருக்கியர்கள் நாளை அல்லது அதற்கு மறுநாள் தாக்குவார்களா?” எனப் பாதி கிண்டலாகக் கேட்டான், லியாண்டர்.
“அதுபற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லையே .” குறிகாரனின் குரல் அவர்களைச் சுற்றிப் பெரும் தொகுப்பாக மிதந்தது.
“நல்லது, அப்படியென்றால் எந்த மாதிரியான ஒரு குறிகாரன் நீ?
“தெரிந்துகொள்ளுங்கள், இரண்டு வகையான குறிகாரர்கள் இருக்கின்றனர்.   பெருஞ்செலவு மற்றும் மலிவு. ஆனால், அதற்காக முதலாமவர் நல்லதென்றும் மற்றவர் மோசமென்றும் நினைத்துவிடாதீர்கள். அதுவல்ல கருத்து. முதலாமவர் இரகசியங்களை வேகமாகவும் மற்றவர் மெதுவாகவும் கையாள்கின்றனர்; ஆகவே அவர்களுக்கிடையில் வேறுபாடு இருக்கிறது. உதாரணத்துக்கு நான் ஒரு மலிவான குறிகாரன், ஏனென்றால், நான், அதிகபட்சம் நீங்கள் எதிர்பார்க்கும் நாளையையோ அல்லது அடுத்த ஆண்டினையோ பார்ப்பதில்லை. எதிர்காலத்துக்குள் வெகுதூரம் நுழைந்து பார்க்கிறேன்; இருநூறிலிருந்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஓநாய்கள் எப்படி அழைக்கப்படுமென்பதோடு, எந்தப் பேரரசு கவிழுமென்பதையும் என்னால் கூறிவிடமுடியும். இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளில் என்ன நிகழுமென்பதைத் தெரிந்துகொள்ளும் அவசியம் யாருக்கிருக்கிறது? யாருக்குமில்லை, எனக்குங்கூடத்தானில்லை. நானொன்றும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், வேறு சிலர் இருக்கிறார்கள், உதாரணத்துக்கு ட்யூப்ரோவ்நிக் நகரிலுள்ள பெருஞ்செலவுக்  குறிகாரர்கள், நாளை அல்லது ஒரு ஆண்டுக்குள் என்ன நடக்குமென்பதைக் கூறுகிறவர்கள்; ஒரு வழுக்கைத்தலை மனிதனுக்கு தொப்பி தேவைப்படுகிற மாதிரியில் எல்லோருக்கும் அதுதான் தேவைப்படுகிறது, அதுமட்டுமல்ல, அது போன்ற பொருளுக்கு விலையைக்கூடக் கேட்காமல் பன்றியின் இறக்கை கிடைக்குமென ஒயின் பீப்பாயைக் கொடுப்பது போல, கை நிறைய அள்ளிக் கொடுக்கிறீர்கள். இந்த இரண்டு வகையான குறிசொல்பவர்களுக்கிடையிலும் குறிசொல்லல் முறையிலும் பொதுவான எதுவுமே இல்லையென்றோ அவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவையென்றோ நினைத்துவிடாதீர்கள். உண்மையில் சொல்லப்போனால், அவை இரண்டுமே ஒரே குறிசொல்முறை தான்; அதனை, உட்பக்கம், வெளிப்பக்கம் என்று இருபக்கங்கள் கொண்ட காற்று, மழையின் ஊடாகக் கடக்கும்போது, வெளிப்பக்கம் நனைந்தும் உட்பக்கம் நனையாமலிருப்பதோடும் ஒப்பிடலாம். அதனால், ஒரு குறிகாரர் காற்றின் வெளிப்பக்கத்தை மட்டுமே காணும்போது, மற்ற குறிகாரர் உட்பக்கத்தை மட்டுமே காண்கிறார். இரண்டு பக்கத்தினையும் பார்ப்பவர் யாருமில்லை. அதனால் தான் முழுப்படத்தையும் உருவாக்குவதற்கு, உங்கள் காற்றின் சரியான பக்கத்தைச் சரிகையிட்டுத் தைப்பதற்கு, நீங்கள் குறைந்த பட்சம் இரண்டு குறிகாரர்களிடம் செல்ல வேண்டியிருக்கிறது.  ……..
“ அதுசரி, இப்போது நீ, என்னிடமிருந்து என்ன பெறப்போகிறாயென்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு மனிதன் என்பவன் கப்பலின் திசைகாட்டுங்கருவியைப் போன்றவன்; அவனுடைய அச்சில் நின்று வட்டமாகச் சுழன்று திரும்பும் போது உலகின் நான்கு பக்கங்களையும் பார்க்கிறான்; ஆனால், தலைக்கு மேலும் காலுக்குக் கீழுமிருப்பதை அவனுக்குக் காட்டப்படுவதில்லை. அவன் கவலைப்படுவதும் தெரிந்துகொள்ள விரும்புவதுமான அந்தத் துல்லியமான இரண்டு விஷயங்கள் எவையென்றும்  அவை எங்கிருக்கின்றனவென்றும் கேட்டால், அவனுக்குக் கீழேயிருக்கின்ற காதலும் அவன் தலைக்கு மேலாக இருக்கிற மரணமும் தான்.
”காதலில் பலவகைகள் இருக்கின்றன. சிலவற்றை முள்கரண்டி கொண்டு மட்டுமே குத்திப் பிய்த்து உண்ண முடியும்; சிலவற்றை சிப்பிகளைப் போலக் கையாலேயே எடுத்துத் தின்றுவிட முடியும். வேறு சில, தொண்டையில் சிக்கிக்கொள்ளாமலிருப்பதற்காக அவற்றைக் கத்திகொண்டு வெட்டியே தீர வேண்டும்; அது மட்டுமல்ல கரண்டியால் மட்டுமே உண்ணக்கூடியவகையில் சில பிசுபிசுப்பான திரவமாகவும் இருக்கின்றன. அல்லது அவை, ஆதம் பறித்த ஆப்பிளைப் போலப் பறித்தெடுக்கப்படுகின்றன.
மரணத்தைப் பொறுத்தவரையில், இறைவானத்தில் அது, ஒரு பாம்பினைப் போல நம்முடைய மூலாதார மரத்தில் ஏறவும் இறங்கவும் முடியும். நீ பிறப்பதற்கு முன்பிருந்தே கூட, அது, நூற்றாண்டுக் கணக்காக உனக்காகப் புதர் மறைவில் காத்துக்கிடக்க முடியும். அது உனக்காக மீண்டும் திரும்பி வரலாம். கண்ணுக்கெட்டாத எதிர்காலத்தின் வெகு தூரத்திலிருந்து கூட, அது உன்னைச் சந்திக்க வரலாம். உனக்குத் தெரியாத, நீ பார்க்கவும் முடியாத, யாரோ ஒருவன், உன்னைப்போன்ற அதே நிலையிலிருந்துகொண்டு,  அவனது மரணத்தை உன் மீது கவுதாரி மீது பாயும் வேட்டைநாயைப் போலச் செலுத்தவும், அளக்கக்கூடமுடியாத வெகு தொலைவிலிருந்து உன்னைப் பிடிக்கச் சொல்லி அனுப்பவும் முடியும். ……
‘அவற்றையெல்லாம் நாம் வேறுபுறம் ஒதுக்கிவைப்போம். உனக்கு ஒரு அழகான கழுத்து இருக்கிறது. இந்த மாதிரியான கழுத்து ஒரு பெண்ணின் கைகளையும் ஈர்க்கிறது; போர்வீரனின் வளைவாளினையும் ஈர்க்கிறது. உண்மையில் புதையரணக் காலணிச் சீருடையில் நிற்கும் ஒரு போர்வீரன் என் கண்களுக்குத் தெரிகிறான். பொன்னிறக் குஞ்சம் கொண்ட வளைவாள் கொண்டு மழித்துக்கொள்கிறான்; அதே வளைவாளால்தான் அவன் உன் தலையை வெட்டியெறியப்போகிறான். ஏனென்றால், பார், நான் உன் தலையையும் தெளிவாகக் காண்கிறேன். அது ஞானஸ்நானம் செய்விக்கும் புனித ஜானின் தலையைப் போல ஒரு தட்டின் மீது இருக்கிறது. இதற்கெல்லாம், ஒரு பெண்தான் காரணம் … ஆனாலும் கவலைப்படாதே, அது உடனேயே அல்லது சீக்கிரத்திலேயே நடக்கப்போவதில்லை. அதற்குள் பெருமளவிலான  காலமும் அதனுள் சிறப்பாகக் கருக்கொண்ட பல வருடங்களும் கடந்துவிடும், எனது அழகிய அன்னமே, அதற்கிடையில் நீ உன் கழுத்தைப் பெண்ணிடமிருந்தும் வளைவாளிடமிருந்தும் காத்துக்கொள், கூடவே நன்கு கழுவிக்கொள் …..        
ஆகவே, முக மழிப்பும் குறி கேட்டலும் முடிவுக்கு வந்தன. அவன் அங்கிருந்து அகலவும், அந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு லியாண்டரின் பின்புறம் நிகழ்ந்தது; அந்தக் குறிகாரனின் வலிமை மிகுந்த குரலும் ஓய்ந்தது. ஒரு கந்தைத்துணியின் மீது ஒட்டிக்கொள்வதைப் போல, பனி அப்படியான குரலின் மீதும் கூட ஒட்டிக்கொள்ளுமென லியாண்டர் நினைத்தான். அத்துடன், தலைக்கு மேலான வெளிக்குளிரிலும் உள்ளுக்குள்ளான பயத்திலும் அவன் நடுக்கம்கொண்டான்.
அந்தக் குறியுரைத்தல் லியாண்டரைத் தொல்லைப்படுத்தியது. வளைவாள் கொள்ளையர்கள் குறித்து அச்சங்கொள்வது, முன்னெப்போதையும் விட இயல்பானதாகத் தோன்றியது, அவனுக்கு. அவனது இதயம் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு நகர்ந்தது. அச்சம் அவனது கனவுகளைத் தொற்றும்தன்மை மிக்கதாக்கியது; பசு ஒன்று லியாண்டரின் பல்லை நாக்கால் தடவி நக்கினால் (கனவில் அவன் அதைப் பார்த்துச் சிரித்ததால் அது அப்படி நக்கியது) அந்த நாளில் அவன் யாரையெல்லாம் தொட்டானோ, அவர்கள் எல்லோரும், காகம் ஒன்று அவர்களின் பற்களைக் கொத்துவது போன்ற கனவுகண்டனர்.
ஆனால், அந்த நேரத்தில் அவன் வளைவாள்கார பயத்தில் கடுமையாகத் தத்தளித்தபோது, அவனைச் சந்தித்திருக்கவில்லை. வளைவாள்காரனுக்கு முன்னதாகவே, பதின்வயதுப் பெண் ஒருவளை, அவன் சந்தித்தான். `ஓரித்` நகரத்தில் குளிர்காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தபோது, அவன், அவனது பயத்தினை மிகைப்படுத்திக்கொண்டதாகவும் அவனது உள்ளூக்க எழுச்சித் துடிப்பினை இழந்துவிட்டதாகவும், அவனது இரகசியப் பண்பொழுக்கத்தில் முன்னேற்றமின்றிப் பின்தங்குவதாகவும் அவன் உணர்ந்தான். ஒருநாள் மாலையில் சான்டிரின் வலியதொரு ஒலியினை அவன் கேட்டான். முன்பு போல மாறுபாட்டுணர்வுக்குப் பதிலாக, அவனே விரும்பிக் கேட்கத் தொடங்கிவிட்டான். அதுவே அவனுக்கு ஒரு அடி பின்னோக்கிய நகர்வாகவே தோன்றியது.  ஆண் அல்லாமல் ஒரு பெண்தான் இசைத்துக்கொண்டிருந்தாள்;  அந்த வேறுபாடு எந்த அடிப்படையில்,  எப்படித் தோன்றியதென அவனுக்குத் தெரியாதிருந்த போதிலும், அது லியாண்டரின் கவனத்துக்குத் தப்பவில்லை. கேட்கக் கேட்க, இன்னுமொரு விஷயத்தையும் கூடுதலாக அவன் கவனித்தான். இசையின் இடைவெளிகளில், விரல்கள் நரம்புகளைத் தாண்டவேண்டிய இடங்களில் சான்டிர் அமைதியாகி, மீண்டும் சில பல நொடிகளுக்குப் பின் உயிர்பெற்றெழும்; அதாவது அங்கே ஒரு பெருமூச்சு இழுத்து நிறுத்தப்பட்டுக் கடத்தப்படுவதைப் போல. அது என்னவாக இருக்குமென்பதை லியாண்டர் புரிந்துகொண்டு, மறுநாள், சான்டிர் இசைத்துக்கொண்டிருந்த பதின் பெண்ணைப் பார்த்தபோது அவளிடம் பேசிய முதல் விஷயம் : ”நீ இசைத்ததை நான் கேட்டேன். உன்னுடைய இடது கையில் ஒருவிரல் இல்லை; நான்காவது விரல். அதை நீ இழப்பதற்கு முன்பாகவே சான்டிர் இசைக்கக் கற்றிருக்கவேண்டும். சரிதானா?”
“அது சரிதான்’’ என்றாள், அந்தப் பதின் பெண். “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாபங்களுக்குப் பரிகாரம் செய்ய, பழுக்கச் சிவந்த நரம்புகளுள்ள உலோக சான்டிரை இசைக்கச் செய்துவிட்டனர். அன்றிலிருந்து, அந்த நினைவினை என்னுள் மீண்டும் மீண்டும் எழுப்பிக்கொள்வதற்காக, நான் இப்படித்தான் இசைத்துக்கொண்டிருக்கிறேன்; ஆனால், நீங்கள் அதைக் கேட்க வேண்டியதில்லையே……..”
உடனேயே லியாண்டர், அவனது சொந்த வாழ்க்கை முறையே கூட அவளது துயரங்களை மறக்க உதவுமேயென நினைத்தான். பிறர் சொல்வதற்குக் காதுகொடுக்காமல் வாழ்க்கையை வேகமாகக்கொண்டுசெல்வதெப்படியென்று அவன், அவளுக்கு விளக்க முற்பட்டான்; இரவினைத் தொடரும் இரவுகளாக, அவர்கள் ஏரிக்கரையில் உலவுகையில்,  செயல்வேக உள்ளெழுச்சியினை மறைப்பதென்ற அவனது அசாதாரணமான பண்பொழுக்க நடைமுறையினை அவளுக்குக் கற்பிக்க முயற்சித்தான். அது, விரைந்து கற்றுக்கொள்பவளான டெஸ்பினாவை, அதுதான் அவளது பெயர், மாற்றியமைக்கவே, விரைவிலேயே, அவளது துயரம் மிகுந்த, பழைய பழுக்கக் காய்ச்சிய நரம்புகளுள்ள சான்டிர் நாட்களெல்லாம் மறந்துபோயின. வணிகர்களின் செய்கைகளினால் மனம் வெறுத்துப்போன லியாண்டர், பயத்தினாலும், தேவையான பணத்தைச் சம்பாதித்திருந்ததாலும், வணிகர்களைவிட்டு விலகியதைப்போலவே, அவளும் சான்டிர் கருவியினை என்றென்றைக்குமாக முற்று முழுதாகத் தலைமுழுகினாள். உணவு உண்பதில் அவனுடைய தனி வேகத்தை மெல்லமெல்ல எட்டி, கைக்கொண்ட டெஸ்பினா, அவனது பேச்சு மற்றும் நடை அசைவுகளைப் பிரதிபலிப்பதிலும் வெற்றிகண்டாள். கண்களை அவன் பயன்படுத்துகிற, மயக்கம்தருகிற, அதே வேகத்தில் பயன்படுத்த அவள் பயிற்சி மேற்கொள்ள, மேற்கொள்ள,   ஒவ்வொரு நாளையும் இரண்டிரண்டு நாட்களாகத் தாவுவதுபோல், அவளுக்கு அவ்வப்போது தோன்றியது. ஆனால், இந்தப் பாடங்கள் மற்றும் துளைக்கும் கண்களைத் தவிர்க்க மேற்கொண்ட ஏரிக்கரை உலாவல்கள் மற்றும் அவர்களின் செயல்வேக எழுச்சியினை ஒரு இரகசியம் போல மறைக்கும் செயல்களுக்கிடையில், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மெல்ல நெருங்கினர். சிலநேரங்களில் அவள், அவளது மோதிரத்தின் பளிச் மின்னலை அவன் கண்களில் செலுத்த, அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவன்,  பாவம் செய்யும் சில பெண்களின் சுவரோவியங்களைப் போல், அவளது மார்பில் இரண்டு முலைக்காம்புகளுக்கும் பதிலாக பெண்பன்றியின் வால் சுருளைக் கொண்டிருப்பாளோவென, நினைத்துக்கொண்டிருப்பான். அந்த நேரத்தில், லியாண்டருக்கு, பெண்களைப்பற்றி மட்டுமல்ல, தன்னைப்பற்றியும் கூட எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பெண்ணை மதுவைப்போலப் பயன்படுத்தவேண்டுமென்று மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ‘’கோடையில் ஒரு மாதிரியிலும் குளிர் காலத்தில் வேறு மாதிரியிலும்; வலுவான மதுவகைகள் கோடைக் கோப்பைகளிலும், மென்வகைமது, குளிர்காலக் கோப்பைகளிலும் நிரப்பப்படவேண்டுமென்பதை அவன் அறிந்திருந்தான். குடும்ப உரையாடல்களிலிருந்து பெண்களைப்பற்றி, அவன் தெரிந்துகொண்டதெல்லாம் அவ்வளவுதானென்றபோதிலும், ஒருவிரல் இழந்த அந்தப் பதின்பெண் அவனைக் கவர்ந்தாள். காலத்தின் ஏதோ ஒரு மூலையில் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்த, அவனுடைய கட்டுக்கதைவகையிலான ‘’வெற்றுக் கதை’’ லியாண்டர் எனக் கூவிக்கொண்டு, இறுதியாக அவனுக்குள் இறங்கத் தொடங்கியது.                  
ட்ரின் ஆறு, ஓரித் ஏரி வழியாகத் தன்னைப் பாதியாகக் குறைத்துக்கொண்டு பாய்கிறது. ஒரு நாள் மாலையில் டெஸ்பினாவும் லியாண்டரும் மீன்பிடி வலை ஒன்றைத் தூக்கி, படகில் போட்டுக்கொண்டு ஏரிக்குள் துடுப்பிட்டுக் கடந்து,  ஆற்றுக்குள் செல்ல, அது, அவர்களை விடிகாலைக் கருக்கலில் கொண்டுபோய் எதிர்க்கரையில் சேர்த்தது. அன்று இரவு, அந்த இரட்டைத் தண்ணீரில் மிதந்த படகினுள் மீன்பிடிவலையே மறைப்புக்கவசமாக, அவர்கள் முதன்முதலாகச் சேர்ந்து படுத்தனர்.       
எதிர்காலத்தில் நடக்கவிருப்பது அனைத்தையும் பலமணி நேரத்திற்கு முன்னதாகவே லியாண்டர் அறிவானென்பதும், அவனது எதிர்பார்ப்புகள் முடிந்த கணத்திலேயே, அவனுடைய தோழியைக் காட்டிலும் அவன் விரைவானவன் என்பதால் அவர்கள் ஒருவரையொருவர் தொடுவதைக்கூட அவர்களால் சமாளிக்க இயலவில்லையென்பதும் வெளிப்பட்டது. அவனது   இயக்கச் சீரமைவு கூட அவளை விடவும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கவே, அவனது இரகசியப் பண்பொழுக்கத்தின் அடித்தளத்தில் காத்துக்கிடந்த பயங்கர விதியோடு முதன் முதலாக முரண்பாட்டினை எதிர்கொண்டான். பிற்காலத்திலும் கூட, அவர்களால் ஒருவருக்கொருவர் இணக்கமாகிக்கொள்ள இயலாமற் போனதோடு, அதைத் தொடர்ந்த இரவுகளில் அவன் ஏரிக்குள்ளும், ஆற்றின் போக்கிலும்  மீன்கருத் திரள்களைப் போல மிதந்துகொண்டிருந்தாலும் அவனுக்குக் கீழிருந்த பெண்மையை நிறைப்பதற்குப் பதிலாக,  வலைக்குள் மீன்களை நிறைத்துக்கொண்டிருந்தான்.
கடைசி மாலையில் டெஸ்பினா, இரண்டு மெழுகுதிரிகளை துறவி நாவ்ம் மடாலயத்தில் வாங்கினாள்; ஒன்றை லியாண்டரிடம் கொடுத்துவிட்டு, இன்னொன்றினை அதன் சிறிய குவளையுடன் தன்னிடமே வைத்துக்கொண்டாள். வழக்கம்போல், அவர்கள் ஏரியின் வழியாக ஆற்றுக்குள் சென்றதும் லியாண்டர் மேலும் ஒருமுறை, அதுவே கடைசித் தடவையென முயற்சித்தான்; அதுவும் தோல்வியில் முடிந்த போது, (ஏனெனில் அவன்தான் அவளைத் தொடும் முன்னரே சிதறவிட்டிருந்தானே!) அவன் மெழுகுதிரியாலேயே அவளைப் பெண்மை நலமிழக்கச் செய்ய, அவள் அனுமதித்தாள். பின்னர், விடிவதற்குச் சிறிது முன்னர், அவள் துடுப்பினை எடுத்து,  நீர்வழி மூலம் மட்டுமே செல்லமுடிகிற செர்பிய முடியரசர்களின் மடலாயமான நமது ஜாஹும் மாதா முன்பாகப் படகினைக் கொண்டுபோய் நிறுத்தினாள். அங்கிருந்து ட்ரின் ஆற்றுக்குள் இறங்கத் துடுப்பினை வலிக்கும் முன்பாக, அவளிடமிருந்த இன்னொரு மெழுகுதிரியை ஏற்றி, லியாண்டரிடம் கொடுத்து, அவனை முத்தமிட்டு, மடத்திலேயே இறக்கிவிட்டாள்.
முற்றிலுமாகச் சோர்ந்து, மனம்வெறுத்துப்போன இருவரும், என்றென்றைக்குமாகப் பிரிந்தனர்; தொடுதல் அவர்களுக்கு முடியாத ஒன்றெனத் தங்களைத் தாங்களாகவே சமாதானப்படுத்திக்கொண்டனர். கையில் மெழுகுதிரியுடன் லியாண்டர் கரையில் இறக்கிவிடப்பட்டபோது, மடாலயத்தில் காலைச் சேவை அநேகமாக முடிந்திருந்தது. அவன் தேவாலயத்துக்குள் நுழையும் முன்பாகவே, மடாலயத்தில் புனிதச் சின்னம் ஒன்றினைப் புதைப்பதற்கான சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருந்ததை அவன் கவனித்தான். பெலகோனியாவைச் சேர்ந்த அது மிகவும் பழமையானது; கல்லறைக்குள் அதை வைத்து ஒயினை அதன் மீது ஊற்றுவதற்கு முன்பாகவே, லியாண்டர், அந்தப் புனித ஓவியத்தை ஒருவழியாகப் பார்த்துவிட்டான். கன்னி மாதா அவளது கைக்குழந்தையை அணைத்துக்கொண்டிருக்க, அவர்கள் அருகில் மரம் சீவும் பாய்ச்சு உளியான வாய்ச்சியும் கையுமாக ஒரு மனிதர், உண்மையில் அது திருமுழுக்காட்டும் புனித ஜான் தான், நின்று கொண்டிருந்தார். குழந்தையின் காலணி அதன் சின்னஞ்சிறு பாதத்திலிருந்தும் கழன்று விழுந்திருக்க, அதனை அந்தப் பெண்ணின் அருகில் நின்றிருந்த ஆண் கையிலெடுத்து மீண்டும் குழந்தையின் காலில் அணிவிக்க, அதன் வாரைக் கழற்றிப் பிடித்தவாறிருந்தார்; திடீர்த் தொடுகையை உணர்ந்த குழந்தை, அம்மாவின் மார்பகக் காம்பினைக் கடிக்க, என்ன நிகழ்ந்திருக்குமென உணர்ந்த அவள் காலணியை மாட்டும் மனிதன் மீது பார்வையைச் செலுத்தியவாறிருந்தாள்.
இப்படியாக, வட்டம் முடிவுறும்படியாக அந்த மனிதன், அவனது கை, குழந்தையின் கால் பாதம், பெண்ணின் மார்பகம் மற்றும் அந்த மனிதன் மீதே திரும்பும் அவளின் பார்வை என ஒரு இடையறாக் கோடு, இடைவெளியற்று ஓடியது. அந்தப் புனித ஓவியம் மண்ணில் புதைக்கப்படும் முன்னர், அந்தக் கோட்டினைப் பார்த்துவிட்ட லியாண்டர், அது அவன் கற்றிருந்த ஒரே எழுத்தான தீற்றா, `o` வடிவத்தினைப் போலத் தோன்றியதும், “அப்படியானால், அந்தத் தொடுதலும் இயலுகிற ஒன்று தானா!” என நினைத்தான்.
பின்னர், அவன் மடாலயத்துக்குள் நுழைந்து, துறவியானான்.
துறவியாவதற்கொன்றும் அவன் நேரடியாக அனுமதிக்கப்பட்டுவிடவில்லை. அது ஏனென்றால், முதல் காரணம், அவன் தாடியில்லாமலிருந்தான். அத்துடன், அவன் எங்கிருந்து வந்திருக்கிறானென்றும் அவனது முன்னோர் கிழக்கு அல்லது மேற்கத்திய கிறித்துவத்தைச் சேர்ந்தவர்களல்லவென்றும், ஆனால், அவர்களுடைய தந்தைத் தலைமுறையினரின் இறை விசுவாசம் போகோமில்ஸ் அல்லது பண்டைக் காலத்து பாட்டரேன்ஸ் போன்றதெனத் தெரிவித்தபோது, சகோதரப்பணிக்கு அவனைச் சேர்த்துக்கொள்ளும் முன்பாக,  புதிதாகச் சமய மாற்றம் பெற்ற ஒருவருக்கு இணையாகத் தொடக்கநிலைப் பயிற்சியாளராகப் பல வருடங்களுக்குச் சேவையாற்றுமாறு பணிக்கத் திருவுளங்கொண்டனர். அக்காலகட்டத்தில், அவன் புத்தகங்கள் நிரம்பிய மர மணிக்கூண்டு அறைக்குள் தன்னை நிலையாகப் பொருத்திக்கொண்டான். மணியடிக்கும் கயிற்று வடச்சுருள்களின் மேல்தான், அவன் உறங்கினான்; அவனுக்கடியில் உருண்டுகொண்டிருந்த கயிற்றுவடங்கள், இரவுகளில் காற்று மணிகளை அசைத்தடிக்கும்போது அவனை எழுப்ப, போதையேறிப்போன ஏரி, மடாலயத்தின் கதவுகளில் மிக்க வலிமையுடன் கூழாங்கற்களை எறிவதை, அவன் கேட்டான். ஆனால், லியாண்டருக்குள் அதன் பின்பு பயமென்று எதுவுமே இல்லை. டெஸ்பினாவோடு அவனுக்கு நேர்ந்த அனுபவம், வளைவாள்காரர்கள் மற்றும் திகில் கனவுகளையெல்லாம் ஏதோ சிறுபிள்ளை விளையாட்டுப் போல நினைக்கச்செய்துவிட்டது.
மடாலயத்தின் பக்கத்தில் காற்று ஒதுக்கமான ஒரு இடத்தில், புனிதச் சின்னங்களின் இடுகாடு ஒன்றை, அவன் சிறிதாக அமைத்து, அதற்குள் பூச்செடிகளை நட்டு, பாறைக்கற்களால் சுற்றுக்கட்டு அமைத்து, அதற்கொரு வாயிலும் அமைத்தபோது, “வயிற்றுக்கில்லாத அப்பனுக்குப் பிறந்த பயல், ஒருநாளும் தேறமாட்டான்,” என, அவனைப்பற்றி, துறவிகள் சொன்னார்கள். மிகவும் பிந்திய இரவு நேரங்களில், இருட்டினை விரட்டுவதற்காக, அவன் ஒரு சிறிய மெழுகுதிரியினை ஏற்றிச் சிறிய சாளரத்தில் வைப்பான்; நகலெடுக்கும் துறவிகளுக்கான இறகுகளைச் சீவுவதோடு, பழச்சாறு மற்றும் வெடிமருந்துத் தூள் கலந்து அவர்களுக்கான எழுது மையும் தயாரிப்பான். பின்னர், மெழுகுதிரியில் எச்சில் துப்பி அணைத்துவிட்டு, மடாலயத்திற்குள் அவன் அனுமதிக்கப்படப் போகும் நாளைக் குறித்தும், எழுதவும் மணிக்கூண்டுக்குள் வரிசை, வரிசையாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் படிக்கவும் தெரிந்துகொள்வது பற்றியும், நடு இரவுச் சேவை முடிகிற நேரத்தில், அவனுக்கு மிகவும் கடினமானதும், விரைவில் கிடைக்காததுமான தூக்கத்தில் அவன் முழுமையாக ஆழும்வரையில், இருட்டுக்குள் கனவுகண்டுகொண்டிருப்பான்.                



 ஜூலை 2017, உன்னதம் மிலோராட் பாவிச் சிறப்பிதழில் வெளியாகியுள்ளது. 

             .                   
      


                                       


மாதுளை - யசுநாரி கவாபட்டா - POMOGRANATE - YASUNARI KAWABATTA

மாதுளை : யசுநாரி கவாபட்டா Yasunari Kawabatta ஆங்கிலம் : எட்வர்டு ஜி. சீய்டன்ஸ்டிக்கர் Edward G. Seidensticker 

தமிழில் : ச.ஆறுமுகம்

download (90)
இரவு அடித்த பெருங்காற்றில் மாதுளை மரத்தின் இலைகள் அனைத்தும் ஆடைகளைப் போல் உருவப்பட்டிருந்தன. 
இலைகள் அடிப்பாதத்தைச் சுற்றி வட்டமாகக் கிடந்தன.
கிமிகோ, காலையில் அந்த மரத்தை நிர்வாணமாகப் பார்த்ததாக அதிர்ந்தாள்; வட்டத்தின் குறையற்ற முழுமையைக் கண்டு வியந்தாள். காற்று அந்த வட்டத்தைக் குலைத்திருக்குமென அவள் எதிர்பார்த்திருப்பாளாக இருக்கலாம்.
மிகவும் அழகான மாதுளம்பழம் ஒன்று மரத்திலேயே விடப்பட்டிருந்தது.
“அம்மா, இங்கு வந்து பாரேன்,” அவள் அம்மாவை அழைத்தாள்
“மறந்து விட்டிருக்கிறேன்” அம்மா, மரத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குத் திரும்பினாள்.
அது கிமிகோவை, அவர்களுடைய தனிமை பற்றிச் சிந்திக்கவைத்தது. மாதுளம் பழமும் தாழ்வாரத்திலிருந்து பார்க்கும்போது தனிமையாகவும் மறக்கப்பட்டுவிட்ட ஒன்றாகவும் தோன்றியது.
ஒரு இரண்டு வாரம் போல இருக்கும், அவளுடைய வீட்டுக்கு வந்திருந்த ஏழு வயது மருமகன், உடனடியாகவே மாதுளம் பழங்களைக் கண்டுவிட்டான், அவ்வளவுதான், மரத்தின் மேலே தொற்றிப்பிடித்து ஏறிவிட்டான். கிமிகோவுக்கு வாழ்க்கையின் முன்னால், உயிர்ப்புடன் நிற்பது போலிருந்தது.
“மேலே ஒன்று, பெரிதாகக் கிடக்கு, பாரு,” அவள் தாழ்வாரத்திலிருந்து கூவினாள்.
“அது சரி. ஆனால், அதைப் பறித்துவிட்டு, நான் கீழே இறங்க முடியாதே.“
அது உண்மை. இரண்டு கைகளிலும் மாதுளைகளை வைத்துக்கொண்டு, இறங்குவதென்பது எளிதில்லைதான். கிமிகோ புன்னகைத்தாள். அவன் மனதுக்கு நெருக்கமானவன்.
வீட்டுக்கு, அவன் வருகிறவரையில், அவர்கள் மாதுளையை மறந்துதான் விட்டிருந்தார்கள்; மீண்டும் இவ்வளவுநேரம் வரையில் கூட மறந்துதான் இருந்தார்கள்.
அதன் பின்னர் பழம், இலைகளுக்கிடையே மறைந்துபோயிருந்தது. இப்போது, வானத்திற்குச் சவால்விட்டுக்கொண்டு தெள்ளத்தெளிவாகத் தொங்குகிறது.
பழத்திலும் அடிப்பாதத்திலிருந்த இலைவட்டத்திலும் உயிர் இருந்தது. கிமிகோ மூங்கில் கழி ஒன்றை எடுத்துவந்து, பழத்தை அடித்து வீழ்த்தினாள்.
அது நன்கு பழுத்து, உள்ளிருக்கும் விதைகள் தாம் அதனை வெடிக்கச்செய்தது போலத் தோன்றியது. கிமிகோ அதைத் தாழ்வாரத்தில் வைத்தபோது, விதைகள் வெயிலில் மினுமினுத்தன. வெயில், விதைகளுக்குள் ஊடுருவிச்செல்ல முயற்சிப்பதாகத் தோன்றியது.
ஏதோ ஒருவகையில் அவள் தவறுசெய்துவிட்டதாக, அவளுக்குள் தோன்றியது.
பத்து மணி வாக்கில், அவள் மாடியில் தையல் வேலையிலிருந்தபோது , கெய்கிச்சியின் குரலை, அவள் கேட்டாள். கதவு தாழிடப்படாமலிருந்தாலும், அவன் தோட்டத்துக்குச் சுற்றுவழியில் வந்ததாகத் தோன்றியது. அவன் குரலில் அவசரம் தெரிந்தது.
”கிமிகோ, கிமிகோ!” அம்மா கூப்பிட்டாள். “கெய்கிச்சி வந்திருக்கிறான்.”
கிமிகோ நூலிலிருந்தும் ஊசியை உருவினாள். அதனை ஊசிமெத்தையில் குத்தி நிறுத்தினாள்.
“ நீ போவதற்கு முன்பு உன்னை ஒருமுறை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று கிமிகோ சொல்லிக்கொண்டிருந்தாள். “கெய்கிச்சி, போருக்குப் போய்க்கொண்டிருக்கிறாய். இருந்தாலும், யாரும் கூப்பிடாமல் நாங்களாக வந்து உன்னைப் பார்க்கவும் முடியாது. நீயும் வரவில்லை. இன்று நீயாகவே வந்துவிட்டாய். உனக்கு நல்ல மனசு.”
மதியம் சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு அம்மா எவ்வளவோ சொன்னாள்; ஆனால், அவன் அவசரப்பட்டான்.
“நல்லது, ஒரு மாதுளம் பழமாவது சாப்பிடு. நம்ம வீட்டிலேயே விளைந்தது.” அவள் கிமிகோவை மீண்டும் அழைத்தாள்.
அவள் இறங்கிவரும் வரையில் காத்திருப்பதற்கு, அது எவ்வளவோ மேலென்பதைப் போல, அவன் அவளைக் கண்களாலேயே வரவேற்றான். அவள் படிக்கட்டிலேயே நின்றுகொண்டாள்.
அவன் கண்களுக்குள் ஏதோ ஒன்று வெதுவெதுப்பாக நிறைவது போலத் தோன்றியது. அப்படியே, அவன் கைதவறி, மாதுளை கீழே விழுந்தது.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முறுவலித்தார்கள்.
தான் புன்னகைத்துக்கொண்டிருப்பதாக, அவள் உணர்ந்தபோது, வெட்கத்தில் சிவந்தாள். கெய்கிச்சி தாழ்வாரத்திலிருந்தும் எழுந்தான்.
“ உடம்பைப் பார்த்துக்கொள், கிமிகோ.”
‘நீயும் தான், நன்றாகப் பார்த்துக்கொள்.”
அவன் அதற்குள்ளாகவே எழுந்து, அந்தப் பக்கமாகத் திரும்பி, அவளிடம் கையசைத்து விடைபெற்றுக்கொண்டிருந்தான்.
அவன் சென்ற பிறகு, கிமிகோ தோட்டத்துக் கதவினை ஏறிட்டுப் பார்த்தாள்.
”அவனுக்கு அவ்வளவு அவசரம் போல,” என்றாள், அம்மா. “ ம், எவ்வளவு அழகான ஒரு மாதுளம்பழம்.”
அவன், அதைத் தாழ்வாரத்திலேயே வைத்துவிட்டுப் போயிருந்தான்.
அவன் கண்களுக்குள் ஏதோ ஒன்று வெதுவெதுப்பாக நிறையும் போதே, பழத்தை இரண்டாகப் பிளக்கத் தொடங்கிய நிலையிலேயே, அவன் அதைத் தவறவிட்டிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அவன் அதனை முற்றாக, இரண்டாகப் பிளந்துவிடவில்லை. விதைகள் மேலே தெரிய அது, தாழ்வாரத்தில் கிடந்தது.
அம்மா, அதனை அடுக்களைக்கு எடுத்துச் சென்று கழுவித் துடைத்து, கிமிகோவிடம் கொடுத்தாள்.
கிமிகோ முகம் சுழித்து ஒரு அடி பின்வாங்கிப் பின், மீண்டுமொரு முறை முகம் சிவந்து, சிறிது குழப்பத்துடனேயே அதைக் கையிலெடுத்தாள்.
கெய்கிச்சி அதிலிருந்து ஒன்றிரண்டு விதைகளை எடுத்திருப்பான் போலென அவளுக்குத் தோன்றியது.
அம்மா முன்பாக, அதைச் சாப்பிட மறுப்பது கிமிகோவுக்கு என்னவோ போலத் தோன்றியிருக்கவேண்டும். அவள் விருப்பமற்று, அதனுள் சிறிது கடித்தாள். புளிப்பு அவள் வாய்க்குள் பரவியது. அது, அவளுக்குள் அடிவரைக்கும் துளைத்து இறங்குவதாக அவள் ஒரு வருத்தமான மகிழ்ச்சியை உணர்ந்தாள்.
அம்மா, அங்கு ஆர்வமில்லாமல், வெறுமனேதான் நின்றுகொண்டிருந்தாள்.
அம்மா கண்ணாடி முன் சென்று அமர்ந்தாள். “ என் தலையைத் தான் பாரேன், கிமிகோ, இந்தப் பரட்டைத்துடைப்பத் தலையோடுதான் நான் கெய்கிச்சியை வழியனுப்பியிருக்கிறேன்.”
தலை வாரும் ஒலி கிமிகோவின் காதில் விழுந்தது.
”உன் அப்பா இறந்தபோது,” அம்மா மெல்லிய குரலில் சொன்னாள், “என் தலையை வாருவதற்குப் பயந்தேன். தலை வாரத் தொடங்கும்போது, நான் என்னசெய்துகொண்டிருக்கிறேனென்பதையே மறந்துவிடுவேன். தன்னுணர்வுக்கு வரும்போது, நான் தலைவாரி முடிக்கட்டுமென்று உன் அப்பா காத்திருந்தது போலத் தோன்றும்.”
images (66)
அப்பா, சாப்பிட்டுவிட்டுத் தட்டில் மீதி வைத்திருப்பதை அம்மா வழக்கமாக உண்பதை கிமிகோ பார்த்திருக்கிறாள்.
அவளை ஏதோ ஒன்று உள்ளிழுப்பதாக, அவளுக்கு அழவேண்டும்போல் தோன்றச்செய்கிற ஒரு மகிழ்ச்சியினை உணர்ந்தாள்.
மாதுளையைத் தூர எறிவதற்கு மனமில்லாமல், அம்மா அவளிடம் அதனைக் கொடுத்திருக்கலாம். பொருட்களை வீணாகத் தூக்கியெறியாமலிருப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. அதனாலேயே அவள் அதை அவளுக்குக் கொடுத்திருப்பாள்.
கிமிகோ, அவளுடைய தனிப்பட்ட மகிழ்ச்சியினாலேயே, அம்மாவின் முன்பாக, வெட்கமாக உணர்ந்தாள்.
கெய்கிச்சி அறிந்திருந்த வழியனுப்புகைகளுக்கெல்லாம் மேலானதாக, இது அமைந்துவிட்டதாகவும், அவன் திரும்பிவருவதற்கு எவ்வளவு நீண்ட காலமானாலும் அவளால் காத்திருக்கமுடியுமென்றும் அவள் நினைத்தாள்.
அவள் அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். அம்மா அமர்ந்திருந்த கண்ணாடிக்கு அப்பால் காகிதத் தோரணங்கள் மீது வெயில் வீற்றிருந்தது.
இருந்தாலும், எதனாலோ, அவள் மடியிலிருந்த மாதுளையை எடுத்துக் கடிக்கப் பயந்தாள்.
*****
ஹோவர்ட் ஹிப்பெட் தொகுத்த சமகால ஜப்பானிய இலக்கியம் (நியூயார்க் : A.A.Knopf, 1977) பக்கம் 293 – 295.
http://afe.easia.columbia.edu/special/japan_1950_kawabata.htm 
மலைகள் இணைய இதழ் எண் 125 ஜூலை 03, 2017 இல் வெளியானது.

Sunday 2 July 2017

ருசியச் சிறுகதை - பெருந்தலைக் காதல் - மாக்சிம் கார்க்கி - Fat Faced Passion

பெருந்தலைக் காதல் ( FAT FACED PASSION ) 

ருஷ்ய மொழி : மாக்சிம் கார்க்கி MAXIM GORKY  ஆங்கிலம் வழி தமிழில் ச.ஆறுமுகம்



Image result for maxim gorky



அது, கோடைகாலப் புழுக்கமான இரவு. குடிகாரப் பெண் ஒருத்தி சேற்றுக் குட்டைக்குள் முழங்கால் மூழ்க, இறங்கி நின்று விரசப்பாடல் ஒன்றின் இராகத்துக்கு உடலசைத்து ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்தவழியே வருகிற அந்நியன், இருபத்தொரு வயது லியோனிட், அந்தப்பெண் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கிவிடுவாளோவெனப் பயந்து, அவளைக் குட்டையைவிட்டு வெளியே இழுக்கிறான். அவளோ, அந்த அந்நியனை முறைத்து விரட்டி, உதவி,உதவியெனக் கூச்சலிட்டு, மீண்டும் குட்டைக்குள் செல்ல விரைகிறாள். இரவுக் காவலன் அங்கு வந்து, அந்தப் பெண் உள்ளூர் மாஷா தான் எனக் கண்டுகொள்கிறான். கால்கள் ஊனமுற்ற ஒரு மகனிருக்கிற அவள் தினமும், ஒருநாள் இரவு கூடத் தவறாமல் இப்படித்தான் பிரச்சினை செய்கிறாள். இருவருமாகச் சேர்ந்து அவளை வீட்டில்கொண்டுபோய்ச் சேர்த்துவிடலாமென லியோனிட் யோசனை சொல்கிறான். அவனுக்கு விருப்பமானால், அவன் அப்படிச் செய்துகொள்ளலாமென்றும், ஆனால், அதற்குமுன் அவள் முகத்தை ஒருமுறை பார்த்துவிடுமாறும் அறிவுரை சொல்லிவிட்டு, அந்த இரவுக்காவலன் இடத்தை விட்டகன்று செல்கிறான்.
மீண்டும் மாஷாவைத் தண்ணீரிலிருந்து இழுத்துக்கொணர்ந்த லியோனிட் இம்முறை அவளது முகத்தைப் பார்க்கிறான் – தழும்புகள் நிறைந்து, விகாரமாகச் சிதைந்த ஒரு முகம். லியோனிட் அவளை, அவளுடைய தூய்மையற்ற அடித்தளக் குடியிருப்பில்லத்துக்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் உள்ளே நுழையும்போது, மாஷாவின் 12 வயது மகன், அவன் பெயரும் லியோனிட்தான், லயாங்கா எனச் சுருக்கமாக அழைக்கப்படுபவன் விளக்கினை ஏற்றுகிறான். மாஷா, அப்படியே படுக்கையில் விழுந்து, ஆழ்ந்து உறங்கத் தொடங்குகிறாள். லியோனிட் அவளது ஈர உடையைக் களைந்து சூட்டடுப்பின் மீது காயப் போடுகிறான். அவன் அங்கேயே தங்கி, மாஷாவுடன் படுத்துக்கொள்ளப் போகிறானாவென, லயாங்கா கேட்கிறான். ………. அப்படித்தான் எல்லோரும் செய்வதாகச் சொல்கிறான், சிறுவன், லயாங்கா.
அவனுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினை மறுதளித்த லியோனிட், கால்கள் இழந்த சிறுவனுடன் பேசுவதற்காக அமர்கிறான். சிறுவன் மகிழ்ச்சியோடு அவனது உயிரினச் சேகரிப்புகளைக் காட்டுகிறான்: சிறுசிறு பெட்டிகளில் ஈ, கரப்பான், பூச்சிகள், வண்டுகள்; பல்வகைப் பண்பியல்புகளையும் அவற்றின் மீது ஏற்றி, அதற்கேற்ப அவற்றுக்குப் பெயர்களையும் சூட்டியுள்ளான். ஒரு இராணுவத்தான் போல் தற்புகழும் அனிசிம் என்ற பெயரில் ஒரு கரப்பான், ஒன்றுக்கும் உதவாத ஒரு உண்மையான கழிசடை `அதிகார வர்க்கத்தினன்` (பியூரோகிரட்) என்ற பெயரில் ஒரு ஈ, எதற்குமே பயனில்லாத, வெட்கங்கெட்ட ஒரு குடிகார `நிலப்பிரபு` என மற்றொரு கரப்பான். விட்டில் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் தாம் அங்கே இல்லை. அது துரதிர்ஷ்டம் தான்.
நெஞ்சு நிமிர்ந்த ஒரு புன்னகை முகத்தோடு, அவனது அம்மா ஒரு மாபெரும் ஆளுமை என்கிறான், லயாங்கா. கொஞ்சம் அதிகக் குடி அவ்வளவுதான், என்றும் சொல்கிறான்.
லியோனிட் ஒரு திருடன் போலிருப்பதாக லயாங்கா நினைக்கிறான்; ஆனால், அவன் ஒரு க்வாஸ் மது விற்கும் பணியாளன்தானென்பதைப் பின்னர் கண்டுகொள்கிறான். அந்தச் சிறுவனை லியோனிடுக்கு மிகவும் பிடித்துவிட, அவன் கண்டிப்பாக மீண்டும் வந்து பார்ப்பதாகச் சிறுவனுக்கு உறுதி கூறுகிறான். சிறுவன் அவனிடம், கொஞ்சம் க்வாஸும் அவனது பூச்சிகளுக்காகக் கொஞ்சம் பெட்டிகளும் கொண்டுவருமாறு கேட்கிறான்.
வீட்டுக்குத் திரும்பியபின், லியோனிட் ஒரு கடைக்குச் சென்று, அழகும் நேர்த்தியும் கொண்ட சில பெட்டிகளை வாங்குகிறான். அவன் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள சிறுவர்களிடம் பூச்சிகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்துவரச் சொல்கிறான். பின்னர், பூச்சிகள், பெட்டிகள், அப்பங்களுடன் வட்டரொட்டிகளையும் எடுத்துக்கொண்டு லயாங்காவிடம் செல்கிறான். பரிசுப் பொருட்களைக் கண்டதும் வியப்பில் அதிர்ந்துபோகிற லயாங்கா, அந்தப் பெட்டிகளைத் தொடும் முன்பு கைகளைக் கழுவிவிடச் சொல்கிறான். மாஷா, மகனைக் கட்டிப்பிடித்துச் செல்லம் கொஞ்சுகிறாள். புதுவரவுப் பூச்சிகளில் ஒன்று, பெண் தோழிகளைப் பிந்திய இரவுகளில் சந்திப்பதற்காகச் சாளரங்களில் ஏறுவதற்கு வசதியாகக் கயிற்று ஏணி செய்யுமாறு மாஷாவைக் கூலிக்கமர்த்திய துறவியைப் போலவே இருப்பதாக, லயாங்கா, அவளிடம் சொல்கிறான். தேநீர்ப் பானையை அடுப்பில் ஏற்றுமாறும் சொல்கிறான். சர்க்கரை வாங்கிவருமாறு மாஷாவிடம் லியோனிட் காசு கொடுக்கிறான். புறப்பட்டுச் செல்கிற மாஷாவிடம், லயாங்கா, அவனது அடித்தளச் சாளரத்தை, வெளி உலகத்தைப் பார்க்க வசதியாக, அப்படியே சுத்தம் செய்துவிடுமாறு சொல்கிறான்.
அவள் சென்ற பின்னர், அவனது அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடல்களில் ஒன்றைப் பாடத் தொடங்குகிறான், லயாங்கா; இருந்தாலும், வெளியே ஒரு ஆர்மோனியத் தெருப்பாடகன் பாடும் சத்தத்தைக் கேட்டு, பாடுவதை நிறுத்துகிறான். சாளரம் வழியாகப் பார்ப்பதற்காக, அவனைத் தூக்கிக் காட்டுமாறு லியோனிடைக் கேட்கிறான். லியோனிட் அப்படியே செய்கிறான். அக்கம்பக்கத்தினர் சிலர், அந்த ஆர்மோனியத் தெருப்பாடகனை அங்கிருந்து துரத்துகின்ற வரையில், அவன் இசைப்பதைப் பார்த்தும் இசையினைக் கேட்டும் பரவசமாகிறான், லயாங்கா.
பின்னர், லயாங்கா, அவனுக்கு ஏற்படும் திகில் கனவுகளைப் பற்றி லியோனிட்டிடம் சொல்கிறான். ஒரு முறை அவன் தலைகீழாக வளரும் ஒரு மரத்தைக் கனவுகண்டான்; வேறொரு நாள் நாய் ஒன்று அவனது அம்மாவின் குடலைக் கடித்துத் தின்று, தின்று வெளியே துப்பியது. ஆனாலும், அவனொன்றும் அந்தத் திகில் கனவுகளால் பயந்துவிடவில்லை, என்கிறான், அவன்.
லியோனிட் கொண்டுவந்த மிட்டாய்களில் ஒன்றைத் தின்றுமுடித்த அவன், தாளினைக் கவனமாகத் தடவி, அழுத்திச் சமப்படுத்துகிறான். அவனது ஒரே தோழியான தண்ணீர் சுமக்கும் கட்காவுக்கு ஏதேனும் அழகுப்பொருள் செய்வதற்கு, அவன் அதை உபயோகப்படுத்திக்கொள்வான். கண்ணாடித் துண்டுகள், மண்பாண்டம் மற்றும் அட்டைத் தாள் துண்டுகள் போன்ற அழகான பொருட்களை மட்டுமே அவள் விரும்புகிறாள்.
பின்னர் லயாங்கா, “ கரப்பான் பூச்சி ஒன்றுக்குப் போதிய அளவுக்குத் தீனி கொடுத்தால் ஒரு குதிரை அளவுக்குப் பெரியதாக வளருமா?” எனக் கேட்கிறான். அந்தச் சிறுவன் அதனை நம்புவதைப் பார்த்து, லியோனிட் `ஆம்` என்கிறான். லயாங்காவுக்கு மகிழ்ச்சி; அவனது அம்மா இந்தப் பேச்சினைக் கேட்டு நகைப்பதாகக் கூறுகிறான். ஈக்களை நாய்கள் அளவுக்கும் கரப்பான்களை குதிரைகள் அளவுக்கும் பெரியனவாக வளரச்செய்வதாகக் கனவுகாண்கிறான். அந்தக் கரப்பான்களை செங்கல் இழுக்கப் பயன்படுத்த முடியும்; அதற்கான கட்டுக்கயிறுகளாக அவற்றின் உணர்கொம்புகள் பயன்படும். அப்படியான இராக்கதக் கரப்பான்களை விற்று அந்தப் பணத்தை, லயாங்கா, அவனது அம்மாவுக்காக திறந்த வெளியில் ஒரு வீடு வாங்குவதற்குப் பயன்படுத்தமுடியும்.
லியோனிட் எப்போதாவது திறந்த வயல்வெளிக்குச் சென்றிருக்கிறானாவென சிறுவன் கேட்க, அவன், வயல்களையும் சமவெளிகளையும் விவரிப்பதைக் கண்ணிமைக்காமல், ஆர்வத்துடன் கேட்கிறான். திறந்த ஒரு வெளியினை அவன் பார்க்க விரும்புவதாகவும், அப்படி எப்போதாவது அங்கு செல்ல நேர்ந்தால், அவனுடைய உயிரினச் சேகரிப்புகளையும் எடுத்துச் சென்று, வயலில் விட்டுவிடுவானென்றும் கூறுகிறான்.
மாஷா, சர்க்கரை மற்றும் வோட்காவுடன் வீடு திரும்புகிறாள். அம்மா, அவனது சாளரத்தைத் தூய்மைப்படுத்தாதபோது மட்டும் அவனுக்கு அம்மா மீது கிறுக்குத்தனமான கோபம் ஏற்படுகிறதென்கிறான், லயாங்கா. தேநீர் வழங்கப்படுகிறது. லயாங்கா பெரியவனாக வளரும்போது, அம்மா, அவனுக்கு ஒரு வண்டி செய்து தருவாளென்றும் அதில் சென்று அவன் நகருக்குள் பிச்சையெடுப்பானென்றும் அவன் சொல்கிறான். அதோடு, அவன் ஒரு திறந்த வெளி வயலையும் பார்ப்பானாம். திறந்த வயல் என்னமோ சொர்க்கமாக இருக்குமென்று அவன் கற்பனைசெய்வதாகச் சொல்லிச் சொல்லி, அம்மா சிரிக்கிறாள். அங்கே, தொல்லைகொடுக்கும் இராணுவத்தான்களோடு குடிகார உழவர்களையும் சிறைமுகாம்களையும் அவன் காணவேண்டியிருக்குமென்று அம்மா நினைவூட்டுகிறாள். அவர்களும் குழந்தைகளாகிவிட்டதைப் போலவே இது குறித்த விவாதத்தில் ஈடுபட்டனர்.
லயாங்கா நன்கு களைத்துவிட்டிருந்தான்; இருந்தாலும், லியோனிட் அவனைவிட்டுப் போய்விடுவானென்ற பயத்தினால் தூங்க விரும்பவில்லை. அவனைத் தங்கச்செய்வதாக மாஷா வாக்குறுதி கொடுக்கிறாள். தூங்கிவிழும் முன்பு, லயாங்கா, அம்மாவிடம், அவள் லியோனிடைத் திருமணம்செய்ய வேண்டுமென்கிறான்…. அவன் நல்லவன், அவளை அடிக்க மட்டுமே செய்கிற மற்றவர்களைப் போல் இல்லை.
சிறுவன் ஆழ்ந்து தூங்கியதும், வாழ்க்கையில் அவளுக்கான ஒரே ஆறுதல் லயாங்கா தானென்றும் அவனை நினைத்து அவள் ரொம்பவே பெருமைப்படுவதாகவும் மாஷா, லியோனிட்டிடம் கூறுகிறாள். அவனுடைய தந்தை, அவள் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பழைய நோட்டரி என்றும் கூறுகிறாள்.
அந்த நாளினை லயாங்காவுக்கான விடுமுறை நாளாகச் செய்ததற்காக, மாஷா, லியோனிட்டுக்கு நன்றி சொல்கிறாள். அவளது கையினை, அவனது மூட்டின் மீது வைத்துக்கொண்டு, அவனுக்குத் திருப்பிச் செலுத்த விரும்புவதாக அவள் பரிவுடன் சொல்கிறாள். லியோனிட் அந்த வாய்ப்பினை மறுதளிக்க, அவன் விரும்பினால் அவள் தனது முகத்தைக் கூட மூடிக்கொள்வதாகக் கூறுகிறாள். அப்போது தான், லயாங்கா தூக்கத்தில் ஏதோ முணுமுணுக்கிறான். மாஷா அன்பு மேலிட, மகனருகில் செல்கிறாள். அமைதியாக அங்கிருந்து கிளம்பிய லியோனிட் அடித்தளச் சாளரத்தைக் கடக்கும்போது, மாஷா அவளது மகனுக்காகப் பாடும் வித்தியாசமான ஒரு தாலாட்டு அவன் காதில் விழுகிறது.
பெருந்தலைக் காதல்கள் எழுந்துவருகின்றன
வரும்போதே பேரழிவைக் கொண்டுவருகின்றன
அவை பேரழிவைக் கொண்டுவருகின்றன
உன் இதயத்தை, அவை, சுக்குநூறாக்கும்!
ஓ, துரதிர்ஷ்டமே, ஓ, துரதிர்ஷ்டமே,
நாங்கள் எங்கே போய் ஒளிந்துகொள்வது, எங்கே?
துக்கத்தில் எழுகின்ற ஓலத்தைத் தடுக்க, பல்லைக் கடித்துக்கொண்டு அவன் விரைந்தோடுகிறான்.
*****
இத்தமிழாக்கம், நொய்டா, மாப்பிள் பிரஸ் பிரைவேட் லிட், தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷிய சிறுகதைகள், 2017 தொகுப்பிலுள்ள Fat Faced Passion ஆங்கிலப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது.
மலைகள் இணைய இதழ் எண் 124 நாள் ஜூன், 18, 2017 இல் வெளியானது. 

Wednesday 28 June 2017

ஸ்பானியச் சிறுகதை (கொலம்பியா) - வெறும் நுரை அவ்வளவுதான் - ஹெர்னாண்டோ டெல்லெஸ் - Just Lather, That`s All by Hernando Tellez

வெறும் நுரை, அவ்வளவுதான் (Just Lather, That`s All) ஸ்பானியம் (கொலம்பியா) : ஹெர்னாண்டோ டெல்லெஸ் ( Hernando Tellez )
ஆங்கிலம் : டொனால்டு .யேட்ஸ் (Donald A. Yates)


ஹெர்னாண்டோ டெல்லெஸ் (மார்ச், 22, 1908 – 1966) – கொலம்பிய நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் நூலாசிரியர். 1950 இல் இவரது சிறுகதைத் தொகுதி Cenizas para el viento (Ashes to the Wind and other stories) வெளியானதும் இவரது பெயர் பரவலாக வெளிப்பட்டது. இன்ப, துன்பக் கலவையான இவரது கதைகள், சமகால வாழ்க்கையை, குறிப்பாக அவரது சொந்த நாட்டின் அவலநிலை குறித்த அவரது கூர்ந்த அவதானிப்புகளுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன. கொலம்பியாவுக்கான .நா. தூதராகவும் பணியாற்றிய இவரது சிறுகதைகளில் உலகம் முழுவதும் அதிகம் வாசிக்கப்பட்ட கதையாக தற்போது தமிழாக்கம் செய்யப்பட்ட கதை திகழ்கிறது. இக்கதை அவரது Lather and Nothingelse தொகுதியிலுள்ளது.
********
அவன் உள்ளே நுழைந்த போது, எதுவும் சொல்லவில்லை. என்னிடம் இருந்த சவரக்கத்திகளிலேயே சிறந்ததைத் தேய்ப்புத்தோலில் முன்னும் பின்னுமாக இழுத்துத் தீட்டிக்கொண்டிருந்தேன். அவன்தானெனக் கண்டுகொண்டபோது, நடுங்கிவிட்டேன். ஆனால், அவன் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. எனது உணர்வுகளை மறைத்துக்கொள்வதான நம்பிக்கையுடன், நான் கத்தியைத் தீட்டினேன். என் பெருவிரல் தசையில் பதம்பார்த்துப் பின்னர், வெளிச்சத்தில் தூக்கிப்பிடித்துக் கூர்ந்து நோக்கினேன்.
அதே கணத்தில் குண்டுகள் கோர்த்து, கைத்துப்பாக்கி தொங்கும் அவனது இடுப்புக்கச்சினை அவிழ்த்துச் சுவரிலிருந்த கொக்கி ஒன்றில் மாட்டியதோடு, இராணுவத் தொப்பியினையும் அதன் மீது மாட்டினான். பின்னர் என்பக்கம் திரும்பி, கழுத்துப் பட்டையினைத் தளர்த்திக்கொண்டே, “நரகம் மாதிரிக் கொதிக்கிறது, முகத்தை மட்டும் மழித்துவிடு.” என்றவன் நாற்காலியில் உட்கார்ந்தான்.
அது, நான்குநாள் தாடியெனக் கணக்கிட்டேன்எங்கள் போராளிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான நான்கு நாட்கள். அவன் முகம் வெயிலில் வறண்டு, சிவந்து தோன்றியது. நான் மிகக் கவனமாகச் சோப்பினைத் தயார்செய்யத் தொடங்கினேன். சில சுருள்களைச் சீவிக் கிண்ணத்தில் போட்டு, கொஞ்சமாகச் சுடுநீர் சேர்த்துக் குறுமுடிக் குஞ்சம் கொண்டு உருட்டித் தேய்க்கத் தொடங்கினேன். உடனடியாகவே நுரை எழும்பத் தொடங்கியது.
எங்களின் மற்ற பயல்களுக்கும் இதேயளவு தாடி இருக்கும்.” என்றான், அவன். நான் எதுவும் பேசாமல் சோப்பு நுரையைக் கலக்கிக் கலக்கித் தேய்த்துக்கொண்டிருந்தேன்.
ஆனால், நாங்கள் செம்மையாகச் செய்தோம், தெரிந்துகொள். முக்கியமான தலைகளையெல்லாம் பிடித்துவிட்டோம். கொஞ்சம் பேரைப் பிணமாகத் தான் கொண்டுவந்தோம். உயிரோடு சிலரும் பிடிபட்டார்கள். ஆனால், எல்லோருமே வெகுசீக்கிரத்திலேயே இறந்துவிடுவார்கள்.”
எத்தனை பேரைப் பிடித்தீர்கள்?” எனக் கேட்டேன், நான்.
பதிநான்கு. அவர்களைப் பிடிக்கக் காட்டுக்குள், நடுக்காட்டுக்கும் உள்ளே செல்லவேண்டியிருக்கிறது. எப்படியும் அவர்களைப் பிடித்துவிடுவோம். ஒருவன் கூட, ஒரே ஒருவன் கூட உயிர் தப்ப முடியாது.”
கையில் சோப்பு நுரை தளும்பும் குறுமுடிக் குஞ்சத்துடன் என்னைக் கண்டதும், அவன் நாற்காலியில் பின்புறமாகச் சாய்ந்தான். நான் அப்போதும் அவன் மீது துணியைப் போர்த்தியிருக்கவில்லை. சந்தேகமேயில்லை, நான் குழம்பித்தான் போயிருக்கிறேன். இழுப்பறையிலிருந்து போர்த்தும் துணி ஒன்றை எடுத்து, அவன் கழுத்தில் சுற்றி முடிச்சிட்டேன். அவன் பேச்சை நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஒருவேளை, நானும் அவனுடைய கட்சி அனுதாபியென, அவன் நினைத்திருக்கலாம்.
எங்கள் செய்கையிலிருந்து இந்த ஊர் ஒரு பாடம் படித்திருக்கவேண்டுமே.” என்றான், அவன்.
ஆமாம்,” என்றேன், நான், வியர்த்துக் கறுத்திருந்த அவனது கழுத்தின் அடிப்பக்கமாக முடிச்சினை இறுக்கிக்கொண்டே.
‘’அது நல்ல, செமைய்ய்யாகக் காட்டிய காட்சி, ஹூம்?”
‘’ரொம்ப நன்றாக இருந்தது.” என்றவாறே குறுமுடிக்குஞ்சத்திற்காகத் திரும்பினேன்.
அந்த மனிதன் சோர்வின் சிறு வெளிப்பாடாகக் கண்களைச் சிறிது மூடி, சோப்பு நுரையின் மென்குளிர் சுகத்துக்காகக் காத்திருந்தான். அவனை இவ்வளவு அருகாக நான் பார்த்ததேயில்லை. தொங்கவிடப்பட்டிருந்த நான்கு போராளிகளையும் காண, மொத்த ஊரையும் பள்ளி மைதானத்தில் வரிசையாக நிற்குமாறு அவன் ஆணையிட்ட நாளில், அவன் முகத்தை நேருக்கு நேராக ஒரு கணம் பார்த்தேன். ஆனால், சிதைக்கப்பட்ட உடல்களின் காட்சி, இதற்கெல்லாம் ஆணையிட்ட மனிதனின் முகத்திற்கப்பால் என்னை விலக்கியது; அதே முகம் இப்போது என் இரண்டு கைகளுக்குள்ளும் அகப்படுகிறது.
அது விரும்பத்தகாத ஒரு முகமாக இல்லை; அவனது வயதினைச் சிறிது அதிகமாகக் காட்டினாலும் அந்தத் தாடி அவன் முகத்துக்கு முழுப் பொருத்தமில்லாமலும் இல்லை. அவன் பெயர் டோரெஸ்காப்டன் டோரெஸ். மிகுந்த கற்பனைத் திறனுள்ளவன், ஏனெனில் போராளிகளை நிர்வாணமாக்கித் தொங்கவிட்டதோடு, அவர்களின் உடல்களைத் துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக்கும் எண்ணம் யாருக்கு வரும்?
நுரையின் முதல் படிவினை அவன் முகத்தில் தேய்க்கத் தொடங்கினேன். கண்களைத் திறக்காமலேயே, அவன் தொடர்ந்தான், “எந்தச் சிக்கலுமில்லாமல் அப்படியே போய்த் தூங்கிவிடுவேன், ஆனால் பிற்பகலுக்கென நிறைய வேலை இருக்கிறது.”
நுரையிடுவதை நிறுத்திவிட்டு, ஆர்வமற்ற பாவனையில், ”மரணதண்டனை நிறைவேற்றும் துப்பாக்கிப் படை அணிவகுப்பா?” எனக் கேட்டேன்.
அதுமாதிரிதான், ஆனால், அவ்வளவு வேகமாக இல்லை, கொஞ்சம் தாமதமாகிற ஒன்று.”
அவன் தாடியில் நுரையிடும் வேலையைத் தொடர்ந்தேன். என் கைகள் மீண்டும் நடுங்கத் தொடங்கின. அந்த மனிதன் அதை உணரும் நிலையில் இல்லை; அது எனக்கு நல்லதுதான். ஆனாலும் அவன் வராமல் இருந்திருக்கக்கூடாதா என்றுதான் நினைத்தேன். அவன் உள்ளே நுழைந்ததை எங்கள் எதிரெதிர் கும்பல்கள் பலரும் பார்த்துத்தானிருப்பார்கள். அதுவுமில்லாமல், ஒருவனின் வீட்டுக்குள்ளேயே எதிரி வந்துவிடுவதென்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.
அந்தத் தாடியினை வேறெந்தத் தாடியையும் போல கவனமாகவும் மென்மையாகவும், எந்தவொரு வாடிக்கையாளரையும் போல எந்தவொரு மயிர்க்காலிலும் நுண்துளை ஏற்பட்டு அதிலிருந்து ஒரு துளி இரத்தமும் முகிழ்த்துவிடாதபடி சிரத்தையெடுத்து மழிப்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். சிறுசிறு குறுமுடித் திட்டுகளும் கத்திக்குத் தப்பிவிடாதபடி கவனமாயிருக்கவேண்டும். அவரது முகத்தை என் கையின் பின்புறத்தால் தடவி, எந்தவொரு முடியும் தட்டுப்படாத வகையில் அவரது தோல் சுத்தமாகவும் மென்மையாகவும், நலம் பெறுமாறும் செய்யவேண்டும். ஆம், நான் ஒரு ரகசியப் போராளி, ஆனால் மனச்சான்றுடைய முடிதிருத்தும் தொழிலாளியாகவுமிருப்பதோடு, என் தொழிலுக்குத் தேவைப்படும் நுண்திறனுமுடையவனென்பதில் பெருமிதம் கொண்டவனாகவும் இருக்கிறேன்.
சவரக்கத்தியை எடுத்து அதனுடைய இரு பாதுகாப்புக்கரங்களையும் இழுத்து, கத்திப்பகுதியை வெளிப்பட எடுத்து, கீழ்நோக்கி இறங்கும் கிருதாக்களில் ஒன்றிலிருந்து என் வேலையைத் தொடங்கினேன். கத்தி அழகாகப் படிந்து வேலைசெய்தது. அவனது தாடி விறைப்பாகவும் கடினமாகவும், அதிக நீளமில்லாமல், ஆனால் தடிமனாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தோல் வெளிப்பட்டது. கத்தி அதன் வழக்கமான சத்தத்துடன் மெல்ல வழுக்கி இறங்க, இறங்க, மழித்தமுடியும் உலர்கின்ற சோப்பு நுரையுமாகக் கலந்த பசை கத்தி ஓரமாகச் சேர்ந்துகொண்டே வந்தது.
அதை வழித்தெறிவதற்காக ஒரு கணம் தாமதித்த நான் கத்தியை மீண்டும் தீட்டுவதற்காகத் தேய்ப்புத்தோலைக் கையிலெடுத்தேன்; ஏனெனில் வேலையைத் துப்புரவாகச் செய்து முடிக்கிற ஒரு முடிதிருத்தும் கலைஞன் நான். கண்களை மூடியேயிருந்த அந்த மனிதன், இப்போது கண்களைத் திறந்து, போர்த்திய துணிக்குள்ளிருந்து ஒரு கையை வெளியே நீட்டி சோப்பு நீக்கப்பட்ட பகுதியைத் தடவிக்கொண்டே, ”இன்று மாலை ஆறு மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வா.” என்றான்.
அன்றைக்கு மாதிரியான அதே விஷயம்தானா?” பதறிப்போய்க் கேட்டேன்.
அதைவிடவும் சிறப்பாக இருக்கும்,” என்றான், அவன்.
‘’ என்ன செய்வதாகத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?”
இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியவில்லை; ஆனால் நாங்கள் வேடிக்கை விளையாட்டின் உச்சத்துக்கே போவோம்.” மீண்டும் அவன் பின்பக்கமாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். கத்தியை உயர்த்தியபடி அவனை நெருங்கினேன்.
அவர்கள் எல்லோரையும் தண்டிக்கப் போகிறீர்களா?” அச்சத்துடனேயேதான் கேட்டேன்.
எல்லோரையும் தான்
அவன் முகத்தில் சோப்பு உலர்ந்துகொண்டிருந்தது. நான் வேகமாகச் செய்து முடிக்க வேண்டும். கண்ணாடியில் தெரிந்த தெருவை உற்றுப் பார்த்தேன். அது எப்போதும் போலவே இருந்தது; மளிகைக்கடையில் இரண்டு மூன்று வாடிக்கையாளர்கள். பின் மணியைப் பார்த்தேன்; 2.20. பிற்பகல்.
கத்தி அதன் கீழ்நோக்கிய மழிப்பினைத் தொடங்கியது. இப்போது அடுத்த பக்கக் கிருதா வழியாகக் கீழிறங்கியது. தடித்த நீலநிறத் தாடி. யாராவது கவிஞர் அல்லது மதகுருவைப் போல அவன் அதை வளர்த்திருக்கவேண்டும். அது அவனுக்கு நன்கு பொருத்தமாகவே இருந்தது. அநேகம் பேருக்கு அவனைக் கண்டுகொள்ள முடியாது. அவனுக்கு அது நல்லதுதானே என்று நினைத்துக்கொண்டே, அவனது முன்கழுத்துப் பகுதியை இன்னும் மென்மையாகக் கையாள முயற்சித்தேன்.
அங்கேதான், கத்தியைத் திறமையாகப் பயன்படுத்தவேண்டும்; அங்கே முடி மென்மையாக இருந்தாலும் சுருள், சுருள்களாக அடர்ந்திருந்தது. சுருள் தாடி. மயிர்க்கால்களில் ஒன்று திறந்துகொள்ள, இரத்தத்துளி ஒரு முத்துப் போல முகிழ்த்துவிடலாம்; ஆனால் வாடிக்கையாளருக்கு அப்படி நிகழவே நிகழாமல் பார்த்துக்கொள்வதில்தான் நல்ல ஒரு முடிதிருத்தும் கலைஞன் பெருமிதம் கொள்கிறான்.
எங்களில் எத்தனை பேரைச் சுடுவதற்கு அவன் ஆணையிட்டிருக்கிறான்? எங்களில் எத்தனை பேரைச் சிதைப்பதற்கு அவன் ஆணையிட்டிருக்கிறான்? அதைப்பற்றி நினைக்காமலிருப்பதே நல்லது. நான் அவனுக்கு எதிரானவனென்று டோரெசுக்குத் தெரியாது. அவன் அதை அறியமாட்டான்; அதன் பின்னாலுள்ள எதனையும் அவன் அறியமாட்டான். அது மிக மிகச் சிலருக்கே தெரிந்த ரகசியம், நகருக்குள் டோரெஸ் என்ன செய்கிறான், போராளி வேட்டைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவன் என்னென்ன திட்டமிடுகிறான் என்பவற்றையெல்லாம் மிகத் துல்லியமாகப் போராளிகளுக்குத் தெரிவிப்பது நான்தான்.
என் கைக்குள்ளேயே வந்த அவன், எந்தச் சேதாரமும் இல்லாமல், உயிரோடு நலமாக, அதுவும் மழித்த முகத்துடன் திரும்பிச் செல்வதை நான் எப்படி நியாயப்படுத்தி என்ன விளக்கம் அளிக்கமுடியும்? இயலவே இயலாத ஒன்று.
தாடி முழுவதும் அநேகமாக அகற்றப்பட்டுவிட்டது. அவன் உள்ளே வந்தபோதிருந்த வயதில் சில ஆண்டுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இளமையாகிவிட்டதாகத் தோன்றினான். முடிதிருத்தகம் செல்லும் எல்லா ஆண்களுக்கும் வழக்கமாக இப்படித்தான் நிகழுமென்று, நான் நினைக்கிறேன். டோரெஸ் புத்துயிர் பெற்றிருக்கிறான்புத்துயிர் பெற்றானா? எப்படியென்று கேட்டால், எப்போதும் நான் சொல்லிக்கொள்வது போல், நகரத்திலேயே நான் ஒரு சிறந்த முடிதிருத்தும் கலைஞன் என்பதால்தான்.
சே! வெய்யில் எவ்வளவு கொதிக்கிறது? என்னைப் போலவே டோரசுக்கும் வியர்த்துக் கொட்டும்; ஆனால், அவன் ஒரு அமைதியான மனிதன்; பிடிபட்டவர்களை இன்று மாலை என்னசெய்யலாமென்று கூட இன்னும் நினைத்துப்பார்க்காதவன். ஆனால், அதற்கு மாறாக நானோ, கையில் கத்தியை வைத்துக்கொண்டு, அவன் முகத்தில் மேலும் கீழுமாக மழித்துக்கொண்டு, சிந்திக்கக்கூட முடியவில்லை.
என்னிடம் வந்தான் பார்! ஒழியட்டும், அவன்! நான் ஒரு போராளி, கொலைகாரனல்ல. ஹூம், அவனைக் கொல்வதுதான் எத்தனை எளிதானது; அதற்குத் தகுதியானவனும் கூட; சரிதானா? இல்லை! என்ன இழவு சனியன்! யாரோ ஒரு பிற மனிதனைக் கொலைகாரனாக்கித் தியாகம்செய்யச் சொல்லும் தகுதி எவருக்கும் இல்லை. அதனால் நீ பெறப்போகும் பயன்தான் என்ன? எதுவுமில்லை. அடுத்தவர்கள், வருவார்கள்; இன்னும் அடுத்தவர்கள், முதலில் வந்தவர்கள் அடுத்து வந்தவர்களைக் கொல்வார்கள், அப்படியே, அடுத்தடுத்துஅப்படியே அது, எல்லாமே இரத்தப் பெருங்கடலாகச் சங்கமிக்கும் வரை போய்க்கொண்டேயிருக்கும்.
இந்தத் தொண்டைக்குழியை, மூச்சுக்குழலை, `ஜிப், `ஜிப்` என இப்படி அறுத்துவிடலாம்தான்! அவன் தடுப்பதற்கு நான் நேரமே கொடுக்கப் போவதில்லை, அவன் கண்களை மூடியேயிருப்பதால், பளிச், பளிச்சென மின்னும் கத்தியையோ அல்லது என் கண்களையோ பார்க்கப்போவதில்லை. ஆனால், நானோ உண்மையான கொலைகாரனைப் போல நடுங்குகிறேன். அவன் கழுத்திலிருந்து பெருகும் இரத்தம் துணிக்கு மேலாகக் குமிழியிட்டு, நாற்காலி மீது, என் கைகளில், தரையில் எங்கும் இரத்த மயமாகும். நான் கதவைச் சார்த்த வேண்டும். இளஞ்சூடான இரத்தம் தடுக்கவியலாதபடித் தொடர்ந்து அங்குலம், அங்குலமாகப் பரவித் தரையில் அழிக்க முடியாத, சிவப்புச் சிற்றோடையாகித் தெருவரையிலும் போய்விடும்.
எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது, அழுத்தமாக ஒரே இறுக்கு, ஆழமான ஒரே வெட்டு, வலியே இல்லாமல் கச்சிதமாக முடிந்துவிடும். அவன் துடித்துவிட மாட்டான். ஆனால், அவன் உடலை, பிணத்தை என்ன செய்வது? எங்கே கொண்டுபோய் ஒழித்துவைப்பது? எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நான் தப்பி ஓடி, எங்காவது தலைமறைவாகித் தஞ்சம் புகவேண்டும். ”கொலைகாரன், காப்டன் டோரசைக் கொலைசெய்தவன். முகம் மழிக்கும்போது தொண்டைக்குழியை அறுத்துவிட்டான்கோழை.”
அப்புறம் இன்னொரு பக்கம், “நம் எல்லோருக்குமாகப் பழிதீர்த்தவன். மறக்கவே கூடாத பெயர். அவன் தான் நகர முடிதிருத்துபவன். அவன் நமது கொள்கைக்காரனென்று யாருக்கும் தெரியாது.”
கொலைகாரனா, அல்லது தியாக வீரனா? என் விதி இந்தக் கத்தியின் கூரான விளிம்பில் அமர்ந்திருக்கிறது. என் கையை இன்னும் கொஞ்சமாக, சிறிது திருப்பி, கத்தியைக் கொஞ்சம் அழுத்தி அப்படியே இறக்கிவிட முடியும். பட்டுப் போல, இரப்பர் போல மேல்தோல் பிளவுபட்டு வழிவிடும். மனித மேல்தோலைவிடவும் மென்மையானது வேறெதுவுமில்லை; அதுவும் எப்போதும் இரத்தம் வெளிப்படத் தயாராக இருக்கும்.
ஆனால், நான் ஒரு கொலைகாரனாக விரும்பவில்லை. நீ இங்கே ஒரு முக மழிப்புக்காக வந்தாய். நானும் என் பணியை நன்மதிப்புடன் செய்கிறேன். ……… என் கைகளில் இரத்தம் வேண்டவே வேண்டாம்; வெறும் நுரை, அவ்வளவுதான். நீ மரண தண்டனை நிறைவேற்றுபவன். நான் வெறும் முடிதிருத்தும் தொழிலாளி. சமூகப் படிநிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேயான இடம் இருக்கிறது.
இப்போது அவன் தாடி சுத்தமாக மழிக்கப்பட்டு, நாடி வழுவழுப்பாகிவிட்டது. அந்த மானிடன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்ணாடியில் உற்றுப் பார்த்தான். கன்னத்தில் உள்ளங்கைகளைத் தேய்த்து, புத்தம் புதியதைப் போல புது மலர்ச்சியை உணர்ந்தான்.
நன்றிஎன்றான், அவன். அவனது இடுப்புக்கச்சு, கைத்துப்பாக்கி, தொப்பிக்காகக் கொக்கியில் மாட்டியிருந்த இடத்திற்குச் சென்றான். என் முகம் வெளிறியிருக்கவேண்டும்; என் சட்டை நனைந்துவிட்டது. கச்சின் கொளுவிகளைச் சரிசெய்து மாட்டி முடித்துவிட்டு, டோரெஸ் துப்பாக்கியை அதன் உறைக்குள் இட்டு இழுத்து நேர்படுத்தியதும் தன்னிச்சையாகத் தலைமுடியைப் பணியத் தடவிவிட்டு, தொப்பியை அணிந்துகொண்டான். அவனுடைய காற்சட்டைப் பைக்குள்ளிருந்து நாணயங்களை வெளியே எடுத்த அவன், நேராக வாயிலை நோக்கி நடந்தான்.
வாயிலில் ஒரு கணம் நின்ற அவன், ”நீ என்னைக் கொன்றுவிடுவாய் என்றார்கள். அதைத் தெரிந்துகொள்ளத்தான் வந்தேன். ஆனால், கொல்வது ஒன்றும் எளிதானதில்லை. நான் சொல்வதை நீ உறுதியாக எடுத்துக்கொள்ளலாம்.” என்றதோடு, அப்படியே திரும்பி, நடந்து சென்றான்.
•••
(இக்கதையின் ஆங்கிலப் பிரதி, நொய்டா, மேப்பிள் பிரஸ் 2009 இல் வெளியிட்டுள்ள `சமகால லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்` நூலிலுள்ளது.)
மலைகள் இணைய இதழ் ஜூன் 3, 2017 இல் வெளியானது.