Friday 1 February 2019

மரணம் வலிமையானது தான்; ஆனால் எழுத்தாற்றல் அதனினும் வலிமையானது.

மரணம் வலிமையானதுதான்; ஆனால் எழுத்தாற்றல் அதனினும் வலிமையானது.

உலகின் மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான நோபல் விருதாளர், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் சிறுகதைகளில் ஒன்றான Death Constant beyond Love மிகமிகத் திறமையாகப் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளில் ஒன்று.
பன்னிரண்டு ஆண்டுகளாக செனேட்டராக இருக்கும் ஒன்சிமோ சான்ச்செஸ் அடுத்த கிறித்துமசுக்குள் இறந்துவிடுவாரென அவருக்குச் சொல்லப்படுகிறது. மருத்துவர்களுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்த அந்த இரகசியத்தை, தனக்குள்ளேயே புதைத்துக்கொள்வதென்றும் எஞ்சியிருக்கும் வாழ்நாளை, முன்னர் வாழ்ந்த மாதிரியே வேறெந்த மாறுதலுமில்லாமல் வாழ்ந்து விடுவதென்றும் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கிறார். அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படியொன்றும் பெருமைக்குரியதல்ல; அது கேவலமான ஒன்று எனக் கதை சொல்லி குறிப்பிடுகிறார்.
செனேட்டர் சாதாரண ஆளல்ல; ஜெர்மனியின் புகழ்பெற்ற பல்கலையில் உலோகவியல் பொறியியல் துறையில் பெருமதிப்புடன் பட்டம் பெற்றவர். மொழிபெயர்ப்பு வழியாகவெனினும் இலத்தீன் செவ்வியல் இலக்கியங்களை வாசித்தவர். வீறொளி கொண்ட ஜெர்மானியப் பெண்மணியை மணந்து அவர் மூலம் ஐந்து குழந்தைகளும் பெற்றவர். அவர்கள் எல்லோரும் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அவருக்கு வயது நாற்பத்திரண்டு. மரணத்துக்கான நேரம் குறிக்கப்பட்டுவிட்டதைத் தெரிந்த பிறகுதான் செனேட்டரின் மகிழ்ச்சி பறிபோயிற்று.
இதற்கிடையில் அடுத்த தேர்தல் வரவே செனேட்டர் பதவியிலிருக்கும் சான்ச்செஸ் மீண்டும் வாக்குச் சேகரிப்புக்குச் செல்லும் போது பாலைவனக் கடற்கரைக் கிராமமான ஆளுநரின் ரோஜா என்னும் பெயருடைய ஊருக்கு வருகிறார்.
அந்தக் கிராமம் பாலைவனத்தில் பயிர் ஏதும் விளையாத நிலத்தைக் கொண்டது. அதன் மண் வெடியுப்பு போலிருக்கிறது. கடல் கிராமத்திற்குள் சிறிது உள்வாங்கியிருப்பதால் இரவில் கள்ளக் கடத்தல் கப்பல்கள் திருட்டுத்தனமாக சரக்குகள் ஏற்றி இறக்குவதுமாகவும், பகல் முழுவதும் தூங்கி வழிவதாகவும் இருக்கிறது.
இந்தக் கிராமத்தில் மாற்றம் விளைவிக்கத் தகுந்த நபர்கள் யாராவது வாழ்வார்களென்ற நம்பிக்கை யாருக்குமே இல்லை.
வாக்குச்சேகரிப்புக்குக் குடும்பம் வரவில்லை. அவர் வருவதற்கு முன்பாகவே ஊர்வலக்கார்கள், பந்தல், மேடை அமைப்பவர்கள், கூட்டம் சேர்க்கவும் கோஷம் போடுவதற்குமான வாடகை இந்தியர்களை ஏற்றி வரும் ஊர்திகள், லாரிகள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் எனத் தேர்தல் பரிவாரங்கள் வந்து சேருகின்றனர்.
மேடை அமைப்பு மற்றும் பணிகளின் நடுவே செனேட்டர் தனிமையில் ஓய்வெடுப்பதற்கு ஒரு வீடு ஒதுக்கப்படுகிறது. செனேட்டர் தான் அணிந்து வந்திருந்த ஒற்றை ரோஜாவைக் கண்ணாடித் தம்ளரிலிருந்த தண்ணீரில் மிதக்கவிட்டு, கையோடு கொண்டுவந்த தாவர உணவினைச் சாப்பிட்டு, வலி நிவாரண மாத்திரைகளை விழுங்கிவிட்டு, ஏணையில் உடலைச் சாய்க்கிறார். ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு, மரணம் மற்றும் வேறெந்தச் சிந்தனையும் எழாத படி நிர்வாணமாகக் கைகால்களை நீட்டி, கண்மூடிக் கிடக்கிறார்.
மூன்று மணிக்கெல்லாம் உடை மாற்றிப் பொதுமக்கள் முன்பான சொற்பொழிவுக்குப் புது மனிதராக வருகிறார். ஏற்கெனவே எழுதி, மனப்பாடம் செய்து திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்த சொற்பொழிவினை நிகழ்த்திக் காட்டுகிறார்.
அவருக்கு வாக்களித்தால், மழை பெய்யும் எந்திரம், விளையாட்டு பொம்மைகள் பிரசவிக்கும் கருவி, பாலைவனத்திலும் காய்கறிகள் விளைவிக்கக் கூடிய தைலம் எல்லாம் தருவதாக வாய்ப்பந்தல் போடுகிறார். இதற்குள் அவரது ஆட்கள் கூட்டம் நடக்கும் இடத்தில் கம்பளத் துணிகள் முட்டுக் கழிகள் கொண்டு கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட செங்கல்கட்டு வீடுகள் கொண்ட அட்டை நகரம் ஒன்றை அமைத்துவிடுகின்றனர். அதைப் போன்ற ஒரு நகர வாழ்க்கைக்கு அந்தக் கிராமம் மாறப் போகிறதென்கிறார். ம்க்களின் கைதட்டல் தூள் பறக்கிறது.
பொதுக் கூட்டம் முடிந்த பின் கிராமத்தில் தெருத்தெருவாக ஊர்வலமாகப் போகும் போது மக்கள் கேட்கும் சிறுசிறு உதவிகள் செய்வதோடு அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பதில் சொல்கிறார். படுத்த படுக்கையாக க்கிடக்கும் நோயாளி ஒருவனுக்கு வாயில் மருந்து ஊற்றுகிறார். ஆறு குழந்தைகளுடன் கஷ்டப்படும் ஒரு குடும்பத்தலைவிக்கு, அவள் கேட்டபடி கழுதை ஒன்று கொடுக்கிறார். அந்தக் கழுதையின் பிட்டத்தில் அழியவே அழியாத மையால், அது அவரின் கொடை என எழுதப்பட்டிருக்கிறது.
ஊர்வலத்தின் போது ஒரு மூலையில் நெல்சன் ஃபாரினாவைக் காண்கிறார். அவனிடம் ஹலோ எப்படியிருக்கிறாயென நலம் விசாரிக்க, அவனோ என் கதை உங்களுக்குத் தெரியாதா என்கிறான்.
பேச்சுக்குரல் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து வந்த நெல்சனின் மகள் லாராவைக் கண்ட செனேட்டர் வாய் பிளக்கிறார். அவள் அத்தனை அழகு.
நெல்சன் பேய்த்தீவில் குடியிருந்த ஒரு மருந்தாளுநன். அங்கிருக்கும்போது, அவனது முதல்மனைவியை நான்கு துண்டுகளாக வெட்டி, அவனுடைய காலிபிளவர் தோட்டத்துக்கு உரமாகப் புதைத்துவிட்டவன். பின்னர் அங்கிருந்து வெளியேறி கறுப்பு நிறமும் கடவுள், மற்றும் மதநம்பிக்கையில் அசட்டையானவளுமான ஒரு பெண்ணை இரண்டாவது மனைவியாக அழைத்துக்கொண்டு ஆளுநரின் ரோஜா கிராமத்திற்கு வந்தவன்.
இங்கு வந்த நாளிலிருந்தே சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக போலி அடையாள அட்டை ஒன்றினை வாங்கிவிட பன்னிரண்டு ஆண்டுகளாக முயற்சிக்கிறான். செனேட்டர் உதவிசெய்ய மறுத்துவிட்டார். அதனால் தான் இம்முறை அவன் பொதுக்கூட்டத்திற்குப் போகவில்லை.
அன்று இரவு இருப்பதிலேயே மிக அழகான ஆடையை மகளுக்கு அணிவித்து செனேட்டரிடம் அனுப்புகிறான். செனேட்டர் வீட்டில் துப்பாக்கிக் காவலர்கள் அவளைக் காத்திருக்கச் சொல்கின்றனர். உள்ளே கிராமத்துப் பிரமுகர்கள் சிலரை அழைத்துப் பேசும் செனேட்டர் அவர்களை வழிக்குக் கொண்டுவர எல்லாவிதமான தகிடுதத்தப் பேச்சுகளையும் பேசி முடிக்கிறார்.
அவர்கள் அனைவரும் வெளியேறுகையில், வாசலுக்கு வந்த செனேட்டர் லாராவைக் கண்டு திகைத்து, இங்கே என்ன செய்கிறாயெனக் கேட்க, அப்பா உங்களிடம் சொல்லச் சொன்னாரென்க, புரிந்துகொண்ட செனேட்டர் அவளை உள்ளே அழைக்கிறார்.
அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவள் உடலைத் தடவுகிற செனேட்டர், அவள் சட்டைக்கு அடியில் எதுவும் அணியாமலிருந்தபோதும் இரும்பு போல ஏதோ ஒன்று தட்டுப்பட, எரிச்சலில் அங்கே என்ன எழவை வைத்திருக்கிறாயென்கிறார். அவளோ `பட்டைப் பூட்டு` (Chastity belt) என்கிறாள். அதன் சாவியைக் கேட்க, அது அப்பாவிடமிருக்கிறதென்கிறாள்.
`தேவடியாத் தவளைப் பயல்` எனத் திட்டுகிறார். ஆனாலும் அவனுக்கு வேண்டியதைச் செய்கிறேனென எரிச்சலுடன் சொல்கிறார். லாரா, அவளே சென்று அப்பாவிடமிருந்து சாவியை வாங்கி வருகிறேனென்று சொன்ன போதும், மறுத்து அவளை அங்கேயே இருக்கச் சொல்லி வெறுமே தழுவுகிறார்.
அவளும் ஆதரவாக, அவரது தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொள்கிறாள்.
அன்றிலிருந்து ஆறு மாதம், பதினொரு நாள் கழித்து லாராவுடனான தொடர்பு குறித்து எழுந்த ஊழல் புகாரில் மதிப்பும் மரியாதையும் இழந்து, சாகும்போதும் லாராவை அடையாமலேயே சாகிறோமேயென்ற ஏக்க வெறியுடன் இறந்துபோகிறார்.
சுவை குன்றாமல் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையின் அடிப்படைக் கருத்து என்னவென்று ஆராய்ந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட அடிக்கருத்துக்களில் இக்கதை சுழலுவதைக் காணமுடிகிறது.
1. அரசு நிர்வாகம் : -
பன்னிரண்டு ஆண்டுகளாகப் பதவியிலிருக்கும் செனேட்டர் அரசின் பிரதிநிதியாக கதையில் உலவுகிறார். கிராமம் கள்ளக் கடத்தல் வேலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் அதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்தின் கெட்டுக்கிடைத் தண்ணீரிலும் வெடியுப்பு மண்ணிலும் சலித்துப் போவதாகக் குறிப்பிடும் செனேட்டர், ஆனாலும் அதைவைத்து கிராமம் பணம் சம்பாதிப்பதாக, கள்ளக் கடத்தலில் ஈடுபடுவதை மறைமுகமாகச் சுட்டி, அதன் மூலம் கிராம மக்கள் லாபமடைவதாகச் சொல்கிறார். மக்கள் நலனுக்கென எதுவுமே செய்யாத போதும் மழைபெய்விக்கும் எந்திரம், அது, இது என வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.
2. அரசியல் ஏமாற்று வேலை : -
பட்டம் பெற்ற, இலக்கியமறிந்த மனிதரென்ற போதிலும் அறமற்ற வழியில் அதிகாரம் பெறுதல். வெற்று வாக்குறுதிகளை அள்ளியிறைத்தல், சமூகத்தை ஏமாற்றுதல். முன்மாதிரியாக நடந்து காட்ட வேண்டிய கடமையுள்ளவரே அறம் தவறுதல், பழிக்காளாகுதல்
3. சமூக அற உணர்வு : -
அறம் மறந்து, கிராமத்துச் சமூகம் சட்டத்துக்கு எதிரான கள்ளக் கடத்தல் வழிகளில் பணம் ஈட்டுவது, கொலைசெய்தும் தப்பிப்பது, மகளைக் கூட்டிக் கொடுத்தாவது தனக்கு வேண்டியதைப் பெற முயற்சித்தல்
4. பெண்களின் நிலை : -
ஆறு குழந்தைகளைப் பெற்ற பின் மனைவியை விட்டு ஓடிப்போனதால் குழந்தைகளுடன் வறுமையில் உழலும் பெண். செனேட்டரிடம் உதவி கோருகிறாள். லாரா மிக்க அழகுடைய பதினெட்டு வயதுப்பெண். இருப்பினும் தந்தைக்காக செனேட்டருடன் படுப்பதற்காக அனுப்பப்படுகிறாள். நெல்சனின் முதல் மனைவி கணவனாலேயே கொல்லப்படுகிறாள். சமூகத்தில் பெண்கள் கையறு நிலையிலேயே உள்ளனர்.
5. வறுமை : -
கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருந்தாலும் கிராமத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. தண்ணீருக்கும் சிரமமான நிலை. குழந்தைகள் ஒல்லிக்குச்சிகளாயிருக்கின்றனர்.
6. மரணம் ; -.
இக்கதையில் மூன்று மரணங்கள் குறித்துப் பேசப்படுகின்றன. நெல்சனின் மனைவி கொல்லப்பட்ட செய்தியும் இரண்டாவது மனைவி இயற்கையாகவே இறந்து போனதையும் கதைசொல்லி குறிப்பிடுகிறார். மரண நாள் குறிக்கப்பட்டுவிட்ட போதிலும் செனேட்டர் அதிகாரத்திற்காக மும்முர வாக்கு சேகரிப்பிலும் அதற்காக அனைத்து சர்க்கஸ் வேலை, தில்லுமுல்லு, தகிடுதத்தச் செயல்களிலும் ஈடுபடுகிறார். லாராவைக் கண்டதும் அவள் அழகில் மயங்கித் திகைத்துப் போகிறார். அவளோடு உடலுறவு கொள்ளவும் முயலுகிறார். பின்னர், குறித்த நாளில் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அப்படியெனில் அற உணர்வின் இயக்கத்தில் மரணத்தின் நிலை என்ன?
7. தனிமை : - செனேட்டர் மரணத்தின் நினைப்பில் தனிமையில் உழல்கிறார். லாராவைத் தழுவும் ஒரு கட்டத்தில், அவளும் செயலற்றிருப்பதை உணரும்போது, தன்னக் காதலிப்பவர்கள் யாருமேயில்லையென முனகுகிறார். நெல்சன் ஃபாரினா முதல் மனைவியைக் கொன்று, இரண்டாவது மனைவியையும் இழந்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் தனிமையில் வாடுகிறான். ஆறு குழந்தைகள் பெற்றுவிட்டு ஓடிப்போனவனின் மனைவியும் தனிமையில் வாழ்கிறாள்.
8. அரசியல் வாழ்க்கை
செனேட்டரின் வாழ்க்கை கேவலமான ஒன்று எனப் பதிவு செய்ததன் மூலம் அரசியல் வாழ்க்கை விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது.
ஒரு நல்ல இலக்கியப் படைப்பு என்பது சமூகச் செய்தியைச் சொல்வதுடன் சுவைபட ஆற்றொழுக்காக, கதையை சொல்லிச் செல்வதுமாகும். இச்சிறுகதை சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிட்டாலும் இவற்றுக்கான தீர்வுகளை நோக்கி வாசகனைச் சிந்திக்கத் தூண்டுவதாக அமைகிறது.
இக்கதை நிகழும் கிராமத்திற்கு Rosal Del Virrey எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பெயர் வைஸ்ராயின் ரோஜா எனப்பொருள்படுகிறது. இக்கிராமத்தின் பெயரில் ரோஜா இருந்தாலும் கிராமத்தில் ஒரு ரோஜாச் செடி கூட இல்லை. அது போல வைஸ்ராய் அளவுக்கில்லையென்றாலும் ஊர் நன்மைக்கு அல்லது நல்ல மாற்றத்திற்கு வழிகோலும் ஒருவர் கூட அங்கு வாழ்வாரெனச் சொல்வதற்கில்லை. கிராமம் பாலைவனத்துக்குள் பாலைவனமாக உள்ளது. கள்ளக் கடத்தல் மட்டுமே நடைபெறுகிறது. மண்ணோ வெடியுப்புப் போலிருக்கிறது. கதைப்படி செனேட்டர் கொண்டுவந்த ஒரே ரோஜா தான் அங்குள்ளது. அதன் நிழலில் செனேட்டர் ஓய்வெடுக்கிறார். லாராவுக்கும் ரோஜா மீது ஈர்ப்புள்ளது. ரியோஹாச்சா பொழிமுக நகரத்தின் ரோஜாக்களை அறிவேனென லாரா தெரிவிக்கிறாள். அழகும் மணமும் மிக்க ரோஜா வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கையின் குறியீடாக இக்கதைக்குள் கொண்டுவரப்படுகிறதெனலாம்.
ஆளுநரின் ரோஜா, செனேட்டரின் லாராவைக் குறிப்பதாகவும் கொள்ள இடமுள்ளது.
பொதுக் கூட்டத்தின் போது காகிதப் பறவைகளை வானவெளியில் எறிகின்றனர். அவை காற்றில் பறந்து கடலுக்குள் சென்று வீழ்கின்றன. அது போலவே, இரவில் கிராமத்து மக்களுடன் பேசும் போது செனேட்டர் காகிதத்தில் பட்டாம் பூச்சி செய்து பறக்கவிடுகிறார். அது வாசல் வழியாக வெளியே வந்து கூடத்துச் சுவரில் அமர்கிறது. லாரா அதை நகத்தால் கிளப்ப முயற்சிக்கிறாள். அதை எடுக்க முடியாது, அது சுவரில் ஓவியமாகத் தீட்டப்பட்டதென காவலர் கூறுகின்றனர். இவையெல்லாம்தான் யதார்த்தத்தை மாய யதார்த்தமாக்குகின்றன.
இக்கதையின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கதையாக விரிவதைக் கண்டு திகைப்படையாமலிருக்க முடியவில்லை.
எடுத்துக் காட்டாக, நெல்சன், ஆளுநரின் ரோஜா கிராமத்தில் வந்திறங்கிய கப்பலில் Macaw என்னும் கிளிகள் ஏற்றப்பட்டிருந்ததாக ஒரு தகவல் தரப்படுகிறது. இத்தகவலுக்கும் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் கப்பலில் கிளிகள் ஏற்றப்பட்டுள்ளன. அப்படியெனில் அதுவும் ஒரு கடத்தல் விவகாரமென்றும் அது குறித்து வாசகனின் கவனத்தை ஈர்க்கவேண்டுமென்றும் கதைசொல்லி முயல்வது புரிந்துகொள்ளத்தக்கது.
இப்படைப்பு அன்றிலிருந்து இன்று வரையிலும் பொருந்தக்கூடிய யதார்த்தமான நடைமுறை வாழ்வினையே சித்தரித்திருக்கிறது. எனினும் இது முழுக்க முழுக்கப் புனைவென்றும் உறுதியாகத் தெரிகிறது. இதுவே மாய யதார்த்தவாத த்தின் வெற்றி.
தமிழாக்கம் வாசிக்க, மலைகள்.காம். மலைகள் இணைய இதழ் ஜனவரி 03.01.2019http://malaigal.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E…/
ஆங்கிலப் பிரதி வாசிக்க, : https://blogs.baruch.cuny.edu/…/Gabriel-Garcia-Marquez_Deat…

No comments:

Post a Comment