Thursday 22 February 2018

முகநூலில் பதிவிட்ட கவிதை - ஒரு இந்து என்பதாலேயே

ஒரு இந்து என்பதாலேயே
நீங்கள் ஒரு இந்து என்பதாலேயே,
பரமஹம்சரின் ஆன்மீகத்தை,
விவேகானந்தரின் விவேகத்தை,
புத்தனின் கருணைமுகத்தினை
சமணத்தின் தன்னலமறுப்பினை
கிறித்துவின் இரக்கத்தை,
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை
அனைத்துமிணைந்த இந்திய மெய்யறிவுச் சாரத்தை,
மகாத்மாவின் மனிதநேய, அறவேட்கையினை,
தன்னார்வச் சேவையின் உன்னதத்தை,
இராமராஜ்யத்தின் பரிபாலன மாண்பினை,
உலகம் உங்களிடம் எதிர்பார்க்கிறது.
அதனாலேயே, இந்தியப் பரிந்துரையாக
யோகாவை ஏற்றுச் சிறப்பித்தது, ஐநா.
நீங்களோ, இப்போதும்,
ரம்ஜான், தீபாவளி, எரிமேடை, புதைமேடு என
வெறுப்பினை விதைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
பதவியின் மாண்பினை, இயக்கங்கள்
கற்றுக்கொடுப்பதில்லை போலும்!
-- ச.ஆறுமுகம்.  
23.02. 2017 இல் முகநூலில் பதிவிடப்பட்டது.

Monday 19 February 2018

ஸ்ரீதர் ரங்கராஜின் பெண்டதாங் சிறுகதை

ஸ்ரீதர் ரங்கராஜின் பெண்டதாங் சிறுகதை
பிப்ரவரி 2018 அடவி இதழில் ஸ்ரீதர் ரங்கராஜின் பெண்டதாங் (வந்தேறி) சிறுகதையை வாசித்ததும் ஒரு நிறைவு ஏற்பட்டது. இதைப் போன்ற ஒரு நிறைவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிர்மையில் எஸ். ராவின் `எம்பாவாய்` கதை வாசித்து முடித்ததும் ஏற்பட்டது.
படைப்புகள் வாசகனுடன் உரையாட எடுத்துக்கொள்கின்ற கருத்தாக்கத்தின் முக்கியத்துவமே அத்தகைய நிறைவினை ஏற்படுத்துவதை உணரமுடிகிறது.
மலாயாவிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியின் பூங்கா ஒன்றுக்கு காலை நடைக்கென தமிழரான கதைசொல்லியும் ஒரு சீனரும் தினமும் தவறாமல் வருகின்றனர்.சீனருக்கு 70 வயது இருக்கலாம். பூங்காவின் நுழைவாயிலுக்கும் சீனரின் வீட்டுக்கும் ஒரு கி.மீ இருக்கலாம். கைத்தடியும் துணைக்கு ஒரு பெண்ணுமாக வருகிற அந்தச் சீனர் பூங்காவுக்குள் நுழைந்ததும் கைத்தடியை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு நடைக்கென அமைக்கப்பட்டிருக்கும் நீள்வட்டப் பாதையில் நடப்பதும் அங்கிருக்கும் உடற்பயிற்சிக் கருவிகளில் பயிற்சி மேற்கொண்டுவிட்டு சிறிது நேரம் பூங்காவில் அமர்வதும் வழக்கம். கைத்தடியுடன் அந்தப் பெண் அவர் அருகில் உட்காராமல் நீளிருக்கையின் ஒரு ஓரமாக அமர்வாள். கதைசொல்லியும் சீனரும் எப்போதாவது பேசிக்கொள்வதுதானென்றாலும் அவர்களுக்கிடையே நட்பென்று எதுவுமில்லை. இருவருக்கும் நடுவில் பனிப்படலமொன்று இருப்பதாக கதைசொல்லி உணர்கிறார். அதைப் போலவே அந்தச் சீனரும் உணருவாரென கதைசொல்லி நினைக்கிறார். அந்தப் பனிப்படலம் மறைந்து இருவருக்குமிடையில் நட்புணர்வு துளிர்க்கிற சம்பவம் தான் கதை.
தாவரங்கள் மீதான புரிதலே அவர்களுக்கிடையில் நட்புணர்வு மேலிடுவதற்கு அடிப்படையாக அமைகிறது. அந்தப் பெண் இந்தோனேசியப் பழங்குடிப் பெண். அந்தப் பணிப்பெண்ணும் சீனருமாக 50 வகைக்கும் மேற்பட்ட தாவரங்களை வளர்க்கின்றனர். கதைசொல்லி மற்றும் சீனரின் உரையாடலில் வாழ்க்கை நடைமுறைகள் பலவும் பகிர்ந்துகொள்ளப்படுவதுடன் இந்த பூமி தாவரங்களுக்கானதென்றும் தாவரங்கள் மீது தொல்குடியினர் கொண்ட நேசம் தற்போதும் நமக்குத் தேவைப்படுகிறதென்றும் கூறப்படுகிறது.
பெருந்தன்மை மிக்க இரு இரயில் பயணிகள் உலக விஷயங்களைப் பரிமாறிக்கொள்வது போலப் பட்டும் படாமலும் வாதமாக அன்றி, நியாயமெனத் தான் உணர்வதை இயல்பான ஒரு முறையில் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது, அந்த உரையாடலின் வெற்றி.
சீனருக்கும் அந்த இந்தோனேசியப் பெண்ணுக்குமிடையிலான உறவு எத்தகையது? அது வாசகனுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இடைவெளி. கதையின் முடிவில், கதைசொல்லி சீனரின் வீட்டிலிருந்து புறப்படும்போது நாமும் அந்த வீட்டில் தேநீர் அருந்தி விடைபெறுவது போல, அந்த மூவரின் மீதும் நமக்கொரு நேச உணர்வு மேலிடுகிறது.
டேவ் எக்கர்ஸ் எழுதிய Another என்ற அமெரிக்கச் சிறுகதையில் எகிப்துக்குப் பிரமிடுகளைக் காணச் சென்ற அமெரிக்கப்பயணி, குதிரைக்காரனான அரபி, தன்னைக் கொன்றுவிடுவானோவெனச் சந்தேகம் கொள்வார். ஒரு பிரமிடைப் பார்த்து முடிக்கின்ற போது அமெரிக்கப் பயணியின் சந்தேகம் தீர்ந்து இன்னொரு பிரமிடைக் காண உற்சாகமாகக் கிளம்புகிறார்.
சீன எழுத்தாளர் யான் லியாங் கே, இங்கிலாந்து சென்றபோது வழிப்போக்கர்கள் அவரைப் பார்த்த பார்வையில் ஒரு வெறுப்பு இருந்ததாக England and my Clan கதையில் பதிவு செய்கிறார்.
உதயசங்கரின் சகமனிதன் கதையில் ஒரே ஊருக்கு அருகருகே அமர்ந்து செல்லும் பேருந்துப் பயணிகள் இருவர் ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்வதைப் பதிவுசெய்திருப்பார்.
எல்லோருடனும் நட்புகொண்டுவிடுவதொன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. நட்பினைப் பிரதிபலிப்பதிலும் இயலாமைகள் உள்ளன. நாம் நட்புகொள்ளும் சிலரிடமிருந்து அதே அளவுக்கான நட்பு கிடைக்காமலிருப்பதையும் உணர்கிறோம். ஆனால் பரந்த மனத்தோடிருப்பதும் இயற்கையைச் சிதைக்காமல் வாழ்வதும் தேவைப்படுகிறது.
”ஒன்றைக் குறித்த உண்மையான நேசிப்பு உங்களுக்குள் உருவாக நீங்கள் குறிப்பிட்டதொரு வயதைக் கடக்கவேண்டியதாக இருக்கிறது. ஒரு விஷயத்தில் உள்ள உன்னதத்தை உணர்ந்துகொள்ளும் இயல்பு வரவேண்டும். மனிதர்கள் கனியும் காலம் ஒரு தாவரத்தைவிடப் பன்மடங்கு நீண்டது.” என்பது அந்தச் சீனரின் புரிதல்.
வாசிக்கக் கிடைக்கும் பல தமிழ்க் கதைகளும் மிகத் திறமையாக புனையப்படுகின்றன. ஆனாலும் மனித மாண்பினை உயர்த்திப் பிடிக்கின்ற மிகச் சிலவே காலம் கடந்தும் நினைவில் நிற்கின்றன.
பிப்ரவரி, 14, 2018 இல் முகநூலில் பதிவுசெய்யப்பட்டது விருப்பம் 52, பகிர்வு 10 பின்னூட்டம் 4.

Thursday 15 February 2018

ஐஸ்க்ரீம் கனவு - தந்தைமை மகிழ்வு (அபுனைவு 7)

ஐஸ்கிரீம் கனவுகள் - தந்தைமை மகிழ்வு
ஐஸ்கிரீமைத் தமிழ்ப்படுத்த முனைந்தவர்கள் குளிர்பாலேடு, பனிப்பாலேடு, குளிர்களி, பனிக்கூழ், பனிப்பாகு, பனிக்குழை, பனிக்குழைவு, பனிக்குழைமம், என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்கள். மூலப் பொருள் பால் என்பதால் பனிப்பாற் குழைமம் பொருத்தமாகுமென எனக்குத் தோன்றுகிறது. நெல்லை, நாமதாரிப் பிள்ளைமார் திருமணவீடுகளில் திரட்டுப்பால் என்றொரு தித்திப்பு பரிமாறுவார்கள். பாலைச் சுண்டக் காய்ச்சி வெல்லம் சேர்த்துத் திரட்டுவதால் `திரட்டுப்பால்` எனப்படுவது போல் ஐஸ்க்ரீமுக்கு `பனித்திரட்டுப்பால்` இன்னும் பொருத்தமாகலாம். எனினும் வாசிப்புக்கு முன்னுரிமை அளித்து ஐஸ்கிரீம் என்றே குறிப்பிட விழைகிறேன்.
எந்தவொரு நினைவானாலும், அது அப்பா அல்லது அம்மாவிடமிருந்துதான் தொடங்குகிறது. எனது ஐஸ்கிரீம் அப்பாவிடமிருந்து தான் தொடங்கியது.
சென்ற மாதம் கீரிப்பாறையிலிருந்து கோட்டாறு இரயில் நிலையத்துக்கான பேருந்துப் பயணம். அறுபதுகளின் நாகர்கோவில், மனத்துக்குள் வடசேரி, சந்தைமேடு, குளம், குளத்தங்கரைக் குடிசைகள், ஒற்றைச் சவுக்கு மரம், செம்மண் வேர்களுடன் வழுதுணை, வடைமிளகாய், சவுக்குத் தைகள், தென்னங்கன்றுகள் விற்கும் முதியவர், கவிமணி அரங்கம், சில்வர் எம்போரியம், நாகரம்மன் கோயில், பெட்ரோமாக்ஸ் கடை, மூத்திரச் சந்து, மாடியில் முருகண்ணன் தையற்கடை, நாட்டுமருந்துக் கடை, மூலிகை வாசனை, திரவியம் மெடிகல்ஷாப், சுதர்சன் பட்டு, சுந்தரராமசாமி, புளிய மரத்தின் கதை எனத் தளும்பிக்கொண்டிருக்க, வாறன்ஸ் டிரிங்க்ஸ் கண்ணில் பட்டது. இப்போதும் அதே பெயரா! வியப்பும் மகிழ்ச்சியுமாகக் கைகொட்டும் ஒரு குழந்தை உணர்வு; மனம் முழுக்க அப்பா நினைவு ஆலமரமாகப் படர்ந்தது. வேலூர் வந்தபின் இணையத்தில் வாறன்ஸ் எனத் தட்டிப்பார்த்தேன். நாகர்கோவில் வாறன்ஸ் ஐஸ்க்ரீம் என ஒரு வலைத்தளம் இருந்தது.
முதல் பாரம் (First Form) என அழைக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அரைப் பரீட்சையில் ஆங்கிலம் 99, இந்தி 98, கணிதம் 100 மதிப்பெண்கள். மதிப்பெண் அள்ளிக்கொடுத்த ஆசிரியர்கள், நீதிநாயகம், சுமன், வேலாயுதம். மறுநாள் அப்பா நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்பாவிடம் இரண்டே இரண்டு சட்டைகள் மட்டுமே உண்டு. இரண்டும் சந்தனக்கலர். ஆனால், நாகர்கோவிலுக்குச் செல்வதற்கெல்லாம் அப்பா சட்டை அணிவதில்லை. இடுப்புக்கு ஒரு லங்கோடு, அதை மறைக்க ஒரு நூறாம் நம்பர் எட்டுமுழ வேட்டி, தோளில் சலவை மடிப்பு குலையாத ஒரு பச்சைக்கரைத் துண்டு, அவ்வளவுதான். அவருடைய வேட்டி மடியில் தான் அவ்வளவு பணமும் இருக்கும். பர்ஸ் என்பதெல்லாம் கிடையாது. வேப்ப மூட்டில் இறங்கி தாசர் பிரஸ் தாண்டி, க்ரீன் லாண்ட் ஓட்டல் பூந்தொட்டிகளின் பசுமைப் பனை, பெரணிகள் (அதன் எதிர்புறத்திலொரு செவ்விளநீர்த் தெங்கும் விசிறிவாழையும் இருந்ததாக நினைவு) பக்கமாக இடது புறம் திரும்பி அடுத்தாற் போலிருந்த டாஸ் பிரசுக்கு வந்தோம். அப்பா இங்கிலீஷ் டிஷ்னரி என்றார். லிப்கோ ஆங்கில - தமிழ் அகராதி (அன்றைய விலை ரூ.5/-, ஆனால் அது அரைக் கோட்டை நெல்லின் விலையாக இருந்திருக்கும். அந்தக் காலத்தில் எங்களுக்கு அறுத்தடித்து, பூ ஒன்றுக்கு 30, 35 கோட்டை நெல் வந்துகொண்டிருந்தது.) லிப்கோவைப் புரட்டிப் பார்த்த உடனேயே மகிழ்வும் பெருமிதமும் கலந்த ஒரு உணர்வு. காக்கிநிற அட்டைத்தாளில் பொதிந்து சணல் நூலால் கட்டிக் கொடுத்தார், கடைக்காரர். அப்பாவின் கைவிரல் பற்றி நடந்தபோது மணிமேடை 4.00 மணி காட்டியது. வடக்காகச் செல்லும் பாலமோர் சாலையில், எங்கள் வீட்டுக்கருகிலுள்ள பிள்ளையார் கோயில் பூசைவைக்கும் மணி ஐயர், மாஸ்டராக இருந்த கோல்டன் லாட்ஜூக்கு எதிரில் வாறன்ஸ் டிரிங்ஸ். அப்பா அங்கேதான் அழைத்துச் சென்றார்கள்.
நான் அப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். திடமாக உயரமாகப் பளபளப்புடன் இரட்டைக்கதவுகள்; உள்ளே நான்கே மேஜைகள். மேஜைகளில் பூங்கொத்துகள்; வாடிக்கையாளர்கள் யாருமே இல்லை. உரிமையாளர், பரிமாறுபவர் எல்லாம் ஒருவரே போலத் தானிருந்தது. உரிமையாளர் மேஜையில் உயரமான கண்ணாடிச் சாடிகளில் ஏதேதோ நிறங்களில் பெயர் தெரியாத தின்பண்டங்கள் அழகழகாக அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த மேஜைக்கு நேர் எதிரிலிருந்த மேஜையில் உட்கார்ந்தோம்.
கடைக்காரரிடம் அப்பா ஃப்ரூட் சாலட் என்றார்கள். கால் முளைத்த இரண்டு கண்ணாடிக் கிண்ணங்களில் சிறுசிறு அழகுச் சதுரங்களாக அரிந்த பழங்கள். கருந்திராட்சை ஒன்றிரண்டு சிவந்த வாயுடன் உருண்டையாகக் கிடந்தது. உரித்த ஆரஞ்சுச் சுளை பாதி பாதியாக ஒன்றிரண்டு தெரிந்தது. பிருத்திச் சக்கையின் நிறமும் மணமும் நாவுக்குப் புரிந்தது. உமிழ்நீர் மற்றும் இரைப்பைச் சுரப்பிகள் வேகம்பெற்றன. வேறு பழங்களின் பெயர்களெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் வாழைப்பழம் இல்லை. அதன் மேலாகவே பாலேட்டு நிறத்தில் பிருபிருத்த தோற்றத்தில் ஒரு உருண்டை. அதன் மேற்புறத்தில் பளபளக்கும் செஞ்சிவப்பில் சிறிதாக ஒரு கழச்சி. அது ஏதோ ஒரு பழம். அந்த வெண்ணிற உருண்டை வெனிலா ஐஸ்க்ரீம் என்றும் அந்தச் செஞ்சிவப்புக் கழச்சி, செர்ரி என்றும் பிற்பாடு தெரிந்துகொண்டேன். எடுத்து உண்ணுவதற்கு அழகான ஒரு கண்ணாடிக் கரண்டி ஐஸ்க்ரீமை மட்டும் கரண்டியால் சிறிது எடுத்து வாயில் போட்ட அப்பா, மீதியைப் பழத்துண்டுகளோடு சேர்த்துக் கலக்கத் தொடங்கினார்.
நான் செர்ரியை எடுத்து முதலில் வாயில் போட்டு உதப்பிப் பின்னர் மெல்லக் கடித்து இரண்டாக்கிச் சுவைத்துச் சுவைத்து விழுங்கிவிட்டு ஐஸ்க்ரீமில் ஒரு கரண்டியெடுத்து வாயில் போட்டு அப்படியே வைத்திருந்தேன். அப்பா அதற்குள் ஐஸ்க்ரீமையும் பழத்துண்டுகளையும் ஒன்றாகக் கலந்து உண்ணத் தொடங்கிவிட்டார். எனக்கு ஐஸ்க்ரீமை உடைக்க மனமில்லை. ஒரு பழத்துண்டு, ஒரு கரண்டி ஐஸ்க்ரீமென வாயில் போட்டு மென்று மென்று அனுபவித்துக்கொண்டிருந்தேன். நான் பாதி முடிப்பதற்குள் அப்பா சாப்பிட்டு முடித்து கடைசியாக செர்ரியை எடுத்து வாய்க்குள் ஒதுக்கிக்கொண்டார்.
நான் சாப்பிட்டு முடித்த பின்னும் எழத் தயாராக இல்லை. என்ன என்றார், இன்னொன்று சாப்பிடலாம் என்றேன். ப்ரூட் சாலட் தான் சாப்பிட்டுவிட்டாயே, வேறு ஏதாவது வாங்கிக்கொள் என்றார். கடைக்காரரை வேறு என்ன இருக்கிறது என்றார். நான் இது மாதிரியே வேண்டுமென்றேன். அவர் ஜெல்லி இருக்கிறதென்றார். அப்பா அதிலேயே ஒன்று கொடுக்கச் சொன்னார். பழத்துண்டுகளுக்குப் பதிலாக செம்பவளத் துண்டுகளாகக் கண்ணாடி ஜெல்லி, அதன் மேல் வெனிலாக் கோளம். அதைப் பார்த்துக்கொண்டேயிருக்கத் தோன்றும். அதன் கம்பீரத்தைக் குலைப்பதற்கு மனம் வரவேயில்லை. பார்ப்பதற்காகவா வாங்கியிருக்கிறாய், சாப்பிடு சீக்கிரம், பஸ்சுக்குப் போகணுமில்லையா, என்றார் அப்பா. நான் சாப்பிடத் தொடங்கினேன். சுவை அதிகத் தித்திப்பு. அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதன் பிறகு நான் ஜெல்லி வாங்கிச் சாப்பிட்டதாக நினைவேயில்லை. பிறகு அப்பாவும் நானுமாக அங்கே போன நாட்களிலெல்லாம் ப்ரூட் சாலட் தான். நான் மட்டும் அதைத் தொடர்ந்து ரோஸ் மில்க், ஆரஞ்சுச் சாறு, எலுமிச்சம்பழச் சாறு என ஏதாவது ஒரு பானம் அருந்துவது வழக்கமானது. அப்பா எப்போதுமே ஒரு ப்ரூட் சாலட் மட்டுந்தான். அதோடு நிறுத்திக்கொள்வார். அவர் விதம் விதமாகச் சாப்பிட விரும்புவார். ஆனால் எதுவானாலும் அளவோடுதான். வீட்டில் மாலையில் சிலநாட்களில் கடுங்காப்பி சாப்பிடுவதுண்டு. வெளியில் என்றால், நுங்கு சர்பத் தவிர வேறு பானவகைகள் எதுவும் குடிப்பதில்லை. சோடா, கலர், தேயிலை, பால், மோர், நீத்தண்ணி எதுவுமே அவருக்குத் தேவையில்லை. பச்சத்தண்ணீர் தான். குறைந்தது ஒரு லிட்டர் தேவைப்படும். அதற்கென்று ஈயம் பூசிய பித்தளைப் போணி ஒன்று இருக்கும். அதில் தான் கொடுக்கவேண்டும்.
மணிமேடைப் பக்கம் நாங்கள் வருவதற்கு ஏதாவது ஒரு வேலையிருந்தது. பிக்சர் பாலஸ் திரையரங்கம் இருந்தது. அதில் அப்பாவுக்குப் பிடித்த படங்கள் ஒன்றிரண்டு வரும். அதை ஒட்டிய காலி இடத்தில்தான் பாபநாசம் செல்லும் பயோனியர் பேருந்துகள் நிறுத்துமிடம் இருந்தது. பாலசரசுவதி, டி.எம்.பி.எஸ் பேருந்துகள் மணிமேடைக்கு எதிர்த்தாற் போல் டி.எஸ்.பி. அலுவலகம் செல்லும் சாலையில் நிற்கும். பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பென், பென்சில், ஜியோமெட்ரி பாக்ஸ் வாங்க டாஸ் பிரசுக்கோ, தாசர் பிரசுக்கோ, ஜெயகுமாரி ஸ்டோர்ஸூக்கோ வரவேண்டியிருந்தது. அப்பாவும் நானுமாக அந்தப் பக்கம் வந்த நாட்களில் எல்லாம் அப்பா என்னை வாறன்ஸ் டிரிங்ஸ் கடைக்கு அழைத்துச் செல்லாமலிருந்ததில்லை.
66ல் கோணம் பாலிடெக்னிக்கில் சேர்ந்த பிறகு எனது தனி ராஜ்யம். நண்பர்களுடன் உணவுவிடுதிகள், திரையரங்குகள் என மூன்று வருடங்கள் அலைந்து திரிந்தாலும் வாறன்ஸ் டிரிங்க்ஸ்க்குப் போன நினைவுகள் இல்லை.
அதைத் தொடர்ந்த ஆண்டுகளிலும் அம்பை, சிங்கையெனப் பயணங்களும் சிறுசிறு வசிப்பிட மாற்றங்கள் நிகழ்ந்ததென்றாலும் ஐஸ்க்ரீம் நினைவு எதுவுமில்லை. ஐஸ்க்ரீம் சுவைக்கும் எண்ணமே எழுந்ததில்லை. 72 ஜனவரியில் அப்பா மரணம். எனது ஜாகை பவானி சாகர், காரியாபட்டி, முஷ்டக்குறிச்சி, குலசேகரம், மதுரை, கம்பம் என மாறிக்கொண்டேயிருந்தது. 80ல் வேலூர் வந்தபின் இடமாற்றம் எதுவுமில்லை. வேலூருக்கு வரும்போது கடுமையான மஞ்சள் காமாலை குணமான ஒரு வாரத்தில், எவ்வளவு அதிகம் பழச்சாறு அருந்த முடியுமோ அவ்வளவுக்கு அருந்தும்படியான மருத்துவ ஆலோசனையோடு தான் வந்தேன். அப்போது சி.எம்.சி. எதிரிலுள்ள கடைகள் ஒன்றில் சாத்துக்குடியை மட்டும் தனியாகச் சாறுபிழிந்து கொடுப்பதைக் கண்டு, ஒரு மாதம் வரையிலும் சுசிலில் காலை உணவு முடித்ததும் அந்தக் கடையில் ப்ளெயின் சாத்துக்குடி ஜூஸ் (மூன்று பழங்கள்) குடிப்பது வழக்கமாயிருந்தது. அந்த நேரத்தில் தான் அலுவலக நண்பர் யாரோ நாவல்பழம் ஜூஸ் நல்லதெனச் சொல்லி பேருந்து நிலைய சிம்லா ஜூஸ் பாருக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வருகிறது. வயிற்று வலி, பொருமல், செரிமானமின்மை, சிறு வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு இலவச மருந்தென ஒரு சிறிய சுண்டைக்காயளவுக்கு மருந்து கொடுப்பார்கள். அதை வாங்கி நாக்கில் தடவிக்கொண்டு நாவல் பழ ஜூசென்று பழச்சாறு கொடுப்பார்கள். பழச் சாறுக்கு மட்டும் விலை. நான் அந்த மருந்து சாப்பிட்டதில்லை. ஜூஸ் குடித்துப் பார்த்தேன். நிச்சயமாக அது நாவல் பழ ஜூஸ் இல்லை. கருஞ்சிவப்பு ஊதா நிறத்திலிருப்பதால் அந்தப் பெயர் வைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. சிம்லாவில் மீண்டும் ப்ரூட் சாலட் தொற்றிக்கொண்டது. ப்ரூட் சாலட் இல்லையெனில் வெனிலா எனது தேர்வாக இருந்தது. வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சாப்பிடுவதுதான். ப்ரூட் சாலட், ஐஸ்க்ரீம் சாப்பிடும் போதெல்லாம் அப்பா நினைவு மனத்துக்குள் ஓடும்.
85 இல் சி.எம்.சி எதிரில் ஒரு சிம்லா ஜூஸ் கடை புதிதாகத் தொடங்கி ஒரு ஐந்து வருடம் போலச் சிறப்பாக இயங்கியது. அங்கே ஸ்பெஷல் ப்ரூட் சாலட் கிடைத்தது. மிகவும் அற்புதச் சுவைகொண்ட பழக்கலவை, மிகச் சிறு அளவில் ரோஸ் எஸ்ஸென்ஸ் வழிகிற வெனிலா கோளம், செர்ரி மகுடத்துடன் நம் முன் வைத்துப் பின் கண்ணில் தெரிகிற மாதிரி, முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற கொட்டைப் பருப்புகளின் பொடிக்கலவையைத் தூவி, கரண்டியை வைப்பார்கள். அந்த ப்ரூட் சாலடைச் சுவைக்குமாறு பரிந்துரைத்து நண்பர்கள், மேலதிகாரிகள் எனச் சிலரை அழைத்துக்கொண்டு போய்ச் சிறு விருந்தளித்து மகிழ்ந்துமிருக்கிறேன். ப்ரூட் சாலடைத் தொடர்ந்து சப்போட்டா, அன்னாசி, அல்லது மாதுளைச் சாறு அருந்துவது நிறைவாக இருக்கும். சென்னை உயர்நீதி மன்றம் செல்கையில், காலை உணவாக, பிராட்வே சரவணபவனில் ஒரு பிளேட் இட்லி, சாம்பார் வடை அல்லது ஆப்பம் சாப்பிட்டு ஒரு காரட் ஜூஸ் அல்லது ப்ளெயின் மாதுளை ஜூஸ் அருந்தி நிறைவுசெய்துவிட்டு உயர்நீதிமன்றத்துக்குள் நுழைந்துவிட்டால் மதியம் இரண்டு மணி வரையில் சோர்வில்லாமல் நீதிமன்ற நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருக்கலாம்.
எனக்குத் திருமணமாகி ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். மனைவி குழந்தைகளுடன் ப்ரூட் சாலடு, பழச்சாறு அருந்தும் மகிழ்ச்சியை விட்டுவிடமுடியுமா? என் மகளும் சிறுவயதில் என்னைப் போலவே இரண்டு கேட்பாள். அதுவும் முதலாவதே இரண்டையும் கொண்டுவந்து வையென்பாள். நாம் சுவைத்து மகிழ்வது ஒரு புறம்; மனைவி, குழந்தைகளைச் சுவைக்கச் செய்து அதைப் பார்த்திருப்பது தனியானதொரு பெருமகிழ்ச்சியல்லவா! என் தந்தை மகிழ்ந்த மகிழ்வினை அப்போதுதான் நானும் உணர்ந்தேன்.
97 இல் சர்க்கரை நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு வகை உணவுகளைத் துறக்க வேண்டியதாயிற்று. அதில் எந்த வருத்தமும் இல்லை. அதற்குப் பதிலாக எந்த வகைப் பழச் சாறு, ஒத்துக்கொள்ளுமோ, அதனைச் சீனி இல்லாமல், ஐஸ் இல்லாமல் ப்ளெயினாகச் சுவைத்துக் குடிக்கப் பழகிக்கொண்டேன்.
தர்ப்பூசணி, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, அத்தி, காபூல் அத்தி, ஆஸ்திரேலிய அத்தி, கிவி, பால் மட்டும் சேர்த்து அவகோடா, லிச்சி, டிராகன், ஸ்ட்ரா பெர்ரி உப்பிட்டு, சீரகத்தூள் அல்லது மிளகுத்தூள், பெருங்காயத் தூள் தூவி எலுமிச்சை, தக்காளி, நெல்லி என எத்தனையோ பழங்கள் கிடைக்கின்றன. கிர்ணி என்றும் அழைக்கப்படுகிற முலாம்பழச்(Musk Melon)சாறினை இலேசான ஒரு இஞ்சிக் கோடு மணக்க அருந்திப் பாருங்கள், அற்புதச் சுவை.
வேலூரில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கென சிம்லா, கோவை, மகாராணி மற்றும் பல உணவுவிடுதிகளும் உள்ளன. ஆவின், அமுல், அருண், குவாலிட்டி எனப்பல நிறுவனத் தயாரிப்புகளும் கிடைக்கின்றன. 90களின் பிற்பகுதி வரையிலுங்கூட, தமிழகத்திலேயே கோவை சிந்தாமணிக்கு அடுத்த நிறுவனமாகப் புகழுடன் மிகச்சிறப்பாக இயங்கிய கற்பகம் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டிலும் கோன் ஐஸ்க்ரீம் கிடைத்துவந்தது. பாவிகள், யார் செய்த வேலையோ தெரியவில்லை, அந்த சூப்பர் மார்க்கெட் மண்ணோடு மண்ணாகிப் போனது.
இப்போது எனக்குத் தெரியாத ஏதோதோ புதுப்பதுப் பெயரில் அழகழகான நிறங்களில் ஐஸ்க்ரீம்களை குடும்பப்பொதி(Family Pack)யென மகளும் மருமகனும் வாங்கிவந்து குளிர்பெட்டியில் வைத்து வேண்டும்போது எடுத்துச் சுவைத்து மகிழ்கிறார்கள்.
வேலூரில் ஐஸ்க்ரீம் சுவைத்த மகிழ்வினைப் பிற்காலத்தில் எனது மகன், மகளோ, அவர்கள் மகன் மகள்களோ என்னைப் போல நினைவுகளில் வாழும் முதுமையில் எழுதிப் பகிர்ந்து மகிழ்வார்களோ என்னவோ.
நீங்கள் காட்பாடி வருவதாகயிருந்தால் குடியாத்தம் சாலையிலுள்ள நாகராஜன் பழச்சாறகத்தைத் தவறவிடாதீர்கள். அங்கே ஐஸ்க்ரீம் கிடையாது. முதல் தரப் பழங்கள் மற்றும் பழச்சாறும் மட்டுமே.

தென்கொரியச் சிறுகதை - மலையை விட்டுச் செல்லுதல் Leaving the mountains

மலையை விட்டுச் செல்லுதல் (Leaving the Mountains) கொரியமொழி : கிம் சியாங் டாங் (KIM SEO`NG – DONG), தென்கொரியா ஆங்கிலம் : ஜான் எம். ஃப்ராங்க்ல் (John M Frankl) / தமிழில் ச. ஆறுமுகம்.


download (10)
எனது முதல் விழிப்புணர்வினை நினைவுகொள்கிறேன்.
ஆம். மலைகளின் நடுவே அந்த ஆழமான பள்ளத்தாக்கு என் நினைவுக்கு வருகிறது. அது இளவேனிற்காலம்; அடர்ந்து வளர்ந்திருந்த மரஞ்செடிகொடிகள் அனைத்துமே ஆழ்ந்த பச்சைநிறத்தை வாரிப் பூசிக்கொண்டிருந்தன. வியப்பின் ஆழப்பெருமூச்சு ஒன்றினை வெளிப்படுத்தி, என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில், பரந்த வானத்தைப் பயமுறுத்துவது போல் ஓங்கி வளர்ந்திருந்த அந்த ஓக் மரத்தின் அடிப்பாகத்தை என் இருகரங்களாலும் பற்றிக்கொண்டேன்.
அனைத்தும் நெடுங்காலமாக அப்படிக்கப்படியே இருந்துவருவதான உணர்வு. மலையின் மிக ஆழமான பள்ளத்தாக்கு, பாய்ந்தோடும் கானாறுகள், வண்ண வண்ணமாக, அனைத்து வண்ணங்களிலும் தலைவிரித்து, வேனில் சுமக்கும் மரஞ்செடிகொடிகள், எங்கெங்குமாகக் கேட்கும் வினோதப் பறவையொலிகள்,
மண்ணுலகத்திலிருந்து வேறு எவருமே இல்லை; ஆனாலும் என் இதயத்திற்குள் புத்தரைக் காணமுடியவில்லை. நிலைமையை இன்னும் கடினமாக்கிக் கதிரும் மறைந்துபோக, மீண்டுமொரு இரவு வந்தேவிட்டது; நாளின் அந்த நேரத்தைக் கழிப்பதில் எனக்குக் குறிப்பிட்டதொரு கடும் பிரச்னை இருந்தது. மலைக்கென்ன, அது என்றென்றைக்கும் அமைதிப்புன்னகை வீசும், ஆனால் எனக்குத் தெரியும், அங்கேயே நின்று, அலைந்துதிரியும் ஊசலாட்டத்திலேயே நான் மற்றுமொரு நாளினை வீணாக்கிவிட்டேன். என் இளமைப்பருவத்திலேயே, நான் ஒருநாள் திடீரெனப் போதிமனத்தின் அழகொளியைப் பெறுவேனெனச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்;
அதனாலேயே துறவியாவதற்காக மலைகளுக்குள் வந்துவிட்டேன். அதிலும் குறிப்பிட்ட இந்த நாளில், நான் எவ்வளவுதான் முயற்சியெடுத்து எவ்வளவு உயரம் ஏறினாலும் மலையின் உச்சி கண்ணுக்குத் தென்படவேயில்லை. அது தென்படாமலிருப்பது என்னை மேலும் மேலும் முயற்சியெடுத்து இன்னும் உயரத்திற்கு ஏறச் செய்யவேண்டியதுதான் நியாயமென்றாலும், மற்றுமொரு பகல்பொழுது வீணாகக் கழிந்ததில், என்னால் செய்யக்கூடியதெல்லாம் இம்மண்ணுலகப் பாவங்களால் கறைபடிந்த இந்த உடலத்தைக் கீழே சாய்க்க ஒரு இடத்தைத் தேடுவதுதான்.
நான் குந்தியமர்ந்து, நாடிக்குத் தாங்கலாகக் கால் மூட்டுகளைக் கொடுத்தேன். பின்பு நான் `குவான் சேயும் போசால்` (கருணை மிக்க போதிசத்துவரே) என அழைத்துப் பழக்க தோஷத்தில் அவரது புனிதப் பெயரை மீண்டுமொருமுறை உச்சரித்தேன். நான் முழுவதுமாக மனச்சோர்வுற்றிருந்தேன்.
நான் துறவியாக இல்லாதிருந்தால், சாதாரண மனிதன் ஒருவனைப் போல வண்ண ஆடைகளும் மழிக்கப்படாத நீண்ட தலைமுடியுமாக இருந்தால், என்னால் ஒரு சிகரெட் புகைக்கமுடியும் என்பதோடு அறியாமையைப் போல அதன் முனையிலிருந்து எழும் புகைச்சுருள்களில் என் துயரம்படிந்த மனத்தினை ஒரு கணமாவது ஆற்றிக்கொள்ளமுடியும்.
ஆனால், மீன், இறைச்சி, மது மற்றும் புகையிலையை பிளேக் நோயைப் போல விலக்கவேண்டிய புத்தத் துறவியாகிய நான், அங்கே அமைதியாக உட்கார்ந்து அனைத்து புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் பெயர்களை வெறுமனே உச்சரிப்பதில் தான் ஆறுதல் காணமுடியும்.
இருட்டில் அந்தப் பாதையில் ஊர்ந்தாவது சென்றுவிடத்தான் நான் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தேன். அந்த மலைத்தொடரில் எங்கேயோ ஓரிடத்தில் வசிப்பதாகச் சொல்லப்படுகிற மகா குரு ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தேன். அதற்காகவே மலையேறும் நான் அவரது தோற்றத்தைப் பற்றிச் சிறிது கேள்விப்பட்டிருக்கிறேன்.
முதல் பார்வைக்கே, அவரது தடந்தோள் உடலமைப்பு மற்றும் நிமிர்ந்த பெருநடைப் பாவனை காரணமாக, அவர் மலைகளில் தனித்து ஒதுங்கி வசிக்கும் காவித்துறவி போலன்றிப் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட போர்ப்படையினை நடத்தும் தலைமைத்தளபதி போலவே பெரிதும் தோன்றுவார். அப்புறம், அவரது கண்கள் இருக்கவே இருக்கின்றன;
புலியினுடையதைப் போன்ற அவரது கண்களில் தெறிக்கும் நெருப்பொளியினை நோக்கும் எந்த மனிதனானாலும் சரி, தானாகவே தலைகுனிந்து வணங்குவான். அவரது இடியொலிக் குரலின் அதிர்வு சிங்கத்தின் முழக்கத்தை ஒத்து, கேட்பவரின் செவிப்பறையை, வெடிச்சத்தமாகத் துளைத்துக் கிழிக்கும்.
அவரது வயதினைப் பொறுத்தவரையில், சராசரி உலகினரின் கணக்குப்படி அவரது வயது 71. ஆனால், அவர் மிக இளமையிலிருந்தே அவரது முழு வாழ்க்கையினையும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து, பாவக்கறையற்ற அவரது மாமிச உடலினை புத்தர் மற்றும் லாவோஜியின் போதனைகளுக்கே அர்ப்பணித்துள்ளார். அவரது குருவின் போதனைகளின்படி மட்டுமே மனம் மற்றும் உடலினை இயக்குகிறார். இந்த 71 வயதிலுங்கூட அவர் அந்த போதனைகளிலிருந்து ஒரு மயிரளவு அகலம் கூட விலகியதேயில்லை.
யுக, யுகங்களுக்கும் அவரே உண்மையான ஒரு குருவாகத் திகழ்கிறார். அது மட்டுமல்ல. அவர் பெற்றிருக்கிற புத்தொளியறிவு எவ்வளவுக்கு மேம்பட்டதென்றால், இந்த உலகின் அனைத்து வழிமுறைகளும் எல்லையற்ற அண்டப்பெருவெளியின் அனைத்தியக்கக் கொள்கைவிதிகளும் – பிறரால் கணிக்கக்கூட முடியாத, எக்காலத்திற்கும், எல்லா இடம், பொருளுக்கும் பொருந்துவதும் பெரும் புதிர்களாகத் தோற்றமளிப்பவற்றையுங்கூட – அவர் அறிவார்.
ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால், மேன்மைக்குரியதும் அழகானதுமான அவரது பெயரினை ஒருவர் கேள்விப்படுவதென்பது எப்போதுமே வதந்தி வடிவத்திலேயேயிருக்கிறது. அவரது பேரழகுத் தோற்றத்தைக் கண்ணால் கண்டவரோ அல்லது பிரவாகமாய்ப் பொங்கிவரும் அவரது உரைகளைத் தம் காதால் கேட்டவர்களோ யாருமே இல்லை.
அதுபோலவே அவரது கருணைமிக்க வழிகாட்டுதலில் புத்தொளியறிவினைப் பெற்றவர்கள் எவருமேயில்லை. ஆனாலும், வினோதம் பாருங்கள், அவரது தோற்றம் குறித்த கதைகளும் அவரது போதனைகளும் மலைகளிலிருந்தும் இறங்கி, மக்களை வந்தடைந்துள்ளதுடன் மண்ணுலகின் பாவங்கள் நிறைந்த தெருக்களில் அவற்றை எல்லோராலும் கேட்கமுடிகிறது.
அவரது பெயர் `ஒற்றைவிரல்`. அவரொன்றும் அப்படிக் கூப்பிடுமாறு யாரிடமும் வேண்டிக்கொள்ளவில்லை; சொல்லப்போனால் யாராவது அவரிடம் `நல்வழி` பற்றிக் கேட்கும்போது எதுவும் சொல்லாமல் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியதால்தான் அப்படியொரு பெயரைப் பெற்றார். போதாக்குறைக்கு, அவர் ஒரு விரலை வேறு இழந்திருந்தார். அதைப்பற்றி ஒரு கதைகூட இருக்கிறது.
அவர் ஒரு குருவின் வீட்டில் தங்கி, இளம் பயிற்சித் துறவியாகப் பணிவிடைகள் செய்திருந்த போது, வெளியே சென்றிருந்த அவரது குருவைச் சந்தித்து வணக்கம் செலுத்திச் செல்வதற்காக, அலைந்து திரியும் துறவி ஒருவர் வந்திருந்தார். துறவியை வரவேற்ற அவர், என்ன விஷயமாக அவர் வந்திருக்கிறாரென வினவினார். முதிய குருவின் அறிவுரைகளைக் கேட்பதற்காக வெகுதூரம் பயணித்து வந்திருப்பதாக, அவர் தெரிவித்தார்.
குரு எப்போது திரும்பிவருவாரென்று சரியாகச் சொல்வதற்கு எந்த வழியுமில்லையென துறவியிடம் அவர் கூறினார். நேரம் தவறிப் போனதற்கு ஏதோ காரணத்தை முனகிக்கொண்ட துறவி உதட்டைச் சுழித்து, சுச்சுச்சூவென இச்சுக் கொட்டியபோது, அவரது முகம் சோர்விலிருந்து துயரம்மிக்கதாக மாறியது. பயிற்சித்துறவி, விருந்துத் துறவியிடம் ஏன் மிகக் கவலையாகத் தோன்றுகிறீர்களெனக் கேட்க, வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு, குருவிடம் `நல்வழி` குறித்துக் கேட்க வந்ததாக, மிகுந்த துயரத்துடன், கூறினார். பயிற்சித்துறவி, பொங்கிவந்த சிரிப்பினை அடக்க மேற்கொண்ட கடினமுயற்சியில் குடற்காற்று ஒன்று அவர் அறியாமலே பறிந்து வெளியேறியது.
இந்த அலைந்து திரியும் துறவிகள் நாள் தவறாமல் வரிசையில் வந்து அதே கேள்வியைக் கேட்கவும், நாளும் அவரது குரு அமைதியே காத்து ஒற்றைவிரலை உயர்த்திக் காட்டுகிறார். `நல்வழி` குறித்த இந்தக் கேள்விக்கு நூறுமுறையென்றாலும் திடமுடன் பதில்சொல்லத் தேவையானதை பயிற்சித்துறவி அறிவார். அமைதியும் மாட்சிமையும் கொண்ட தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிய, பயிற்சித்துறவி அவர் பார்த்திருந்த புத்தர் சிலைகளின் பத்மாசனத்தில் கால்களை மடக்கி அமர்ந்து, துறவியிடம் `நல்வழி`
எதுவெனக் கேட்குமாறு கூறினார். துறவி வாயடைத்துப் போனாரென்றாலும் பயிற்சித்துறவியின் சீர்மைத்திறம் அவரை ஆட்கொண்டது. பற்பல முதுநிலைத்துறவியருக்கு ஒரு இளம் விறகுவெட்டியின் இசைக்குழலொலியில் ஏற்பட்ட திடீர் விழிப்புணர்வினை அல்லது மிருகங்களின் விளையாட்டினை லயித்துப் பார்த்திருக்கும்போது ஐயுறவுகளெல்லாம் அற்றுப்போனதை அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.
`நல்வழி`யைத் தேடி வெகுதூரம் பயணித்து வந்திருந்த அ
வர், பிறரொருவரின் வயதினை வைத்துத் தீர்ப்புகளை உருவாக்கக்கூடாது என்பதை நன்கு அறிவார். தனது முட்டாள்தனத்தை தனக்குத்தானே நொந்துகொண்ட அவர், அவரது காவியுடைகளை நேர்படுத்திச் சீராக்கிக்கொண்டு, இளம் பயிற்சித் துறவியை முதிய குருவாகவே பாவித்து, அவரது முகத்தை ஏறிட்டு நோக்கி, மும்முறை வணக்கத்தினைப் பவ்யமாகச் செலுத்தி,
`நல்வழி எது?` வெனப் பணிந்துகேட்டார். பத்மாசனத்தில் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்த இளம் பயிற்சித்துறவி, வெறுமனே ஒற்றை விரலை உயர்த்திக்காட்ட, அந்த ஊசலாட்டத் துறவி குழப்பத்தில் ஆழ்ந்தாலும், அவருக்கு அங்கிருந்து புறப்படுவதைத் தவிர வேறு வழியில்லாமற்போனது.
முதிய குரு வந்து சிறிதுநேரத்திற்குள்ளாகவே, பயிற்சித்துறவி நிகழ்ந்த கதையை அவரிடம் ஒப்பித்தார். இரு கைகளையும் தட்டி, உரக்கச்சிரித்த குரு, பயிற்சித்துறவியின் முதுகினை மெல்லத் தட்டி, சிங்கக்குருளை ஒன்று என்னிடம் பயிற்சிபெறுவது எனக்குத் தெரியாமற்போயிற்றே, இதை நான் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கவில்லையே, என்றார்.
அதைக்கேட்ட பயிற்சித்துறவி, நான் சரியாகச் செய்தேனாவெனக் கேட்க, குருவோ சிங்கங்கள் சிங்கத்தைத்தான் வாரிசாகப் பெறும், மானையல்ல, என்றார். ஆனால், அதன் பின்னர், ”நீ என் வித்தையைக் கற்றுக்கொண்டால், நான் பூவாவுக்கு என்ன செய்வே”னென முனகினார். நீங்கள் என்ன சொல்கிறீர்களென பயிற்சித்துறவி, குருவைக்கேட்க அதொன்றும் முக்கியமில்லையென்றதோடு, நான்தான் உன்னிடம் `நல்வழி` கேட்க வேண்டுமென்றார்.
நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்களெனப் பயிற்சித்துறவி சொல்ல, குரு மும்முறை தலைவணங்கி, `நல்வழி` எதுவெனக் கேட்டார். உடனேயே பயிற்சித்துறவி கண்களை மூடி, ஒற்றைவிரலை உயர்த்திக்காட்டித் திடீரெனக் கையைப் பெரும் வலியுடன் பின்னுக்கிழுத்தார். குரு அவரது உள்ளங்கையில் மறைத்துவைத்திருந்த குறுங்கத்தியால் அந்த ஒற்றைவிரலை வெட்டியெடுத்திருந்தார்.
வலியில் கத்திக்கதறி, இரத்தம் ஒழுகும் கையை மறுகையால் பிடித்துக்கொண்டு, தர்ம கூடத்தைவிட்டு ஓடிய பயிற்சித்துறவி, குருவின் இடியோசைக்குரலைக் கேட்டதும், நின்று, தலையை மட்டும் திருப்ப, ஒற்றை விரலைத் தூக்கிக் காட்டியவாறு வீற்றிருந்த குருவைக் கண்டார். பயிற்சித்துறவி திடீரென, அங்கேயே சுற்றிச்சுற்றி ஆனந்த நடனமாடத் தொடங்கினார். அந்தக் கணத்தில் அவர் புத்தொளியறிவு பெற்றதாக, கதிர், நிலவு, வானம், விண்மீன், மலை, பூமி, கடலென அண்டப் பெருவெளி அனைத்துமே அந்த ஒற்றை விரலுக்குள் சுற்றியதைப் பயிற்சித்துறவி கண்டதாக, பிற்காலத்தில் கூறிக்கொண்டார்கள்.
கோவில்களிலும், மண்ணுலக வீதிகளிலும் நான் சுற்றியலைந்து, அந்த மகா குரு ஒற்றைவிரலை இழந்த கதையாக, இதைத் தான் கேள்விப்படமுடிந்தது. அதுவும் முழுக்க முழுக்க வதந்தியாக, எவ்வித நிரூபணமும் இல்லாமலிருந்ததால் தான், அவரை நான் நேரில் சந்திக்கத் துடித்தேன். அவரைப்பற்றி உறுதியான எந்த ஒரு தகவலும் இல்லாதநிலைதான், அவரைத் தேடுவதைத் தவிர்க்கமுடியாத ஒரு நிலைக்கு என்னை இட்டுச்சென்றதென்பதை நான் சொல்லித்தானாக வேண்டும். அதன் முடிவில்தான்,
குளிர்காலத் தியானக் கூட்டத்தொடர் நிறைவுபெற்ற உடனேயே, நான் அவரை நாடு முழுவதிலும் அலைந்து திரிந்து தேடத் தொடங்கினேன். மலைகளின் ஆழக்குகைகளிலும் சந்தைக் கூடங்களின் மழிப்பகங்களிலும் அவரைத் தேடினேன். வேசிகள் நிறைந்த விபச்சார விடுதிகளிலும், குண்டர்கள் நடத்திய சூதாட்டக் களங்களிலும், பரபரப்பாளர்கள் நிகழ்த்திய களியாட்டக் கூடங்களிலும் அடிமைகளிலும் அடிமைகள் உழன்ற தொழிற்பட்டறைகளிலும் நான் தேடியலைந்தேன். இம்மண்ணுலகத்தின் அருவருப்பு நிறைந்ததும், மட்டத்திலும் மட்டமானதுமான இருட்டுக் குகைகளுக்குள் எனது நற்பெயர், துறவியாடை மற்றும் தூய உடலினைக் கொண்டலைந்ததற்குக் காரணம்,
அந்த மகா குருவினைச் சந்தித்து `நல்வழி` யினைக் கற்றுக்கொள்ளும் தணிக்கமுடியாத எனது ஆவல்தான். ஆனால், அவர் எங்கு சென்றிருந்தாரென்றோ, எங்கே செல்லக்கூடுமென்றோ எந்தவொரு சிறு யூகத்திற்கும் வழியில்லாமல் செய்திருந்தார். இதோ இங்கிருக்கிறாரெனக் கேள்விப்பட்டு அங்கு செல்வதற்குள் அவரது ஆறு வளையக் கைத்தடியை எடுத்துக்கொண்டு அடையாளமற்ற எங்காவது சென்றுவிடுகிறார்.
இம்மண்ணுலகில் நெடுநாட்களாக, அவரைத் தேடியலைந்த நான், ஒருநாள் கடைசியாக, சிவப்பு அல்லது நீலத்தில் ஏதாவதொரு ஒளிவீசும் அரிக்கன் விளக்குகளுடன் வரிசை வரிசையாக விபச்சாரவீடுகள் அமைந்த தெருவுக்குள் வந்துவிட்டதை உணர்ந்தேன். அந்த வீடுகளின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வேசிகளும் அவர்களின் வாடிக்கையாளர்களும் உடற்பேரின்பத்தை மகிழ்ந்து அனுபவிக்கும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.
தொங்கிக்கொண்டிருந்த அரிக்கன் விளக்கு ஒன்றின் அடர் சிவப்பு வெளிச்சத்தின் நேர்கீழாக, வேசி ஒருத்தி தனிமையில் நின்றிருந்ததைக் கண்டேன். முடிந்த அளவு வேகத்தோடு அவளைக் கடந்துவிடத்தான், நான் முயன்றேன். ஆனால், அவள் என்னை அழைத்துவிட்டாள்.
”அடிகளே, இங்கு வாருங்கள்”.
அவள் அருகில் சென்றதும்தான், அம்மைத்தழும்புகள் நிறைந்த அவளது முகத்தையும் பன்றியைப் போல் சப்பையான மூக்கினையும் கண்டேன் – நான் அதுவரைப் பார்த்திருந்ததிலேயே மிகமிக அருவருப்பான ஒரு பெண் அவள்தான். அந்தக் கோரத் தோற்றத்தினால்தான் வாடிக்கையாளர் எவரும் கிடைக்காமல், இந்தப் பிந்திய இரவிலும் போவோர்வருவோரை அவள் தீனக்குரலில் வீணாக அழைப்பதாகவும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
“நீங்கள் என்னிடமா பேசினீர்கள்?” என நான் கேட்டேன். அவளோ வாடிக்கை பற்றி நான் பேசாததாலோ, என்னவோ என் சட்டைக்கை ஒன்றினைப் பற்றிக்கொண்டாள்.
”என்ன செய்கிறாய்?’’ எனக்கேட்டுக்கொண்டே, அந்தக் கீழ்மகளின் கையைத் தட்டிவிடுவதற்காக எனது ஆடையைப் பிடித்து வெட்டியிழுத்தேன்.
அவள் என்னைப் பார்த்து அடித்தொண்டைக் குரலில், “நீ பார்க்கிற பார்வையிலேயே சொல்லிவிடுவேனே, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறவன் தானென்று, உனக்கு நான் ஏன், என் உடலை அர்ப்பணிப்பாகத் தரக்கூடாதென்றாள்.
நான் வாயடைத்துப்போனெனென்றாலும் சமாளித்து, நீங்கள் ஒரு வேசியாக இருக்கலாம்; ஆனால், அதற்காக இந்த உலகத்தைத் துறந்து, கண்டிப்பான புத்தமதப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் என்னைப் போன்ற துறவியிடம் நீங்கள் இப்படியாக நடந்துகொள்வது எந்த விதத்திலும் ஏற்கத் தக்கதில்லையென்றேன்.
எந்த வேசியும் அப்படிச்செய்யத் துணியாத ஒரு காரியமாக அவள் என்னைப்பார்த்து, இரண்டு கையையும் விரித்து, அய்யய்ய வென வலிப்புக் காட்டினாள்; . பின்னர், ஒற்றைக்கண்ணை அநேகமாக மூடுமளவுக்குச் சுழித்து, என்னைக் குத்திவிடுவது போல் ஒரு முட்டியை மடக்கிக் காட்டினாள். பின்னர் மீண்டும் அவளாகவே பேசினாள்.
“உனக்கு என்னதான் பிரச்சினை? நான் அசிங்கமாக இருக்கலாம், ஆனால் இங்கே சுற்றுவட்டத்தில் யாரானாலும் என்னைப் போல் குறைந்த தொகைக்கு, வரமாட்டார்கள். என்னோடு ஒருமுறை வந்துபார், மெய் மறக்கும் இன்பத்தில், உன் உடம்பு முழுவதும் அப்படியே உருகிப்போய்விடும்; நீ அப்படியே அழியாவுடல் தாவோயிசனைப் போல் நேரடியாக சொர்க்கத்துக்குப் போய்விடுவாய்.” என்றாள்.
”கருணை மிக்க போதிசத்துவரே!”
போதிசத்துவரை அழைத்த வாயாலேயே நான், அந்த வேசியைத் திட்டத் தொடங்கினேன். ஆனால், அவளோ மீண்டும் முன்பு போலவே பசப்புவார்த்தை பேசத்தொடங்கினாள்.
“கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு அதை இலவசமாகவே தருகிறேன். நான் எவ்வளவுதான் கீழ்த்தரமானவளாக இருந்தாலும், `கொடையளித்தல்` என்பதன் மிகச்சிறந்த வடிவத்தை நானுங்கூட அறிவேன். தாகத்திலிருப்பவருக்கு தண்ணீர் தருவதும், பசியோடிருப்பவருக்கு உணவளிப்பதும், நோயுற்றவருக்கு மருந்து கொடுப்பதும் சரியானதாக, இருக்கும்போது, பெண்ணுடலுக்காக ஏங்கித் தவிக்கும் ஒருவருக்கு என் உடலையளிப்பதற்குப் போய் நீங்கள் எதனால் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?” என்றாள்.
புத்தரின் போதனைகளிலிருந்து இந்தத் துண்டு துணுக்குகளை இவள் எப்படித் தெரிந்துகொண்டாளென எனக்குத் தெரியாது. ஆனால், அவற்றை அவள் பேசியவிதம், அவளை அப்படியே அறைந்து நசுக்கிவிட வேண்டுமென என்னைத் தூண்டியது. என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவளிடம் மிகுந்த மரியாதையோடு பேசத் தொடங்கினேன். “ நீங்கள் சொல்வதில் முழுமையான உண்மையில்லையெனச் சொல்லிவிடமுடியாது தானென்றாலும், `நல்வழி` தேடும் பிக்கு ஒருவரிடம் உடலின்ப ஆசை பற்றிப் பேசுவது, முழுக்கமுழுக்கப் பண்பாடற்ற செயல்.” என்றேன்.
”நாக்கால் உதடுகளைத் தடவிக்கொள்ளும் ஒருவரிடம் நான் பசியைக் காண்பது போல், உன்னிடம் நான் காண்பது, ஒரு பாழடைந்த கோவிலின் அழிவுகளைத்தான். பத்து வருட வேசித்தொழிலில் எனக்கு மிஞ்சியது என் புழை விரிந்தகன்றதும், மனிதர்களை முகம் பார்த்தறியும் திறமையை நான் பெற்றதும்தான். நீ மட்டும் பொம்பளைப்பசியோடில்லையென்றால் இந்த இரவுநேரத்தில் வேசிவீடுகளைச் சுற்றிக்கொண்டிருக்கமாட்டாய்.” என்றாள்.
‘ஓ` நான்! – துறவி, அவனது மலையைவிட்டுக் கீழிறங்கினால் இப்படியான நிந்தனைக்குத்தான் ஆளாகவேண்டும். நான் மகாகுரு ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் …”
”மகாகுரு என்றா சொன்னீர்கள்?”
“ஆமாம், அவரை உங்களுக்குத் தெரியுமா?”
“என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நான் உடலை விற்பதனாலேயே உங்கள் மகாகுருவைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதென நினைக்கிறாயா?” அந்த வேசி எள்ளிநகைத்து, அவள் ஆடையைத் திரைத்து மேலேற்றிக்கொண்டே, இருட்டுக்குள் செல்லவிருந்தாள். இப்போது நான் அவள் கையைப்பற்றி இழுக்கவேண்டியதாயிற்று.
“நான் தவறு செய்துவிட்டேன், இல்லை, எனக்கு வேண்டியது அதுவல்ல …. அதாவது நான் சொல்லவருவது, என் மீது கோபப்படாதீர்கள் அல்லது வேறெப்படியும் குறைப்படாதீர்கள், ஆனால் …….., நல்லது, எனக்குத் தெரிய வேண்டியது, நான் சொல்கிற மனிதரைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா என்பதைத்தான். அதாவது அவரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”
திரைத்த ஆடையை அப்படியே கீழே இறக்கிவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். “ஆமாம், அவரைப் பார்த்திருக்கிறேன்தான். ஏன், நேற்று இரவுகூட அவர் இங்குதான் இருந்தார். இன்றைய இரவுக்கும் கூட மீண்டும் வருவாரென்றுதான் நினைக்கிறேன்.”
‘’நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவரைப்போன்ற மனிதர் ஒருவர் இந்த மாதிரி ஆசைகளோடு ….. “ நான் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு, சட்டென்று என் கேள்வி முறையை மாற்றிக்கொண்டேன்.
“நீங்கள் சொல்வது உண்மையென்றால், தயவுசெய்து எனக்கு அவரைப்பற்றி எனக்குச் சொல்லுங்கள்.”
அவளது கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; கடுமையான நடுக்கம்கொண்ட குரலில் பேசத் தொடங்கினாள். “அவர் அடிமட்ட மக்களின் நண்பர். இனியும் உயிர் வாழ்வது முடியாததென்றும் இந்த உலகம் தாங்கமுடியாத அளவுக்கு அருவருப்பானதென்றும் நாங்கள் உணர்கின்ற தருணங்களில் எப்போதுமே மிகச்சரியாக, அவர் வருகிறார்;
ஆனால் உங்களைப் போல பெரிய பெரிய சிக்கல்நிறைந்த வார்த்தைகளில் பேசியதேயில்லை. ஒருமுறை நான், சிபிலிஸ் பெண்குறிநோய் வந்து, படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட முடியாமல் கிடந்தபோது, என் ஆடைகளை அவர்தான் அலசித் துவைத்துக் கொடுத்தார். அது மட்டுமல்ல. ஒருமுறை எனது தோழி சாம்-வெல் தெரியாத்தனமாக காவல்துறை காவலர் ஒருவரை, தொழிலுக்காகக் கையைப் பிடித்திழுக்கப்போய், காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று, அவள் பின்புறம் முழுதும் இரத்தக்காடாகுமாறு அடித்துத் துவைத்துவிட்டார்கள்; அப்போதும், அவர்தான் வந்து அவளை மீட்டுவந்தார். அவரெல்லாம் …..”
முடிவேயில்லாமல், பேசிக்கொண்டேபோன அவள் ஒருகட்டத்தில் உணர்வற்றுப்போனதுபோல் உளறத்தொடங்கியதும், நான் அவள் கையைப் பிடித்து உலுக்கி நிறுத்தவேண்டியதாயிற்று. ”நீங்கள் உண்மையிலேயே அவரைப் பார்த்திருந்தால், அவர் எப்படியிருப்பாரென்று சொல்லுங்கள்.”
முன்பு போல் கண்களை மூடியவாறே அவள் பேசத் தொடங்கினாள். ‘அவர் நம் எல்லோரையும் போல்தான் இருக்கிறார். அவரது முகம் அழகற்றது. முடிச்சுமுடிச்சான அவரது கைகள் வெயிலில் கறுத்திருக்கும்.
ஆனால், அவர் நாங்கள் புரிந்துகொள்ளமுடியாத கடின வார்த்தைகளை ஒருபோதும் பேசியதேயில்லை.” பெருங்கஷ்டம். முட்டாள்தனமாக அவள் பேசியதிலிருந்து, எனக்கு நன்றாகப் புரிந்தது, அவள் புத்திகெட்டுப்போன ஒரு பைத்தியமென்று. ‘’ஓ, இது பெருங்கஷ்டம், நான் மகாகுருவைக் கண்டுபிடித்த மாதிரித்தான்,” என எனக்குள்ளாகவே முனகிப்பெருமூச்சுவிட்டுத் திரும்பத் தொடங்கினேன்.
ஆனால் அவள் மீண்டும் என் சட்டைக்கையைப் பற்றிக்கொண்டு, என்னைப் போகவிட மறுத்தாள். “என்ன தப்பாகிவிட்டது? நீ பணம் எதுவும் தரவேண்டாமென்று சொல்லிவிட்டேனே! நீ இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு, முகத்தை மறைத்து,
உன் பெயரைக் காப்பாற்றியிருக்கிறாய், போதும், வா, இரவை அனுபவித்துவிடுவோம்.” என்றாள். “என்னைப் போகவிடு! கீழ்த்தரப் பிறவி, விபச்சாரி, நீ, ஒரு புனிதத் துறவியின் ஆடைமீது கைவைக்கிற அளவுக்கு உனக்கு துணிச்சலா?” என்று உண்மையிலேயே கோபத்தில் பொங்கிய நான் கத்திக் கூச்சலிடத் தொடங்கினேன்.
ஆனால் அந்தக் காமப்பிசாசு என்னை விடாதது மட்டுமில்லாமல், அவளது ஒரு கையால் என் இடுப்பைச் சுற்றிப்பிடித்துக்கொண்டு, மறுகையால் என் தொடைகளுக்கிடையே வருடத் தொடங்கினாள். ‘இப்ப என்னை விடப்போகிறாயா, இல்லையா?. தேவடியா நீ, எவ்வளவு கொழுப்புடீ, உனக்கு ….? கருணைமிக்க போதிசத்துவரே. பயிற்சியை அவமதிப்பவர் எல்லாம் கடைசியில் இறந்து மதக்குற்றம் புரிந்தவர்களைப் போல நரகத்துக்குத் தான் போகவேண்டும்.” என் பலம் முழுவதையும் உபயோகித்து அவளை உதறித் தள்ள முயன்றதில், நான் மல்லாந்து விழ,
அழுக்குப் படிந்த என் உள்ளாடைகள் விலகித் தெரியக் கிடக்கவேண்டியதாயிற்று. உடனேயே எம்பிக்குதித்த அவள், என் கழுத்தில் கிடந்த பிரார்த்தனை மாலையைக் முரட்டுத்தனமாகப் பற்றிக்கொண்டு, உச்சக் குரலில் கத்தத் தொடங்கினாள். “நாய்க்குப் பிறந்தவனே, நீதான் இந்த உலகத்திலேயே பெரிய ஏமாற்றுப் பேர்வழி; நீ துறவி கிடையாது, திருடன்தான். என் நல்ல மனதுக்கு, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறானெனப் பார்த்தாலே தெரிகிற ஒரு துறவி என்று, நல்ல மனதோடு என் உடம்பை உனக்கு அர்ப்பணிக்கிறேனென்று சொன்னால், என்னைத் திட்டுவதோடில்லாமல் அடிக்கவுமா செய்கிறாய்.”
இந்தக் குழப்பத்தில், எல்லா வேசிகளும் வெறும் உள்ளாடைகளும் கையுமாக ஓடிவர, அவர்கள் பின்னாலேயே காற்சட்டைகளை, இடுப்பில் ஏற்றிக்கொண்டு ஓடிவந்த வாடிக்கையாளர்களும் என்னைப் பார்த்து ஹோவெனச் சிரித்தனர். மிகப்பெரிய அவமானத்தில் சிக்கிவிட்டதை உணர்ந்தாலும் வேறுவழி எதுவும் புரியாமல் புத்தர், போதிசத்துவர்களின் பெயரை
உச்சரித்துக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும் நடுவில், அந்தப் பழிகாரி மீண்டும் பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு என் மீதான தாக்குதலைத் தொடர்ந்தாள். “ நாய்க்குக் பொறந்த பயல் நீ; திருடன்களிலேயே மோசமான பெரிய திருடன் நீ, என்னை நரகத்துக்குப் போவாயென்கிறாய். இதுதாண்டா நரகம், இதைவிட மோசமான ஒரு நரகம் எங்கேயாவது இருக்குமென்றா நினைக்கிறாய். இப்ப நான் சொல்றண்டா, புத்தர் வழி என்று சொல்லிக்கொண்டு நடிக்கிற உன் நடை, உடை பாவனையால்,
ஒற்றை விரலைக்கூட உன்னால் அசைக்க முடியாது, அடுத்தவன் சாப்பாட்டைத் தாண்டா நீ திருடித் தின்கிறாய், நீ செத்து சொர்க்கம் போவாய், எங்கள் உடம்பையே வித்து, எங்கள் சாப்பாட்டை நாங்களே தேடிக்கொள்கிற நாங்கள் நரகத்துக்குப் போவோமா?” என் கழுத்து மாலை திடீரென அறுந்து மணிகளெல்லாம் சிதறி ஓடின. என் இதயம் வேகவேமாகத் துடித்துக்கொண்டிருந்தது; ஆனால், அவளோ அப்போதும் விடாமல் கத்திக்கொண்டிருந்தாள். “ஓஹோ, அது சரி. நாங்கள் அருவருப்பானவர்கள், கீழிலும் கீழானவர்கள்,
உடம்பை விற்கிற குற்றத்துக்காக, நரகத்துக்குப் போவோம், நல்ல வளர்ப்பும், புத்திசாலியுமான நீ சொர்க்கத்துக்குப் போய் அனுபவிக்கலாமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்,” நல்லவேளை, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, புத்தரின் கருணையை முழுவதுமாகத் தெரிந்த அந்த வயதான பெண்ணுக்குத் தான் நன்றிசொல்ல வேண்டும். அவள் மட்டும் இல்லையென்றால் நான் தப்பி வந்திருக்கவே முடியாது, ஆனால், என்ன, ஒற்றை விரலை நான் கண்டுபிடிக்கமுடியாமல் போனதுடன், வேசி ஒருத்தியிடம் மிகப்பெரிய அவமானத்தைச் சுமக்க
வேண்டியதாயிற்றென்பதால், இனிமேலும் இந்த மண்ணுலகத்தில் நம்மால் அலைந்து திரிவது முடியாததென்று உணர்ந்தேன். ஆனாலும், அதுவுங்கூட, மகா குருவைத் தேடும் எனது ஆர்வத்தைக் கைவிடுவதற்குப் போதுமானதாக இல்லை. அதனால் இந்த மண்ணுலகில் காண்கிற அனைத்துக் கீழான மற்றும் கறைபடிந்த இடங்களிலெல்லாம் அவரைத் தேடும் எனது பெருமுயற்சியைத் தொடர்ந்தேன். ஒவ்வொன்றிலும், அந்த விபச்சார விடுதியில் எனக்கேற்பட்டது போன்ற அவமானத்தையும் ஏமாற்றத்தையுமே சந்தித்தேன்.
உலகின் மிக உன்னதமான `நல்வழி`யைத் தேடுகின்ற ஒரு துறவியாகிய நான், இந்த உலகத்தின் கடுமை நிறைந்த பாழிடங்களிலெல்லாம் நுழைந்து துன்பத்தை மேற்கொள்வதற்கான ஒரே காரணம், மகா குருவான ஒற்றை விரலைச் சந்தித்து `நல்வழி`ப் புத்தொளியறிவினைப் பெற்றேயாக வேண்டுமென்ற தணிக்கமுடியாத தாகத்தினால் தானென்பதைச் சொல்லியேயாகவேண்டும். ஆனால், மாண்புமிக்க அரசவைப் பெண்டிராலும், அரசு அதிகாரிகளாலும் கொடையளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைந்துள்ள கோவில்களை விட்டுவிட்டு அவர் ஏன், உலகின் மிகவெறுக்கத்தக்க தீமை நிறைந்த இடங்களில் வாழ்வதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரென்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
ஆம். உண்மையிலேயே இது என்னைப் புதிரில் ஆழ்த்துவதாக இருக்கிறது. ஆனால், அதுபோன்ற இடங்களில்தான் மக்கள் அவரைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். ஆக, என் தேடுதலால், விபச்சார விடுதிகளின் வேசிகளிடமும், சூதாட்டக்கூடங்களின் குண்டர்களிடமும், களியாட்டக் கூடங்களின் எத்தர்களிடமும், இறுதியில், தொழிற்கூடங்களின் அடிமைகளிலும் அடிமைகளிடமும் மிகமிகக் கேவலமான அவமானங்களைச் சந்திக்கவேண்டியதாயிற்று.
அடிமைகள் அரசனுக்காக புதிய களியாட்ட மாளிகை ஒன்றினைக் கட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலரது கழுத்துகளில் மாடுகளைப் போல் நுகம் இருக்க,
வேறுசிலர் வீடுகள் அளவுக்குப் பெரிதாயிருந்த அரவை ஆலைகளை இயக்கிச் சுழற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் எல்லோருமே என் மீது காறித்துப்புவதாக வேலையை நிறுத்தினர். தலைமுறை, தலைமுறைகளாக, அவர்களின் மூதாதைகளும் அவர்களும் கடினமான உடலுழைப்பின் துன்பங்களிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாக மரணம் மட்டுமே உள்ளதென்று அவர்களின் விதியைக் கூறிக் குறைப்பட்டனர். அதைக் கேட்டதும், அவர்கள் மீது கருணை மீதூர, அவர்களுக்காக புத்தரின் அறிவுமொழி ஒன்றினை ”கருணை மிக்க போதிசத்துவரே”
என அறிமுகம் செய்யத் தொடங்கினேன். இப்பிறவியில் நீங்கள் படும் கஷ்டங்களுக்கெல்லாம் இதற்கு முந்தைய பிறவியில் நீங்கள் செய்த பாவமே காரணம். அதனால் நீங்கள், உங்கள் கர்மவினைகள் அல்லாமல் வேறு யாரையும் அல்லது எதனையும் நிந்திப்பதற்கு எதுவுமில்லை. வெறுப்பும் சீற்றமும் பாவத்தின் விதைகள். அதனால், புத்தரிடம் மனமுருகிப் பிரார்த்தனைசெய்வதில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்; உலகினை வீணாகச் சபிக்க வேண்டாம்……..”
இதைக் கேட்டார்களோ இல்லையோ எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு என்மீது காறித்துப்பத் தொடங்கியதோடு, காகங்களின் கூட்டமொன்று கத்துவது போல் என்னைப் பார்த்துப் பெருங் கூச்சலிட்டனர்.
“ சாப்பாடு, துணிமணி, தங்குமிடம் எதற்கும் கவலைப்படாமல் நல்வழியை மட்டும் தேடி, அல்லது மலக்குவியலையோ அல்லது வேறு ஏதோ ஒரு இழவினைத் தேடும் உன்னால் எங்கள் கஷ்டத்தின் அளவினைப் புரிந்து கொள்ளமுடியாதுதான். சாவின் விளிம்பில் நிற்பவர்களிடம், நியாயமிழந்து பசியில் தவிப்போரிடம், நியாயமிழந்து நோய்ப்பட்டோரிடம்,
நியாயமற்ற முறையில் சிறைக்குள் அகப்பட்டோரிடம் போய், அவர்களின் கஷ்டங்களுக்கெல்லாம் அவர்களின் செய்கைகளே காரணமென்றும் நடப்பினை ஏற்றுக்கொள்ளுமாறும் சொல்கிறாய். எதிர்காலத்தில் அவர்கள் சிறிது நல்ல இடத்தில் பிறக்க விரும்பினால், புத்தரைப் பிரார்த்திக்க வேண்டுமென்கிறாய்;
நீ தான் சரியான ஏமாற்றுப்பேர்வழி என்பது நன்றாகவே தெரிகிறது.” அவர்கள் அப்படியே என்னை விழுங்கிவிடுவது போல் பேசி, வெறித்து நோக்கியதில் எனக்குள் தோன்றியதென்னவென்றால் அவர்கள் கண்களில் வெளிறிய நீலநிற ஒளியொன்று வெளிப்படுவதோடு,
அவர்களின் கழுத்தின் பின்புறம் அந்தக் கனமான நுகங்களின் எடை மட்டும் இல்லாமலிருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள் என்பதுதான். எப்படிப்பார்த்தாலும், இந்த மண்ணுலகம் அறியாமை மற்றும் இரக்கமற்ற பிறவிகளால் நிறைந்திருப்பதோடு, உன்னதமான நல்வழியினைத் தேடுவதற்கு என்னைப் போன்ற ஒரு மனிதனுக்கு உகந்ததாக இல்லாமல் கீழானதாகவும் தீமை விளைவிப்பதாகவும் இருக்கிறது.
நான் எழுந்து நின்றதும், எனது உடம்பின் கனத்தால் என் கால் மூட்டுகள் முனகின. மனித மனத்தைப் பீடிக்கின்ற முடிவற்ற மாயத்தோற்றங்களும் வேதனைகளுமாக அவதிப்பட்ட நான் நெடுநேரம் குத்துக்காலிட்டே உட்கார்ந்திருந்ததில், என் கால்கள் தூக்கத்தில் ஆழ்ந்து, உணர்வினை மறந்து போக, மயக்கக் கிறக்கத்திலிருந்த என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் எங்காவது விழுந்து உறங்கவேண்டுமென்பதுதான். விரைவிலேயே மையிருள் கவிந்து மிகச்சிறிய தூரம் கூட தெரியாமலாகியது. ஆழ வெடிப்புகள்,
குகைகள் மற்றும் பொந்துகள் ஒவ்வொன்றிலிருந்தும் உயிர்ப்பிராணிகளின் தனிமையும் பசியும் நிறைந்த குரல்கள் எழுந்து எங்கும் பரவ, நான் மகா குருவைக் கண்டுபிடிக்க்கப்போவதில்லையென்பது மட்டுமில்லாமல் இந்தக் காட்டிலேயே இறந்து அடர்ந்த மலைகளுக்குள் அலையும் ஆவியாகத் திரியப் போகிறேனென்று நினைத்தேன். அனைத்து போதிசத்துவர்களையும் நடுங்கும் குரலில் அழைத்து, எனது மூட்டையை இறுகக்கட்டி, என் காலணிக் கட்டைகளையும் அவிழ்த்து மீள இறுக்கிக் கட்டினேன். பின்னர், மரக்கிளைகளை ஒதுக்கித் தள்ளிக்கொண்டு, என் பாதையில் முன்னேசெல்லத் தொடங்கினேன்.
அங்கே நான், ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதற்காக விழுந்து எழுந்துகொண்டிருந்தாலும், உண்மையில் இலக்கு ஏதுமின்றித் தான் அலைந்துகொண்டிருந்த போதுதான், நேருக்கு நேராக, என் கண் முன்பாகவே, வெளிச்சத்தின் ஒளிமுனை ஒன்றினைக் கண்டேன். அந்த ஒளியின் அளவிலிருந்து, அது ஒரு வீடாகத்தானிருக்கவேண்டுமென்றும், இவ்வளவு ஆழ்ந்து அடர்ந்த மலைகளுக்குள் ஒரு வீடெனில், அது மகா குரு ஒற்றைவிரலுடையதாகத்தானிருக்குமென்றும் நான் நினைத்தேன். அவ்வளவுதான், நான் இடைவெளியே விடாமல் ஒரே ஓட்டமாக ஓடினேன்.
அது, தங்க வேட்டைக்காரர்களோ அல்லது ஜின்செங் கிழங்கு அகழ்வோரோ மலையில் தங்கியிருந்த காலத்தில் கட்டிய சிறுகுடிசை போலத் தோன்றியது. அதன் முன்பாக வெளிப்புறத்தில் ஊசியிலைத் தேவதாருப் பிசின் விளக்கின் வெளிறிய வெளிச்சத்தில் குந்தி அமர்ந்திருந்த வயதான கிழவன் ஒருவன் பரட்டைத் தலையிலிருந்து பேன் எடுத்து நகங்களுக்கிடையில் வைத்துக் குத்திக் கொண்டிருந்தான். அவனுடைய வற்றி உலர்ந்துபோன உடலையும், கிழிந்த ஆடைகளையும் பீளை நிறைந்து சுருங்கிப்போன கண்களையும் பார்க்கும் போதே, அவன்,
சமூகத்தால் துரத்தப்பட்ட ஒரு பிச்சைக்காரன் தானென்பது தெரிந்தது. மகாகுருவைச் சந்திக்கப்போகிறோமென நினைத்த நேரத்தில் இது மாதிரியான ஒரு பிண்டத்தைப் பார்ப்பது தாங்க வியலாததாயிருந்தது. தியானத்திற்காகப் படுக்கலாமென நினைத்தபோது, இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே, அந்த ஆளிடம் கேட்டுப் பார்க்கலாமேயென நினைத்தேன்.
‘’ஐயா, பெரியவரே, ஒற்றை விரல் என்ற பெயருள்ள மகா குரு ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” ஆனால், அந்தக் கிழவன், காது கேட்காதவர் போலப் பதில் எதுவும் சொல்லாமல் பேன் குத்துவதே கண்ணாக இருந்தான். அவன் பேன்களை நசுக்கும் போது, பட் பட்டென வெடித்த சப்தம் வித்தியாசமாக இருந்தது. ”எனக்கு நன்கு தெரிந்தவராகத் தான் இருப்பார். மிக உன்னதமான ஒரு மகா குருவைப் பற்றி, நீ என்னென்னவெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?” இந்தக் கிழவனிடம் எதுவும் பேசக் கூடாதென்று தீர்மானித்துவிட்டேன். பின், பழக்கத்தினால், தியானத்திற்குப் படுக்கும் முன் புத்த சூத்திரம் ஒன்றை உச்சரிக்கத் தொடங்கினேன். ‘’சர்ஃப் சுரி மகாசுரி சுசுரி சபஹா ஒபங்கனேயேஏ
அன்விஜயேஷின்ஜிரியான்…..” ‘’வாயை மூடுறியா, நான் தூங்கவேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், மனசுக்குள்ளேயே செய்துகொள். சத்தமாகப் பிரார்த்தனை செய்து அடுத்தவன் அமைதியைக் கெடுக்கவேண்டுமென்று சட்டமா இருக்கிறது?’’ இதைக் கேட்டதும் நான் கண்களைத் திறந்தேன்; ஆனால், அந்தக் கிழவன் அதற்கு முன்பாகவே விளக்கை அணைத்துவிட்டான்; அவன் குறட்டையைத் தான் நான் கேட்க முடிந்தது. அந்தக் காலம் முழுவதுமாக மண்ணுலகில் அலைந்து முழுவதுமாகக் களைத்துப் போன நானும், குறிப்பாகப் பிந்திய அந்தக் காலைவேளை வரையில் கூடத் தூங்கியிருக்கிறேன்.
நான் கண்விழித்த போது வெயில் என் தலைக்கு மேலாகவே வந்திருந்தது. அந்தக் கிழவனை எங்கும் காணவில்லை. அரிசியும் பார்லியும் கலந்து அரைத்த மாவை என் மூட்டையிலிருந்து எடுத்துப் பசியை அடக்கிவிட்டு காலணிக்கட்டைகளை இறுகக் கட்டிக்கொண்டு, கனத்த இதயத்தோடு என் முன்னால் நீண்டுகிடந்த வரிசை வரிசையான மலைத் தொடர்களை ஏறிட்டு நோக்கிப் பெருமூச்செறிந்தேன்.
மற்றொரு நாளும் வந்து போய்விட்டது. இப்போது நான் எங்கே போகவேண்டும்? மகாகுருவைச் சந்திக்க எங்கு செல்லவேண்டும்? எனக்குத் தெரியவில்லை; ஆனால் நகர்ந்துகொண்டேயிருக்கவேண்டும். பெரும் பாறை ஒன்றினை நெஞ்சுக்குள் வைத்து அழுத்தியது போன்ற கனத்த இதயத்துடன் நான் வேகமெடுத்து நடக்கத் தொடங்கும்போது, திடீரென்று யாரோ என்னைக் கூப்பிடுவது போன்ற சப்தத்தைக் கேட்டேன்.
“ஓ, மாபெரும் ஆசிரியரே, மாபெரும் ஆசிரியரே,” நான் திசையை மாற்றவில்லை; ஆனாலும் என் தலை மட்டும் திரும்பிய போது அந்தக் கிழவன் அங்கிருந்தான். எதனாலேயோ, அவன் இனிமையாகவென்று கூடச் சொல்லலாம், புன்னகைத்தான். “ஆக, நீ ஒரு `உண்மையான மகா குரு`வைத் தேடிக்கொண்டிருக்கிறாய், ஹூம்? நான் வாயடைத்துப் போய் தலையை மட்டும் ஆட்டினேன். கிழவன் ஏளனமாக வெடித்துச் சிரித்தான். பின்னர் என்னைப் பரிதாபத்திற்குரிய ஜீவனைப் போலப் பார்த்து, என் தோளில் தட்டி, “ முட்டாளே! ஒரு உண்மையான மகா குருவைத் தேடுகிறேனென்று சொல்கிறாய், இல்லையா?” “அப்படித்தான்.” நானும் ஏளனமாகப் பதில் சொன்னதும் கிழவன் ஏமாற்றத்தில் நாக்கை `ப்ச்` கொட்டினான்.
பின்னர், அவன் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான். “ உலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, உண்மையான மகா குரு ஒருவர் இங்கே மலையில் உட்கார்ந்துகொண்டு பேன் குத்திக்கொண்டிருப்பாரென்றா நீ நினைக்கிறாய்?’’ அந்தக் கணத்தில் என் நெஞ்சில் அழுத்திக்கொண்டிருந்த பாறாங்கல் அகன்றுவிட்டதை உணர்ந்தேன்.
அவ்வளவுதான், என்னைச் சுற்றியிருந்த எல்லாமே ஒளிபெற்று மிளிர்ந்தன. நான் மலையை விட்டுச் சென்றாகவேண்டும். அந்த வயது முதிர்ந்த பெரியவரின் வார்த்தைகளில் நான் திடீரென விழித்துக்கொண்டேன். `விழிப்புணர்வு` என்கிறேன், நான்;
ஆனால், அது, வெளிப்படையாகத் தெரிந்த ஏதோ ஒன்று, நான் மலையை விட்டுச் சென்றாக வேண்டுமென்பதுதான். கீழ்மட்டத்துக் கறைபடிந்த மண்ணுலகிற்கு இறங்கிச்சென்று இரத்தமும் சதையுமாக அல்லல்படுவோர் மத்தியில் வாழவேண்டும். புத்தொளியறிவான போதியறிவினைக் களங்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாதென்றும் பரிசுத்த பூமியும் இந்த உலகமும் வெவ்வேறானதல்ல என்றும் புத்தர் சொன்னதே உண்மை. பிரச்சினைகள் மற்றும் ஆசைகளால் முடிவற்ற பரிணாம மாற்றங்களே நித்தியமான நமது உலகிலிருந்தும் நாம் விடுபடுவோமேயானால், பரிசுத்த பூமியை நாம் ஒருநாளும் அடையமுடியாது.
அந்தப் பாலியல் தொழிலாளி சொன்னதுபோல இந்த உலகில் உயிர்வாழ்வதற்காக, வயிற்றுப் பாட்டுக்காக, உடலை விற்கவேண்டியிருக்கிறதென்றால், உண்மையிலேயே இதுதானே நரகம்; இந்த நரகத்தில் தானே நான் வாழ்வினைக் கண்டுணரவேண்டும்.
நான் , மகா குருவைக் கண்டுபிடித்தேனோ இல்லையோ அல்லது, இந்த ஒளிமிக்க விழிப்புணர்வினை எனக்களித்த அந்த முதியவர் தான் நான் மூச்சைப் பிடித்துத் தேடிக்கொண்டிருந்த மகாகுருவின் புனித வெளிப்பாடோ என்பதெல்லாம் இப்போது பொருளற்றுப்போகின்றன. ஆனால், `விழிப்பு` என நான் கூறுவது உண்மையான அதுதானா என்பது இப்போதுங்கூட எனக்கு நிச்சயமில்லை.
படைப்பாளர் பற்றிய குறிப்பு : கிம் சியாங் டாங் கொரியாவில் 1947 – இல் பிறந்தவர். பத்தொன்பதாவது வயதில் துறவுகொண்டு பத்தாண்டுகள் புத்த மதப் பயிற்சி மேற்கொண்ட பின்னர், துறவினைவிட்டு வெளியேறி இலக்கியம் படைக்கத் தொடங்கினார்.
அவரது முதல் கதை 1975 இல் வெளியானது. இலக்கியப் படைப்புகளுக்காக, பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் படைத்துக்காட்டும் புத்தறிவுபெற்ற மனிதன் மலைகளில் வசிக்கும் துறவிகளையும் சராசரி மனிதர்களையும் அரவணைத்துச் செல்பவனாயிருக்கிறான்
http://www.ekoreajournal.net/issue/view_pop.htm?Idx=2816 
ஜனவரி, 02, 2018,    மலைகள் இணைய  இதழ் 137  இல் வெளியிடப்பட்டது.

Monday 12 February 2018

நாஞ்சில் நாட்டுக் கூட்டவியல்

நாஞ்சில் நாட்டுக் கூட்டவியல்
அவியல் என்றதும் உணவுவிடுதிகளில் பரிமாறப்படும் நீர்த்துப் போன காய்கறித் தயிர்க்கூட்டினை நினைவில் கொள்ளாதீர்கள். நாஞ்சில் நாட்டுக் கூட்டவியல் என்பது வேறு. அதன் பாரம்பரியச் சுவை தனிச்சிறப்புடையது. சிறிதளவுக்குக் கூட கொழகொழப்போ, கூட்டு மாதிரியான நீர்ச்சுவையோ இருக்காது. அதே நேரம் பொரியல், துவட்டல் அளவுக்குக் காய்கள் தனித்தனியாகி வறண்டுவிடுவதுமில்லை. ஒரு அகப்பை அவியலை அள்ளி உள்ளங்கையில் எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் அதிலிருந்து துளி கூட நீர் பிரிந்து சொட்டுவதில்லை. கறிகாய்கள் நன்கு சேர்ந்தேயிருந்தாலும் நாம் விரும்பினால் பிரித்தெடுத்துத் தனியாகச் சுவைத்துக்கொள்கிறபடியான ஒரு பக்குவத்தில் இருக்கும்.
வனவாசத்தின்போது வல்லவன் (Ballav) என்ற பெயரோடு விராட நாட்டு அரண்மனை மடப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த பீமன், அரசன் விராடனுக்காகக் கண்டுபிடித்துத் தயாரித்த ஒரு சிறப்புத் தொடுகறிதான் அவியல் என்றொரு கதை இருக்கிறது. அப்படியல்லாமல் வேறு வேறு சந்தர்ப்பங்களில் அஸ்தினாபுரத்தில் பீமன் தயாரித்ததென்றும் இரண்டு மூன்று கதைகள் உள்ளன.
70களில் நான் வாசித்த ஒரு இதழில் திருவிதாங்கூர் சமத்தானத்தில் தளவாயாகப் பணியாற்றிய இராமப்பய்யன் தலைமையில் படை ஒன்று பத்மனாபபுரம் அருகே பசியோடு ஒரு சத்திரத்துக்கு வருகிறது. சத்திரத்தில் சாப்பாடு இருக்கிறது. ஆனால் தொடுகறி தீர்ந்து போயிருந்தது. இராமப்பய்யன் தளவாய், உக்கிராண அறை மற்றும் ஆக்குப் பெரைகளைச் சுற்றிப் பார்த்து, சமையலுக்குக் காய்கறிகள் அரியும் போது தோலோடு சேர்த்து அதிகமான பகுதிகள் வீணாக்கப்பட்டுக் கிடப்பதைக் காண்கிறார். பப்படம் வறுத்த எண்ணெய் சீஞ்சட்டியிலிருந்தது. பிரதமனுக்குப் பால் பிழிந்தெடுத்த தேங்காய்ச் சக்கை ஒரு சருவத்தில் இருந்தது. சம்பாரத்துக்குக் கரைத்தது போக மீதி தயிரும் இருந்தது. மீந்திருந்த காய்கள், வெட்டியெறிந்த தோல்பகுதிகளிலிருந்து கிடைத்த காய்கள், தேங்காய்ச் சக்கை, பப்படம் பொரித்த எண்ணெய், தயிர் இவற்றைக் கொண்டு இராமப்பய்யன் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட பதார்த்தமே அவியல் என்று விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அவியல் குறித்த பழங்கதைகளைப் பரிசீலித்தால், விராட நாடு என்பது தற்போதைய நேபாளமென்பதும், நேபாளத்திலோ, அத்தினாபுரம், குருசேத்திரம், இந்திரப்பிரஸ்தம் போன்ற பாண்டவர்கள் புழங்கிய பஞ்சாப், அரியானா, தில்லி மற்றும் வடநாட்டிலோ அவியல் உணவுப்பழக்கத்தில் இல்லையென்பதும் தெரியவருகிறது. எனவே பீமனால் அவியல் கண்டுபிடிக்கப்பட்டதென்பது, அவியல் மீது பிரியங்கொண்ட யாரோ அதன் சிறப்பினை உயர்த்தவும் அதற்கு ஒரு புனித முக்கியத்துவம் அளிப்பதற்காகவும் அப்படியான கட்டுக்கதையினை உலவவிட்டிருக்கலாம் எனக் கருதத்தக்கதாகவே உள்ளது.
இராமப்பய்யன் தளவாயின் வரலாற்றில், அவரது குடும்பம் மதுரைப் பக்கமிருந்து பிழைப்பிற்காக திருவிதாங்கூர் சமத்தானத்திற்குச் சென்றதாகவும், அரசரின் நண்பர் ஒருவரிடம் ஒரு சாதாரண வீட்டுப் பணியாளராக இருந்த அவரது பணி நேர்மை மற்றும் திறமையைக் கண்டு அரசர் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் அரண்மனை ஊழியக்காரராகப், பணியில் சேர்த்ததாகவும், அவர் பல பணிகளில் திறம்படப் பணியாற்றவே தளவாயாக உயர்வு பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன. அவரால் அவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சூழ்நிலை மற்றும் தயாரிக்கப்பட்ட முறையாக இதழில் குறிப்பிட்டிருந்த விவரங்கள் உண்மையாக, ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பதை உணரலாம்.
இப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்ட அவியல் நாஞ்சில் நாட்டில் கூட்டவியலாகப் பரிமாணம் பெற்றதுடன், சேனை அவியல், சக்கை அவியல், கொத்தவரைக் காய் அவியல், கோழியவரை அவியல், கீரைத் தண்டு அவியல், காய்ச்சிக் கிழங்கு அவியல், சிறுகிழங்கு அவியல், வெண்டைக்காய் அவியல், பாகற்காய் அவியல், முருங்கைக்காய் அவியல், முருங்கை - முட்டை அவியல், அவசரத்துக்கான ஆமவடை அவியல் என்பதோடு நெத்திலி அவியல், தெறச்சித் துண்டம் அவியல், பாறைமீன் அவியல் எனப் பரவலாகியுள்ளதை நோக்கும்போது அவியல் என்பது ஒரு தயாரிப்பு முறையாகி நாஞ்சில் நாட்டு உணவுப்பழக்கத்தில் ஊன்றி நிலைபெற்றுவிட்டதையும் உணரமுடிகிறது.
விக்கிரமசிங்கபுரத்துச் சித்தி சொல்வாள், அக்கா (எனது அம்மா) கைப்படச் சமைக்கிற பெரட்டவியல் ருசி எங்களுக்கெல்லாம் வரமாட்டேங்குது. நாஞ்சில் நாட்டுக் கூட்டவியலுக்கான தயாரிப்பு முறையினைக் கருத்தில் கொண்டு சித்தி வைத்த பெயர் பெரட்டவியல். பெரட்டிப் பெரட்டித் தயாரிக்கப்படுவதால் பெரட்டவியல்.
அவியல் இல்லாத திருமணம் மற்றும் விசேஷங்கள், நாஞ்சில் நாட்டில் இல்லை. தாழக்குடி அழகம்மன் கோயில் திருக்கல்யாணத்தின் போதும் நான்காம் நாள் ஊரழைத்துச் செய்யும் விருந்தில் அவியல் உண்டு. கல்யாணப் பந்தியில் விளம்பும் போது பெரிய அகப்பை கொண்டு ஒவ்வொரு இலையிலும் குறைந்தது 200 கிராம் அளவுக்குப் பரிமாறப்படுகிறது. வேறு எந்தக் கூட்டுவானும் இவ்வளவு அதிகம் பரிமாறப்படுவதில்லை. முதலில் வைத்த அவியல் காலியாகும் முன்பே இரண்டாவது முறையும் அவியல் பரிமாறப்படும். வேறு தொடுகறிகள் எதுவும் இரண்டாம் முறை பரிமாறப்படுவதில்லை.
ஒருமுறை பந்தியில் தனது இலையில் அவியல் குறைவாகப் பரிமாறிவிட்டதற்காக, ஒருவர் பரிமாறுபவரை அடிக்கவே போய்விட்டார். அதனால் அவருக்கு `அவியல்` எனப் பட்டம் வழங்கப்பட்டு, அவரது ஆயுள் பரியந்தம் அப்பெயராலேயே அறியப்பட்டுவந்தார்.
எங்கள் வீட்டிலேயே நான்கு, ஐந்துமுறை சிறு விசேஷங்கள் நடந்தன. அப்போது எங்கள் வீட்டுக்குப் பின் புறத்திலேயே பெரிய பெரிய கற்களை அமைத்துச் சுற்றி மண் சுவர் கட்டித் தற்காலிக அடுப்பு மூட்டி எங்கள் ஊரின் மிகச் சிறந்த வைப்புக்காரர்களைக் கொண்டு சமையல் செய்யப்பட்டது. பூசாரி ஆறுமுகம் பிள்ளை, கிட்டு ஐயர், பத்துக்காவல் ஆறுமுகம்பிள்ளை மகன் முருகன், அரிசிவைப்பு வேலாயுதம் பிள்ளை போன்றோர் பெரிய பெரிய உருளிகளில் அவியல் செய்வதையும் சட்டுவங்களால் கிளறுவதையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களின் செய்முறையை ஆவணப்படுத்தும் நோக்கத்துடனேயே இப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. தாழக்குடியில் இதே செய்முறை இப்போதும் பிரபலமான வைப்புக்காரர்களால் பின்பற்றப்படுவதுடன் நாஞ்சில் நாட்டுக் கூட்டவியல் அதன் பாரம்பரியச் சுவை குன்றாமல் இன்றளவும் கிடைக்கிறது.
தேவையான காய்கறிகள்
1. வாழைக்காய். – சிங்கன் 2 நாஞ்சில் நாட்டுக்கு வெளியே சிங்கன் கிடைப்பதில்லை. மொந்தன் அல்லது பேயன் காய் 1
2. கத்தரிக்காய் – 2
3. வழுதுணங்காய் – 1 (நீளப்பச்சை)
4. புடலங்காய் – சுமார் 15 செ.மீ நீளம்.
5. வெள்ளரிக்காய் சிறியது 1 (சில வெள்ளரிகளில் கசப்பு இருக்கும். அவற்றை விலக்கிவிட வேண்டும்.)
6. இளவங்காய் அல்லது தடியங்காய் 10 செ.மீ கனசதுரம்
7. முருங்கைக் காய் 1
8. சீனியவரை என்ற கொத்தவரைக்காய் (முத்தலாக இல்லாமல்) – 20
9. சேனைக்கிழங்கு 150 கிராம்.
10. வடை (பஜ்ஜி) மிளகாய் அல்லது பச்சை மிளகாய் 2
அரைப்பதற்குத் தேவையானவை
1. தேங்காய் – 1 மூடி (அரைத் தேங்காய்) துருவிக்கொள்ளவும்.
2. சீரகம் – 2 தேக்கரண்டி
3. பச்சை மிளகாய் 3 அல்லது 4
4. மஞ்சள் துண்டு - அரை செ.மீ. தூள் என்றால் அரை தேக்கரண்டி
5. உப்பு அரைத் தேக்கரண்டி
காய் வெட்டுதல்
காய்கறிகளைச் சுத்தமாகக் கழுவி மூன்று அல்லது நான்கு செ.மீ நீளத்தில் அரை அல்லது முக்கால் செ.மீ கனத்தில் தோராயமாக ஒரே கன அளவு கொண்ட செவ்வக வடிவங்களில் வெட்டிக்கொள்ளவேண்டும். வாழை, சேனை, தடியங்காய் மட்டும் தோல் சீவி, தடியங்காய், புடலங்காயில் விதைகள் உள்ள குடல் பகுதியை அகற்றிவிடவேண்டும். வெள்ளரி மற்றும் இதர காய்களுக்கு தோல் சீவ வேண்டியதில்லை. கொத்தவரைக் காயை காம்பு மற்றும் மூட்டுப் பகுதியைக் கிள்ளியெறிந்துவிட்டு இரண்டாக ஒடித்துக் கொள்ளலாம். அப்படிக் கிள்ளி ஒடிக்கும் போதே அதன் இரு பக்கங்களிலுமுள்ள நாரினை உரித்து அகற்றவும் முடியும். சேனைத் துண்டுகளைத் தனிப்பாத்திரத்தில் இட்டு ஒருமுறைக்கு இருமுறை உடைவுபடாமல் பிசைந்து அலசி தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அரிப்புத் தன்மையைக் குறைக்கமுடியும். முருங்கைக்காயை முதலிலேயே உருவித் தேய்த்துக் கழுவிக்கொள்ளவேண்டும். பின்னர் மூன்று செ.மீ அளவுக்குத் துண்டுகளாக்கி ஒவ்வொரு துண்டினையும் இரண்டாகப் பிளந்துவிடவேண்டும். அடுத்து கத்தரிக்காய் வழுதுணங்காய் அரிந்து துண்டுகளை தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். கடைசியாக வாழைக்காயைத் துண்டுகளாக்கித் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். வாழைக்காய் கத்தரி, வழுதுணைகளை தண்ணீரில் ஊறவைக்காமல் வெளியே வைத்திருந்தால் கறுத்துவிடும்.
அரைவை
தேங்காய், பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே பிருபிருவென (பிறிதுபிறிதாக என்பது பிருபிரு என மருவியிருக்குமோ) அரைத்துக்கொள்ளவேண்டும். மைய அரைக்க வேண்டியதில்லை. தண்ணீர் சேர்த்து அரைத்தால் அரைவையின் மணம் குறைந்துவிடும்.
செய்முறை
வெங்கல உருளி, சீஞ்சட்டி, இருப்புச் சட்டி, வாய் அகன்ற மண்சட்டி அல்லது வாணலியில் (அடிப்பிடிக்காத தவா) இரண்டு கரண்டி தேங்காயெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இரண்டு இணுக்கு கறிவேப்பிலையை உருவிப்போட்டு (கடுகு, உழுந்தம் பருப்பு தேவையில்லை) அது இலேசாகக் கருகியதும் பச்சை மிளகாய்களைக் கீறிப் போட்டு கூடவே கொத்தவரைக்காயைச் சேர்த்து சிறிது வதக்கவேண்டும். அடுத்த இரண்டொரு நிமிடத்திலேயே சேனைத் துண்டுகளை இட்டுக் கிளறவும். கிழங்கு நிறம் சிறிது மாறிய பின்பு, முருங்கைக்காயை இட்டுக் கிளறி, பச்சை நிறம் சிறிதளவு மாறும் போதே இதர காய்கள் எல்லாவற்றையும் போட்டுக் கிளறிவிடவும். அம்மியில் அரைத்தால் அம்மிப் பால் கிடைக்கும். இப்போது மிக்ஸிப் பால் தான். அதிலேயே தேவையான அளவுக்கு உப்பினைச் சேர்த்து சிறிது தண்ணீரில் கரைத்து (மொத்தத்தில் 100 மில்லிக்கு மிகாமல்) தெளிக்கவும். அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். காய்களில் ஊறிவரும் தண்ணீரே போதுமானது. இந்தப் பக்குவத்தில் எல்லாக் காய்களும் இணைந்த ஒரு இனிமையான மணம் (pleasing smell) கிளம்பிவரும். தவாவை உரிய மூடியால் மூடிவைத்து, ஐந்து நிமிடம் கழிந்ததும் முருங்கைக்காயில் ஒரு துண்டை எடுத்து நசுக்கிப் பார்த்தால் அதன் சதைப்பகுதி எளிதாகப் பிரிந்து வந்தால் எல்லாக் காய்களும் வெந்திருக்கும். எதற்கும் காய்களை இலேசாக அமுக்கிப் பார்த்து அவை மென்மையாகிவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, அரைத்து வைத்துள்ள அரைவையினைக் காய்கறிகளோடு சேர்த்துக் கிளறவும். ஒரு ஐந்து நிமிடங்கள் புரட்டிப் புரட்டிக் கிளறியதும் பச்சை வாசம் மாறிக் காய்களின் மீது அரைவைத் தேங்காய் ஒரே சீராகப் படிந்தபின் ஒரு துண்டினைச் சுவைத்து போதிய அளவுக்கு உப்பிருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேற்கொண்டும் உப்பு தேவைப்படாது. அப்படியே தேவையெனக் கருதினால் மிகச் சிறிதளவு தண்ணீரில் கரைத்துத் தெளிக்கவும். இறக்கும் நேரம் வந்ததும் மேற்கொண்டு இரண்டு கரண்டி தேங்காயெண்ணெய் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்தும் கீழே இறக்கிவிடவும். இறக்கிய பின்னர் இரண்டு தேக்கரண்டிக்கு மிகாமல் புளிப்பில்லாத கட்டித் தயிர் சேர்ப்பதானால் சேர்த்துக் கிளறிக்கொள்ளலாம். புளி தேவையில்லை. அனைத்துக் காய்களும் தேங்காயும் கலந்த ஒரு தனிச்சுவை அவியல் தயார்.
புளிப்புச் சுவை விருப்பமுடையவரெனில் அடுப்பிலிருந்து இறக்கும் முன்பே கைப்புளி கரைத்து ஊற்றிக் கிளறிக் கொள்ளவேண்டும். புளி சேர்த்தால் தயிர் தேவையில்லை.
அவியல் காய்கறிகளோடு சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு சேர்ப்பதால் சுவை மாறுவதில்லை. ஆனால், காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, அவரைக் காய் போன்றவை சேரும் போது சுவை மாற்றமடைகிறது. நெல்லை குலசேகரன் பட்டணத்தில் அவியலுக்குக் கடலைப் பருப்பு சேர்க்கிறார்கள். வேறு சில இடங்களில் கொண்டைக்கடலை கூடச் சேர்க்கிறார்கள். அதுவும் ஒரு சுவைதான். ஆனால், நாஞ்சில் நாட்டைப் பொறுத்த வரையில், கடலை அல்லது கடலைப்பருப்பு சேர்த்தால் அதற்குப் பெயர் அவியல் இல்லை, கூட்டு.
மாங்காய் சேர்த்தால் புளிப்பு கூடிவிடும். மாங்காய் சேர்ப்பதும் சேர்க்காததும் அவரவர் விருப்பம்தான்.
இராஜபாளையத்தில் உறவினர் வீட்டில் காரட்டும் சேப்பங்கிழங்கும் மட்டும் போட்டு அவியல் வைத்திருந்தார்கள். அதற்கென்று ஒரு சுவை இருக்கத்தான் செய்தது.
பொதுவாகக் காய்களை அவித்தபின், தண்ணீரை இறுத்துவிடுகிறார்கள், தேங்காய், சீரகம், மிளகாய் அரைத்துச் சேர்த்து, சிறிதளவு கைப்புளி சேர்த்துக் கிளறி இதுதான் அவியல் என்கிறார்கள். இவற்றிற்கென்று ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாஞ்சில் நாட்டுக் கூட்டவியலின் சுவை வேறு.
வெண்டைக்காயை நன்கு கழுவி காயவைத்துத் துணியால் துடைத்துவிட்டு, நீளத் துண்டுகளாக்கிப் பின்னர் நான்கு நான்காக வகிர்ந்துகொள்கிறார்கள். சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து தேங்காயெண்ணெயில் கறிவேப்பிலை தாளித்ததும் அதிலிட்டு வதக்கிய பின், அதனோடேயே வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கி, நன்கு வதங்கியபின், தேங்காய் சீரகம் மஞ்சள் தூள் அரைத்த கலவையை அதனுடன் சேர்த்துக் கைப்புளி ஊற்றிக் கிளறி பச்சை வாசம் அகன்றதும் இறக்கிவைக்கிறார்கள். பாகற் காய் அவியலுக்கும் இந்தப் பக்குவம்தான்.
உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்கப்படவேண்டுமென்ற நோக்கத்தைச் செயல்படுத்த அவியல் ஒரு நல்லமுது.
22, ஜனவரி, 2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது. விருப்பம் 148, பகிர்வு 91, பின்னூட்டம் 32. 

முகநூல் கவிதை

என் செல்ல மகனே, கேள்.
என் செல்ல மகனே!
மூன்று பக்கம் கடல்,
வடக்கில் வானுயர்ந்த மலை
இந்த நாடு மிகப்பரந்தது
இதன் நீண்ட கடற்கரை அழகானது.
இதன் ஆறுகள் புனிதமானவை.
பருவக் காற்றுகள் மாறிமாறி வீசுகின்றன
மலைகள், காடுகள், கடல்படுபொருட்கள்,
விளைநிலங்கள், அணைகள், கனிமச் சுரங்கங்கள்,
நவரத்தின, மகா ரத்தினத் தொழிற்சாலைகள்
பொது வங்கிகள், நிதியங்கள்,
நாடு முழுவதையும் இணைக்கும் நான்குவழி, ஆறுவழித் தங்க நாற்கரச் சாலைகள்
உலகிலேயே பெரிய தொடர்வண்டி இணைப்பு
பறக்கும் தொடரி, நீர்விமானம்
உலகை வலம்வருகின்ற வானூர்திகள்
நிலவுக்கும் ஆய்வுக்கும் விண்கலங்கள், செயற்கைக் கோள்கள்
எல்லாமே இருக்கின்றன.
நூற்றுக்கணக்கான உன் உடன்பிறப்புத் தொழிலதிபர்கள்
உலகக் கோடீசுவரர்களை மிஞ்சிடும் வகையில் வளம் சேர்க்கின்றனர்;
எல்லாமே உனக்காகத்தான்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்;
எதுவும் பேசாமல் உழைத்துக்கொண்டேயிருக்கவேண்டும்
இன்னொன்று -
நீ நாட்டுப் பற்றோடிருக்கவேண்டும்.
இந்த நாடு உனது.
உனக்காகவே பாராளுமன்றம் நீதிமன்றம்
உனக்காகவே அரசியல் சட்டம்
உனக்காகவே நிதி ஆயோக்
உனக்காகவே பிரதமர் முதல் பியூன் வரை
உழைக்கிறார்கள், உழைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
நம்பிக்கை கொள்;
உனது மதம் உலகிலேயே உயர்ந்தது.
பெருமிதம் கொள்; ஒரு இந்து நாட்டினை ஆள்கிறார்.
மறந்தும் அண்டை நாட்டுப் பெயரை உச்சரித்துவிடாதே
இலவசங்களை எதிர்பார்க்காதே; தன்மானத்தோடு வாழ்.
நாட்டுக்காக, மதத்துக்காக நீ எப்போதும் இரத்தம் சிந்தத் தயாராக இரு.
இரவுக்கான உணவா, கேட்காதே!
ஈரத்துணியால் இறுகக்கட்டிக்கொள்
சிறிது கூட முனகிவிடாதே!
அப்புறம் நீ தேசத் துரோகி.
அவ நம்பிக்கையாளன். 
ஜனவரி, 24, 2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது. விருப்பம் 68 பகிர்வு 6 பின்னூட்டம் 14

ஒரு சொல் - தமிழ்ச்சொல் - நிப்பாரம்.

நிப்பாரம் : 

நாஞ்சில் நாட்டில் வண்டிகளில் பாரம் ஏற்றிக் காளைகளைப் பூட்டும் முன் வண்டிக்காரர் நுகக்காலைத் தூக்கி நிறுத்தி நிப்பாரம் சரியாக இருக்கிறதா என்று கணிப்பார். நிப்பாரம் என்றால் தூக்கி நிறுத்தியதும் அது பின்பக்கமோ முன்பக்கமோ இழுக்காமல் சமநிலையிலிருத்தல். பின்பக்கம் பாரம் அதிகமாயிருந்தால் சிறிது பாரத்தை முன்பக்கம் கொண்டுவருவார்; அதுவே முன்பக்கம் அதிகமாக இருந்தால் பாரத்தில் கொஞ்சத்தை பின்பக்கம் நகர்த்திச் சரிசெய்வார். நிப்பாரம் சரியில்லாவிட்டால் மாடுகளுக்குச் சிரமம். வண்டி குடை சாயும் ஆபத்தும் உண்டு. வில் வண்டியென்றாலும் நிப்பாரம் பார்த்து கோசுப் பெட்டியிலிருப்பவரை பின்பக்கம் போகச் சொல்லவோ, அல்லது பின்பக்கம் இருப்பவரை கோசுப்பெட்டிக்கு வரச்சொல்லவோ செய்து சரிபார்ப்பார்.
நகரப்பேருந்துகளில் நடத்துநர் முன்னே போகச் சொ ன்னபோது,
நடத்துநரிடம் ஏன் நிப்பாரம் சரியாயில்லயோ எனக் கிண்டல் செய்ததும் பின்னாலிருப்பவர் முன்னாலிருப்பவரிடம், நிப்பாரம் சரியில்லையாம்பா, முன்னாலே போ என நகைச்சுவையாகக் கூறியதுமுண்டு.
இந்த நிப்பாரம் என்ற சொல்லை இணைய அகராதிகளில் தேடிப்பார்த்தேன். அப்படி ஒரு சொல் இல்லையென்றே கணினி தெரிவிக்கிறது.
வின்சுலோவின் தமிழ் - ஆங்கில அகராதியில் ``நிப்பரம்`` என்றொரு சொல் உள்ளது. இதற்கு Lightness, Swiftness பாரமின்மை என்றும் Firmness அசைவின்மை என்றும் இரண்டு பொருள் உள்ளதாக க் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாஞ்சில் நாட்டில் புழக்கத்திலிருந்த நிப்பாரம் என்ற சொல் தான் `நிப்பரம்` என உறுதிசெய்துகொள்ளலாம்.
`நிப்பாரம் இல்லாட்டா குடவண்டி சாயுமேடே`
ஜனவரி, 24, 2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது.  விருப்பம் 99, பகிர்வு - 20 பின்னூட்டம் -18

முக.நூல் கவிதை - மானுட இலக்கணம்

மானுட இலக்கணம்
ஒரு நாட்டின் பெயர்,
நான்காம் வேற்றுமை உருபு `கு`
ஓரெழுத்தொரு மொழியில் ஒரு வினைச்சொல் `போ`
சேர்ந்த அந்த இரண்டே சொற்களில் தான் எத்துணை
வன்மம் ஒளிந்திருக்கிறது!
சென்ற நூற்றாண்டில் வெடித்த இந்தச் சொற்கள் தாம்
எத்தனையெத்தனை உயிர்களைக் காவுகொண்டன!
தேசத்தந்தையின் உயிரைக் குடித்ததும் இதே சொற்கள்
மசூதிகளை இடித்ததும் இதே சொற்கள்
அந்தச் சொற்களைக் கேட்டதுமே உடல் பதறுகிறது.
மக்கட்பண்பற்ற அந்தச் சொற்களை
இனிமேலாவது உச்சரிக்காதீர்கள்
அது சரி, அந்தச் சொற்களை உச்சரிப்பதற்கு
உங்களுக்குக் கற்றுக்கொடுத்த
அந்த மானுடப் பகைவன்
யார்?
எந்த ஒரு தனிமனிதனுக்குமல்ல,
எந்தவொரு அதிகார மையத்துக்கும் கூட
அதற்கான அதிகாரமில்லையென்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்தச் சொற்களை உச்சரிப்பவரை,
உச்சரிக்கக் கற்றுக்கொடுப்பவரை
என்னென்று அழைப்பது?

06.02.2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது. விருப்பம் -16 பகிர்வு - 0 பின்னூட்டம் - 2