Monday 12 February 2018

முக.நூல் கவிதை - மானுட இலக்கணம்

மானுட இலக்கணம்
ஒரு நாட்டின் பெயர்,
நான்காம் வேற்றுமை உருபு `கு`
ஓரெழுத்தொரு மொழியில் ஒரு வினைச்சொல் `போ`
சேர்ந்த அந்த இரண்டே சொற்களில் தான் எத்துணை
வன்மம் ஒளிந்திருக்கிறது!
சென்ற நூற்றாண்டில் வெடித்த இந்தச் சொற்கள் தாம்
எத்தனையெத்தனை உயிர்களைக் காவுகொண்டன!
தேசத்தந்தையின் உயிரைக் குடித்ததும் இதே சொற்கள்
மசூதிகளை இடித்ததும் இதே சொற்கள்
அந்தச் சொற்களைக் கேட்டதுமே உடல் பதறுகிறது.
மக்கட்பண்பற்ற அந்தச் சொற்களை
இனிமேலாவது உச்சரிக்காதீர்கள்
அது சரி, அந்தச் சொற்களை உச்சரிப்பதற்கு
உங்களுக்குக் கற்றுக்கொடுத்த
அந்த மானுடப் பகைவன்
யார்?
எந்த ஒரு தனிமனிதனுக்குமல்ல,
எந்தவொரு அதிகார மையத்துக்கும் கூட
அதற்கான அதிகாரமில்லையென்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்தச் சொற்களை உச்சரிப்பவரை,
உச்சரிக்கக் கற்றுக்கொடுப்பவரை
என்னென்று அழைப்பது?

06.02.2018 அன்று முகநூலில் பதிவிடப்பட்டது. விருப்பம் -16 பகிர்வு - 0 பின்னூட்டம் - 2 

No comments:

Post a Comment