Monday 25 April 2016

அமெரிக்கச் சிறுகதை - மலைகள், வெள்ளை யானைகளைப் போல. - HILLS LIKE WHITE ELEPHANTS BY ERNEST HEMINGWAY

மலைகள், வெள்ளையானைகளைப் போல. (HILLS LIKE WHITE ELEPHANTS) 

ஆங்கிலம் : எர்னெஸ்ட் ஹெமிங்வே (ERNEST HEMINGWAY )

தமிழில்  ச. ஆறுமுகம்.

download (15)
நோபல் விருதாளரான எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பல படைப்புகள் ஏற்கெனவேயே தமிழாக்கம் பெற்றிருக்கின்றன. உலகின் தலைசிறந்த சிறுகதையாளர்களில் ஒருவரான அவர் சிறுகதைகள் மிதக்கும் பனிப்பாறைகளைப் போல அமையவேண்டும் என்றார். மிதக்கும் பனிப்பாறைகளில் எட்டில் ஒரு பாகமே வெளியில் தெரிகிறது. மீதிப்பகுதி முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கி வெளியில் தெரிகின்ற பகுதிக்கு அடிப்படையாகிறது. அதுபோலக் கதைகளைப் படைக்கும் கொள்கை மிதக்கும் பனிப்பாறைக் கொள்கை (Iceberg Theory) என அழைக்கப்படுகிறது. பனிப்பாறைக் கொள்கைக்கு மிகச்சிறந்த இலக்கணமாக அவரது Hills like White Elephants மற்றும் A Clean, well-lighted Place என்ற சிறுகதைகள் திகழ்கின்றன. Hills like White Elephants தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
***
எப்ரோ ஆற்றுப் பள்ளத்தாக்கின் குறுக்காக அமைந்துள்ள மலைகள் நீளமாகவும் வெள்ளையாகவும் இருந்தன. இந்தப் பக்கம் நிழலோ மரங்களோ இல்லை. வெயிலில், இரு தண்டவாளப் பாதைகளின் நடுவில் தொடர்வண்டி நிலையம் எழுந்து நின்றது, அதன் பக்கவாட்டினை ஒட்டி, கட்டடத்தின் வெக்கை நிறைந்த நிழலும், மதுவகத்தின் திறந்த வாயிலில் பூச்சிகளைத் தடுக்கத் தொங்கவிடப்பட்டிருந்த மூங்கில் மணிச்சரடுகளாலான திரையும் இருந்தன. அந்த அமெரிக்கனும் அவனுடன் வந்த இளமங்கையும் கட்டடத்திற்கு வெளியே, நிழலில் கிடந்த மேசையில் உட்கார்ந்தனர். வெப்பம் மிகவும் அதிகமாக இருந்தது. பார்சிலோனாவிலிருந்து வரும் விரைவு வண்டி நாற்பது நிமிடங்களில் வரும். அது இந்தச் சந்திப்பு நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று, மாட்ரிட்டுக்குச் செல்லும்.
‘’ என்ன சாப்பிடலாம்?’’ இளமங்கை கேட்டாள். அவள் தொப்பியைக் கழற்றி மேசையின் மீது வைத்திருந்தாள்.
‘’ ஒரே வெக்கை.’’ என்றான், அவன்.
‘’ பியர் சாப்பிடலாம்.’’
‘’டாஸ் செர்வேசாஸ்’’ அவன் திரையை நோக்கிச் சொன்னான்.
‘’பெரியதா?’’ வாயிலில் இருந்து ஒரு பெண் கேட்டாள்.
‘’ஆமாம், இரண்டு பெரியது.’’
அந்தப் பெண் இரண்டு கண்ணாடிக்கோப்பைகளில் பியரும் இரண்டு ஈரம் உறிஞ்சும் தகடுகளும் கொண்டுவந்தாள். தகடுகளை மேசை மீது வைத்து அவற்றின் மேலாக பியர் கோப்பைகளை வைத்துவிட்டு, அந்த மனிதனையும் இளமங்கையையும் பார்த்தாள். அந்த இளமங்கை மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வெயிலில், மலைகள் வெள்ளையாகத் தெரிந்தன. நிலப்பரப்பு பழுப்பாகவும் வறண்டும் இருந்தது.
‘’அவை வெள்ளை யானைகளைப் போலத் தெரிகின்றன.’’ என்றாள், அவள்.
‘’நான் அப்படி எதையும் பார்த்ததேயில்லை.’’ அந்த மனிதன் பியரைக் குடித்தான்.
‘’இல்லை, நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.’’
‘’நான் பார்த்துமிருக்கலாமே. பார்த்திருக்கமாட்டேனென்று நீ சொல்வதாலேயே, எது ஒன்றும் நிரூபணமாகிவிடாது.’’ என்றான், அந்த மனிதன்.
இளமங்கை மணித்திரையைப் பார்த்தாள். ‘’அதில் வண்ணம் தீட்டி, என்னவோ வரைந்திருக்கிறார்களே, அது என்ன?’’
‘’ஏனிஸ் டெல் டோரா. அது ஒரு மதுபானம்.’’
‘’நாமும் அதைக் குடித்துப் பார்க்கலாமா?’’
‘’இங்கே கவனியுங்கள்’’ என்று அந்த மனிதன் திரை ஊடாகக் கொஞ்சம் சத்தமாக அழைத்தான். மதுவகத்துக்குள்ளிருந்து அந்தப் பெண் வெளியே வந்தாள். ‘’நான்கு ரியால்கள்.’’
‘’எங்களுக்கு இரண்டு ஏனிஸ் டெல் டோரா வேண்டும்.’’
‘’தண்ணீர் கலந்தா?’’
‘’உனக்குத் தண்ணீர் கலந்து வேண்டுமா?’’
‘’எனக்குத் தெரியாதே, தண்ணீர் சேர்த்தால் நன்றாக இருக்குமா?’’ என்றாள், இளமங்கை.
‘’அதெல்லாம் சரிதான்.’’
‘’உங்களுக்குத் தண்ணீரோடு வேண்டும். ம்?’’ எனக் கேட்டாள், அந்தப் பெண்.
‘’ஆமாம், தண்ணீரோடு தான்.’’
‘’இது அதிமதுரம் போலவே இருக்கிறது.’’ என்றபடியே இளமங்கை கோப்பையைக் கீழே வைத்தாள்.
‘’எல்லாமே அப்படித்தான்.’’
‘’ஆமாம்,’’ என்ற அவள், ‘’எல்லாமே அதிமதுரம் போலத்தான் ருசிக்கிறது. அதிலும் நீண்ட காலம் காத்திருந்த எல்லாமே தான், அப்சிந்தே1 போல.’’
‘’ஓ, போதும். அதோடு விட்டுவிடு.’’
‘’நீங்கள் தானே ஆரம்பித்தீர்கள்! நான் வியப்புநிலையில் திளைத்திருந்தேன். எனக்கு அருமையான நேரமாக இருந்தது.’’ என்றாள், இளமங்கை.
‘’நல்லது. நம் நேரத்தை நல்லபடியாகக் கழிக்கலாமே!’’
‘’ அது சரி. நான் அதற்குத்தானே முயற்சி செய்தேன். மலைகள் வெள்ளை யானைகளைப் போல இருக்கிறதென்று சொன்னேனே, அது மகிழ்ச்சிக்கான முனைப்பில்லையா?’’
‘’அது, மகிழ்ச்சிக்கான முனைப்புதான்.’’
‘’இந்தப் புதுவகை மதுவைக் குடித்துப்பார்க்கலாமென்றேன். அதைத்தானே நாம் செய்கிறோம், இல்லையா – சுற்றுமுற்றும் வேடிக்கை பார்ப்பதும் புதிய மதுவகைகளை அருந்திப்பார்ப்பதும்?’’
‘’ நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.’’
இளமங்கை எதிரில் தெரிந்த மலைகளை நோக்கிப் பார்வையைச் செலுத்தினாள்.
‘’இவை அழகான மலைகள்,’’ என்றாள் அவள். ‘’உண்மையில் அவை வெள்ளை யானைகளைப் போல இல்லை, மரங்களின் ஊடாகத் தெரியும் அவற்றின் மேனி நிறத்தைத்தான் நான் சொன்னேன்.’’
‘’நாம் இன்னும் கொஞ்சம் மது அருந்தலாமோ?’’
‘’சரி.’’
இளம் வெப்பக் காற்று மணித்திரையை அசைத்து, மேசைப்பக்கமாகத் தள்ளியது.
‘’பியர் குளிர்ச்சியாக, நன்றாக இருக்கிறது.’’ என்றான், அவன்.
‘’அருமையாக இருக்கிறது.’’ என்றாள், இளநங்கை.
‘’அது உண்மையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மிகவும் எளிமையான ஒரு அறுவைசிகிச்சைதான், ஜிக்2. சொல்லப்போனால், அதில் அறுவைமுறையே இல்லை.’’ என்றான், அந்த மனிதன்.
அந்த இளமங்கை மேசையின் கால்கள் பதிந்திருந்த தரையைப் பார்த்தவாறிருந்தாள்.
‘’ நீ அதையெல்லாம் ஒன்றும் பெரிதாக நினைக்கமாட்டாயென்று எனக்குத் தெரியும் ஜிக். உண்மையில் அது ஒன்றுமேயில்லைதான். இலேசாகக் காற்றை உள்ளே செலுத்துவது, அவ்வளவுதான்.’’
இளமங்கை எதுவும் சொல்லவில்லை.
‘’நான் உன் கூடவே வந்து, முழுநேரமும் உன்கூடவே இருப்பேன். கொஞ்சம் காற்றை உள்ளே செலுத்துவார்கள், அவ்வளவுதான். அதன்பிறகு, எல்லாமே சரியாகி, முற்று முழுக்க இயல்பானதாக ஆகிவிடும்.’’
‘’அதற்கப்புறம், நாம் என்ன செய்வோம்?’’
‘’அதற்கப்புறம் நாம் நன்றாகிவிடுவோம். முதலில் எப்படி இருந்தோமோ, அப்படியே ஆகிவிடுவோம்.’’
‘’ எது உங்களை அப்படி நினைக்கச் சொல்கிறது?’’
‘’அந்த ஒன்று மட்டும் தான் நம்மைக் குதறுகிறது. அந்த ஒரே விஷயம் தான் நமது மகிழ்ச்சியை இல்லாமல் செய்துவிட்டது.’’
இளமங்கை மணித்திரையைச் சிறிது பார்த்துவிட்டுப் பின் கையை நீட்டி, மணிச்சரடுகளில் இரண்டினை மட்டும் கையில் பிடித்தாள்.
‘’அப்படியென்றால், அது நடந்து முடிந்தபிறகு, எல்லாம் சரியாகி, நாம் மகிழ்ச்சியாக இருப்போமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்.’’
‘’நாம் மகிழ்ச்சியோடிருப்போமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். நீ பயப்பட வேண்டியதேயில்லை. அதைச் செய்தவர்கள் நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன்.’’
‘’நானும்தான் பார்த்திருக்கிறேன். அதற்கப்புறம் அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் தான்.’’
‘’நல்லது,’’ என்ற அவன், ‘’உனக்கு வேண்டாமென்றால், வேண்டாம். உனக்கு வேண்டாமென்கிறபோது, உன்னை அதைச்செய்யவைக்கமாட்டேன். ஆனால், எனக்குத் தெரியும், அது முழுவதுமாக, மிகமிக எளிமையானது.’’
‘’அப்படியானால், நான் அதைச் செய்துகொள்ளவேண்டுமென்று நீ உண்மையாகத்தான் சொல்கிறாயா?’’
‘’செய்யவேண்டிய மிகச் சிறந்த காரியம் அதுதானென்று நினைக்கிறேன். ஆனால், உனக்கு அது உண்மையாகவே வேண்டாமென்றால், நீ அதைச் செய்துகொள்ளென்று நான் சொல்லவில்லை.’’
‘’அப்படியென்றால், நான் அதைச்செய்துகொண்டால், மகிழ்ச்சியாகிவிடுவாயா, எல்லாமே முன்பு மாதிரியே ஆகிவிடுமா, நீ என்னைக் காதலிக்கத் தொடங்கிவிடுவாயா?’’
‘’இப்போதும் நான் உன்னைக் காதலிக்கத்தான் செய்கிறேன். நான் உன்னைக் காதலிக்கிறேனென்பது உனக்குத் தெரியும்.’’
‘’எனக்குத் தெரியும். ஆனால், நான் அதைச் செய்தால், எல்லாமே முன்புபோல இனியதாக மாறிவிடுமா? ஏதோ ஒன்று, வெள்ளையானை போல இருப்பதாக, நான் சொன்னால், அது உனக்குப் பிடித்துவிடுமா?’’
‘’ அது எனக்குப் பிடிக்கும். இப்போதும் பிடிக்கத்தான் செய்கிறது, ஆனால், அதைப்பற்றி நினைத்துப் பார்க்கத்தான் முடியவில்லை. கவலைப்படும்போது, எனக்கு எப்படி ஆகிவிடுகிறதென்று உனக்குத் தெரியும்தானே.’’
‘’நான் அதைச் செய்துவிட்டால், நீ அப்புறம் ஒருபோதும் கவலைப்படவே மாட்டாயா?’’
‘’நான் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டேன்; ஏனென்றால், அது அந்தளவுக்கு, முழுமையாக எளிமையானது.’’
‘’அப்படியென்றால் நான் அதைச் செய்துகொள்கிறேன். ஏனென்றால், நான் எப்போதுமே என்னைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.’’
‘’என்ன அர்த்தத்தில் இப்படிச் சொல்கிறாய்?’’
‘’நான் என்னைப்பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை.’’
‘’நல்லது, எனக்கு உன் மீது அக்கறை இருக்கிறது.’’
‘’ஓ, ஆமாம். ஆனால், நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதனாலொன்றுமில்லை, நான் அதைச் செய்துவிடுகிறேன். அதன்பிறகு எல்லாமே நல்லதாகிவிடும்.’’
‘’நீ அந்தவகையில் நினைப்பதானால், நீ அதைச் செய்யவேண்டுமென்று நான் சொல்லமாட்டேன்.’’
இளமங்கை எழுந்து, தொடர்வண்டிநிலையத்தின் கடைசி முனை வரை நடந்தாள். எதிரில் அந்தப்பக்கமாகத் தானியவயல்களும் எப்ரோ ஆற்றின் கரை முழுதும் மரங்களும் இருந்தன. ஆற்றுக்கும் அப்பால், வெகுதூரத்தில் மலைகள் தெரிந்தன. மேகநிழல் ஒன்று வயல்வெளியில் ஊர்ந்து சென்றது. அவள் மரங்களின் ஊடாக ஆற்றினைப் பார்த்தாள்.
‘’இதையெல்லாம் நாமே வைத்துக்கொள்ள முடியும்.’’ என்றாள், அவள். ‘’ஏன், எதுவொன்றையும் நாம் வைத்துக்கொள்ளமுடியும்தான்; நாம்தான் ஒவ்வொரு நாளும் அதை மேலும் மேலும் முடியாததாக்குகிறோம்.’’
‘’என்ன சொன்னாய்?’’
‘’எதுவொன்றையும் நம்மால் வைத்துக்கொள்ளமுடியும் என்றேன்.’’
‘’எதுவொன்றையும் நாம் வைத்துக்கொள்ளலாம்.’’
‘’இல்லை, நம்மால் முடியாது.’’
‘’இந்த உலகம் மொத்தத்தையுமே நாம் வைத்துக்கொள்ளலாம்.’’
‘’இல்லை, நம்மால் முடியாது.’’
‘’நாம் எங்கே வேண்டுமானாலும் போகலாம்.’’
‘’இல்லை, நம்மால் முடியாது. இதற்கு மேல், அது நம்முடையதில்லை.’’
‘’அது நம்முடையதுதான்.’’
‘’இல்லை, அப்படியில்லை. அதை நம்மிடமிருந்து, வெளியே எடுத்துவிட்டார்களென்றால், திரும்பக் கிடைக்கவே கிடைக்காது.’’
‘’ ஆனால், அதை இன்னும் வெளியே எடுக்கவேயில்லையே.’’
‘ நாம் கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாமே.’’
‘’இப்படி, நிழலுக்கு வா,’’ என்ற அவன் ‘’நீ அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம், அப்படி நினைக்கவும் கூடாது..’’ என்றான்.
‘’நான் எந்த மாதிரியும் நினைக்கவில்லை. எனக்கும் விஷயம் தெரிகிறது, அவ்வளவுதான்.’’ என்றாள், அவள்.
‘’நீ விரும்பாத எந்த ஒன்றையும் நீ செய்யவேண்டுமென்று நானும் நினைக்கவில்லை.’’
‘’அது எனக்கும் நல்லதில்லைதான்.’’ என்ற அவள், ‘’அது எனக்குத் தெரியும். இன்னொரு பியர் குடிக்கலாமா?’’ என்றும் கேட்டாள்.
‘’சரி. ஆனால், நீ புரிந்துகொள்ளவேண்டியது …..’’
‘’எனக்குப் புரிகிறது.’’ என்ற அவள், ‘’ இப்படியே பேசிக்கொண்டிருப்பதை நம்மால் நிறுத்தமுடியாதா?’’ எனக் கேட்டாள்.
அவர்கள் மேசைக்கு வந்து அமர்ந்தார்கள். இளநங்கை, எதிரில் தெரிந்த பள்ளத்தாக்கின் வறண்ட பகுதியைப் பார்க்கத் தொடங்கினாள்; அந்த மனிதன் அவளையும் மேசையையும் மாறிமாறிப் பார்க்கத் தொடங்கினான்.
‘’நீ இதில் புரிந்துகொள்ளவேண்டியது, நீயாக விரும்பாத எந்த ஒன்றையும் நீ செய்யவேண்டுமென்று நான் சொல்லவில்லை என்பதைத்தான்.’’ என்ற அவன், ‘’அது எந்த ஒருவகையிலாவது உனக்கு வேண்டியதாகுமானால் அதை ஏற்றுக்கொண்டு, அதன் வழியிலேயே போக முழுமனதோடு சம்மதிக்கிறேன்.’’ என்றான்.
‘’அது எந்த ஒருவகையிலும் உங்களுக்கு வேண்டியதாகாதா? நாம் அதனுடன் அப்படியே இருக்கலாம்.’’
‘’ வேண்டியதாகிறதுதான். ஆனால் எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் வேண்டியதில்லை. வேறு எந்த ஒருவரும் எனக்கு வேண்டியதில்லை. அது மட்டுமில்லை, எனக்குத் தெரியும், அது முற்றுமுழுவதுமாக எளிமையானது.’’
‘’ஆமாம், உங்களுக்கு நிரம்பத் தெரியும், அது முற்றுமுழுவதுமாக எளிமையானது.’’
‘’நீ அப்படிப் பேசுவதெல்லாம் சரிதான், ஆனால் அது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.’’
‘’இப்போது எனக்காக ஒன்று செய்வீர்களா?’’
‘’ உனக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன்.’’
‘’தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து இந்தப் பேச்சை நிறுத்துகிறீர்களா?’’
அவன் எதுவும் சொல்லவில்லை; ஆனால், தொடர்வண்டி நிலையச் சுவரின் மீது சாய்த்துவைக்கப்பட்டிருந்த பைகளையே பார்த்தவாறிருந்தான். அவற்றின் மீது, அவர்கள் இரவுகளைச் செலவழித்த விடுதிகளின் முத்திரைவில்லைகள் ஒட்டியிருந்தன.
‘’ ஆனால், ஒரு விஷயம், நீ அதைச் செய்துதானாக வேண்டுமென்று எனக்கில்லை. அது எப்படியானாலும் ஆகட்டும், அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை.’’ என்றான், அவன்.
‘’நான் இப்போது கத்திவிடப்போகிறேன்.’’ என்றாள், இளநங்கை.
‘’ மதுவகப் பெண் பியர் நிரம்பிய இரண்டு கண்ணாடிக் கோப்பைகளுடன் திரைச்சரடுகளின் ஊடாக வந்து, அவற்றை ஏற்கெனவே ஈரமாகியிருந்த தகடுகளின் மீது வைத்தாள். ‘’தொடர்வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடும்.’’ என்றாள், அவள்.
‘’அவள் என்ன சொன்னாள்?’’ எனக் கேட்டாள், இளமங்கை.
‘’இன்னும் ஐந்து நிமிடத்தில் தொடர்வண்டி வந்துவிடுமென்கிறாள்.’’
இளமங்கை அந்தப் பெண்ணைப் பார்த்து, நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்முகத்துடன் புன்னகை பூத்தாள்.
‘’பைகளையெல்லாம் நிலையத்தின் அந்தப் பக்கமாகக் கொண்டுபோய் வைத்துவிடுவதுதான் நல்லது.’’ என்றான், அவன். அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
‘’அப்படியானால் சரி. வைத்துவிட்டு வாருங்கள். பியரைக் குடித்து முடித்துவிடலாம்.’’
அவன் இரண்டு கனத்த பைகளையும் தூக்கிக்கொண்டு, நிலையத்தைச் சுற்றி நடந்து அடுத்த தண்டவாளப்பாதைக்குப் போனான். அவன் தண்டவாளப் பாதையில் நெடுகி நோக்கிய போதும் தொடர்வண்டி கண்களுக்குத் தெரியவில்லை. திரும்பிவரும்போது, தொடர்வண்டிக்காகக் காத்திருந்தவர்கள் மது அருந்திக்கொண்டிருந்த கூடத்துக்குள்ளாக நுழைந்து நடந்தான். மதுவகத்தில் ஒரு ஏனிஸ் வாங்கி அருந்திமுடித்துச் சுற்றிலுமிருந்த மனிதர்களைப் பார்த்தான். அவர்கள் எல்லோரும் தொடர்வண்டிக்காகவே காத்துக்கொண்டிருந்தார்கள். மணித்திரையைத் தள்ளிக்கொண்டு, அதனூடாக வெளியே வந்தான். அவள் மேசையிலேயே அமர்ந்திருந்தாள்; அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
‘’இப்போது கொஞ்சம் நன்றாக இருக்குமே?’’ என்று கேட்டான், அவன்.
‘’நான் நன்றாகவே இருக்கிறேன்.’’ என்றவள், ‘’என்னிடம் எந்தக் கோளாறும் கிடையாது. நான் நன்றாகவே இருக்கிறேன்.’’ என்றாள்.
அப்சிந்தே1 – பச்சை நிறத்திலிருக்கும் கடுமையான ஒரு மதுவகை, தமிழில் எட்டித் தேறல் எனப்படுகிறது.
jig 2 – (jĭg) n. Offensive Slang Used as a disparaging term for a black person. – கறுப்பின மனிதனைக்குறிப்பிடும் தரக்குறைவான சொல் [Probably shortening of jigaboo.]
••••••••••
மலைகள் இணையிதழ் எண் 95 ஏப்ரல், 3, 2016 ல் வெளியானது.

Monday 11 April 2016

ஆக்டேவியா பாஸ் கவிதைகள் - நாளின் உதயம் - DAYBREAK - Poem by Octavio Paz

நாளின் உதயம் ஆக்டேவியா பாஸ் கவிதை  

காற்றின் கரங்களும் இதழ்களும்                                       நீரின் இதயம்
             யூகலிப்டஸ்                                        மேகங்களின் முகாம்திடல்                                                நாளும் பிறக்கும் உயிர்                                                 ஒவ்வொரு உயிரிலும் பிறந்த மரணம்

நான் கண்களைக் கசக்குகிறேன்:                                    
வானம் நிலத்தில் நடக்கிறது
                          
                           தமிழில் ச. ஆறுமுகம்

DAYBREAK - Poem by Octavio Paz

Hands and lips of wind                                                                                                                      
heart of water                                                                                                                                                              
                            Eucalyptus                                                                                                                                 
campground of the clouds                                                                                                                       the life that is born everyday                                                                                                                     the death that is born every life

I rub my eyes:                                                                                                                                             the sky walks the land


Pp 233, The Collected Poems of Octavio Paz, 1957 – 1987 Edited by Eliot Weinberger, Thirteenth Print, New Directions Books, Newyork.



Saturday 2 April 2016

கனடா சிறுகதை - 1 =1 அன்னே கார்சான் - 1=1 By ANNE CARSON

1 = 1 

(கனடியன் ஆங்கிலம்):அன்னே கார்சன் ANNE CARSON 

தமிழில்  ச.ஆறுமுகம்


anne-carson
அன்னே கார்சன் (ஜூன் 21, 1950 இல் பிறந்தவர்) ஒரு கனடியக் கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் செவ்வியல் பேராசிரியர். பிரின்ஸ்டன், மிச்சிகன் மற்றும் மெக்கில் பல்கலைக் கழகங்களில் 1980 – 1987 வரை பணிபுரிந்தார். 1998 இல் குக்கென்ஹீம் ஃபெல்லோஷிப் மற்றும் 2000 இல் மாக்ஆர்தர் ஃபெல்லோஷிப் பெற்றார். லேனான் இலக்கிய விருதினையும் வென்றுள்ளார்.
செவ்வியல் மொழிகள், ஒப்பியல் இலக்கியம், மானுடவியல், வரலாறு மற்றும் வணிகவியல் கலை போன்ற அறிவுப்புலங்களின் பின்னணி கொண்ட செவ்வியல் பேராசிரியரான இவர், பல்வேறு துறைகளிலிருந்தும் அடிப்படைக் கருத்துகள் மற்றும் சிந்தனைகளைக் கலந்து படைப்புகளை உருவாக்குகிறார். இதுவரையில் கவிதை, கட்டுரை, உரைநடை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நாடக உரையாடல், புனைவு மற்றும் புனைவற்றதென அனைத்து வகைகளின் கலப்புவகையினமாக 18 படைப்புகள் வெளியாகியுள்ளன.
11.01.2016 நியூயார்க்கரில் வெளியாகியிருப்பதும், தற்போது தமிழாக்கம் செய்யப்படுவதுமான படைப்பும் அந்த வகையினதாகப் புரிந்துகொள்ளக் கடும் முயற்சியைக் கோருவதாகவே உள்ளது.
****
அவள், பிறரைப் பார்த்துவரச் சென்றிருக்கிறாள். அதிகாலை விடியலில் அவர்கள் எல்லோரும் விழித்தெழுவதற்கு முன்பாகவே, பாச், முதல் க்ளாவிச்சோர்டு1 இசைக் கோர்வையினைக் கேட்டுக்கொண்டே ஏரிக்கு நடக்கிறாள். என்றைக்கு அதை முதன் முதலில் கேட்டாளோ, அன்றிலிருந்தே, அதை நினைக்கும்போதெல்லாம் ஈரம் கசிகிற அவள், ஏதோ ஒரு நாளில் நடைபெறப்போகும் அவளது ஈமச்சடங்கில் அதுதான் இசைக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டிருந்த அதே இசையைக் கேட்டுக்கொண்டே நடந்துசெல்கிறாள். காற்றின் இடைவிடாக் கசையடிக் கடைதலில், ஏரி அலைவுற்றுக்கொண்டிருக்க, அலைகள் (பெரிய ஏரி) என்ன செய்யுமோ அதைச் செய்துகொண்டிருக்க, அது உள்ளேயா அல்லது வெளியேயா என்பது மட்டும் அவளுக்குத் தெரியவேயில்லை. கரையில் ஒரு ஆண் நின்றுகொண்டிருக்க, பெரிய நாயொன்று வாயில் கம்புடன் அவனை நோக்கித் திரும்பி நீந்திக்கொண்டிருக்கிறது. இது மீண்டும், மீண்டும் நிகழ்கிறது. நாய் களைப்படையவில்லை. அவள் நீச்சல் தொப்பி ஒன்றினைத் தலையில் ஒட்டிக்கொண்டு, நீர்க்கண்ணாடியணிந்து, ஏரிக்குள், குளிர்கிற ஆனால் அதிரவைக்காத நீருக்குள் நுழைகிறாள். நீந்துகிறாள். உயரமான அலைகள் ஒரே திசையில். நாய் போய்விட்டிருக்கிறது. இப்போது அவள் மட்டும் தனிமையில். நன்றாக நீச்சலடிப்பதற்கும் இந்த நீரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்குமான உந்துதல் இருக்கிறது. நீச்சல் என்பது மிகமிக எளிதானதென்றும் முயற்சியே தேவையற்றதென்றும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் அது பெரும் எதிர்பார்ப்புகள் நிறைந்தது. அது ஒரு குளியல்! ஒவ்வொரு நீர்நிலைக்கும் அது, அதற்கே உரிய தனித்த விதிகளும் பேணல்களும் உள்ளன. தவறாகப் பயன்படுத்துவதென்பதை விவரிப்பது கடினமானது. அது, அழகினைத் தெரிந்துகொள்ளும் போராட்டத்துடன், மிகச் சரியாக அழகினைத் தெரிந்துகொள்வது, ஒருவரைச் சரியான பாதையில் செலுத்துவது, வானம்பாடியின் பாடல் கேட்கின்ற சரியான இடத்தில் அமர்வது, மணமகன் மணமகளை முத்தமிடுவதைக் காண்பது, வால்நட்சத்திர நேரத்தைக் கணக்கிடுவதோடு இணைகின்ற பொதுவிடம் கொண்டதுவோ! ஒவ்வொரு நீரும் நிலைகொள்ளவேண்டிய சரியான இடமொன்று இருக்கிறது, ஆனால், அந்த இடம் அசைந்துகொண்டேயிருக்கிறது. நீங்கள் அதைக் கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கவேண்டும், அதோடு அது உங்களைத் தேடிக்கண்டுபிடிக்குமாறும் செய்யவேண்டும். ஒவ்வொரு உந்துகையிலும் நீங்கள் உள்ளுக்குள்ளாக ஆழ அமிழ்ந்து, வெளிவர வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதனைத் தோற்கடிக்கமுடியும். அதன் பொருள் என்னவென்கிறீர்கள், `தோற்கடியுங்கள்` என்பதுதான்.
சிறிது நேரம் சென்றதும், அவள் கற்களின் மேலாக ஏறி, வெளிவந்து, சின்னஞ்சிறு துடுப்பணி2களை அணிந்துகொண்டு மீண்டும் நீருக்குள் நுழைகிறாள். வேறுபாடு என்னவெனில், அழகிய பொருள் ஒன்றினை மேலோட்டமாகப் பார்ப்பதற்கும் வெறித்துநோக்குவதற்குமான வேறுபாடுதான். இப்போது அவள் நீரின் வழியிலேயே சென்று அங்கேயே தங்கிவிடமுடியும். அவள் தங்குகிறாள். அவளுக்குத் தெரிந்த மிகமிக மோசமான தன்னலவாதிகளில் அவளும் ஒருத்தி; இதனைப்பற்றி, நீச்சலின்போதும், அதன் பின்னர் கரை மீதிலும், நடுங்கிக்கொண்டே துவர்த்திக்கொள்ளும்போதும், அவள் நினைத்துப் பார்க்கிறாள். அது, ஆளுமையின் ஒரு வகைக் கூறு, மாற்றுவதென்பது கடினம். பெருந்தன்மைப்போக்கினைக் கடைப்பிடிக்க, அவள் முயற்சிக்கின்றபோது, அது, கரடியின் மயிர்ப்பாதம் கொண்டு துடைப்பது போல, அடுத்தவர்களின் வாழ்க்கைக்குள்ளும் விஷயங்களை மேற்கொண்டும் கெடுத்துவிடுவதாகத்தான் தெரிகிறது. மேலும், மற்றொரு நபருடனான செயலாற்றுகையில், பகிர்தலில், கருணைக்கொடையில், இரக்கத்தில், அவள் உத்வேகத்தைக் காண்பதில்லை; அது வானத்தை நோக்கிய ஒவ்வொரு திசையிலும் வெற்றிடமே நிரம்பியுள்ள உலகத்துடனான, அசைவுகளற்ற, அமைதியான ஒரு காலையில் நீருக்குள் நுழைவதைப் போன்றதான, திருகாணியின் பரிசுத்தமான உயிர்த்தன்மையினை ஒருபோதும் அளித்ததில்லை. அந்த முதல் நுழைவு. உணர்வின் எல்லையினைக் கடந்து உள்ளுக்குள்ளாக, எதற்குள்ளாக?
மேலும், (அவள் பொருத்தமான சொல்லைத் தேடுகிறாள்) நீருக்குள்ளாக, அதன் போக்கிலேயே சமநிலைகொள்வதற்கான புரிதல் என்பது, தெளிவாகப் புலனாகிற, அனுசரிப்புடன் கூடிய எண்ணற்ற இணக்கச் செயல்முறைகள்; அது, அவளது வாழ்க்கையிலிருந்தும் மைல்கணக்கில், தொலைவுக்கும் தொலைவாக விலகிநிற்காமல், மாறுபட்டு விரியும் அதனைப் பார்த்துக்கொண்டே, ஆனால், அதற்குள்ளாகவே, அதனைப் போலவே, அதுவாகவே, காலத்தையும் மனத்தையும் ஒரேநிறமாக்கித் தோய்ப்பதாகும். தியானத்தைப் போன்றதல்ல, அது – சிந்தனையற்று, எப்போதும் கூறப்படுகிற ஒரு ஒப்புமை – ஆனால், மிகுதியும் தடய அறிவியல், கூர்ந்த கவனத்துடனான ஒரு செயல்பாடு, அதேநேரத்தில் ஓரளவுக்குத் தன்னிச்சையான அனிச்சைஇயக்கம். இந்தச் செயல்பாட்டு முறைகள் ஒன்றையொன்று விலக்கிக் கொள்வதில்லையென நீச்சல் அறிவுறுத்துகிறது. அதில் ஒரு கல்தன்மை இருக்கிறது. கற்களிலிருந்து காற்று வேறுபடுவது போல, நீரும் வேறுபடுகிறது. அதனாலேயே, அதன் அமைப்பு, அதன் தொன்மை, உங்கள் இருப்பு பற்றி எதிர்வினை ஏதுவுமில்லாத அதன் முழுமை, அப்படியான நிலையிலும், வலியப்புகுத்திய உங்களின் ஊடுருவலுக்கு இணங்குவதுமான வரலாற்று வழியில் உங்கள் பாதையை நீங்கள் தேடிக்கண்டடையவேண்டும். அங்கே உங்களுக்கென, மனிதப்பண்பு ஏதும் இல்லை. மேலும், நீருக்கு, அதன் மேலேயே ஆர்வமற்ற நிலை. கற்களின் கதையை எத்தனை அருமையாகச் சொன்னாலும், கற்கள் அக்கறைகொள்வதில்லை. உங்கள் மென்மை உணர்வுகள், ஆச்சரியப்படத்தக்க உங்கள் நற்பேற்று வாழ்க்கை, உங்கள் தாய்ப்பாசம், அழகாகக் கட்டமைக்கப்பட்ட உங்களின் மிகச்சிறந்த உவமைகள் அனைத்தும் ஆழத்தின் ஆழத்திற்கான சரிவில், தூய்மை, தூய்மைக்கேடு, இரக்கமற்ற தன்மைகளோடு காணாமற்போகின்றன. இதில் தன்னலத் துறப்பு (ஒப்பீடு: தியானம்) ஏதுமில்லை, பற்றறுப்பதான போராட்டம் இல்லை, இந்த விஷயங்கள், கடந்துபோயிருக்கின்ற இவையெல்லாவற்றிற்கும் நீங்கள் பெயர்சொல்ல முடியும். பொருள், `சென்றுவிட்டன` அவ்வளவுதான்.
அவளது உறவாடல் முடிகிறது. மீண்டும் வீட்டில், செய்தித்தாள்கள், ஐரோப்பாவில் தரையோடு தரையாக நசுங்கிய கதவுடன் ஒரு தொடர்வண்டிப் பெட்டியோடு தென்கோடிப் போர்ப்பகுதி ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களில் தப்பித்துப் பிழைத்தவர்கள் மற்றும் போக்குவரத்து மறுக்கப்பட்ட மக்களின் முதல்பக்கப் புகைப்படங்கள். உயிர்பிழைத்திருக்கவேண்டிய அவசியத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அழுத்தப்பட்ட அழுக்கான குடும்பங்கள் மற்றும் துயர ஆன்மாக்கள், கணக்கிட இயலாத கைகள் மற்றும் கால்கள், விரியத்திறந்து சிவந்த கண்கள், தொடர்வண்டிக்குள் அடைபட்டு, இரவு முழுவதும் விடியலுக்கான காத்திருப்பு, அவளுக்கேயான தனித்த காலைநேரத்துக்குள், அவளால் நுழையமுடியாத, எதிர்க்கருத்து நிறைந்த ஒரு காட்சி.
நாம் வாழ்கிற இந்த உலகில் இந்த இரண்டு விடியற்பொழுதுகளும் அருகருகாகவே நிகழ்வது, எந்த மாதிரியான உணர்வைத் தோற்றுவிக்கிறது என்பது ஒரு கேள்வியாக வடித்தெடுக்கப்படுமானால், அந்தக் கேள்விக்குத் தத்துவம், கவிதை, செல்வம் அல்லது அவளது மேம்போக்கான அறிவுநிலை அல்லது ஆழ்மனத்தாலுங்கூடப் பதிலளிக்கமுடியாதென அவள் அஞ்சுகிறாள். `பகுத்தறிவு` போன்ற சொற்கள், மிகுதியாகவே, நகைக்கத்தக்கனவாகின்றன. புலம்பெயர்வோர், நீந்துவோர், தன்னலவாதி, அடிமட்டத்தில் உழலும்படி விதிக்கப்பட்டோர் போன்ற பன்மைத்துவக் கூட்டுப்பொருட்களுக்கு, பகுத்தறிவு வாதங்கள் பொருந்துபவை; ஆனால், இருத்தலியலும் உணர்வும் ஒருமைக்கே உரியவை. கூட்டுப்பொருள் ஒன்றினைப்பற்றி நீங்கள் தீர்வுகளை உருவாக்கிவிடலாம். ஆனால், அதையே உங்களைநோக்கித் திருப்பிப் பார்க்குமாறு கேட்கமுடியாது. தீர்வுகள் தந்திரமானவை; கட்டுக்குள்ளிருந்து உங்களை மட்டும் வெளியேற விட்டுவிடுகின்றன;
அவள் கீழ்த்தளத்திற்கு இறங்கி, படிக்கட்டு முகப்பில் சிறிது குளிர்ச்சியாக இருக்குமென்று, அங்கு செல்கிறாள்.
சாலை ஊர்திகள் கடும்வேகத்தில் பறந்து, மறைகின்றன. ஓரப்பாதையில் சாண்ட்லர் சுண்ணக்கட்டி ஓவியம் ஒன்றை வரைந்துகொண்டிருக்கிறான். தோழர் சாண்ட்லர் என அவள் அழைக்கிறாள். அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. என்ன ஓவியம்? அவன் சுண்ணக்கட்டியைத் தேய்த்துக்கொண்டிருக்கிறான். அவனது பார்வை அதற்குள்ளேயே தோய்ந்து மேற்செல்கிறது. அவன் வீட்டுக்குப் பின்புறம் எங்கேயோ வசிக்கிறான்; அதிகம் பேசுவதில்லை; நிறையவே வரைகிறான். அவள் அவனைத் தோழர் என அழைப்பதற்குக் காரணம் அவள், அவனைச் சந்தித்த கோடையில் ரஷ்யப் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தாள் என்பதோடு அவனை அந்தரங்கமானவனென நினைத்ததுந்தான். இது ஒரு தவறு. அந்தரங்கம், ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை மீதான அக்கறையைக் காட்டுவதாகிறது. சாண்ட்லர் எந்த ஒரு அறைக்குள்ளும் நுழைவதை, அங்கு இருப்பதை அல்லது அறையினைவிட்டு வெளியேறுவதை, சிறிய ஒரு மனித அலை பின்னிட்டுச் சுருங்கிக்கொள்வது போல, மெல்ல ஊறிக் கசிந்து மறைவதை, ஒருபோதும் கண்டிருக்க இயலாது.
அவன் அருகிலேயே, அவள் நிற்கிறாள். ஓவியம் ஒரு பேரிக்காய் மரம். மரம் முழுவதும் பச்சைச் சுண்ண உருண்டைகளாக, மஞ்சள் நிறப் பாலேட்டு வெண்மை தெறிக்கும் அழகழகானச் சிறுசிறு காய்களை அவள் காண்கிறாள். அவற்றில் ஒன்றையாவது கடித்துவிடவேண்டுமென்று, குனிய நினைக்கிறாள், அய்யோ! ஆணியின் தலையிலேயே அடித்துவிட்டீர்கள்! தோழர், என்கிறாள். அவன் பதில் பேசவில்லை. ஒருமுறை அவர்கள் பேசிக்கொண்டபோது, சிறுசிறு துண்டுகளாகப் பல மாதங்களுக்கு நீண்ட அந்த உரையாடல், காளான்கள் பற்றியதாக இருந்தது. அவனது சிறைக்காலத்தை வெறுப்பாக்கிய ஒரே பொருள் இந்தக் காளான்கள்தான், என்றான், அவன். உணவைக் குறிப்பிடுவதாக இருந்தால், அது ஒரு பிரச்சினையாகிற அளவுக்கு, சிறையில் காளான் உணவு பரிமாறினார்கள் என்று அர்த்தமாகிறது; அல்லது சுவர் மூலைகளில் பூசணங்கள் படர்கிற மாதிரியான ஈரக்கசிவுள்ள அறையாக அவனது அறை இருந்ததெனப்பொருள்கொள்ளலாமென்றால், அது மிகமிக அதிகபட்சமாகத் தோன்றுகிறதேயெனப் பல நாட்களுக்கு அவள் இதை நினைத்து வியந்துகொண்டிருந்தாள்; பின்னர்தான், அவனது அறைச் சாளரம் வழியாக குடைக்காளான்கள் பூத்துக்கிடந்ததைப் பார்த்தானென்றும், அவன் சிறுபையனாக இருந்தபோது அவனது அம்மாவோடு காளான் பறிக்கக் காட்டுக்குப் போவது வழக்கமென்றும், அது அவனைத் துயரம்கொள்ளச் செய்ததென்றும், மெல்லமெல்ல அவள் புரிந்துகொண்டாள். காளான் மீது ஈர்ப்பு ஏதுமில்லாத அவளுக்கு, அந்தநேரத்தில் விஷயபூர்வமாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லாமலிருந்ததால், ஜான் கேஜு3ம் காளான் பறிப்பவராக இருந்தவர்தான் என்றும், அவர் அதைப்பற்றி ஒரு நூல் எழுதியிருப்பதாகவும், அது ஒரு வழிகாட்டி வகைப்பட்டதென்றும், அவள் அதனை அவனுக்குத் தருவதாகவும் சொன்னாள். சாண்ட்லர் பதிலெதுவும் சொல்லவில்லை. அவன் புத்தகங்கள் படிப்பவனா அல்லது அவனுக்கு ஜான் கேஜைத் தெரிந்திருக்குமாவென அவளுக்கு உறுதிப்பட எதுவும் தெரியவில்லை. உரையாடல் நிலையற்ற போக்குடையது. இப்போது, வட்டவட்டமான வெளிறிய சுண்ணப் பேரிக்காய்களைப் பார்க்கும்போது அவள் மனத்துக்குள் காளான்களின் நினைவு எழ, அவள் சொல்கிறாள்: ஒருநாள், எனக்கு நினைவிருக்கிறது, ஜான் கேஜ், அவரது அம்மாவுடன் காளான் பறித்துக்கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் போலக் கழிந்தபின், அவள் அவன் பக்கம் திரும்பிச் சொல்கிறாள்: நாம் கடைக்குப் போய் எப்போதுமே உண்மையான காளான்கள் சிலவற்றை வாங்க முடியும்.
சாண்ட்லரிடம் அமைதி. பேரிக்காய்க் காட்சிப்பகுதியில் அங்கும் இங்குமாகச் சில சிவப்புத் தீட்டல்களைச் செய்துகொண்டிருந்தான். பின்னர், திடீரென அவன், வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான். நகை அவனைவிட்டும் பிரிந்து மறைந்தது. அவன் சுண்ணப்பூச்சுக்குத் திரும்பினான். சீக்கிரம், சீக்கிரம் என்றும், அவளால் சரியாகக் கேட்கமுடியாத ஏதோ ஒன்றுமாக, அவனுக்குள்ளாகவே முணுமுணுக்கிறான்; அது, சின்னப்பிள்ளைத்தனமான ஏமாற்றாக இருக்கிறதே என்பது போலக் கேட்டது. அவள் படிக்கட்டு முகப்புக்குத் திரும்பிச்சென்று கீழ்ப்படியின் மேல் ஏறிநிற்கிறாள். இப்போது அந்தி சாய்ந்துவிட்டது. ஆனாலும் வெக்கையைப் பாரேன். நெடிய நாள்தான் சாண்ட்லர், என அவள் அவனது பிடரிப்பக்கம் சொல்கிறாள். அவன் நடைமேடையிலேயே கையில் சிவப்புச் சுண்ணக்கட்டியுடன் மேலும் நகர்ந்து, புதிய ஓவியத்திற்கான இடம் குறிக்கிறான். அது ஒரு நரியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் முடிக்கும்போது, அவன் ஒரு நரியைத்தான் விரும்பித் தேர்வுசெய்கிறான்.
மாடி. நீந்தமுடியாமற்போன தோல்வியைப்பற்றியே மீண்டும், மீண்டுமாகச் சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதை அவள் உணர்கிறாள். அது, எண்ணல், எடுத்தல், முகத்தல் மற்றும் நீட்டலென அனைத்து அளவையியல் சார்ந்ததாக அதேநேரம், பண்புசார்ந்துமிருக்கலாம். இப்போதுங்கூட உலகில் எத்தனை குளம் குட்டை, தடாகங்கள், ஏரிகள், நீரிணைப்புகள், வளைகுடாக்கள், நீரோடைகள், நீச்சலுக்கு வசதியான நீர்க்கரை நீட்சிகள், இருக்கின்றன என்று கற்பனைசெய்து பாருங்கள், அவற்றில் பாதியாவது நீந்துவோர் இல்லாமல், இரவு அல்லது கருத்தின்மை காரணமாக வெறுமையாகக் கிடக்கின்றன. வெறுமை, ஆனாலும் முழுமையான பரிபூரணத்துவமுடையவை. என்ன ஒரு வீணடிப்பு, என்னவொரு அறிவுக்கொவ்வாத செய்கை – இவற்றுக்கெல்லாம் ஒருவரை ஏன் பொறுப்பாக்கக்கூடாது? மின்னித்தோன்றும் பர்ட் லங்காஸ்டரை4 ஒருபக்கமாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, ஒவ்வொன்றாக அல்லது அனைத்தையும் ஒரே நேரத்தில் புவியியல் அடிப்படையில் அல்லது கருத்தாக்க அடிப்படையில், எல்லா நீர்நிலைகளும் யாராவது ஒருவராலாவது பயன்படுத்தப்படவேண்டும். அவளது ஆழ்மனப் பெருங்கடலின் ஊடாக, நெரிசலாகப் பல வரிசைகளில் திணிக்கப்பட்டிருந்த பயணிகளுடன் புகலிடம் தேடும் அகதிகள் பலருமிருந்த, அவசரத்துக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிப்படகு ஒன்று ஆடிஆடி, ஓரமாக அமர்ந்திருந்த பயணிகள் சிலரை கடலில் உதிர்த்துக்கொண்டு மிதந்துவந்தது. அந்தப் படத்தை அவள் பார்த்திருக்கிறாள். பெருங்கப்பல்கள் மிக அருகிலேயே பயணிக்கும்போது, அவர்களின் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு, சிறிது தயங்கி நின்று, பின்னர் கிளம்பிச் செல்வதாகப் படித்திருக்கிறாள். அவற்றின் எந்திரங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் முன், சிலநேரங்களில் குடிநீர் அல்லது பிஸ்கோத்துப் புட்டிகள் கப்பல்களிலிருந்து அள்ளி வீசப்பட்டன. கப்பலின் எந்திரம் மீண்டும் இயங்கத் தொடங்குவதைக் கண்ணுறும்போது, அந்தக் கணத்தின் பாழ்நிலைக்கு மாற்றாக அவள் எதைக் குறிப்பிடமுடியும். அந்தப் பாழ்நிலை பெறவேண்டிய விலை என்ன, அதை யார் கொடுப்பார்கள். சில கேள்விகளுக்குக் கேள்விக்குறிகள் தேவைப்படவில்லை.
பயணிகள். பயணிக்க. நிறைவோடு பயணிக்க. விட்டுக் கடந்து செல்ல. தன்னைவிட்டுக் கடந்துசெல்லுமாறு செய்ய. யார்தலையிலாவது சுமத்திக் கழிக்க. துப்பித்தொலைக்க. கழன்றுகொள்ள. ஒருவரின் மதிப்பினைப் பெற. அழைப்பு மணி ஒலிக்கும்போது அவள் தயிர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்; சட்டையின் கைப்பகுதியால் வாயைத் துடைத்துவிட்டு, அந்த மணி வேலைசெய்கிறதென்பதே தெரியாதெனச் சொல்லிக்கொண்டே, வாசலுக்கு வருகிறாள். தோழர் சாண்ட்லர் பதிலெதுவும் சொல்லவில்லை. தெருவைப் பார்க்குமாறு தலையாலேயே சைகை காட்டுகிறான். அவர்கள் இறங்குகிறார்கள். படியிறங்கும்போது உனது கண்புருவத்தில் தயிர், எனத் தலையைத் திருப்பித் தோளுக்கு மேலாகச் சொல்கிறான். ஓ, நன்றி என்கிறாள், அவள். தெருவிளக்கு ஒன்றின் கீழாக, வரைந்து முடிக்கப்பட்ட நரி ஓவியம் ஒளிர்கிறது. ஒளி உமிழும் நிறமிகள் கொண்ட ஏதோ ஒரு வகைச் சுண்ணக் கட்டியைப் பயன்படுத்தியிருக்கிறான்; பளபளக்கும் நீலப்பச்சை வண்ணத் திண்கூழ் ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த நரி, எழுகின்ற வாய்ப்புள்ள விளக்கங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிவிடுகிற ஒரு பார்வையை அதன் முகத்தில் கொண்டிருக்கிறது. அவள் நீலப்பச்சையை வெறித்துப் பார்க்கிறாள். அதில் தெளிவு, ஈரத்தன்மை, குளிர்மை, தனக்குள்ளேயே மூழ்கிப்போகும் தண்ணீரின் ஆழ்ந்த ஒளி அனைத்தும் தெரிகிறது. ஒரு ஏரியையே உருவாக்கிவிட்டீர்கள், எனச் சொல்லிக்கொண்டே அவன் பக்கம் திரும்புகிறாள்; ஆனால், அவனோ, போய்விட்டிருக்கிறான். இப்போது இரவு. கட்டவிழ்த்து, விடுவிக்கப்படுகின்ற போதெல்லாம் எங்கெங்கு போவானோ, அங்கு போய்விட்டான். அவள் சிறிதுநேரம் நிற்கிறாள், நரி நீந்துவதைப் பார்த்துக்கொண்டு, அந்த நாளினைத் திரும்பிப் பார்த்து, அதன் பிம்பங்கள் மிகமிக வலிமையானதாக இருந்தாலும், அதன் ஆன்மா – எப்படி, அதன் வாயில் எப்போதும் அமைதியைத் தக்கவைத்துக்கொள்கிறது, உயிர்ப்புடனிருக்கும்போதே அமைதிக்குள் வாயை மூடிக்கொண்டிருக்கிறதே, அது எப்படி? உயிர்ப்புடனிருப்பதே உள்ளுக்கும் வெளியிலுமான இந்த ஊற்றும் பொழிவும் தான். தேடிக்காணுதல், இழத்தல், இழைத்தல், கொடு எனக் கோருதல், முழுதும் பிடித்தாட்டுதல், தலையை நெருக்கமாக முன்நகர்த்துதல். நீச்சலுக்கு எவ்வளவு வலிமை தேவைப்படுகிறதென்று நினைக்காமலேயே நீந்த முயலுங்கள். நம்முடைய நெஞ்சைப்பிளந்த இந்தச் சிறு ஊழிக்காலத்தைப் போல அல்லாமல் உங்களால் செய்ய முடிவதைச் செய்ய முயலுங்கள். போலச் செய்வது எளிதானது. நெற்றியை ஒரு தென்றல் தழுவுவதாக உணர்கிறாள். இரவுக்காற்று. நரி சளப், சளப்பென அடிக்கும் ஒலி எதுவும் எழாமல், முன்னோக்கி உந்துகிறது. நரி தோற்பதில்லை
க்ளாவிச்சோர்டு – Clavichord – மத்திய கால இசைக்கருவி, கம்பி வாத்தியம்
துடுப்பணிகள் – Flippers – நீச்சலின்போது கை கால்களில் அணிவது.
ஜான் கேஜ் – John Cage புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்
பர்ட் லங்காஸ்டர் – Burt Lancaster ஆண் அழகுக்குப் பெயர்பெற்ற அமெரிக்க நடிகர்
http://www.newyorker.com/magazine/2016/01/11/1-equals-1?mbid=social_twitter
மலைகள் இணைய இதழ் 93  மார்ச் 02, இதழில் வெளியானது.

ஆக்டேவியா பாஸ் கவிதைகள் - வேம்பு - A Folk Poem from Uttar Pradesh introduced by Octavio Paz

உத்திரப் பிரதேசத்திலிருந்து ஒரு நாட்டுப்புறப் பாடல் - அறிமுகம் ஆக்டேவியா பாஸ்

வேம்பு
அப்பா, அப்பா, இந்த வேம்பினை ஒருபோதும் வெட்டிவிடாதீர்கள்;
வேம்பு குருவிகளின் தங்குமிடம்.
அப்பா,அப்பா, உங்கள் மகள்களை ஒருபோதும் திட்டிவிடாதீர்கள்;
மகள்கள் குருவிகளைப் போன்றவர்கள்.
குருவிகள் பறந்துவிட்டால்

வேம்பு துயரம் கொள்ளும். 

                        தமிழில் ச.ஆறுமுகம் 

A Folk Poem from Uttar Pradesh introduced by Octavio Paz

 Father, never cut this neem;
The neem is a shelter for sparrows.
Father, never scold your daughters;
Daughters are like sparrows.
If the sparrows fly away
The neem will be sad.

Pp 643, The Collected Poems of Octavio Paz, 1957 – 1987 Edited by Eliot Weinberger, Thirteenth Print, New Directions Books, Newyork.


                       தமிழில் ச.ஆறுமுகம்.