Friday 12 August 2016

தாய்லாந்து சிறுகதை - வாடகை மகிழுந்துகள், 2006 - Taxis, 2006 By Chartvut Bunyarak

வாடகை மகிழுந்துகள் 2006 - Taxis 2006
தாய்லாந்து மொழி : சார்ட்வுட் பன்யாரக் Chartvut Bunyarak
ஆங்கிலம் : திப்பாவுட் ராக்மே Tippavut Rakmaew
தமிழில் ச.ஆறுமுகம்


`நான் முழுமையான நேர்மையுடன் சாட்சியமளிப்பதாக மரகத புத்தர் மற்றும் அனைத்து இறைப்பொருட்கள் மீதும் ஆணையிட்டு, இந்த நீதிமன்றத்தில் உறுதியேற்கிறேன். நான் ஏதேனும் பொய்யான புகார் அளித்தால், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் பெருந்துன்பம் இடியாக வந்து இறங்கவும் நீதிமன்றத்திற்கு நான் உண்மையைச் சொல்வேனாகில், நானும் எனது குடும்பமும் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்ற வளர்ச்சியால் ஆசீர்வதிக்கப்படவும் …… `
நான் அர்ணானைச் சந்தித்தது அதுவே முதல் முறையாக இருந்தது. மிகக் கடுமையானதாக இல்லாத இந்த வழக்கில் அவர்தான் பிரதிவாதி; அவரது வாதங்களை விளக்குவதற்கான வழக்குரைஞராக நீதிமன்றம் என்னை நியமித்துள்ளது. எல்லாவற்றையும் கருதிப்பார்த்தால், இந்த வழக்கு நகைப்புக்கிடமளிப்பதாகவே உள்ளது. அவர் தவறு செய்ததாகச் சொல்வது சரியாக இருக்காது; ஆனால், அவர் தவறுக்கு அப்பாற்பட்டிருந்தாரென்பதும் சரியாக இருக்கவியலாது.  இதுதான் நிகழ்ந்தது :
கடந்த மார்ச்சு மாத நடுவில் அர்ணான் ஒரு வாடகை மகிழுந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து, அது, புகாருக்கு இடமாகி, கடைசியில் இருவரும் காவல்நிலையத்துக்குச் செல்லவேண்டியதாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அடிதடிப் பரிமாற்றம் நிகழ்ந்து, இரத்தமும் சிந்தவே, குற்றவழக்கு பதியப்பட்டது. அர்ணானை இறக்கவேண்டிய இடத்தில் இறக்கியதும், அவர் உள்ளங்கை அளவிற்கான கல் ஒன்றை எடுத்து மகிழுந்து மீது வேண்டுமென்றே எறிந்ததாக, வாடகை உந்து ஓட்டுநர் புகார் தெரிவித்துள்ளார்.
” நான் இறங்கவேண்டிய இடத்திலா? மிகக் கேடுகெட்ட உளறல்! பாதித்தூரம் கூடப் போயிருக்கமாட்டோம், அதற்குள் அந்த வேசிமகன் என்னைச் சாணி அல்லது மலம் போன்ற ஏதோ ஒன்றைத் தூக்கியெறிவது போல மகிழுந்திலிருந்து வெளியே தூக்கியெறிந்துவிட்டான்.”
“அவர் எதனால் உங்களைத் தூக்கியெறிந்தார்? அந்த அளவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” - நான் கேட்டேன்.
‘’நான் ஒன்றும் செய்யவில்லை. நான் சத்தியம் கூடச் செய்கிறேன் – அந்தக் கடவுள் புத்தர் மேல் சாட்சியாக. நான் அவனை ஏதாவது செய்ய நினைத்திருந்தாலோ, அல்லது செய்திருந்தாலோ, அதைப்பற்றி புகாரில் சொல்லியிருப்பானே, அப்படி எதுவும் சொல்லவில்லையே. தயவுசெய்து என்னை நம்புங்கள். போகவேண்டிய இடத்துக்குப் பாதி தூரம் இருக்கும்போதே மகிழுந்திலிருந்தும் தூக்கியெறியப்படுவதற்கு யாராவது விரும்புவார்களா? அதுவும் தொடர்ச்சியாக இரண்டு முறை! இது நியாயமாகவா இருக்கிறது?”
‘’என்ன! இரண்டாவது முறை மகிழுந்திலிருந்து தூக்கியெறியப்பட்டீர்களா? என்ன சொல்கிறீர்கள்?”      
“அதுதான் முழு உண்மை!” என்று சொல்லி மேசை மீது அர்ணான் பலமாக அறைந்தார்.
“என்னதான் நடந்தது?”
“வழக்கமாக நான் வாடகை மகிழுந்தில் செல்லும்போது, நல்லபடியாக உற்சாக மனநிலையில் ஓட்டுநருடன்  பேச்சுக் கொடுக்கவே விரும்புவேன். ஆனால் அன்றைக்கு நான் பேசுகிறபடி இல்லை. நல்ல பல்வலி, அதனால் வாயை மூடிக்கொண்டு, என் வேதனையில் கன்னத்தைப் பிடித்தவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அந்த அமைதி – ஒரு பத்து நிமிடம் இருக்கும் – அதுதான் அவனுக்கு எரிச்சலாக இருந்ததோ என்னவோ, திடீரென்று “பிரதமர் தாக்சின் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
“அப்போது பார்த்து எனது அலைபேசி `பீப்` ஒலித்துச் செய்தி ஒன்று  வந்திருப்பதைத் தெரிவித்தது. அதனால் நான் அதனைப் பார்க்க, அந்தச் செய்தி என்னுடைய சிறிய தங்கையிடமிருந்து வந்ததாகத் தெரிந்தது.  அவள், பாருங்கள், எனக்கு அடிக்கடி விதவிதமான, புதுப்புது அழைப்பொலிகளை அனுப்பிக்கொண்டேயிருப்பாள். எனக்கு இந்த தொழில்நுட்பமெல்லாம் ஒன்றும் தெரியாது. அழைப்பு வந்தால் பதில் சொல்வது அல்லது யாரையும் பேசுவதற்கு அழைப்பது, அதுவே நமக்குப் பெரிய விஷயம். அவ்வளவுதான் நம்மால் முடிந்தது. அவள் சொல்வாள், என் அலைபேசி மிகமிகத் தற்காலப் புதுமை வகையைச் சேர்ந்ததென்றும் அந்தவகையில் அது மிக நல்லதென்றும், அதில் அப்படிச் செய்யலாம் இப்படிச் செய்யலாம் என்றதோடு, அவளுடையதை என்னிடம் தந்து இதை மாற்றிக்கொள்ளலாமென்றுகூடச் சொன்னாள். நான்தான் ஒத்துக்கொள்ளவில்லை; விஷயம் என்னவென்றால் எனக்கு அவள் சொல்வது எதையும் விளங்கிக்கொள்ள இயலவில்லை என்பதுதான். அன்றைக்குப் பார்த்து, நான் வழக்கமாக அழுத்துகிற பொத்தானென நினைத்து, அது வருகின்ற  அழைப்புகளைத் தெரிவிக்கும் ஒலியை மாற்றியமைப்பதற்கானதென்ற விவரம் தெரியாமலே, ஏதோ ஒரு பொத்தானை அழுத்தித் தொலைக்க, அது எனது கெட்டநேரத்தை இன்னும் மோசமானதாக்கிவிட்டது.”
“அப்படி என்ன ஆனது?”
“ நான் அலைபேசியைக் கையாளுகையில் ஓட்டுநரைப் பார்த்து,  ”மன்னித்துக்கொள்ளுங்கள், ஏதோ சொல்லிக்கொண்டிருந்தீர்களே?” என்றேன். அதற்கு, அவன், “ஹஹ்ஹஹ்ஹா, பெரிதாக ஒன்றுமில்லை, அய்யா. பிரதமர் தாக்சின் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.” என்றான். நான் சொன்னேன், “அவருக்கென்ன, நன்றாக இருப்பாரென்றுதான்   நினைக்கிறேன். குறிப்பாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களென்று எனக்குத் தெரியவில்லை.” “நல்லது,” என்ற ஓட்டுநர், “லேட்டஸ்டாக, அவருடைய ஷின் கார்ப் பங்குகள் அனைத்தையும் சிங்கப்பூரிலுள்ள டெமாசெக் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் என்கிறார்கள்,” என்றான்.
”ஓ, ஆமாமா, அப்படித்தான்,” என்றேன் நான். “ ஏழாயிரத்து முன்னூறு கோடி, அதுவும் ஒரு பாட் (ரூ.1.92)கூட வரி கொடுக்காமல்,” என்றேன், நான்.
அர்ணான் பேசுவதை நிறுத்தினார். சுற்றிலுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, விசாரணை அறையின் அழுக்கடைந்த வெற்றுச் சுவர்களை வெறித்த அவர், எங்களுக்கிடையே கிடந்த மேசை மீதிருந்த கீறல், கிறுக்கல்களை வெறித்தார்.
“அது என்னுடைய முட்டாள் தனம் தான், பாருங்கள், அந்த ஆளின் முகம் மாறத் தொடங்கியிருந்ததை, நான் கவனித்திருக்கவில்லை. அவன் எதுவும் பேசாமலேயிருக்க, நான் பேசிக்கொண்டேயிருந்திருக்கிறேன்.  எதோ நேரம் போகட்டுமேயென்றுதான் பேசிக்கொண்டிருந்தேனே தவிர அப்படியொன்றும்    எனக்கு அதில் பெரிய அளவுக்கு அக்கறை கிடையாது. ”தேசத்தின் பொதுச் சொத்துக்களை விற்பது முற்றிலும் சரியில்லை என்றுதான் நான் சொல்வேன். அதிலும், அவர் வரியே செலுத்தவில்லை, ஒரு பாட் (1.92ரூ ) கூடச் செலுத்தவில்லை, சொன்னால் நம்புவீர்களா? இது பெரிய மர்மமாக இருக்கிறதில்லையா, உங்களையும் என்னையும் மாதிரி மாதச் சம்பளம் வந்ததும் வரவுக்கும் செலவுக்கும் எட்டாமல் கையைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோம்; அரசாங்கம் என்னவோ அதற்கும் இதற்குமென்று உதவத்தான் செய்கிறது. வருமான வரி, தொழில் வரி, சமூகநல வரி ஏன், அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு அழவேண்டியிருக்கிறது, இல்லையா? ஆனால், பிரதமர் மாதிரியான ஆள் அந்தமாதிரி காரியம் செய்வதென்பது நியாயமே இல்லையென்பேன்.” அப்போதுதான் `ம்`, ஹூம் என அந்த வேசிமகன் ஓங்கி உதைத்தான்.
”எங்கே உதைத்தார்?” 
“வேறெங்கே, பிரேக் கட்டையில்தான்; இடது ஓரமாகத் திருப்பி பிரேக்கினை ஓங்கி உதைக்கவே, நான் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே பறந்துபோய் விழுந்திருப்பேன். வேறு டாக்சி பிடித்துக்கொள்ளென்று வேறு அந்த வேசிமகன் குரைத்தான்; எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.  பேந்தப் பேந்த விழித்தேன்.”
“அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள்?”
”நான் வேறென்ன செய்ய முடியும்? இறங்கித் தொலைத்தேன். ஆனால் திகைத்துப்போனேன், உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன், நான் என்ன தவறு செய்தேனென்று என்னையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.”
”அதனால், பின்னர் நீங்கள் வேறு ஒரு வாடகை மகிழுந்தினைக் கூப்பிட்டீர்கள்; அதுதான் இந்த வழக்கு சம்பந்தப்பட்டது, இல்லையா?”
” ஆம். ஆனால் நானாக எதையும் ஆரம்பிக்கவில்லை. அவன்தான் ஆரம்பித்தான்.”
“அப்படியென்றால் இம்முறை என்ன நடந்தது?” சொல்லுங்கள்.” அர்ணானின் உடல்மொழியை நான் கவனித்தேன். எதற்காக அவர் விசாரணைக் கூண்டில் நிற்கவேண்டுமென்று திகைத்து நிற்கும் தோற்றத்திலேயே அப்போதும் அவர் நின்றிருந்தார்.
“கேட்பிஷ் பாண்ட் டெம்பிள் பள்ளியில், கிராமத்தின் முன்னாள் சாரணத் தலைவர் என்ற பெருமிதத்தோடு நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன், இந்தக் காலத்தில், அதுவும் என் வயதில் அரசியலால் நடுத்தெருவில் நிற்கும் மனிதனாக என்னைத் தவிர இன்னொருவனை நீங்கள் கண்டுபிடிக்கமுடியாது.     நான் ஒருபோதும் யார் பிரதமராக வேண்டுமென்றோ, எந்தக் கட்சி ஆட்சி அமைக்கவேண்டுமென்றோ, அரசியலை யார் சீர்திருத்தவேண்டுமென்றோ அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியெழுதவேண்டுமென்றோ கூக்குரல் எழுப்பியது கிடையாது. நாசமாப் போகட்டும், நான் இரட்டைப் பேச்சு பேசுபவனல்ல. தேர்தலை அவர்கள் இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ நடத்தித் தொலைக்கட்டும். அவர்கள் என்னைப் பிடிப்பதற்கு வழியே கிடையாது; ஏனென்றால் இந்தப் பிறவியில் என் ஆயுள் முழுவதிலும் ஒரு முறைகூட ஓட்டுப் போட்டதில்லை. நான் ஏன் போடவேண்டும்? நீங்கள் எப்படி ஓட்டுப் போடுகிறீர்கள் என்பது ஒரு விஷயமே இல்லை. ஒவ்வொரு முறையும்  நாட்டை ஆள்கிறோமென்ற போர்வையில் குட்டையில் புரளும் ஏமாற்றுக் கூட்டம் ஒன்றைத்தான் நாம் பார்க்கவேண்டியிக்கிறது. இது முழுக்க முழுக்கக் காலவிரயம் தவிர வேறு எதுவுமில்லை. இதிலிருந்து விலகி நிற்பதுதான் நல்லது. அரசாங்கமென்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டுமா என்ன? எனக்குப் புரியவில்லை. எத்தனையோ பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக எப்போதும் இப்படியேதான் இருந்துவருகிறது. நான் சொல்வது சரியா இல்லையா?”
“பிறகு என்ன நடந்தது?` எனக்கேட்டுவிட்டு, ”சுருக்கமாக ஒன்றிரண்டு வார்த்தைகளில் சொல்லுங்கள். எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன.” என்றேன், நான்.
“ஒன்றும் நடக்கவில்லை. உண்மையாகத்தான், ஒன்றும் நடக்கவில்லை.” என்றார், அவர். ஒரு நொடி கடந்ததும், முதலில் மெல்லப் பேசத் தொடங்கிப் பின்னர் விரைவாகவும் குரலை உயர்த்தியும், உரக்கச் சொன்னார்: “அவன் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு நான் வெறுமேதான்  உட்கார்ந்திருந்தேன். நீங்களே பாருங்கள், அவன்தான் ஒரு பைத்தியம் மாதிரி எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தான்; கதவு ஓரமான எனது மூலையில், நான் அமைதியாக , வாயை மூடிக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தேன். அவன் பேசியதற்கு நான் உச் கொட்டக்கூட இல்லை;  என்னை அமைதியாக இருக்கவிட்டால் போதுமென்றுதான் நான் இருந்தேனென்பதை அந்த ஒன்றே தெளிவாகக் காட்டும். ஆனால், அந்த வேசிமகன் இது, அது என்று எல்லாவற்றையும் பேசி என்னை வலைக்குள் இழுக்க முயற்சித்தான். ஆனால், கடைசியில், அது அவன் எதைப்பேசவேண்டுமென்று அரிப்பெடுத்து அலைந்தானோ, அதிலேயே, அந்த விஷயத்துக்கே வந்து சேர்ந்தது. 
‘திரு. தாக்சின் அப்படி, இப்படி, எல்லாவகையிலும்  நல்லவர்தான்; இந்த ப் பொதுவெளித் தலைவர்கள் தான் சரியில்லை; எல்லோரும் பார்க்கிறார்கள், தாக்சின் பணக்காரராக இருக்கிறார், அதனால் அவர்களுக்குப் பொறாமை, அவர்களின் தொண்டர்களும் அவர்களைப் போலத்தான், முட்டாள்கள்; ஜனநாயக விதிமுறைகளை எப்படி மதிக்க வேண்டுமென்று தெரிந்தால்தானே, இந்த நாட்டில் என்ன சட்டமா இல்லை, கழிசடைகள்.’
“அது மட்டுமில்லை, அந்த வக்காளி, வார்த்தைக்கொரு முறை, சரிங்களா, மிஸ்டர், சரிங்களா மிஸ்டர் என்று சொல்லிக்கொண்டிருந்தான். மடப்பயல்! அதனால்தான் நான் இங்கு வந்து நின்று தொலையவேண்டியிருக்கிறது!
“ஆனாலும், சொல்லப்போனால் எல்லாம் ஓரளவுக்கு நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களில் நான் இறங்கவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்து, இறங்கி, அவனும் நானும் பிரிந்திருப்போம்; அதோடு அடுத்த பிறவியிலோ, ஒருவேளை அன்று மாலையிலோ மீண்டும் சந்தித்திருப்போம், சரியா? ஆனால், அதுமட்டும் நடக்காமலிருந்தால். ஆனால், அதுமட்டும்….”
“ஆனால், அதுமட்டும், என்ன?”
“ஆனால், அது, எனது அலைபேசி மட்டும் ஒலிக்கத் தொடங்காமல் இருந்திருந்தால்.”
“அலைபேசி ஒலித்து என்ன கெடுதல் வந்துவிடும்? எனக்குப் புரியவில்லை.”
‘அது வேறு எதையாவது ஒலித்திருந்தால் எல்லாம் சரியாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அது ஒலிக்கவில்லை – கூச்சல் போட்டது.”
“என்ன கூச்சல்?”
”தாஆஆஆஆஆக்சின் கெட் அவுட்! தாஆஆஆஆஆக்சின் கெட் அவுட்! தாஆஆஆஆஆக்சின் கெட் அவுட்! ஹேய்!”

புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழ் இதழ் எண் 46 ஜூலை, 2016 இல் வெளியாகியுள்ளது.















No comments:

Post a Comment