Saturday 10 September 2016

நாடக விமர்சனம் - பிரளயனின் `யானை காணாமலாகிறது ` நாடக விமர்சனம்

யானை காணாமலாகிறது – முரகாமியின் சிறுகதையும் பிரளயனின் நாடகமும் 

(ஹாருகி முரகாமியின் The Elephant Vanishes சிறுகதையினை `யானை காணாமலாகிறது` என்ற பெயரில் நான் தமிழாக்கினேன். இக்கதை மலைகள் இணைய இதழில் வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதனை வாசித்து `விருப்பமானதென` அடையாளமும் இட்டிருந்தனர். 2013 இல் மலைகள் பதிப்பகம் இக்கதையினை `யானை காணாமலாகிறது ` என்ற தொகுப்பு நூலில் சேர்த்து வெளியிட்டது. இதனை வாசித்த சென்னை கலைக்குழு புகழ் பிரளயன் நாடகமாக்கினார். இந்த நாடகம் 19.04.1014 அன்று ஓசூரில் நிகழ்த்தப்பட்டது. தற்போது அதே நாடகம் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெங்களூருவில் இன்று (10 -09 - 2016) நிகழ்த்தப்படுகிறது.)

19.04.2014 அன்று ஓசூர் டி.வி.எஸ் அகடமியில் xi, x. xi மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட `யானை காணாமலாகிறது` நாடகம், ஹாருகி முரகாமியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது,
ஹாருகி முரகாமியின் சிறுகதையில் டோக்கியோ ஊரகத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த உயிரியல் பூங்கா ஒன்று நொடித்துப்போகவும், அதனை மனை விற்பனையாளர் ஒருவர் அந்த நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்காக வாங்குகிறார். மட்டு மீறி வயதான ஒரு கிழட்டு யானையைத்தவிர இதர மிருகங்களுக்கெல்லாம் வெவ்வேறு புகலிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்டுவிடுகின்றன.
யானையை மட்டும் யாருமே வாங்க முன்வரவில்லை. அவ்வளவு பெரிய மிருகத்தைத் தீர்த்துக்கட்டவும் முடியாது. அதனால் அடுக்குமாடி அமைக்கும் திட்டம் காலதாமதமாகிறது. யானையை நகரமே தத்தெடுக்கலாமென  முடிவுசெய்கிற நிர்வாகம் அடுக்குமாடிக் கட்டிடங்கள் மூலம் நகர்மன்றத்துக்கு வருவாய் பெருகுமென்றும் யானையை நகரமே தத்தெடுத்துக்கொண்டால், நகரத்தின் சிறந்த அடையாளமாக யானையே மாறி, நகரத்துக்கு பெருமதிப்பும் பாராட்டும் கிடைக்குமென்றும் பரப்புரை செய்கிறது, பல்வேறு நலப்பணிகள் நிலுவையிலிருக்கும்போது யானையைத் தத்தெடுப்பதில் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப் பரப்புரை நிகழ்த்துவதோடு இதில்  மனைமேம்படுத்துநர் நலனோடு மேயரைத் தொடர்புபடுத்தி ஊழல் குற்றச்சாட்டும் சுமத்துகின்றன.  ஆனாலும்  யானையைத் தத்தெடுக்கும் தீர்மானம் நகர்மன்றத்தில் எப்படியோ  நிறைவேறி விடுகிறது. மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்று வெட்டித் தூய்மையாக்கப்பட்டு யானைக் கொட்டாரம் அமைக்கப்படுகிறது. யானைக் கூடாரத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியாக மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த விழாவில் யானை குறித்த ஓவியம் கட்டுரை மற்றும்  பேச்சுப் போட்டிகள் நிகழ்கின்றன. மேயர், நாட்டு நலன் மற்றும் கலைவளம் குறித்து இலக்கியப் பேருரை ஒன்று நிகழ்த்துகிறார். விழா முடிவில் யானைக்கு ஒரு குலை வாழைப்பழம் கொடுக்கின்றனர். யானையும் அதன் பாகன் 85 வயது வட்டனாபேயும் கொட்டாரத்திலேயே தங்குகின்றனர். யானைக் கொட்டாரம் அமைந்துள்ள பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் உண்டு மிகுதியாகிப் போன எச்சில்  உணவு யானைக்கு அளிக்கப்படுகிறது. யானையைப் பார்த்து ஓவியம் வரைவது அப்பகுதிப் பள்ளிகளில் ஒரு கட்டாய வகுப்பாகவே ஆகிவிடுகிறது. பொதுமக்களும் யானையை வந்து பார்ப்பது ஒரு பொழுதுபோக்காக மாறுகிறது. சிறிது காலம் கழித்து ஒருநாள் யானை காணாமற்போய் விட்டதாகச் செய்தி வெளியாகிறது. பாகன் என்னவானாரென்றும் தெரியவில்லை. யானையின் கால் சங்கிலி கட்டுத்தறியோடு பூட்டியது பூட்டியவாறே  கிடக்கிறது. கொட்டாரத்தின் வாயிற் கதவுகளும் பூட்டியே உள்ளன. இரு பூட்டுகளின் சாவிகளும், ஒன்று மாவட்ட காவல் அலுவலகத்திலும், மற்றொன்று மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திலுமாக வைத்தது வைத்தபடியே பாதுகாப்பாக இருக்கின்றன.  அந்தப் பகுதியின் மண், குழைவு மிக்கதாக இருந்தாலும் யானையின் காலடித்தடங்கள் எங்குமே பதிவாகவில்லை. ஆனாலும் யானையைக் காணவில்லை. எப்படியும் யானையைக் கண்டுபிடித்து விடுவதாகச் சொல்லி அரசு நிர்வாகம், காவல்துறை, தேசிய தற்காப்புப் படை அனைத்தையும் முடுக்கிவிடுகிறது. ஊடகங்கள் நிலைமையைப் பரபரப்பாக்கிக் காட்டுகின்றன. பொதுமக்கள் அச்சமும் பீதியும் கொள்வதாக, குழந்தைகளை வெளியில் விளையாட தாய்மார்கள் அனுப்ப மறுப்பதாக தொலைக்காட்சிச் செய்திகள் வெளியாகின்றன. இதில் சம்பந்தப்பட்டுள்ள நாட்டுத் துரோகிகளும் நாசகாரக் கும்பல்களும் அம்பலப்படுத்தப்படுவார்களென மேயர் பேட்டியளிக்கிறார். சில மாதங்கள் கழிய, பரபரப்பான அனைத்தும் போலவே யானைக் கதையும் மறக்கப்பட்டுவிடுகிறது.
இப்படியான நிலையில் நவீன சமையலறைக் கலங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றுபவரும் இச்சிறுகதையின் கதைசொல்லும் பாத்திரமுமான இளைஞன் அலுவலக வேலையாக ஒரு பெண்ணைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்பெண்ணை மது அருந்தகத்துக்கு அழைத்துச் சென்று ஒருவரையொருவர் விரும்புகின்ற வகையில் உரையாடும்போது,  சமையலறையின் பழைய பொருட்கள் தற்போதைய சூழலோடு ஒருங்கமைவு கொள்ளாத போது  காணாமற்போகின்றன என விவரிக்கிறான். அதைத் தொடர்ந்த உரையாடல் காணாமற்போன  யானையின் கதைக்கு மாறுகிறது. அவள் கதையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளாதவளாக, வீட்டுப் பூனை ஒன்று காணாமற் போனதைப்பற்றிக் குறிப்பிடுகிறாள். கதைசொல்லும் இளைஞன் யானை மீதான ஆர்வத்தில் பல நாட்களிலும் மாலை நேரங்களில் யானையை கொட்டாரத்தின் பின்பக்கத்திலிருந்த மலை மீதேறிக் கவனித்து வந்ததாகவும் யானைக்கும் பாகனுக்குமிடையே மிகப் பண்பட்ட உறவு நிலவியதாகவும் யானை மட்டும் சிறுத்துக்கொண்டே போனதாகவும், பாகன் உருப்பெருக்கமடைந்தது போலவும் தெரிவிக்கிறான். அப்படியென்றால் யானை தினமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்து தன்னைத் தானே இரும்பு வளையத்திலிருந்து விடுவித்துக்கொண்டு, வாயிற் கதவுகளின் கம்பி வழியே தப்பிச் சென்றுவிட்டதென்கிறீர்களாவெனக் கேட்கிறாள். அப்படித் திட்டவட்டமான பதில் எதுவும் சொல்லாத இளைஞன்  யானை தன்னைத் தானே காணாமலாக்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றமேற்படும்படியாகப் பதிலளிக்கிறான்.
இந்தக்கதை அரசியல் நிர்வாக, அதிகார வர்க்கத்தினரின் அறிவிப்புகள், அரசியல் உரைகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது யானை தன்னைத் தானே காணாமலாக்கிக் கொள்வது போன்ற நிகழ்வுகள்தாம் நடக்குமெனத் தெரிவிப்பதன் வாயிலாகக் கடுமையான எள்ளலை நிகழ்த்திக் காட்டுகிறது. இக்கதையை எந்த நாட்டு அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளோடு பொருத்திப் பார்த்தாலும் அந்த அதிகார வர்க்கத்தின் ஊழலைத் தோலுரித்துக் காட்டும் வேலையைச் செய்கிறது. இங்கே யானை காணாமலாவது என்ற குறியீட்டின் வாயிலாக அரசியல் நிர்வாகத்தின் சுயநோக்குத் தன்மையும் அது குறித்து சரியான புரிதல் இல்லாததும் அக்கறையற்றதுமான மக்கள் நிலையும்  உணர்த்தப்படுகிறது.         
 பிரளயனின் முயற்சி, இந்தச் சிறுகதையை நாடகமாக்கிக் காட்டுவதோடு,  வளர்ச்சி என்ற பெயரில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதும் இயற்கைவளம் சுரண்டப்படுவதும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் அபாயங்களும், அதன் விளைவாக காட்டுயிர்கள் அவற்றின் வாழிடங்களை இழந்து தவிப்பதையும், மனிதர்களின் குடியிருப்புக்குள் வரவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதையும் இதனால் ஏற்படும் மனிதன் X காட்டுயிர் மோதல்களையும் பற்றி சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.     
முதல் காட்சியாக, இயற்கையோடியைந்த யானைகளின் வாழ்க்கையும் அவற்றின் இருப்பிடமான காடுகள் அழிக்கப்படுவதும் பணி செய்வதற்காக யானைகள் பிடிக்கப்பட்டு கொடூரமான முறையில் பழக்கப்படுத்தப்படுவதையும், அந்த நடைமுறையில் சில யானைகள் பரிதாபமாக உயிரிழப்பதும், யானைகளின் வாழ்வு மற்றும் இயற்கை மீதான மனிதனின் வன்முறையினையும் மனதில் உறைக்கும் வண்ணம் யானைகள் குறித்த காணொலிக்காட்சிகள் அமைந்தன. அதன் தொடர்ச்சியாக, முரகாமியின் கதை அறிமுகப்படுத்தப்பட்டு அதன் விபங்களும் நடித்துக் காட்டப்படுகின்றன.
உயிரியல் பூங்கா, மனை விற்பனையாளருக்கு விற்கப்பட்டது தெரியாமலே பள்ளிச் சிறுவர்களை மிருகக்காட்சிச் சாலைக்கு அழைத்து வரும் ஆசிரியை, மாணவர்களுக்கு இது சிங்கம் இருந்த இடம், இது புலி இருந்த இடம் எனக் காட்டி வரும்போது, எதிர்காலத்தில் பூமியில் இது போன்ற நிலைதான் ஏற்படுமென்பதை உணர்த்தப்படுகிறது.
யானையைத் தத்தெடுக்கும் தீர்மானம் குறித்து நகரமன்றத்தில் விவாதம் நடப்பதை நமது சட்டமியற்றும் அமைப்புகள் செயலாற்றும் விதத்திலேயே   காட்சிப்படுத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக யானையைத் தத்தெடுக்கும் விழாவுக்கு பிரதமர் வானூர்தியில் வருவதும் வானூர்தியை வானத்தில் கண்டதுமே எல்லோரும் நிலத்தில் குப்புறப் படுத்து மரியாதை செய்வதும் விழாவில் காவல்துறை உயர் அலுவலர்களின் நடத்தை மற்றும் செயல்பாடுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. 
பிரசவ வேதனையில் துடிக்கும் பெண்ணைச் சுமந்துகொண்டு பழங்குடியினர் மருத்துவ மனைக்குச் செல்கையில் அவர்களின் வழக்கமான பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வேறு பாதையில் போக முயற்சிப்பதும் அப்பாதையும் தனியார் வசமாகி அடைக்கப்படுவதையும் நிகழ்த்திக்காட்டி யானைகளின் வாழிடம் அழிக்கப்படும்போது, அவை நடமாடும் பாதை மறிக்கப்படும்போது, யானைகளுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தம், அவற்றின் நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற மாற்றமனைத்தையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்ற கலைத்திறனைப் பாராட்டாமலிருக்க முடியாது.
பழங்குடி மக்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஏதோ ஒரு இழப்புத் தொகையைப் பெற்றுக்கொண்டு காட்டைவிட்டு வெளியேறலாம். ஆனால், காட்டுயிர்கள் எங்கே போகுமென்ற கேள்வியை பழங்குடித்தலைவன் கேட்கும்போது விடைகூறத் தெரியாமல் நம் அனைவரையுமே தலைகுனிய வைக்கிற சூழ்நிலையை நாடகம் அருமையாக நிகழ்த்தியிருக்கிறது. பழங்குடித்தலைவனின் இக்கேள்வியைத் தொடர்ந்து அடுத்த காட்சியாக பெங்களூர் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் முப்பதுக்கும் மேற்பட்ட யானைகள் திசைதேடி அலைகிற காணொளிப்பதிவினைத் திரையிட்டது பார்வையாளனிடத்தில் மிகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதென்றே சொல்லமுடியும். மேலும் மையக்கதையிலிருந்து எந்த இடத்திலும் விலகாமல் நாம் வாழும் சமூகத்திற்கும் நமது சூழலுக்கும் ஏற்றவாறு நாடகத்தினை வளர்த்தெடுத்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒருவிஷயமாகும். 
முரகாமியின் கதையின் சாரத்தை எள்ளளவும் குறைவுபடாமல் காட்சிப்படுத்தும் போதே அதற்கு இணையாக  சுற்றுச் சூழல், காட்டுயிர்கள் என எடுத்துக்கொண்ட பிரச்னைகளின் உண்மைநிலை, அவற்றில் செயற்படும் அரசியல், லாப வேட்கைச் சுயநலம் அனைத்தையும் பிரளயனால் எவ்விதச் சலிப்பும் ஏற்படுத்தாமல் நிகழ்த்திக் காட்டிவிட முடிகிறது.
மனிதர்களாகிய நாம் காட்டுயிர்களைக் கொன்றுவிட்டு, அவற்றின் சமாதி மீதுதான் வாழ்கிறோம் என்பதை அர்த்தப்படுத்துவதற்காக, பொம்மை யானை ஒன்றின் உறுப்புகளை அங்கங்கே பிய்த்துப் போட்டுவிட்டு, பின்னர் நாடகக் கலைஞர்கள் அனைவரும் அந்த மயானத்தில் அமர்ந்திருக்கிற காட்சியை நிகழ்த்திய போது, உண்மையில் ஆழிப்பேரலை நிகழ்ந்து மனித உயிர்கள் சடலங்களாகப் புதைக்கப்படுவதைக் கண்ட போது ஏற்பட்டதொரு சோகமும் கையறு நிலையும், இக்குற்றத்தில் நமக்கும் பங்கிருப்பதான குற்றவுணர்வும் தலைதூக்கியது.
உப கதை, பாரி படுகளம், வஞ்சியர் காண்டம் என நமது இலக்கியங்களை மறு வாசிப்பாக, அவற்றில் மறைந்திருக்கும் செய்திகளை வெளிப்படுத்தி, நிகழ்த்திக் காட்டியிருக்கிற பிரளயன், தற்போது முரகாமியின் கதையை நேர்பட, முரகாமியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்கு ஒரு செயல்விளக்கமாக இந்த நாடகத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்றே கூறவேண்டும்.
இந்த நாடகத்தில் மொத்தம் தொண்ணூறு மாணவர்கள் நடித்தனர். அனைவரும் அவரவர் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களைச் சிறப்பாக, தொழில் நடிகர்களைவிடத் திறமையாகச் செய்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். இந்த நாடகத்தில் நடித்த மாணவர்கள் மட்டுமல்லாது, பார்த்து ரசித்த அனைவருக்குமே சுற்றுச் சூழல் குறித்த புதிய விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.
பிரளயனின் இந்த நாடகம் செய்தி விளக்க நாடகம் ஒன்றைச் சிறந்த கலைப்படைப்பாகவும் மிளிரச் செய்யமுடியும் என்பதற்கு நல்லதொரு காட்டாக அமைந்தது.
ச. ஆறுமுகம்
அலைபேசி 9442944347
arumughompillai@gmail.com                
            

      இக்கட்டுரை இருபகுதிகளாக `யானை காணாமலாகிறது நாடகத்தை முன்வைத்து` என்ற தலைப்பில் தீக்கதிர் நாளிதழில் 26.05.2014 மற்றும் 02.06.2014 இதழ்களில் தொடர்ச்சியாக வெளியானது.
http://theekkathir.in/2014/06/02/

No comments:

Post a Comment