Thursday 1 December 2016

சங்க இலக்கியத் துளிகள் - 5 Glimpses of Sangam Poetry

நீ நாட்டின் தலைவனாகக் கிடைத்த வாய்ப்பு அரிய ஒன்றன்றோ!
அன்பும் அருளும் நீக்கித் தீமைகள் செய்வாரோடு இணைந்து நாட்டை நரகமாக்காதே!
ஒரு தாய் தன் மகவைக் காப்பது போல் நாட்டைக் காப்பாயாக!
புறநானூறு 5
எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே.
---- நரிவெரூஉத்தலையார்.
பொருளுரை: எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!
நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! கருணையும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உனது நாட்டை ஒரு குழந்தையைப் போன்று பாதுகாத்து அளிப்பாயாக. அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.
பதவுரை: எருமை – எருமை மாடு, அன்ன – போல, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகள், பரக்கும் – பரவியிருக்கும், யானை – யானை, முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டை ஆளும் தலைவன், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே, நீயோர் ஆகலின் – நீ இவ்வாறு இருப்பதால், நின் – உனக்கு, ஒன்று – ஒன்று மொழிவல் – சொல்கிறேன், அருளும் – கருணையும், அன்பும் – அன்பும், நீக்கி – விலக்கி, நீங்கா – நீங்காத, நிரயம் – நரகம், கொள்பவரொடு – இடமாகக் கொள்பவரோடு, ஒன்றாது – சேராமல், காவல் – காக்கும் நாட்டை, குழவி – குழந்தை, கொள்பவரின் – கொண்டிருப்பவராய், ஓம்புமதி – பாதுகாப்பாயாக, அளிதோ தானே – அளிக்கத் தக்கது, அது பெறல் – அத்தகைய காக்கும் வாய்ப்புப் பெறுவது, அருங்குரைத்தே – அரியது ஆகும்

No comments:

Post a Comment