Thursday 21 July 2016

ஜப்பானியச் சிறுகதை - பச்சைநிறப் படுபயங்கரச் சிறுபிறவி - THE LITTLE GREEN MONSTER BY HARUKI MURAKAMI

பச்சை நிறப் படுபயங்கரச் சிறு பிறவி ( THE LITTLE GREEN MONSTER ) 

ஜப்பான் : ஹாருகி முரகாமி HARUKI MURAKAMI ஆங்கிலம் : ஜே ரூபின் JAY RUBIN 

தமிழில் : ச.ஆறுமுகம்


(முரகாமியின் தொடக்ககாலக் கதைகள் பலவும் மணவாழ்வில் பெண்ணின் தனிமை, காமம் மற்றும் அந்நியப்படுதலை ஆராய்வதாகவே அமைந்துள்ளன. அவற்றிலும் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாகவும் முரகாமியின் புனைவுத் திறன் சிறந்து மிளிர்கின்ற கதையாகவும் திகழ்கின்ற பச்சைநிறப் படுபயங்கரச் சிறு பிறவி வாசகனிடம் ஆழ்ந்த வாசிப்பினைக் கோருகிறது.)


வழக்கம்போல எனது கணவர் வேலைக்குக் கிளம்பிச் சென்றதும், எனக்கு வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை. ஜன்னல் அருகிலிருந்த நாற்காலியில் தனியாக உட்கார்ந்து திரைகளின் இடைவெளி வழியாகத் தோட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தேன். அப்படித் தோட்டத்தைப் பார்ப்பதற்கென எனக்கென்று காரணம் ஏதேனும் இருந்ததென்பதல்ல, அது. நான் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை, அவ்வளவுதான். அப்படி உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருந்தால் அப்போதோ அல்லது சிறிது கழிந்தபிறகோ, எதைப்பற்றியாவது சிந்தனை துளிர்த்து ஓடுமென்று நான் நம்பினேன். தோட்டத்திலிருந்த பலவற்றில் நான் அதிகம் கவனிப்பது ஓக் மரத்தைத்தான். அந்த மரம் எனக்கு மிகமிக விருப்பமானதாக இருந்தது. சிறுமியாக இருந்தபோது, நான்தான் அதனை நட்டு வளர்த்து, அது நாளும் பொழுதுமாக வளர்வதைக் கண்டுகளித்தேன். நான் அதனை எனது உயிர்த் தோழியாகவே கருதினேன். நான் அதனோடு எப்போதும் எனக்குள்ளாகவே பேசிக்கொள்வேன்.
அன்றும் அப்படித்தான் அதனோடு பேசிக்கொண்டிருந்திருப்பேனாக இருக்கலாம் – ஆனால், எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேனென்று எனக்கு நினைவில்லை. எவ்வளவு நேரமாக அப்படி உட்கார்ந்திருந்தேனென்பதும் நினைவில்லை. நான் தோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, காலம் எனது உணர்வுக்கப்பால் நழுவிச்சென்றுவிடுகிறது. அன்று, அது என் கண்ணில்படும் முன்பாகவே இருட்டிவிட்டது : நான் அங்கே, அப்படியே நெடுநேரமாக உட்கார்ந்துவிட்டேனென்றுதான் நினைக்கிறேன். பின்னர், திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. அது எங்கோ மிக, மிகத் தூரத்திலிருந்து வந்ததாகத் தோன்றியது. – மிகவும் வேடிக்கையான, உள்ளடங்கியதான மெல்ல உரசிக்கொள்வது போன்றதான ஒலிவகை. முதலில் அந்த ஒலி எனக்குள் தான் எங்கோ ஆழத்திலிருந்து வருவதாக நினைத்தேன் – என் உடம்பு எனக்குள்ளாகவே நூல் நூற்றுப் பின்னிப்பின்னிக் கட்டிக்கொள்ளும் இருண்ட வலைக்கூட்டுக்குள்ளிருந்து வரும் ஒரு எச்சரிக்கை. நான் மூச்சை அடக்கி உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டேன். ஆம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சிறிதுசிறிதாக, அந்த ஒலி என்னை நெருங்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் அது? எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அது எனது உடலைப் புரட்டிப்போட்டது.
மரத்தடி அருகில் தரைக்குள்ளிருந்து கனத்த பிசுபிசுப்பான திரவம் ஏதோ ஊற்றெடுத்துப் பொங்குவதுபோலத் தரை மேலெழும்பத் தொடங்கியது. மீண்டும் நான் மூச்சை அடக்கிக்கொண்டேன். பின்னர் தரைமேலாக உயர்ந்தெழுந்த மண் மெல்லப் பிளக்கவும், கூர்மையான ஒரு ஜோடி நகங்கள் வெளித்தெரியத் தொடங்கின. என் கண்கள் அவற்றையே குத்திட்டு நோக்க, என் கைகள் திருகி, மணிக்கட்டுகள் இறுகத் தொடங்கின. ஏதோ ஒன்று நிகழப்போகிறதென எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன். அது நிகழத் தொடங்கிவிட்டது. அந்த நகங்கள் மண்ணைக் கடினமாகப் பிராண்டப் பிராண்ட, அந்த இடம் ஒரு வளைப் பொந்தாகி, அதனுள்ளிருந்து நகர்ந்து மேலேறியது, பச்சைநிறத்தில் சிறியதாக ஒரு பயங்கரப் பிறவி.
அதன் உடல் முழுவதும் பளபளக்கும் பச்சைநிறச் செதில்கள் அடர்ந்து தோன்றின. துளைக்குள்ளிருந்து வெளியே வந்ததும் அதன் மேல் ஒட்டியிருந்த மண்துகள்கள் அனைத்தும் கீழே விழுமாறு உதறித்தீர்த்தது. அதன் நீளமான, வேடிக்கையாகத் தோன்றிய மூக்கின் பச்சை நிறம் மூக்குமுனையை நோக்கி அடர்ந்துகொண்டே சென்றது. அதன் முனை கூர்மையாகி சாட்டையின் நுனியைப்போல ஊசிமுனையாகத் தெரிய, அந்த மிருகத்தின் கண்களோ, ஒரு மனிதனின் கண்களே போலப் பெரிதாகத் தெரிந்தன. அந்தக் கண்களைப் பார்த்ததுமே என் உடம்பு முழுவதும் நடுங்கித் தீர்த்தது. அந்தக் கண்களில் உங்களுடையவற்றைப் போல, அல்லது என்னுடையவற்றைப் போலவே உணர்ச்சிகள் பளபளத்தன.
தயக்கம் ஏதுமின்றி, மெல்ல,மெல்ல, ஆனால், உறுதியாக, அந்தப் பயங்கரப் பிறவி என் வீட்டு முன்வாயிற்படிக்கு ஊர்ந்து வந்து, அதனுடைய மூக்கின் இளந்தசை நுனியால் கதவைத் தட்டத் தொடங்கியது. தொடர்ந்து தட்டும் வறட்சியான ஒலி வீடு முழுவதும் எதிரொலித்தது. நான், பின்னறைக்குச் சென்றுவிட்டால், அந்த மிருகம் என்னைக் கண்டுகொள்ளமுடியாதென நினைத்து, முன்பாதங்களால் பின்னறைக்கு நடந்தேன். என்னால் கத்திக் கூச்சலிட முடியவில்லை. அந்தப் பகுதியில் எங்கள் வீடு மட்டுமே தனியொரு வீடாக இருந்தது. மிகவும் பிந்திய இரவு வரையிலுங்கூட எனது கணவரால் வேலை முடிந்து வர இயலாது. என்னால் பின் கதவு வழியாக ஓடவும் முடியாது; ஏனென்றால் எங்கள் வீட்டுக்கு ஒரே ஒரு கதவு; அதுவும் அந்தக் கோரமான பச்சைப் படுபயங்கரப் பிறவி தட்டிக்கொண்டிருக்கிறதே அந்த ஒரே கதவுதான். கொஞ்ச நேரம் போனால், அந்த இழவு, அதுவாகவே விட்டுவிட்டுப் போய்விடுமென்ற ஒரே குருட்டு நம்பிக்கையில், நான் அங்கே இல்லாதது போன்ற பாவனையில் என்னால் முடிந்த அளவுக்கு மூச்சைப் பிடித்துக்கொண்டு சத்தமில்லாமல் இருந்தேன். அப்போதும் அது, விட்டுப் போகவில்லை, கதவினைத் தட்டுவதை விட்டுவிட்டு, அதன் மூக்கு, பூட்டினை அசைத்துக் `கலகலவென`ஒலியெழுப்பத் தொடங்கியது. பூட்டைத் திறப்பதில் அதற்கு எந்தச் சிரமமும் இருந்திருக்காதென்பது போலத்தான் தோன்றியது. அது மட்டுமல்லாமல் கதவு வேறு சிறிதாகப் பிளந்து திறந்தது. பிளவின் ஊடாக மூக்கினை நுழைத்த அது அப்படியே நின்றது. நிரம்ப நேரத்துக்கு அப்படியே, பாம்பு ஒன்று தலையைத் தூக்கி நிற்பது போல நின்று வீட்டின் நிலைமையைக் கணிக்க, அசையாமல் நின்றது. அது இப்படித்தான் நிகழுமென்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கதவு அருகிலேயே நின்று அதன் மூக்கை வெட்டித் தொலைத்திருப்பேனேயென்று எனக்குள்ளாகவே, நினைத்த நான் இப்படிச் சொல்லிக்கொண்டேன் : சமையலறையில் நல்லக் கூர்மையான கத்திகள் நிறைய இருக்கின்றனவே. அப்படியான எண்ணம் எனக்குள் ஏற்பட்டதோ இல்லையோ, அந்தப் படுபிறவி என் மனத்தைப் புரிந்துகொண்டது போல கதவு விளிம்பின் வழியாகப் புன்சிரிப்புடன் விரைந்து வந்தது. பின்னர், அது, திக்குத் திணறல் இல்லாமல், ஆனால் குறிப்பிட்ட சில வார்த்தைகளை மட்டும், அது கற்றுக்கொள்ள விரும்பியது போலத் திரும்பத் திரும்பக் கூறிப் பேசியது. அதனால் உனக்கு எந்த நன்மையும் எந்த நன்மையும் கிடைத்துவிடாதென்றது, அந்தப் படுபயங்கரப் பச்சைநிறச் சிறுபிறவி. என் மூக்கு ஒரு பல்லி வால் போன்றது. அது எப்போதுமே– இன்னும் வலுவும் நீளமுமாக, இன்னும் வலுவும் நீளமுமாக மீண்டும் வளர்கிறது. நீ என்னென்ன வேண்டுமென்று, வேண்டுமென்று நினைக்கிறாயோ, அதற்கு எதிர்ப்பதமாகத் தான் உனக்குக் கிடைக்கும். பின்னர், அதன் இரண்டு கண்களையும் மாயப் பம்பரங்களைப் போல நெடுநேரம் சுழற்றிக்கொண்டிருந்தது.
ஓ, இல்லை, அப்படி இருக்காதென நான் நினைத்தேன். மனிதர்களின் மன ஓட்டங்களை அது தெரிந்துகொள்ளமுடியுமா, என்ன? நான் என்ன நினைக்கிறேனென்பதை யாரொருவரும் தெரிந்துகொள்வதை, அதிலும் குறிப்பாக அந்த ஒருவர் இப்படியான கோர உருவமுள்ள படுபயங்கரச் சிறு பிறவியென்றால் முழுமையாக வெறுக்கிறேன். உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் எனக்கு வியர்த்து வழிந்தது. இந்த இழவு என்னை என்ன செய்யப் போகிறது? என்னைத் தின்றுவிடுமா? பூமியின் ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிடுமா? நல்லவேளை, கண்கொண்டு பார்க்கவே முடியாத அளவுக்கு அது, அசிங்கமாக இல்லை. அந்த அளவில் நல்லதுதான். அதன் பச்சைச் செதில் உடம்பில் வெளிப்பக்கமாக இளஞ்சிவப்பில் நீட்டிக்கொண்டிருந்த மெலிந்து நீண்ட கை கால்களின் முடிவில் நகங்கள் நீளமாக இருந்தன. அவற்றைப் பார்க்கப் பார்க்க, மீண்டும் மீண்டுமாகப் பார்க்கும்போது அநேகமாக, மனதுக்குப் பிடிக்கிற மாதிரியாகவே இருந்தன. அந்தப் பிறவி எனக்கு எந்தவிதத் தீங்கும் இழைத்துவிடாதென்றும் எனக்குத் தெரியவந்தது.
அப்படியில்லைதான், என்றது அது, என்னிடம், தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு. அது நகரும்போது அதன் செதில்கள் விரிந்து ஒன்று மேல் ஒன்றாக விழுந்து – மேசை மேலிருக்கும் காபித் தம்ளர்களைத் தட்டிவிட்டால் ஒன்று மேலொன்றாக அடுக்கி விழுந்து ஒலிக்குமே அதுபோல ஒலித்தன. என்னவொரு பயங்கரமான எண்ணம், மேடம் : நானொன்றும் உங்களைத் தின்றுவிடமாட்டேன், இல்லையில்லை, கிடையவே கிடையாது. உங்களுக்கு நான் எந்தத் தீங்கும், எந்தத் தீங்கும், எந்தத் தீங்கும் நினைக்கவில்லை. ஆக, நான் நினைத்தது சரி : நான் நினைப்பதை, அது மிகச்சரியாகப் புரிந்துகொள்கிறது.
மேடம், மேடம், மேடம், உங்களுக்குத் தெரியவில்லையா? உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் காதலைக் கோரித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். மிக ஆழத்திலிருந்து, மிகமிக ஆழம், மிகமிக ஆழத்திலிருந்து. வழி முழுவதையும் நான் இம்மி, இம்மியாக நகர்ந்து நகர்ந்து, இங்கு வரையிலும், இங்கு வரையிலும் ஊர்ந்துவரவேண்டியிருந்தது. மகிழ்ச்சிதான், அது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, நான் தோண்டித் தோண்டித் தோண்டிக்கொண்டேயிருக்கவேண்டியிருந்தது. பாருங்கள், என் நகங்கள் எவ்வளவு மழுங்கிப்போய்விட்டன! நான் உங்களுக்கு ஏதேனும் தீங்கு, ஏதேனும் தீங்கு, ஏதேனும் தீங்கு நினைத்திருந்தால் இவ்வளவு தூரத்துக்குச் சிரமப்பட்டிருக்கமாட்டேன். நான் உங்களைக் காதலிக்கிறேன். இதற்கு மேலும் அந்த ஆழத்திற்குள், அந்த ஆழத்திற்குள் என்னால் தங்கியிருக்க முடியாத அளவுக்கு நான் உங்களைக் காதலிக்கிறேன். உங்களிடம் வருவதற்கான வழி முழுவதையும் நகர்ந்தே தீர்க்கவேண்டியிருந்தது, தீர்க்கவேண்டியிருந்தது. எல்லோரும் என்னைத் தடுத்து நிறுத்த முயற்சித்தார்கள்; ஆனால், என்னால் அதற்கு மேலும் தாங்கமுடியவில்லை. அதற்காக மேற்கொண்ட, மேற்கொண்ட அந்தத் துணிச்சலைத் தயவுசெய்து நினைத்துப் பாருங்கள். என்னை மாதிரி ஒரு பிறவி உங்கள் காதலைக் கோருவதென்பது முரட்டுத்தனம் மிகுந்த தகாதசெயலென்று, முரட்டுத்தனம் மிகுந்த தகாதசெயலென்று நீங்கள் நினைத்தால் என்னசெய்வது?
ஆனால், இது முரட்டுத்தனம் மிகுந்த தகாதசெயலேதானென்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். என்ன ஒரு முரட்டுத்தனமான சிறு பிறவி, நீயெல்லாம் எனது காதலைக் கோரி வருகிறாய்!
நான் இப்படி நினைத்ததுமே அந்தப் பயங்கரப்பிறவியின் முகத்தில் ஒரு துயரப் பார்வை படர்ந்து, அதன் உணர்வுகளை உடனடியாக வெளிக்காட்டுவது போல, அதன் செதில்கள் மெல்லிய கருஞ்சிவப்பு ஊதா நிறம் கொண்டன. அதனுடைய முழு உடலும் கூடச் சிறிது சுருங்கியதாகத் தோன்றியது. அப்படி என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும், அதையும்தான் பார்த்துவிடுவோமேயென்று நானும் முழங்கைகளை மார்பில் கட்டிக்கொண்டு கவனிக்கத் தொடங்கினேன். அதன் உணர்வுகள் மாறும்போதெல்லாம், இதுபோல ஏதாவது நிகழும்போல. காணச் சகிக்காத அதன் முரட்டு வெளியுடல் உள்ளுக்குள் புத்தம்புதிய புதினாமண மென்கோந்து உருண்டை போல மென்மையும் எளிதில் கரையும் தன்மையும் கொண்ட ஒரு இதயத்தை மூடிமறைத்திருக்கிறது போலும். அப்படியிருந்தால், நிச்சயம் நான் வென்றுவிடுவேன். முயற்சித்துப் பார்த்துவிடுவதென்றும் தீர்மானித்தேன். அருவருப்பான சிறுபிறவி, நீ, உனக்கே தெரியும், என் மனத்துக்குள் உச்சத்தின் உச்சக் குரலில் – கத்தினேன், அந்தக் கத்தலின் உரத்த சப்தத்தில் என் இதயமே அதிர்ந்து அலறிவிட்டது. நீ ஒரு அருவருப்பான சிறு பிறவி! செதில்களின் கருஞ்சிவப்பு ஊதா மேலும் மேலும் கறுத்து, என் மனம் உமிழ்ந்த அத்தனை வெறுப்பினையும் அந்தச் சனியனின் கண்கள் உறிஞ்சி, ஊதிப்பருப்பது போலப் பெரிதாகத் தொடங்கின. அவை நன்கு முற்றிய அத்தியின் பச்சைப்பசேல் காய்களே போல அந்தப் பிறவியின் முகத்தில் துருத்தித் தெரிய, அவற்றிலிருந்து சிவப்புச் சாறாகக் கண்ணீர் வழிந்து தரையில் விழுந்து சிதறியது.
இனிமேலும் நான் அந்தப் பயங்கரப் பிறவிக்குப் பயந்துகொண்டிருக்கப் போவதில்லை. அதை எப்படியெப்படிச் சித்திரவதை செய்யவேண்டுமென்று என் மனத்துக்குள்ளாகவே எல்லாவிதக் குரூரச் சித்திரங்களையும் தீட்டிப் பார்த்தேன். அதை உறுதியான ஒரு நாற்காலியில் கனத்த கம்பிகளைக் கொண்டு கட்டிவைத்து ஊசிமுனைக் குறடு ஒன்றால், அதன் செதில்களை ஒவ்வொன்றாக, வேரோடு பிய்த்து எறியத் தொடங்கினேன். கூர்மையான கத்தி ஒன்றின் முனையைச் சூடாக்கிப் பழுக்கக் காய்ச்சி, அதன் மெல்லிய கைகால்களின் சதைப்பகுதிகளில் அழுத்தித் தேய்த்து ஆழமான கோடுகளை இழுத்தேன். உப்பிப் பருத்துத் துருத்திக்கொண்டிருந்த அதன் அத்திக்காய் கண்களில் பற்றவைக்கும் சூட்டிணைப்புக்கோலால் பலமுறை மீண்டும் மீண்டுமாகக் குத்தினேன். புதிய புதிய வன்கொடுமை முறைகளை நான் கற்பனைசெய்யச் செய்ய, அவை அனைத்தும் உண்மையிலேயே அந்தப் பயங்கர உருப் பிறவிக்கு நிகழ்த்தப்பட்டது போல அது, புரள்வதும் நெளிவதும் வேதனையில் வாய்பிளப்பதுமாக இருந்தது. அது, அதனுடைய வண்ணக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிய அழுதது. அதன் வாயிலிருந்து இறுகிய பசை போன்ற திரவம் ஒழுகியது. அதன் காதுகளிலிருந்து சாம்பல்நிறப் புகை கிளம்ப, அப்புகையிலிருந்து ரோஜாக்களின் நறுமணம் பரந்தது. அதன் கண்கள் சிறிதுகூட நடுக்கமில்லாதப் பழிசுமத்தும் பார்வையை என்மீது வீசிக்கொண்டேயிருந்தன. தயவுசெய்யுங்கள் மேடம், ஓ, தயவுசெய்யுங்கள், நான் இரங்கிக்கேட்கிறேன், தயவுசெய்து அந்தமாதிரி பயங்கர எண்ணங்களை, அப்படி எண்ணிப்பார்க்காதீர்கள்! அது அலறியது. உங்களுக்குக் கெடுதல் செய்யும் எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. உங்களை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன். நான் உங்கள் மீது கொள்வது காதல், காதல் தவிர வேறு ஏதுமில்லை. ஆனால் நான் அதற்குக் காதுகொடுப்பதில்லையென்றே தீர்மானமாக இருந்தேன். என் மனத்துக்குள் நான் சொல்லிக்கொண்டேன், கேலி, கிண்டலுக்கு இடம் கொடுக்காதே! நீ என் தோட்டத்துக்குள்ளிருந்து வெளிவந்திருக்கிறாய். என் அனுமதியின்றி பூட்டிய கதவைத் திறந்து என் வீட்டுக்குள்ளேயே வந்திருக்கிறாய். நான் உன்னை ஒருபோதும் `இங்கே வா` என அழைத்ததே கிடையாது. நான் விரும்பும் எதை வேண்டுமானாலும் நினைத்துப் பார்ப்பதற்கு எனக்கு உரிமை உண்டு. நான் அதையே குறிப்பாகத் தொடர்ந்து செய்யவும் – அந்தப் பிறவி மீது இன்னும் அதிபயங்கரக் கொடூரங்களை நினைத்துப் பார்க்கத்தொடங்கினேன். நடமாடும் ஒரு ஜீவனை உயிரோடு வதைத்து அதை வலியில் துடிதுடிக்கச்செய்வதற்கென்று இருக்கின்ற எந்த வழிமுறையும் விட்டுப்போகாமல் என் நினைவுக்கு வந்த கருவிகள், எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு அந்தப்பிறவியின் உடலை வெட்டித் தசையைத் துண்டுதுண்டுகளாகச் சிதைத்தேன். அப்புறம் பார், படுபயங்கரச் சிறுபிறவியே, பெண் என்பவள் எப்படிப்பட்டவள் என்ற சிந்தனையே உனக்கு அற்றுப்போய்விடுகிறதா, இல்லையா, பார். உனக்கு நான் என்னென்ன செய்யமுடியுமென்று நான் நினைக்கின்ற காரியங்களை எண்ணிக்கையிடத் தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது, பார்த்துக்கொள். ஆனால், அந்தப் படுபயங்கரப் பிறவியின் வெளிவட்டம் நிறம் மங்கி வெளிறத் தொடங்கி, அதனுடைய வலுவான பச்சை மூக்கு கூட ஒரு புழுவைவிடப் பெரியதாயில்லையென்னுமளவுக்குச் சிறுத்துப் போனது. தரையில் துடித்து நெளிந்துகொண்டிருந்த அந்தப் படுபயங்கரப் பிறவி வாயைத் திறந்து என்னிடம் பேச முயற்சித்து, ஏதோ ஆதிகாலத்துப் பரம்பரை ஞானத்தின் மிக முக்கியமான அறிவுத்துளி ஒன்றை என்னிடம் தெரிவிக்க மறந்துவிட்டது போலவும் அதைத் தன்னுடைய இறுதிச்செய்தியாகத் தெரிவித்தேயாகவேண்டுமென விரும்பி, அதன் வாயிதழ்களைத் திறந்துவிடப் பெரும் போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தது. அப்போராட்டம் நிகழ்ந்து முடியும் முன்பாகவே, அதன் வாய் வலிநிறைந்த அமைதிநிலையொன்றினை அடைந்து, வெகு விரைவிலேயே பார்வை இலக்கினை விட்டும், அகன்று, அகன்று பின் மறைந்துபோனது. அந்தப் படுபயங்கரப்பிறவி இப்போது மாலைக் கருக்கலின் வெளிறிப்போன நிழலாகவே விழுந்து கிடந்தது. அந்த மிச்சம் மீதியில் காற்றில் மிதந்து தெரிந்தது, துயரம் தோய்ந்து, வீங்கிப் பருத்த, இரு கண்கள் மட்டுமே. அது, அந்தப் பிறவிக்கு எந்தப் பயனையும் அளித்துவிடாதென நான் நினைத்தேன். நீ விரும்பிய அளவுக்கு வேண்டுமானால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமே தவிர, உன்னால் எதுவொன்றையும் சொல்லிவிடமுடியாது. உன்னால் எந்தவொரு செயலையும் செய்துவிடமுடியாது. உன் வாழ்வு அவ்வளவுதான், முடிந்துவிட்டது, ஒரேயடியாக முடிக்கப்பட்டுவிட்டது. சிறிது நேரத்திலேயே அந்தக் கண்களும் வெறுமைக்குள் கரைய, அறை முழுவதும் இரவின் இருள் நிறைந்தது.

மலைகள் இணைய இதழ் 101, ஜூலை 2, 2016 இல் வெளியானது.

No comments:

Post a Comment