Monday 9 April 2018

அமெரிக்கச் சிறுகதை - 10 - நண்பர்கள் ஆங்கிலம் : லூசியா பெர்லின் Friends : Lucia Berlyn

நண்பர்கள் ( Friends ) – ஆங்கிலம் : லூசியா பெர்லின், ( அமெரிக்கா.) Lucia Berlin – தமிழில் : ச. ஆறுமுகம்.


லூசியா பெர்லின் (1936 – 2004)
1960, 70, 80களில் மிகவும் அறிவு பூர்வமாகப் புனைவுகளைப் படைத்த லூசியா பெர்லினுக்கு மிகச் சிறிய வாசகர் வட்டமே அமைந்திருந்தது. அவர் இறந்து பதிபொரு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கதைகள் பிரபலமடைந்துள்ளன. லூசியாவின் படைப்புகள் கனடாவின் ஆலிஸ் மன்றோ, ருசியாவின் செகாவ் போன்றோரின் படைப்புகளுக்கு இணையான இடத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவையெனத் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள `நண்பர்கள்` கதை, புதுமைப்பித்தனின் செல்லம்மாள், ஆலிஸ் மன்றோவின் `மலைமேல் வந்தது, கரடி` கதைகளோடு இணைத்துச் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.
*****
சாமின் உயிரைக் காப்பாற்றிய நாளில்தான் அன்னாவையும் சாமையும் லொரேட்டா சந்தித்தாள்.
அன்னாவும் சாமும் முதியவர்கள். அவளுக்கு 80, அவரோ 89. பக்கத்து வீட்டு எலெயினின் நீச்சல் குளத்துக்கு லொரேட்டா நீச்சலுக்குச் செல்லும் நாட்களில் அவ்வப்போது அன்னாவைப் பார்த்திருக்கிறாள். ஒருநாள் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு வயதான முதியவரை நீச்சலுக்கு இணங்கவைக்க முயலும்போது அவள் நின்று கவனித்தாள். கடைசியில் அவர் ஒப்புக்கொண்டு, இறுக்கமான முகத்தோடு நாய் நீச்சலில் கைகளைத் தப்படித்தபோது கைகால்கள் இழுத்துக்கொண்டன. குளத்தின் ஆழமற்ற முடிவுப் பகுதியில் நின்ற அந்த இரண்டு பெண்களும் இதைக் கவனிக்கவில்லை.
லொரேட்டா, காலணிகளைக்கூடக் கழற்றாமல் அப்படியே குளத்தில் குதித்து அவரைப் படிக்கட்டுக்கு இழுத்து, குளத்துக்கு வெளியேயும் கொண்டுவந்தாள். அவருக்கு இதய மீளுயிர்ப்புச் சிகிச்சை எதுவும் தேவைப்படவில்லை; பயத்தில் கைகால்கள் ஓடவில்லை; அவ்வளவுதான். வலிப்பு நோய்க்கான சில மருந்துகளை அவர் உட்கொள்ளவேண்டியிருந்தது.
மூன்று பெண்களுமாக அவருக்கு உடல் துவர்த்தவும் ஆடைமாற்றவும் உதவிசெய்தனர். அவர் நல்லநிலைக்குத் திரும்பி, அந்தக் கட்டிடத் தொகுதியின் அருகாகவேயிருந்த அவர்களுடைய வீட்டுக்கு நடந்துசெல்லமுடிகிற வரையில் அவர்கள் எல்லோரும் அங்கேயே அமரவேண்டியிருந்தது. லொரேட்டா, அவரது உயிரைக் காப்பாற்றியதற்காக, அன்னாவும் சாமும் நன்றி கூறிக்கொண்டேயிருந்ததுடன் மறுநாள் மதிய உணவுக்கு அவர்கள் வீட்டுக்கு வந்தேயாகவேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.
அடுத்த சில நாட்களுக்கு அவள் வேலைக்குச் செல்லமுடியாதபடியாக இருந்தது. கண்டிப்பாகச் செய்தேயாகவேண்டிய சில விஷயங்கள் இருந்ததால், அவள் மூன்று நாட்கள் ஊதியமில்லாத விடுப்பு எடுத்தாள். அவர்களுடனான மதிய உணவு என்பது நகரத்திலிருந்து பெர்க்கிலி சென்று திரும்பும் தூரத்தை உள்ளடக்கியதென்பதோடு திட்டமிட்ட நாளில் எல்லாவற்றையும் செய்துமுடிக்கமுடியாமலுமாகும்
இது போன்ற நிலைமைகளில் அவள் கையற்றுப் போவதாக உணர்கிறாள். நீங்கள் ஐயோ என உங்களுக்குள்ளாகவே புலம்பிக்கொள்வீர்களே அதைத்தான் அவளும் செய்துகொள்ளமுடியும், அது அவ்வளவு நல்லது. நீங்கள் அதைச்செய்யவில்லையெனில் குற்றவுணர்வுகொள்வீர்கள்; அதைச் செய்தாலோ பலவீனமாக உணர்வீர்கள்.
அவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்த கணத்திலேயே அவள், அவநோக்கு மனநிலையை மாற்றிக்கொண்டாள். வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர்கள் வாழ்ந்த பழங்கால மெக்சிகோ வீட்டைப் போலவே, அந்த வீடும் விரியத் திறந்ததாக நல்ல வெளிச்சத்துடனிருந்தது. அன்னா தொல்லியலாளராகவும் சாம் பொறியாளராகவும் இருந்தனர். டியோட்டிஹ்யாகன் மற்றும் பிற தொல்லியல் தளங்களில் அவர்கள் இணைந்தே பணியாற்றியிருந்தனர்.
அவர்களின் குடியிருப்பு, அருமையான ஒரு நூலகத்துடன் அழகிய மண்கலங்கள், புகைப்படங்கள் நிறைந்து விளங்கியது. படிக்கட்டில் இறங்கியதும் பின்புறப் பகுதியில் ஒரு பெரிய காய்கறித் தோட்டம், பலவகைப் பழ மரங்கள் மற்றும் பேரிவகைத் தாவரங்கள். லொரேட்டாவுக்கு ஒரே வியப்பு; பறவைகளைப்போல மென்மைகொண்ட அந்த இருவரும் அவர்களின் வேலைகளை அவர்களாகவே செய்துகொள்கின்றனர். இருவருமே கைத்தடி கொண்டு, மிகவும் சிரமத்துடனேயே நடந்தார்கள்.
மதிய உணவுக்கு வதக்கிய பாலாடைக்கட்டி பொதியப்பம், சௌசௌ சூப் மற்றும் அவர்களின் தோட்டத்துக் காய்களைக் கொண்டு ஒரு கலவை. அன்னாவும் சாமும் இருவருமாகவே சேர்ந்து உணவு தயாரித்து, மேசையை அழகுபடுத்தியிருந்ததோடு, அவர்களாகவே பரிமாறினர்.
ஐம்பது ஆண்டுகளாகவே, இருவரும் இணைந்தே எல்லாக் காரியங்களையும் செய்துவருகின்றனர். இரட்டைக் குழந்தைகளைப் போல, அவர்கள் ஒருவரையொருவர் எதிரொலித்தார்கள் அல்லது ஒருவர் தொடங்கும் வாக்கியத்தை மற்றவர் முடித்தனர். மதிய உணவு மகிழ்வாக நிகழ்ந்தது; அவர்கள் மெக்சிகோவிலுள்ள பிரமிடுவிலும் பிற அகழாய்வுத் தளங்களிலும் பணியாற்றிய அனுபவங்கள் சிலவற்றை ஒருசேர ஸ்டீரியோ ஒலிபெருக்கி போல அவளுக்குச் சொன்னார்கள். அந்த இரு முதியவர்களால், அவர்கள் பகிர்ந்துகொண்ட இசை மற்றும் தோட்டக்கலை ரசனையால், அவர்கள் ஒருவர் மீதொருவர் கண்டுகொண்ட இன்ப அனுபவத்தால், லொரேட்டா முழுவதுமாக அவர்கள்பால் ஈர்க்கப்பட்டாள்.
அவர்கள் இருவரும் உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் முழுவதுமாகக் கலந்துகொண்டு, ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பு நிகழ்வுகளுக்குச் செல்வதும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஊடகச் செய்தியாளர்களுக்கு அஞ்சல்கள் எழுதுவதும், தொலைபேசியில் பேசுவதுமாக இருப்பதைக் கண்டு அவள் வியப்புகொண்டாள். ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு செய்தித்தாள்களை அவர்கள் வாசித்தனர்; இரவுகளில் ஒருவருக்கொருவர் நாவல்கள் அல்லது வரலாற்று நூல்களை வாசித்துக் காட்டினர்.
நடுங்கும் கைகளோடு சாம் மேசையைச் சுத்தம்செய்யும்போது, லொரேட்டா, அன்னாவிடம் இப்படியொரு நெருக்கமான வாழ்க்கைத் துணை அமைந்திருப்பது எத்துணை பொறாமைகொள்ளச்செய்கிறதென்றாள். ஆமாம், என்ற அன்னா, ஆனால், சீக்கிரமே எங்களில் ஒருவர் போய்விடுவோம் போலிருக்கிறதென்றாள்.
அந்த அறிக்கைச் சொற்றொடரை லொரேட்டா நிரம்ப நாட்களுக்கு நினைவுவைத்து, அவர்களில் ஒருவர் மரணிக்கும் காலத்துக்கு எதிராக ஒரு ஆயுள் காப்பீடு போல அன்னா அவளோடு ஒரு நட்பினை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினாளோவென வியந்தாள். ஆனால், அது அப்படியில்லையென்றும், அது இன்னும் மிக எளிய ஒன்று என்றும் அவள் நினைத்தாள். அவர்கள் இருவருமே போதிய தற்சார்பு மற்றும் தன்னிறைவு கொண்டவர்களாகவும் வாழ்க்கை முழுவதுமே ஒருவர் மற்றவருக்காகப் போதுமான அளவுக்கு ஈடுகொடுப்பவர்களாகவும் இருந்துவந்திருக்கின்றன்; ஆனால் சாம் இப்போதெல்லாம் அடிக்கடி கனவுவயப்படுவதுடன் தொடர்பற்றுப் பேசுபவராகவும் மாறிக்கொண்டிருக்கிறார்.
ஒரே கதையை மீண்டும் மீண்டுமாகச் சொல்கிறார்; அன்னா எப்போதுமே அவரிடம் பொறுமையோடுதானிருக்கிறாளென்றாலும் பேச்சுத் துணையாக இன்னுமொருவர் இருந்தால் அன்னா மகிழ்ச்சிகொள்வாளென லொரேட்டா உணர்ந்தாள்.
காரணம் எதுவாக இருந்தாலும், சாம் மற்றும் அன்னாவின் வாழ்க்கையில் மேலும் மேலுமான ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அவர்களால் மேற்கொண்டு கார் ஓட்டமுடியவில்லை.
லொரேட்டா வேலையிலிருக்கும்போது, தொலைபேசியில் அன்னா, தோட்டத்திற்கான நார்க்கழிவு வாங்கிவருமாறோ, சாமை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறோ கூறுகிறாள். சிலநேரங்களில் அவர்கள் இருவருமே கடைக்குச் செல்ல முடியாதது போல் உணர்ந்ததால், அவர்களுக்காக லொரேட்டா பொருட்கள் வாங்கிவரவேண்டியிருந்தது. அவர்கள் இருவரையும் அவள் விரும்பியதோடு அவர்களை நினைத்து வியந்து பாராட்டவும் செய்தாள். அவர்கள் துணைக்கு ஏங்குவதாகத் தோன்றியதால், அவள் வாரம் ஒருமுறையோ மிகவும் அதிகபட்சம் இரண்டு வாரத்துக்கொருமுறையோ அவர்கள் வீட்டு இரவு உணவுக்குச் சென்றுவிடுவாள்.
சிலவேளைகளில் அவர்களைத் தன் வீட்டுக்கு இரவு உணவுக்கு வருமாறு அழைத்தாள்; ஆனால், அவள் வீட்டுக்கு அதிகம் படியேறவேண்டியிருந்ததோடு, மேலே வந்ததும் அவர்கள் முழுவதுமாகச் சோர்ந்துவிட்டதால் அவள் அதை நிறுத்திக்கொண்டாள். அதனால் அவள், அவர்கள் வீட்டுக்கு மீன், கோழி அல்லது பாஸ்தா உணவு எதையாவது கொண்டுசெல்வாள். இரவு உணவோடு சேர்த்து அருந்துவதற்காக, அவர்கள் காய்கறிக் கலவை தயாரித்து, தோட்டத்துப் பேரிவகைகளுடன் பரிமாறுவார்கள்.
இரவு உணவுக்குப் பின்னர், கோப்பை கோப்பைகளாக, புதினா அல்லது ஜமைக்கா தேநீருடன் மேசையில் சுற்றி அமர, சாம் கதைகள் சொல்வார்.
யுகேட்டான் காட்டுக்குள் அகழப்பட்ட தளம் ஒன்றிலிருக்கையில் அன்னாவை வாத நோய் தாக்கியபோது அவளை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள், அங்கிருந்த மக்கள் எவ்வளவு அன்பும் இரக்கமும் நிறைந்தவர்களாயிருந்தார்கள் என்பது பற்றியது. க்சாலப்பாவில் அவர்கள் கட்டிய வீட்டைப் பற்றித்தான் அநேகக் கதைகள். மேயரின் மனைவி, பார்வையாளர் ஒருவரைத் தவிர்ப்பதற்காக சாளரம் ஒன்றிலேறிக் குதித்ததில் காலை உடைத்துக்கொண்டாராம். சாமின் கதைகள் எப்போதுமே “ அது எனக்கு அந்தக் காலத்தை நினைவுபடுத்துகிறது……” எனத் தொடங்கின.
சிறிது சிறிதாக, அவர்களின் வாழ்க்கைக் கதை முழுவதும் லொரேட்டாவுக்கு மனப்பாடமாயிற்று.
டாம் சிகரத்தில் அவர்களின் பிணைப்பு. அவர்கள் பொதுவுடைமைவாதிகளாக இருந்தபோது நியூயார்க்கில் ஏற்பட்ட காதல். பாவத்திலேயே வாழ்ந்தது. அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேயில்லை. அந்த மரபுமீறிய தன்மைக்காக அவர்கள் அப்போதும் பெருமிதமும் நிறைவும் கொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் தூரத்து நகரங்களில் இருந்தனர். குழந்தைகள் சிறியவர்களாக இருந்தபோது கலிபோர்னியக் கடற்கரையான பெரிய சூர் அருகிருந்த கால்நடைப் பண்ணை பற்றியும் கதைகள் இருந்தன. ஒரு கதை முடியும் போது லொரேட்டா சொல்வாள், “ எனக்கு இங்குவிட்டுப் போவதற்கு வெறுப்பாகத் தானிருக்கிறது. ஆனால், நாளை காலை சீக்கிரமாகவே வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது.” அப்படியே புறப்பட்டுவிடுவாள்தான்.
இருந்தாலும் சாம் சொல்வார், “ கையால் சுற்றும் கிராமபோனுக்கு என்ன நிகழ்ந்ததென்று சொல்கிறேன், கேட்டுவிட்டுப் போயேன்.” நேரம் பிந்தி, ஓக்லாந்திலுள்ள அவள் வீட்டுக்கு காரோட்டிச் செல்லும்போது, இப்படியே போய்க்கொண்டிருக்க முடியாதென அவள் தனக்குள் சொல்லிக்கொள்வாள். அப்படியே அங்கு சென்றுவந்தாலும் அதற்கொரு குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும்.
அவர்கள் ஒருபோதும் சலிப்புறவோ அல்லது ஆர்வமற்றுப்போகவோ இல்லை. மாறாக, அந்த இணையர்கள் இருவரும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் மனதறிந்த தெளிவுடனும் முழுமையான ஒரு வாழ்க்கையினை வளத்தோடு வாழ்ந்தனர். கடந்துசென்ற அவர்களது உலகத்தின் மீது அவர்கள் அதீத ஆர்வத்துடன் விளங்கினார்கள். ஒருவருக்கொருவர் கூடுதல் விளக்கங்கள் அளிப்பதும் நாள் மற்றும் விவரங்கள் பற்றி விவாதிப்பதுமாக அப்படியொரு நல்ல பொழுது அவர்களுக்கு அமைந்தநிலையில், அவர்களுக்கிடையில் புகுந்து தடைப்படுத்தவோ அல்லது அவர்களை அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பவோ லொரேட்டாவுக்கு மனமில்லை.
அதுவே அவள் அங்கு செல்வதை நல்லதென உணரவும் செய்தது. ஏனெனில் அவளைப் பார்ப்பதில் அந்த இருவரும் அவ்வளவு மகிழ்ச்சி கொண்டார்களே! ஆனாலும் சில வேளைகளில், மிகுதியாக க் களைப்புற்றிருக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் செய்யவேண்டியதிருக்கும்போதோ அங்கு போகாமலிருக்கலாமேயென உணர்வாள். கடைசியில் அவள், மறுநாள் காலையில் மிகவும் கடினமாயிருப்பதால், அவ்வளவு பின்னேரத்துக்கு அவள் தங்கமுடியாதெனக் கூறுவாள். ஞாயிற்றுக்கிழமை காலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட பிரஞ்சுக்கு வா என்றாள்.
காலநிலை நல்லதாயிருக்கும்போது, அவர்களின் முன்பக்கத் தாழ்வாரத்தில் செடிகளும் பூக்களுமாகச் சூழ்ந்திருக்க, மேசை அமைத்து அதில் உண்டனர். பறவை உண்கலங்களில் அவர்கள் உணவினை இடுவதால் நூற்றுக்கணக்கான பறவைகள் அங்கு நேராகவே வந்தமர்ந்தன.
குளிர் அதிகமாகும்போது அவர்கள் உள்ளுக்குள்ளேயே இரும்பு அடுப்பில் சமைத்து அங்கேயே உண்டனர். அடுப்புக்குத் தேவையான விறகினை சாம், அவராகவே கீறியெடுத்து நெருப்பினைக் கவனித்துக்கொண்டார். அவர்கள் சிறுவகை அப்பம் அல்லது சாமின் சிறப்பு ஆம்லெட் சாப்பிட்டார்கள்; சிலவேளைகளில் மாவைக் கொதிக்கவைத்துச் செய்யும் பேகல் ரொட்டியும் அதனுடன் சல்மான் மீனின் வயிற்றுப்பகுதி மென்தசையோடு சேர்த்துண்ணும் லாக்சும் கொண்டுவருவாள்.
சாம் கதைகள் சொல்லச் சொல்ல, அன்னா அவற்றுக்குத் திருத்தமும் விளக்கங்களும் அளிக்க, ஒவ்வொரு மணி நேரமும் செல்லச் செல்ல, நாளும் கடந்துபோகும். சிலநேரங்களில் முன்பக்கத் தாழ்வார வெயிலில் அல்லது அடுப்பின் இதமான வெம்மையில் விழித்திருப்பது மிகவும் கடினமாகிவிடும்.
அவர்களின் மெக்சிகோ வீடு கான்கிரீட் செங்கல்களால் கட்டப்பட்டது; ஆனால், உத்தரங்களும் முன்பக்கக் கொடுக்கல் வாங்கல் இடங்களும் நிலையடுக்குகளும் தேவதாரு வகை செடார் மரத்தாலானவை. முதலாவதாக பெரிய அறை – அடுக்களை மற்றும் வசிப்பறை – கட்டப்பட்டது. அவர்கள் கட்டிடம் கட்டும் முன்பாகவே செடிகள், மரங்கள் நடத்தொடங்கியிருந்தனர். வாழை, இலந்தை வகைப் பிளம், ஜகரண்டா மரங்கள். அடுத்த ஆண்டு படுக்கையறை ஒன்றினைக் கட்டிப் பின் பல ஆண்டுகள் கழித்து மற்றொரு படுக்கையறையும் அன்னாவுக்காக ஒரு ஓவிய அறையும் அமைத்தனர்.
படுக்கைக் கட்டில்கள், வேலைசெய்வதற்கான விசுப்பலகைகள் மற்றும் மேசைகள் அனைத்தும் செடார் மரங்கள். மெக்சிகோவின் மற்றொரு மாநிலத்தின் களங்களில் பணியாற்றிய பின்னர் அவர்கள் அந்தச் சிறிய வீட்டிற்கு வந்தனர். வீடு எப்போதும் தண்மையாகவும் செடார் வாசனையோடும் ஒரு பெரிய செடார் பெட்டியைப் போலிருந்தது.
அன்னாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதில் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டியதாயிற்று. நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவள் இல்லாமல் சாம் எப்படிச் சமாளிப்பாரென்று, அவள் நினைவு முழுவதும் சாம் மீதுதானிருந்தது. வேலைக்குச் செல்லும் முன்பாகச் சென்று, சாம் மாத்திரை மற்றும் காலை உணவு சாப்பிடுவதைக் கவனித்துக்கொள்வதாகவும் வேலை முடிந்து வந்த பின்னர் இரவு உணவு சமைத்துக்கொடுப்பதாகவும், அவரை மருத்துவமனைக்கு அவளைப் பார்க்க அழைத்து வருவதாகவும் லொரேட்டா அன்னாவுக்கு உறுதிகூறினாள்.
இதில் அநியாயம் என்னவெனில், சாம் பேசவேயில்லை. லொரேட்டா அவருக்கு உடைமாற்ற உதவும்போது அவர் படுக்கையின் ஒரு ஓரமாக நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
எந்திரத்தனமாக அவர், காலை உணவுக்குப் பின் மாத்திரையை விழுங்கி, அன்னாசிச் சாற்றினைக் குடித்துவிட்டு கவனமாக வாயைத் துடைத்துக்கொண்டார். மாலையில் அவள் வரும்போது முன்பக்கத் தாழ்வாரத்தில் நின்று அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்; முதலில் மருத்துவமனைக்குப் போய் அன்னாவைப் பார்த்துவிட்டுப் பிறகு இரவு உணவினை உண்ணலாமென்றார்.
அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, அன்னா, அவளது நீண்ட வெள்ளைத் தலைமுடி ஒரு சிறுமியினுடையதைப் போல் இரட்டைச் சடையாகத் தொங்க, வெளிறிக் கிடந்தாள். நரம்பு வழியாகக் குளுகோசும் மருந்தும் ஏறிக்கொண்டிருக்க, உயிர்வளியும் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.
அவள் பேசவில்லை; ஆனால், புன்னகைத்தாள். சாம், ஒரு சுமை துணி துவைத்ததாகவும், தக்காளிக்குத் தண்ணீர் பாய்ச்சியதாகவும், பீன்ஸ் செடிகளுக்கு மண் அணைத்ததாகவும், சமையல் பாத்திரங்களைக் கழுவி வைத்ததாகவும் லெமனேடு தயாரித்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவள் சாமின் கையைப் பற்றிக்கொண்டாள். அவர் மூச்சுவிடாமல் ஒவ்வொரு மணித்துளியும் என்ன செய்தாரென்று பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் கிளம்பும் போது, அவர் தடுக்கித் தள்ளாடவே, லொரேட்டா, அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
காரில் வீட்டுக்குச் செல்லும்போது, அவர் மிகவும் கவலைப்பட்டு அழுதார். ஆனால், அன்னா வீட்டுக்கு நல்லபடியாகத் திரும்பி வந்தாள்; தோட்டத்தில்தான் வேலைகள் நிறைய இருந்தன. அடுத்த ஞாயிறு அன்று பிரஞ்ச் முடித்தபின்பு லொரேட்டா தோட்டத்தில் களையெடுத்து, கறுப்புப் பேரிக்கொடிகளை வெட்டினாள். உண்மையிலேயே அன்னா நோய்வாய்ப்பட்டுவிட்டால், என்னவாகுமென லொரேட்டா கவலைப்பட்டாள்.
இந்த நட்பில் அவளின் இடம் எது? அந்த இணையர் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும், அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் பெரும் அபாயத்திலிருப்பதும் அவளை துயர்கொள்ளச் செய்ததுடன் அவள் நெஞ்சை உருக்கவும் செய்தது.
அவள் வேலைசெய்துகொண்டிருக்கும்போதே இந்தச் சிந்தனைகள் அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தன; குளிர்ந்த கறுப்பு மண்ணும் அவள் முதுகில் பட்ட வெயிலும் அவளுக்கு இதமாக இருந்தன. பக்கத்துப் பாத்தியில் களையெடுத்துக்கொண்டிருந்த சாம் அவருடைய கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை லொரேட்டா அவர்களுடைய வீட்டுக்குத் தாமதமாகச் சென்றாள். அவள் அதிகாலையிலேயே எழுந்துவிட்டிருந்தாள் தான், இருந்தாலும் அவள் முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. அவள் உண்மையில் வீட்டிலேயே இருக்க விரும்பினாள்; ஆனால், அவர்களை அழைத்து அவர்களிடம் அங்குசெல்வதை ரத்துசெய்வதாகக் கூறுகின்ற இதயம் அவளுக்கில்லை.
வழக்கம்போல் முன் வாயிற் கதவு தாழிடப்பட்டிருக்கவே, அவள் பின்பக்கப் படிக்கட்டு வழியாகச் செல்ல தோட்டத்திற்குள் நுழைந்தாள். தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக உட்புறமாக நடந்துசென்றாள். தக்காளி, மஞ்சள் பூசணி, பனிக்காலப் பட்டாணியாகப் பசுமை நிறைந்து விளங்கியது. மயக்கத்தில் கிடந்த பட்டாணி.
அன்னாவும் சாமும் மேல்மாடி முன்மாடத்தில் வெளிப்புறமாக அமர்ந்திருந்தனர். லொரேட்டா அவர்களை அழைக்கலாமென எண்ணினாள்; ஆனால் அவர்கள் தீவிர உரையாடலிலிருந்ததாக அவளுக்குத் தோன்றியது.
”அவள் இதற்குமுன் இதுபோல் பிந்தியதே இல்லை. ஒருவேளை வரமாட்டாளோ.”
“ ஓஹ், வருவாள்,…இந்த காலை நேரங்கள் அவளுக்கு மிக முக்கியமானவை.”
“ ஐயோ பாவம். அவள் தனிமையில் தவிக்கிறாள். அவளுக்கு நாம் தேவைப்படுகிறோம். நாம்தான் அவளுடைய ஒரே குடும்பம்.”
”நிச்சயம் அவள் என் கதைகளை ரசிக்கிறாள். அன்பே, இன்றைக்குப் பார்த்து அவளுக்குச் சொல்வதற்கென எந்த ஒரு ஒற்றைக்கதைகூட நினைவிற்கு வரமாட்டேனென்கிறது.”
“எதாவது வரும்……”
“ஹல்லோ! வீட்டில் யாராவது இருக்கிறீர்களா?” என அழைத்தாள், லொரேட்டா. 

https://www.vice.com/en_au/article/read-a-story-from-lucia-berlins-a-manual-for-cleaning-women-0810 

No comments:

Post a Comment