Sunday 8 April 2018

கிட்டிப்புள் என்னும் செங்கட்டை.

கிட்டிப்புள் என்னும் செங்கட்டை
கிட்டிப்புள், கில்லி எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்ட இந்த விளையாட்டு நாஞ்சில் நாட்டிலுள்ள எங்கள் கிராமத்தில் `செங்கட்டை` என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
முழநீள உருட்டுக் கம்புக்கு `தள்ளை` என்றும் இருபுறமும் கூராக்கப்பட்ட சிறுகம்புக்கு செங்கட்டை என்றும் பெயர்.
இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடப்படும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர். குழுவிலுள்ள ஒவ்வொருவருக்கும் எதிர் குழுவில் ஒருவர் போட்டியாளராக நியமிக்கப்படுவார்.
பரந்த மைதானம். நடுவில் ஒரு அரைமுழம் அளவில் ஒரு கோட்டுக்குழி தோண்டப்படும். அந்தக் குழியின் மேலாக செங்கட்டையை வைத்து தள்ளையைக் கொண்டு கோரவேண்டும். இதற்குக் கோருதல் என்றே பெயர். இந்த விளையாட்டின் விதிகளை எல்லாம் பதிவுசெய்வது இப்போது தேவையில்லாதது.
கோருகுழிக்கும் சிறுகட்டை விழுந்த இடத்துக்கும் இடையிலுள்ள தூரத்தை அளப்பதற்கு ஒரு தனி அளவுமுறை உண்டு. குழியிலிருந்து சிறுகட்டை நோக்கி, தள்ளையால் அளக்கப்படும். தள்ளையின் முதல் அளவு சாக்கொட்டான், அடுத்தது சாத்தியம் பற, அடுத்து முக்குறுணி, நாக்குறுணி, ஐங்குறுணி, ஆரஞ்சு, குளோஸ். அப்படி ஏழு அளவை முடியும் போது குளோஸ் 1 தொடர்ந்துள்ள தூரங்கள் எத்தனை குளோஸ் எனக் கணக்கிடப்படும். 50 குளோஸ் அல்லது 20 குளோஸ் என இலக்கு நிர்ணயித்துக்கொள்வார்கள். எந்த அணி அந்த இலக்கினை முதலில் அடைகிறதோ அது ஜெயித்த அணி.
இதற்குப் பிறகுதான் விளையாட்டின் உச்சகட்டம் ஆரம்பிக்கிறது. ஜெயித்த அணித் தலைவன் கட்டையை அடிக்க, அதை எதிரணித்தலைவன் பிடிக்கவேண்டும். பிடிக்க முடியவில்லையெனில் கோருகுழியின் அருகில் படுக்கைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் தள்ளையை நோக்கி எறிய வேண்டும். அதில் தள்ளையில் பட்டுவிட்டால் ஆட்டம் நிறுத்தப்படும். தள்ளையில் படாமல் தூரமாகப் போய்விழுந்தால் மீண்டும் ஆட்டம் தொடரும். அதன் பெயர் திகைதல், திகைக்கவைத்தல். திகைதல் நடக்கும் போது தோற்ற அணியின் ஒவ்வொருவர் மீதும் அவரது போட்டியாளர் குதிரை ஏறியமர்வார்.
வெற்றித் தலைவன் எவ்வளவு அதிகத் தூரத்துக்கு கட்டையை அடிக்க முடியுமோ அவ்வளவு அதிகத் தூரம் போகுமாறு செங்கட்டையைத் திறமையோடு அடிப்பான். திகைக்கும் தலைவனும் முழுத்திறமையோடு தள்ளையை நோக்கி வீசுவான். குதிரை ஏறும் அணியினருக்குக் கொண்டாட்டம். சுமக்கும் அணிக்குத் திண்டாட்டம். ஒரே கும்மாளம் தான்.
சாயங்காலம் 4.00 மணிக்குத் தொடங்கிய ஒரு ஆட்டமே முடிய இரவாகிவிடும். அவ்வளவுதான். வீட்டுக்குப் போய்விடுவோம். அநேகமாக பெரிய குளத்தங்கரையில் கோவிலை ஒட்டியுள்ள பெரிய மைதானத்தில் தான் இந்த ஆட்டம் நடக்கும்.
முபநூல் பதிவு 04.04.18.  விருப்பம் 146 பகிர்வு 48 பின்னூட்டம் 43

No comments:

Post a Comment