Sunday 15 July 2018

சர்க்கரை நோயிலிருந்து காக்கும் நாவல்பழம் (அபுனைவு 28)

சர்க்கரை நோயிலிருந்து காக்கும் நாவல் பழம்
1995 மே மாத இறுதியில் கோவா சுற்றுலா சென்றபோது லதாமங்கேஷ்கர் பிறந்த ஊரிலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்றோம். கோவில் நடை திறப்பதற்காகக் காத்திருந்தபோது தான் அப்பகுதியில் நின்றிருந்த பிரமாண்டமான நாவல் மரங்களைப் பார்த்தோம். மந்தாரை இலை போன்ற ஒரு இலையில் பத்துப் பதினைந்து பழங்களைப் பொதியாகக் கட்டிச் சிறுவர்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அப்பழங்கள் நம் ஊர்ப் பழங்களைவிடப் பெரிதாகவும் சுவைமிகுந்தும் இருப்பதைத் தெரிந்துகொண்டோம். அப்பழங்களை `ராம் நாவல்` என அழைத்தனர்.
கோவாவில் முந்திரிப்பழத்திலிருந்து பென்னி மது தயாரிப்பது போல நாவல் பழத்திலிருந்தும் ஒரு வகை மது தயாரிக்கின்றனர்.
இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நாவல் பழம் சந்தைக்கு வரத் தொடங்கி, இப்போதும் கிடைக்கிறது. வடநாட்டு ராம் நாவல் வகையும் கிடைக்கிறது. கிலோ ரூ.150 முதல் 180/- வரை விற்கின்றனர்.
இனிப்பு நோயர்களுக்கு மா, வாழை, பலா மூன்றுமே உண்ணலாகாப் பழங்கள். ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, பப்பாளி, கொய்யா போன்றவை உண்ணத்தகுந்தவை; அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாமென்பதில்லை. ஓரளவே உட்கொள்ளலாம்.
நாம் உட்கொள்கிற பழங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தருகின்றனவே தவிர நோய் தீர்ப்பதில்லை. ஆனால், நாவல் பழத்தின் தோலிலுள்ள ஆந்தோசயனின், மற்றும் கொட்டையின் மேல்தோலிலுள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதுடன் சர்க்கரையின் பிற பிற்கால நோய்கள் வராது காக்கும் தன்மையும் கொண்டவையென சித்த மருத்துவர் கு.சிவராமன் (இந்து தமிழ். 06.07.2018 இனிப்பு தேசம் தொடர் .13) குறிப்பிடுகிறார்.
நாவல் பழக் கொட்டையை உலர்த்திப் பொடி செய்து தினமும் சிறிதளவு பொடியை கொதிக்கும் வெந்நீரிலிட்டு அருந்தி வந்ததன் மூலம் எனது உறவினர் ஒருவர் சர்க்கரை நோயினைப் பல ஆண்டுகளாகக் கட்டுக்குள் வைத்திருந்தார்.
இனிப்பு நோயர்கள் நாவல் பழப் பருவகாலத்தில் பழங்களைப் பயன்படுத்துவதுடன் அதன் கொட்டைகளைச் சேகரித்துவைத்திருந்து பயன்படுத்துவது சர்க்கரை நோயின் கடுமையிலிருந்து விடுபடுவதற்கான நல்வழியாகிறது.
முகநூல் 13.07.2018 விருப்பம் 126  பகிர்வு 46.

No comments:

Post a Comment