Monday 24 December 2018

சங்க இலக்கியத் துளிகள் - 21

சங்க இலக்கியத் துளிகள் - 21
முல்லையே, நீயும் சிரித்தனையோ?
`முல்லையும் பூத்தியோ` என்ற புகழ்பெற்ற தொடர் பலருக்கும் நினைவிலிருக்கலாம்.
ஒல்லையூர் கிழான் மகன் சாத்தன் இறந்தபோது குடவாயிற் கீரத்தனார், அங்கே பூத்திருந்த முல்லையைக் கண்டு, `நல்வாழ்வு வாழ்ந்த வல்வேற் சாத்தனோ மாண்டுவிட்டான்; இப்போது இளையோர் உன்னைச் சூடார்; வளையோரும் கொய்யார்; பாணன் சூடான்; பாடினியும் அணியாள்; நீ ஏன் பூத்திருக்கிறாய்? அதுவும் அவன் நாட்டிலேயே பூத்திருக்கிறாயே!” எனக் கேட்பதாகப் புறநானூற்றுப் பாடல் 242 அமைந்துள்ளது.
“இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கி,
பாணன் சூடான்; பாடினி அணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?
--- குடவாயிற்கீரத்தனார், புறம். 242.
முல்லையும் பூத்தியோ என்ற தொடரில், பகைவர்தாம் மகிழ்வர்; நீயுமா மகிழ்கிறாய்` என்ற வினா தொக்கிநிற்பதாகவும் கொள்ளமுடிகிறது.
சாத்தன் மாய்ந்த இத்துன்பப் பொழுதிற்போய்ப் பூத்திருக்கிறாயே, உன்னை யார் அணியப்போகிறார்கள்? என முல்லையைப் பார்த்துப் பரிதாபம் கொள்வதான நோக்கும் உள்ளது.
சாத்தனை இழந்தும் கொடியேனாக வாழுகின்ற நானன்றி, நீயும் கொடியையாய்ப் பூக்கின்றனையோவெனவும் அமையும்;
ஆக, முல்லையும் பூத்தியோ என்ற தொடரிலுள்ள உம்மை எச்சவும்மையாக அத்தனை பொருள் சுட்டி நிற்பதைக் காண்கிறோம்.
கையறுநிலைத் துறையிலமைந்த இப்பாடல் மிகச்சிறந்ததொன்றெனக் கருதப்படுகிறது.
பொருள் தேடிச் சென்ற குறுந்தொகைத் தலைவன் வினை முற்றி மீளுகின்ற பொழுதில் முல்லைக்கு உரைப்பானாக அமைந்த பாடலொன்றில்
“முல்லையே, நீ வாழி! முல்லையே, மேகம் கொடையாகத் தந்த நீரினை உடைய அகன்ற முல்லை நிலத்தில் வினை முற்றி மீளும் பலரும் ஊர்திரும்பும் ஒளிமங்கிய மாலைக்காலத்தில் நீ, உனது சிறுசிறு வெள்ளிய அரும்புகளால் முறுவல் கொண்டனை; எள்ளி நகைப்பது போல முறுவல் காட்டுகிறாயே, இது உனக்குத் தகுமா? அதுவும் காதலியரைப் பிரிந்து தனித்திருப்போரிடம் இப்படி நடப்பதோ?” எனக் கேட்பானாக அமைந்துள்ளது.
பாடல் ;
கார் புறந்தந்த நீருடை வியனுலகம்
பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை! வாழியோ, முல்லை! – நீ நின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை!
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று – இது தமியோர் மாட்டே?
---- கருவூர்ப் பவுத்திரன், குறுந். 162.
மழையால் மட்டுமே நீர் பெறுகின்ற விரிந்த முல்லை நிலம். முல்லை நிலத்தில் மாலை மயங்கும் நேரத்தில் வினை முடித்த ஆயர்களும் மற்றோரும் ஊருக்குத் திரும்புதல் இயற்கை. அந்த மாலைப் பொழுதில் முல்லை மலர்தல் இயற்கை நிகழ்வே.
மனைவியை நெடுநாள் பிரிந்து தன் வினை முடித்து வீடு திரும்பும் தலைவன் முல்லையின் சிறுசிறு வெண்மொட்டுகளைக் கண்டு, முல்லை சிரிப்பதாக நினைக்கிறான். முல்லை மலரைப் பெண்டிர் சூடுவர். மேலும் அது கற்போடு இணைத்துப் பார்க்கப்படுவது;
எனவேதான் முல்லையைப் பெண்ணாக உருவகித்து, முல்லையே நீ வாழி என வாழ்த்துகிறான். மீண்டும் ‘முல்லையே’ என விளித்து, நீ சிரிக்கிறாயே, அதுவும் நகுவது போல் சிரிக்கிறாயே, காதலியரைப் பிரிந்து தனிமையில் வாடுவோரைக் கண்டு அப்படி நகுவது தகுமோ’ எனக் கேட்கிறான். நீயோ பெண்களுக்கு நெருக்கமானவள்; அப்படியிருக்க இப்படி நகுவது அறமோ? எனக் கேட்பதாகவும் பொருள்படும்.
இப்பாடலில் முதல் பொருளாக முல்லை நிலமும், மாலைப்பொழுதும் கருப்பொருளாக முல்லை மலரும் உரிப்பொருளாக முல்லைத் திணையும் வினைமுற்றி மீளும் தலைவன் கூற்று என்னும் துறையில் முல்லைக்கு உரைப்பானாகவும் அனைத்துமே முல்லையாக அமைந்து சிறக்கிறது.

No comments:

Post a Comment