Monday 31 December 2018

செஃப் வீடு - ஆங்கிலம்: ரேமண்ட் கார்வர்

செஃப் வீடு / CHEF’S HOUSE / ஆங்கிலம் : ரேமண்ட் கார்வர் ( Raymond Carver )  / தமிழில் / ச.ஆறுமுகம்.


ரேமண்ட் கார்வர்
அந்தக் கோடையில் வெஸ், யுரேகாவுக்கு வடக்கில் முழுமையாக அறைகலங்களுள்ள ஒரு வீட்டை குடிநோயிலிருந்தும் முழுமையாக மீட்கப்பட்டிருந்த செஃப் என்பவரிடமிருந்து வாடகைக்கு எடுத்தான். பின்னர் அவன், என்னிடம் அவனோடு வாழுமாறும் அவனை விட்டுப் பிரிவதை மறந்துவிடுமாறும் கேட்டுத் தொலைபேசியில் பேசினான். அவன் பாரவண்டியிலிருப்பதாகச் சொன்னான். அந்தப் பார வண்டியைப்பற்றி எனக்குத் தெரியும். முடியாதென நான் சொல்லும் பதிலை அவன் ஏற்கமாட்டான். அவன் மீண்டும் என்னிடம் தொலைபேசியில், எட்னா, முன்பக்கச் சாளரம் வழியாக நீ கடலைப் பார்க்கமுடியுமென்றான். காற்றில் உப்பின் வாடையை நீ உணரலாம். அவன் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் வார்த்தைகளைக் குழறிப் பேசவில்லை. அதைப்பற்றி யோசித்துப் பார்ப்பதாக நான் கூறினேன். நானும் யோசித்துப் பார்த்தேன். ஒரு வாரம் கழித்து அவன் மீண்டும் என்னைத் தொலைபேசியில் அழைத்து எப்போது வருகிறாயெனக் கேட்டான். அப்போதும் யோசித்துக்கொண்டிருப்பதாகக் கூறினேன். நாம் மீண்டும் தொடங்கலாமென்றான், அவன். நான் அங்கே வரவேண்டுமென்றால், நீ எனக்காகச் சிலவற்றைச் செய்யவேண்டுமென்றேன் நான். என்னவென்று சொல்லென்றான், அவன். நானறிந்த வெஸ்ஸாக முயற்சிப்பதோடு, அப்படியே இருக்கவும் வேண்டுமென்றேன் நான். பழைய வெஸ், நான் திருமணம் செய்த வெஸ். அவன் அழத் தொடங்கினான்; அதை நான் அவனது நல்ல மனதின் அடையாளமாகக் கண்டேன். அதனால், சரி,சரி. நான் வருகிறேன் எனச் சொல்லிவிட்டேன்.
வெஸ் அவனுடைய பெண்தோழியை விட்டு விலகினானோ, அல்லது, அவள் இவனை விட்டு விலகினாளோ, எனக்குத் தெரியாது. அதைப்பற்றி எனக்குக் கவலையுமில்லை. வெஸ்ஸோடு செல்வதற்கு நான் தயாராகும்போது, எனது ஆண்தோழனுக்கு விடைகொடுக்கவேண்டும். என் தோழன் சொன்னான், நீ தவறு செய்கிறாய். எனக்கு இப்படிச் செய்யாதேயென்றான். நம் கதை என்னாவது? என்றான், அவன். வெஸ்ஸின் நன்மைக்காக, நான் இதைச்செய்தாக வேண்டியிருக்கிறதென்றேன். அவன் குடியிலிருந்தும் விடுபட முயற்சிக்கிறான். அது எப்படியானதென்று நீ நினைத்துப்பார், என்றேன். எனக்கு ஞாபகமிருக்கிறது என்று சொன்ன என் ஆண்தோழன், ஆனாலும் நீ போவதை நான் விரும்பவில்லையென்றான். நான் கோடைக்குப் போகத்தான் போகிறேனென்றேன், நான். கொஞ்சம், பார்ப்பேன். சரியில்லையென்றால் திரும்பவும் வந்துவிடுவேன் என்றேன். என் கதை என்ன? நான் என்னாவது? திரும்பி வராதேயென்றான், அவன்.
நாங்கள் காபி, சோடா, குளிர்பானங்கள் மற்றுமுள்ள எல்லா வகையான பழச்சாறுகளையும் அந்தக் கோடையில் அருந்தினோம். அந்தக் கோடை முழுவதற்கும் நாங்கள் குடிப்பதற்கிருந்ததெல்லாம் அவைதாம். அந்தக் கோடை முடியவே கூடாதென்ற ஆவல் உள்ளூறுவதை நான் உணர்ந்தேன். எனக்கு நன்றாகத் தெரிந்தது, ஆனாலும் செஃபின் வீட்டில் வெஸ்ஸுடன் ஒரு மாதம் கழிந்ததும், என்னுடைய திருமண மோதிரத்தை எடுத்து நான் மீண்டும் அணிந்துகொண்டேன். இரண்டு வருடங்களாக, அந்த மோதிரத்தை நான் அணிந்திருக்கவில்லை. குடி போதையிலிருந்த வெஸ் அவனுடைய மோதிரத்தைக் கழற்றி பீச் தோட்டத்தில் எறிந்த இரவிலிருந்து நான் அணியவேயில்லை.
வெஸ்ஸிடம் கொஞ்சம் பணமிருந்தது. அதனால் நான் வேலைக்குப் போகவேண்டியிருக்கவில்லை. செஃப் அநேகமாக எங்களுக்கு அந்த வீட்டை வாடகையென எதுவுமேயில்லாமல் தான் கொடுத்திருந்தார். எங்களுக்கெனத் தொலைபேசி எதுவும் இல்லை. சமையல் எரிவாயு, வெளிச்சத்திற்கான விளக்குகள் மற்றும் சேஃப்வே அங்காடியில் நாங்கள் வாங்கிய பொருட்களுக்கும் பணம் கொடுத்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகலில் தெளிப்பான் ஒன்று வாங்கச் சென்ற வெஸ் எனக்கான சிலவற்றோடு திரும்பிவந்தான். டெய்ஸி மலர்களாலான அழகிய ஒரு பூங்கொத்தும் வைக்கோல் தொப்பி ஒன்றும் கொண்டுவந்தான்.
செவ்வாய் மாலைகளில் நாங்கள் ஏதாவது ஒரு திரைக்காட்சிக்குப் போவோம். மற்ற இரவுகளில், `குடிக்காதே` கூட்டமென வெஸ் சொல்கிற கூட்டங்களுக்குப் போவான். வீட்டு வாசலுக்கே காரில் வந்து அழைத்துச் செல்கிற செஃப் கூட்டம் முடிந்ததும் மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுவிடுவார். சில நாட்களில் நானும் வெஸ்ஸும் பக்கத்திலிருந்த நல்ல தண்ணீர்க் குளம் ஒன்றில் ட்ரவுட் மீன் பிடிக்கச் செல்வோம். சில குஞ்சுகளைப் பிடிப்பதிலேயே நாள் முழுவதும் கரையிலேயே கழிந்துவிடும். அவை நன்றாக இருக்குமென்பேன் நான். அன்றைய இரவுக்கு அவற்றைப் பொரித்துவிடுவேன். சிலவேளைகளில் என் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டு தூண்டிற்கோலுக்குப் பக்கத்திலேயே விரிப்பினை விரித்துப் படுத்துத் தூங்கிவிடுவேன். கடைசியாக என்ன பார்த்தோமென்று நினைத்துப்பார்த்தால், என் தலைக்கு மேலே மத்தியப் பள்ளத்தாக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்த மேகங்கள் தாம் நினைவுக்கு வரும். இரவில், வெஸ், என்னைக் கைகளில் அள்ளிக்கொண்டு, நான் இப்போதும் அவனுக்கே அவனுக்கான, அவனுடைய பெண்ணாகவே இருக்கிறேனா எனக் கேட்பான்.
எங்கள் குழந்தைகள் எங்களோடு ஒட்டாமல், தள்ளியே இருந்தனர். செரைல், ஓரேகானிலுள்ள ஒரு பண்ணையில் சிலரோடு வசித்தாள். அவள் ஒரு ஆட்டு மந்தையை மேய்த்ததோடு பாலும் விற்றாள்: தேன்கூடுகள் பராமரித்து, ஜாடி, ஜாடியாகத் தேன் சேர்த்தாள். அவளுக்கேயான வாழ்க்கையினை அவள் வாழ்ந்துகொண்டாள்; நான் அவள் மீது குறை ஏதும் சொல்லவில்லை. நானும் அவளது அப்பாவும், அவளை எந்த விஷயத்துக்குள்ளும் கொண்டுவராமலேயே இருந்தது போலவே நாங்கள் என்னென்ன செய்தோமென்பது பற்றி, இப்படி அல்லது அப்படியென்று எந்த ஒரு வழியிலும் அவள் கவலைப்படவேயில்லை.
பாபி, வாஷிங்டனில் கால்நடைத் தீவனச் சேகரிப்பு வேலையிலிருந்தான். தீவனச் சேகரிப்புப் பருவம் முடிந்த பின்னர், ஆப்பிள் தோட்டங்களில் வேலைசெய்யத் திட்டமிட்டிருந்தான். அவனுக்கென்று ஒருத்தி இருக்கிறாள்; அவளுக்காகப் பணமும் சேமிக்கிறான். நான் அவர்களுக்கு எழுதும் கடிதங்களில் `எப்போதும் அன்பு` என ஒப்பமிடுவேன்.
ஒரு பிற்பகலில், வீட்டின் முன்பாக செஃப் காரில் வந்து நின்றபோது, வெஸ் முற்றத்தில் களைகளைப் பிடுங்கிக்கொண்டிருந்தான். நான் கழுவு தொட்டியில் வேலையாக இருந்தேன். அவருடைய கார், கிளைச்சாலை, அதற்கும் பின்னாலிருந்த இருவழிச்சாலை, மணல்மேடுகள் மற்றும் பெருங்கடல் எல்லாமே நானிருந்த இடத்திலிருந்த இடத்திலிருந்தே பார்க்க முடிந்தது. கடலுக்கு மேலாக மேகங்கள் தெரிந்தன. அவரது காரிலிருந்தும் இறங்கிய செஃப் அவரது காற்சட்டையை மேலிழுத்துக்கொண்டார். ஏதோ ஒன்று நடக்கப் போவதாக எனக்குத் தோன்றியது
வெஸ், அவன் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, எழுந்து நின்றான். அவன் கைகளுக்கு உறைகளும் தலைக்கு ஒரு கான்வாஸ் துணித் தொப்பியும் அணிந்திருந்தான். அவன் தொப்பியைக் கழற்றிவிட்டு, முகத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டான். செஃப், வெஸ்ஸின் அருகில் சென்று, அவன் தோள்மீது கைகளைப் போட்டார். வெஸ் கையுறை ஒன்றை உருவி இழுத்துக் கழற்றினான். நான் வாசலுக்குச் சென்றேன்.
அவர் வருத்தத்தைக் கடவுள் தான் அறிவாரென்றும் அந்த மாதக் கடைசியில் எங்களை வீட்டைவிட்டுச் செல்லுமாறு கேட்கவேண்டியதாயிருக்கிறதென்றும் செஃப் வெஸ்ஸிடம் சொன்னதை நான் கேட்டேன். வெஸ் இன்னொரு கையுறையையும் உருவினான். அது ஏன் செஃப்?
குடிக்கிற காலத்திலிருந்தே, வெஸ் எப்போதும் குண்டு லிண்டா எனச் சொல்கிற அவருடைய மகள், வசிப்பதற்கு ஒரு இடம் வேண்டுமென்றும், அது இதுதானென்றும் செஃப் சொன்னார். லிண்டாவின் கணவன் அவருடைய மீன்பிடிப்படகை எடுத்துக்கொண்டு சில வாரங்கள் முன்னதாகச் சென்றதாகவும் அதன்பிறகு அவனைப்பற்றி எதுவும் தெரியவில்லையென்றும் செஃப், வெஸ்ஸிடம் கூறினார்.
அவள் என்னுடைய சொந்த ரத்தம், என்றார் செஃப். அவள் கணவனை இழந்துவிட்டாள். அவளுடைய குழந்தையின் தந்தையை அவள் இழந்திருக்கிறாள். என்னால் உதவமுடியும். அவளுக்கு உதவும் நிலையில் நானிருக்கிறேனென்பதே மகிழ்ச்சிதான், என்றார், செஃப். எனக்கு மிகவும் வருத்தந்தான் வெஸ், ஆனாலும் நீ வேறு வீடு பார்த்துத்தானாக வேண்டும். பின்னர், செஃப் மீண்டும் வெஸ்ஸைத் தழுவி அணைத்து, அவருடைய காற்சட்டையை மீண்டும் மேலிழுத்துக்கொண்டு, அவருடைய பெரிய காரில் ஏறி, அதை ஓட்டிச்சென்றார்.
வெஸ் வீட்டுக்குள் வந்தான். தொப்பியையும் கையுறைகளையும் தரைவிரிப்பின் மீது எறிந்துவிட்டு, பெரிய நாற்காலியில் உட்கார்ந்தான். அது செஃபின் நாற்காலி, சட்டென்று எனக்கு உறைத்தது. தரைவிரிப்பும் கூடத்தான். வெஸ் முகம் வெளிறித் தோன்றினான். இரண்டு தம்ளர்களில் காபி ஊற்றி, ஒன்றை அவனிடம் கொடுத்தேன்.
எல்லாம் சரியாகப் போகும், கவலைப்படாதே வெஸ் என்றேன். செஃப்பின் சாய்மெத்தையில் என் காபியுடன் அமர்ந்தேன், நான்.
இங்கே நமக்குப் பதிலாக குண்டு லிண்டா வசிக்கப் போகிறாள், என்றான், வெஸ். அவன் தம்ளரைக் கையில் தான் பிடித்திருந்தான். ஆனாலும் அதிலிருந்து ஒரு மடக்கு கூடக் குடித்திருக்கவில்லை.
வெஸ், இடிந்துவிடாதே, என்றேன், நான்.
அவளுடைய ஆள் கெட்சிகானில் வந்து சேர்வான், பாரேன் என்றான், வெஸ். குண்டு லிண்டாவின் கணவன் அவர்களை மிக எளிதாக, வெளியே இழுத்து எறிந்துவிட்டான். ஆனால், அதற்காக அவனைக் குற்றம் சொல்ல யாரால் முடியும்? என்றான், வெஸ். இதைப்பார்க்கும்போது, அவனேகூடத்தான், இந்த குண்டு லிண்டா கூடவும் அவள் குழந்தை கூடவும் மீதி நாளைக் கழிப்பதைவிடக் கப்பலோடு போயிருப்பானென்றான், வெஸ். பிறகு, வெஸ் அவனுடைய தம்ளரைக் கையுறைகளின் பக்கத்தில் வைத்தான். இந்த நிமிஷம் வரைக்கும் இது ஒரு மகிழ்ச்சியான வீடாகத்தானிருந்திருக்கிறது, என்றான்.
நாம் வேறொரு வீடு வாங்குவோம் என்றேன், நான்.
இது மாதிரி முடியவே முடியாது, என்றான் வெஸ். எப்படியானாலும் இதுமாதிரி வராது. இது நமக்கு ஒரு நல்ல வீடாக இருந்திருக்கிறது. இந்த வீட்டுக்கென்றே நல்ல நினைவுகள் இருக்கின்றன. இனி, குண்டு லிண்டாவும் அவள் குழந்தையும் இங்கிருக்கப் போகிறார்கள், என்றான், வெஸ். அவன் தம்ளரை எடுத்துக் காபியை உறிஞ்சிச் சுவைத்தான்.
இது செஃப் வீடு, என்றேன், நான். அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்துதானாக வேண்டும்.
அது எனக்குத் தெரியும், ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. என்றான், வெஸ்.
வெஸ்ஸுக்கு அவரைப்பற்றி இப்படி ஒரு பார்வை. அது எனக்குத் தெரியும். அவன் உதடுகளை நாக்கால் தடவிக்கொண்டேயிருந்தான். காற்சட்டைக்குள்ளாக மேற்சட்டையைத் திணித்துக்கொண்டேயிருந்தான். நாற்காலியிலிருந்தும் எழுந்த அவன் சாளரத்தின் பக்கம் போனான். கடலையும் அதன் மேலாகக் கூடிக்கொண்டிருந்த மேகங்களையும் பார்த்தவாறே நின்றான். எதையோ நினைத்துச் சிந்திப்பது போல நாடியை விரல்களால் தட்டிக்கொண்டான். ஆமாம், அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான்.
இலேசா எடுத்துக்க, வெஸ் என்றேன், நான்.
இலேசா எடுத்துக்கொள்ளவேண்டுமென்கிறாள், அவள் என்றான் வெஸ். அவன் அப்படியே நின்றுகொண்டிருந்தான்.
ஆனால், அடுத்த ஒரு கணத்திலேயே திரும்பி வந்து சாய்மெத்தையில் என் பக்கத்தில் உட்கார்ந்தான். ஒரு காலை எடுத்து மற்றொன்றின் மீது குறுக்காகப் போட்டுக்கொண்டு, அவனுடைய மேற்சட்டையின் பொத்தான்களைத் திருகத் தொடங்கினான். நான் அவன் கைகளைப் பற்றினேன். பேசத் தொடங்கினேன். அந்தக் கோடை காலத்தைப்பற்றிப் பேசினேன்.
ஆனால், அது என்னவோ முன்காலத்தில் நடந்தது போலப்பேசி, நானாகவே மாட்டிக்கொண்டேன். பல ஆண்டுகள் ஆகியிருக்கலாம். எப்படியாக இருந்தாலும், அது முடிந்துபோன ஒன்றுதான். பின்னர் நான் குழந்தைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினேன். அதை இன்னொருமுறை செய்ய வேண்டுமென்றும் இந்தமுறை சரியாகச் செய்துவிட ஆசைப்படுவதாகவும் வெஸ் சொன்னான்.
அவர்கள் உன்மீது அன்பாயிருக்கிறார்கள், என்றேன் நான்.
இல்லை, அவர்கள் அப்படியில்லை, என்றான், அவன்.
ஏதோ ஒரு நாள் அவர்கள் புரிந்துகொள்வார்கள், என்றேன், நான்.
இருக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் அது ஒரு விஷயமாகவே இருக்காது.
உனக்குத் தெரியாது, என்கிறேன், நான். .
எனக்கும் சில விஷயங்கள் தெரியும், என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான். எனக்குத் தெரியும், நீ இங்கே வந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நான் அதை மறக்கவே மாட்டேன். நீதான் அதைச் செய்தாய், என்றான் வெஸ்.
எனக்கும் மகிழ்ச்சிதான், என்றேன், நான். இந்த வீட்டை நீதான் கண்டிபிடித்தாய், அது எனக்கு மகிழ்ச்சிதானென்றேன், நான்.
வெஸ் பெருமூச்செறிந்தான். பின், சிரித்தான். நாங்கள் இருவரும் சிரித்தோம். `அந்த செஃப்` என உச்சரித்த வெஸ் தலையை உலுக்கிக்கொண்டான். அந்தப் பொட்ட நாய்க்குப் பிறந்தவன், எரிபந்தை நம்மீது வீசிவிட்டுப் போய்விட்டான். நீ நம் திருமண மோதிரத்தை அணிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இம்முறை நாமிருவரும் சேர்ந்தேயிருந்ததில் எனக்கு மகிழ்ச்சி., என்றான், வெஸ்.
அப்புறம், நானும் ஏதோ சொன்னேன். சரி, இப்படி வைத்துக்கொள், சும்மாதான் வைத்துக்கொள்ளேன், எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இதுதான் முதன் முதலாக என்று வைத்துக்கொள். சும்மாதான் அப்படி வைத்துக்கொள்ளேன். நான் சொல்வது, காயப்படுத்துவதற்கல்ல, மோசமான ஒன்று நடக்கவேயில்லையென்று சொல். நான் சொல்வது உனக்குப் புரிகிறதில்லையா? பின் என்ன? என்றேன், நான்.
வெஸ் கண்கொட்டாமல் என்னையே பார்த்தான். அப்படியாக இருந்தால், நாம் வேறு யாரோவாக இருக்கவேண்டும். நாமாக இல்லாத வேறு யாரோவாக. என்னிடம் அது போல நினைக்கின்ற எண்ணம் எதுவும் மீந்திருக்கவில்லை. நாம் யாராக இருக்கிறோமோ அப்படித்தான் பிறந்திருக்கிறோம். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?
நல்ல விஷயத்தை நானும் தூக்கி எறிந்துவிடவில்லை; அறுநூறு மைல்களுக்கு அப்பாலிருந்து நீ இப்படிப் பேசுவதைக் கேட்பதற்காகவா வந்தேனென்றேன், நான்.
நான் வருந்துகிறேன், வருத்தம் தெரிவிக்கிறேன் ஆனால் நானாக இல்லாத ஒருவர் போல என்னால் பேசமுடியாதென்று சொன்னான், அவன்.
நான் வேறு யாரோ அல்ல. நான் வேறு யாரோவாக இருந்திருந்தால், நான் நிச்சயமாக இங்கே இருந்துகொண்டிருக்க மாட்டேன். நான் வேறு யாரோவாக இருந்திருந்தால் நான் நானாக இருக்கமாட்டேன்.
ஆனால், நான் நானாகவே இருக்கிறேன், உனக்குத் தெரியவில்லையா?
வெஸ், அதெல்லாம் சரி, என்றேன், நான். அவனுடைய கைகளைப் பிடித்து என் கன்னங்களுக்குக் கொண்டுவருகிறேன். பின்னர், எனக்குத் தெரியாதா, அவனுடைய பத்தொன்பதாவது வயதில் அவன் எப்படி இருந்தான், டிராக்டரில் அமர்ந்து, நெற்றி மீது கைவைத்து வெஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய அப்பாவை நோக்கி, வயலின் குறுக்காக அவன் ஓடும்போது எப்படித் தோன்றினான், என்று நான் நினைத்துப்பார்த்தேன். நாங்கள் அப்போதுதான் கலிபோர்னியாவிலிருந்து காரில் வந்திருந்தோம். செரிலோடும் பாபியோடும் காரைவிட்டு வெளியே வந்த நான், அங்கே பார் தாத்தா என்றேன். அவர்களெல்லாம் அப்போது குழந்தைகள்.
வெஸ் என்னருகிலேயே உட்கார்ந்து, அடுத்து என்னவென்று கண்டுபிடிக்க முயற்சிப்பதுபோல நாடியைத் தட்டிக்கொண்டிருந்தான். வெஸ்ஸின் அப்பாவும் போய்ச்சேர்ந்தார், எங்கள் குழந்தைகளும் வளர்ந்தார்கள். நான் வெஸ்ஸைப் பார்த்தேன். பின் செஃப்பின் வசிப்பறையைச் சுற்றிலுமாக இருந்த அவரது பொருட்களைப் பார்த்துவிட்டு, நாம் இப்போதே சில காரியங்களைச் செய்தாக வேண்டும், அதுவும் விரைவாகச் செய்யவேண்டுமென நான் நினைத்தேன்.
ம்ஹான், என்றேன், நான். வெஸ், இங்கே பார் என்றேன்.
என்ன வேண்டும் உனக்கு? என்றான் அவன். ஆனால், அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அவனும் மனத்தைத் தேற்றிக்கொண்டதாகவே தோன்றினான். ஆனால், மனத்தைத் தேற்றிய பின்பு அவன் எந்த அவசரமும் கொள்ளவில்லை. சாய்மெத்தை மீது நன்கு சாய்ந்துகொண்ட அவன், கைகளை மடியில் வைத்துக்கொண்டு, கண்களை மூடினான். அவன் எதுவும் பேசவில்லை.
அவன் பெயரை எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன், நான். உச்சரிக்க எளிதான ஒரு பெயர், அதுவுமில்லாமல், நான் வெகு நீண்ட காலமாகவே உச்சரித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர். பின்னர் இன்னுமொரு முறை அதைச் சொல்லிக்கொண்டேன். இந்தமுறை நான் அதை உரக்கச் சொன்னேன். வெஸ் என்றேன், நான்.
கண்களைத் திறந்தான், அவன். ஆனால், என்னைப் பார்க்கவில்லை. அவன் அங்கேயே, அப்படியே அமர்ந்து சாளரத்தை நோக்கினான். குண்டு லிண்டா, என்றான், அவன். ஆனால், எனக்குத் தெரியும், அது அவளையல்ல, அவள் எதுவுமேயில்லை. அது ஒரு பெயர், அவ்வளவுதான். வெஸ் எழுந்து சாளரத் திரைகளைக் கீழிழுக்கவும் கடல் அப்படியே மறைந்துபோயிற்று. இரவு உணவு சமைப்பதற்காக, நான் உள்ளே சென்றேன். ஐஸ்பெட்டியில் இன்னும் கொஞ்சம் மீன்கள் இருந்தன. அதிகமாக இல்லைதான். இன்றிரவுக்கு அதைச் சுத்தம் செய்துவிடுவோமென நான் நினைத்தேன். அதுவே தான் முடிவாக இருக்க முடியும்.
மலைகள் 2018, மே, 02 இதழில் வெளியானது.

No comments:

Post a Comment