Showing posts with label ஆவாரம் பூ அபுனைவு -10. Show all posts
Showing posts with label ஆவாரம் பூ அபுனைவு -10. Show all posts

Tuesday, 13 March 2018

ஆவாரம் பூ

ஆவாரம் பூ
எனது பித்தப்பையில் கற்கள் (Gall bladder stones) இருப்பதாகவும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றவேண்டுமெனவும் சி.எம். சி. மருத்துவமனையில் தெரிவித்தனர். அதனை அறிந்த என்னுடன் பணியாற்றிய நண்பர் திரு. டி. சுப்பிரமணி அவர்கள் அவருக்குத் தெரிந்த, பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையின்றிக் குணப்படுத்தக் கூடிய இந்திய மருத்துவ முறைகள் அனைத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால், அவை எல்லாவற்றையும் தொடர்ந்து மேற்கொள்வதற்கான பொறுமை எனக்கு இல்லாமற் போனதால் ஒரு மூன்று மாதங்கள் கடந்து அறுவைசிகிச்சை மூலம் அகற்றிக் கொண்டேன். அதன் பின்னர் வயிறு, கல்லீரல் சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இல்லை.
அந்த நேரத்தில் திரு. சுப்பிரமணி அவர்கள் எனக்காக ஆவாரம் பூ பறித்துவரச் செய்து இரண்டு மூன்று முறை கொணர்ந்து தந்து பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிடச் சொன்னார். அவர் மீதான நம்பிக்கை மற்றும் இவ்வளவு தூரம் வீடு தேடி வந்து உதவும் அன்புக்குக் கட்டுப்பட்டு ஆவாரம் பூவை பருப்பு சேர்த்து கூட்டாகச் சாப்பிட்டேன். அப்படி ஒன்றும் சுவையாக இல்லை. சாப்பிட முடியாத அளவுக்கு எந்தக்கூறும் இல்லை. என்றாலும் வேலூர் மார்க்கெட்டில், இப்போது உழவர் சந்தையில் ஆவாரம் பூவைக் காணும்போதெல்லாம் வாங்கிவந்து சமைத்து உண்பது பழகிவிட்டது.
இப்போது இந்தப் பதிவுக்காக ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் பற்றித் தேடிய போது ஆவாரைச் செடியின் ஆங்கிலப் பெயர் Cassia Auriculata என்றும் இது இந்திய மருத்துவத்தில் நீரிழிவு, கண் (வெண்படலம்) தொல்லைகள், வாதம், தோல்நோய்கள், உடல் நாற்றம், மூச்சுக்குழாய் அழற்சி, தொழுநோய், கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுவதாகவும், அதனால் ஆவாரம் பூவின் சாறிலுள்ள வேதியியல் கூறுகளைக் கண்டறிய பெரும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் தெரிந்துகொள்ளமுடிந்தது. ஆவாரம் பூவில் தங்கத்தின் சாரம் இருப்பதாகவும் அதைத் தொடர்ச்சியாக உட்கொண்டால் உடல் பொன் நிறம் பெறுமென்றும் ஆவாரம் பூ நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டும் இயல்புள்ளதால் இன்சுலின் மற்றும் சுரப்பிகளைத் தூண்டி நீரிழிவைக் குறைக்குமென்றும், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் தொல்லைகளைக் குறைக்குமென்றும் இந்திய மருத்துவத்தில் நம்பப்படுவதாகவும் தெரியவருகிறது.https://innovareacademics.in/…/ij…/article/viewFile/1785/994 என்ற இணைய முகவரியிலுள்ள சர்வதேச ஆராய்ச்சி முடிவினைப் படிக்கும்போது ஆவாரம் பூவில் Flavonoids +++ Tannins ++ Terpenoids ++ Alkaloids ++ Carbohydrates ++ Steroids ++ Coumarins + Phenols +++ Saponins + Glycosides Kellerkillani Test ++ வேதிக்கூறுகள் உள்ளனவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
ஆவாரம் பூ கூட்டு
ஆவாரம் பூவின் இதழ்களை மட்டும் பிரித்துச் சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர் ஊற்றி ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்பினை வேகவைக்கவும். பருப்பு வேகும்போதே அதில் அரை தேக்கரண்டி, மஞ்சள் பொடி, அரை தேக்கரண்டி மிளகாய்ப் பொடி, அரை தேக்கரண்டி சீரகப்பொடி, ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பருப்பு ஓரளவுக்கு வெந்து மலரும் பருவத்தில் சுத்தம் செய்து வைத்திருக்கும் பூவினைச் சேர்த்து ஐந்து நிமிடத்தில் இறக்கிக் கொள்ளலாம். கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கும் போது ஒரு முழு வெங்காயத்தையும் அரிந்துபோட்டு வதக்கி அதிலேயே பருப்புக் கூட்டினையும் சேர்த்துக் கிளறி இறக்கிய பின்பு கொத்து மல்லித்தழை சிறிது கிள்ள்ளிப் போட்டுப் பரிமாறலாம்.
சுவையாகவே இருக்கும். நாளமில்லாச் சுரப்பிகளைத் தூண்டுவதும், கல்லீரலை வலுப்படுத்துவதும், தோல் நோய் போக்குவதுமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன என உறுதிப்படும் போது ஆவாரம் பூவைச் சாப்பிடுவது பயனுள்ளது என்று நம்புகிறேன்.

எனக்குப் பழக்கமில்லை; மாட்டேன் என்பவர்கள் பற்றி நாம் என்ன கூறமுடியும் ?
முகநூலில் 11.03.18 அன்று 
பதிவிடப்பட்டது. 
விருப்பம் 113 பகிர்வு 131. பின்னூட்டம் 30