Showing posts with label ஸ்பானியச் சிறுகதை (அர்ஜென்டினா). Show all posts
Showing posts with label ஸ்பானியச் சிறுகதை (அர்ஜென்டினா). Show all posts

Saturday, 9 January 2016

ஸ்பானியச் சிறுகதை (அர்ஜென்டினா) -மிகையூக்கப் போட்டி (The Spirit of Emulation)

 

மிகையூக்கப் போட்டி (The Spirit of Emulation)

ஸ்பானியம் : ஃபெர்னாண்டோ சொரென்டினோ  Fernando Sorrentino (Argentina)

ஆங்கிலம் : தாமஸ் சி. மீஹன் 

தமிழில் ச.ஆறுமுகம்

download (10)







நான் வசிக்கின்ற பராகுவே தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருப்போர் மத்தியில் தன்னூக்கப் போட்டி என்பது மிகத் தீவிரமாகவே தலைதூக்கியிருந்தது.நீண்ட நாட்களாகவே அவர்கள் தங்கள் போட்டியை நாய், பூனை, மஞ்சள் வண்ணப் பாடும் பறவை அல்லது கிளிகளோடு நிறுத்திக்கொண்டனர் என்பதுதான் உண்மை.  அயல்நாட்டு இனமென்று பார்த்தால் சிறிய அணில்கள் அல்லது ஒரு ஆமை; அதற்கு மேல் சென்றதில்லை.   என்னிடம் ஜோயி என்ற பெயரில் அழகான ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு இருந்தது. அது எங்கள் அடுக்கக அளவுக்குக் கொஞ்சம் தான் சிறியதாக இருந்தது. ஆனாலும் ஜோயி தவிர  அங்கே நானும் என் மனைவியும் – யாருக்குமே தெரியாத அளவில் – சிலந்திகளில் அழகான லூக்கோசா பாம்பியானா இனத்தில் ஒன்றுமாக வசித்தோம்.ஒருநாள் காலை 9.00 மணிக்கு, நான் என்னுடைய செல்லத்துக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோது பக்கத்து 7 சி வீட்டுக்காரர் – நான் அவரை அதற்குமுன் பார்த்ததேயில்லை – என்னுடைய செய்தித்தாளை ஒரு நிமிடம் இரவல் வாங்கிச் செல்ல வந்தவர் சொன்ன குழப்பமான காரணத்தை யாரால் தான் புரிந்துகொள்ள முடியும்? பின்னர், கொஞ்சம்கூட வீட்டுக்குச் செல்கிற வழியாக இல்லாமல், அங்கேயேநிரம்ப நேரம் செய்தித் தாளும் கையுமாக நின்றிருந்தார். அவர் ஜெர்ட்ரூடை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பார்வையிலிருந்த ஏதோ ஒன்று எனக்குள் உறுத்தியது. ஆம். அதுதான் அவருக்குள் துடித்த மிகையூக்கம்.
அடுத்த நாள், அவர் அப்போதுதான் வாங்கியிருந்த தேள் ஒன்றினைஎன்னிடம் காட்டுவதற்காக வந்தார். எங்கள் வாழ்க்கை முறை, சிலந்தி, தேள், உண்ணிகளுக்கு உணவளிக்கும் எங்கள் பழக்க வழக்கம் பற்றி நாங்கள் ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்ததை, வழிக்கூடத்தில் நின்றிருந்த 7-டி வேலைக்காரப் பெண் ஒட்டுக் கேட்பது போலத்  தோன்றியது. அன்று பிற்பகலே அவளுடைய முதலாளிகள் நண்டு ஒன்றை வாங்கிக் கொண்டு வந்துவிட்டனர்.
பின்னர், ஒரு நாள் மாலை மூன்றாம் மாடியிலிருந்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருவரை மின்னேற்றியில் சந்திக்கும் வரையில் ஒரு வாரத்திற்குப் புதியதாக ஒன்றும் தென்படவில்லை. அவள் பொன்னிறமும் தளர்ச்சியும் கண்களில் வெற்றுப் பார்வையுமாகத் தோற்றமளிக்கும் ஒரு இள மங்கை. அவள் கையில் மஞ்சள் நிறமுள்ள பெரிய ஒரு பணப்பை; அதன் பல்லிணைப்பட்டிகை (ஜிப்) முனையில் ஒரு பகுதி உடைந்து இலேசாகத் திறந்திருந்தது. அந்த உடைவுப் பகுதிக்குள்ளிருந்து பொன் மஞ்சள் நிறத்தில் பல்லி ஒன்றின் சிறிய தலை அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.
அடுத்த நாள் மதியம், நான் மளிகைக் கடையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது, வாயிற் காப்பவனின் அறை முன்பாகச் சுமை ஊர்தியிலிருந்து இறக்கப்பட்ட எறும்புக் கரடி  (எறும்பு தின்னி) ஒன்றைக் கண்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் என் கையிலிருந்த பைகள் நழுவி, அநேகமாகக் கீழே விழவிருந்தன. நல்ல வேளையாகச் சுதாரித்துக் கொண்டேன். அங்கே வேடிக்கை பார்க்கக் கூடியிருந்தவர்களில் ஒருவர், ‘’ஓ, அப்படீன்னா எறும்புக் கரடிங்கிறது உண்மையான கரடியில்லையா’’என முணுமுணுத்தது எங்கள் எல்லோர் காதுகளிலும் விழும்படியாகத் தான் இருந்தது. இதைப் பார்த்துத் திகைத்துப்போன வழக்கறிஞரின் மனைவி, நடுக்கமும் ஓட்டமுமாக அவரது குடியிருப்புக்கு ஓடிக் கதவைச் சார்த்திக் கொண்டார். அதன் பிறகு ஒரு சில நாட்களுக்கு அவர் அந்தப் பக்கமாக நடமாடி நான் பார்க்கவேயில்லை; அவருக்காக அமெரிக்கச் செம்பழுப்பு நிறக் கரடி ஒன்றினைக் கொண்டு வந்து இறக்கிய சுமை ஊர்திக்காரனின் பற்றுச் சீட்டில் கையொப்பமிட, ஏளனம் தொனிக்கும் பிரகாசமான முகத்துடன் அவர் கீழிறங்கி வந்த போதுதான் அவரைப்பார்த்தேன்.
என்னுடைய நிலைமை இப்போது அவலத்திலும் அவலமாகிப் போனது. என் பக்கத்து வீட்டுக்காரர்கள் எனக்கு வணக்கம் சொல்வதைக்கூட நிறுத்திவிட்டனர். கறிக்கடைக்காரன் எனக்குக் கடன் தர மறுத்தான். அது மட்டுமில்லை; ஒவ்வொரு நாளும் என்னை அவமதிக்கும் பெயர், முகவரியற்ற கடிதங்கள் வேறு எனக்கு வந்துகொண்டேயிருந்தன கடைசியாக என் மனைவி என்னை விட்டுப் போய்விடுவதாக மிரட்டிய கணத்தில்தான் முக்கியத்துவமற்றுப்போன ஒரு லூக்கோசா பாம்பியானாவை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாதென்பதை நான் உணர்ந்தேன். அதன் பிறகுதான் முன்னெப்போதும் ஈடுபடாத நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினேன். பலநண்பர்களிடமும் கடன் வாங்கினேன். சொல்ல முடியாத அளவுக்குச் சிக்கனமாகி விட்டேன். புகைப்பதைக்கூட நிறுத்திவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியாக, ஒரு அதியற்புதமான இளஞ் சிறுத்தை ஒன்றை வாங்கிவிட்டேன். அவ்வளவுதான், என் பின்னால் என் காலடித் தடத்திலேயே நடக்கிற  7-சி பேர்வழி அமெரிக்கச் சிறுத்தையான ஜாகுவார் ஒன்றை வாங்கி என்னை முந்திவிட முயற்சித்தார். `இது  எந்தத் தர்க்கத்துக்கும் பொருந்தவில்லைதான். இருந்தாலும், அவர் அதில் வெற்றி பெற்றுவிட்டார்.
அழகியல் உணர்வு என்பதே இல்லாமல், தரத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், வெறுமனே அளவில் பெரியதை மதிக்கிறார்களே இந்த ஆட்கள் என்பதுதான் எனக்கு மிகவும் உளைச்சல் தருவதாக இருக்கிறது. என்னுடைய இளஞ் சிறுத்தையின் உயர்ந்து மேம்பட்ட கம்பீர அழகினை உணர்ந்து, அதை வழிபட்டு வியக்கின்றவனாகப்  பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன் கூட இல்லை; ஜாகுவாரின் மிகப் பெரும் பரும அளவு அவர்களுடைய புரிதல் பார்வையைக் குருடாக்கிவிட்டதென்றுதான் சொல்லவேண்டும்.
உடனேயே, ஜாகுவார்காரரின் பெருமிதம் இடித்த இடியில் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் அவரவர் செல்லப் பிராணிகளை மாற்றிக்கொள்ளத் தலைப்பட்டனர். என்னுடைய எளிய சிறுத்தை எனக்கு முன்னர் இருந்த பெருமித நிலையை இப்போது அளிக்கவில்லையென்பதை நான் உணரவேண்டியதாயிற்று. யாரோ பெயர் தெரியாத ஒரு அனாமதேய மனிதனோடு என் மனைவி நிகழ்த்திய திருட்டுத்தனமான தொலைபேசி உரையாடல்களைக் கேட்டதிலிருந்து, என்னுடைய ஒரே மாற்றான இரும்புக்கவசம் எது  என்பது எனக்கு உறுதியாகிவிட்டது. நெஞ்சம் கொள்ளாத் துயருடன் குளிர் பெட்டி, சலவை எந்திரம், தரை மெருகேற்றுக் கருவி, இன்னும் நாற்காலி போன்ற தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் ஏன், தொலைக்காட்சிப்பெட்டியையும் கூட விற்றுவிட்டேன். சுருக்கமாகச் சொல்வதென்றால், விற்கமுடிகிற எல்லாவற்றையும் விற்றுவிட்டு சுற்றிச் சுருண்டு நீளும் பெரிய ஆனைகொண்டான் (அனகோண்டா) பாம்பு ஒன்றை வாங்கினேன்.
ஒரு ஏழையின் வாழ்க்கை என்பது மிகவும் கடினம்; என் நாயக வாழ்க்கை மூன்று நாட்களுக்கே நீடித்தது.
என்னுடைய அனகோண்டா எல்லாத் தடைகளையும் உடைத்து நொறுக்கியது; சமநிலைப்படுத்தும் அனைத்து மனித உணர்வுகளையும் அழித்தது; மதிக்கத்தக்கதும் மாண்பு மிக்கதுமான மரபுகளையெல்லாம் தகர்த்தெறிந்தது. அனைத்து அடுக்ககங்களிலும் சிங்கம், புலி, மனிதக் குரங்கு, முதலைகள் எனப் பல்கிப் பெருகின. நகராட்சி உயிர்க் காட்சியகத்தில் கூட இல்லாத கருஞ்சிறுத்தைகளை ஒரு சிலர் வாங்கி வந்தனர். அந்தக் கட்டிடம் முழுவதும் ஊளைகள், முழக்கங்கள் மற்றும் சளசளப்புகள் நிறைந்து, அவற்றின் எதிரொலிகளால் அதிர்ந்தது. நாங்கள் இரவுகளை விழித்துக்கொண்டே கடத்தினோம்; எங்களால் தூங்கவே முடியவில்லை. பூனையினங்கள், பெரும் மனிதக் குரங்கினங்கள், ஊர்வன மற்றும் அசை போடும் விலங்கினங்கள் அனைத்தின் விதவிதமான நாற்றங்கள் ஒன்றோடொன்று கலந்து, அந்தச் சூழலையே சுவாசிக்க முடியாததாக்கிவிட்டன. பெரிய பெரிய  சுமைஊர்திகள் டன் கணக்கில் இறைச்சி, மீன் காய்கறிகளைக் கொண்டு வந்து இறக்கின. பராகுவே தெருவில் உயிர் வாழ்வதே கொஞ்சம் சிக்கலானதுதான் என்றானது.


மிக நீண்ட காலத்திற்குப்பின், மூன்றாவது தளத்திலிருக்கும் அண்டைவீட்டுக்காரரான அந்தத் தளர்ச்சித் தோற்றப் பொன்னிற இளமங்கையை மீண்டும் ஒரு நாள் மின்னேற்றியில் சந்தித்தபோது மிகமிக நெருடலான ஒரு தருணத்தை உணர்ந்தேன்; வேறொன்றுமில்லை; அவள் அப்போது வங்காளப்புலி ஒன்றை எங்கள் வளாகத்தைச் சுற்றி ஒரு நடை நடக்க, சூச்சூ போவதற்காக அழைத்துச் சென்றுகொண்டிருந்தாள். பல்லிணைப் பட்டிகைத் திறப்பிலிருந்து சிறிய தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய பல்லியை நினைத்துப் பார்த்தேன். நான் மிகவும் தளர்ந்து இளகிப்போவதாக உணர்ந்தேன். தேள்களும் நண்டுகளுமான அந்த முதன்முதல் கற்பனையுலகின் கடினக் காலகட்ட நாட்களைக் கடந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்! ஹூம்!
இறுதியாக, யார் எதைச் செய்வார்களென்று நம்பமுடியாத ஒரு நிலை தோன்றிவிட்டது. வாயிற்காவலன், பல அடுக்கக உரிமையாளர்கள் பதைபதைத்துப் பார்த்திருக்க, அவனது இரட்டைக்கொம்புக் காண்டாமிருகத்தை கட்டிட ஓரத்தின் சுற்று நடைபாதையில் நிறுத்தி, வழலைக்கட்டி தேய்த்துக் குளிப்பாட்டி, எதுவுமே நிகழாதது போல், ஏதோ எருமை மாட்டை ஓட்டுவது போல அவனது அடுக்ககக் குடியிருப்புக்குள் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தான். இது 5-ஏ ஆள் வழக்கமாகச் செய்வதைவிட அதிகமானதுதான்; மிகச் சில மணி நேரந்தான் கடந்திருக்கும், அந்த ஆள் அவரது நீர்யானையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, அதை மாடிப்படிமேல் ஏற்றிச் சென்றார்.
கட்டிடம் இப்போது வெள்ளக்காடாகி பாதி அழிந்த நிலைமையாகிப் போனது. நான் இந்த அறிக்கையைக் கூட கூரை மீது சாதகமற்ற நிலைமையில் அமர்ந்து தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். 7-ஏ ஆட்களுடன் வசிக்கும் யானையின் துயரார்ந்த பிளிறல் சப்தத்தில் அடிக்கொரு தரம் திடுக்கிட்டு அதிர்ந்துபோகிறேன். என்  கைக்கடிகாரத்தை எடுத்துக் கண்முன்னாலேயே பார்வையில் படும்படியாக வைத்திருக்கிறேன்; எட்டு நிமிடத்துக்கொரு முறை நான் படிக்கட்டு இடிபாடுகளுக்கு ஓடி என்னையும் இந்தப்பக்கங்களையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்; வேறொன்றுமில்லை, 7-சியிலிருக்கும் நீலத் திமிங்கிலம் ஜெட் வேகத்தில் பீச்சியடிக்கும் நீர்த்தாரையின் திவலைகள்தாம். அது மட்டுமல்ல, நான் தாங்கவியலாத ஒரு அழுத்தத்துடன் தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதாவது, 7 – `டி`யிலிருக்கும் ஒட்டகச் சிவிங்கி அதன் தலையைச் சுவர் மேல் வைத்து, ஏதாவது நொறுக்குத் தீனி கொடு என்று என்னையே துளைக்கும் மாளாப் பார்வையை நிறுத்தவேமாட்டேனென்கிறது.
[ பார்சிலோனாவிலிருந்து பேரரசுகள் மற்றும் அடிமைகளுக்காக, தலையங்கம், சீக்ஸ் பார்ரல், 1972.]

மலைகள் இணைய இதழ் 83, அக்டோபர் 2, 2015 இல் வெளியாகியுள்ளது.

ஸ்பானியச் சிறுகதை (அர்ஜென்டினா) -என் தலையில் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள மனிதன் ஒருவன் இருக்கிறான்.There is a man in the habit of hitting me on the head with an umbrella

 என் தலையில் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள மனிதன் ஒருவன் இருக்கிறான்.There is a man in the habit of hitting me on the head with an umbrella   

ஸ்பானியம் : ஃபெர்னாண்டோ சொரென்டினோ (அர்ஜென்டினா) 

ஆங்கிலம் : க்ளார்க் எம். ஜ்லாட்சியூ 

தமிழில் ச.ஆறுமுகம்

download (85)

என் தலையில் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள மனிதன் ஒருவன் இருக்கிறான். இன்றோடு மிகச்சரியாக ஐந்து ஆண்டுகளாக அவனுடைய குடையைக்கொண்டு என் தலையில் அடித்துக்கொண்டேயிருக்கிறான். முதலில் அதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை; இப்போது அதற்குப் பழக்கப்பட்டுவிட்டேன்.
அவன் பெயர் எனக்குத் தெரியாது. அவன் சராசரித் தோற்றமுள்ளவனாக, சாம்பல்நிறத்தில் முழுக்காற்சட்டை, மேற்சட்டை அணிபவனாக, காதோரம் நரைத்து சாதாரணமான முகம் கொண்டவனாக இருக்கிறான் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு வெக்கையான முற்பகலில்தான் அவனைச் சந்தித்தேன். பாலெர்மோ பூங்காவில், மரநிழல் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து, நான் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் தலையை எதுவோ தொட்டதாக உணர்ந்தேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும்போதும், உணர்ச்சியற்று, இயந்திரகதியாக, குடையால் அடித்துக்கொண்டிருக்கும் இதே மனிதன்தான், அவன்.
அந்தநேரத்தில், நான் கொதித்துப் போய், அப்படியே சுழன்று திரும்பினேன்: அவன் இம்மியும் மாறாமல் என்னை அடித்துக்கொண்டேயிருந்தான். அவனுக்கென்ன பைத்தியமா, என்றுகூட நான் அவனைக் கேட்டேன் : அவன் என்னைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. பின்னர்தான், நான் காவல்துறை அலுவலரை அழைப்பேன் என்று மிரட்டினேன். அப்போதும், எந்தவிதமான சலனமும் காட்டாமல், ஒரு வெள்ளரிக்காயைப் போலக் குளிர்ந்த முகத்துடன் அவனுடைய வேலையில் கண்ணாக இருந்தான். தீர்மானம் ஏதுமின்றித் திகைத்த ஒரு சில கணங்களுக்குப் பிறகு, அவனுடைய மனநிலையை அவன் மாற்றிக்கொள்ளப் போவதில்லையென நான் உணர்ந்தபிறகு, எழுந்து நின்று அவன் மூக்கில் ஒரு குத்து விட்டேன். கீழே விழுந்த அந்த மனிதன் அநேகமாக யாராலுமே கேட்கமுடியாத ஒரு முனகலை வெளிப்படுத்தினான். உடனேயே, வெளிப்படையாகத் தெரிந்த பெரும் முயற்சியுடன் எழுந்து நின்று ஒரு வார்த்தை கூட முணுமுணுக்காமல் குடையால் என் தலையில் அடிக்கத் தொடங்கினான். அவனுடைய மூக்கில் ரத்தம் வந்துகொண்டிருந்தது. அந்தக் கணத்தில் அவனுக்காக நான் வருத்தப்பட்டேன். அவனை அப்படிக் கடுமையாக அடித்துவிட்டோமேயெனப் பெரும் கழிவிரக்கம் கொண்டேன். அந்த மனிதன் ஒன்றும் என்னைக் குண்டாந்தடியால் தாக்கிவிடவில்லை; எந்த வலியும் ஏற்படாதபடி சும்மா, வெறுமனே, அவனது குடையால் தட்டிக் கொண்டிருந்தான். அந்தத் தட்டல்கள் தீராத்தொல்லையாக, கவலைகொள்ள வைத்ததென்னவோ உண்மைதான். நெற்றியில் ஒரு ஈ வந்து உட்கார்ந்தால், எந்த வலியும் நாம் உணர்வதில்லை: அப்போது நாம் உணர்வது ஒரு தொந்தரவு அல்லது அமைதிக்குலைவு, அவ்வளவுதான். நல்லது, அப்புறம், அந்தக் குடை, சீரான இடைவெளியில் என் தலைமீது மீண்டும் மீண்டும் வந்தமர்கின்ற ஒரு மிகப்பெரிய அரக்க ஈயாகத்தான் இருந்தது.
நாம் ஒரு பைத்தியக்காரனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறோமென்பதை உணர்ந்ததும் நான், தப்பிக்க முயற்சித்தேன். ஆனால், அந்த மனிதன் எந்த வார்த்தையும் பேசாமல் தொடர்ந்து என் தலையிலடித்துக்கொண்டு என் பின்னாலேயே வந்தான். ஆகவே நான் ஓடத்தொடங்கினேன் ( இந்த இடத்தில் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று, நகரில் என்னைப் போல் அதிவேகமாக ஓடக்கூடியவர்கள் அதிகம் பேர் இல்லை என்பதுதான்.) அந்த மனிதன் என் பின்னாலேயே ஓடிவந்து, ஒரு அடியையாவது என் தலையில் இறக்கிவிடவேண்டுமென வீணாக முயற்சித்தான். அந்த மனிதன் மேலும் கீழுமாக அப்படியொரு மூச்சு வாங்க, நான் அவனை அதே வேகத்தில் ஓடவேண்டிய கட்டாயத்தைத் தொடர்ச்சியாக உருவாக்கிவிட்டால், என்னுடைய வதைகாரன் அங்கேயே அப்படியே விழுந்து இறந்துவிடுவான் என நினைத்தேன்.
,
அதனால்தான் நான் ஓட்ட வேகத்தை ஒரு மித நடையாகக் குறைத்துவிட்டுப் பின்னர், அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் முகத்தில் நன்றியோ அல்லது கடுகடுப்போ இம்மியளவும் இல்லை. அதன் தடயம் கூட இல்லை. அப்போதும் அவன் எதுவும் பேசாமல் குடையால் என் தலையில் தட்டிக் கொண்டிருந்தான். காவல் நிலையம் சென்று, அங்கு , ‘’ அதிகாரி அவர்களே, இந்த மனிதன் குடையை வைத்து என்னை அடித்துக் கொண்டேயிருக்கிறான்.’’ எனப் புகார் கொடுத்து விடலாமென நினைத்தேன். இது எப்போதும் இல்லாத ஒரு வழக்காக இருக்கும். அதிகாரி என்னைச் சந்தேகத்தோடு பார்த்து, என்னுடைய ஆவணங்களைக் கேட்பதோடு, தர்ம சங்கடமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கலாம். அவர் ஒருவேளை என்னைக் கைதுசெய்து சிறையில் தள்ளிவிடுகிற அளவுக்குக் கூடப் போய்விடலாம்.
வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிடுவதே நல்லதென நினைத்தேன். நான் 67 ம் எண் பேருந்தைப் பிடித்தேன். இவ்வளவு நேரமும் குடையால் என்னை அடித்துக்கொண்டிருந்த அவனும் என் பின்னாலேயே ஏறினான். நான் முதல் இருக்கையில் அமர்ந்தேன். என்னை ஒட்டி அருகிலேயே, பேருந்தின் பாதுகாப்புக் கம்பியை இடதுகையால் பற்றிக்கொண்டு நின்றான். அவனது வலது கையால் கொஞ்சங்கூடத் தளர்ச்சியில்லாமல் குடையால் என்னைத் தட்டிக்கொண்டிருந்தான். பயணிகள் முதலில் ஒருவருக்கொருவர் பயமும் மருட்சியுமான புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டனர். ஓட்டுநர், பின்பக்கம் தெரிகிற கண்ணாடியில் எங்களைக் கவனிக்கத் தொடங்கினார். அந்தப் பயணத்தில், பேருந்து முழுவதுமே சிறிது சிறிதாக ஒரு மாபெரும் சிரிப்புக் கூடமாக மாறி, ஆரவாரமும் பெருங்கூச்சலுமான முடிவேயில்லாத பெருஞ் சிரிப்பாகிப் போனது. நான் அவமானத்தில் செத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய வதைகாரன், அந்தச் சிரிப்பே காதில் விழாததுபோலத் தொடர்ந்து என்னை அடித்துக்கொண்டேயிருந்தான்.
பசிஃபிக்கோ பாலத்தில் நான் இறங்கினேன் – இருவரும் இறங்கினோம் என்று தானே சொல்லவேண்டும். நாங்கள் சான்டா ஃபெ அவென்யூ வழியாக நடந்தோம். எல்லோருமே முட்டாள்தனமாக எங்களையே பார்க்கத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து, ‘’ என்ன பார்க்கிறீர்கள்? முட்டாள்களே? ஒரு மனிதன் இன்னொருவனின் தலையில் குடையால் அடிப்பதை இதுவரை நீங்கள் பார்த்ததேயில்லையா, என்ன?’’ எனக் கேட்கவேண்டுமென எனக்குத் தோன்றியது. ஆனால், கூடவே அவர்கள் இதுபோன்ற ஒரு காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் தோன்றியது. பின்னர், ஐந்தாறு பையன்கள் வெறிபிடித்தது போலக் கூச்சலிட்டுக்கொண்டு எங்கள் பின்னாலேயே வந்து துரத்தத் தொடங்கினர்.
ஆனால், நான் ஒரு திட்டத்தோடேயே, கறுவிச் சென்றுகொண்டிருந்தேன். வீட்டுக்குப் போனதும், கதவை அவன் முகத்திலேயே அறைந்து சாத்த முயற்சித்தேன். ஆனால், அது முடியவில்லை. அவன் என் நினைப்பைத் தெரிந்துகொண்டிருக்கவேண்டும். என்னவென்றால், அவன் வாசல்கதவின் குமிழைத் திடமாகப் பற்றித் தள்ளிக்கொண்டு, என்னோடேயே வீட்டுக்குள் நுழைந்துவிட்டான்.
உடனேயே, அந்த நேரத்திலிருந்தே, என் தலையில் அவனது குடையால் அடிக்கத் தொடங்கிவிட்டான். நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ளமுடியும், அவன் தூங்கவோ, அல்லது எதையும் சாப்பிடவோ இல்லை. அவனுடைய ஒரே வேலை என்னை அடிப்பதாகவே இருந்தது. நான் எந்தக் காரியம் செய்யும்போதும், என்னுடைய அதிமுக்கிய, ரகசியச் செயல்பாடுகளின்போதும் கூட, அவன் என்னைவிட்டு விலகிவிடாமல், என்னோடேய இருந்தான். அந்த அடிகள் முதலில், என்னை இரவுகளிலும் தூங்கவிடாமல் செய்தன, என்பது எனக்கு நன்கு ஞாபகமிருக்கிறது. இப்போது, அந்த அடிகள் இல்லாமல் என்னால் தூங்க இயலாது என்றே நினைக்கிறேன்.
இந்தக் கணம் வரையில், எப்போதுமே எங்கள் உறவுகள் நன்றாக இருந்ததில்லைதான். பல சந்தர்ப்பங்களில், எப்படியெப்படி முடியுமோ அப்படியெல்லாம் தொனி மாற்றி, ஏன் இப்படி நடந்துகொள்கிறானென்பதற்கு விளக்கம் கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்தப் பயனுமில்லை : ஒரு வார்த்தைகூடப் பேசாமல் என் தலையில் அவனுடைய குடையால் தட்டுவதை அப்படியே தொடர்ந்தான். பலமுறை உதைத்தும், குத்தியும், ஏன் ஒருமுறை – கடவுள் என்னை மன்னிப்பாராக – குடையால் அடித்துத் துவைக்கவும் செய்தேன். அவன் வாயில்லா ஊமையாக அடிகளை அமைதியாக வாங்கிக் கொண்டான். அப்படி அடி வாங்குவதும், அவனுடைய பணியின் ஒரு பகுதி என்பதுபோல அவற்றைப் பெற்றுக்கொண்டான். அவனுடைய ஆளுமையின் துல்லியமிக்க, அருந்திறல் தன்மை என்பது எந்தவிதமான வெறுப்போ பகைமையோ இல்லாமல் அவனது பணியின் மீதான அசைக்கமுடியாத விசுவாசம் தான். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு மேலதிகாரியின் கட்டளைக்கிணங்க, அவரது இரகசியப் பணித்திட்டத்தை செயல்படுத்துவதான ஒரு பற்றுறுதி எனச் சொல்லலாம்.
அவனுக்கான உடலியல் தேவைகள் சரிவரப் பூர்த்தியாகவில்லையெனினும், நான் அவனைத் தாக்கும்போது, அவன் வலி, வேதனையை உணர்கிறான் என்பது எனக்குத் தெரிகிறது. அவன் மிகவும் மெலிந்து வலுக்குறைவானவன் என்பதும் எனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரியும், அவன் அழியுடல் கொண்ட ஒரு மானிடப்பிறவிதான். ஒரேயொரு தோட்டாவில் அவனை ஒழித்துக் கட்டிவிட என்னால் முடியுமென்பதும் எனக்குத் தெரிகிறது. அவனைக் கொல்வது அல்லது என்னைக்கொல்வது என்ற இரண்டில் எது தோட்டாவுக்கு நல்லதாயிருக்குமென்ற ஒன்று மட்டுமே எனக்குத் தெரியாதது. நாங்கள் இருவரும் இறந்தபிறகும், என் தலையில் அவனது குடையால் தொடர்ந்து தாக்காமலிருப்பானா என்பதும் எனக்குத் தெரியாது. எப்படி இருந்தாலும், இந்தச் சிந்தனைப் போக்கு எவ்வித அர்த்தமும் இல்லாதது. அவனையோ அல்லது என்னையோ கொல்வதற்கு ஒருபோதும் துணியமாட்டேன் என்பதை, நான் உணர்கிறேன்.
மாறாக, மிக அண்மையில் நான் வந்துசேர்ந்திருக்கிற ஒரு மெய்யுணர்வு என்ன, தெரியுமா? அந்த அடிகள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்பதுதான். இப்போதெல்லாம், அடிக்கொரு தரமாகக் குறிப்பிட்ட தீய அறிகுறி ஒன்று மீண்டும் மீண்டுமாக என்னை ஆட்கொள்கிறது. ஒரு புதிய கவலை என் ஆன்மாவைத் தின்றுகொண்டிருக்கிறது : இந்த மனிதன் எனக்கு மிகமிகத் தேவையாக இருக்கும் ஒரு கட்டத்தில் என்னைவிட்டுச் சென்றுவிடுவான் என்ற நினைப்பிலிருந்தும் அந்தக் குடையின் தட்டல்கள் எனக்கு மிக நல்ல தூக்கத்திற்கு உதவியதென நினைக்காமல் போய்விடுவேன் என்ற நினைப்பிலிருந்தும் கிளைத்தது, அந்தக் கவலை.

(இக்கதையின் ஆங்கில மூலமான There`s a man in the habit of hitting me on the head with an umbrella. என்ற சிறுகதை Red rattle Books 2013 வெளியிட்டுள்ள How to Defend Yourself Against Scorpions தொகுதியில் உள்ளது.)
 மலைகள் இணைய இதழ் எண் 48, ஏப்ரல் 17, 2014 இல் வெளியானது.