Showing posts with label அமெரிக்கச் சிறுகதை. Show all posts
Showing posts with label அமெரிக்கச் சிறுகதை. Show all posts

Monday, 31 December 2018

செஃப் வீடு - ஆங்கிலம்: ரேமண்ட் கார்வர்

செஃப் வீடு / CHEF’S HOUSE / ஆங்கிலம் : ரேமண்ட் கார்வர் ( Raymond Carver )  / தமிழில் / ச.ஆறுமுகம்.


ரேமண்ட் கார்வர்
அந்தக் கோடையில் வெஸ், யுரேகாவுக்கு வடக்கில் முழுமையாக அறைகலங்களுள்ள ஒரு வீட்டை குடிநோயிலிருந்தும் முழுமையாக மீட்கப்பட்டிருந்த செஃப் என்பவரிடமிருந்து வாடகைக்கு எடுத்தான். பின்னர் அவன், என்னிடம் அவனோடு வாழுமாறும் அவனை விட்டுப் பிரிவதை மறந்துவிடுமாறும் கேட்டுத் தொலைபேசியில் பேசினான். அவன் பாரவண்டியிலிருப்பதாகச் சொன்னான். அந்தப் பார வண்டியைப்பற்றி எனக்குத் தெரியும். முடியாதென நான் சொல்லும் பதிலை அவன் ஏற்கமாட்டான். அவன் மீண்டும் என்னிடம் தொலைபேசியில், எட்னா, முன்பக்கச் சாளரம் வழியாக நீ கடலைப் பார்க்கமுடியுமென்றான். காற்றில் உப்பின் வாடையை நீ உணரலாம். அவன் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் வார்த்தைகளைக் குழறிப் பேசவில்லை. அதைப்பற்றி யோசித்துப் பார்ப்பதாக நான் கூறினேன். நானும் யோசித்துப் பார்த்தேன். ஒரு வாரம் கழித்து அவன் மீண்டும் என்னைத் தொலைபேசியில் அழைத்து எப்போது வருகிறாயெனக் கேட்டான். அப்போதும் யோசித்துக்கொண்டிருப்பதாகக் கூறினேன். நாம் மீண்டும் தொடங்கலாமென்றான், அவன். நான் அங்கே வரவேண்டுமென்றால், நீ எனக்காகச் சிலவற்றைச் செய்யவேண்டுமென்றேன் நான். என்னவென்று சொல்லென்றான், அவன். நானறிந்த வெஸ்ஸாக முயற்சிப்பதோடு, அப்படியே இருக்கவும் வேண்டுமென்றேன் நான். பழைய வெஸ், நான் திருமணம் செய்த வெஸ். அவன் அழத் தொடங்கினான்; அதை நான் அவனது நல்ல மனதின் அடையாளமாகக் கண்டேன். அதனால், சரி,சரி. நான் வருகிறேன் எனச் சொல்லிவிட்டேன்.
வெஸ் அவனுடைய பெண்தோழியை விட்டு விலகினானோ, அல்லது, அவள் இவனை விட்டு விலகினாளோ, எனக்குத் தெரியாது. அதைப்பற்றி எனக்குக் கவலையுமில்லை. வெஸ்ஸோடு செல்வதற்கு நான் தயாராகும்போது, எனது ஆண்தோழனுக்கு விடைகொடுக்கவேண்டும். என் தோழன் சொன்னான், நீ தவறு செய்கிறாய். எனக்கு இப்படிச் செய்யாதேயென்றான். நம் கதை என்னாவது? என்றான், அவன். வெஸ்ஸின் நன்மைக்காக, நான் இதைச்செய்தாக வேண்டியிருக்கிறதென்றேன். அவன் குடியிலிருந்தும் விடுபட முயற்சிக்கிறான். அது எப்படியானதென்று நீ நினைத்துப்பார், என்றேன். எனக்கு ஞாபகமிருக்கிறது என்று சொன்ன என் ஆண்தோழன், ஆனாலும் நீ போவதை நான் விரும்பவில்லையென்றான். நான் கோடைக்குப் போகத்தான் போகிறேனென்றேன், நான். கொஞ்சம், பார்ப்பேன். சரியில்லையென்றால் திரும்பவும் வந்துவிடுவேன் என்றேன். என் கதை என்ன? நான் என்னாவது? திரும்பி வராதேயென்றான், அவன்.
நாங்கள் காபி, சோடா, குளிர்பானங்கள் மற்றுமுள்ள எல்லா வகையான பழச்சாறுகளையும் அந்தக் கோடையில் அருந்தினோம். அந்தக் கோடை முழுவதற்கும் நாங்கள் குடிப்பதற்கிருந்ததெல்லாம் அவைதாம். அந்தக் கோடை முடியவே கூடாதென்ற ஆவல் உள்ளூறுவதை நான் உணர்ந்தேன். எனக்கு நன்றாகத் தெரிந்தது, ஆனாலும் செஃபின் வீட்டில் வெஸ்ஸுடன் ஒரு மாதம் கழிந்ததும், என்னுடைய திருமண மோதிரத்தை எடுத்து நான் மீண்டும் அணிந்துகொண்டேன். இரண்டு வருடங்களாக, அந்த மோதிரத்தை நான் அணிந்திருக்கவில்லை. குடி போதையிலிருந்த வெஸ் அவனுடைய மோதிரத்தைக் கழற்றி பீச் தோட்டத்தில் எறிந்த இரவிலிருந்து நான் அணியவேயில்லை.
வெஸ்ஸிடம் கொஞ்சம் பணமிருந்தது. அதனால் நான் வேலைக்குப் போகவேண்டியிருக்கவில்லை. செஃப் அநேகமாக எங்களுக்கு அந்த வீட்டை வாடகையென எதுவுமேயில்லாமல் தான் கொடுத்திருந்தார். எங்களுக்கெனத் தொலைபேசி எதுவும் இல்லை. சமையல் எரிவாயு, வெளிச்சத்திற்கான விளக்குகள் மற்றும் சேஃப்வே அங்காடியில் நாங்கள் வாங்கிய பொருட்களுக்கும் பணம் கொடுத்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகலில் தெளிப்பான் ஒன்று வாங்கச் சென்ற வெஸ் எனக்கான சிலவற்றோடு திரும்பிவந்தான். டெய்ஸி மலர்களாலான அழகிய ஒரு பூங்கொத்தும் வைக்கோல் தொப்பி ஒன்றும் கொண்டுவந்தான்.
செவ்வாய் மாலைகளில் நாங்கள் ஏதாவது ஒரு திரைக்காட்சிக்குப் போவோம். மற்ற இரவுகளில், `குடிக்காதே` கூட்டமென வெஸ் சொல்கிற கூட்டங்களுக்குப் போவான். வீட்டு வாசலுக்கே காரில் வந்து அழைத்துச் செல்கிற செஃப் கூட்டம் முடிந்ததும் மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுவிடுவார். சில நாட்களில் நானும் வெஸ்ஸும் பக்கத்திலிருந்த நல்ல தண்ணீர்க் குளம் ஒன்றில் ட்ரவுட் மீன் பிடிக்கச் செல்வோம். சில குஞ்சுகளைப் பிடிப்பதிலேயே நாள் முழுவதும் கரையிலேயே கழிந்துவிடும். அவை நன்றாக இருக்குமென்பேன் நான். அன்றைய இரவுக்கு அவற்றைப் பொரித்துவிடுவேன். சிலவேளைகளில் என் தொப்பியைக் கழற்றி வைத்துவிட்டு தூண்டிற்கோலுக்குப் பக்கத்திலேயே விரிப்பினை விரித்துப் படுத்துத் தூங்கிவிடுவேன். கடைசியாக என்ன பார்த்தோமென்று நினைத்துப்பார்த்தால், என் தலைக்கு மேலே மத்தியப் பள்ளத்தாக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்த மேகங்கள் தாம் நினைவுக்கு வரும். இரவில், வெஸ், என்னைக் கைகளில் அள்ளிக்கொண்டு, நான் இப்போதும் அவனுக்கே அவனுக்கான, அவனுடைய பெண்ணாகவே இருக்கிறேனா எனக் கேட்பான்.
எங்கள் குழந்தைகள் எங்களோடு ஒட்டாமல், தள்ளியே இருந்தனர். செரைல், ஓரேகானிலுள்ள ஒரு பண்ணையில் சிலரோடு வசித்தாள். அவள் ஒரு ஆட்டு மந்தையை மேய்த்ததோடு பாலும் விற்றாள்: தேன்கூடுகள் பராமரித்து, ஜாடி, ஜாடியாகத் தேன் சேர்த்தாள். அவளுக்கேயான வாழ்க்கையினை அவள் வாழ்ந்துகொண்டாள்; நான் அவள் மீது குறை ஏதும் சொல்லவில்லை. நானும் அவளது அப்பாவும், அவளை எந்த விஷயத்துக்குள்ளும் கொண்டுவராமலேயே இருந்தது போலவே நாங்கள் என்னென்ன செய்தோமென்பது பற்றி, இப்படி அல்லது அப்படியென்று எந்த ஒரு வழியிலும் அவள் கவலைப்படவேயில்லை.
பாபி, வாஷிங்டனில் கால்நடைத் தீவனச் சேகரிப்பு வேலையிலிருந்தான். தீவனச் சேகரிப்புப் பருவம் முடிந்த பின்னர், ஆப்பிள் தோட்டங்களில் வேலைசெய்யத் திட்டமிட்டிருந்தான். அவனுக்கென்று ஒருத்தி இருக்கிறாள்; அவளுக்காகப் பணமும் சேமிக்கிறான். நான் அவர்களுக்கு எழுதும் கடிதங்களில் `எப்போதும் அன்பு` என ஒப்பமிடுவேன்.
ஒரு பிற்பகலில், வீட்டின் முன்பாக செஃப் காரில் வந்து நின்றபோது, வெஸ் முற்றத்தில் களைகளைப் பிடுங்கிக்கொண்டிருந்தான். நான் கழுவு தொட்டியில் வேலையாக இருந்தேன். அவருடைய கார், கிளைச்சாலை, அதற்கும் பின்னாலிருந்த இருவழிச்சாலை, மணல்மேடுகள் மற்றும் பெருங்கடல் எல்லாமே நானிருந்த இடத்திலிருந்த இடத்திலிருந்தே பார்க்க முடிந்தது. கடலுக்கு மேலாக மேகங்கள் தெரிந்தன. அவரது காரிலிருந்தும் இறங்கிய செஃப் அவரது காற்சட்டையை மேலிழுத்துக்கொண்டார். ஏதோ ஒன்று நடக்கப் போவதாக எனக்குத் தோன்றியது
வெஸ், அவன் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, எழுந்து நின்றான். அவன் கைகளுக்கு உறைகளும் தலைக்கு ஒரு கான்வாஸ் துணித் தொப்பியும் அணிந்திருந்தான். அவன் தொப்பியைக் கழற்றிவிட்டு, முகத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டான். செஃப், வெஸ்ஸின் அருகில் சென்று, அவன் தோள்மீது கைகளைப் போட்டார். வெஸ் கையுறை ஒன்றை உருவி இழுத்துக் கழற்றினான். நான் வாசலுக்குச் சென்றேன்.
அவர் வருத்தத்தைக் கடவுள் தான் அறிவாரென்றும் அந்த மாதக் கடைசியில் எங்களை வீட்டைவிட்டுச் செல்லுமாறு கேட்கவேண்டியதாயிருக்கிறதென்றும் செஃப் வெஸ்ஸிடம் சொன்னதை நான் கேட்டேன். வெஸ் இன்னொரு கையுறையையும் உருவினான். அது ஏன் செஃப்?
குடிக்கிற காலத்திலிருந்தே, வெஸ் எப்போதும் குண்டு லிண்டா எனச் சொல்கிற அவருடைய மகள், வசிப்பதற்கு ஒரு இடம் வேண்டுமென்றும், அது இதுதானென்றும் செஃப் சொன்னார். லிண்டாவின் கணவன் அவருடைய மீன்பிடிப்படகை எடுத்துக்கொண்டு சில வாரங்கள் முன்னதாகச் சென்றதாகவும் அதன்பிறகு அவனைப்பற்றி எதுவும் தெரியவில்லையென்றும் செஃப், வெஸ்ஸிடம் கூறினார்.
அவள் என்னுடைய சொந்த ரத்தம், என்றார் செஃப். அவள் கணவனை இழந்துவிட்டாள். அவளுடைய குழந்தையின் தந்தையை அவள் இழந்திருக்கிறாள். என்னால் உதவமுடியும். அவளுக்கு உதவும் நிலையில் நானிருக்கிறேனென்பதே மகிழ்ச்சிதான், என்றார், செஃப். எனக்கு மிகவும் வருத்தந்தான் வெஸ், ஆனாலும் நீ வேறு வீடு பார்த்துத்தானாக வேண்டும். பின்னர், செஃப் மீண்டும் வெஸ்ஸைத் தழுவி அணைத்து, அவருடைய காற்சட்டையை மீண்டும் மேலிழுத்துக்கொண்டு, அவருடைய பெரிய காரில் ஏறி, அதை ஓட்டிச்சென்றார்.
வெஸ் வீட்டுக்குள் வந்தான். தொப்பியையும் கையுறைகளையும் தரைவிரிப்பின் மீது எறிந்துவிட்டு, பெரிய நாற்காலியில் உட்கார்ந்தான். அது செஃபின் நாற்காலி, சட்டென்று எனக்கு உறைத்தது. தரைவிரிப்பும் கூடத்தான். வெஸ் முகம் வெளிறித் தோன்றினான். இரண்டு தம்ளர்களில் காபி ஊற்றி, ஒன்றை அவனிடம் கொடுத்தேன்.
எல்லாம் சரியாகப் போகும், கவலைப்படாதே வெஸ் என்றேன். செஃப்பின் சாய்மெத்தையில் என் காபியுடன் அமர்ந்தேன், நான்.
இங்கே நமக்குப் பதிலாக குண்டு லிண்டா வசிக்கப் போகிறாள், என்றான், வெஸ். அவன் தம்ளரைக் கையில் தான் பிடித்திருந்தான். ஆனாலும் அதிலிருந்து ஒரு மடக்கு கூடக் குடித்திருக்கவில்லை.
வெஸ், இடிந்துவிடாதே, என்றேன், நான்.
அவளுடைய ஆள் கெட்சிகானில் வந்து சேர்வான், பாரேன் என்றான், வெஸ். குண்டு லிண்டாவின் கணவன் அவர்களை மிக எளிதாக, வெளியே இழுத்து எறிந்துவிட்டான். ஆனால், அதற்காக அவனைக் குற்றம் சொல்ல யாரால் முடியும்? என்றான், வெஸ். இதைப்பார்க்கும்போது, அவனேகூடத்தான், இந்த குண்டு லிண்டா கூடவும் அவள் குழந்தை கூடவும் மீதி நாளைக் கழிப்பதைவிடக் கப்பலோடு போயிருப்பானென்றான், வெஸ். பிறகு, வெஸ் அவனுடைய தம்ளரைக் கையுறைகளின் பக்கத்தில் வைத்தான். இந்த நிமிஷம் வரைக்கும் இது ஒரு மகிழ்ச்சியான வீடாகத்தானிருந்திருக்கிறது, என்றான்.
நாம் வேறொரு வீடு வாங்குவோம் என்றேன், நான்.
இது மாதிரி முடியவே முடியாது, என்றான் வெஸ். எப்படியானாலும் இதுமாதிரி வராது. இது நமக்கு ஒரு நல்ல வீடாக இருந்திருக்கிறது. இந்த வீட்டுக்கென்றே நல்ல நினைவுகள் இருக்கின்றன. இனி, குண்டு லிண்டாவும் அவள் குழந்தையும் இங்கிருக்கப் போகிறார்கள், என்றான், வெஸ். அவன் தம்ளரை எடுத்துக் காபியை உறிஞ்சிச் சுவைத்தான்.
இது செஃப் வீடு, என்றேன், நான். அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்துதானாக வேண்டும்.
அது எனக்குத் தெரியும், ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. என்றான், வெஸ்.
வெஸ்ஸுக்கு அவரைப்பற்றி இப்படி ஒரு பார்வை. அது எனக்குத் தெரியும். அவன் உதடுகளை நாக்கால் தடவிக்கொண்டேயிருந்தான். காற்சட்டைக்குள்ளாக மேற்சட்டையைத் திணித்துக்கொண்டேயிருந்தான். நாற்காலியிலிருந்தும் எழுந்த அவன் சாளரத்தின் பக்கம் போனான். கடலையும் அதன் மேலாகக் கூடிக்கொண்டிருந்த மேகங்களையும் பார்த்தவாறே நின்றான். எதையோ நினைத்துச் சிந்திப்பது போல நாடியை விரல்களால் தட்டிக்கொண்டான். ஆமாம், அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான்.
இலேசா எடுத்துக்க, வெஸ் என்றேன், நான்.
இலேசா எடுத்துக்கொள்ளவேண்டுமென்கிறாள், அவள் என்றான் வெஸ். அவன் அப்படியே நின்றுகொண்டிருந்தான்.
ஆனால், அடுத்த ஒரு கணத்திலேயே திரும்பி வந்து சாய்மெத்தையில் என் பக்கத்தில் உட்கார்ந்தான். ஒரு காலை எடுத்து மற்றொன்றின் மீது குறுக்காகப் போட்டுக்கொண்டு, அவனுடைய மேற்சட்டையின் பொத்தான்களைத் திருகத் தொடங்கினான். நான் அவன் கைகளைப் பற்றினேன். பேசத் தொடங்கினேன். அந்தக் கோடை காலத்தைப்பற்றிப் பேசினேன்.
ஆனால், அது என்னவோ முன்காலத்தில் நடந்தது போலப்பேசி, நானாகவே மாட்டிக்கொண்டேன். பல ஆண்டுகள் ஆகியிருக்கலாம். எப்படியாக இருந்தாலும், அது முடிந்துபோன ஒன்றுதான். பின்னர் நான் குழந்தைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினேன். அதை இன்னொருமுறை செய்ய வேண்டுமென்றும் இந்தமுறை சரியாகச் செய்துவிட ஆசைப்படுவதாகவும் வெஸ் சொன்னான்.
அவர்கள் உன்மீது அன்பாயிருக்கிறார்கள், என்றேன் நான்.
இல்லை, அவர்கள் அப்படியில்லை, என்றான், அவன்.
ஏதோ ஒரு நாள் அவர்கள் புரிந்துகொள்வார்கள், என்றேன், நான்.
இருக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் அது ஒரு விஷயமாகவே இருக்காது.
உனக்குத் தெரியாது, என்கிறேன், நான். .
எனக்கும் சில விஷயங்கள் தெரியும், என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான். எனக்குத் தெரியும், நீ இங்கே வந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நான் அதை மறக்கவே மாட்டேன். நீதான் அதைச் செய்தாய், என்றான் வெஸ்.
எனக்கும் மகிழ்ச்சிதான், என்றேன், நான். இந்த வீட்டை நீதான் கண்டிபிடித்தாய், அது எனக்கு மகிழ்ச்சிதானென்றேன், நான்.
வெஸ் பெருமூச்செறிந்தான். பின், சிரித்தான். நாங்கள் இருவரும் சிரித்தோம். `அந்த செஃப்` என உச்சரித்த வெஸ் தலையை உலுக்கிக்கொண்டான். அந்தப் பொட்ட நாய்க்குப் பிறந்தவன், எரிபந்தை நம்மீது வீசிவிட்டுப் போய்விட்டான். நீ நம் திருமண மோதிரத்தை அணிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இம்முறை நாமிருவரும் சேர்ந்தேயிருந்ததில் எனக்கு மகிழ்ச்சி., என்றான், வெஸ்.
அப்புறம், நானும் ஏதோ சொன்னேன். சரி, இப்படி வைத்துக்கொள், சும்மாதான் வைத்துக்கொள்ளேன், எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இதுதான் முதன் முதலாக என்று வைத்துக்கொள். சும்மாதான் அப்படி வைத்துக்கொள்ளேன். நான் சொல்வது, காயப்படுத்துவதற்கல்ல, மோசமான ஒன்று நடக்கவேயில்லையென்று சொல். நான் சொல்வது உனக்குப் புரிகிறதில்லையா? பின் என்ன? என்றேன், நான்.
வெஸ் கண்கொட்டாமல் என்னையே பார்த்தான். அப்படியாக இருந்தால், நாம் வேறு யாரோவாக இருக்கவேண்டும். நாமாக இல்லாத வேறு யாரோவாக. என்னிடம் அது போல நினைக்கின்ற எண்ணம் எதுவும் மீந்திருக்கவில்லை. நாம் யாராக இருக்கிறோமோ அப்படித்தான் பிறந்திருக்கிறோம். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?
நல்ல விஷயத்தை நானும் தூக்கி எறிந்துவிடவில்லை; அறுநூறு மைல்களுக்கு அப்பாலிருந்து நீ இப்படிப் பேசுவதைக் கேட்பதற்காகவா வந்தேனென்றேன், நான்.
நான் வருந்துகிறேன், வருத்தம் தெரிவிக்கிறேன் ஆனால் நானாக இல்லாத ஒருவர் போல என்னால் பேசமுடியாதென்று சொன்னான், அவன்.
நான் வேறு யாரோ அல்ல. நான் வேறு யாரோவாக இருந்திருந்தால், நான் நிச்சயமாக இங்கே இருந்துகொண்டிருக்க மாட்டேன். நான் வேறு யாரோவாக இருந்திருந்தால் நான் நானாக இருக்கமாட்டேன்.
ஆனால், நான் நானாகவே இருக்கிறேன், உனக்குத் தெரியவில்லையா?
வெஸ், அதெல்லாம் சரி, என்றேன், நான். அவனுடைய கைகளைப் பிடித்து என் கன்னங்களுக்குக் கொண்டுவருகிறேன். பின்னர், எனக்குத் தெரியாதா, அவனுடைய பத்தொன்பதாவது வயதில் அவன் எப்படி இருந்தான், டிராக்டரில் அமர்ந்து, நெற்றி மீது கைவைத்து வெஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய அப்பாவை நோக்கி, வயலின் குறுக்காக அவன் ஓடும்போது எப்படித் தோன்றினான், என்று நான் நினைத்துப்பார்த்தேன். நாங்கள் அப்போதுதான் கலிபோர்னியாவிலிருந்து காரில் வந்திருந்தோம். செரிலோடும் பாபியோடும் காரைவிட்டு வெளியே வந்த நான், அங்கே பார் தாத்தா என்றேன். அவர்களெல்லாம் அப்போது குழந்தைகள்.
வெஸ் என்னருகிலேயே உட்கார்ந்து, அடுத்து என்னவென்று கண்டுபிடிக்க முயற்சிப்பதுபோல நாடியைத் தட்டிக்கொண்டிருந்தான். வெஸ்ஸின் அப்பாவும் போய்ச்சேர்ந்தார், எங்கள் குழந்தைகளும் வளர்ந்தார்கள். நான் வெஸ்ஸைப் பார்த்தேன். பின் செஃப்பின் வசிப்பறையைச் சுற்றிலுமாக இருந்த அவரது பொருட்களைப் பார்த்துவிட்டு, நாம் இப்போதே சில காரியங்களைச் செய்தாக வேண்டும், அதுவும் விரைவாகச் செய்யவேண்டுமென நான் நினைத்தேன்.
ம்ஹான், என்றேன், நான். வெஸ், இங்கே பார் என்றேன்.
என்ன வேண்டும் உனக்கு? என்றான் அவன். ஆனால், அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அவனும் மனத்தைத் தேற்றிக்கொண்டதாகவே தோன்றினான். ஆனால், மனத்தைத் தேற்றிய பின்பு அவன் எந்த அவசரமும் கொள்ளவில்லை. சாய்மெத்தை மீது நன்கு சாய்ந்துகொண்ட அவன், கைகளை மடியில் வைத்துக்கொண்டு, கண்களை மூடினான். அவன் எதுவும் பேசவில்லை.
அவன் பெயரை எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன், நான். உச்சரிக்க எளிதான ஒரு பெயர், அதுவுமில்லாமல், நான் வெகு நீண்ட காலமாகவே உச்சரித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர். பின்னர் இன்னுமொரு முறை அதைச் சொல்லிக்கொண்டேன். இந்தமுறை நான் அதை உரக்கச் சொன்னேன். வெஸ் என்றேன், நான்.
கண்களைத் திறந்தான், அவன். ஆனால், என்னைப் பார்க்கவில்லை. அவன் அங்கேயே, அப்படியே அமர்ந்து சாளரத்தை நோக்கினான். குண்டு லிண்டா, என்றான், அவன். ஆனால், எனக்குத் தெரியும், அது அவளையல்ல, அவள் எதுவுமேயில்லை. அது ஒரு பெயர், அவ்வளவுதான். வெஸ் எழுந்து சாளரத் திரைகளைக் கீழிழுக்கவும் கடல் அப்படியே மறைந்துபோயிற்று. இரவு உணவு சமைப்பதற்காக, நான் உள்ளே சென்றேன். ஐஸ்பெட்டியில் இன்னும் கொஞ்சம் மீன்கள் இருந்தன. அதிகமாக இல்லைதான். இன்றிரவுக்கு அதைச் சுத்தம் செய்துவிடுவோமென நான் நினைத்தேன். அதுவே தான் முடிவாக இருக்க முடியும்.
மலைகள் 2018, மே, 02 இதழில் வெளியானது.

Wednesday, 18 July 2018

அமெரிக்கச் சிறுகதை - இனிமை SWEETNES ஆங்கிலம் டோனி மார்ரிசான், தமிழில் ச.ஆறுமுகம்

இனிமை Sweetness அமெரிக்க ஆங்கிலம் : டோனி மார்ரிசான் Toni Morrison – தமிழில் – ச.ஆறுமுகம்.

( அமெரிக்க நாவலாசிரியரான டோனி மார்ரிசான் இலக்கியத்திற்கான அனைத்து அமெரிக்க உயர்விருதுகளையும் 1993ல் இலக்கியத்திற்கான நோபெல் பரிசினையும் பெற்றவர். இதுவரை பன்னிரண்டு நாவல்கள் படைத்துள்ளார். தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள Sweetness சிறுகதை விரிவாக்கப்பட்டு God help the child என்ற பெயரில் நாவலாக வெளிவந்துள்ளது.)
அது என் தப்பல்ல. அதனால் நீங்கள் என்னைக் குற்றம் சொல்லமுடியாது. நான் அதைச் செய்யவில்லை; அது எப்படி நிகழ்ந்ததென்றும் எனக்குத் தெரியாது. என் கால்களின் இடையிலிருந்து அவளை, அவர்கள் இழுத்துப் போட்டு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகியிருக்காதபோதே, ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறதென்று எனக்குத் தெரிந்துவிட்டது. உண்மையிலேயே தவறுதான். நான் பயந்தே போனேன்; அவள் அவ்வளவு கறுப்பாக இருந்தாள். நள்ளிரவு மையிருள் கறுப்பு. சூடானியக் கறுப்பு. நான் மென்னிற மேனியும் நல்ல கூந்தலுமாக, உயர் மஞ்சளென்று சொல்வோமே அப்படி இருக்கிறேன். லூலா ஆனின் அப்பாவும் அப்படியேதான் இருக்கிறார்.
என் குடும்பத்தில் யாரும் மிகச் சிறிதளவிலுங்கூட அந்த நிறத்திற்கு அருகில் கூட இல்லை. நிலக்கரித்தார் தான் அவளுக்கு மிகமிக அருகிலிருக்குமென்று நினைக்கிறேன், ஆனாலும் அவளது தலைமுடி அந்த நிறத்துக்கு ஒத்துப்போவதாக இல்லை. அது வித்தியாசமாக – நீளமாக ஆனால் சுருள்சுருளாக, ஆஸ்திரேலியாவின் நிர்வாணப் பழங்குடிகளின் தலைமுடி போல இருந்தது. அவளொரு ஆதிகாலத் தோற்றத்தின் மீள்பிறப்பு என நீங்கள் நினைக்கலாம், ஆனால், எதன் மீள்பிறப்பு? நீங்கள் என் பாட்டியைப் பார்த்திருக்கவேண்டும்; அவள் வெள்ளை நிறத்தவளாகவே ஒப்புக்கொள்ளப்பட்டாள்; ஒரு வெள்ளை மனிதரையே திருமணம் செய்தாள்; அவளுடைய எந்தவொரு குழந்தையிடமும் பேசவேயில்லை. எனது அம்மா சித்தி மற்றும் பெரியம்மாக்கள், அவளுக்கு எந்தக் கடிதம் அனுப்பினாலும் அதை, உறை பிரிக்காமல், அப்படியே திருப்பியனுப்பினாள்.
அவளிடமிருந்து எந்தச் செய்தியுமில்லையென்ற செய்தியைக் கடைசிகடைசியாக அவர்கள் தெரிந்துகொண்டதோடு அவள் அப்படியே இருக்கட்டுமென்று விட்டுவிட்டார்கள். அநேகமாக எல்லா முலாட்டோ வகையினர் மற்றும் குவாட்ரூன்களும் – அதையேதான் இன்றளவும் திருப்பிச் செய்கின்றனர் – அவர்களுக்குச் சரியான வகையில் தலைமுடி இருந்துவிட்டால் நடப்பு அப்படியேதான். எத்தனை வெள்ளை மனிதர்கள், அவர்களின் நரம்புகளுக்குள் நீக்ரோ இரத்தத்தைக் கொண்டிருக்கிறார்களென உங்களால் கற்பனைசெய்யமுடிகிறதா? யூகித்துப் பாருங்கள்! இருபது விழுக்காடென்பது நான் கேள்விப்பட்டது. என்னுடைய சொந்த அம்மா, லூலா மாயி கூட மிக எளிதில் வெள்ளை இனமென ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பாள்; ஆனால் அவள் அந்தப் பாதையினைத் தேர்வுசெய்யவில்லை.
அவளின் அந்த முடிவுக்காக, அவள் செலுத்திய விலையை என்னிடம் பின்னாளில் அவள் சொன்னாள். அவளும் எனது தந்தையும் திருமணம் செய்துகொள்வதற்காக நீதிமன்றம் சென்றபோது அங்கே இரண்டு பைபிள்கள் இருக்க, நீக்ரோக்களுக்கான பைபிளில்தான் அவர்கள் கைவைக்கவேண்டியிருந்ததாம். மற்றொரு பைபிள் வெள்ளை இனத்தவருக்கானதாம். மகா பைபிள்! அதை உங்களால் வெற்றிகொள்ள முடியுமா? என் அம்மா, ஒரு பணக்கார வெள்ளையின இணையரிடம் வீட்டுவேலை செய்பவளாக இருந்தாள். அவள் சமைத்த உணவினையே ஒவ்வொரு பொழுதுக்கும் அவர்கள் தின்றனர். குளியல் தொட்டிக்குள் அமர்ந்துகொண்டு அவளை முதுகு தேய்த்துவிடச் சொல்வார்களாம்; வெளியில் சொல்லமுடியாத வேறு என்னென்ன அந்தரங்க வேலைகள் செய்யச்சொன்னார்களோ, அது, அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்! ஆனால் அவர்கள் தொட்ட அதே பைபிளை நாங்கள் தொடக்கூடாது.
சமூகக் கூடுகை மன்றங்கள், உள்ளூர் சமுதாய வளாகங்கள், தேவாலயங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் நிறவாரிப் பள்ளிகளிலுங்கூட, தோல் நிறத்தைக்கொண்டு – மென்னிறம் அதிகமாக, அதிகமாக நல்லதென – நாங்கள் குழு பிரிப்பது ஒரு மோசமான விஷயமென உங்களில் சிலர் நினைக்கலாம், அப்புறம் எப்படித்தான் நாங்கள் சிறிய அளவிலான ஒரு ஒற்றைப் பெருமையையாவது தக்கவைத்துக்கொள்வதாம்? மருந்துக்கடையில் காறித் துப்புவதை, பேருந்து நிறுத்தத்தில் முழங்கை மூட்டினால் இடிக்கப்படுவதை, வெள்ளை இனத்தவர் முழு நடைமேடையையும் பயன்படுத்துமாறு விட்டுக்கொடுத்துவிட்டு, சாக்கடையில் இறங்கி நடப்பதை, மளிகைக் கடைகளில் வெள்ளை வாடிக்கையாளர்களுக்கு விலையின்றி இலவசமாக வழங்கப்படும் காகிதப் பைகளுக்கு ஒரு நிக்கல் விலைகொடுப்பதிலிருந்தும் தவிர்க்கப்பட நாங்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? பெயர் சொல்லித் திட்டுவது ஒருபக்கமிருக்கட்டும். அதைப்பற்றியெல்லாம், நான் போதும் போதுமென்கிற அளவுக்கு கேள்விப்பட்டுவிட்டேன்.
என் அம்மாவின் தோல் நிறத்தினால் மட்டுமே, பல்பொருள் அங்காடிகளில் தொப்பிகளை அணிந்து பார்க்கவும், பெண்கள் அறையினைப் பயன்படுத்தவும் அவளை அனுமதித்தனர். அதுபோல எனது அப்பாவும் காலணிக்கடைகளின் பின்புற அறையில் அல்லாமல் முன்புறத்திலேயே, காலணிகளை அணிந்து பார்க்க முடிந்தது. அவர்களில் யாரொருவரும் கூட, தாகத்தால் இறந்துகொண்டிருக்கும் வேளையென்றாலும் `கறுப்பு நிறத்தவருக்கு மட்டும்` என அடையாளமிட்ட குடிநீர்க்குழாய்களிலிருந்து தண்ணீர் குடிக்கமாட்டார்கள்.
அப்படிச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லைதானென்றாலும், மகப்பேற்றுக் கூடத்தில் தொடக்கத்திலிருந்தே, குழந்தை லூலா ஆன் என்னைப் பெரும் சங்கடத்துக்காளாக்கிவிட்டாள். அவளுடைய பிறந்த மேனி, எல்லா குழந்தைகளையும் போலவே ஏன், ஆப்பிரிக்கக் குழந்தைகளையும் சேர்த்துத்தான், வெளிறிய நிறத்திலிருந்தது; ஆனால், வேகவேகமாக மாறிவிட்டது. என் கண்ணெதிரிலேயே அவள் நீலக் கறுப்புக்கு மாறியபோது எனக்குப் பைத்தியம் பிடிப்பதாகவே நினைத்தேன்.
ஒரு கணம் பைத்தியமே பிடித்துவிட்டதை உணர்ந்தேன்; என்னவென்றால் – ஒருசில கண்ணிமை நொடிகள்தாம் – அவளுடைய முகத்திற்கு மேலாக ஒரு போர்வையைக் கொண்டுபோய் அழுத்துவதற்குப் போய்விட்டேன். ஆனால், அவள் அந்த பயங்கரமான நிறத்தில் பிறக்காமலிருந்திருக்கக்கூடாதாவென நான் எந்த அளவுக்கு நொந்துகொண்டேனென்ற போதிலும் என்னால் அதைச் செய்யமுடியவில்லை. அவளை ஒரு அனாதை இல்லம் மாதிரியான ஏதாவது ஒன்றுக்குக் கொடுத்துவிடலாமாவென்றும் யோசித்தேன். ஆனால் தேவாலய வாயிற்படிகளில் குழந்தைகளை விட்டுச்செல்லும் அந்த அம்மாக்களில் ஒருத்தியாவதற்கு நான் மிகவும் கலவரப்பட்டுப் போனேன்.
கொஞ்சநாட்களுக்கு முன்புதான், அடர் கருப்புத் தோலுடன் குழந்தை பிறந்ததெப்படியென யாரும் விளக்கம் சொல்லமுடியாத பனி போன்ற வெள்ளைநிற ஜெர்மானிய இணையர் பற்றிக் கேள்விப்பட்டேன். இரட்டைக்குழந்தைகள் – ஒன்று வெள்ளை, மற்றொன்று கருப்பு என்று நினைக்கிறேன். அது உண்மையா என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை அவளைப் பராமரிப்பதென்பது ஒரு நீக்ரோ பிக்கானின்னி என் முலைக்காம்பில் பால் உறிஞ்சுவது போலத்தான். வீட்டுக்குச் சென்றதுமே அவளுக்குப் புட்டிப்பால் தொடங்கிவிட்டேன்.
என் கணவன், லூயிஸ், ஒரு சுமைதூக்குபவன்.
அவன் ரயில்வே தடுப்புக்கம்பிகளிலிருந்து மீண்டு இங்கு வரும்போதெல்லாம், எனக்குப் பைத்தியம்பிடித்திருப்பது போலவும் குழந்தை ஜூபிடர் கிரகத்திலிருந்து வந்துள்ளது போலும் பார்த்தான். அவனொன்றும் தன்மூப்புப்பிடித்த ஒரு மனிதனல்லவென்றாலும், அவன், “அட, பாழாய்ப்போன கடவுளே, இது என்ன எழவு?“ எனச் சொல்கின்ற போதெல்லாம், நாங்கள் பிரச்னைக்குள்ளாகியிருக்கிறோமென்பதை, நான் புரிந்துகொண்டேன். அதுவேதான் – அவனுக்கும் எனக்கும் இடையில் சண்டைகளுக்குக் காரணமாயிருந்தது. அது எங்கள் திருமணத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டது. நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு நன்றாகவே சேர்ந்திருந்தோம்; அவள் பிறந்தாளோ இல்லையோ, அவன் என்னைக் குற்றம் சொல்லியதோடு, லூலா ஆனை அந்நியளாகவே கருதியது மட்டுமல்ல – எதிரியாகவே பாவித்தான். அவன் அவளைத் தொட்டதேயில்லை.
நான் வேறெந்த ஆணோடும் முட்டாள்தனமாகச் சுற்றித்திரியவில்லை என அவனை நான் சமாதானப்படுத்த முயலவில்லை. நான் பொய் பேசுவதாக அவன் அவ்வளவு நிச்சயமாகக் கருதினான். நாங்கள் வாதத்துக்கு மேல் வாதம் புரிந்து கடைசியில் அவளுடைய கறுப்பு நிறம் அவனுக்கே அவனுக்கான குடும்பத்திலிருந்து வந்ததுதான் – என்னுடையது அல்லவென்று நான் சொல்லும்போதுதான் அது தீயாகி, அவன் சட்டென்று எழுந்ததோடு அப்படியே கிளம்பிப் போக, நான் குடியிருப்பதற்காக வேறொரு மலிவான இடம் தேடவேண்டியதாயிற்று.
என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நான் செய்தேன். வீட்டு உரிமையாளர்களிடம் வாடகைக்கு அறை கேட்டுப் போகும்போது அவளையும் தூக்கிப்போகக்கூடாதென்பதைப் புரிந்துகொள்கிற அளவுக்கு நான் விவரம் தெரிந்திருந்தேன். அதனால் அவளை என்னுடைய பதின் வயது மைத்துனியிடம் கொடுத்துப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றேன். என்னவானாலும் நான், அவளை அதிகமும் வெளியே எடுத்துச் செல்வதில்லை; ஏனென்றால், நான் அவளைக் குழந்தை வண்டிக்குள் வைத்துத் தள்ளும்போது, ஏதாவது நல்லதாக ஒன்றிரண்டு வார்த்தை சொல்லலாமென, அவளைக் குனிந்து பார்ப்பவர்கள் முகஞ்சுளிப்பதற்குமுன் கத்தவோ அல்லது பின்பக்கமாகத் தள்ளாடவோ செய்துவிடுகிறார்கள். அது நோகடிக்கிறது. எங்கள் நிறம் மட்டும் வேறாக இருந்தால் நான் குழந்தை பார்த்துக்கொள்ளும் செவிலியாகியிருப்பேன்.
கறுப்பு நிறமாக இருப்பதாலேயே – நல்ல மஞ்சள் நிறமென்றாலுங்கூட – நகரத்தின் கண்ணியமான ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு பெறமுயற்சிப்பதென்பது மிகமிகக் கடினமானதுதான். முன்னர்த் தொண்ணூறுகளில், லூலா ஆன் பிறந்தகாலத்தில், வீடு வாடகைக்குக் கொடுக்க, அப்படியெல்லாம் வேறுபாடுகாட்டுவதற்கு எதிராகவே சட்டம் இருந்ததென்றாலும், பெரும்பாலான உரிமையாளர்களும் அதைக் கருத்தில்கொள்ளவேயில்லை. உங்களை வட்டத்திற்குள் நுழையவிடாமல் வெளியிலேயே நிறுத்துவதற்கு அவர்கள் ஆயிரம் காரணங்களை உருவாக்கினர்.
திரு.லே விளம்பரப்படுத்தியிருந்ததைக் காட்டிலும் வாடகையில் ஏழு டாலர்களைக் கூட்டிவிட்டாரென்பது எனக்குத் தெரியுமென்பதோடு வாடகை கொடுப்பதற்கு ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டாலும் வலிப்பு வந்த மாதிரி கத்தத் தொடங்கிவிடுவாரென்ற போதிலும் நான் கொடுத்துவைத்தவள்தான்.
என்னை அம்மா என்றோ, மா என்றோ அழைக்காமல் `இனிமை` என்று அழைக்குமாறு அவளுக்கு நான் கூறினேன். அது அதிக பாதுகாப்பானது. அவள் கறுப்பாயிருப்பதும் நான் நினைப்பதுபோல் அவளது உதடுகள் பருமனாக இருப்பதும், அவள் என்னை அம்மா என அழைப்பது மற்றவர்களைக் குழப்பத்திலாழ்த்திவிடும். அதுமட்டுமில்லாமல், நீலச்சாயலில் காக்கைக் கறுப்பு நிறமாக, மாறுபாடாகத் தெரிந்த அவளது கண்களில் சூனியம் மாதிரியான ஏதோ ஒன்றிருப்பதாக வேறு தோன்றியது.
அதனால், நாங்கள் இருவர் மட்டுமேயென நீண்டகாலமிருந்தோம்; கைவிடப்பட்ட மனைவியாகக் காலம்கழிப்பது எத்துணை கடினமானதென்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. எங்களை அப்படிக்கப்படியே விட்டுவிட்டு விலகிச்சென்றபின்னர், லூயிஸ் சிறிது உறுத்தலாக உணர்ந்திருக்கவேண்டும்; ஏனெனில் ஒருசில மாதங்கள் கழிந்ததும், நான் பணம் அனுப்புமாறு கேட்கவோ அல்லது நீதிமன்றத்தை அணுகவோயில்லாதபோதும் நான் எங்கே தங்கியிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, மாதத்திற்கொருமுறை பணம் அனுப்பத் தொடங்கினான்.
அவனுடைய ஐம்பது டாலர் பணவிடைகளும் மருத்துவமனையில் நான் செய்த இரவுப்பணியுமாக எனக்கும் லூலா ஆனுக்கும் நல்வாழ்வுப்பணத்தைத் தந்தன. அது ஒரு நன்மையான விஷயம். அதை நல்வாழ்வுப்பணமெனக் கூறுவதை நிறுத்திவிட்டு என் அம்மா, குழந்தையாக இருந்தபோது அதனை எப்படி அழைத்தார்களோ அந்தச் சொல்லைப் பயன்படுத்தவேண்டுமென நான் நினைத்தேன். அப்போது, அது `நிவாரணம்` என வழங்கப்பட்டது. அந்தப்பெயரே, இருவரும் ஒன்றிணைவதற்கிருக்கும் காலகட்டத்தில் உயிர் மூச்சுக்காகக் குறுகிய காலத்துக்கான ஒன்றாக, நன்றாக இருப்பது போலிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த நலத்துறை எழுத்தர்கள் எச்சிலுக்கும் கீழானவர்களாக இருக்கின்றனர். கடைசியில் எனக்கு வேலை கிடைத்து அந்தப்பணம் எனக்குத் தேவையில்லாமற் போகுமளவுக்கு, அவர்கள் ஒருபோதும் பெற்றேயிருக்காததற்கும் அதிகமாக நான் சம்பாதித்தேன்.
அவர்களுடைய கஞ்சத்தனமான ஊதியக் காசோலையில்தான் அவர்களுடைய இழிநிலை நிரம்பிவழிகிறது. அதனால் தான் அவர்கள் எங்களைப் பிச்சையெடுப்பவர்களிலும் கேவலமாக நடத்தினரென நான் நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக அவர்கள் லூலா ஆனைப் பார்த்துவிட்டு, என்னை ஒரு பார்வை பார்ப்பார்கள், பாருங்கள் – நான் என்னவோ ஏமாற்ற அல்லது அதுமாதிரியான ஏதோ ஒன்றினைச் செய்ய முயற்சிப்பது போல. அப்போது கொஞ்சத்துக்குக் கொஞ்சம் பரவாயில்லாமலாகியிருந்தாலும் நான் மிகவும் கவனமாகவே இருக்கவேண்டியிருந்தது. மிகமிகக் கவனமாக இருந்து அவளை வளர்த்தெடுத்தேன். நான் கண்டிப்புடன், மிகவும் கண்டிப்புடன் இருக்கவேண்டியிருந்தது. பொதுவில், லூலா ஆன் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்றும் தலையை எப்படித் தொங்கப்போட்டுக் கொள்வதென்றும் தொந்தரவு ஏற்படுத்தாமலிருப்பது எப்படியென்றும் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.
அவள் தனது பெயரை எத்தனை முறை மாற்றிக்கொண்டாளென்பது எனக்கு ஒரு விஷயமேயில்லை. அவளது நிறமென்பது அவள் எப்போதும் சுமந்தேயாகவேண்டிய சிலுவை. ஆனால், அது என் தவறு அல்ல. என் தவறு இல்லவேயில்லை
ஓ! ஹ்ஹோ, லூலா சின்னவளாக இருக்கும்போது நான் அவளை எப்படி நடத்தினேன் என்பது குறித்து சிலநேரங்களில் எனக்குப் பெருத்த வலி ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்; நான் அவளைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. அவளுக்கு உலகம் தெரிந்திருக்கவில்லை.
அப்படியான தோல் இருக்கும்போது உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலுங்கூட நீங்கள் அதில் திடமாக இருந்துவிடவோ அல்லது அதனை வெளிக்காட்டிவிடவோ முடியாது. அதுவும் பதிலுக்குப் பதில் பேசியதற்காக, அல்லது பள்ளியில் சண்டையிட்டதற்காக சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிடக்கூடிய சூழ்நிலை நிலவுகிற ஒரு உலகத்தில், கடைசி நபராக பணிக்குச் சேர்க்கப்பட்டு, முதல்நபராக வெளித்தள்ளப்படவிருக்கும் உலகத்தில் முடியவே முடியாது.
அதுபற்றியெல்லாமோ அல்லது அவளது கறுப்புத் தோல் வெள்ளை மனிதர்களை எப்படிப் பீதிகொள்ளச்செய்யுமென்றோ அல்லது நகைக்கச் செய்யுமென்றோ அல்லது விளையாட்டுக்காட்டி ஏமாற்ற முயற்சிக்கவைக்குமென்றோ அவளுக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை, லூலா ஆனைப்போலவே இருட்டு நிறத்துக்குக் கொஞ்சம் கூடக் குறையாத, பத்து வயதுக்கு மேற்பட்டிருக்காத ஒரு சிறுமி, கூட்டமாக நின்ற வெள்ளைச்சிறுவர்களில் ஒருவனால் தட்டிவிடப்பட்டதையும் அவள் தடுமாறி எழுந்து நிலைநிற்க முயற்சிக்கும்போது இன்னொருவன் அவளின் பின்பக்கத்திலேயே காலால் உதைத்து மீண்டும் அப்படியே குப்புறத் தள்ளியதையும் பார்த்தேன்.
அந்தப் பயல்கள் குனிந்து, வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கமுடியாமல் சிரித்தனர். அந்தக் கறுப்புச்சிறுமி அங்கிருந்து அகன்றபிறகும், அந்தப் பையன்கள் பெருமிதத்தோடு புளகாங்கிதம் காட்டிக்கொண்டிருந்தனர். நான் பேருந்திலிருந்து சாளரம் வழியாக அதைப்பார்த்தேன்; அப்படியில்லாமல் நான் அந்த இடத்திலேயே இருந்திருந்தால், அந்த வெள்ளைக்கும்பலிடமிருந்து அவளை இழுத்துக் காப்பாற்றியிருப்பேன். தெரிந்துகொள்ளுங்கள், நான் மட்டும் லூலா ஆனுக்குச் சரியாகப் பயிற்சியளிக்காமலிருந்தால், தெருவின் குறுக்காக எப்படிக் கடந்து செல்லவேண்டுமென்பதையும் வெள்ளைப் பையன்களை எப்படித் தவிர்ப்பதென்பதையும் அவள் தெரிந்திருக்கமாட்டாள். ஆனால் அவளுக்கு நான் கற்றுக்கொடுத்த பாடங்கள் பலன் அளித்து, இப்போது நான் ஒரு மயிலைப்போலத் தலைநிமிர்ந்து நடக்குமாறு என்னைப் பெருமைப்படச் செய்திருக்கிறாள்.
நான் ஒரு மோசமான அம்மா இல்லையென்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்; என் குழந்தை நோகும்படியான சில விஷயங்களைச் செய்திருக்கலாம் தான்; அது ஏனென்றால், நான் அவளைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டியிருந்தது. ஆம் அப்படித்தான். எல்லாமே இந்த நிறப் பிரிவினை, உயர் உரிமையினால்தான். முதலில் அந்தக் கறுப்பு முழுவதையும் கடந்துவிட்டு அவள் யாரென்பதைப் பற்றிக் கருதிப்பார்க்கவோ, வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவளை வெறுமனே நேசிக்கவோ என்னால் முடியவில்லைதான்; ஆனாலும் அவளை நான் நேசித்தேன். எந்தவிதப் பிடிப்புமற்ற வெறும் அன்பு. உண்மையிலேயே நான் அப்படி அன்புகொண்டேன். அதை அவள் இப்போது புரிந்துகொள்வாளென நினைக்கிறேன். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.
இப்போது, கடைசியாக அவளைப் பார்த்த இரண்டு முறையும் நல்ல தெளிவாக இருந்தாள்; துணிச்சலும் தன்னம்பிக்கையும் மிக்கவளாக. அவள் என்னைப் பார்க்க வருகிற ஒவ்வொருமுறையும் எப்படியொரு கறுப்பாக அவள் இருந்தாளென்பதை நான் மறந்துபோகிறேன். ஏனென்றால், அவள் அழகழகான வெள்ளைநிற ஆடைகளை அணிந்து அந்தக் கறுப்பினையே ஒரு அனுகூலமாக மாற்றிக்கொண்டுவிட்டாள்.
வாழ்க்கை முழுவதற்குமாக நான் தெரிந்துகொள்ளவேண்டிய பாடத்தை அவள் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாள். குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்க்கிறீர்களென்பது தான் பேசுகிறது. அவர்கள் ஒருபோதும் மறந்துவிடமாட்டார்கள். பிரிந்துசெல்கிற நேரம் வந்ததுமே அவள், அந்த மோசமான அடுக்ககத்தில் என்னைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். என்னைவிட்டு அவளால் எவ்வளவு தூரம் தள்ளிப்போகமுடியுமோ, அப்படியான ஒரு தூரத்துக்குத் தன்னை முழுவதுமாகத் திரட்டி எழுந்துகொண்டு, கலிபோர்னியாவில் ஒரு பெரிய வேலை கிடைத்துச் சென்றிருக்கிறாள். இனிமேல் என்னைப் பார்க்க அடிக்கடி வரமாட்டாள்; தொலைபேசுவதும்கூட இல்லைதான். ஆனால், அவ்வப்போது என்றில்லை, அடிக்கடி, பணமும் தேவையான பொருட்களையும் அனுப்பிக்கொண்டிருக்கிறாள். அவளைப் பார்க்காமல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி இருக்கப்போகிறேனென்றுதான் எனக்குத் தெரியவில்லை.
நகரத்திற்கு வெளியே இருக்கின்ற அதிகம் செலவுபிடிக்கின்ற மருத்துவ மனைகளைவிட, இந்த இடம் – வின்ஸ்டன் ஹோம் – எனக்குப் பிடித்திருக்கிறது. இது சிறியது; வீடு மாதிரியானது; செலவும் குறைவு.
இருபத்து நான்கு மணி நேரச் செவிலியர்கள் மற்றும் வாரத்துக்கு இருமுறை வந்து கவனிக்கும் ஒரு மருத்துவர். எனக்கு இப்போது அறுபத்து மூன்று தான் – காடு போய்ச்சேர மிகக் குறைந்த வயது – ஆனால் பற்றிப்பிடித்துக்கொண்ட ஏதோ ஒரு எலும்பு நோயினால் படுத்துவிட்டேன். அதனால் தொடர்ந்து நல்ல சிகிச்சையும் கண்காணிப்பும் அவசியமாகிவிட்டது.
வலி, வேதனை, பலவீனம் எல்லாவற்றையும் விட சலிப்பு தான் மிகக் கொடியதென்றாலும், செவிலிகள் அன்பாயிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி, நான் பாட்டியாகப் போவதைச் சொன்னதும் என் கன்னத்திலேயே முத்தமிட்டுவிட்டாள். அவளுடைய முக மலர்ச்சியும் அவளது வாழ்த்து மொழிகளும் முடிசூடிக்கொள்ளப் போகும் ஒரு நபருக்குப் பொருத்தமானது. லூலா ஆனிடமிருந்து நீலநிறத் தாள் ஒன்றில் எனக்கு வந்திருந்த செய்தியினை அவளிடம் காட்டினேன் – நல்லது, லூலா அதில் மணப்பெண் என்ற பொருளில் `பிரைட்` எனக் கையொப்பமிட்டிருந்தாள். ஆனால், எனக்கு அதிலொன்றும் கவனம் இல்லை. அவளுடைய சொற்கள் கிறங்கவைப்பதாக இருந்தன. “என்னவென்று யூகித்துக்கொள்ளுங்களேன், எஸ் (இனிமை). இந்தச் செய்தியை உங்களுக்குச் சொல்வதில் நான் மிகமிக, மிகமிக மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. நான் மிகவும், மிகவும் என்றால் இன்னும் மிகவுமான ஒரு பரவசத்திலிருக்கிறேன்; நீங்களும் அப்படியே பரவசமாவீர்களென நம்புகிறேன்.” அவள் குழந்தையை நினைத்துத்தான் பரவசம் கொள்கிறாள், அதன் அப்பாவை நினைத்து அல்லவென்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
அது எப்படி என்றால், அவனைப்பற்றி அவள் எதுவுமே குறிப்பிடவில்லையே! அவளைப் போலவே அவனும் கறுப்பாயிருப்பானோ! அப்படியிருந்தாலும் அவள் என்னளவுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை. என் சிறுவயதுக்காலத்தைவிட இப்போது எவ்வளவோ மாறியிருக்கிறது. கறுப்பு, நீலக்கறுப்பு எல்லோருமே தொலைக்காட்சி, பண்பாட்டு ஊடகங்கள், கவர்ச்சி இதழ்கள், வணிக விளம்பரங்கள், ஏன், திரைப்பட நடிகர்களில் கூட எல்லாவிடத்திலும் இருக்கிறார்கள்.
உறையில் திருப்புமுகவரி எழுதியிருக்கவில்லை. நல்ல ஒரு நோக்கத்திற்காக, உண்மையில் சொல்லப்போனால் நான் அவளை வளர்த்த அந்த அவசியமான முறைமைக்காக இப்போதும் கெட்ட தாயாகவே, செத்துத்தொலைகிறவரை இப்படியே தான் இருந்தாக வேண்டுமோ! எனக்குத் தெரியும், அவள் என்னை வெறுக்கிறாள். எங்களுக்கிடையிலான உறவென்பது வெறுமே பணம் அனுப்புவதென்பதாகக் கீழிறங்கிப்போனது. அவள் அனுப்புகிற பணத்துக்காக நான் நன்றியோடிருப்பதாகச் சொல்லித்தானாகவேண்டும். ஏனெனில் வேறு சில நோயாளிகளைப் போல, நான் என்னுடைய கூடுதல் தேவைகளுக்காகப் பிச்சையெடுக்கத் தேவையில்லையல்லவா! சாலிட்டேர் தனி விளையாட்டுக்குப் புதிய சீட்டுக்கட்டு வாங்க விரும்பினால் வாங்கிக்கொள்ள முடியும்; லவுஞ்ச் ஓய்வறையில் அழுக்காகிக் கிழிந்துபோன சீட்டுகளைவைத்து விளையாடத் தேவையில்லை. அதோடு, எனது முகத்துக்கான சிறப்பு க்ரீம் வாங்கிக்கொள்ளமுடியும். ஆனாலும் என்னை முட்டாளாக்கிவிட முடியாது. அவள் எனக்குப் பணம் அனுப்புவதென்பது ஒரு வகையில் என்னைவிட்டு விலகியிருப்பதற்கும், அவளிடம் மீதமிருக்கும் சிறிதளவு மனச்சாட்சியின் உறுத்தலைச் சாந்தப்படுத்திக்கொள்வதற்கும் தான் என்பது எனக்குத் தெரியும்.
நான் எரிச்சலில் நன்றியில்லாமல், புலம்புகிறேனென்றால், அதில் பாதிக்கும் மேலான காரணம் அதன் கீழிருக்கும் கழிவிரக்கந்தான். அவையெல்லாம் நான் செய்யாத, அல்லது தவறாகச் செய்த சிறு விஷயங்கள்தாம். அவளது முதல் மாதவிடாயின்போது நான் எப்படி நடந்துகொண்டேனென்பது என் நினைவுக்கு வருகிறது. அவள் தடுமாறியபோது அல்லது ஏதோ ஒன்றைத் தவறவிட்டபோது நான் கத்திக்கூச்சலிட்ட நினைவுகள். உண்மை. நான் மிகவும் குழம்பிப் போயிருந்தேன், அவள் பிறந்தபோது அவளது கறுப்புத்தோல் என்னைக் கவிழ்த்துவிட்டிருந்ததோடு எனக்குத் தோன்றிய முதல் எண்ணம் ……. வேண்டாம். அந்த நினைவுகளையெல்லாம் முழுவதுமாக, நான் துடைத்தெறியவேண்டும். அவற்றை நினைத்துப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. அன்றைய சூழ்நிலையில் அவளுக்கு நல்லனவற்றில் சிறந்தவற்றைச் செய்திருக்கிறேன். என் கணவன் எங்களைவிட்டு ஓடிப்போனபோது, லூலா ஆன் எனக்கு ஒரு பாரமாகவே இருந்தாள். அது கழுத்தை முறிக்கிற ஒரு பெரும்பாரம். ஆனால், நான் அதை நன்றாகவே தாங்கிக்கொண்டேன்.
ஆமாம். நான் அவளிடம் கடுமையாகத்தான் நடந்துகொண்டேன். நான் அப்படித்தான் இருந்தேனென்று நீங்கள் பந்தயம் கூடக் கட்டுவீர்கள். அவள் பன்னிரண்டிலிருந்து பதின்மூன்றாகின்ற போது நான் இன்னுங்கூடக் கடுமையாகத்தானிருந்தேன். அவள் பதிலுக்குப் பதில் பேசினாள்,. நான் சமைத்ததைச் சாப்பிட மறுத்தாள்; தன் தலையைக் குலைத்துக்கொண்டாள். அதை நான் வாரிப் பின்னல் போட்டபோதும், பள்ளிக்குச் சென்றதும் அதைக் கலைத்துக்கொண்டாள். அவள் எப்படியோ போகட்டுமென்று நான் விட்டுவிடமுடியாது. நான் மூடியை இடைவெளியில்லாமல் நன்கு இறுக்கிப் பூட்டியதோடு அவள் எப்படியெல்லாம் பெயர் சூட்டித் திட்டப்படுவாளென்றும் அவளை எச்சரித்தேன். என்னுடைய கற்பித்தல் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கும். பாருங்கள், இப்போது அவள் எப்படி மாறியிருக்கிறாள்? நல்ல வேலையிலிருக்கிற ஒரு பணக்காரப் பெண். நீங்கள் அதை மறுத்துவிட முடியுமா?
இப்போது அவள் கருவுற்றிருக்கிறாள்.
நல்ல நடவடிக்கை, லூலா ஆன். பிள்ளை வளர்ப்பதென்பது வெறுமே கொஞ்சுவதும் காலணி மற்றும் இடைத்துணி மாற்றுவதென நீ நினைப்பாயானால் ஒரு பெரிய அதிர்ச்சி உனக்குக் காத்திருக்கிறது. பெரியதாகவே. நீயும் பெயரில்லாத உன்னுடைய ஆண் தோழன், கணவன், ஆள் – யாராக இருந்தாலும் – கற்பனைசெய்கிறீர்கள், ஓஒஒஹ்! ஒரு குழந்தை! கிச்சிக் கிச்சிக்கூ!
நான் சொல்வதைக் கேளுங்கள். உலகம் எப்படி இருக்கிறது, அது எப்படி இயங்குகிறது என்பதோடு நீங்கள் பெற்றோராகும்போது அது எப்படி மாறுகிறது என்பதையும் நீங்கள் கண்கூடாகக் காணப்போகிறீர்கள்.
நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கட்டும், கடவுள் குழந்தைக்கு உதவட்டும்
மலைகள் 149 நாள் 03.07.2018 இல் வெளியானது. 

Saturday, 23 June 2018

காட்சி நோக்காடி Viewfinder By RAYMOND CARVER

காட்சிநோக்காடி VIEWFINDER ஆங்கிலம் : ரேமண்ட் கார்வர் Raymond Carver – தமிழில் ச.ஆறுமுகம்.



ரேமண்ட் கார்வர் Raymond Carver
கைகளில்லாத ஒரு மனிதர், எனது வீட்டின் புகைப்படம் ஒன்றினை என்னிடம் விற்பதற்காக என் வாசலுக்கு வந்தார். குரோமியக் கொக்கிகள் தவிர்த்து, அவர் ஒரு சாதாரணமான ஐம்பது அல்லது அதுமாதிரியான தோற்றமுள்ளவராகவே இருந்தார்.
அவருடைய தேவையினை அவர் சொல்லி முடித்ததும் ”உங்கள் கைகளை எப்படி இழந்தீர்கள்?” என நான் கேட்டேன். “அது வேறு கதை,” என்றார், அவர்.
”உங்களுக்கு இந்தப் படம் வேண்டுமா, வேண்டாமா?”
“உள்ளே வாருங்கள்,” என்றேன், நான். “இப்போதுதான் காபி போட்டேன்.”
கூடவே, பழவகை இனிப்பாக ஜெல்லோவும் இப்போதுதான் செய்து முடித்திருந்தேன். ஆனால் அதை, அந்த மனிதரிடம் சொல்லவில்லை.
உங்கள் கழிவறையை நான் பயன்படுத்தலாமாவெனக் கேட்டார், அந்தக் கையில்லா மனிதர். அவர் குவளையை எப்படிப் பிடிப்பாரென்பதைப் பார்த்துவிடவேண்டுமென்று, நான் நினைத்தேன்.
புகைப்படக்கருவியை அவர் பிடிக்கும் விதத்தை நான் அறிவேன். அது ஒரு பழைய போலராய்டு, பெரிது, கருப்பு. அவரது தோளோடும் முதுகோடும் சேர்த்திணைத்தத் தோல்வாரோடு அந்தப் புகைப்படக்கருவி பிணைக்கப்பட்டிருந்தது.
அதனால் அது, அவரது நெஞ்சுப்பகுதியில் பத்திரமாகத் தொங்கியது. உங்கள் வீட்டின் முன்பான ஓர நடைபாதையில் நின்றுகொண்டு, காட்சி நோக்காடி வழியாக உங்கள் வீட்டினைப் பார்த்து, அவரது கொக்கிகளில் ஒன்றால் புகைப்படக்கருவியின் விசையைத் தட்டி, உங்கள் வீட்டின் படத்தினை எடுத்துவிடுவார். என் வீட்டுச் சாளரம் வழியாக நான் கவனித்துக்கொண்டுதானிருந்தேன், பார்த்துக்கொள்ளுங்கள்.
”கழிவறை எங்கிருக்கிறதெனச் சொன்னீர்கள்?”
‘’ உள்ளேதான், வலதுபக்கம் திரும்புங்கள்.”
வளைந்து, குனிந்து தோள்வார்க்கட்டுக்குள்ளிருந்தும் கழன்றுகொண்ட அவர், நிழற்படக்கருவியை சாய்மெத்தை மீது வைத்துவிட்டு, மேல்சட்டையை நேர்படுத்தி இழுத்துவிட்டுக்கொண்டார்.
”நான் வரும்வரையில் நீங்கள் இதைப் பார்த்துக்கொண்டிருங்கள்.” அவரிடமிருந்த நிழற்படத்தை நான் கையில் எடுத்தேன். சிறு புல்வெளிச் செவ்வகம் ஒன்றுடன் காரோடும் பாதை, கார் ஷெட், முன்புறப்படிகள், புடைப்புச் சாளரம் மற்றும் சமையலறையிலிருந்து நான் கவனித்துக்கொண்டிருந்த சாளரமும் இருந்தது.
அப்படியிருக்கையில் இந்தத் துயர நிழற்படம் எனக்கு எதற்கு?
நான் இன்னும் நெருக்கமாகப் பார்த்தபோது சமையலறைச் சாளரத்தில் என் தலையை, என் தலையையேதான் பார்த்தேன். என்னை அதைப்போலப் பார்த்தபோது அது, என்னைச் சிந்திக்கவைத்தது. ஆம். அது ஒரு மனிதனைச் சிந்திக்கச்செய்கிறதென்பதை என்னால் உங்களுக்குக் கூறமுடியும். கழிவறையில் நீர் ஊற்றப்படுவது எனக்குக் கேட்டது. அவர் ஜிப்பினை மேலிழுத்துக்கொண்டு, சிரித்தவாறே, ஒரு கொக்கி அவரது இடைக்கச்சினைப் பிடித்திருக்க, இன்னொன்றால் காற்சட்டைக்குள் மேற்சட்டையை உட்தள்ளிக்கொண்டே அறைக்கூடத்துக்குள் வந்தார்.
“என்ன, சிந்தனை?” எனக்கேட்டவர், “எல்லாம் சரிதான்!” என்றும் சொன்னார்.
என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே நன்றாகப் போகிறதென்றுதான் நினைக்கிறேன். நான் என்னசெய்கிறேனென்பது எனக்குத் தெரியாமல் போகுமா? எதையும் எதிர்கொள்வோம், அது ஒரு அலுவல் சார்ந்த போட்டி.
அவர் அவரது கவட்டையில் சொரிந்துகொண்டார்.
”காபி இங்கிருக்கிறது” என்றேன்.
”நீங்கள் தனியாகத்தான் வசிக்கிறீர்கள், சரிதானே? என்ற அவர், வசிப்பறைக்குள் நோக்கிவிட்டுத் தலையைக் குலுக்கினார். “கஷ்டம், கஷ்டம்” என்றார்.
அவர் நிழற்படக்கருவியின் அருகில், பெருமூச்சுடன் பின்பக்கம் சாய்வாக அமர்ந்த பின், அவர் தெரிந்துகொண்டதை என்னிடம் சொல்லப்போவதில்லை என்பது போல முறுவலித்தார்.
‘காபியைக் குடியுங்கள், ” என்றேன், நான்.
ஏதாவது பேசவேண்டுமே, என்ன பேசலாமென நான் யோசிக்க முயற்சித்தேன். ”மூன்று பையன்கள், நடைபாதை ஓரக்கல்லில் என் முகவரியைத் தீட்டுவதாகக் கூறி இங்கு வந்து நின்றார்கள். அதற்காக ஒரு டாலர் கேட்டார்கள். உங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதில்லையா, இல்லை, தெரியுமா?”
அது ஒரு தொலைதூரக் காட்சிப்பிடிப்பு. ஆனால், நானும் அவரை அப்படியேதான் பார்த்திருந்தேன்.
அவர் முன்பக்கமாக, முக்கியமாக அவரது கொக்கிகளுக்கிடையில் தம்ளரைச் சமநிலைப்படுத்திக்கொண்டு முற்சாய்ந்தார். அவர் அதனை மேசை மீது வைத்தார்.
“ என் வேலைகளை நானாகவேதான் செய்துகொள்கிறேன்.” என்ற அவர், “எப்போதுமே, இனிமேலும் அப்படித்தான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
“நான் இணக்கமான இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தேன்.” என்றேன். எனக்குத் தலை வலித்தது. அதற்குக் காபி நல்லதில்லையென்று எனக்குத் தெரியும்; ஆனால், சிலசமயம் ஜெல்லோ அதைச் சரிசெய்துவிடும். நான் அந்தப் படத்தைக் கையிலெடுத்தேன்.
“ நான் சமையலறையிலிருந்தேன்.” என்றேன், நான்.
]
“வழக்கமாக நான் பின்பக்கத்தில் தான் இருப்பேன்.”
“அது எல்லா இடத்திலும் அப்படித்தான் நிகழ்கிறது.” என்றார், அவர். “ஆக, அவர்கள் அப்படிக்கப்படியே உங்களை விட்டுப் போய்விட்டார்கள், சரிதானே? இப்போது, நீங்கள் என்னை எடுத்துக்கொள்ளுங்களேன், நான் தனியாகத்தான் பணிசெய்கிறேன். இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? உங்களுக்குப் படம் வேண்டுமா?”
“அதை நான் வாங்கிக்கொள்கிறேன்.” என்றேன், நான்.
நான் எழுந்து தம்ளர்களை எடுத்துக்கொண்டேன்.
“ நிச்சயம் வாங்கிக்கொள்வீர்கள்,” என்றார், அவர். ”நகரமையத்தில் ஒரு அறை வைத்திருக்கிறேன். எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. வெளியே செல்லும் பேருந்து ஒன்றில் ஏறிச் சென்று ஊர்ப்புறங்களில் வேலை முடிந்த பிறகு மற்றொரு நகர்மையத்துக்குப் போகிறேன். நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களா? ஹூம், ஒரு காலத்தில் எனக்கும் குழந்தைகள் இருந்தனர். எல்லாம் உங்களைப் போலவேதான்.” என்றார், அவர்.
நான் கையில் தம்ளர்களோடு, சாய்மெத்தையில் அவர் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்ததைக் கவனித்து நின்றேன்.
“அவர்கள் எனக்குத் தந்ததுதான் இதுவெல்லாம்.” என்றார், அவர். என்முன் நீண்ட அந்தக் கொக்கிகளைக் கண்கள் விரியப் பார்த்தேன்.
“ காபிக்கு நன்றி. கழிவறை பயன்படுத்த அனுமதித்ததற்கும் நன்றி. எனக்கும் இரக்கமாகத்தானிருக்கிறது. “
அவர் எழுந்து கொக்கிகளைத் தாழ்த்திக்கொண்டார்.
” காட்டுங்கள்.” என்றேன், நான். “எவ்வளவென்று காட்டுங்கள். வீட்டையும் என்னையுமாக இன்னும் அதிகப் படமெடுங்கள்.”
“அதெல்லாம் வேலைக்காகாது” என்றார், அந்த மனிதர். “அவர்களெல்லாம் மீண்டும் வரப்போவதில்லை.” அவர் தோல்வாரை மாட்டிக்கொள்வதற்கு, நான் உதவி செய்தேன். “ எதாவது ஒரு விலையைச் சொன்னால் தானே, நான் இதை உங்களுக்குத் தர முடியும்’’ என்றார், அவர். ”ஒரு டாலருக்கு மூன்று.” ”நான் இதற்கும் கீழே குறைத்தால், என்னால் வெளியே போகமுடியாது.” என்றார், அவர்.
நாங்கள் வெளியே சென்றோம். அவர் கருவியின் மூடுகதவினைச் சரிசெய்தார். நான், எங்கே நிற்கவேண்டுமென்று அவர் சொன்ன இடத்திற்கு நாங்கள் இறங்கிச் சென்றோம். நாங்கள் வீட்டைச் சுற்றி நடந்தோம். எல்லாமே முறைப்படியானது தான்.
சிலநேரங்களில் நான் ஓரப்பாதைகளைப் பார்ப்பேன். சிலநேரங்களில் நேருக்கு நேராகப் பார்ப்பேன்.
‘’நல்லது,” என்பார், அவர். “அதுவும் நல்லது,” என, நாங்கள் வீடு முழுவதும் சுற்றிப் பின்பக்கம் வந்து, பின்னர் முன்பக்கம் வந்தபோதும் சொன்னார்.
“இருபது ஆகிவிட்டது. இது போதும்.”
“இல்லை,” என்றேன், நான். “கூரை மேலேயும்,” என்றேன்.
“சேசுவே,” என்றார், அவர். அவர் கட்டிடத்தை மேலும் கீழுமாகக் கண்களாலேயே அளவிட்டார்.
“நிச்சயமாக,” என்றவர், “இப்போதுதான், நீங்களாகப் பேசுகிறீர்கள்.” என்றார்.
‘’மொத்தமாக எல்லாமும். அவர்கள் துடைத்தெடுத்துவிட்டார்கள்.” “ இதைப் பாருங்கள்.” என்ற அந்த மனிதர் மீண்டும் கொக்கிகளை மாட்டினார்.
நான் உள்ளேசென்று நாற்காலி ஒன்றினை எடுத்துவந்து, கார் ஷெட் கூரை அடியில் வைத்தேன். ஆனாலும் அந்த உயரம் போதவில்லை. அதனால் நான் அளிக்கூடை ஒன்றை எடுத்து வந்து நாற்காலியின் மீது வைத்தேன்.
கூரை மீது ஏற அது போதுமானதாக இருந்தது.
மேலே ஏறி நின்று, சுற்றிலும் பார்த்தேன். நான் கையசைத்தேன்; அந்தக் கையில்லாத மனிதர் பதிலுக்குக் கொக்கிகளை அசைத்தார்.
அப்போதுதான் நான் அவற்றைப் பார்த்தேன். சிறுகற்கள். புகைபோக்கிக் கூண்டின் மீது ஒரு கூடு போல அந்தக் கற்குவியல் இருந்தது. உங்களுக்குத்தான் அந்தப் பையன்களைத் தெரியுமே. அவர்கள் கற்களைப் புகைபோக்கிக்குள் வீசுவதாக நினைத்து எப்படி வீசுவார்களென்றும் உங்களுக்குத் தெரியுமே.
”ரெடியா?” எனக்கேட்ட நான் ஒரு கல்லைக் கையிலெடுத்துக்கொண்டு, காட்சி நோக்காடியில் நான் தெரிவதை அவர் சரிப்படுத்தும் வரை அப்படியே நின்றேன்.
“ஓ.கே.” என்றார், அவர்.
நான் கையைப் பின்னுக்கு இழுத்து, “இந்தா வாங்கிக்கோ!” எனக்கத்தி, அந்தப் பொட்ட நாய்க்குப் பிறந்தமகன் மீது எவ்வளவு தூரமாக எறியமுடியுமோ அவ்வளவு தூரத்துக்கு எறிந்தேன்.
”எனக்குத் தெரியாது, நானென்ன, அசையும் படமா பிடிக்கிறேன் ” என அவர் கத்துவது என் காதில் விழுந்தது.
“ திரும்பவும் எடுங்கள்!” எனக்கத்திக்கொண்டே இன்னொரு கல்லை எடுத்தேன். 
மலைகள் இணைய இதழ் 147 ஜீன் 3, 2018 இல் வெளியிடப்பட்டது.

Monday, 9 April 2018

அமெரிக்கச் சிறுகதை - 10 - நண்பர்கள் ஆங்கிலம் : லூசியா பெர்லின் Friends : Lucia Berlyn

நண்பர்கள் ( Friends ) – ஆங்கிலம் : லூசியா பெர்லின், ( அமெரிக்கா.) Lucia Berlin – தமிழில் : ச. ஆறுமுகம்.


லூசியா பெர்லின் (1936 – 2004)
1960, 70, 80களில் மிகவும் அறிவு பூர்வமாகப் புனைவுகளைப் படைத்த லூசியா பெர்லினுக்கு மிகச் சிறிய வாசகர் வட்டமே அமைந்திருந்தது. அவர் இறந்து பதிபொரு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கதைகள் பிரபலமடைந்துள்ளன. லூசியாவின் படைப்புகள் கனடாவின் ஆலிஸ் மன்றோ, ருசியாவின் செகாவ் போன்றோரின் படைப்புகளுக்கு இணையான இடத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவையெனத் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள `நண்பர்கள்` கதை, புதுமைப்பித்தனின் செல்லம்மாள், ஆலிஸ் மன்றோவின் `மலைமேல் வந்தது, கரடி` கதைகளோடு இணைத்துச் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.
*****
சாமின் உயிரைக் காப்பாற்றிய நாளில்தான் அன்னாவையும் சாமையும் லொரேட்டா சந்தித்தாள்.
அன்னாவும் சாமும் முதியவர்கள். அவளுக்கு 80, அவரோ 89. பக்கத்து வீட்டு எலெயினின் நீச்சல் குளத்துக்கு லொரேட்டா நீச்சலுக்குச் செல்லும் நாட்களில் அவ்வப்போது அன்னாவைப் பார்த்திருக்கிறாள். ஒருநாள் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு வயதான முதியவரை நீச்சலுக்கு இணங்கவைக்க முயலும்போது அவள் நின்று கவனித்தாள். கடைசியில் அவர் ஒப்புக்கொண்டு, இறுக்கமான முகத்தோடு நாய் நீச்சலில் கைகளைத் தப்படித்தபோது கைகால்கள் இழுத்துக்கொண்டன. குளத்தின் ஆழமற்ற முடிவுப் பகுதியில் நின்ற அந்த இரண்டு பெண்களும் இதைக் கவனிக்கவில்லை.
லொரேட்டா, காலணிகளைக்கூடக் கழற்றாமல் அப்படியே குளத்தில் குதித்து அவரைப் படிக்கட்டுக்கு இழுத்து, குளத்துக்கு வெளியேயும் கொண்டுவந்தாள். அவருக்கு இதய மீளுயிர்ப்புச் சிகிச்சை எதுவும் தேவைப்படவில்லை; பயத்தில் கைகால்கள் ஓடவில்லை; அவ்வளவுதான். வலிப்பு நோய்க்கான சில மருந்துகளை அவர் உட்கொள்ளவேண்டியிருந்தது.
மூன்று பெண்களுமாக அவருக்கு உடல் துவர்த்தவும் ஆடைமாற்றவும் உதவிசெய்தனர். அவர் நல்லநிலைக்குத் திரும்பி, அந்தக் கட்டிடத் தொகுதியின் அருகாகவேயிருந்த அவர்களுடைய வீட்டுக்கு நடந்துசெல்லமுடிகிற வரையில் அவர்கள் எல்லோரும் அங்கேயே அமரவேண்டியிருந்தது. லொரேட்டா, அவரது உயிரைக் காப்பாற்றியதற்காக, அன்னாவும் சாமும் நன்றி கூறிக்கொண்டேயிருந்ததுடன் மறுநாள் மதிய உணவுக்கு அவர்கள் வீட்டுக்கு வந்தேயாகவேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.
அடுத்த சில நாட்களுக்கு அவள் வேலைக்குச் செல்லமுடியாதபடியாக இருந்தது. கண்டிப்பாகச் செய்தேயாகவேண்டிய சில விஷயங்கள் இருந்ததால், அவள் மூன்று நாட்கள் ஊதியமில்லாத விடுப்பு எடுத்தாள். அவர்களுடனான மதிய உணவு என்பது நகரத்திலிருந்து பெர்க்கிலி சென்று திரும்பும் தூரத்தை உள்ளடக்கியதென்பதோடு திட்டமிட்ட நாளில் எல்லாவற்றையும் செய்துமுடிக்கமுடியாமலுமாகும்
இது போன்ற நிலைமைகளில் அவள் கையற்றுப் போவதாக உணர்கிறாள். நீங்கள் ஐயோ என உங்களுக்குள்ளாகவே புலம்பிக்கொள்வீர்களே அதைத்தான் அவளும் செய்துகொள்ளமுடியும், அது அவ்வளவு நல்லது. நீங்கள் அதைச்செய்யவில்லையெனில் குற்றவுணர்வுகொள்வீர்கள்; அதைச் செய்தாலோ பலவீனமாக உணர்வீர்கள்.
அவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்த கணத்திலேயே அவள், அவநோக்கு மனநிலையை மாற்றிக்கொண்டாள். வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர்கள் வாழ்ந்த பழங்கால மெக்சிகோ வீட்டைப் போலவே, அந்த வீடும் விரியத் திறந்ததாக நல்ல வெளிச்சத்துடனிருந்தது. அன்னா தொல்லியலாளராகவும் சாம் பொறியாளராகவும் இருந்தனர். டியோட்டிஹ்யாகன் மற்றும் பிற தொல்லியல் தளங்களில் அவர்கள் இணைந்தே பணியாற்றியிருந்தனர்.
அவர்களின் குடியிருப்பு, அருமையான ஒரு நூலகத்துடன் அழகிய மண்கலங்கள், புகைப்படங்கள் நிறைந்து விளங்கியது. படிக்கட்டில் இறங்கியதும் பின்புறப் பகுதியில் ஒரு பெரிய காய்கறித் தோட்டம், பலவகைப் பழ மரங்கள் மற்றும் பேரிவகைத் தாவரங்கள். லொரேட்டாவுக்கு ஒரே வியப்பு; பறவைகளைப்போல மென்மைகொண்ட அந்த இருவரும் அவர்களின் வேலைகளை அவர்களாகவே செய்துகொள்கின்றனர். இருவருமே கைத்தடி கொண்டு, மிகவும் சிரமத்துடனேயே நடந்தார்கள்.
மதிய உணவுக்கு வதக்கிய பாலாடைக்கட்டி பொதியப்பம், சௌசௌ சூப் மற்றும் அவர்களின் தோட்டத்துக் காய்களைக் கொண்டு ஒரு கலவை. அன்னாவும் சாமும் இருவருமாகவே சேர்ந்து உணவு தயாரித்து, மேசையை அழகுபடுத்தியிருந்ததோடு, அவர்களாகவே பரிமாறினர்.
ஐம்பது ஆண்டுகளாகவே, இருவரும் இணைந்தே எல்லாக் காரியங்களையும் செய்துவருகின்றனர். இரட்டைக் குழந்தைகளைப் போல, அவர்கள் ஒருவரையொருவர் எதிரொலித்தார்கள் அல்லது ஒருவர் தொடங்கும் வாக்கியத்தை மற்றவர் முடித்தனர். மதிய உணவு மகிழ்வாக நிகழ்ந்தது; அவர்கள் மெக்சிகோவிலுள்ள பிரமிடுவிலும் பிற அகழாய்வுத் தளங்களிலும் பணியாற்றிய அனுபவங்கள் சிலவற்றை ஒருசேர ஸ்டீரியோ ஒலிபெருக்கி போல அவளுக்குச் சொன்னார்கள். அந்த இரு முதியவர்களால், அவர்கள் பகிர்ந்துகொண்ட இசை மற்றும் தோட்டக்கலை ரசனையால், அவர்கள் ஒருவர் மீதொருவர் கண்டுகொண்ட இன்ப அனுபவத்தால், லொரேட்டா முழுவதுமாக அவர்கள்பால் ஈர்க்கப்பட்டாள்.
அவர்கள் இருவரும் உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் முழுவதுமாகக் கலந்துகொண்டு, ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பு நிகழ்வுகளுக்குச் செல்வதும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஊடகச் செய்தியாளர்களுக்கு அஞ்சல்கள் எழுதுவதும், தொலைபேசியில் பேசுவதுமாக இருப்பதைக் கண்டு அவள் வியப்புகொண்டாள். ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு செய்தித்தாள்களை அவர்கள் வாசித்தனர்; இரவுகளில் ஒருவருக்கொருவர் நாவல்கள் அல்லது வரலாற்று நூல்களை வாசித்துக் காட்டினர்.
நடுங்கும் கைகளோடு சாம் மேசையைச் சுத்தம்செய்யும்போது, லொரேட்டா, அன்னாவிடம் இப்படியொரு நெருக்கமான வாழ்க்கைத் துணை அமைந்திருப்பது எத்துணை பொறாமைகொள்ளச்செய்கிறதென்றாள். ஆமாம், என்ற அன்னா, ஆனால், சீக்கிரமே எங்களில் ஒருவர் போய்விடுவோம் போலிருக்கிறதென்றாள்.
அந்த அறிக்கைச் சொற்றொடரை லொரேட்டா நிரம்ப நாட்களுக்கு நினைவுவைத்து, அவர்களில் ஒருவர் மரணிக்கும் காலத்துக்கு எதிராக ஒரு ஆயுள் காப்பீடு போல அன்னா அவளோடு ஒரு நட்பினை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினாளோவென வியந்தாள். ஆனால், அது அப்படியில்லையென்றும், அது இன்னும் மிக எளிய ஒன்று என்றும் அவள் நினைத்தாள். அவர்கள் இருவருமே போதிய தற்சார்பு மற்றும் தன்னிறைவு கொண்டவர்களாகவும் வாழ்க்கை முழுவதுமே ஒருவர் மற்றவருக்காகப் போதுமான அளவுக்கு ஈடுகொடுப்பவர்களாகவும் இருந்துவந்திருக்கின்றன்; ஆனால் சாம் இப்போதெல்லாம் அடிக்கடி கனவுவயப்படுவதுடன் தொடர்பற்றுப் பேசுபவராகவும் மாறிக்கொண்டிருக்கிறார்.
ஒரே கதையை மீண்டும் மீண்டுமாகச் சொல்கிறார்; அன்னா எப்போதுமே அவரிடம் பொறுமையோடுதானிருக்கிறாளென்றாலும் பேச்சுத் துணையாக இன்னுமொருவர் இருந்தால் அன்னா மகிழ்ச்சிகொள்வாளென லொரேட்டா உணர்ந்தாள்.
காரணம் எதுவாக இருந்தாலும், சாம் மற்றும் அன்னாவின் வாழ்க்கையில் மேலும் மேலுமான ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அவர்களால் மேற்கொண்டு கார் ஓட்டமுடியவில்லை.
லொரேட்டா வேலையிலிருக்கும்போது, தொலைபேசியில் அன்னா, தோட்டத்திற்கான நார்க்கழிவு வாங்கிவருமாறோ, சாமை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறோ கூறுகிறாள். சிலநேரங்களில் அவர்கள் இருவருமே கடைக்குச் செல்ல முடியாதது போல் உணர்ந்ததால், அவர்களுக்காக லொரேட்டா பொருட்கள் வாங்கிவரவேண்டியிருந்தது. அவர்கள் இருவரையும் அவள் விரும்பியதோடு அவர்களை நினைத்து வியந்து பாராட்டவும் செய்தாள். அவர்கள் துணைக்கு ஏங்குவதாகத் தோன்றியதால், அவள் வாரம் ஒருமுறையோ மிகவும் அதிகபட்சம் இரண்டு வாரத்துக்கொருமுறையோ அவர்கள் வீட்டு இரவு உணவுக்குச் சென்றுவிடுவாள்.
சிலவேளைகளில் அவர்களைத் தன் வீட்டுக்கு இரவு உணவுக்கு வருமாறு அழைத்தாள்; ஆனால், அவள் வீட்டுக்கு அதிகம் படியேறவேண்டியிருந்ததோடு, மேலே வந்ததும் அவர்கள் முழுவதுமாகச் சோர்ந்துவிட்டதால் அவள் அதை நிறுத்திக்கொண்டாள். அதனால் அவள், அவர்கள் வீட்டுக்கு மீன், கோழி அல்லது பாஸ்தா உணவு எதையாவது கொண்டுசெல்வாள். இரவு உணவோடு சேர்த்து அருந்துவதற்காக, அவர்கள் காய்கறிக் கலவை தயாரித்து, தோட்டத்துப் பேரிவகைகளுடன் பரிமாறுவார்கள்.
இரவு உணவுக்குப் பின்னர், கோப்பை கோப்பைகளாக, புதினா அல்லது ஜமைக்கா தேநீருடன் மேசையில் சுற்றி அமர, சாம் கதைகள் சொல்வார்.
யுகேட்டான் காட்டுக்குள் அகழப்பட்ட தளம் ஒன்றிலிருக்கையில் அன்னாவை வாத நோய் தாக்கியபோது அவளை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள், அங்கிருந்த மக்கள் எவ்வளவு அன்பும் இரக்கமும் நிறைந்தவர்களாயிருந்தார்கள் என்பது பற்றியது. க்சாலப்பாவில் அவர்கள் கட்டிய வீட்டைப் பற்றித்தான் அநேகக் கதைகள். மேயரின் மனைவி, பார்வையாளர் ஒருவரைத் தவிர்ப்பதற்காக சாளரம் ஒன்றிலேறிக் குதித்ததில் காலை உடைத்துக்கொண்டாராம். சாமின் கதைகள் எப்போதுமே “ அது எனக்கு அந்தக் காலத்தை நினைவுபடுத்துகிறது……” எனத் தொடங்கின.
சிறிது சிறிதாக, அவர்களின் வாழ்க்கைக் கதை முழுவதும் லொரேட்டாவுக்கு மனப்பாடமாயிற்று.
டாம் சிகரத்தில் அவர்களின் பிணைப்பு. அவர்கள் பொதுவுடைமைவாதிகளாக இருந்தபோது நியூயார்க்கில் ஏற்பட்ட காதல். பாவத்திலேயே வாழ்ந்தது. அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேயில்லை. அந்த மரபுமீறிய தன்மைக்காக அவர்கள் அப்போதும் பெருமிதமும் நிறைவும் கொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் தூரத்து நகரங்களில் இருந்தனர். குழந்தைகள் சிறியவர்களாக இருந்தபோது கலிபோர்னியக் கடற்கரையான பெரிய சூர் அருகிருந்த கால்நடைப் பண்ணை பற்றியும் கதைகள் இருந்தன. ஒரு கதை முடியும் போது லொரேட்டா சொல்வாள், “ எனக்கு இங்குவிட்டுப் போவதற்கு வெறுப்பாகத் தானிருக்கிறது. ஆனால், நாளை காலை சீக்கிரமாகவே வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது.” அப்படியே புறப்பட்டுவிடுவாள்தான்.
இருந்தாலும் சாம் சொல்வார், “ கையால் சுற்றும் கிராமபோனுக்கு என்ன நிகழ்ந்ததென்று சொல்கிறேன், கேட்டுவிட்டுப் போயேன்.” நேரம் பிந்தி, ஓக்லாந்திலுள்ள அவள் வீட்டுக்கு காரோட்டிச் செல்லும்போது, இப்படியே போய்க்கொண்டிருக்க முடியாதென அவள் தனக்குள் சொல்லிக்கொள்வாள். அப்படியே அங்கு சென்றுவந்தாலும் அதற்கொரு குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும்.
அவர்கள் ஒருபோதும் சலிப்புறவோ அல்லது ஆர்வமற்றுப்போகவோ இல்லை. மாறாக, அந்த இணையர்கள் இருவரும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் மனதறிந்த தெளிவுடனும் முழுமையான ஒரு வாழ்க்கையினை வளத்தோடு வாழ்ந்தனர். கடந்துசென்ற அவர்களது உலகத்தின் மீது அவர்கள் அதீத ஆர்வத்துடன் விளங்கினார்கள். ஒருவருக்கொருவர் கூடுதல் விளக்கங்கள் அளிப்பதும் நாள் மற்றும் விவரங்கள் பற்றி விவாதிப்பதுமாக அப்படியொரு நல்ல பொழுது அவர்களுக்கு அமைந்தநிலையில், அவர்களுக்கிடையில் புகுந்து தடைப்படுத்தவோ அல்லது அவர்களை அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பவோ லொரேட்டாவுக்கு மனமில்லை.
அதுவே அவள் அங்கு செல்வதை நல்லதென உணரவும் செய்தது. ஏனெனில் அவளைப் பார்ப்பதில் அந்த இருவரும் அவ்வளவு மகிழ்ச்சி கொண்டார்களே! ஆனாலும் சில வேளைகளில், மிகுதியாக க் களைப்புற்றிருக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் செய்யவேண்டியதிருக்கும்போதோ அங்கு போகாமலிருக்கலாமேயென உணர்வாள். கடைசியில் அவள், மறுநாள் காலையில் மிகவும் கடினமாயிருப்பதால், அவ்வளவு பின்னேரத்துக்கு அவள் தங்கமுடியாதெனக் கூறுவாள். ஞாயிற்றுக்கிழமை காலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட பிரஞ்சுக்கு வா என்றாள்.
காலநிலை நல்லதாயிருக்கும்போது, அவர்களின் முன்பக்கத் தாழ்வாரத்தில் செடிகளும் பூக்களுமாகச் சூழ்ந்திருக்க, மேசை அமைத்து அதில் உண்டனர். பறவை உண்கலங்களில் அவர்கள் உணவினை இடுவதால் நூற்றுக்கணக்கான பறவைகள் அங்கு நேராகவே வந்தமர்ந்தன.
குளிர் அதிகமாகும்போது அவர்கள் உள்ளுக்குள்ளேயே இரும்பு அடுப்பில் சமைத்து அங்கேயே உண்டனர். அடுப்புக்குத் தேவையான விறகினை சாம், அவராகவே கீறியெடுத்து நெருப்பினைக் கவனித்துக்கொண்டார். அவர்கள் சிறுவகை அப்பம் அல்லது சாமின் சிறப்பு ஆம்லெட் சாப்பிட்டார்கள்; சிலவேளைகளில் மாவைக் கொதிக்கவைத்துச் செய்யும் பேகல் ரொட்டியும் அதனுடன் சல்மான் மீனின் வயிற்றுப்பகுதி மென்தசையோடு சேர்த்துண்ணும் லாக்சும் கொண்டுவருவாள்.
சாம் கதைகள் சொல்லச் சொல்ல, அன்னா அவற்றுக்குத் திருத்தமும் விளக்கங்களும் அளிக்க, ஒவ்வொரு மணி நேரமும் செல்லச் செல்ல, நாளும் கடந்துபோகும். சிலநேரங்களில் முன்பக்கத் தாழ்வார வெயிலில் அல்லது அடுப்பின் இதமான வெம்மையில் விழித்திருப்பது மிகவும் கடினமாகிவிடும்.
அவர்களின் மெக்சிகோ வீடு கான்கிரீட் செங்கல்களால் கட்டப்பட்டது; ஆனால், உத்தரங்களும் முன்பக்கக் கொடுக்கல் வாங்கல் இடங்களும் நிலையடுக்குகளும் தேவதாரு வகை செடார் மரத்தாலானவை. முதலாவதாக பெரிய அறை – அடுக்களை மற்றும் வசிப்பறை – கட்டப்பட்டது. அவர்கள் கட்டிடம் கட்டும் முன்பாகவே செடிகள், மரங்கள் நடத்தொடங்கியிருந்தனர். வாழை, இலந்தை வகைப் பிளம், ஜகரண்டா மரங்கள். அடுத்த ஆண்டு படுக்கையறை ஒன்றினைக் கட்டிப் பின் பல ஆண்டுகள் கழித்து மற்றொரு படுக்கையறையும் அன்னாவுக்காக ஒரு ஓவிய அறையும் அமைத்தனர்.
படுக்கைக் கட்டில்கள், வேலைசெய்வதற்கான விசுப்பலகைகள் மற்றும் மேசைகள் அனைத்தும் செடார் மரங்கள். மெக்சிகோவின் மற்றொரு மாநிலத்தின் களங்களில் பணியாற்றிய பின்னர் அவர்கள் அந்தச் சிறிய வீட்டிற்கு வந்தனர். வீடு எப்போதும் தண்மையாகவும் செடார் வாசனையோடும் ஒரு பெரிய செடார் பெட்டியைப் போலிருந்தது.
அன்னாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதில் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டியதாயிற்று. நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவள் இல்லாமல் சாம் எப்படிச் சமாளிப்பாரென்று, அவள் நினைவு முழுவதும் சாம் மீதுதானிருந்தது. வேலைக்குச் செல்லும் முன்பாகச் சென்று, சாம் மாத்திரை மற்றும் காலை உணவு சாப்பிடுவதைக் கவனித்துக்கொள்வதாகவும் வேலை முடிந்து வந்த பின்னர் இரவு உணவு சமைத்துக்கொடுப்பதாகவும், அவரை மருத்துவமனைக்கு அவளைப் பார்க்க அழைத்து வருவதாகவும் லொரேட்டா அன்னாவுக்கு உறுதிகூறினாள்.
இதில் அநியாயம் என்னவெனில், சாம் பேசவேயில்லை. லொரேட்டா அவருக்கு உடைமாற்ற உதவும்போது அவர் படுக்கையின் ஒரு ஓரமாக நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
எந்திரத்தனமாக அவர், காலை உணவுக்குப் பின் மாத்திரையை விழுங்கி, அன்னாசிச் சாற்றினைக் குடித்துவிட்டு கவனமாக வாயைத் துடைத்துக்கொண்டார். மாலையில் அவள் வரும்போது முன்பக்கத் தாழ்வாரத்தில் நின்று அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்; முதலில் மருத்துவமனைக்குப் போய் அன்னாவைப் பார்த்துவிட்டுப் பிறகு இரவு உணவினை உண்ணலாமென்றார்.
அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, அன்னா, அவளது நீண்ட வெள்ளைத் தலைமுடி ஒரு சிறுமியினுடையதைப் போல் இரட்டைச் சடையாகத் தொங்க, வெளிறிக் கிடந்தாள். நரம்பு வழியாகக் குளுகோசும் மருந்தும் ஏறிக்கொண்டிருக்க, உயிர்வளியும் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.
அவள் பேசவில்லை; ஆனால், புன்னகைத்தாள். சாம், ஒரு சுமை துணி துவைத்ததாகவும், தக்காளிக்குத் தண்ணீர் பாய்ச்சியதாகவும், பீன்ஸ் செடிகளுக்கு மண் அணைத்ததாகவும், சமையல் பாத்திரங்களைக் கழுவி வைத்ததாகவும் லெமனேடு தயாரித்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவள் சாமின் கையைப் பற்றிக்கொண்டாள். அவர் மூச்சுவிடாமல் ஒவ்வொரு மணித்துளியும் என்ன செய்தாரென்று பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் கிளம்பும் போது, அவர் தடுக்கித் தள்ளாடவே, லொரேட்டா, அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
காரில் வீட்டுக்குச் செல்லும்போது, அவர் மிகவும் கவலைப்பட்டு அழுதார். ஆனால், அன்னா வீட்டுக்கு நல்லபடியாகத் திரும்பி வந்தாள்; தோட்டத்தில்தான் வேலைகள் நிறைய இருந்தன. அடுத்த ஞாயிறு அன்று பிரஞ்ச் முடித்தபின்பு லொரேட்டா தோட்டத்தில் களையெடுத்து, கறுப்புப் பேரிக்கொடிகளை வெட்டினாள். உண்மையிலேயே அன்னா நோய்வாய்ப்பட்டுவிட்டால், என்னவாகுமென லொரேட்டா கவலைப்பட்டாள்.
இந்த நட்பில் அவளின் இடம் எது? அந்த இணையர் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும், அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் பெரும் அபாயத்திலிருப்பதும் அவளை துயர்கொள்ளச் செய்ததுடன் அவள் நெஞ்சை உருக்கவும் செய்தது.
அவள் வேலைசெய்துகொண்டிருக்கும்போதே இந்தச் சிந்தனைகள் அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தன; குளிர்ந்த கறுப்பு மண்ணும் அவள் முதுகில் பட்ட வெயிலும் அவளுக்கு இதமாக இருந்தன. பக்கத்துப் பாத்தியில் களையெடுத்துக்கொண்டிருந்த சாம் அவருடைய கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை லொரேட்டா அவர்களுடைய வீட்டுக்குத் தாமதமாகச் சென்றாள். அவள் அதிகாலையிலேயே எழுந்துவிட்டிருந்தாள் தான், இருந்தாலும் அவள் முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. அவள் உண்மையில் வீட்டிலேயே இருக்க விரும்பினாள்; ஆனால், அவர்களை அழைத்து அவர்களிடம் அங்குசெல்வதை ரத்துசெய்வதாகக் கூறுகின்ற இதயம் அவளுக்கில்லை.
வழக்கம்போல் முன் வாயிற் கதவு தாழிடப்பட்டிருக்கவே, அவள் பின்பக்கப் படிக்கட்டு வழியாகச் செல்ல தோட்டத்திற்குள் நுழைந்தாள். தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக உட்புறமாக நடந்துசென்றாள். தக்காளி, மஞ்சள் பூசணி, பனிக்காலப் பட்டாணியாகப் பசுமை நிறைந்து விளங்கியது. மயக்கத்தில் கிடந்த பட்டாணி.
அன்னாவும் சாமும் மேல்மாடி முன்மாடத்தில் வெளிப்புறமாக அமர்ந்திருந்தனர். லொரேட்டா அவர்களை அழைக்கலாமென எண்ணினாள்; ஆனால் அவர்கள் தீவிர உரையாடலிலிருந்ததாக அவளுக்குத் தோன்றியது.
”அவள் இதற்குமுன் இதுபோல் பிந்தியதே இல்லை. ஒருவேளை வரமாட்டாளோ.”
“ ஓஹ், வருவாள்,…இந்த காலை நேரங்கள் அவளுக்கு மிக முக்கியமானவை.”
“ ஐயோ பாவம். அவள் தனிமையில் தவிக்கிறாள். அவளுக்கு நாம் தேவைப்படுகிறோம். நாம்தான் அவளுடைய ஒரே குடும்பம்.”
”நிச்சயம் அவள் என் கதைகளை ரசிக்கிறாள். அன்பே, இன்றைக்குப் பார்த்து அவளுக்குச் சொல்வதற்கென எந்த ஒரு ஒற்றைக்கதைகூட நினைவிற்கு வரமாட்டேனென்கிறது.”
“எதாவது வரும்……”
“ஹல்லோ! வீட்டில் யாராவது இருக்கிறீர்களா?” என அழைத்தாள், லொரேட்டா. 

https://www.vice.com/en_au/article/read-a-story-from-lucia-berlins-a-manual-for-cleaning-women-0810 

Saturday, 9 July 2016

அமெரிக்கச் சிறுகதை - ஒளி புகா இழைகள், புனிதத் தலங்கள் Fiber Optics, Holy Places By AMIE BARRODALE

ஒளிபுகா இழைகள், புனிதத் தலங்கள்  Fiber Optics, Holy Places
ஆங்கிலம்  : ஆமி பரோடேல் ( Amie Barrodale)
தமிழில் ச.ஆறுமுகம்  


Image result for amie barrodale                                  


ஆமி பரோடேல் டெக்சாஸில் புத்த மார்க்கத்தினராக வளர்ந்தவர். பர்னார்டில் கல்லூரிப்படிப்பு முடிந்ததும் தி ஆனியன், வைஸ் போன்ற இதழ்களில் முதுநிலை ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் ஓராண்டுக்கு இந்தியாவில் பணிபுரிந்தார். தற்போது வைஸ் இதழில் புனைவியல் ஆசிரியராகப் பணிபுரியும் அவர் கான்சாஸ் நகரில் கணவருடன் வசிக்கிறார்.

அயோவா எழுத்தாளர் பணிக்கூடத்தின் கற்பித்தல்-படைத்தல் உறுப்பினரான இவரது சிறுகதைகள் மற்றும் கட்டுரைப் படைப்புகள் பாரிஸ் ரிவ்யூ, ஹார்ப்பர்ஸ் மாகஸீன், வைஸ், மெக்ஸ்வீனீஸ் மற்றும் இதர இதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. வில்லியம் வீ என்ற சிறுகதைக்காக பாரிஸ் ரிவ்யூ இவருக்கு பிளிம்ப்டன் டிஸ்கவரி விருதினை 2012ல் வழங்கியுள்ளது.   

தற்போது தமிழாக்கம் செய்யப்படும் சிறுகதை அடங்கியுள்ள அவரது You Are Having a Good Time என்ற சிறுகதைத் தொகுதியில்  மொத்தம் பத்து கதைகள் உள்ளன. ஆமி பரோடேலின் கதை சொல்லும் மாந்தர்கள் அதிகம் குடிப்பவர்களாக, தவறான விஷயங்களைப் பேசுபவர்களாக, தவறான மனிதர்களை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். பேராவல் கொண்டவர்களான இவர்களைப் பற்றிப் பேசும் கதைகள் வழக்கமான கதைகளைப் போலன்றி மாறுபட்டு நிகழ்கின்றன. இருப்பினும் வாசகனுக்குள் வாழ்க்கை மதிப்பீடுகள் குறித்து விரும்பத்தக்க பல சமரசங்களை ஏற்படுத்துவதில் வெற்றிபெறுவதாக அமைகின்றன.
*********

அவர்கள் இருவரும் காதலாகப் புணர்ந்து முடித்த பின், அவன் சொன்னான், “எமா, புதிய புத்தகம் ஒன்று வாசித்துக்கொண்டிருக்கிறேன். அது ஒரு பழைய புத்தகம், ஆனால் அதைப்பற்றி  அதற்கு மேல் அதிகம் தெரிந்தவர் யாரும் இல்லை. அந்த எழுத்து, ஆசிரியரின் வேலைக்கு உலைவைத்து, அவரது பணிவாழ்க்கையையே சிதைத்துவிட்டதென்றாலும், அது ஒரு  அருமையான புத்தகம்.  கவனத்தை ஈர்க்கிற ஒரு கவர்ச்சிகரமான  பெண், அவள் – வேறென்ன சொல்வது, அவள் … ஸ்லோயேன் நிவாம், அவளை உனக்குத் தெரியுமா?”
“அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.” என்றாள், எமா.
“உனக்கு இந்த ஸ்லோயேன் நிவாமைப் பிடிக்கும், பாரேன்.  வேடிக்கையான பெண். அவளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு உன் ஞாபகந்தான்.”
“ நீ என்னதான் சொல்லவருகிறாய்?”
மறுநாள் விமான நிலையத்தில், ஸ்லோயேன் நிவாமின் நினைவுக்குறிப்புகள் புத்தகம் ஒன்றை அவளிடம் கொடுத்த அவன் சொன்னான், “வாசித்துப் பார், நீயே தெரிந்துகொள்வாய்.”
பாதுகாப்புச் சோதனைக்கான வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போதே அவள் வாசிக்கத் தொடங்கிவிட்டாள். மிசௌரியின் மேல் பறக்கும்போது, நாவலின் பாதிக்கு, ஸ்லோயேன் நிவாமும் அவளது முதலாளிக்குமான ஒரு சண்டை கட்டத்துக்கு வந்துவிட்டாள். நடுவான ஒரு இடை வாக்கியத் தொடர். ஸ்லோயேன் நிவாம் எழுதுகிறாள், “ அவரைக் காதலித்தேனென்று நான் இப்போது சொல்வது தவறான நேரமாக இருக்கலாம். ஆனால், நான் காதலிக்கத்தான் செய்தேன்.” எமா புத்தகத்தை மார்போடு அழுத்திக்கொண்டாள்.
“உங்களுக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?” அருகிலமர்ந்திருந்த பெண் கேட்டாள்.
கன்னத்தைத் துடைத்த எமா, தலையாட்டினாள். அந்தப் பெண்ணிடமிருந்து திரும்பிக்கொண்டாள். சிறு சிறு புட்டிகளாக பல ஸ்காட்ச் புட்டிகளை அவள் விழுங்கியிருந்தாள். அவள் கடுகடுப்பானவளாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதனாலேயே அந்தப் பெண்ணிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்ட அவள், “ எவ்வளவு அழகு, ஹூம்? ஜன்னலுக்கு வெளியே, மிசௌரி. தெரிகிறதா? மிஸ்ஸௌரி? மிசெரி, துயரம். அது அப்படித்தான் – நான் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் துயரத்துக்கு மேலாக மிசெரி – மிசௌரிக்கு மேலாக இருக்கிறேன்.”
அந்தப் பெண்ணுக்கு ஒரு மாதிரி, சங்கடமாகத் தோன்றியிருக்கும் போலத்  தெரிந்தது. அவள் மறுபக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.
ஸ்லோயேன் நிவாம் இரண்டு நாவல்கள் எழுதியிருந்தாள். அவை தற்போது அச்சில் இல்லை. அமேசானில் ஒன்று ஒரு பென்னி + அனுப்புகைச் செலவுக்கும் மற்றொன்று 109 டாலருக்கும் விற்பனையில் இருந்தது. எமா இரண்டையும் அனுப்புமாறு எழுதினாள்.    
கிறித்துமசுக்கு முதல்நாள் புத்தகங்கள் வந்தன. எமா அவளுக்குப் பிடித்தமான ஸ்பெஷல் சாம்பெய்ன் சர்பத் தயாரித்தாள். இரண்டு புட்டிகள் சாம்பெய்னை ஒரு பாத்திரத்தில் கவிழ்த்து, உறைவிக்குள் வைத்து, அரைமணி நேரத்துக்கொரு முறை கலக்கிச் செய்யவேண்டியது, அது. படுக்கையில் படுத்துப் படிக்கும்போது, அவள் சாம்பெய்ன் சர்பத்தைக் குடித்து முடித்தாள்.
ஸ்லோயேன் நிவாமின் முதல் நாவல் மணமான ஒரு மனிதனுடனான அவளது நெடுநாள் தொடர்பு பற்றியது. எமாவால் முடியாத ஒன்றினை நிவாம் எட்டிப் பிடித்திருந்தாள். வேடிக்கையானதென்றும் வசியமென்றும் உலகத்தை நினைக்கவைத்த ஒன்றை, ஒருவரைக் காதலிக்கும் வழியினை அவள் முழுவதுமாகக் கைப்பற்றியிருந்தாள்.
எமாவின் மணமான மனிதன் இதைத்தான் சொல்ல முயன்றானா? எமா அப்படி நினைக்கவில்லை. அந்த நாவல்களை அவன் படித்திருந்ததாக அவள் நினைக்கவில்லை; அப்படியே வாசித்திருந்தாலும், அவனால் அதைப் புரிந்திருக்க இயலாது. அவனைப் பொறுத்தவரை அந்த உறவு என்பது ஒரு தப்பித்தலுக்கான வால்வு. ஆனால் அவளுக்கோ, அது கவிதை. ஒருமுறை அதை அவனுக்கு, இப்படிச் சொல்ல முயற்சித்தாள்,”என் கண்ணில்படுகிற அனைத்திலும், ஒவ்வொரு இழையிலும் நீ இருக்கிறாய். டெனிம் ஆடையில் மூன்று இளைஞர்களைக் காணுகிற போதுங்கூட, ஏற்கெனவேயே நான் அதை உனக்கு விவரித்திருக்கிறேன். அதை எனக்குள் விளங்கிக்கொள்ளும் முன்பாக, உன்னுடனான உரையாடலில் ஈடுபடுகிறேன்.” அதன் பின்னர் ஒரு சில மாதங்களுக்கு  லாஸ் ஏஞ்சல்சுக்குச் செல்வதென்பது அவனால் முடியாத காரியமாக இருந்தது.
ஆனால், ஸ்லோயேன் நிவாம் அதைத் தெளிவாகத் தெரிவிக்கிறாள்; ஏனென்றால் அவள் அவளது மணமான மனிதனைப்பற்றி மட்டுமே வெட்டவெளிச்சமாகப் பேசுகிறாள். அதிலும், அவள் அவளது வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிகளாக விவரிக்கிறாள். பிரான்ஸ் நாட்டில் ஒரு விமான நிலைய கட்டிடத்திற்கு வெளியே பயணச்சீட்டுப் பகுதியில் வழிதவறிப்போன அவள் ஒரு இரவு முழுவதும் நீளமான பெஞ்சு ஒன்றில் அன்றாடக் கூலிக்கு வேலை தேடும் பிரெஞ்சு நாடோடிக் குழு ஒன்றுடன் கழிக்கவேண்டியிருந்தது. அவர்களில் ஒருவன் அவளுக்கு ஆப்பிள் ஒயின் கொடுத்து உபசரித்துவிட்டு மற்றவர்களிடம் சொன்னான்,    ”சாதாரணமாக, மிகச் சாதாரணமாகத்தான் இருக்கிறாள். அவளுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை.” அவளது படுக்கையறைக்குள் நுழைந்து, வெளித்தெரிந்த செங்கல் சுவரில் அமர்ந்த வௌவால் ஒன்றினைப் பற்றியும், அவள் அதை எப்படி வெறுங்கையால் பிடித்து  வெளியே எடுத்தாள் என்பது பற்றியும் சொல்கிறாள். அவளது நாவல் முழுக்க பிறமனை நயந்த உறவினை நியாயப்படுத்துவதாக, பொதுவாக ஒவ்வொருவரும் சொல்வதான – அவன் மணவிலக்கு பெறவேண்டும் அல்லது அவள் அவனை விட்டு விலகவேண்டும் என்ற பொதுப்புத்தி விவகாரத்தை முற்றாக நிராகரிப்பதாக இருந்தது. ஸ்லோயோன் நிவாம் எந்த ஒன்றையும் செய்யவில்லை. நாவலின் முடிவில் அவள், மணமான அவனைக் கேட்கிறாள், “நான் உன்னுடனேயே இருக்கவேண்டுமென்று நீ எப்போதும் விரும்புவாயா?” அவன் சொல்கிறான், “நீயே தான்.”     
அதிகாலை மூன்று மணிக்கு நாவலை முடித்ததும், எமா, மணமான அவனுக்கு நீண்ட ஒரு செய்தியைத் தயாரித்தாள். `அனுப்பு` விசையை அவள் தொட்டபோது, அவளது அலைபேசியின் திரை வெற்றானது.  பிரதானத் திரையிலிருந்து அவள் செய்தித்திரைக்குத் திரும்பினாள். அய்யோ! வரைவுச் செய்தியை அது இழந்திருந்தது.
பின்னர் முதல் இரண்டு வரித்தொடர்கள் மட்டும் உருண்டு திரண்டு வந்தன. அவை சென்று சேர்ந்துவிட்டன என்பதை அவள் புரிந்துகொண்டாள்; ஆனால், மீதிச் செய்திகள் அழிந்துவிட்டனவே! அதிர்ச்சியில் திகைத்துப்போன அவள் அந்த இரண்டு வரிகளை மீண்டும் வாசித்தாள். அவை அநியாயத்துக்குப் பரிதாபமாகத் தெரிந்தன : நான் இவ்வளவு நேரமும் ஒளிபுகா இழைகள், புனிதத் தலங்களை வாசித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன். இப்போதுதான் அதை முடித்துக் கீழே வைத்தேன். அவள், ஒரு பூனைக்குட்டியை விவரிக்கிற இந்த அழகான பகுதி அதிலிருக்கிறது – அவள் ஜோன்”
எமா குழம்பிப்போய்விட்டாள். அவளது வரைவிலிருந்து மேலும் இரண்டு வரிகள் உருண்டு வந்தன: ”நிவாம் – காசியின் தெருக்களில் - இது தாங்கவியலாத வியப்பு. அவள் அங்கே, ஒரு குறுகியகாலப்பணிக்காக,   வந்திருக்கிறாள் - அப்போதுதான் பிரார்த்தனைக்காக”
எமா புரிந்துகொண்டாள். அந்த மணமானவனின் பழைய அலைபேசி அவளுடைய நீண்ட செய்தியினை இருபத்திரண்டு துண்டுப்பகுதிகளாகச் சிதைத்துக்கொண்டிருந்தது. அதைத் தடுத்து நிறுத்தும் திறன் அவளுக்கு இல்லை. பிரான்சிலிருந்த அந்த மணமானவனுக்குச் சென்றுகொண்டிருந்த அவளது நீண்ட வரைவிலிருந்து திரண்டுவந்த மற்றுமொரு துண்டுப் பகுதியை அவள் கவனித்தாள்.
மிரட்சியில், அதை நிறுத்துவதற்காக அவளது அலைபேசியை அணைத்தாள். மின் அடுப்புக்குச் சென்று அதைத் திறந்து, கதவில் சாய்ந்து நின்றாள். அங்கிருந்து குளியலறை தெரிந்தது. அப்படியே அலைபேசியைக் கழிப்பறைத் தொட்டிக்குள் வீசிவிடுவதாகக் காட்சிப்படுத்திப் பார்த்தாள். பின்னர் அலைபேசியின் இயக்கு விசையைத் தட்டிவிட்டுக் காத்திருந்தாள்.
திரையில் காட்சிகள் ஒவ்வொன்றாக உருப்பெறத் தொடங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் இதழ்கள், “ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்” எனத் தவித்தன.
வரைவுகள் உண்மையிலேயே திரண்டுவரத் தொடங்கின.
கங்கை ஆறு, முற்றுமாக சலிப்படையச் செய்வதாக அவள் கருதிய அந்த ஆறும் வாசனைத்திரிகளின் புகையும் உடல்களின் நாற்றமுமாக அவள் அப்போதுதான் இருமிமுடித்திருந்தாள்; பின்னர் அவள்”
”இந்த அன்பைக் கோருகிற, வீடற்ற பூனைக்குட்டியை, சிறிது முடியுடனான தோல் போர்த்தப்பட்ட அந்த ஒல்லிக்குச்சியைக் காண்கிறாள்; அவள் அப்போது அந்த மணமானவனுடன் இருக்கிறாள்; அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வதோடு”
“அது முற்றிலுமான ஒரு பைத்தியக்காரத்தனமாக இருந்தபோதிலும், அதனை எடுத்துச் சென்றேயாக வேண்டுமென்று அவர்களுக்குத் தெரிகிறது. அந்தப் பூனைக்குட்டி வேறு மிகவும், வெறுந்தோலாக மெலிந்து, உண்மையில் பிழைக்கிற நிலையிலா இருந்தது? ஆக”
“ அவர்களுடைய அறைக்கு – அவர்கள் பணத்தைத் தண்ணீராக இறைத்திருந்த, மிக ஆடம்பரமான அறைக்கு அதனை எடுத்துவரும்வரையில் கூட அவர்கள் அதனை உணரவில்லை - அவர்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர”
“விடுதியில், வாயில் காப்பவனுக்கு கையூட்டு கொடுக்கவேண்டியிருந்தது; ஏனெனில், அவர்களுக்கு, உடல் முழுதும் சேறாகியிருந்த அந்தப் பூனையை மறைத்து எடுத்துச்செல்லவேண்டுமென்று தோன்றியிருக்கவில்லை – அந்தப் பூனைக்குட்டியின் முன் கையில்”   
“மூன்று இடங்களில்  முறிவு ஏற்பட்டிருந்தது. அதனால், அடுத்தநாள், அவர்கள் அதனை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள்; அங்கேயுள்ள ஒவ்வொரு அழகான, இனிய இந்திய மருத்துவ”
“மாணவரும் பூனையின் கையில் முறிவு ஏற்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்ள- அவர்கள் மாணவர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் எப்போது முறிவினைத் தெரிந்துகொண்டார்கள் என்பதை நீங்கள் சொல்லமுடியும், எப்படியென்றால்,”
“பூனைக்குட்டி `மியாவ், மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்` எனக் கத்திக்கத்தி அழுதுகொண்டேயிருக்கிறது! ஆக, ஐந்தாவது மருத்துவ மாணவர் அந்தப் பாவப்பட்ட”
“பிறவியின் கையை அழுத்தும்போது, அதோடு நிறுத்திக்கொள்ளும்படி ஸ்லோயேன் இடையில் புகுந்து சொல்லப் போதும்போதுமென்றாகி, ஆனாலும் அந்தச் சித்திரவதை அத்துடன் ஒழிகிறது. அங்கே முழுவதுமாக பசுக்களின் வரைபடங்கள்”
“நிறைந்த சுவர் மற்றும் ஒரு அறுவைசிகிச்சைக்கூடம், பசுக்களுக்கான காப்புக்கவசம் இருக்கிறது. ஆனால், அந்த வரைபடங்கள், சிறுகுழந்தையால் வண்ணமிடப்பட்டதுபோல இருக்கின்றன; அங்கிருந்த மிக அடிப்படைத் தேவையான”
“பொருட்கள், ஆனால் இந்த மாணவர்கள், பசுவின் உட்புறம் செல்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவார்கள் என்பதை உணர்கிறாள். கோட்டு அணிந்த இந்த இளைய ஆண்களும் அறுவைசிகிச்சை நிபுணர்களும் உள்ளே செல்கிறார்கள்”
“ஆக, அவளுடைய பூனையின் கை ஏற்கெனவே முறிந்துபோனதென்பதால், கையை அறுவைசிகிச்சையால் வெட்டியெடுக்க அதன் மயிர்ப்பகுதியைச் மழித்து நீக்கவேண்டியிருக்கிறது. அதனால், அவர்கள் பூனைக்குட்டியை இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ளும்படி அவளிடம் சொல்ல,”
“பூனை பயந்து மிரண்டுபோயிருக்கிறது. அவள் அதன் முதுகினைப் பற்றியிருக்க, நிகழ்ந்ததிலேயே மிக மோசமான அருவருக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்கள் அந்தப் பிராணியின்”
”மேல்தோலை மழிக்கின்றபோது, பூனை கடந்த இருபத்துநான்கு மணி நேரத்தில் ஏதேனும் உணவு உட்கொண்டதாவெனக் கேட்க, ஸ்லோயேன் நிவாமுக்கும் அவள் காதலில் இருந்த அந்த மணமான மனிதனுக்கும்”
அந்த விஷயம் தெரியாமலிருக்க, அதனால் அறுவைசிகிச்சை செய்யமுடியாமலாகி, அவர்கள் அதனை மீண்டும் விடுதிக்கே கொண்டுசெல்ல, ஆனால் அதுவோ   மேற்கொண்டும் அவர்களின் பிடித்திருக்க”
“அனுமதிக்கத் தயாராக இல்லை. அப்புறமாக அதன் முன்கை அகற்றப்பட, அப்படியே அது பிழைத்து வாழ்ந்துவிட இயலுந்தானென்றாலும், அவள் அதனை வீட்டுக்குள் ஒளித்துவைத்துப் பாதுகாக்கவே, அதனாலும் முன்கை இல்லாமலேயே”
”வாழ்ந்துவிட முடிந்தது. ஆனால், ***ஒரு மாதத்திற்குப் பின்னால்** அவள் வேற்றுப்பணிக்காக ஹைதிக்குச் செல்லவிருந்தபோது, அந்த பாவப்ப்பட்ட பிராணிதான் எடுத்துச் செல்லவியலாத”
“கடைசிப் பொருளாக, ஆனால், அதற்காக அவளால் அதனை அப்படியே தன்னந்தனியாக< விட்டுச்சென்றுவிட  இயலாது. அது இறப்பதற்காக காட்டுக்குச் செல்கிறது, பாலைவனத்தில் ஏசுவைப் போல, என அவள் எழுதுகிறாள், நானோ தேம்பித் தேம்பி”
”அழுதுகொண்டிருந்தேன், அழுதுகொண்டிருந்த நேரத்தில் பாருங்கள், நான் ஏற்கெனவேயே சொல்லியிருக்கிறேனே, என் வீட்டிலிருக்கும் அந்தச் சுண்டெலி  அடுப்பைத் தின்றிருக்கிறது. ஆக, விஷயம் என்னவென்றால், சிலவேளைகளில் வாழ்க்கை அவ்வளவு”
‘அழகாக இருக்கமுடியும்.”
காலையில் சாய்மெத்தையில் கண்விழித்தாள், எமா. அவள் அரணக் காலணிகளைக் கூடக் கழற்றியிருக்கவில்லை. நிர்மலமாக அவள் எழுந்தாள்; பின்னர் கடந்த இரவினை நினைத்தாள். அலைபேசியைப் பாய்ந்து எடுத்தாள்.
அதிகாலை 5.15க்கு அந்த மணமான மனிதன், அவளுடைய வரைவு முழுவதற்குமாகச் சேர்த்து, “GOOD TIMES” என இரண்டே வார்த்தைகளில் பதிலளித்திருந்தான். பின்னர் பலமணி நேரங்கள் கடந்தபின், அவன் வரைவனுப்பியிருந்தான்: நான் நாட்டில் இல்லாதபோது, மின்னஞ்சல்தான் சிறந்தது. வருத்தமாகத்தானிருக்கிறது, இருந்தாலும் ரோமிங் கட்டணங்கள் அநியாயத்துக்குப் பைத்தியம் பிடிக்கவைக்கின்றன.X.”  
மலைகள் இணைய இதழ் எண் 100 நாள் ஜூன்ல் 18, 2016 இல் வெளியாகியுள்ளது.  

Download Pdf                                                                                                                                                                                                                                                 http://h       harpers.org/archive/2016/06/fiber-optics-holy-places/   
           மலைகள் இணைய இதழ் எண் 100 

Single Page

nt PageTop of Form