Wednesday 18 July 2018

அமெரிக்கச் சிறுகதை - இனிமை SWEETNES ஆங்கிலம் டோனி மார்ரிசான், தமிழில் ச.ஆறுமுகம்

இனிமை Sweetness அமெரிக்க ஆங்கிலம் : டோனி மார்ரிசான் Toni Morrison – தமிழில் – ச.ஆறுமுகம்.

( அமெரிக்க நாவலாசிரியரான டோனி மார்ரிசான் இலக்கியத்திற்கான அனைத்து அமெரிக்க உயர்விருதுகளையும் 1993ல் இலக்கியத்திற்கான நோபெல் பரிசினையும் பெற்றவர். இதுவரை பன்னிரண்டு நாவல்கள் படைத்துள்ளார். தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள Sweetness சிறுகதை விரிவாக்கப்பட்டு God help the child என்ற பெயரில் நாவலாக வெளிவந்துள்ளது.)
அது என் தப்பல்ல. அதனால் நீங்கள் என்னைக் குற்றம் சொல்லமுடியாது. நான் அதைச் செய்யவில்லை; அது எப்படி நிகழ்ந்ததென்றும் எனக்குத் தெரியாது. என் கால்களின் இடையிலிருந்து அவளை, அவர்கள் இழுத்துப் போட்டு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகியிருக்காதபோதே, ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறதென்று எனக்குத் தெரிந்துவிட்டது. உண்மையிலேயே தவறுதான். நான் பயந்தே போனேன்; அவள் அவ்வளவு கறுப்பாக இருந்தாள். நள்ளிரவு மையிருள் கறுப்பு. சூடானியக் கறுப்பு. நான் மென்னிற மேனியும் நல்ல கூந்தலுமாக, உயர் மஞ்சளென்று சொல்வோமே அப்படி இருக்கிறேன். லூலா ஆனின் அப்பாவும் அப்படியேதான் இருக்கிறார்.
என் குடும்பத்தில் யாரும் மிகச் சிறிதளவிலுங்கூட அந்த நிறத்திற்கு அருகில் கூட இல்லை. நிலக்கரித்தார் தான் அவளுக்கு மிகமிக அருகிலிருக்குமென்று நினைக்கிறேன், ஆனாலும் அவளது தலைமுடி அந்த நிறத்துக்கு ஒத்துப்போவதாக இல்லை. அது வித்தியாசமாக – நீளமாக ஆனால் சுருள்சுருளாக, ஆஸ்திரேலியாவின் நிர்வாணப் பழங்குடிகளின் தலைமுடி போல இருந்தது. அவளொரு ஆதிகாலத் தோற்றத்தின் மீள்பிறப்பு என நீங்கள் நினைக்கலாம், ஆனால், எதன் மீள்பிறப்பு? நீங்கள் என் பாட்டியைப் பார்த்திருக்கவேண்டும்; அவள் வெள்ளை நிறத்தவளாகவே ஒப்புக்கொள்ளப்பட்டாள்; ஒரு வெள்ளை மனிதரையே திருமணம் செய்தாள்; அவளுடைய எந்தவொரு குழந்தையிடமும் பேசவேயில்லை. எனது அம்மா சித்தி மற்றும் பெரியம்மாக்கள், அவளுக்கு எந்தக் கடிதம் அனுப்பினாலும் அதை, உறை பிரிக்காமல், அப்படியே திருப்பியனுப்பினாள்.
அவளிடமிருந்து எந்தச் செய்தியுமில்லையென்ற செய்தியைக் கடைசிகடைசியாக அவர்கள் தெரிந்துகொண்டதோடு அவள் அப்படியே இருக்கட்டுமென்று விட்டுவிட்டார்கள். அநேகமாக எல்லா முலாட்டோ வகையினர் மற்றும் குவாட்ரூன்களும் – அதையேதான் இன்றளவும் திருப்பிச் செய்கின்றனர் – அவர்களுக்குச் சரியான வகையில் தலைமுடி இருந்துவிட்டால் நடப்பு அப்படியேதான். எத்தனை வெள்ளை மனிதர்கள், அவர்களின் நரம்புகளுக்குள் நீக்ரோ இரத்தத்தைக் கொண்டிருக்கிறார்களென உங்களால் கற்பனைசெய்யமுடிகிறதா? யூகித்துப் பாருங்கள்! இருபது விழுக்காடென்பது நான் கேள்விப்பட்டது. என்னுடைய சொந்த அம்மா, லூலா மாயி கூட மிக எளிதில் வெள்ளை இனமென ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பாள்; ஆனால் அவள் அந்தப் பாதையினைத் தேர்வுசெய்யவில்லை.
அவளின் அந்த முடிவுக்காக, அவள் செலுத்திய விலையை என்னிடம் பின்னாளில் அவள் சொன்னாள். அவளும் எனது தந்தையும் திருமணம் செய்துகொள்வதற்காக நீதிமன்றம் சென்றபோது அங்கே இரண்டு பைபிள்கள் இருக்க, நீக்ரோக்களுக்கான பைபிளில்தான் அவர்கள் கைவைக்கவேண்டியிருந்ததாம். மற்றொரு பைபிள் வெள்ளை இனத்தவருக்கானதாம். மகா பைபிள்! அதை உங்களால் வெற்றிகொள்ள முடியுமா? என் அம்மா, ஒரு பணக்கார வெள்ளையின இணையரிடம் வீட்டுவேலை செய்பவளாக இருந்தாள். அவள் சமைத்த உணவினையே ஒவ்வொரு பொழுதுக்கும் அவர்கள் தின்றனர். குளியல் தொட்டிக்குள் அமர்ந்துகொண்டு அவளை முதுகு தேய்த்துவிடச் சொல்வார்களாம்; வெளியில் சொல்லமுடியாத வேறு என்னென்ன அந்தரங்க வேலைகள் செய்யச்சொன்னார்களோ, அது, அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்! ஆனால் அவர்கள் தொட்ட அதே பைபிளை நாங்கள் தொடக்கூடாது.
சமூகக் கூடுகை மன்றங்கள், உள்ளூர் சமுதாய வளாகங்கள், தேவாலயங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் நிறவாரிப் பள்ளிகளிலுங்கூட, தோல் நிறத்தைக்கொண்டு – மென்னிறம் அதிகமாக, அதிகமாக நல்லதென – நாங்கள் குழு பிரிப்பது ஒரு மோசமான விஷயமென உங்களில் சிலர் நினைக்கலாம், அப்புறம் எப்படித்தான் நாங்கள் சிறிய அளவிலான ஒரு ஒற்றைப் பெருமையையாவது தக்கவைத்துக்கொள்வதாம்? மருந்துக்கடையில் காறித் துப்புவதை, பேருந்து நிறுத்தத்தில் முழங்கை மூட்டினால் இடிக்கப்படுவதை, வெள்ளை இனத்தவர் முழு நடைமேடையையும் பயன்படுத்துமாறு விட்டுக்கொடுத்துவிட்டு, சாக்கடையில் இறங்கி நடப்பதை, மளிகைக் கடைகளில் வெள்ளை வாடிக்கையாளர்களுக்கு விலையின்றி இலவசமாக வழங்கப்படும் காகிதப் பைகளுக்கு ஒரு நிக்கல் விலைகொடுப்பதிலிருந்தும் தவிர்க்கப்பட நாங்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? பெயர் சொல்லித் திட்டுவது ஒருபக்கமிருக்கட்டும். அதைப்பற்றியெல்லாம், நான் போதும் போதுமென்கிற அளவுக்கு கேள்விப்பட்டுவிட்டேன்.
என் அம்மாவின் தோல் நிறத்தினால் மட்டுமே, பல்பொருள் அங்காடிகளில் தொப்பிகளை அணிந்து பார்க்கவும், பெண்கள் அறையினைப் பயன்படுத்தவும் அவளை அனுமதித்தனர். அதுபோல எனது அப்பாவும் காலணிக்கடைகளின் பின்புற அறையில் அல்லாமல் முன்புறத்திலேயே, காலணிகளை அணிந்து பார்க்க முடிந்தது. அவர்களில் யாரொருவரும் கூட, தாகத்தால் இறந்துகொண்டிருக்கும் வேளையென்றாலும் `கறுப்பு நிறத்தவருக்கு மட்டும்` என அடையாளமிட்ட குடிநீர்க்குழாய்களிலிருந்து தண்ணீர் குடிக்கமாட்டார்கள்.
அப்படிச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லைதானென்றாலும், மகப்பேற்றுக் கூடத்தில் தொடக்கத்திலிருந்தே, குழந்தை லூலா ஆன் என்னைப் பெரும் சங்கடத்துக்காளாக்கிவிட்டாள். அவளுடைய பிறந்த மேனி, எல்லா குழந்தைகளையும் போலவே ஏன், ஆப்பிரிக்கக் குழந்தைகளையும் சேர்த்துத்தான், வெளிறிய நிறத்திலிருந்தது; ஆனால், வேகவேகமாக மாறிவிட்டது. என் கண்ணெதிரிலேயே அவள் நீலக் கறுப்புக்கு மாறியபோது எனக்குப் பைத்தியம் பிடிப்பதாகவே நினைத்தேன்.
ஒரு கணம் பைத்தியமே பிடித்துவிட்டதை உணர்ந்தேன்; என்னவென்றால் – ஒருசில கண்ணிமை நொடிகள்தாம் – அவளுடைய முகத்திற்கு மேலாக ஒரு போர்வையைக் கொண்டுபோய் அழுத்துவதற்குப் போய்விட்டேன். ஆனால், அவள் அந்த பயங்கரமான நிறத்தில் பிறக்காமலிருந்திருக்கக்கூடாதாவென நான் எந்த அளவுக்கு நொந்துகொண்டேனென்ற போதிலும் என்னால் அதைச் செய்யமுடியவில்லை. அவளை ஒரு அனாதை இல்லம் மாதிரியான ஏதாவது ஒன்றுக்குக் கொடுத்துவிடலாமாவென்றும் யோசித்தேன். ஆனால் தேவாலய வாயிற்படிகளில் குழந்தைகளை விட்டுச்செல்லும் அந்த அம்மாக்களில் ஒருத்தியாவதற்கு நான் மிகவும் கலவரப்பட்டுப் போனேன்.
கொஞ்சநாட்களுக்கு முன்புதான், அடர் கருப்புத் தோலுடன் குழந்தை பிறந்ததெப்படியென யாரும் விளக்கம் சொல்லமுடியாத பனி போன்ற வெள்ளைநிற ஜெர்மானிய இணையர் பற்றிக் கேள்விப்பட்டேன். இரட்டைக்குழந்தைகள் – ஒன்று வெள்ளை, மற்றொன்று கருப்பு என்று நினைக்கிறேன். அது உண்மையா என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை அவளைப் பராமரிப்பதென்பது ஒரு நீக்ரோ பிக்கானின்னி என் முலைக்காம்பில் பால் உறிஞ்சுவது போலத்தான். வீட்டுக்குச் சென்றதுமே அவளுக்குப் புட்டிப்பால் தொடங்கிவிட்டேன்.
என் கணவன், லூயிஸ், ஒரு சுமைதூக்குபவன்.
அவன் ரயில்வே தடுப்புக்கம்பிகளிலிருந்து மீண்டு இங்கு வரும்போதெல்லாம், எனக்குப் பைத்தியம்பிடித்திருப்பது போலவும் குழந்தை ஜூபிடர் கிரகத்திலிருந்து வந்துள்ளது போலும் பார்த்தான். அவனொன்றும் தன்மூப்புப்பிடித்த ஒரு மனிதனல்லவென்றாலும், அவன், “அட, பாழாய்ப்போன கடவுளே, இது என்ன எழவு?“ எனச் சொல்கின்ற போதெல்லாம், நாங்கள் பிரச்னைக்குள்ளாகியிருக்கிறோமென்பதை, நான் புரிந்துகொண்டேன். அதுவேதான் – அவனுக்கும் எனக்கும் இடையில் சண்டைகளுக்குக் காரணமாயிருந்தது. அது எங்கள் திருமணத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டது. நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு நன்றாகவே சேர்ந்திருந்தோம்; அவள் பிறந்தாளோ இல்லையோ, அவன் என்னைக் குற்றம் சொல்லியதோடு, லூலா ஆனை அந்நியளாகவே கருதியது மட்டுமல்ல – எதிரியாகவே பாவித்தான். அவன் அவளைத் தொட்டதேயில்லை.
நான் வேறெந்த ஆணோடும் முட்டாள்தனமாகச் சுற்றித்திரியவில்லை என அவனை நான் சமாதானப்படுத்த முயலவில்லை. நான் பொய் பேசுவதாக அவன் அவ்வளவு நிச்சயமாகக் கருதினான். நாங்கள் வாதத்துக்கு மேல் வாதம் புரிந்து கடைசியில் அவளுடைய கறுப்பு நிறம் அவனுக்கே அவனுக்கான குடும்பத்திலிருந்து வந்ததுதான் – என்னுடையது அல்லவென்று நான் சொல்லும்போதுதான் அது தீயாகி, அவன் சட்டென்று எழுந்ததோடு அப்படியே கிளம்பிப் போக, நான் குடியிருப்பதற்காக வேறொரு மலிவான இடம் தேடவேண்டியதாயிற்று.
என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நான் செய்தேன். வீட்டு உரிமையாளர்களிடம் வாடகைக்கு அறை கேட்டுப் போகும்போது அவளையும் தூக்கிப்போகக்கூடாதென்பதைப் புரிந்துகொள்கிற அளவுக்கு நான் விவரம் தெரிந்திருந்தேன். அதனால் அவளை என்னுடைய பதின் வயது மைத்துனியிடம் கொடுத்துப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றேன். என்னவானாலும் நான், அவளை அதிகமும் வெளியே எடுத்துச் செல்வதில்லை; ஏனென்றால், நான் அவளைக் குழந்தை வண்டிக்குள் வைத்துத் தள்ளும்போது, ஏதாவது நல்லதாக ஒன்றிரண்டு வார்த்தை சொல்லலாமென, அவளைக் குனிந்து பார்ப்பவர்கள் முகஞ்சுளிப்பதற்குமுன் கத்தவோ அல்லது பின்பக்கமாகத் தள்ளாடவோ செய்துவிடுகிறார்கள். அது நோகடிக்கிறது. எங்கள் நிறம் மட்டும் வேறாக இருந்தால் நான் குழந்தை பார்த்துக்கொள்ளும் செவிலியாகியிருப்பேன்.
கறுப்பு நிறமாக இருப்பதாலேயே – நல்ல மஞ்சள் நிறமென்றாலுங்கூட – நகரத்தின் கண்ணியமான ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு பெறமுயற்சிப்பதென்பது மிகமிகக் கடினமானதுதான். முன்னர்த் தொண்ணூறுகளில், லூலா ஆன் பிறந்தகாலத்தில், வீடு வாடகைக்குக் கொடுக்க, அப்படியெல்லாம் வேறுபாடுகாட்டுவதற்கு எதிராகவே சட்டம் இருந்ததென்றாலும், பெரும்பாலான உரிமையாளர்களும் அதைக் கருத்தில்கொள்ளவேயில்லை. உங்களை வட்டத்திற்குள் நுழையவிடாமல் வெளியிலேயே நிறுத்துவதற்கு அவர்கள் ஆயிரம் காரணங்களை உருவாக்கினர்.
திரு.லே விளம்பரப்படுத்தியிருந்ததைக் காட்டிலும் வாடகையில் ஏழு டாலர்களைக் கூட்டிவிட்டாரென்பது எனக்குத் தெரியுமென்பதோடு வாடகை கொடுப்பதற்கு ஒரு நிமிடம் தாமதமாகிவிட்டாலும் வலிப்பு வந்த மாதிரி கத்தத் தொடங்கிவிடுவாரென்ற போதிலும் நான் கொடுத்துவைத்தவள்தான்.
என்னை அம்மா என்றோ, மா என்றோ அழைக்காமல் `இனிமை` என்று அழைக்குமாறு அவளுக்கு நான் கூறினேன். அது அதிக பாதுகாப்பானது. அவள் கறுப்பாயிருப்பதும் நான் நினைப்பதுபோல் அவளது உதடுகள் பருமனாக இருப்பதும், அவள் என்னை அம்மா என அழைப்பது மற்றவர்களைக் குழப்பத்திலாழ்த்திவிடும். அதுமட்டுமில்லாமல், நீலச்சாயலில் காக்கைக் கறுப்பு நிறமாக, மாறுபாடாகத் தெரிந்த அவளது கண்களில் சூனியம் மாதிரியான ஏதோ ஒன்றிருப்பதாக வேறு தோன்றியது.
அதனால், நாங்கள் இருவர் மட்டுமேயென நீண்டகாலமிருந்தோம்; கைவிடப்பட்ட மனைவியாகக் காலம்கழிப்பது எத்துணை கடினமானதென்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. எங்களை அப்படிக்கப்படியே விட்டுவிட்டு விலகிச்சென்றபின்னர், லூயிஸ் சிறிது உறுத்தலாக உணர்ந்திருக்கவேண்டும்; ஏனெனில் ஒருசில மாதங்கள் கழிந்ததும், நான் பணம் அனுப்புமாறு கேட்கவோ அல்லது நீதிமன்றத்தை அணுகவோயில்லாதபோதும் நான் எங்கே தங்கியிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, மாதத்திற்கொருமுறை பணம் அனுப்பத் தொடங்கினான்.
அவனுடைய ஐம்பது டாலர் பணவிடைகளும் மருத்துவமனையில் நான் செய்த இரவுப்பணியுமாக எனக்கும் லூலா ஆனுக்கும் நல்வாழ்வுப்பணத்தைத் தந்தன. அது ஒரு நன்மையான விஷயம். அதை நல்வாழ்வுப்பணமெனக் கூறுவதை நிறுத்திவிட்டு என் அம்மா, குழந்தையாக இருந்தபோது அதனை எப்படி அழைத்தார்களோ அந்தச் சொல்லைப் பயன்படுத்தவேண்டுமென நான் நினைத்தேன். அப்போது, அது `நிவாரணம்` என வழங்கப்பட்டது. அந்தப்பெயரே, இருவரும் ஒன்றிணைவதற்கிருக்கும் காலகட்டத்தில் உயிர் மூச்சுக்காகக் குறுகிய காலத்துக்கான ஒன்றாக, நன்றாக இருப்பது போலிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த நலத்துறை எழுத்தர்கள் எச்சிலுக்கும் கீழானவர்களாக இருக்கின்றனர். கடைசியில் எனக்கு வேலை கிடைத்து அந்தப்பணம் எனக்குத் தேவையில்லாமற் போகுமளவுக்கு, அவர்கள் ஒருபோதும் பெற்றேயிருக்காததற்கும் அதிகமாக நான் சம்பாதித்தேன்.
அவர்களுடைய கஞ்சத்தனமான ஊதியக் காசோலையில்தான் அவர்களுடைய இழிநிலை நிரம்பிவழிகிறது. அதனால் தான் அவர்கள் எங்களைப் பிச்சையெடுப்பவர்களிலும் கேவலமாக நடத்தினரென நான் நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக அவர்கள் லூலா ஆனைப் பார்த்துவிட்டு, என்னை ஒரு பார்வை பார்ப்பார்கள், பாருங்கள் – நான் என்னவோ ஏமாற்ற அல்லது அதுமாதிரியான ஏதோ ஒன்றினைச் செய்ய முயற்சிப்பது போல. அப்போது கொஞ்சத்துக்குக் கொஞ்சம் பரவாயில்லாமலாகியிருந்தாலும் நான் மிகவும் கவனமாகவே இருக்கவேண்டியிருந்தது. மிகமிகக் கவனமாக இருந்து அவளை வளர்த்தெடுத்தேன். நான் கண்டிப்புடன், மிகவும் கண்டிப்புடன் இருக்கவேண்டியிருந்தது. பொதுவில், லூலா ஆன் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்றும் தலையை எப்படித் தொங்கப்போட்டுக் கொள்வதென்றும் தொந்தரவு ஏற்படுத்தாமலிருப்பது எப்படியென்றும் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.
அவள் தனது பெயரை எத்தனை முறை மாற்றிக்கொண்டாளென்பது எனக்கு ஒரு விஷயமேயில்லை. அவளது நிறமென்பது அவள் எப்போதும் சுமந்தேயாகவேண்டிய சிலுவை. ஆனால், அது என் தவறு அல்ல. என் தவறு இல்லவேயில்லை
ஓ! ஹ்ஹோ, லூலா சின்னவளாக இருக்கும்போது நான் அவளை எப்படி நடத்தினேன் என்பது குறித்து சிலநேரங்களில் எனக்குப் பெருத்த வலி ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்; நான் அவளைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. அவளுக்கு உலகம் தெரிந்திருக்கவில்லை.
அப்படியான தோல் இருக்கும்போது உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலுங்கூட நீங்கள் அதில் திடமாக இருந்துவிடவோ அல்லது அதனை வெளிக்காட்டிவிடவோ முடியாது. அதுவும் பதிலுக்குப் பதில் பேசியதற்காக, அல்லது பள்ளியில் சண்டையிட்டதற்காக சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிடக்கூடிய சூழ்நிலை நிலவுகிற ஒரு உலகத்தில், கடைசி நபராக பணிக்குச் சேர்க்கப்பட்டு, முதல்நபராக வெளித்தள்ளப்படவிருக்கும் உலகத்தில் முடியவே முடியாது.
அதுபற்றியெல்லாமோ அல்லது அவளது கறுப்புத் தோல் வெள்ளை மனிதர்களை எப்படிப் பீதிகொள்ளச்செய்யுமென்றோ அல்லது நகைக்கச் செய்யுமென்றோ அல்லது விளையாட்டுக்காட்டி ஏமாற்ற முயற்சிக்கவைக்குமென்றோ அவளுக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை, லூலா ஆனைப்போலவே இருட்டு நிறத்துக்குக் கொஞ்சம் கூடக் குறையாத, பத்து வயதுக்கு மேற்பட்டிருக்காத ஒரு சிறுமி, கூட்டமாக நின்ற வெள்ளைச்சிறுவர்களில் ஒருவனால் தட்டிவிடப்பட்டதையும் அவள் தடுமாறி எழுந்து நிலைநிற்க முயற்சிக்கும்போது இன்னொருவன் அவளின் பின்பக்கத்திலேயே காலால் உதைத்து மீண்டும் அப்படியே குப்புறத் தள்ளியதையும் பார்த்தேன்.
அந்தப் பயல்கள் குனிந்து, வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கமுடியாமல் சிரித்தனர். அந்தக் கறுப்புச்சிறுமி அங்கிருந்து அகன்றபிறகும், அந்தப் பையன்கள் பெருமிதத்தோடு புளகாங்கிதம் காட்டிக்கொண்டிருந்தனர். நான் பேருந்திலிருந்து சாளரம் வழியாக அதைப்பார்த்தேன்; அப்படியில்லாமல் நான் அந்த இடத்திலேயே இருந்திருந்தால், அந்த வெள்ளைக்கும்பலிடமிருந்து அவளை இழுத்துக் காப்பாற்றியிருப்பேன். தெரிந்துகொள்ளுங்கள், நான் மட்டும் லூலா ஆனுக்குச் சரியாகப் பயிற்சியளிக்காமலிருந்தால், தெருவின் குறுக்காக எப்படிக் கடந்து செல்லவேண்டுமென்பதையும் வெள்ளைப் பையன்களை எப்படித் தவிர்ப்பதென்பதையும் அவள் தெரிந்திருக்கமாட்டாள். ஆனால் அவளுக்கு நான் கற்றுக்கொடுத்த பாடங்கள் பலன் அளித்து, இப்போது நான் ஒரு மயிலைப்போலத் தலைநிமிர்ந்து நடக்குமாறு என்னைப் பெருமைப்படச் செய்திருக்கிறாள்.
நான் ஒரு மோசமான அம்மா இல்லையென்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்; என் குழந்தை நோகும்படியான சில விஷயங்களைச் செய்திருக்கலாம் தான்; அது ஏனென்றால், நான் அவளைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டியிருந்தது. ஆம் அப்படித்தான். எல்லாமே இந்த நிறப் பிரிவினை, உயர் உரிமையினால்தான். முதலில் அந்தக் கறுப்பு முழுவதையும் கடந்துவிட்டு அவள் யாரென்பதைப் பற்றிக் கருதிப்பார்க்கவோ, வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவளை வெறுமனே நேசிக்கவோ என்னால் முடியவில்லைதான்; ஆனாலும் அவளை நான் நேசித்தேன். எந்தவிதப் பிடிப்புமற்ற வெறும் அன்பு. உண்மையிலேயே நான் அப்படி அன்புகொண்டேன். அதை அவள் இப்போது புரிந்துகொள்வாளென நினைக்கிறேன். அப்படித்தான் நான் நினைக்கிறேன்.
இப்போது, கடைசியாக அவளைப் பார்த்த இரண்டு முறையும் நல்ல தெளிவாக இருந்தாள்; துணிச்சலும் தன்னம்பிக்கையும் மிக்கவளாக. அவள் என்னைப் பார்க்க வருகிற ஒவ்வொருமுறையும் எப்படியொரு கறுப்பாக அவள் இருந்தாளென்பதை நான் மறந்துபோகிறேன். ஏனென்றால், அவள் அழகழகான வெள்ளைநிற ஆடைகளை அணிந்து அந்தக் கறுப்பினையே ஒரு அனுகூலமாக மாற்றிக்கொண்டுவிட்டாள்.
வாழ்க்கை முழுவதற்குமாக நான் தெரிந்துகொள்ளவேண்டிய பாடத்தை அவள் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாள். குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்க்கிறீர்களென்பது தான் பேசுகிறது. அவர்கள் ஒருபோதும் மறந்துவிடமாட்டார்கள். பிரிந்துசெல்கிற நேரம் வந்ததுமே அவள், அந்த மோசமான அடுக்ககத்தில் என்னைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். என்னைவிட்டு அவளால் எவ்வளவு தூரம் தள்ளிப்போகமுடியுமோ, அப்படியான ஒரு தூரத்துக்குத் தன்னை முழுவதுமாகத் திரட்டி எழுந்துகொண்டு, கலிபோர்னியாவில் ஒரு பெரிய வேலை கிடைத்துச் சென்றிருக்கிறாள். இனிமேல் என்னைப் பார்க்க அடிக்கடி வரமாட்டாள்; தொலைபேசுவதும்கூட இல்லைதான். ஆனால், அவ்வப்போது என்றில்லை, அடிக்கடி, பணமும் தேவையான பொருட்களையும் அனுப்பிக்கொண்டிருக்கிறாள். அவளைப் பார்க்காமல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி இருக்கப்போகிறேனென்றுதான் எனக்குத் தெரியவில்லை.
நகரத்திற்கு வெளியே இருக்கின்ற அதிகம் செலவுபிடிக்கின்ற மருத்துவ மனைகளைவிட, இந்த இடம் – வின்ஸ்டன் ஹோம் – எனக்குப் பிடித்திருக்கிறது. இது சிறியது; வீடு மாதிரியானது; செலவும் குறைவு.
இருபத்து நான்கு மணி நேரச் செவிலியர்கள் மற்றும் வாரத்துக்கு இருமுறை வந்து கவனிக்கும் ஒரு மருத்துவர். எனக்கு இப்போது அறுபத்து மூன்று தான் – காடு போய்ச்சேர மிகக் குறைந்த வயது – ஆனால் பற்றிப்பிடித்துக்கொண்ட ஏதோ ஒரு எலும்பு நோயினால் படுத்துவிட்டேன். அதனால் தொடர்ந்து நல்ல சிகிச்சையும் கண்காணிப்பும் அவசியமாகிவிட்டது.
வலி, வேதனை, பலவீனம் எல்லாவற்றையும் விட சலிப்பு தான் மிகக் கொடியதென்றாலும், செவிலிகள் அன்பாயிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி, நான் பாட்டியாகப் போவதைச் சொன்னதும் என் கன்னத்திலேயே முத்தமிட்டுவிட்டாள். அவளுடைய முக மலர்ச்சியும் அவளது வாழ்த்து மொழிகளும் முடிசூடிக்கொள்ளப் போகும் ஒரு நபருக்குப் பொருத்தமானது. லூலா ஆனிடமிருந்து நீலநிறத் தாள் ஒன்றில் எனக்கு வந்திருந்த செய்தியினை அவளிடம் காட்டினேன் – நல்லது, லூலா அதில் மணப்பெண் என்ற பொருளில் `பிரைட்` எனக் கையொப்பமிட்டிருந்தாள். ஆனால், எனக்கு அதிலொன்றும் கவனம் இல்லை. அவளுடைய சொற்கள் கிறங்கவைப்பதாக இருந்தன. “என்னவென்று யூகித்துக்கொள்ளுங்களேன், எஸ் (இனிமை). இந்தச் செய்தியை உங்களுக்குச் சொல்வதில் நான் மிகமிக, மிகமிக மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. நான் மிகவும், மிகவும் என்றால் இன்னும் மிகவுமான ஒரு பரவசத்திலிருக்கிறேன்; நீங்களும் அப்படியே பரவசமாவீர்களென நம்புகிறேன்.” அவள் குழந்தையை நினைத்துத்தான் பரவசம் கொள்கிறாள், அதன் அப்பாவை நினைத்து அல்லவென்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
அது எப்படி என்றால், அவனைப்பற்றி அவள் எதுவுமே குறிப்பிடவில்லையே! அவளைப் போலவே அவனும் கறுப்பாயிருப்பானோ! அப்படியிருந்தாலும் அவள் என்னளவுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை. என் சிறுவயதுக்காலத்தைவிட இப்போது எவ்வளவோ மாறியிருக்கிறது. கறுப்பு, நீலக்கறுப்பு எல்லோருமே தொலைக்காட்சி, பண்பாட்டு ஊடகங்கள், கவர்ச்சி இதழ்கள், வணிக விளம்பரங்கள், ஏன், திரைப்பட நடிகர்களில் கூட எல்லாவிடத்திலும் இருக்கிறார்கள்.
உறையில் திருப்புமுகவரி எழுதியிருக்கவில்லை. நல்ல ஒரு நோக்கத்திற்காக, உண்மையில் சொல்லப்போனால் நான் அவளை வளர்த்த அந்த அவசியமான முறைமைக்காக இப்போதும் கெட்ட தாயாகவே, செத்துத்தொலைகிறவரை இப்படியே தான் இருந்தாக வேண்டுமோ! எனக்குத் தெரியும், அவள் என்னை வெறுக்கிறாள். எங்களுக்கிடையிலான உறவென்பது வெறுமே பணம் அனுப்புவதென்பதாகக் கீழிறங்கிப்போனது. அவள் அனுப்புகிற பணத்துக்காக நான் நன்றியோடிருப்பதாகச் சொல்லித்தானாகவேண்டும். ஏனெனில் வேறு சில நோயாளிகளைப் போல, நான் என்னுடைய கூடுதல் தேவைகளுக்காகப் பிச்சையெடுக்கத் தேவையில்லையல்லவா! சாலிட்டேர் தனி விளையாட்டுக்குப் புதிய சீட்டுக்கட்டு வாங்க விரும்பினால் வாங்கிக்கொள்ள முடியும்; லவுஞ்ச் ஓய்வறையில் அழுக்காகிக் கிழிந்துபோன சீட்டுகளைவைத்து விளையாடத் தேவையில்லை. அதோடு, எனது முகத்துக்கான சிறப்பு க்ரீம் வாங்கிக்கொள்ளமுடியும். ஆனாலும் என்னை முட்டாளாக்கிவிட முடியாது. அவள் எனக்குப் பணம் அனுப்புவதென்பது ஒரு வகையில் என்னைவிட்டு விலகியிருப்பதற்கும், அவளிடம் மீதமிருக்கும் சிறிதளவு மனச்சாட்சியின் உறுத்தலைச் சாந்தப்படுத்திக்கொள்வதற்கும் தான் என்பது எனக்குத் தெரியும்.
நான் எரிச்சலில் நன்றியில்லாமல், புலம்புகிறேனென்றால், அதில் பாதிக்கும் மேலான காரணம் அதன் கீழிருக்கும் கழிவிரக்கந்தான். அவையெல்லாம் நான் செய்யாத, அல்லது தவறாகச் செய்த சிறு விஷயங்கள்தாம். அவளது முதல் மாதவிடாயின்போது நான் எப்படி நடந்துகொண்டேனென்பது என் நினைவுக்கு வருகிறது. அவள் தடுமாறியபோது அல்லது ஏதோ ஒன்றைத் தவறவிட்டபோது நான் கத்திக்கூச்சலிட்ட நினைவுகள். உண்மை. நான் மிகவும் குழம்பிப் போயிருந்தேன், அவள் பிறந்தபோது அவளது கறுப்புத்தோல் என்னைக் கவிழ்த்துவிட்டிருந்ததோடு எனக்குத் தோன்றிய முதல் எண்ணம் ……. வேண்டாம். அந்த நினைவுகளையெல்லாம் முழுவதுமாக, நான் துடைத்தெறியவேண்டும். அவற்றை நினைத்துப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. அன்றைய சூழ்நிலையில் அவளுக்கு நல்லனவற்றில் சிறந்தவற்றைச் செய்திருக்கிறேன். என் கணவன் எங்களைவிட்டு ஓடிப்போனபோது, லூலா ஆன் எனக்கு ஒரு பாரமாகவே இருந்தாள். அது கழுத்தை முறிக்கிற ஒரு பெரும்பாரம். ஆனால், நான் அதை நன்றாகவே தாங்கிக்கொண்டேன்.
ஆமாம். நான் அவளிடம் கடுமையாகத்தான் நடந்துகொண்டேன். நான் அப்படித்தான் இருந்தேனென்று நீங்கள் பந்தயம் கூடக் கட்டுவீர்கள். அவள் பன்னிரண்டிலிருந்து பதின்மூன்றாகின்ற போது நான் இன்னுங்கூடக் கடுமையாகத்தானிருந்தேன். அவள் பதிலுக்குப் பதில் பேசினாள்,. நான் சமைத்ததைச் சாப்பிட மறுத்தாள்; தன் தலையைக் குலைத்துக்கொண்டாள். அதை நான் வாரிப் பின்னல் போட்டபோதும், பள்ளிக்குச் சென்றதும் அதைக் கலைத்துக்கொண்டாள். அவள் எப்படியோ போகட்டுமென்று நான் விட்டுவிடமுடியாது. நான் மூடியை இடைவெளியில்லாமல் நன்கு இறுக்கிப் பூட்டியதோடு அவள் எப்படியெல்லாம் பெயர் சூட்டித் திட்டப்படுவாளென்றும் அவளை எச்சரித்தேன். என்னுடைய கற்பித்தல் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கும். பாருங்கள், இப்போது அவள் எப்படி மாறியிருக்கிறாள்? நல்ல வேலையிலிருக்கிற ஒரு பணக்காரப் பெண். நீங்கள் அதை மறுத்துவிட முடியுமா?
இப்போது அவள் கருவுற்றிருக்கிறாள்.
நல்ல நடவடிக்கை, லூலா ஆன். பிள்ளை வளர்ப்பதென்பது வெறுமே கொஞ்சுவதும் காலணி மற்றும் இடைத்துணி மாற்றுவதென நீ நினைப்பாயானால் ஒரு பெரிய அதிர்ச்சி உனக்குக் காத்திருக்கிறது. பெரியதாகவே. நீயும் பெயரில்லாத உன்னுடைய ஆண் தோழன், கணவன், ஆள் – யாராக இருந்தாலும் – கற்பனைசெய்கிறீர்கள், ஓஒஒஹ்! ஒரு குழந்தை! கிச்சிக் கிச்சிக்கூ!
நான் சொல்வதைக் கேளுங்கள். உலகம் எப்படி இருக்கிறது, அது எப்படி இயங்குகிறது என்பதோடு நீங்கள் பெற்றோராகும்போது அது எப்படி மாறுகிறது என்பதையும் நீங்கள் கண்கூடாகக் காணப்போகிறீர்கள்.
நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கட்டும், கடவுள் குழந்தைக்கு உதவட்டும்
மலைகள் 149 நாள் 03.07.2018 இல் வெளியானது. 

No comments:

Post a Comment