Showing posts with label தென்கொரியச் சிறுகதை. Show all posts
Showing posts with label தென்கொரியச் சிறுகதை. Show all posts

Thursday, 15 February 2018

தென்கொரியச் சிறுகதை - மலையை விட்டுச் செல்லுதல் Leaving the mountains

மலையை விட்டுச் செல்லுதல் (Leaving the Mountains) கொரியமொழி : கிம் சியாங் டாங் (KIM SEO`NG – DONG), தென்கொரியா ஆங்கிலம் : ஜான் எம். ஃப்ராங்க்ல் (John M Frankl) / தமிழில் ச. ஆறுமுகம்.


download (10)
எனது முதல் விழிப்புணர்வினை நினைவுகொள்கிறேன்.
ஆம். மலைகளின் நடுவே அந்த ஆழமான பள்ளத்தாக்கு என் நினைவுக்கு வருகிறது. அது இளவேனிற்காலம்; அடர்ந்து வளர்ந்திருந்த மரஞ்செடிகொடிகள் அனைத்துமே ஆழ்ந்த பச்சைநிறத்தை வாரிப் பூசிக்கொண்டிருந்தன. வியப்பின் ஆழப்பெருமூச்சு ஒன்றினை வெளிப்படுத்தி, என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில், பரந்த வானத்தைப் பயமுறுத்துவது போல் ஓங்கி வளர்ந்திருந்த அந்த ஓக் மரத்தின் அடிப்பாகத்தை என் இருகரங்களாலும் பற்றிக்கொண்டேன்.
அனைத்தும் நெடுங்காலமாக அப்படிக்கப்படியே இருந்துவருவதான உணர்வு. மலையின் மிக ஆழமான பள்ளத்தாக்கு, பாய்ந்தோடும் கானாறுகள், வண்ண வண்ணமாக, அனைத்து வண்ணங்களிலும் தலைவிரித்து, வேனில் சுமக்கும் மரஞ்செடிகொடிகள், எங்கெங்குமாகக் கேட்கும் வினோதப் பறவையொலிகள்,
மண்ணுலகத்திலிருந்து வேறு எவருமே இல்லை; ஆனாலும் என் இதயத்திற்குள் புத்தரைக் காணமுடியவில்லை. நிலைமையை இன்னும் கடினமாக்கிக் கதிரும் மறைந்துபோக, மீண்டுமொரு இரவு வந்தேவிட்டது; நாளின் அந்த நேரத்தைக் கழிப்பதில் எனக்குக் குறிப்பிட்டதொரு கடும் பிரச்னை இருந்தது. மலைக்கென்ன, அது என்றென்றைக்கும் அமைதிப்புன்னகை வீசும், ஆனால் எனக்குத் தெரியும், அங்கேயே நின்று, அலைந்துதிரியும் ஊசலாட்டத்திலேயே நான் மற்றுமொரு நாளினை வீணாக்கிவிட்டேன். என் இளமைப்பருவத்திலேயே, நான் ஒருநாள் திடீரெனப் போதிமனத்தின் அழகொளியைப் பெறுவேனெனச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்;
அதனாலேயே துறவியாவதற்காக மலைகளுக்குள் வந்துவிட்டேன். அதிலும் குறிப்பிட்ட இந்த நாளில், நான் எவ்வளவுதான் முயற்சியெடுத்து எவ்வளவு உயரம் ஏறினாலும் மலையின் உச்சி கண்ணுக்குத் தென்படவேயில்லை. அது தென்படாமலிருப்பது என்னை மேலும் மேலும் முயற்சியெடுத்து இன்னும் உயரத்திற்கு ஏறச் செய்யவேண்டியதுதான் நியாயமென்றாலும், மற்றுமொரு பகல்பொழுது வீணாகக் கழிந்ததில், என்னால் செய்யக்கூடியதெல்லாம் இம்மண்ணுலகப் பாவங்களால் கறைபடிந்த இந்த உடலத்தைக் கீழே சாய்க்க ஒரு இடத்தைத் தேடுவதுதான்.
நான் குந்தியமர்ந்து, நாடிக்குத் தாங்கலாகக் கால் மூட்டுகளைக் கொடுத்தேன். பின்பு நான் `குவான் சேயும் போசால்` (கருணை மிக்க போதிசத்துவரே) என அழைத்துப் பழக்க தோஷத்தில் அவரது புனிதப் பெயரை மீண்டுமொருமுறை உச்சரித்தேன். நான் முழுவதுமாக மனச்சோர்வுற்றிருந்தேன்.
நான் துறவியாக இல்லாதிருந்தால், சாதாரண மனிதன் ஒருவனைப் போல வண்ண ஆடைகளும் மழிக்கப்படாத நீண்ட தலைமுடியுமாக இருந்தால், என்னால் ஒரு சிகரெட் புகைக்கமுடியும் என்பதோடு அறியாமையைப் போல அதன் முனையிலிருந்து எழும் புகைச்சுருள்களில் என் துயரம்படிந்த மனத்தினை ஒரு கணமாவது ஆற்றிக்கொள்ளமுடியும்.
ஆனால், மீன், இறைச்சி, மது மற்றும் புகையிலையை பிளேக் நோயைப் போல விலக்கவேண்டிய புத்தத் துறவியாகிய நான், அங்கே அமைதியாக உட்கார்ந்து அனைத்து புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் பெயர்களை வெறுமனே உச்சரிப்பதில் தான் ஆறுதல் காணமுடியும்.
இருட்டில் அந்தப் பாதையில் ஊர்ந்தாவது சென்றுவிடத்தான் நான் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தேன். அந்த மலைத்தொடரில் எங்கேயோ ஓரிடத்தில் வசிப்பதாகச் சொல்லப்படுகிற மகா குரு ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தேன். அதற்காகவே மலையேறும் நான் அவரது தோற்றத்தைப் பற்றிச் சிறிது கேள்விப்பட்டிருக்கிறேன்.
முதல் பார்வைக்கே, அவரது தடந்தோள் உடலமைப்பு மற்றும் நிமிர்ந்த பெருநடைப் பாவனை காரணமாக, அவர் மலைகளில் தனித்து ஒதுங்கி வசிக்கும் காவித்துறவி போலன்றிப் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட போர்ப்படையினை நடத்தும் தலைமைத்தளபதி போலவே பெரிதும் தோன்றுவார். அப்புறம், அவரது கண்கள் இருக்கவே இருக்கின்றன;
புலியினுடையதைப் போன்ற அவரது கண்களில் தெறிக்கும் நெருப்பொளியினை நோக்கும் எந்த மனிதனானாலும் சரி, தானாகவே தலைகுனிந்து வணங்குவான். அவரது இடியொலிக் குரலின் அதிர்வு சிங்கத்தின் முழக்கத்தை ஒத்து, கேட்பவரின் செவிப்பறையை, வெடிச்சத்தமாகத் துளைத்துக் கிழிக்கும்.
அவரது வயதினைப் பொறுத்தவரையில், சராசரி உலகினரின் கணக்குப்படி அவரது வயது 71. ஆனால், அவர் மிக இளமையிலிருந்தே அவரது முழு வாழ்க்கையினையும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து, பாவக்கறையற்ற அவரது மாமிச உடலினை புத்தர் மற்றும் லாவோஜியின் போதனைகளுக்கே அர்ப்பணித்துள்ளார். அவரது குருவின் போதனைகளின்படி மட்டுமே மனம் மற்றும் உடலினை இயக்குகிறார். இந்த 71 வயதிலுங்கூட அவர் அந்த போதனைகளிலிருந்து ஒரு மயிரளவு அகலம் கூட விலகியதேயில்லை.
யுக, யுகங்களுக்கும் அவரே உண்மையான ஒரு குருவாகத் திகழ்கிறார். அது மட்டுமல்ல. அவர் பெற்றிருக்கிற புத்தொளியறிவு எவ்வளவுக்கு மேம்பட்டதென்றால், இந்த உலகின் அனைத்து வழிமுறைகளும் எல்லையற்ற அண்டப்பெருவெளியின் அனைத்தியக்கக் கொள்கைவிதிகளும் – பிறரால் கணிக்கக்கூட முடியாத, எக்காலத்திற்கும், எல்லா இடம், பொருளுக்கும் பொருந்துவதும் பெரும் புதிர்களாகத் தோற்றமளிப்பவற்றையுங்கூட – அவர் அறிவார்.
ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால், மேன்மைக்குரியதும் அழகானதுமான அவரது பெயரினை ஒருவர் கேள்விப்படுவதென்பது எப்போதுமே வதந்தி வடிவத்திலேயேயிருக்கிறது. அவரது பேரழகுத் தோற்றத்தைக் கண்ணால் கண்டவரோ அல்லது பிரவாகமாய்ப் பொங்கிவரும் அவரது உரைகளைத் தம் காதால் கேட்டவர்களோ யாருமே இல்லை.
அதுபோலவே அவரது கருணைமிக்க வழிகாட்டுதலில் புத்தொளியறிவினைப் பெற்றவர்கள் எவருமேயில்லை. ஆனாலும், வினோதம் பாருங்கள், அவரது தோற்றம் குறித்த கதைகளும் அவரது போதனைகளும் மலைகளிலிருந்தும் இறங்கி, மக்களை வந்தடைந்துள்ளதுடன் மண்ணுலகின் பாவங்கள் நிறைந்த தெருக்களில் அவற்றை எல்லோராலும் கேட்கமுடிகிறது.
அவரது பெயர் `ஒற்றைவிரல்`. அவரொன்றும் அப்படிக் கூப்பிடுமாறு யாரிடமும் வேண்டிக்கொள்ளவில்லை; சொல்லப்போனால் யாராவது அவரிடம் `நல்வழி` பற்றிக் கேட்கும்போது எதுவும் சொல்லாமல் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியதால்தான் அப்படியொரு பெயரைப் பெற்றார். போதாக்குறைக்கு, அவர் ஒரு விரலை வேறு இழந்திருந்தார். அதைப்பற்றி ஒரு கதைகூட இருக்கிறது.
அவர் ஒரு குருவின் வீட்டில் தங்கி, இளம் பயிற்சித் துறவியாகப் பணிவிடைகள் செய்திருந்த போது, வெளியே சென்றிருந்த அவரது குருவைச் சந்தித்து வணக்கம் செலுத்திச் செல்வதற்காக, அலைந்து திரியும் துறவி ஒருவர் வந்திருந்தார். துறவியை வரவேற்ற அவர், என்ன விஷயமாக அவர் வந்திருக்கிறாரென வினவினார். முதிய குருவின் அறிவுரைகளைக் கேட்பதற்காக வெகுதூரம் பயணித்து வந்திருப்பதாக, அவர் தெரிவித்தார்.
குரு எப்போது திரும்பிவருவாரென்று சரியாகச் சொல்வதற்கு எந்த வழியுமில்லையென துறவியிடம் அவர் கூறினார். நேரம் தவறிப் போனதற்கு ஏதோ காரணத்தை முனகிக்கொண்ட துறவி உதட்டைச் சுழித்து, சுச்சுச்சூவென இச்சுக் கொட்டியபோது, அவரது முகம் சோர்விலிருந்து துயரம்மிக்கதாக மாறியது. பயிற்சித்துறவி, விருந்துத் துறவியிடம் ஏன் மிகக் கவலையாகத் தோன்றுகிறீர்களெனக் கேட்க, வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு, குருவிடம் `நல்வழி` குறித்துக் கேட்க வந்ததாக, மிகுந்த துயரத்துடன், கூறினார். பயிற்சித்துறவி, பொங்கிவந்த சிரிப்பினை அடக்க மேற்கொண்ட கடினமுயற்சியில் குடற்காற்று ஒன்று அவர் அறியாமலே பறிந்து வெளியேறியது.
இந்த அலைந்து திரியும் துறவிகள் நாள் தவறாமல் வரிசையில் வந்து அதே கேள்வியைக் கேட்கவும், நாளும் அவரது குரு அமைதியே காத்து ஒற்றைவிரலை உயர்த்திக் காட்டுகிறார். `நல்வழி` குறித்த இந்தக் கேள்விக்கு நூறுமுறையென்றாலும் திடமுடன் பதில்சொல்லத் தேவையானதை பயிற்சித்துறவி அறிவார். அமைதியும் மாட்சிமையும் கொண்ட தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிய, பயிற்சித்துறவி அவர் பார்த்திருந்த புத்தர் சிலைகளின் பத்மாசனத்தில் கால்களை மடக்கி அமர்ந்து, துறவியிடம் `நல்வழி`
எதுவெனக் கேட்குமாறு கூறினார். துறவி வாயடைத்துப் போனாரென்றாலும் பயிற்சித்துறவியின் சீர்மைத்திறம் அவரை ஆட்கொண்டது. பற்பல முதுநிலைத்துறவியருக்கு ஒரு இளம் விறகுவெட்டியின் இசைக்குழலொலியில் ஏற்பட்ட திடீர் விழிப்புணர்வினை அல்லது மிருகங்களின் விளையாட்டினை லயித்துப் பார்த்திருக்கும்போது ஐயுறவுகளெல்லாம் அற்றுப்போனதை அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.
`நல்வழி`யைத் தேடி வெகுதூரம் பயணித்து வந்திருந்த அ
வர், பிறரொருவரின் வயதினை வைத்துத் தீர்ப்புகளை உருவாக்கக்கூடாது என்பதை நன்கு அறிவார். தனது முட்டாள்தனத்தை தனக்குத்தானே நொந்துகொண்ட அவர், அவரது காவியுடைகளை நேர்படுத்திச் சீராக்கிக்கொண்டு, இளம் பயிற்சித் துறவியை முதிய குருவாகவே பாவித்து, அவரது முகத்தை ஏறிட்டு நோக்கி, மும்முறை வணக்கத்தினைப் பவ்யமாகச் செலுத்தி,
`நல்வழி எது?` வெனப் பணிந்துகேட்டார். பத்மாசனத்தில் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்த இளம் பயிற்சித்துறவி, வெறுமனே ஒற்றை விரலை உயர்த்திக்காட்ட, அந்த ஊசலாட்டத் துறவி குழப்பத்தில் ஆழ்ந்தாலும், அவருக்கு அங்கிருந்து புறப்படுவதைத் தவிர வேறு வழியில்லாமற்போனது.
முதிய குரு வந்து சிறிதுநேரத்திற்குள்ளாகவே, பயிற்சித்துறவி நிகழ்ந்த கதையை அவரிடம் ஒப்பித்தார். இரு கைகளையும் தட்டி, உரக்கச்சிரித்த குரு, பயிற்சித்துறவியின் முதுகினை மெல்லத் தட்டி, சிங்கக்குருளை ஒன்று என்னிடம் பயிற்சிபெறுவது எனக்குத் தெரியாமற்போயிற்றே, இதை நான் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கவில்லையே, என்றார்.
அதைக்கேட்ட பயிற்சித்துறவி, நான் சரியாகச் செய்தேனாவெனக் கேட்க, குருவோ சிங்கங்கள் சிங்கத்தைத்தான் வாரிசாகப் பெறும், மானையல்ல, என்றார். ஆனால், அதன் பின்னர், ”நீ என் வித்தையைக் கற்றுக்கொண்டால், நான் பூவாவுக்கு என்ன செய்வே”னென முனகினார். நீங்கள் என்ன சொல்கிறீர்களென பயிற்சித்துறவி, குருவைக்கேட்க அதொன்றும் முக்கியமில்லையென்றதோடு, நான்தான் உன்னிடம் `நல்வழி` கேட்க வேண்டுமென்றார்.
நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்களெனப் பயிற்சித்துறவி சொல்ல, குரு மும்முறை தலைவணங்கி, `நல்வழி` எதுவெனக் கேட்டார். உடனேயே பயிற்சித்துறவி கண்களை மூடி, ஒற்றைவிரலை உயர்த்திக்காட்டித் திடீரெனக் கையைப் பெரும் வலியுடன் பின்னுக்கிழுத்தார். குரு அவரது உள்ளங்கையில் மறைத்துவைத்திருந்த குறுங்கத்தியால் அந்த ஒற்றைவிரலை வெட்டியெடுத்திருந்தார்.
வலியில் கத்திக்கதறி, இரத்தம் ஒழுகும் கையை மறுகையால் பிடித்துக்கொண்டு, தர்ம கூடத்தைவிட்டு ஓடிய பயிற்சித்துறவி, குருவின் இடியோசைக்குரலைக் கேட்டதும், நின்று, தலையை மட்டும் திருப்ப, ஒற்றை விரலைத் தூக்கிக் காட்டியவாறு வீற்றிருந்த குருவைக் கண்டார். பயிற்சித்துறவி திடீரென, அங்கேயே சுற்றிச்சுற்றி ஆனந்த நடனமாடத் தொடங்கினார். அந்தக் கணத்தில் அவர் புத்தொளியறிவு பெற்றதாக, கதிர், நிலவு, வானம், விண்மீன், மலை, பூமி, கடலென அண்டப் பெருவெளி அனைத்துமே அந்த ஒற்றை விரலுக்குள் சுற்றியதைப் பயிற்சித்துறவி கண்டதாக, பிற்காலத்தில் கூறிக்கொண்டார்கள்.
கோவில்களிலும், மண்ணுலக வீதிகளிலும் நான் சுற்றியலைந்து, அந்த மகா குரு ஒற்றைவிரலை இழந்த கதையாக, இதைத் தான் கேள்விப்படமுடிந்தது. அதுவும் முழுக்க முழுக்க வதந்தியாக, எவ்வித நிரூபணமும் இல்லாமலிருந்ததால் தான், அவரை நான் நேரில் சந்திக்கத் துடித்தேன். அவரைப்பற்றி உறுதியான எந்த ஒரு தகவலும் இல்லாதநிலைதான், அவரைத் தேடுவதைத் தவிர்க்கமுடியாத ஒரு நிலைக்கு என்னை இட்டுச்சென்றதென்பதை நான் சொல்லித்தானாக வேண்டும். அதன் முடிவில்தான்,
குளிர்காலத் தியானக் கூட்டத்தொடர் நிறைவுபெற்ற உடனேயே, நான் அவரை நாடு முழுவதிலும் அலைந்து திரிந்து தேடத் தொடங்கினேன். மலைகளின் ஆழக்குகைகளிலும் சந்தைக் கூடங்களின் மழிப்பகங்களிலும் அவரைத் தேடினேன். வேசிகள் நிறைந்த விபச்சார விடுதிகளிலும், குண்டர்கள் நடத்திய சூதாட்டக் களங்களிலும், பரபரப்பாளர்கள் நிகழ்த்திய களியாட்டக் கூடங்களிலும் அடிமைகளிலும் அடிமைகள் உழன்ற தொழிற்பட்டறைகளிலும் நான் தேடியலைந்தேன். இம்மண்ணுலகத்தின் அருவருப்பு நிறைந்ததும், மட்டத்திலும் மட்டமானதுமான இருட்டுக் குகைகளுக்குள் எனது நற்பெயர், துறவியாடை மற்றும் தூய உடலினைக் கொண்டலைந்ததற்குக் காரணம்,
அந்த மகா குருவினைச் சந்தித்து `நல்வழி` யினைக் கற்றுக்கொள்ளும் தணிக்கமுடியாத எனது ஆவல்தான். ஆனால், அவர் எங்கு சென்றிருந்தாரென்றோ, எங்கே செல்லக்கூடுமென்றோ எந்தவொரு சிறு யூகத்திற்கும் வழியில்லாமல் செய்திருந்தார். இதோ இங்கிருக்கிறாரெனக் கேள்விப்பட்டு அங்கு செல்வதற்குள் அவரது ஆறு வளையக் கைத்தடியை எடுத்துக்கொண்டு அடையாளமற்ற எங்காவது சென்றுவிடுகிறார்.
இம்மண்ணுலகில் நெடுநாட்களாக, அவரைத் தேடியலைந்த நான், ஒருநாள் கடைசியாக, சிவப்பு அல்லது நீலத்தில் ஏதாவதொரு ஒளிவீசும் அரிக்கன் விளக்குகளுடன் வரிசை வரிசையாக விபச்சாரவீடுகள் அமைந்த தெருவுக்குள் வந்துவிட்டதை உணர்ந்தேன். அந்த வீடுகளின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வேசிகளும் அவர்களின் வாடிக்கையாளர்களும் உடற்பேரின்பத்தை மகிழ்ந்து அனுபவிக்கும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.
தொங்கிக்கொண்டிருந்த அரிக்கன் விளக்கு ஒன்றின் அடர் சிவப்பு வெளிச்சத்தின் நேர்கீழாக, வேசி ஒருத்தி தனிமையில் நின்றிருந்ததைக் கண்டேன். முடிந்த அளவு வேகத்தோடு அவளைக் கடந்துவிடத்தான், நான் முயன்றேன். ஆனால், அவள் என்னை அழைத்துவிட்டாள்.
”அடிகளே, இங்கு வாருங்கள்”.
அவள் அருகில் சென்றதும்தான், அம்மைத்தழும்புகள் நிறைந்த அவளது முகத்தையும் பன்றியைப் போல் சப்பையான மூக்கினையும் கண்டேன் – நான் அதுவரைப் பார்த்திருந்ததிலேயே மிகமிக அருவருப்பான ஒரு பெண் அவள்தான். அந்தக் கோரத் தோற்றத்தினால்தான் வாடிக்கையாளர் எவரும் கிடைக்காமல், இந்தப் பிந்திய இரவிலும் போவோர்வருவோரை அவள் தீனக்குரலில் வீணாக அழைப்பதாகவும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
“நீங்கள் என்னிடமா பேசினீர்கள்?” என நான் கேட்டேன். அவளோ வாடிக்கை பற்றி நான் பேசாததாலோ, என்னவோ என் சட்டைக்கை ஒன்றினைப் பற்றிக்கொண்டாள்.
”என்ன செய்கிறாய்?’’ எனக்கேட்டுக்கொண்டே, அந்தக் கீழ்மகளின் கையைத் தட்டிவிடுவதற்காக எனது ஆடையைப் பிடித்து வெட்டியிழுத்தேன்.
அவள் என்னைப் பார்த்து அடித்தொண்டைக் குரலில், “நீ பார்க்கிற பார்வையிலேயே சொல்லிவிடுவேனே, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறவன் தானென்று, உனக்கு நான் ஏன், என் உடலை அர்ப்பணிப்பாகத் தரக்கூடாதென்றாள்.
நான் வாயடைத்துப்போனெனென்றாலும் சமாளித்து, நீங்கள் ஒரு வேசியாக இருக்கலாம்; ஆனால், அதற்காக இந்த உலகத்தைத் துறந்து, கண்டிப்பான புத்தமதப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் என்னைப் போன்ற துறவியிடம் நீங்கள் இப்படியாக நடந்துகொள்வது எந்த விதத்திலும் ஏற்கத் தக்கதில்லையென்றேன்.
எந்த வேசியும் அப்படிச்செய்யத் துணியாத ஒரு காரியமாக அவள் என்னைப்பார்த்து, இரண்டு கையையும் விரித்து, அய்யய்ய வென வலிப்புக் காட்டினாள்; . பின்னர், ஒற்றைக்கண்ணை அநேகமாக மூடுமளவுக்குச் சுழித்து, என்னைக் குத்திவிடுவது போல் ஒரு முட்டியை மடக்கிக் காட்டினாள். பின்னர் மீண்டும் அவளாகவே பேசினாள்.
“உனக்கு என்னதான் பிரச்சினை? நான் அசிங்கமாக இருக்கலாம், ஆனால் இங்கே சுற்றுவட்டத்தில் யாரானாலும் என்னைப் போல் குறைந்த தொகைக்கு, வரமாட்டார்கள். என்னோடு ஒருமுறை வந்துபார், மெய் மறக்கும் இன்பத்தில், உன் உடம்பு முழுவதும் அப்படியே உருகிப்போய்விடும்; நீ அப்படியே அழியாவுடல் தாவோயிசனைப் போல் நேரடியாக சொர்க்கத்துக்குப் போய்விடுவாய்.” என்றாள்.
”கருணை மிக்க போதிசத்துவரே!”
போதிசத்துவரை அழைத்த வாயாலேயே நான், அந்த வேசியைத் திட்டத் தொடங்கினேன். ஆனால், அவளோ மீண்டும் முன்பு போலவே பசப்புவார்த்தை பேசத்தொடங்கினாள்.
“கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு அதை இலவசமாகவே தருகிறேன். நான் எவ்வளவுதான் கீழ்த்தரமானவளாக இருந்தாலும், `கொடையளித்தல்` என்பதன் மிகச்சிறந்த வடிவத்தை நானுங்கூட அறிவேன். தாகத்திலிருப்பவருக்கு தண்ணீர் தருவதும், பசியோடிருப்பவருக்கு உணவளிப்பதும், நோயுற்றவருக்கு மருந்து கொடுப்பதும் சரியானதாக, இருக்கும்போது, பெண்ணுடலுக்காக ஏங்கித் தவிக்கும் ஒருவருக்கு என் உடலையளிப்பதற்குப் போய் நீங்கள் எதனால் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?” என்றாள்.
புத்தரின் போதனைகளிலிருந்து இந்தத் துண்டு துணுக்குகளை இவள் எப்படித் தெரிந்துகொண்டாளென எனக்குத் தெரியாது. ஆனால், அவற்றை அவள் பேசியவிதம், அவளை அப்படியே அறைந்து நசுக்கிவிட வேண்டுமென என்னைத் தூண்டியது. என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவளிடம் மிகுந்த மரியாதையோடு பேசத் தொடங்கினேன். “ நீங்கள் சொல்வதில் முழுமையான உண்மையில்லையெனச் சொல்லிவிடமுடியாது தானென்றாலும், `நல்வழி` தேடும் பிக்கு ஒருவரிடம் உடலின்ப ஆசை பற்றிப் பேசுவது, முழுக்கமுழுக்கப் பண்பாடற்ற செயல்.” என்றேன்.
”நாக்கால் உதடுகளைத் தடவிக்கொள்ளும் ஒருவரிடம் நான் பசியைக் காண்பது போல், உன்னிடம் நான் காண்பது, ஒரு பாழடைந்த கோவிலின் அழிவுகளைத்தான். பத்து வருட வேசித்தொழிலில் எனக்கு மிஞ்சியது என் புழை விரிந்தகன்றதும், மனிதர்களை முகம் பார்த்தறியும் திறமையை நான் பெற்றதும்தான். நீ மட்டும் பொம்பளைப்பசியோடில்லையென்றால் இந்த இரவுநேரத்தில் வேசிவீடுகளைச் சுற்றிக்கொண்டிருக்கமாட்டாய்.” என்றாள்.
‘ஓ` நான்! – துறவி, அவனது மலையைவிட்டுக் கீழிறங்கினால் இப்படியான நிந்தனைக்குத்தான் ஆளாகவேண்டும். நான் மகாகுரு ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் …”
”மகாகுரு என்றா சொன்னீர்கள்?”
“ஆமாம், அவரை உங்களுக்குத் தெரியுமா?”
“என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நான் உடலை விற்பதனாலேயே உங்கள் மகாகுருவைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதென நினைக்கிறாயா?” அந்த வேசி எள்ளிநகைத்து, அவள் ஆடையைத் திரைத்து மேலேற்றிக்கொண்டே, இருட்டுக்குள் செல்லவிருந்தாள். இப்போது நான் அவள் கையைப்பற்றி இழுக்கவேண்டியதாயிற்று.
“நான் தவறு செய்துவிட்டேன், இல்லை, எனக்கு வேண்டியது அதுவல்ல …. அதாவது நான் சொல்லவருவது, என் மீது கோபப்படாதீர்கள் அல்லது வேறெப்படியும் குறைப்படாதீர்கள், ஆனால் …….., நல்லது, எனக்குத் தெரிய வேண்டியது, நான் சொல்கிற மனிதரைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா என்பதைத்தான். அதாவது அவரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”
திரைத்த ஆடையை அப்படியே கீழே இறக்கிவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். “ஆமாம், அவரைப் பார்த்திருக்கிறேன்தான். ஏன், நேற்று இரவுகூட அவர் இங்குதான் இருந்தார். இன்றைய இரவுக்கும் கூட மீண்டும் வருவாரென்றுதான் நினைக்கிறேன்.”
‘’நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவரைப்போன்ற மனிதர் ஒருவர் இந்த மாதிரி ஆசைகளோடு ….. “ நான் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு, சட்டென்று என் கேள்வி முறையை மாற்றிக்கொண்டேன்.
“நீங்கள் சொல்வது உண்மையென்றால், தயவுசெய்து எனக்கு அவரைப்பற்றி எனக்குச் சொல்லுங்கள்.”
அவளது கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; கடுமையான நடுக்கம்கொண்ட குரலில் பேசத் தொடங்கினாள். “அவர் அடிமட்ட மக்களின் நண்பர். இனியும் உயிர் வாழ்வது முடியாததென்றும் இந்த உலகம் தாங்கமுடியாத அளவுக்கு அருவருப்பானதென்றும் நாங்கள் உணர்கின்ற தருணங்களில் எப்போதுமே மிகச்சரியாக, அவர் வருகிறார்;
ஆனால் உங்களைப் போல பெரிய பெரிய சிக்கல்நிறைந்த வார்த்தைகளில் பேசியதேயில்லை. ஒருமுறை நான், சிபிலிஸ் பெண்குறிநோய் வந்து, படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட முடியாமல் கிடந்தபோது, என் ஆடைகளை அவர்தான் அலசித் துவைத்துக் கொடுத்தார். அது மட்டுமல்ல. ஒருமுறை எனது தோழி சாம்-வெல் தெரியாத்தனமாக காவல்துறை காவலர் ஒருவரை, தொழிலுக்காகக் கையைப் பிடித்திழுக்கப்போய், காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று, அவள் பின்புறம் முழுதும் இரத்தக்காடாகுமாறு அடித்துத் துவைத்துவிட்டார்கள்; அப்போதும், அவர்தான் வந்து அவளை மீட்டுவந்தார். அவரெல்லாம் …..”
முடிவேயில்லாமல், பேசிக்கொண்டேபோன அவள் ஒருகட்டத்தில் உணர்வற்றுப்போனதுபோல் உளறத்தொடங்கியதும், நான் அவள் கையைப் பிடித்து உலுக்கி நிறுத்தவேண்டியதாயிற்று. ”நீங்கள் உண்மையிலேயே அவரைப் பார்த்திருந்தால், அவர் எப்படியிருப்பாரென்று சொல்லுங்கள்.”
முன்பு போல் கண்களை மூடியவாறே அவள் பேசத் தொடங்கினாள். ‘அவர் நம் எல்லோரையும் போல்தான் இருக்கிறார். அவரது முகம் அழகற்றது. முடிச்சுமுடிச்சான அவரது கைகள் வெயிலில் கறுத்திருக்கும்.
ஆனால், அவர் நாங்கள் புரிந்துகொள்ளமுடியாத கடின வார்த்தைகளை ஒருபோதும் பேசியதேயில்லை.” பெருங்கஷ்டம். முட்டாள்தனமாக அவள் பேசியதிலிருந்து, எனக்கு நன்றாகப் புரிந்தது, அவள் புத்திகெட்டுப்போன ஒரு பைத்தியமென்று. ‘’ஓ, இது பெருங்கஷ்டம், நான் மகாகுருவைக் கண்டுபிடித்த மாதிரித்தான்,” என எனக்குள்ளாகவே முனகிப்பெருமூச்சுவிட்டுத் திரும்பத் தொடங்கினேன்.
ஆனால் அவள் மீண்டும் என் சட்டைக்கையைப் பற்றிக்கொண்டு, என்னைப் போகவிட மறுத்தாள். “என்ன தப்பாகிவிட்டது? நீ பணம் எதுவும் தரவேண்டாமென்று சொல்லிவிட்டேனே! நீ இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு, முகத்தை மறைத்து,
உன் பெயரைக் காப்பாற்றியிருக்கிறாய், போதும், வா, இரவை அனுபவித்துவிடுவோம்.” என்றாள். “என்னைப் போகவிடு! கீழ்த்தரப் பிறவி, விபச்சாரி, நீ, ஒரு புனிதத் துறவியின் ஆடைமீது கைவைக்கிற அளவுக்கு உனக்கு துணிச்சலா?” என்று உண்மையிலேயே கோபத்தில் பொங்கிய நான் கத்திக் கூச்சலிடத் தொடங்கினேன்.
ஆனால் அந்தக் காமப்பிசாசு என்னை விடாதது மட்டுமில்லாமல், அவளது ஒரு கையால் என் இடுப்பைச் சுற்றிப்பிடித்துக்கொண்டு, மறுகையால் என் தொடைகளுக்கிடையே வருடத் தொடங்கினாள். ‘இப்ப என்னை விடப்போகிறாயா, இல்லையா?. தேவடியா நீ, எவ்வளவு கொழுப்புடீ, உனக்கு ….? கருணைமிக்க போதிசத்துவரே. பயிற்சியை அவமதிப்பவர் எல்லாம் கடைசியில் இறந்து மதக்குற்றம் புரிந்தவர்களைப் போல நரகத்துக்குத் தான் போகவேண்டும்.” என் பலம் முழுவதையும் உபயோகித்து அவளை உதறித் தள்ள முயன்றதில், நான் மல்லாந்து விழ,
அழுக்குப் படிந்த என் உள்ளாடைகள் விலகித் தெரியக் கிடக்கவேண்டியதாயிற்று. உடனேயே எம்பிக்குதித்த அவள், என் கழுத்தில் கிடந்த பிரார்த்தனை மாலையைக் முரட்டுத்தனமாகப் பற்றிக்கொண்டு, உச்சக் குரலில் கத்தத் தொடங்கினாள். “நாய்க்குப் பிறந்தவனே, நீதான் இந்த உலகத்திலேயே பெரிய ஏமாற்றுப் பேர்வழி; நீ துறவி கிடையாது, திருடன்தான். என் நல்ல மனதுக்கு, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறானெனப் பார்த்தாலே தெரிகிற ஒரு துறவி என்று, நல்ல மனதோடு என் உடம்பை உனக்கு அர்ப்பணிக்கிறேனென்று சொன்னால், என்னைத் திட்டுவதோடில்லாமல் அடிக்கவுமா செய்கிறாய்.”
இந்தக் குழப்பத்தில், எல்லா வேசிகளும் வெறும் உள்ளாடைகளும் கையுமாக ஓடிவர, அவர்கள் பின்னாலேயே காற்சட்டைகளை, இடுப்பில் ஏற்றிக்கொண்டு ஓடிவந்த வாடிக்கையாளர்களும் என்னைப் பார்த்து ஹோவெனச் சிரித்தனர். மிகப்பெரிய அவமானத்தில் சிக்கிவிட்டதை உணர்ந்தாலும் வேறுவழி எதுவும் புரியாமல் புத்தர், போதிசத்துவர்களின் பெயரை
உச்சரித்துக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும் நடுவில், அந்தப் பழிகாரி மீண்டும் பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு என் மீதான தாக்குதலைத் தொடர்ந்தாள். “ நாய்க்குக் பொறந்த பயல் நீ; திருடன்களிலேயே மோசமான பெரிய திருடன் நீ, என்னை நரகத்துக்குப் போவாயென்கிறாய். இதுதாண்டா நரகம், இதைவிட மோசமான ஒரு நரகம் எங்கேயாவது இருக்குமென்றா நினைக்கிறாய். இப்ப நான் சொல்றண்டா, புத்தர் வழி என்று சொல்லிக்கொண்டு நடிக்கிற உன் நடை, உடை பாவனையால்,
ஒற்றை விரலைக்கூட உன்னால் அசைக்க முடியாது, அடுத்தவன் சாப்பாட்டைத் தாண்டா நீ திருடித் தின்கிறாய், நீ செத்து சொர்க்கம் போவாய், எங்கள் உடம்பையே வித்து, எங்கள் சாப்பாட்டை நாங்களே தேடிக்கொள்கிற நாங்கள் நரகத்துக்குப் போவோமா?” என் கழுத்து மாலை திடீரென அறுந்து மணிகளெல்லாம் சிதறி ஓடின. என் இதயம் வேகவேமாகத் துடித்துக்கொண்டிருந்தது; ஆனால், அவளோ அப்போதும் விடாமல் கத்திக்கொண்டிருந்தாள். “ஓஹோ, அது சரி. நாங்கள் அருவருப்பானவர்கள், கீழிலும் கீழானவர்கள்,
உடம்பை விற்கிற குற்றத்துக்காக, நரகத்துக்குப் போவோம், நல்ல வளர்ப்பும், புத்திசாலியுமான நீ சொர்க்கத்துக்குப் போய் அனுபவிக்கலாமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்,” நல்லவேளை, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, புத்தரின் கருணையை முழுவதுமாகத் தெரிந்த அந்த வயதான பெண்ணுக்குத் தான் நன்றிசொல்ல வேண்டும். அவள் மட்டும் இல்லையென்றால் நான் தப்பி வந்திருக்கவே முடியாது, ஆனால், என்ன, ஒற்றை விரலை நான் கண்டுபிடிக்கமுடியாமல் போனதுடன், வேசி ஒருத்தியிடம் மிகப்பெரிய அவமானத்தைச் சுமக்க
வேண்டியதாயிற்றென்பதால், இனிமேலும் இந்த மண்ணுலகத்தில் நம்மால் அலைந்து திரிவது முடியாததென்று உணர்ந்தேன். ஆனாலும், அதுவுங்கூட, மகா குருவைத் தேடும் எனது ஆர்வத்தைக் கைவிடுவதற்குப் போதுமானதாக இல்லை. அதனால் இந்த மண்ணுலகில் காண்கிற அனைத்துக் கீழான மற்றும் கறைபடிந்த இடங்களிலெல்லாம் அவரைத் தேடும் எனது பெருமுயற்சியைத் தொடர்ந்தேன். ஒவ்வொன்றிலும், அந்த விபச்சார விடுதியில் எனக்கேற்பட்டது போன்ற அவமானத்தையும் ஏமாற்றத்தையுமே சந்தித்தேன்.
உலகின் மிக உன்னதமான `நல்வழி`யைத் தேடுகின்ற ஒரு துறவியாகிய நான், இந்த உலகத்தின் கடுமை நிறைந்த பாழிடங்களிலெல்லாம் நுழைந்து துன்பத்தை மேற்கொள்வதற்கான ஒரே காரணம், மகா குருவான ஒற்றை விரலைச் சந்தித்து `நல்வழி`ப் புத்தொளியறிவினைப் பெற்றேயாக வேண்டுமென்ற தணிக்கமுடியாத தாகத்தினால் தானென்பதைச் சொல்லியேயாகவேண்டும். ஆனால், மாண்புமிக்க அரசவைப் பெண்டிராலும், அரசு அதிகாரிகளாலும் கொடையளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைந்துள்ள கோவில்களை விட்டுவிட்டு அவர் ஏன், உலகின் மிகவெறுக்கத்தக்க தீமை நிறைந்த இடங்களில் வாழ்வதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரென்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
ஆம். உண்மையிலேயே இது என்னைப் புதிரில் ஆழ்த்துவதாக இருக்கிறது. ஆனால், அதுபோன்ற இடங்களில்தான் மக்கள் அவரைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். ஆக, என் தேடுதலால், விபச்சார விடுதிகளின் வேசிகளிடமும், சூதாட்டக்கூடங்களின் குண்டர்களிடமும், களியாட்டக் கூடங்களின் எத்தர்களிடமும், இறுதியில், தொழிற்கூடங்களின் அடிமைகளிலும் அடிமைகளிடமும் மிகமிகக் கேவலமான அவமானங்களைச் சந்திக்கவேண்டியதாயிற்று.
அடிமைகள் அரசனுக்காக புதிய களியாட்ட மாளிகை ஒன்றினைக் கட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலரது கழுத்துகளில் மாடுகளைப் போல் நுகம் இருக்க,
வேறுசிலர் வீடுகள் அளவுக்குப் பெரிதாயிருந்த அரவை ஆலைகளை இயக்கிச் சுழற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் எல்லோருமே என் மீது காறித்துப்புவதாக வேலையை நிறுத்தினர். தலைமுறை, தலைமுறைகளாக, அவர்களின் மூதாதைகளும் அவர்களும் கடினமான உடலுழைப்பின் துன்பங்களிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாக மரணம் மட்டுமே உள்ளதென்று அவர்களின் விதியைக் கூறிக் குறைப்பட்டனர். அதைக் கேட்டதும், அவர்கள் மீது கருணை மீதூர, அவர்களுக்காக புத்தரின் அறிவுமொழி ஒன்றினை ”கருணை மிக்க போதிசத்துவரே”
என அறிமுகம் செய்யத் தொடங்கினேன். இப்பிறவியில் நீங்கள் படும் கஷ்டங்களுக்கெல்லாம் இதற்கு முந்தைய பிறவியில் நீங்கள் செய்த பாவமே காரணம். அதனால் நீங்கள், உங்கள் கர்மவினைகள் அல்லாமல் வேறு யாரையும் அல்லது எதனையும் நிந்திப்பதற்கு எதுவுமில்லை. வெறுப்பும் சீற்றமும் பாவத்தின் விதைகள். அதனால், புத்தரிடம் மனமுருகிப் பிரார்த்தனைசெய்வதில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்; உலகினை வீணாகச் சபிக்க வேண்டாம்……..”
இதைக் கேட்டார்களோ இல்லையோ எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு என்மீது காறித்துப்பத் தொடங்கியதோடு, காகங்களின் கூட்டமொன்று கத்துவது போல் என்னைப் பார்த்துப் பெருங் கூச்சலிட்டனர்.
“ சாப்பாடு, துணிமணி, தங்குமிடம் எதற்கும் கவலைப்படாமல் நல்வழியை மட்டும் தேடி, அல்லது மலக்குவியலையோ அல்லது வேறு ஏதோ ஒரு இழவினைத் தேடும் உன்னால் எங்கள் கஷ்டத்தின் அளவினைப் புரிந்து கொள்ளமுடியாதுதான். சாவின் விளிம்பில் நிற்பவர்களிடம், நியாயமிழந்து பசியில் தவிப்போரிடம், நியாயமிழந்து நோய்ப்பட்டோரிடம்,
நியாயமற்ற முறையில் சிறைக்குள் அகப்பட்டோரிடம் போய், அவர்களின் கஷ்டங்களுக்கெல்லாம் அவர்களின் செய்கைகளே காரணமென்றும் நடப்பினை ஏற்றுக்கொள்ளுமாறும் சொல்கிறாய். எதிர்காலத்தில் அவர்கள் சிறிது நல்ல இடத்தில் பிறக்க விரும்பினால், புத்தரைப் பிரார்த்திக்க வேண்டுமென்கிறாய்;
நீ தான் சரியான ஏமாற்றுப்பேர்வழி என்பது நன்றாகவே தெரிகிறது.” அவர்கள் அப்படியே என்னை விழுங்கிவிடுவது போல் பேசி, வெறித்து நோக்கியதில் எனக்குள் தோன்றியதென்னவென்றால் அவர்கள் கண்களில் வெளிறிய நீலநிற ஒளியொன்று வெளிப்படுவதோடு,
அவர்களின் கழுத்தின் பின்புறம் அந்தக் கனமான நுகங்களின் எடை மட்டும் இல்லாமலிருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள் என்பதுதான். எப்படிப்பார்த்தாலும், இந்த மண்ணுலகம் அறியாமை மற்றும் இரக்கமற்ற பிறவிகளால் நிறைந்திருப்பதோடு, உன்னதமான நல்வழியினைத் தேடுவதற்கு என்னைப் போன்ற ஒரு மனிதனுக்கு உகந்ததாக இல்லாமல் கீழானதாகவும் தீமை விளைவிப்பதாகவும் இருக்கிறது.
நான் எழுந்து நின்றதும், எனது உடம்பின் கனத்தால் என் கால் மூட்டுகள் முனகின. மனித மனத்தைப் பீடிக்கின்ற முடிவற்ற மாயத்தோற்றங்களும் வேதனைகளுமாக அவதிப்பட்ட நான் நெடுநேரம் குத்துக்காலிட்டே உட்கார்ந்திருந்ததில், என் கால்கள் தூக்கத்தில் ஆழ்ந்து, உணர்வினை மறந்து போக, மயக்கக் கிறக்கத்திலிருந்த என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் எங்காவது விழுந்து உறங்கவேண்டுமென்பதுதான். விரைவிலேயே மையிருள் கவிந்து மிகச்சிறிய தூரம் கூட தெரியாமலாகியது. ஆழ வெடிப்புகள்,
குகைகள் மற்றும் பொந்துகள் ஒவ்வொன்றிலிருந்தும் உயிர்ப்பிராணிகளின் தனிமையும் பசியும் நிறைந்த குரல்கள் எழுந்து எங்கும் பரவ, நான் மகா குருவைக் கண்டுபிடிக்க்கப்போவதில்லையென்பது மட்டுமில்லாமல் இந்தக் காட்டிலேயே இறந்து அடர்ந்த மலைகளுக்குள் அலையும் ஆவியாகத் திரியப் போகிறேனென்று நினைத்தேன். அனைத்து போதிசத்துவர்களையும் நடுங்கும் குரலில் அழைத்து, எனது மூட்டையை இறுகக்கட்டி, என் காலணிக் கட்டைகளையும் அவிழ்த்து மீள இறுக்கிக் கட்டினேன். பின்னர், மரக்கிளைகளை ஒதுக்கித் தள்ளிக்கொண்டு, என் பாதையில் முன்னேசெல்லத் தொடங்கினேன்.
அங்கே நான், ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதற்காக விழுந்து எழுந்துகொண்டிருந்தாலும், உண்மையில் இலக்கு ஏதுமின்றித் தான் அலைந்துகொண்டிருந்த போதுதான், நேருக்கு நேராக, என் கண் முன்பாகவே, வெளிச்சத்தின் ஒளிமுனை ஒன்றினைக் கண்டேன். அந்த ஒளியின் அளவிலிருந்து, அது ஒரு வீடாகத்தானிருக்கவேண்டுமென்றும், இவ்வளவு ஆழ்ந்து அடர்ந்த மலைகளுக்குள் ஒரு வீடெனில், அது மகா குரு ஒற்றைவிரலுடையதாகத்தானிருக்குமென்றும் நான் நினைத்தேன். அவ்வளவுதான், நான் இடைவெளியே விடாமல் ஒரே ஓட்டமாக ஓடினேன்.
அது, தங்க வேட்டைக்காரர்களோ அல்லது ஜின்செங் கிழங்கு அகழ்வோரோ மலையில் தங்கியிருந்த காலத்தில் கட்டிய சிறுகுடிசை போலத் தோன்றியது. அதன் முன்பாக வெளிப்புறத்தில் ஊசியிலைத் தேவதாருப் பிசின் விளக்கின் வெளிறிய வெளிச்சத்தில் குந்தி அமர்ந்திருந்த வயதான கிழவன் ஒருவன் பரட்டைத் தலையிலிருந்து பேன் எடுத்து நகங்களுக்கிடையில் வைத்துக் குத்திக் கொண்டிருந்தான். அவனுடைய வற்றி உலர்ந்துபோன உடலையும், கிழிந்த ஆடைகளையும் பீளை நிறைந்து சுருங்கிப்போன கண்களையும் பார்க்கும் போதே, அவன்,
சமூகத்தால் துரத்தப்பட்ட ஒரு பிச்சைக்காரன் தானென்பது தெரிந்தது. மகாகுருவைச் சந்திக்கப்போகிறோமென நினைத்த நேரத்தில் இது மாதிரியான ஒரு பிண்டத்தைப் பார்ப்பது தாங்க வியலாததாயிருந்தது. தியானத்திற்காகப் படுக்கலாமென நினைத்தபோது, இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே, அந்த ஆளிடம் கேட்டுப் பார்க்கலாமேயென நினைத்தேன்.
‘’ஐயா, பெரியவரே, ஒற்றை விரல் என்ற பெயருள்ள மகா குரு ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” ஆனால், அந்தக் கிழவன், காது கேட்காதவர் போலப் பதில் எதுவும் சொல்லாமல் பேன் குத்துவதே கண்ணாக இருந்தான். அவன் பேன்களை நசுக்கும் போது, பட் பட்டென வெடித்த சப்தம் வித்தியாசமாக இருந்தது. ”எனக்கு நன்கு தெரிந்தவராகத் தான் இருப்பார். மிக உன்னதமான ஒரு மகா குருவைப் பற்றி, நீ என்னென்னவெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?” இந்தக் கிழவனிடம் எதுவும் பேசக் கூடாதென்று தீர்மானித்துவிட்டேன். பின், பழக்கத்தினால், தியானத்திற்குப் படுக்கும் முன் புத்த சூத்திரம் ஒன்றை உச்சரிக்கத் தொடங்கினேன். ‘’சர்ஃப் சுரி மகாசுரி சுசுரி சபஹா ஒபங்கனேயேஏ
அன்விஜயேஷின்ஜிரியான்…..” ‘’வாயை மூடுறியா, நான் தூங்கவேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், மனசுக்குள்ளேயே செய்துகொள். சத்தமாகப் பிரார்த்தனை செய்து அடுத்தவன் அமைதியைக் கெடுக்கவேண்டுமென்று சட்டமா இருக்கிறது?’’ இதைக் கேட்டதும் நான் கண்களைத் திறந்தேன்; ஆனால், அந்தக் கிழவன் அதற்கு முன்பாகவே விளக்கை அணைத்துவிட்டான்; அவன் குறட்டையைத் தான் நான் கேட்க முடிந்தது. அந்தக் காலம் முழுவதுமாக மண்ணுலகில் அலைந்து முழுவதுமாகக் களைத்துப் போன நானும், குறிப்பாகப் பிந்திய அந்தக் காலைவேளை வரையில் கூடத் தூங்கியிருக்கிறேன்.
நான் கண்விழித்த போது வெயில் என் தலைக்கு மேலாகவே வந்திருந்தது. அந்தக் கிழவனை எங்கும் காணவில்லை. அரிசியும் பார்லியும் கலந்து அரைத்த மாவை என் மூட்டையிலிருந்து எடுத்துப் பசியை அடக்கிவிட்டு காலணிக்கட்டைகளை இறுகக் கட்டிக்கொண்டு, கனத்த இதயத்தோடு என் முன்னால் நீண்டுகிடந்த வரிசை வரிசையான மலைத் தொடர்களை ஏறிட்டு நோக்கிப் பெருமூச்செறிந்தேன்.
மற்றொரு நாளும் வந்து போய்விட்டது. இப்போது நான் எங்கே போகவேண்டும்? மகாகுருவைச் சந்திக்க எங்கு செல்லவேண்டும்? எனக்குத் தெரியவில்லை; ஆனால் நகர்ந்துகொண்டேயிருக்கவேண்டும். பெரும் பாறை ஒன்றினை நெஞ்சுக்குள் வைத்து அழுத்தியது போன்ற கனத்த இதயத்துடன் நான் வேகமெடுத்து நடக்கத் தொடங்கும்போது, திடீரென்று யாரோ என்னைக் கூப்பிடுவது போன்ற சப்தத்தைக் கேட்டேன்.
“ஓ, மாபெரும் ஆசிரியரே, மாபெரும் ஆசிரியரே,” நான் திசையை மாற்றவில்லை; ஆனாலும் என் தலை மட்டும் திரும்பிய போது அந்தக் கிழவன் அங்கிருந்தான். எதனாலேயோ, அவன் இனிமையாகவென்று கூடச் சொல்லலாம், புன்னகைத்தான். “ஆக, நீ ஒரு `உண்மையான மகா குரு`வைத் தேடிக்கொண்டிருக்கிறாய், ஹூம்? நான் வாயடைத்துப் போய் தலையை மட்டும் ஆட்டினேன். கிழவன் ஏளனமாக வெடித்துச் சிரித்தான். பின்னர் என்னைப் பரிதாபத்திற்குரிய ஜீவனைப் போலப் பார்த்து, என் தோளில் தட்டி, “ முட்டாளே! ஒரு உண்மையான மகா குருவைத் தேடுகிறேனென்று சொல்கிறாய், இல்லையா?” “அப்படித்தான்.” நானும் ஏளனமாகப் பதில் சொன்னதும் கிழவன் ஏமாற்றத்தில் நாக்கை `ப்ச்` கொட்டினான்.
பின்னர், அவன் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான். “ உலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, உண்மையான மகா குரு ஒருவர் இங்கே மலையில் உட்கார்ந்துகொண்டு பேன் குத்திக்கொண்டிருப்பாரென்றா நீ நினைக்கிறாய்?’’ அந்தக் கணத்தில் என் நெஞ்சில் அழுத்திக்கொண்டிருந்த பாறாங்கல் அகன்றுவிட்டதை உணர்ந்தேன்.
அவ்வளவுதான், என்னைச் சுற்றியிருந்த எல்லாமே ஒளிபெற்று மிளிர்ந்தன. நான் மலையை விட்டுச் சென்றாகவேண்டும். அந்த வயது முதிர்ந்த பெரியவரின் வார்த்தைகளில் நான் திடீரென விழித்துக்கொண்டேன். `விழிப்புணர்வு` என்கிறேன், நான்;
ஆனால், அது, வெளிப்படையாகத் தெரிந்த ஏதோ ஒன்று, நான் மலையை விட்டுச் சென்றாக வேண்டுமென்பதுதான். கீழ்மட்டத்துக் கறைபடிந்த மண்ணுலகிற்கு இறங்கிச்சென்று இரத்தமும் சதையுமாக அல்லல்படுவோர் மத்தியில் வாழவேண்டும். புத்தொளியறிவான போதியறிவினைக் களங்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாதென்றும் பரிசுத்த பூமியும் இந்த உலகமும் வெவ்வேறானதல்ல என்றும் புத்தர் சொன்னதே உண்மை. பிரச்சினைகள் மற்றும் ஆசைகளால் முடிவற்ற பரிணாம மாற்றங்களே நித்தியமான நமது உலகிலிருந்தும் நாம் விடுபடுவோமேயானால், பரிசுத்த பூமியை நாம் ஒருநாளும் அடையமுடியாது.
அந்தப் பாலியல் தொழிலாளி சொன்னதுபோல இந்த உலகில் உயிர்வாழ்வதற்காக, வயிற்றுப் பாட்டுக்காக, உடலை விற்கவேண்டியிருக்கிறதென்றால், உண்மையிலேயே இதுதானே நரகம்; இந்த நரகத்தில் தானே நான் வாழ்வினைக் கண்டுணரவேண்டும்.
நான் , மகா குருவைக் கண்டுபிடித்தேனோ இல்லையோ அல்லது, இந்த ஒளிமிக்க விழிப்புணர்வினை எனக்களித்த அந்த முதியவர் தான் நான் மூச்சைப் பிடித்துத் தேடிக்கொண்டிருந்த மகாகுருவின் புனித வெளிப்பாடோ என்பதெல்லாம் இப்போது பொருளற்றுப்போகின்றன. ஆனால், `விழிப்பு` என நான் கூறுவது உண்மையான அதுதானா என்பது இப்போதுங்கூட எனக்கு நிச்சயமில்லை.
படைப்பாளர் பற்றிய குறிப்பு : கிம் சியாங் டாங் கொரியாவில் 1947 – இல் பிறந்தவர். பத்தொன்பதாவது வயதில் துறவுகொண்டு பத்தாண்டுகள் புத்த மதப் பயிற்சி மேற்கொண்ட பின்னர், துறவினைவிட்டு வெளியேறி இலக்கியம் படைக்கத் தொடங்கினார்.
அவரது முதல் கதை 1975 இல் வெளியானது. இலக்கியப் படைப்புகளுக்காக, பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் படைத்துக்காட்டும் புத்தறிவுபெற்ற மனிதன் மலைகளில் வசிக்கும் துறவிகளையும் சராசரி மனிதர்களையும் அரவணைத்துச் செல்பவனாயிருக்கிறான்
http://www.ekoreajournal.net/issue/view_pop.htm?Idx=2816 
ஜனவரி, 02, 2018,    மலைகள் இணைய  இதழ் 137  இல் வெளியிடப்பட்டது.

Tuesday, 5 January 2016

தென்கொரியச் சிறுகதை - கோடையில் ஒரு மழை (A Shower)

கோடையில் ஒரு மழை

கொரியன் : ஹ்வாங் சுன்-வன்   Hwang Sun-wun  (March 26, 1915 - September 14, 2000)
Image result for Hwang Sun-won

ஆங்கிலம் : ப்ரதர் அந்தோணி ஆஃப் டெய்ஜ்  
தமிழில் : ச.ஆறுமுகம்.
ஹ்வாங் சுன்-வன் :  ஜப்பானியக் காலனியாதிக்கத்தின் கீழ் கொரியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் தற்போது வடகொரியாவிலுள்ள டேவ்டாங் என்னும் ஊரில் 1915ல் பிறந்தவர். பிற்காலத்தில் கொரியப் போரின் விளைவாக தென்கொரியா, வடகொரியா எனப் பிரிந்தபோது அவர் தென்கொரியாவுக்கு வந்து க்யூங்கி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். கொரியப் போர்க்காலத்தில் குடும்பத்துடன் அகதியாக வாழ்ந்த காலத்தில் அவர் இந்தக் கதையை எழுதினார்.
ஹ்வாங் பல கவிதை நூல்களையும் எட்டு நாவல்களையும் படைத்திருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் முக்கியக் கொரிய இலக்கிய வகையான சிறுகதைக்காகவே மிகவும் பாராட்டப்படுபவராகவும் என்றும் நினைவுகொள்ளப்படுபவராகவும் உள்ளார். கொரிய இலக்கிய உலகில் அவரது இன்னொரு பெருமை ஆதிக்கமொழியான ஜப்பானில் எழுத மறுத்ததுதான். கொரியாவின் நவீன இலக்கியத்தில் அவரது மிகச்சிறந்த படைப்புகளாக நட்சத்திரங்கள், முதியவர் ஹ்வாங், முதிய குயவர், மேகங்களின் வெடிப்பு, கொக்குகள் மற்றும் தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள சொனாகி என்ற சிறுகதையும் கொண்டாடப்படுகின்றன.
கொரிய மொழியில் சொனாகி என்பது வெப்பம் மிகுந்த  கோடைகாலத்தின் ஒரு மாலையில் திடீரெனப் பெய்து பெருமழையாகக் கொட்டிச் சிறிது நேரத்தில் அடங்கிவிடும் கோடை மழையைக் குறிக்கும் சொல். இக்கதையில் கோடை மழை குமரப்பருவத்துச் சிறுவன் ஒருவனுக்கும் சிறுமி ஒருத்திக்கும் இடையே ஏற்படுகின்ற குறுகியகால ஆனால், மனதைத் தொடும் காதலின் குறியீடாகிறது.
ஹ்வாங்கின் சிறுகதைகள் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவையென்றாலும் சொனாகி காலத்தை வெல்லுகின்ற கொரியச் செவ்விலக்கியமாக கொரியர்களால் கருதப்படுகிறது. கொரியாவின் அனைத்து வயதினரும் இந்தக் கதையைப் பற்றித் தெரிந்திருப்பவர்களாயிருக்கின்றனர். கொரியாவின் கிராமப்புற அழகும் கள்ளங்கபடமற்ற குழந்தைப் பருவக் காதலும் இக்கதையில் அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொரிய மொழிச் சிறுகதையைப் போல வேறு எந்தச் சிறுகதையும் நேசிக்கப்படவில்லையென இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். இந்தக் கதை பெருமதிப்புடன் எல்லோராலும் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம் மொழியின் எளிமையும் கதையின் உள்ளடக்கமும் தான். இது பள்ளிச் சிறுவர்களாலும் எளிதில் புரிந்துகொள்ளப்படுகிறது; அவர்களின் மனதையும் தொடுகிறது. பிற கொரியக் கதைகளைப் போலவே இறந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமாக அடிக்கடி மாறி உடனடி உணர்வைக் கொடுப்பதாக இருக்கிறது.  கடந்த காலத்தில்  இழந்துவிட்ட வெகுளித்தன்மை இணைந்த பழங்கால நினைவுகளின் ஏக்கம், மனித வாழ்க்கையின் எளிதில் உடைந்துபோகும் தன்மை, பழங்காலக் கிராம வாழ்முறைகளுக்கும் தற்கால  நகரக் கடின வாழ்க்கைக்குமுள்ள முரண்பாடுகள், உண்மையான மகிழ்ச்சியின் எளிமை அனைத்தையும் உள்ளடக்கியதாக அடிக்கருத்து உள்ளது.)

நீரோடையின் அருகில் அந்தச் சிறுமியைக் கண்டதுமே,  அவள் மாஸ்டர் யுன் அவர்களின் கொள்ளுப் பேத்தியாகத்தான் இருக்கவேண்டுமென , அந்தச் சிறுவனுக்குத் தோன்றியது. அவள் தண்ணீருக்குள் கைகளை அமிழ்த்தி, அதனை வாரியிறைத்துக்கொண்டிருந்தாள். சியோல் நகரத்தில் அவள்,  இதைப் போன்ற ஒரு நீரோடையை அநேகமாகப் பார்த்திருக்க மாட்டாளாக இருக்கலாம்.
அவள் அதைப்போலவே பல நாட்கள் பள்ளியிலிருந்து திரும்பும்போது  தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாள். நேற்று வரையிலுங்கூட அவள் நீரோடையின் விளிம்பிலேயே விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால், இன்று  நடைக் கற்களில் ஒன்றின்மீது நின்றுகொண்டிருந்தாள்.
அந்தச் சிறுவன் கரையில் உட்கார்ந்திருந்தான்.  அவள் வழியை விட்டு நகரும் வரை அங்கேயே காத்திருப்பதென அவன் தீர்மானித்தான்.
அப்படியாகக் காத்திருக்கும்போது யாரோ ஒருவர் வரவே அவள் வழிவிட்டாள்.
அடுத்த நாள், அவன் ஓடைக்குக் கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்தான். இந்தத் தடவை அவள் நடைக்கற்களின் மத்தியில் அமர்ந்து முகம் கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். கைகளை மேலேற்றிச் சுருட்டியிருந்த  இளஞ்சிவப்பு மேற்சட்டையின் எதிர்நிறத்தில் அவளின் பின்புறக் கழுத்து அதிவெண்மையாக இருந்தது. 
 முகத்தைச் சிறிது கழுவிவிட்டு, அவள் தண்ணீருக்குள் குனிந்து நோக்கினாள். தண்ணீரில் தெரியும் அவளுடைய பிம்பத்தைத்தான் அவள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். அவள் திடீரெனத் தண்ணீரைக் கையில் அள்ளினாள். சில மீன் குஞ்சுகள் நீந்திக் கொண்டிருந்திருக்கலாம்.
அந்தச் சிறுவன் கரையில் உட்கார்ந்திருப்பதை அவள் அறிந்திருந்தாளா,  இல்லையா, எனத் தெரியவில்லை. அவள் அக்கறையாகத் தண்ணீரைக் கையில் அள்ளிக்கொண்டேயிருந்தாள். ஆனால் ஒவ்வொருமுறையும் பயனின்றித்தான் போனது. சும்மா ஒரு வேடிக்கை போல, அதற்காகவே தண்ணீரை அள்ளியள்ளிச் சிந்திக்கொண்டிருந்தாள். நேற்றுப் போல யாராவது குறுக்காக வந்தால் மட்டுமே வழியை விட்டு நகர்வாள்போலத் தோன்றியது.
பின்னர், அவள் தண்ணீருக்குள்ளிருந்து எதையோ குனிந்து எடுத்தாள். அது ஒரு வெள்ளைக் கூழாங்கல்.  அதன்பின் அவள் நடைக்கற்களின் குறுக்காக மெல்ல உந்தி உந்திக் குதித்தாள்.
ஒருமுறை, அப்படியே திரும்பினாள்: ‘’ ஹேய், நீ.’’
வெள்ளைக் கூழாங்கல் அவனை நோக்கிப் பறந்து வந்தது.
அவன் அனிச்சையாக எழுந்து நின்றான்.
குறுக வெட்டிய தலைமுடியைக் குலுக்கிக்கொண்டு, அவள் ஓட்டத்திலேயே போய்க்கொண்டிருந்தாள்; நாணற் படுகைகளுக்கிடையிலான பாதையைத் தேர்ந்து, அதிலேயே சென்றாள். பின்னர்,  அந்த இலையுதிர் காலத் தெள்ளிய வெயிலில் நாணல்களின் வெளிறியத் தலை உச்சிகளைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.
நாணல்களுக்கப்பால் தூரத்தில் அவள் மறுபடியும் விரைவிலேயே தோன்றுவாள். அவள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகப் பின்னர், அவன் நினைக்கத் தொடங்கினான். அப்போதுங்கூட அவள் தென்படவில்லை. அவன் கால் பெருவிரல்களில் நின்று உன்னிப் பார்த்தான். அவள் மிகமிக அதிகமான நேரம் எடுத்துக்கொள்வதாக நினைக்கத்தொடங்கினான்.
நாணற் திட்டுகளுக்கு மறுபுறம் வெகுதூரத்தில், நாணற் கூட்டமொன்று அசைந்துகொண்டிருந்தது. அந்தச் சிறுமி நாணல்களை அணைத்து        நின்றுகொண்டிருந்தாள். பின், அவள் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். எப்போதுமில்லாதபடி, மிக அதிகமான வெளிச்சத்துடன் வெயில் அவளின் நாணற் தலைமுடிமீது ஒளிவீசிக்கொண்டிருந்தது.  அது, ஒரு பெண்ணாக இல்லாமல், வயல்களின் குறுக்காக ஒரு நாணல் நடந்துசெல்வது போலத் தோன்றியது.
நாணல் கண்ணிலிருந்து மறையும்வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அவள், அவன் மீது எறிந்த கூழாங்கல்லைத் திடீரெனக் குனிந்து நோக்கினான்; அதை எடுத்துச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டான்.
மறுநாளிலிருந்து அவன் தினமும் நீரோடைக்குச் சிறிது தாமதமாகவே வரத் தொடங்கினான். அவள் வந்து போனதாக எந்தத் தடயமும் தெரியவில்லை. ஒருவிதத்தில் அதுவும் நல்லதுதான்.
இருந்தாலும் அது கொஞ்சம் வியப்பானதுதான். அவளுக்கான அடையாளம் ஏதும் இல்லாமலிருந்தும் நாட்கள் செல்லச் செல்லச் சிறுவனின் நெஞ்சுக்குள் தனிமை உணர்வொன்று தோன்றிப் படர்ந்தது. அவன் காற்சட்டைக்குள்ளேயே கூழாங்கல்லை விரல்களால் வருடும் பழக்கத்துக்காளானான்.
ஒருநாள், அவன், நீரோடை நடைக்கற்களின் நடுவில் அந்தச் சிறுமி எங்கே அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாளோ, அங்கேயே போய் அமர்ந்தான். அவன் கைகளைத் தண்ணீரில் நனைத்து, முகத்தைத் துடைத்தான்; மீண்டும் தண்ணீருக்குள் நோக்கினான். நிறம் மாறி இருண்டிருந்த அவனது முகம் அவனைத் திருப்பி நோக்கியது. அவன் அந்த முகத்தை வெறுத்தான்.  
அந்தச் சிறுவன் தண்ணீருக்குள்ளிருந்த முகத்துக்கு மேலாகத் தண்ணீரை இரண்டு கைகளாலும் அள்ளினான். மீண்டும் மீண்டுமாகப் பலதடவைகள் அள்ளினான். பின்னர், திடீரெனத் துள்ளியெ.ழுந்தான்; அவனுக்குள் வியப்பான வியப்பு! அவள் வந்துகொண்டிருந்தாள்; அதுவும் அவனிருந்த திசையிலேயே!
‘’அவள் ஒளிந்துநின்று, நான் என்ன செய்கிறேனெனப் பார்க்கிறாள்.’’ அவன் ஓடத் தொடங்கினான். ஒரு கல் தவறித் தொலைத்தது.  கால் தண்ணீருக்குள் அமிழ்ந்தது. இழுத்துக்கொண்டு அவன் விரைவாக ஓடினான்.
ஏதாவது ஒரு இடம் மட்டும் கிடைத்தால் போதும், அவன் ஒளிந்து கொள்வான். அந்தப்பக்கம் நாணல்கள் இல்லை.  பக்வீட் வயல்கள் மட்டுமே.

பக்வீட் பூக்களின் வாசம் அப்போது அவன் மூக்கை உறுத்தியதுபோல் வேறு எப்போதும் உறுத்தியதில்லையென அவன் நினைத்தான். அவனுக்குத் தலை சுற்றியது. உதட்டிலிருந்து உப்புக் கரிக்கும் திரவம் ஒன்று அவன் நாக்கில் பட்டது. அவன் மூக்கில் இரத்தம் வந்துகொண்டிருந்தது.
இரத்தம் வரும் மூக்கை ஒரு கையால் அமுக்கிப் பிடித்துக்கொண்டு, அவன் ஓடிக்கொண்டிருந்தான். `முட்டாள் பையா, முட்டாள் பையா` என ஒரு குரல்   அவனைத் துரத்தித் துரத்தித் தொடர்வதாக அவனுக்குள்ளேயே ஒரு நினைவு.
சனிக்கிழமை வந்தது.
அவன் நீரோடைக் கரைக்கு வந்து சேர்ந்தபோது, பல நாட்களாகக் கண்ணில் தென்படாத அந்தச் சிறுமி நீரோடையின் பக்கமாக உட்கார்ந்து தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தாள். அவன் அவளைத் தவிர்ப்பதான நடிப்பில் நடைக்கற்களின் குறுக்காகச் செல்லத்தொடங்கினான். ஒரு சில நாட்கள் முன்பு அந்தச் சிறுமியின் கண்முன்னாலேயே, அவன்  ஒரு முட்டாளைப் போலக் காட்டிக்கொண்டான். அதனால், மிகுந்த கவனத்தோடு அது ஒரு நெடுஞ்சாலையாக இருந்தால் எப்படிக் கடப்பானோ, அதுபோல நடந்தான்.
‘’ ஹேய்!’’
அவன் கேட்காதது போலச் சென்றான்; ஆனாலும் கரை மீது ஏறியதும் நின்றான்.
‘’ ஹேய், இது என்ன சிப்பி?’’
தன் நினைவின்றியே திரும்பினான். அவளின் ஒளிவீசும் கறுப்புக் கண்களுக்கு எதிரில் நேருக்கு நேராகத் தான் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். உடனேயே பார்வையை அவளின் உள்ளங்கைக்குத் தாழ்த்தினான்.
‘’ இதுவா, பட்டாம்பூச்சிக் கிளிஞ்சல்’’
‘’ ஆஹா, என்ன ஒரு அழகான பெயர்!’’
அவர்கள் பாதை பிரியும் இடத்துக்கு வந்துசேர்ந்துவிட்டார்கள். அங்கிருந்து அவள் ஒரு மைல் தூரம் அல்லது அந்த அளவுக்குக் கீழே இறங்க வேண்டும். அவன் இரண்டு அல்லது மூன்று மைலுக்கு மலை மீது ஏற வேண்டும்.
அவள் நின்றாள். ‘’ நீ எப்போதாவது அந்த மலைக்கும் அப்பால் போயிருக்கிறாயா?’’
அவள் வயல்களின் முடிவுக்கும் அப்பால் சுட்டிக்கொண்டிருந்தாள்.
‘’ இல்லவே இல்லை. ஒருதடவை கூடப் போனதில்லை.’’
‘’ நாம் ஏன் போகக் கூடாது? கீழே கிராமத்தில் எல்லாம் ஒரே மாதிரி, சலிப்பாக இருக்கிறது, என்னால் தாங்கவே முடியவில்லை.’’
‘’ ஆனால், எப்படிப் பார்த்தாலும், அது நிரம்பத் தூரந்தான்.’’  
‘’ நிரம்பத் தூரம் என்று  எந்த அர்த்தத்தில் சொல்கிறாய்? நாங்கள் சியோலில் புறவெளி விருந்தயர்தல்களின் போது மிகமிக நீண்ட தூரத்துக்கு நடப்போம்.’’ அவளின் கண்கள், ‘’ முட்டாள் பையன்! முட்டாள் பையன்!’’ எனச் சொல்வது போலத் தோன்றியது.
அவர்கள் நெல் வயல்களுக்கு நடுவிலான பாதையில் சென்றார்கள். இலையுதிர்கால அறுவடை நடந்துகொண்டிக்கும் வயல்களின் அருகாகக் கடந்து சென்றார்கள்.
அங்கே பறவை ஓட்டும் கோமாளிப் பொம்மை (கண் திருஷ்டி பொம்மை)  ஒன்று நின்றுகொண்டிருந்தது.  அதன் வைக்கோல் கயிற்றைப் பிடித்திழுத்து அசைத்தான். அதனுள்ளிருந்து சில குருவிகள் பறந்தன. அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அவர்களின் தலைமை வயலுக்கு அவன் முன்னதாகவே போய்க் குருவிகளை விரட்டிக்கொண்டிருப்பதாக வீட்டில் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
‘’ இது நல்ல வேடிக்கை!’’
அவள் அந்தக் கோமாளிப்பொம்மையின் வைக்கோல் கயிற்றைப் பிடித்து வெட்டிவெட்டி, இழுத்துக்கொண்டிருந்தாள். அந்தப் பொம்மை அப்படியும் இப்படியுமாக அசைந்து நாட்டியம் காட்டியது.  அவளின் இடது கன்னத்தில் ஒரு சிறு குழி விழுந்தது.
சிறிது தூரம் தள்ளி இன்னொரு கோமாளிப்பொம்மை இருந்தது. அவள் அதை நோக்கி ஓடுகிறாள். அவள் பின்னாலேயே அவனும் ஓடுகிறான். இன்று அவன் சீக்கிரமாகவே வீட்டுக்குப் போய் வேலையில் உதவ வேண்டுமென்பதை மறந்துவிட முயற்சிப்பது போலவே இருந்தது.
அவன் வெறுமனே அவளுக்கு நெருக்கமாக, அவள் அருகாகவே ஓடுகிறான். வெட்டுக்கிளிகள் அவர்கள் முகத்தில் அப்பிக் கறித்துத் துள்ளிவிழுகின்றன. இலையுதிர்காலக் களங்கமற்றத்  தூயநீலவானம் அவன் கண்களின் முன்பாக அப்படியே உருண்டு, உருண்டு சுழலத்தொடங்குகிறது. அவன் கிறக்கமாக உணர்கிறான். ஏதோ ஒன்று பருந்துபோல மேலே மேலே மேலுக்கும்மேலாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அங்கே மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 
பின்னால் திரும்பியபோது, அவன் அப்போதுதான் ஓடிக்கடந்திருந்த கோமாளிப்பொம்மையை அவள் இழுத்திழுத்து அசைத்துக்கொண்டிருந்தாள். அது முந்தையதைவிட நன்றாக அசைந்தாடியது. நெல்வயல்கள் முடிகின்ற இடத்தில் ஒரு கால்வாய் இருந்தது. முதலில் அவள்தான் அதைத் தாண்டிக் குதித்தாள்.
அங்கிருந்து மலையடிவாரம் வரைக்கும் வயல்கள், வயல்கள், வயல்கள்தான்.
சிறுதான்ய வைக்கோல் குவிக்கப்பட்டிருந்த வயல் மேட்டினைக் கடந்தார்கள்.
‘’ அது என்ன?’’
‘’ ஒரு காவல் குடில். ‘’
‘’ அங்கே பார், மஞ்சள் முலாம். முளைவிட்டிருக்கிறது, அதெல்லாம் நல்லதா?’’
‘’ஆமாம், அவை நன்றாகவே இருக்கும், ஆனால் தர்ப்பூசணிகள்தாம் இனிப்பு. 
‘’ எனக்கு மட்டும் ஒன்று கிடைத்தால் முழுவதையும் தின்று விடுவேன்.….’’
‘’ அவன் முலாம்பழக் கொடியழிவுகளின் நடுவே பயிராகியிருந்த வெள்ளை முள்ளங்கிகளில் இரண்டைப் பிடுங்கிக்கொண்டு திரும்பி வந்தான். அவை இன்னும் முழுதாகப் பருக்கவில்லை. அவற்றின் இலைகளைத் திருகித் தூர எறிந்துவிட்டு, ஒன்றை அவளிடம் நீட்டினான். பின்னர் ‘இப்படித்தான் சாப்பிடவேண்டும்` எனச் சொல்வது போல் அதன் பருத்த முனையில் இலேசாகப் பல் பதித்துப் பின்னர், நகத்தால் தோலை உரித்து அடியிலிருந்த வெள்ளைப்பகுதியைத் திண்ணமாய்க் கடித்தான்.
அவளும் அவனைப் பார்த்து அதுபோலவே கடித்தாள். ஆனால் மூன்று வாய் மெல்லும் முன்பே, ‘’ ஓ, இது காரம், விறுவிறுவென்கிறது’’ எனச் சொல்லித் தூர எறிந்தாள்.
‘’ ஆமாம். தாங்கவில்லை, மோசம், என்னாலும் முடியவில்லை.’’ அவன் இன்னும் தூரமாக விட்டெறிந்தான்.
மலை நெருங்கிவிட்டது.
இலையுதிர்காலத்தின் பழுப்பு இலைகள் அவர்களின் கண்களை ஈர்த்தன.
‘’ய்ய்யா!’’
அவள் மலையை நோக்கி ஓடினாள். அப்போது அவன் அவள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கவில்லை. பதிலாக, அவள் சேர்த்திருந்ததைவிடவும் அதிகமாகப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தான்.
`இது கிரைசாந்தியம், இது புஷ் க்ளோவர், இது மணிப்பூ ….`
‘’ மணிப்பூக்கள் இவ்வளவு அழகாயிருக்குமென நான் நினைக்கவேயில்லை. எனக்கு ஊதா பிடிக்கும்! …. ஆனால், இந்தப்பூ சன்னலின் நிழற்தட்டுப் போல இருக்கிறது, இது என்ன பூ?’’
‘’ அது…, வெலேரியன்.’’ அவள் வெலேரியனைக் குடைபிடிப்பதுபோல் பாவனை காட்டினாள். அப்போது மெல்லச் சிவந்த அவளின் அழகு முகத்தில் மெல்லிய அந்தச் சிறுகுழி அழகாகத் தோன்றியது.
பின்னும் அவன் கை நிறையப் பூக்களைப் பறித்தான். அவளுக்குத் தருவதற்காக அவன் புத்தம் புதிய மலர்களை மட்டுமே தெரிந்தெடுத்தான். 
ஆனால், அவளோ, ‘’ அதில் ஒன்றைக்கூடத் தூர எறிந்துவிடாதே.’’ என்றாள்.
அவர்கள்  முகட்டின் வழியாக மேலேறிக்கொண்டிருந்தார்கள்.
எதிரில் தெரிந்த பள்ளத்தாக்கின் சரிவுகளில், சில ஓலைக் குடிசைகள் இணக்கமான கூட்டமாகத் தெரிந்தன.
எதுவும் பேசிக்கொள்ளாமல் இருவரும் ஒரு பாறையின் மீது அருகருகாகக் கால்பரப்பி அமர்ந்தனர். அவர்களைச் சுற்றிலும் வழக்கமற்ற ஒரு அமைதி சூழ்ந்திருப்பதாகத் தோன்றியது.  அங்கிருந்ததெல்லாம், வெப்பத்தில் காயும் புல்லின் மணத்தைப் பரப்பிக்கொண்டிருந்த இலையுதிர்காலக் கதிரொளி மட்டுமே.
‘’ அது என்ன மாதிரியான பூ?’’  
மிகச்செங்குத்தான ஒரு சரிவில் பின்னிக்கிடந்த ஆரோரூட் கூவைக்கிழங்கின் படர்கொடி ஒன்றில் அந்தப் பருவத்தின் கடைசிப்பூக்கள் இதழ்பரப்பியிருந்தன.
‘’இது விஸ்டீரியா போலவே இருக்கிறது. சியோலில் எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு பெரிய விஸ்டீரியா இருந்தது. அந்த மரத்தின் கீழ் என்னோடு விளையாடிய தோழிகளை இந்தப் பூக்கள் இப்போது நினைவுபடுத்துகின்றன.’’  
அவள் எழுந்து சரிவை நோக்கிச் சென்றாள். நிறையப் பூக்கள் மலர்ந்து கிடந்த ஒரு கொடியைப் பிடித்து இழுக்கத் தொடங்கினாள். அது எளிதில் அறுவதாக இல்லை. மேலதிகமான முயற்சி அவள் சறுக்கியதில் முடிந்தது. அவள் ஒரு கூவைக்கொடியைப் பற்றிக்கொண்டாள்.
அவன் பதறி ஓடினான். அவள் ஒரு கையை நீட்டினாள். அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே, அந்தப்பூவை அவனே பறித்துக் கொடுத்திருக்க வேண்டுமெனச் சொல்லி மன்னிக்கும்படி வேண்டினான். அவளின் வலது கால் மூட்டிலிருந்து இரத்தம் கசிந்தது. அதைக்கண்டதும் உடனடியாகத் தானாகவே சிராய்ப்பில் உதட்டைப்பொருத்தி உறிஞ்சத் தொடங்கிவிட்டான். பின்னர், திடீரென ஏதோ நினைவு தட்டியவனாக, எழுந்து சிறிது தூரம் ஓடினான்.
கண நேரத்தில் திரும்பியவன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, ‘’ இதைத் தடவிக்கொண்டால் வலி கொஞ்சம் சரியாகிவிடும்.’’ என்றான்.
சிராய்ப்பின் மீது பைன் மரப்பிசினை அவன் தடவி முடித்ததும் கூவைக் கொடிகள் கிடந்த இடத்துக்கு ஓடி நிறையப்பூக்கள் பூத்திருந்த கொடியாகப் பார்த்துப் பலமுறை பல்லால் கடித்து இழுத்தான். அவற்றைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தான். பின்னர், அவன், ‘’ அங்கே ஒரு கன்றுக்குட்டி இருக்கிறது. வா, பார்க்கலாம்.’’ என்றான்.
அது ஒரு வெளிறிய மஞ்சள் நிறக் கன்று. அதன் மூக்கில் இன்னும் வளையம் செருகப்படவில்லை.
அதன் மூக்கணாங்கயிற்றைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, அதன் முதுகைத் தடவிக்கொடுக்கும் பாவனையில் ஒரே எம்பில் அதன் மீது ஏறியமர்ந்தான். கன்று உதைத்து, வட்டமிட்டுச் சுழலத் தொடங்கியது.
அவளது வெளிறிய முகம், இளஞ்சிவப்புச் சட்டை, கருநீலப் பாவாடை, அவள் கையிலிருந்த பூக்கள் எல்லாம் மங்கலாகத் தெளிவற்றதாகின. எல்லாமாகச் சேர்ந்து ஒரு மாபெரும் பூங்கொத்து போலத் தோன்றியது. அவன் சிறிது மயக்கமாகத் தலை சுற்றுவதாக உணர்ந்தான். ஆனாலும் அவன் இறங்கப் போவதில்லை. அவனுக்குப் பெருமையாக இருந்தது. அது, அவனால் மட்டுமே முடிகிற அந்தச் சிறுமியால் செய்துகாட்ட முடியாத ஒன்று,
‘’ அடேய், என்ன செய்வதாக நினைப்பு?’’ உழவர் ஒருவர் உயரமான புற்களின் நடுவேயிருந்து வந்துகொண்டிருந்தார்.
சிறுவன் கன்றின் முதுகிலிருந்தும் குதித்தான். இன்று கடுமையாகத் திட்டு கிடைக்கப் போகிறதென நினைத்தான். - `கன்றுக்குட்டி மேலா ஏறுகிறாய்,  அதன் முதுகை உடைக்கப் பார்க்கிறாயா, பின்னே, அப்படியில்லாமல் வேறென்ன?` என்கிற மாதிரி.
ஆனால், அந்த நெடுந்தாடி உழவர் சிறுமியை நோக்கி வெறுமனே ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கன்றின் கயிற்றை அவனிடமிருந்து பறித்து, இழுத்துப் பிடித்துக்கொண்டு, ‘’ எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக வீட்டுக்கு ஓடி விடுங்கள்.  மழை  வந்துகொண்டிருக்கிறது.’’ என்றார்.
உண்மையிலேயே ஒரு பெரிய கருமேகம் அவர்கள் தலைக்கு மேலாகச் சுருண்டுகொண்டிருந்தது. அவர்களைச் சுற்றிலும் திடீரென்று பலத்த சப்தம் சூழ்ந்துவிட்டதை அவர்கள் உணர்ந்தனர். காற்று  படபடத்து வேக வேகமாக வீசிற்று. ஒரு மின்னலில் அவர்களைச் சுற்றியிருந்த எல்லாமே இருண்டு கருஊதாவாக மாறின. அவர்கள் கீழே இறங்கத் தொடங்கியதுமே ஓக்மர இலைகளின் மீது மழைத்துளிகள் விழுவதைக் கேட்டனர். பெரிய பெரிய துளிகள். கழுத்தின் பின்புறம் குளிர்வதாக அவர்கள் உணர்ந்தனர். பின் ஒரு கணத்தில் மழைக்கம்பிகளின் திரை ஒன்று வழியை மறைத்து நின்றது. அதன் ஊடாகவே வயல் ஒன்றில் மேட்டுக்கூரை ஒன்றினை அவர்களால்  காணமுடிந்தது. அவர்கள் அங்கே சென்று தங்கமுடியும். ஆனால், அதன் தூண்கள் சாய்ந்தும் கூரை அங்கங்கே பிய்ந்தும் தெரிந்தது. குறைவாக ஒழுக்கிருந்த ஒரு இடத்தைச் சுட்டியவாறே அவள் மேலே ஏறுவதற்கு உதவினான்.
அவளது உதடுகள் நீலமாகின; தோள்கள் நடுங்கிக்கொண்டேயிருந்தன.
அவன், தன் பருத்தி மேலாடையைக் கழற்றி அவள் தோள்களின் மேலாகப் போர்த்தினான். அவள் கண்களை உயர்த்தி அவனை வெறுமனே பார்த்தாள். அவன் விருப்பம்போல் செய்துகொள்ளட்டுமென அமைதியாக இருந்தாள். அடுத்து, அவள் அணைத்துக்கொண்டிருந்த பூங்கொத்திலிருந்து ஒடிந்த தண்டுகளும் கசங்கியதுமான பூக்களை அவள் காலடியில் பரப்பினான். சிறிது நேரத்திலேயே அவள் நின்றுகொண்டிருந்த இடத்திலும் மழை சொட்டத் தொடங்கியது. அவர்கள் மேற்கொண்டு அங்கே தங்கவியலாது போனது.
வெளியே சுற்றுமுற்றும் பார்த்தபின் ஏதோ நினைவு வந்தவனாக, அவன் சோளக்கொல்லையை நோக்கி ஓடினான். சோளத்தட்டைகளை நேராக ஒன்றோடொன்றாகச் சேர்த்து நிறுத்தி வைத்திருந்த கூம்புக்குவியலில் ஒன்றைச் சிறிது அகலமாக்கிப் பின்னர் அதனோடு இன்னொரு குவியலை எடுத்துவந்து சேர்த்தான். பின்னர் அதனை மீண்டும் அகலமாக்கியபின் அங்கே வந்துவிடுமாறு அவளை நோக்கிக் கைகளை அசைத்தான்.
அந்த சோளத்தட்டைக் கூம்புக்குள் மழை நுழையவில்லை. அது இருட்டாக மிக ஒடுங்கியதொரு இடமாக இருந்தது. அவன் கூம்பின் பின்புறமாக அவள் மீது மழை படாதவாறு அமர்ந்தான். ஆனால், அவன் மழையில் நனைவதாக இருந்தது. அவன் தோள்களிலிருந்து ஆவி எழும்பியது.
அவனை உள்ளே வந்து அமருமாறு ஒருவித இரகசியக்குரலில் அவள் சொன்னாள். எனக்கொன்றுமில்லை, சரியாகத்தான் இருக்கிறேனென்றான்.  மீண்டும் அவள், அவனை உள்ளே வந்து அமருமாறு சொன்னாள்.
பின்வழியாக அவன் உள்நுழைவதைத் தவிர வேறு வழியில்லாமலாயிற்று. ஆனால், அப்படி அவன் நுழைகையில் நெருக்கமாகி அவள் கையிலிருந்த பூக்கள் கசங்கி விட்டன. ஆனால், அவள் அதைக் கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.  அவனின் நனைந்த உடம்பிலிருந்த எழுந்த வாசனை அவள் மூக்கை உறுத்தியது. ஆனாலும் அவள் வேறுபக்கமாகத் திரும்பிக் கொள்ளவில்லை. அவனின் உடம்புச் சூட்டில் அவளது உடல் நடுக்கம் குறைவதாகவும் அவள் உணர்ந்தாள்.
சோளத்தட்டைகளின் மீதான சப்தம் திடீரெனச் சுத்தமாக நின்றுபோனது. வெளியே இருள் விலகி, ஒளி மெல்லப் பரந்துகொண்டிருந்தது.
அவர்கள் சோளத்தட்டைக் குவியலுக்குள்ளிருந்து தலை நீட்டி, மெல்ல, வெளிவந்தார்கள். அப்படியொன்றும் வெகுதூரமெனச் சொல்லமுடியாத ஒரு தூரத்தில், கதிரொளி அவர்கள் எதிரிலேயே கண் கூசுமளவுக்குப் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அவர்கள் கால்வாயை அடைந்தபோது அதில் தண்ணீர் நிரம்பிச் சென்றது. சேறு கலந்த அந்தப் புதுவெள்ளம் கதிரொளியில் செக்கச் செவேலெனத் தோன்றியது. அவர்களால் அதனைத் தாண்டிக்குதித்துவிட முடியாது.
அவன் திரும்பி முதுகைக் காட்டி நின்றான். அவள் மிகுந்த பணிவோடு, தன்னை அவன் முதுகில் ஏற்றிக்கொள்ள அனுமதித்தாள். அவன் தொடைக்கு மேலாக ஏற்றிச் சுருட்டியிருந்த அரைக்காற்சட்டை வரைக்கும்கூடத் தண்ணீர் உயர்ந்துவிட்டது.
அவள் சத்தமிட்டுக் கதறி, அவனது கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள்.
அவர்கள் நீரோடையை அடையும் முன்னராகவே இலையுதிர்கால வானம் முழுவதுமாகத் தெளிந்து எதுவுமே எப்போதுமே நடந்திராதது போல மேகங்களற்ற நீலமாகிவிட்டிருந்தது.
அதன்பின் அவளைப்பற்றி எதுவுமே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் அவளைப் பார்த்துவிட வேண்டுமென்று அவன் நீரோடைக்கு ஓட்டமாக ஓடி வருவான்; ஆனால், அவளைப் பார்க்க முடியவில்லை. பள்ளிக்கூட இடைவேளை நேரத்தில் விளையாட்டு மைதானத்தில் தேடிப் பார்ப்பது அவனது வழக்கமானது. அவன் ஐந்தாம் வகுப்புப் பெண்கள் அறையைக்கூட நோட்டமிட்டுப் பார்த்துவிட்டான். ஆனாலும் அவள் தென்படவில்லை.
அன்றும் கூட அவன் நீரோடைப் பக்கமாகக் காற்சட்டைப்பைக்குள் வெள்ளைக் கூழாங்கல்லை உருட்டிக்கொண்டே வந்தான். நல்லவேளை, அவன் கவனித்துவிட்டான். அந்த நீரோடைக்கரையில் அவள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்!
அவன் இதயம் வேகமெடுக்கத் தொடங்கியதை உணர்ந்தான்.
‘’இவ்வளவு நாளும் உடம்பு சரியில்லாமலிருந்தது.’’
நிச்சயம், அவள் முகம் அதிகமாகத்தான் வெளிறியிருந்தது.
‘’அன்று மழையில் நனைந்ததால்தான் இப்படியானது, இல்லையா?’’
அவள் ஆமென்று அமைதியாகத் தலையாட்டினாள்.
‘’ இப்போது கொஞ்சம் பரவாயில்லையா?’’
‘’ இல்லை, இன்னும் சரியாக, இல்லை….’’
‘’ அப்படியென்றால் நீ படுக்கையில் தானே இருக்கவேண்டும்.’’
‘’ அது… நிரம்பவும் அலுப்பாக இருக்கிறது. அதனால்தான் வெளியே வந்தேன்….. அன்றைக்கு நிரம்பவும் நன்றாக, நல்ல விளையாட்டாக இருந்ததில்லையா? உனக்குத் தெரியுமா? அன்று……. அன்றைக்குத்தான், இது எங்கேயோ பட்டுக் கறையாகிவிட்டது. அது போக மாட்டேனென்கிறது.’’
அவள் குனிந்து இளஞ்சிவப்பு ரவிக்கையின் முன்பக்கத்தில் பார்த்தாள். அது  இருண்ட செம்மண் சேற்றுக்கறை போலத் தோன்றியது.
‘’இது என்ன கறையாக இருக்கும்?’’ என அவள் கேட்கும்போது அவளது கன்னத்தில் அந்தச் சிறிய சுழிப்பு மெல்லத் தோன்றியது.
அவன் எதுவும் பேசாமல் அந்தச் சிவப்பு ரவிக்கையின் முன்புறத்தையே  பார்த்துக்கொண்டிருந்தான்.
‘’ இங்கே பார், நான் கண்டுபிடித்துவிட்டேன், அன்றைக்கு நாம் அந்தக் கால்வாயைக் கடக்கும்போது நீ என்னை முதுகில் ஏற்றிக் கொண்டாயே, இந்தக் கறை உன் முதுகிலிருந்துதான் பட்டிருக்க வேண்டும்
அவன் முகத்தில் குப்பென்று இரத்தம் ஏறுவதை உணர்ந்தான்.
பாதை பிரிகின்ற இடத்திற்கு வந்தபோது, ‘’ இங்கே பாரேன், வீட்டில், இன்று காலையில் இலந்தைப்பழம் பறித்தோம்… நாளை முன்னோர்களுக்குப் படையல் …. ‘’ என்றவள், ஒரு கை நிறைய இலந்தைப்பழங்களை, இந்தா, எடுத்துக்கொள்ளென்று நீட்டினாள். அவன் தயங்கினான்.
 ‘’ ஒன்றைச் சாப்பிட்டுத்தான் பாரேன். என்னுடைய கொள்ளுத் தாத்தா, அவரே நட்டு, வளர்த்த மரமென்று சொல்கிறார். நிரம்ப இனிப்பாக இருக்கும்.’’
‘’அதற்கென்ன, உண்மையிலேயே நிரம்பப் பெரியவைதாம்.’’ எனச் சொல்லிக் கொண்டே, உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் குழித்து நீட்டினான்.
‘’ அப்புறம், முன்னோர்களுக்கான சடங்குகளுக்குப் பின், வேறும் சில இருக்கின்றன. நாங்கள் வீட்டைக் காலிசெய்து போகப்போகிறோம்.’’
அவளின் குடும்பம் இங்கே வருமுன்னர் எப்படியிருந்தார்களென அவனுடைய பெற்றோர் பேசிக்கொண்டிருந்ததை அவன் கேட்டிருந்தான். சியோலில் மாஸ்டர் யுன்னுடைய பேரன்களின் வியாபாரம் படுத்துவிட்டது. அதனால் அவரால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லமுடியாமலாகிவிட்டது. அவர்களது குடும்ப வீடும் வேறு கைக்கு மாறிவிடும் போலிருக்கிறது.
‘’எனக்கு என்னவோ வீட்டை விட்டுவிட்டுப் போகப் பிடிக்கவேயில்லை. ஆனால், அது அப்பா அம்மா முடிவு, அதனால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ..’’ முதல் தடவையாக அவளது கறுப்புக்கண்கள் துக்கம் தோய்ந்து தெரிந்தன.
அவளைப் பிரிந்து, வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, ‘ அவள் வீட்டைவிட்டுப் போகிறாள்` எனப் பலதடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பதை உணர்ந்தான். அதில் குறிப்பாக வருத்தமோ  துக்கமோ  எதுவுமில்லை. ஆனாலும், அவன் மென்றுகொண்டிருந்த இலந்தைப் பழத்தின் சுவைதான், அவனுக்குத் தெரியவேயில்லை.
அன்று மாலை அவன் பழைய தியோக்சோயின் வாதுமைத் தோட்டத்துக்குள் ரகசியமாக நுழைந்தான்.
பகலிலேயே அவன் பார்த்துவைத்திருந்த அந்த வாதுமை மரத்தில் ஏறினான். அதில் அவன் ஏற்கெனவேயே பார்த்துவைத்திருந்த கிளையை ஒரு கம்பால் தட்டத் தொடங்கினான். வாதுமைக் கொட்டைகள்  கீழே விழுகின்ற சப்தம் அநியாயத்திற்கு வினோதமாக இருந்தது. அவன் இதயம் உறைந்துபோனது. ஆனால், அடுத்த கணத்தில் அவன் மூச்சைப் பிடித்துக்கொண்டு எதிர்பாராத வேகத்தில் கம்பை வீசத் தொடங்கினான். ‘’ அடப்,  பெரிய பெரிய காய்களா, எக்கச்சக்கமாகக் காய்த்துத் தொங்குகிறீர்கள்,  எல்லோரும் வந்துவிடுங்கள், ஆமாம், வந்துவிடுங்கள்,  ஒன்றாகக் கீழே விழுங்கள், ஆமாம், எல்லோரும் விழுந்துவிடுங்கள்.’’
திரும்பும் வழியில், கிட்டத்தட்ட முழுநிலாவாகப் போகிற நிலவு நீட்டிய நிழல்களுக்குள்ளாகவே வந்துவிட்டான். இன்னும் இரண்டு நாட்களில் அது இலையுதிர்காலப் பூரண முழுநிலவாக இருக்கும். நிழல்கள் மீது தனக்கு நன்றியுணர்வு ஏற்படுவதை அவன் அன்றுதான் முதல்முதலில் உணர்ந்தான்.
புடைத்துப் பருத்திருந்த காற்சட்டைப்பையை இதமாகத் தடவிக்கொண்டான். வாதுமைகளை வெறுங்கையால் உரித்தால் கொப்புளங்கள் உண்டாகுமெனச் சொல்வதைப்பற்றி அவன் சிறிதும் கவலைப்படவில்லை. அவன் விரும்பியதெல்லாம், அந்தக்கிராமத்திலேயே மிகச்சிறந்ததான பழைய தியோக்சோய் தோட்டத்து மரங்களின் வாதுமைப் பருப்புகளை அவளிடம் கொடுத்து ருசிக்கச் செய்யவேண்டுமென்பதுதான்.
அந்தக்கணத்தில்தான்  பொறியிலடித்தது போல ஒரு எண்ணம் தோன்றியது. குணமாகி, அவர்கள் வீட்டைக் காலிசெய்து போகும் முன்பாக ஒருநாள் கடைசி, கடைசியாக நீரோடைப் பக்கம் வருமாறு அவளிடம் சொல்லாமல் விட்டிருந்தான். சரியான ஆள்! ஆம், சரியான முட்டாள்.
அடுத்தநாள் பள்ளியிலிருந்து வந்தபோது, வீட்டில் அவனது அப்பா இருப்பதிலேயே நல்லதாக ஆடை அணிந்து, கையில் ஒரு கோழியைப் பிடித்துக்கொண்டு நின்றார்.
அவர் எங்கே போகிறாரெனக் கேட்டான்.
பதில் சொல்லக் கவலைப்படாத, அவனது அப்பா கையிலிருந்த கோழியைத் தூக்கி எடைபார்த்துக்கொண்டே ‘’ இந்தப் பருமன் போதுமா?’’ எனக்கேட்டார்.
அவனுடைய அம்மா அவரிடம் ஒரு வலைப்பையைக் கொடுத்து, ‘’ அது ஏற்கெனவேயே சிலநாட்களாகக் `க்ளக், க்ளக்கென்று சத்தம் எழுப்பிக்கொண்டு முட்டையிடத் தோதாக இடம் தேடிக்கொண்டிருந்தது. அது பார்வைக்குப் பெரிதாக இல்லாமலிருக்கலாம்; ஆனால் அது நல்லக் கொழுத்ததுதான்.’’ இப்போது அவன், அப்பா எங்கே போகிறாரென அம்மாவிடம் தெரிந்துகொள்ள முயற்சித்தான்.
 ‘’ ஏன், அவர் கீழே சமவெளியில், பழைய பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் மாஸ்டர் யுன் வீட்டுக்குப் போகிறார். அவர் இதனைப் பிரார்த்தனைக்கு( பிண்டம் போட)ப் பயன்படுத்திக் கொள்வார்…..’’. அப்படியென்றால் இன்னும் நல்லப் பெரிதாகக் கொண்டுபோக வேண்டும். அந்த முத்துச்சேவல் …..’’ அதைக்கேட்டதும் அவனுடைய அப்பா பெரிதாகச் சிரித்துக்கொண்டே, ‘’ஹேய், இதிலேயே நல்ல கறி இருக்கிறது.’’ என்றார்.
எந்தக் காரணமும் இல்லாமலே, அவனுக்குத் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டதாக, உணர்ந்தான். அதனால், அவன் புத்தகங்களைக் கீழே எறிந்துவிட்டு, தொழுவத்துக்குள் சென்றான். அங்கே மாட்டு ஈ ஒன்றை அடிப்பது போன்ற பாவனையாகப் பசுவின் முதுகில் ஓங்கி அறைந்தான்.
நீரோடையில் தினமும் தண்ணீர் அதிகமாகிக் கொண்டிருந்தது.
அவன் பாதை பிரியும் இடத்தில் போய், நின்று கீழ்ப்பக்கமாகத் திரும்பி நின்றான். பழைய பள்ளிக்கூடத்தைச் சுற்றியிருந்த கிராமம் தெளிந்த நீலவானத்தின் கீழாக அருகாமையில்தான் தெரிந்தது. நாளை அவள் குடும்பம் யாங்ப்யாங்குக்குச் செல்வதாகவும் அவர்கள் அங்கே ஒரு சிறு மளிகைக்கடை வைக்கப் போகிறார்களென்றும் அவன்  பெற்றோர் பேசிக் கொண்டனர்.
அவன், நினைவுகள் எதுவுமின்றியே, காற்சட்டைப்பைக்குள்ளிருந்த வாதுமைக் கொட்டைகளை வருடிக்கொண்டிருந்தான்; இன்னொரு கையால் ஒரு பிடி நாணல்களைப்பற்றி வளைப்பதும் ஒடிப்பதுமாக இருந்தான்.
அன்று மாலையிலும், தூக்கம் வராமல் உருண்டுகொண்டிருக்கும்போதும், மீண்டும் மீண்டுமாக ஒரே எண்ணம் மட்டுமே அவனுக்குள் எழுந்தது: நாளை,  அவளின் குடும்பம் செல்வதைப் பார்க்க நானும் போகலாம்.  அப்படி நான் போனால், ஒருவேளை அவளை நான் பார்க்கவும் முடியலாம்.
அப்புறம், தூக்கம் அவனைத் தழுவியிருக்கக் கூடும்.
ஆனால், அப்புறம்,‘’ உம்…, என்ன வாழ்க்கை இது, உண்மையிலேயே, என்ன மாதிரியான ஒரு உலகத்தில், வாழ்ந்துகொண்டிருக்கிறோம்….ச்சே..’’ அப்பா கிராமத்திலிருந்து வந்துவிட்டிருக்கிறார். ‘’ மாஸ்டர் யுன்னின் குடும்பத்தைத்தான் பாரேன்,  வயல் எல்லாவற்றையும் விற்றுத் தலைமுறை, தலைமுறையாகக் குடியிருந்த வீட்டையும் விற்றுவிட்டார்கள்.  அப்புறமும் பெற்றவர்களின் கண் முன்னாலேயே குழந்தை இறக்கிறது…..’’  விளக்குவெளிச்சத்தில் அமர்ந்து தைத்துக்கொண்டிருக்கும் அவனுடைய அம்மா, ‘’ அந்தக் கொள்ளுப் பேத்தி ஒரே குழந்தையாயிற்றே, இல்லையா?’’ எனக் கேட்கிறாள்.
 ‘’ ஆமாம், இரண்டு பையன்கள் இருந்தார்கள்; ஆனால் இன்னும் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போதே அதுகளையும் மண்ணுக்குக் கொடுத்துவிட்டார்கள். குழந்தைகளில் கூட ஒரு குடும்பம் இப்படிச் சபிக்கப்பட்டிருந்தால் பின்னர் எப்படித்தான்?’’
‘’அது உண்மைதான். அந்தப் பெண்குழந்தை சில நாட்களாகவே உடம்புக்குச் சரியில்லாமல் இருந்திருக்கிறாள். அவர்களால் மருந்து கூடச் சரியாக வாங்கிக் கொடுக்கமுடியாமலிருந்திருக்கிறது.’’
 ‘’ இப்போது அந்தக் குடும்பத்தின் சல்லிவேர்கூட இல்லாமல் வாரிசு அற்றுப்போயிற்று….. ஆனால், ஒன்று பார்த்துக்கொள், அந்தச் சிறுபெண், சிறிது வித்தியாசமானவளென்று நினைக்கமாட்டாயா, என்ன? அதாவது, அவள் இறப்பதற்கு முன்னால், நம்பினால் நம்பு, நம்பாவிட்டால் போ, அவள் இறந்தால், அவள் அணிந்திருந்த ரவிக்கை, பாவாடை, எப்படி இருந்ததோ அப்படியே அதோடு அவளைப் புதைக்கவேண்டுமெனச் சொல்லியிருந்தாளாம்.’’


http://hompi.sogang.ac.kr/anthony/Shower.htm

திசை எட்டும் மற்றும் மலைகள் இணைய இதழில் வெளியானது.

`கோடையில் ஒரு மழை`, ஆதி பதிப்பகம் ஏப்ரல் 2014 முதல் பதிப்பில் வெளியாகியுள்ளது.

தென்கொரியச் சிறுகதை - குடிநோய் (Drunkard)

குடிநோய் (The Drunkard)
தென்கொரிய ஆங்கிலம் : சாய் இன்-ஹோ CHOI IN-HO (தென் கொரியா)
தமிழில் ச.ஆறுமுகம் 

 சியோலில் 1945 – ல் பிறந்த, தென்கொரிய எழுத்தாளர் சாய் இன்-ஹோ, யோன்சீ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித்துறையில் பட்டம் பெற்ற உடனேயே புனைகதைப் படைப்பில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். 1963ல் அவரது முதல் படைப்பான `சுவர்த் துளை ஒன்றின் வழியாக` என்ற குறுநாவல் உள்ளூர் இதழ் ஒன்றின் பரிசினைப் பெற்றது. அதிவிற்பனைப் புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டுள்ள அவர் 1970 களில் கொரியாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகிவிட்டார். உலகத் திறனாய்வுக் களங்களைப் போலவே, கொரியத் திறனாய்வுக் களங்களிலும், அதிவிற்பனைப் படைப்புகள் சீரிய இலக்கியத் தன்மை கொண்டனவை அல்ல என்ற அணுகுமுறை பொதுத்தளத்தில் இருந்தாலும், தீவிர இலக்கியப் படைப்புகளையும் அளிக்கின்ற திறன் கொண்டவராக சாய் இருந்தார். இருப்பினும் அவருடைய அனைத்துப் படைப்புகளுமே  மனித வாழ்க்கையைப் பற்றிய அவரது பார்வையின் ஒரே அடிப்படை கொண்டவையாகவே உள்ளன. மனித சமூகம் உடன் பாடற்ற முரண்பாடுகள், ஒழுக்கச் சீர்கேடுகள், மற்றும் போலித்தனமுடையதாகவே உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். கொரியாவில் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்த சர்வாதிகாரத்தின் அலுவல் பூர்வமான கருத்தியலும் அதனையே வெளிப்படுத்துவதாகவும், அது தோற்றுவிக்கும் எதிர் விளைவுகளான பராதீனப்படுதல் அல்லது ஒழுக்கத்துறையின் அனைத்தையும் எதிர்க்கின்ற உள்ளீடற்ற மறுப்புவாதம் என்பன, உண்மையில் துன்பியல் ஆழங்களிலிருந்தும் தப்பிக்க முயற்சிக்கிற தப்பித்தல் வாதத்தின் மறு வடிவங்களே என அவர் கூறுகிறார்.  அவற்றிலிருந்தும் மீண்டெழ முயற்சித்தலும் எதிரெதிர் நிலைகளின் உண்மையான மீளிணக்கமாக இல்லாமல் ஒரு சமரசத்திற்கே இட்டுச் செல்வதாகவும் கூறுகிறார். அதே நேரத்தில் என்ன விலை கொடுத்தாகிலும், எத்தகைய வேதனை அனுபவித்தாலும், தனிநபர்கள்,  அவர்களது மனிதநேயத்தினை தக்கவைத்துக்கொள்வதன் மூலமே இச்சூழலினை வெற்றிகரமாக முறியடிக்க இயலுமென அவரது சில படைப்புகளில் குறிப்பிடுகிறார்.
அவரது முதல் நாவல் `நட்சத்திரத்தின் சொந்த நகரம்` 1972 ல் வெளியாகி பரபரப்பான விற்பனையைக் கண்டது. அதே ஆண்டிலேயே அதைத் தொடர்ந்து வெளி வந்த இரண்டாவது நாவல் `அன்னியனின் அறை`. 1980க்குள் இருபது நாவல்களைப் படைத்துள்ள அவர் அடுத்த பத்தாண்டுகளில் மேலும் பத்து நாவல்கள் படைத்துள்ளார். `மாபெரும் கண்டுபிடிப்பாளர் தோதானி` என்ற கதைத் தொகுப்பு 1992ல் வெளிவந்தது. அவரது 68 வது வதில் 25.09.2013 ல் மறைந்தார்.    
தற்போது தமிழாக்கப்படும் `drunkard` சிறுகதை அவரது சிறந்த படைப்புகளில் ஒன்று எனக் குறிப்பிடப்படுகிறது.
@@@@@@
 
மதுவகத்தில் சிறுவன் ஒருவனின் தலை திடீரென முளைத்தது.
‘’மாலை வணக்கம்.’’
அந்தச் சிறு பையன் கதவருகில் அமர்ந்திருந்த பெருங்குடியர்களுக்கு வணக்கம் தெரிவித்தான்.
அவர்களில் பலராலும் அவனைப் பார்க்க முடியவில்லை; ஆனாலும், அவர்களில் ஒருவர் மட்டும் அவனைத் தற்செயலாகக் காணநேர்ந்தது.
‘‘இங்கே பாருங்கள், மக்களே! அந்தப் பையனைப் பாருங்களேன்!’’
முதலில் அவனைப் பார்த்தவனுக்கும் அப்போது காலியாகியிருந்த தொடுகறியைப் பற்றித்தான் அதிகம் பேசத்தோன்றியது.
போதை மிகுந்த மதுவுடன் எங்கோ, வெகு உயரத்துக்குச் சென்றுவிட்டிருந்த அந்தக் குடியர்களின் கண்கள் நெருப்புத் துண்டங்களாய்ச் சிவந்து தோன்றினாலும் மயக்கத்தில் மங்கிப்போன பார்வையால், திறந்திருந்த வாசல் வழியாகப் பனிக்காலக் குளிருடன் உள்ளே நுழைந்துவிட்ட அந்தச் சிறுவன் எந்த மாதிரியான பையன்  என்பதைக் கண்டுகொள்வது கடினமாகத்தானிருந்தது.
‘‘ யார்? அந்தப் பயல்!’’
போதையில் தடுமாறும் ஐந்தாறு பார்வைகள் அந்தக் கந்தல் சிறுவன் மீது நிலைத்தன.  எல்லாப்பார்வைகளும் அவன் மீதே குவியக் குவிய, குப்பைக் குவியலைக் கிளறும்போது பிடிபட்டவனைப்போல், அவன் தடுமாற்றமும் குழப்பமுமாகப் பின்வாங்கும் முயற்சியில் பின்பக்கமாக நெளிந்தான். அவன் மிகமிக அருவருக்கத்தக்க ஒரு சிறுவனாக இருந்தான்.
சொறி சிரங்குகள் நிறைந்த அவன் தலை விளம்பரத்தட்டியைப்போல் ஒழுங்கற்றிருந்தது; சீன பாணிக் குட்டைக்கைச் சட்டைக்குள்ளிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த அவனது சிறு கைகள் அழுக்காகிக் கெட்டிதட்டி, துப்பாக்கிக் குண்டுகளின் பளபளக்கும் கவசம் போலக் கறுத்துத் தோன்றின.
‘’டேய், பையா, நாம், ஒரு வாய் குடிக்கலாமா?’’ சிறுவனை முதலில் பார்த்தவன் மதுப் புட்டியை உயரத் தூக்கி ஆட்டிப் பையனுக்கு ஆசை காட்டினான்.
‘’இல்லை. வேண்டாம். உங்களுக்கு நன்றி.’’
திடீரென்று அவன், எந்நேரமும் வெடித்து அழத்தொடங்கிவிடுவான் போல  அவனுடைய வடமேற்கத்தியப் பரந்த உச்சரிப்பில் சத்தமாக உரக்கக் கத்தினான்.
‘’என் அப்பாவை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்.’’
‘’அது எனக்குத் தெரியுமடா, பயலே!’’
அதே மனிதன் தான் பதிலுக்குப் பேசினான்.
‘’எனக்குத் தெரியும். நீ உன் அப்பாவைக் கூட்டிப்போகத்தான் வந்திருக்கிறாய். எங்களுக்கு எல்லாம் தெரியும், ஹஹ் ஹஹ் ஹா! எங்களை மாதிரி பெரியவர்களுக்கு எல்லாமே தெரியும். அப்படித்தானே, நண்பர்களே?’’
தோள்களைக் குலுக்கிக் கொண்ட அவன், நண்பர்களின் ஒப்புதலைக் கோரினான். அவர்களும் இந்த வித்தியாசமான பையன் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்தனர். அரை வேக்காட்டு ஏமாற்றுக்காரனைப்போல ஒரு கோமாளிச் சிரிப்பினை வெடிப்பாகச் சிரித்து, ஒரு நண்பன் அதை ஆமோதித்தான்.
‘’ ஹேய் , எங்கள் வயது ஆட்களுக்கு எல்லாமே தெரியும். பையா, உலகம்  ஏன் சுற்றுகிறது, தெரியுமா?’’
‘’ எனக்குத் தெரியாது.’’
எல்லாரையும் குடிக்கச் சொல்லித்தான் உலகம் சுற்றுகிறது. சிறு குழந்தாய்! எல்லோரையும், `குடி! குடி!` என்று குடிக்கச் சொல்வதற்காகத்தான் இந்த பூமிக்கோளம் சுற்றிக்கொண்டேயிருக்கிறது. நன்றாகப் புரிந்துகொள். சரிதானா?’’
‘’சரி.’’
‘’ நான், உனக்கு வேறொன்றும் சொல்லித் தருவேன், புத்திசாலிப் பையா!
முதல் மனிதன் குழந்தையைக் குனிந்து நோக்கிக் குழறினான்.
‘’சிறுநீர் கழிக்கும்போது நாய் ஏன் காலை மேலே தூக்கிக்கொள்கிறதென்று உனக்குத் தெரியுமா?’’
‘’அது எனக்குத் தெரியும்.’’
அந்தச் சிறு குழந்தை ஏளனமாகப் புன்னகைத்தது.
‘’அது, இரண்டு கால்களையும் தூக்கினால் கீழே விழுந்துவிடும்.’’
‘’சரிதான். நிச்சயமாக நீ ஒரு அறிவாளிக் குழந்தை தான். ஒருமுறை சொல்லிக்கொடுத்ததை எப்போதுமே மறக்காத திறமைசாலிதான்.’’
‘’உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்?’’ இன்னொரு வேற்று மனிதன் அவனுடைய உணவுக்குச்சிகளால் பச்சை–பீன் இனிப்பு அடையைத்  துண்டுபடுத்திக்கொண்டே, அந்தச் சிறுவனிடம் கேட்டான்.
‘’சமையல் சிங் ஹ்யூன். அவர், சமையல் சிங் ஹ்யூன்’’
திடீரென அக் குழந்தையின் முகம் கலைக்களஞ்சியப் பக்கம் போல நெருக்கமான வரிகளாக மாறியது. அவன் ஒரு பொம்மைப் படைவீரனைப் போல முன்பக்கமாக நெளிந்து முன்னேறினான்.
‘’நீங்கள் அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். அவரது புருவங்களுக்கு மேலாக ஒரு பெரிய கழலைக்கட்டி இருக்கிறது. அவர் மீது எப்போதும் ஒரு வெங்காய நாற்றம் இருக்கும். அவர் எப்போதும் அவருடைய இடுப்புப் பையில் வெள்ளைப் பூண்டுகளை வைத்திருப்பார். அதோடு குடிக்கின்ற ஒவ்வொரு முறையும் அழுகின்ற வழக்கம் கொண்டவர்.’’
‘’அது சரி, நீ ஏன் உன் அப்பாவைத் தேடிக்கொண்டிருக்கிறாய்?’’
அமைதியாக அவனது மதுவை கிண்ணத்திலிருந்தும் அருந்திக்கொண்டிருந்த வண்ணச் சாயம் தோய்ந்த படைவீரர் சீருடையிலிருந்தவன் அந்தப் பையனை இடைமறித்தான்.
‘’ஆ! ஆ!
ஒரு நிமிடம் அந்தக்குழந்தைப் பையன் தலையை மேல்நோக்கி, உயர்த்தி, அந்தரத்தில், வெற்றிடத்தை வெறித்து, நாடக நடிப்புச் சுழிப்புடன் நோக்கினான்.
‘’என் அம்மா செத்துக்கொண்டிருக்கிறாள்.’’
மதுவகத்தினுள் மெதுமெதுவாக முன்னகர்ந்த அவன், இப்போது முழுவதுமாக, அருந்தகக்கூடத்தின் வெதுவெதுப்பான குளிரற்ற பகுதிக்கு வந்துவிட்டிருந்தான். அந்த அருவருப்பான பையனின் முகத்தில் 30 வாட் மின்சக்தி கொண்ட விளக்கு  ஒன்று மிகச்சரியான வெளிச்சத்தை வீசிக்கொண்டிருக்க, தீக்கங்குகளிலிருந்தும் எழுந்த மெல்லிய புகை ஒரு கருமண்டலமாக மாறி அருந்தகக்கூடத்தின் உட்பக்க நிறத்தைக் கண்ணீர்ப் புகைக்குண்டு வெடிக்கப்பட்ட இடம் போல, மந்திர மாய உலகம்போல வண்ணமிழந்த சாம்பல் நிறத்துக்கு மாற்றியிருந்தது.
‘’ஒரு நிமிடம் முன்புதான் அவள் இரத்த வாந்தியெடுத்ததைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேராக ஓடிவருகிறேன். என் அப்பா என்னை இங்கே வரச்சொல்லியிருந்தார்; ஏனென்றால், என் அம்மா இறந்துவிட்டால், போதை ஏற்றிக்கொள்ள, இந்த மதுக்கூடத்துக்குத்தான் வருவதாகச் சொன்னார்.’’
‘’உன் அப்பா ..........’’
முதலில் அவனைப் பார்த்தவன், அணைந்த சிகரெட் துண்டு ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டே, வெற்றுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.
‘’போய்விட்டார். ஏய், போயிட்டார்டா.’’
‘’போய்விட்டாரா? அப்படியானால், அவர், எங்கு போவதாகச் சொன்னார்?’’
‘’’நீ வந்தால், யாங்யாங் மதுக்கடைக்கு அனுப்புமாறுதான் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாரென நினைக்கிறேன்.’’
அந்தப் பையனின் உடலமைப்பு சுவிட்சர்லாந்து கைக்கடிகாரம் போல மிகவும் மெல்லிய பாகங்களாலமைந்த மிகச் சிறிய ஒன்று. அவனது மார்பில், அமெரிக்க இராணுவம் என்பதைக் குறிக்கும் US ARMY என மின்னும் அடையாளவில்லை ஏதோ ஒரு பதவித்தரத்தைக் குறிக்கும் முத்திரை போல ஒளிர்ந்தது. அவனது முகத்தில் மட்டும் வெல்வெட் போல ஒரு பளபளப்பு. மனம்போன போக்கில்,  அணிந்திருந்த ஆடைகளின் அடுக்குகளில், அவன் கவசமாகக் கெட்டிப்பட்ட மேற்தோலுடனான ஒரு பூச்சியின வண்டு போலத் தோன்றினான்.
‘’இதோ! யாங்யாங் கடைக்கு இப்போதே ஓடுகிறேன்.’’ 
அவன் ஒரு நிமிடம் சிறிது தயங்கினான். இருட்டுத் தனிமை போல ஏதோ ஒன்று அக்கணத்தில் அவன் முகத்தில், கடைசிக் கிண்ணத்தையும் காலிசெய்து, முடித்துவிட்டு, மதுக்கூடத்தைவிட்டு வெளியேறும் குடியர்களின் முகத்தில் காணப்படுமே ஒரு வெற்றுப்பார்வை, அதுபோல ஒன்று படிந்தது. முதலில் அவனிடம் பேசிய அதே மனிதன், ஒரு காலிக் கிண்ணத்தை மதுவால் நிறைத்து, அவனிடம் நீட்டினான்.
‘’நீ போவதற்கு முன்னால், இந்த ஒரே ஒரு கிண்ணத்தை மட்டும் குடித்துவிட்டுப் போடா, சின்னப்பயலே!’’
‘’”மாட்டேன். என் அப்பாவைத் தேட வேண்டும்.’’
‘’நீ அங்கு போவதற்குள் உன் அப்பா, அந்த மதுக்கடையைவிட்டு வேறு மதுக்கடைக்குப் போயிருக்கலாம், யாருக்குத் தெரியும்?’’
‘’ஆனாலும், நான் அவரைக் கண்டுபிடித்துவிடுவேன். இரவு முழுவதுங்கூட நான் அவரைத் தேடுவேன்.’’
‘’அதற்கிடையில் உன் அம்மா இறந்துவிட்டாலுமா?’’
‘’என் அப்பா மட்டும் கிடைத்துவிட்டால், எல்லாமே சரியாகிவிடும். என் அப்பா உங்களை மாதிரியெல்லாம் இல்லை; அவர் வேறு மாதிரியானவர், தெரியுமா? அவர் எப்போதும் குடிக்க விரும்புகிறவர்தான், ஆனால், அவர் நினைப்பதையெல்லாம் சாதித்துக்காட்டுவார். ஹா! அவர் செம்பிலிருந்து தங்கம் செய்பவர். நான் தங்கம், தங்கத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்!’’
அவனது சீன பாணிச் சட்டையின் தோளணிப்பட்டைக்குள்ளிருந்து  ஒரு கம்பளிப்புழுவைப் போல நகர்ந்து நீண்ட அவனது கரம், சட்டென்று ஒரு கிண்ணத்தைப் பற்றித்  திருடியதையும், அதை அவன் ஒரே மடக்கில், சந்தைக் கூட்டங்களில், பிக்பாக்கெட் திருடர்கள், சட்டைப்பைகளைக் காலியாக்குவார்களே, அது போலக் காலியாக்கி முடித்ததையும் யாரும் கவனிக்கவில்லை. அந்தக் கிண்ணம் முழுவதுமாக நிரம்பியிருந்த மதுவை ஒரு துளிகூடச் சிந்தாமல், ஒரு மந்திரவாதியைப்போலப் படக்கென்று விழுங்கிவிட்டான். அவனது சிறிய வாய் முழுதும் நிறைந்த ஒரு குறிப்பிட்ட வகைத் திருப்தியாலோ என்னவோ, அவன், முள்ளங்கி ஊறுகாயில் ஒரு துண்டினை நன்றி நிறைந்த பாவனையோடு எடுத்துக்கொண்டான்.
‘’கூடவே, உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா?’’
‘’என்னை வைத்து வேடிக்கை காட்டாதீர்கள், தயவுசெய்து.’’
அவன் அவனது சட்டையின் கழுத்துப் பட்டையை இழுத்துச் சரிசெய்துகொண்டே தோள்களைச் சிறிது குன்னிக் குறுக்கிக்கொண்டான். அந்தக் குழந்தைப்பையன்  எச்சரிக்கை மிகுந்த விழிப்புடன், வார்களாலும் சுருங்கிவிரியுந் தன்மை கொண்ட தோற்தசைகளாலுமான  அவனது முதுகுத் தசையை இறுக்கிக்கொண்டு ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்காகத் காத்திருக்கும் மின்னல் ஓட்டக்காரனைப்போலப் பரபரப்பாகவே நின்றான்.
‘’தயவு செய்து, மறந்துவிடாதீர்கள். நான், என் அப்பாவின் பெயரைச் சொன்னேன். சமையல், சிங்  ஹ்யூன். ஏதாவது ஒரு மதுக்கடையில், நீங்கள் அவரைப் பார்க்க நேர்ந்தாலும் நான் குடிப்பதைப்பற்றி அவருக்குச் சொல்லிவிடாதீர்கள். தயவுசெய்து, நான் அதைத்தான் திரும்பவும் சொல்கிறேன்.’’
பேச்சு, மூச்சற்றுப்போன பெருங்குடியர்கள், அவர்களது வெற்று விழிகளாலேயே அவனை வழியனுப்பினார்கள்.  பின்னிரவின் வெளிறிய நிலவொளி    போன்ற குளிர்காலப் பனிக்காற்றின் தன்னந்தனியான அலை ஒன்று, அவன் முகத்தில் படர்ந்து கடந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோருமே மதுவின் போதை மிகுந்து, வீட்டினை, மனைவியை, மூத்த மகனை, இளைய மகனைத் திட்டி முடித்துவிட்டு, வாழ்க்கையை, எதிர்கால நம்பிக்கையை, கைக்கும் வாய்க்குமே பற்றாத அற்பக் கூலியை, இந்த உலக வாழ்க்கையைத் திட்டித் தீர்த்துக் கடைசியில், தங்களைத் தாங்களே  திட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
பனிக்காலத்தின் கொடிய குளிர்காற்று சந்தை வழி முழுவதிலும் கிழிந்த செய்தித்தாள்த் துண்டுகளை அடித்துப் பரப்பிக் கொண்டு சென்றது. அந்தக் கொடிய குளிர் காற்று, பாலைவனத்தின் மணற்புயலைப்போல முகத்தில் அறைந்து  தோலைக் கவ்வித் துளைத்தது. காற்சட்டைப்பைக்குள் கைகளை நுழைத்தவாறே, எதையோ முணுமுணுத்துக்கொண்டு அவன் நடந்துகொண்டிருந்தான். சூரியன் மறைந்த நேரத்திலிருந்து, அவன் ஏற்கெனவேயே ஐந்து மதுக்கூடங்களுக்குள் நுழைந்து, வந்ததில், குறைந்த அளவில் என்றாலும் ஏழு கிண்ணங்களுக்கு மதுவினை விழுங்கிவிட்டிருந்தான். அவன் எல்லாவிதமான மதுவகைகளையும் உள்ளே தள்ளியிருந்தான்: எதுவுமே கலக்காத மது, மேகமூட்டமாக இருக்கும் கச்சா ஒயின், சுத்திகரிக்கப்பட்ட அரிசி ஒயின் எனப் பலரகங்கள். தொண்டை வரையிலும் விறுவிறுப்பதாக, அவன் தலைக்குள்ளிருந்து வாழ்க்கையை எங்கோ ஒரு மூலைக்கு நகர்த்திவிடுகிற அளவுக்கான போதை ஏறுகிற அளவுக்குக் குடித்துவிட்டான். ஆனாலும் வயிறு ஏதோ இன்னும் காலியாக இருப்பது போல அவனுக்குத் திருப்தியாகாத ஒரு நிலை. அவனுடைய அப்பாவைக் கண்டுபிடிக்கும் வரையில், மேற்கொண்டும் ஐந்தோ ஆறோ கிண்ணங்கள் மதுவை அவனால் குடித்துவிடமுடியும்.
சந்தைக்குள் இந்த மூலையிலிருந்து அந்த மூலை வரைக்கும் கசப்பினைத் தருவதாகவே, காற்று வீசியது. சந்தைக்குள் நுழைகிற ஒவ்வொருவரின் பின்னாலும் குளிர்காலம் பல்லைக் காட்டி இளித்துக்கொண்டு நின்றது. மேல்மட்டத்தைப் பொறுத்தவரையிலும், தெரு விளக்குகள் தூய்மையான ஒளியைப் பொழிந்துகொண்டிருந்தன. எங்கேயோ ஒரு பூனை மியாவெனக் கத்தியது. சுற்றுக் கட்டுச் சந்தை வளாகத்தினுள், பழைய வெயிற்கூரைகள் காற்றில் அடித்து, அவன் தலைக்கு மேலே பேய்கள் போலப் பறந்துசென்றன. கடைசியில், ஒருவழியாகப் போதையளிக்கும் உள்ளடக்கச் சேர்மம்  அவன் மீது இரக்கம் கொண்டதனாலோ என்னவோ சட்டென விழித்துக்கொண்டது. அவனது சிறு உடல் பொத்தானுடனான மின்னடுப்புச் சமையல் பாத்திரம் போலக் கொதிக்கத்தொடங்கியது.
(ஆ! ஆ! இந்தச் சனியன் பிடித்த தலை ஒழிந்து போகட்டும்.)
ஒரு கணத்திற்கு, அவன் தலை, அவனது உடம்பைக்காட்டிலும் பலமடங்குக்குப் பயங்கரமாக எடை கூடிவிட்டது போல அவன் உணர்ந்தான். அவனால் தூக்க முடியாத அளவுக்குக் கனமுள்ள தலையைத் தூக்கிக்கொண்டு எப்படி நடமாடுவதென்ற பயம் அவனுக்குத் திடீரெனத் தோன்றவே, அவன் வெறுப்படைந்து, கோபத்தில் முறைக்கவும் தொடங்கினான்.
சந்தை வளாகத்தின் ஒரு கோடி முனையில்தான் யாங்யாங் மதுக்கடை  இருந்தது. மதுக்கூடத்தை நிறைத்து வெளியிலும் பரந்து ஒளிர்ந்த இனிய  ஒளி காலியாகக் கிடந்த சந்தைவெளியில் நடனமாடியது. சிறுவன் மவுனமாகக் கண்ணாடித் தடுப்பின் வழியே தனக்குத் தெரிந்த முகங்கள் ஏதேனும் தென்படுகிறதாவென நோட்டமிட்டான். அங்கே தெரிந்த முகமாக ஒருவர் கூட இல்லையெனில், அவனால் மேற்கொண்டு குடிக்கவோ, அல்லது அவனது தந்தையைச் சந்திக்கவோ முடியாது.
நல்லவேளையாக, அவனுக்குத் தெரிந்த முகங்களாக இருவர், கைகளில் மது நிறைந்த கண்ணாடிக் கோப்பைகளை ஏந்தி அமர்ந்திருந்தனர். காற்பெருவிரல்களில்  ஊன்றி நின்ற அவன், பாதங்களைக் கீழிறக்கிச் சமநிலைக்குக் கொண்டுவந்துவிட்டு, அந்தக் காற்று வெளியில் தன்னைத் தானே திட்டிக்கொள்ளத் தொடங்கினான்.
(பாழாய்ப்போன குடி, ஒழிந்து போகட்டும்.)
அனுபவத்தில் மூத்த, மாபெருங் குடியர்கள் எல்லோருக்குமே ஏதோ ஒரு நேரத்திலாவது தமக்கு வயதாகிவிட்டதோ, மிதமாக இருக்கிறோமா இல்லையா என எழக்கூடிய ஐயப்பாடு போன்றதொரு கணநேர மனக்கசப்பும் துயரமும் மனச்சோர்வுமாக அவனது சிறிய முகத்தில் ஒரு, தயக்கம் கலந்த இருட்தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. 
எனினும், சன்னல் வழியாக மதுநிறைந்த பளிங்குநிறக் கோப்பைகளைப் பார்த்ததிலும், உரக்கச் சிரிக்கும் பெருங்குடியர்களின் நகைச்சுவை நையாண்டிகளுமாக, களிமகிழ்வொலிப் பெருஞ்சப்தத்தைக் கேட்டதிலும், அவனது அருவருப்பான முகம் வியக்கத்தக்கதாக மாறியது. ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்ற சிறைக்கைதியிடம் வெளிப்படுகின்ற திடமான முனைப்போடு, அவன் மதுக்கூடத்தின் வாயிற்கதவினை மெல்ல அடைந்தான். அதன் கைப்பிடி, அவன் கைகளுக்குப் பழக்கமானதாயிற்றே!
‘’மாலை வணக்கம்.’’
அவன் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டே, நோட்டமிடுவதற்காகத் தலையை உள்ளே நுழைத்தான். அவனை வேறு யாருமே பார்க்கவில்லையென்றாலும், பரிமாறும் பணிப்பெண் பார்த்துவிட்டாள்.
‘’ஹேய், உங்க அப்பால்லாம் போயாச்சு.’’
‘’. . . . .’’
‘’அவரு, முண்டச்சி வீட்டுக்குப் போய்ட்டாரு.’’
அந்தக் குழந்தைப்பையன் அவளை வெறுமனே, ஏறிட்டுப் பார்த்தான்.
‘’உண்மைதான், பையா.’’  
பின்னர், உள்ளே கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த இரு பெருங்குடியர்கள் அவனைக் கண்டுகொண்டார்கள். கிருதாக்களுடனிருந்த மனிதன் சத்தமாகச் சிரித்தான். அவன் குடிக்கிறபோதெல்லாம் சிரித்தான்; அவன் போர்க்களத்தைவிட்டு ஓடியதை, ஒரு குண்டு அவனுடைய மனைவியின் வயிற்றைத் துளைத்ததில், பெரிய துளை ஏற்பட்டு, அவள் இறந்ததையும்,  இப்போது அவன் வேறுவழியின்றித் தனிமையில் வசிப்பதையும் சொல்லிக்கொண்டிருக்கும்போது கூடச் சிரித்தான். அவன் ஐம்பதாவது வயதினை  அடைவதற்குள் தற்கொலை செய்து மரணிக்கப்போவதாகச் சொல்லும்போது கூடச் சிரித்தான். சிரிப்பதைத்தவிர அவனுக்கு இந்த உலகத்தில், வேறெதுவுமே  தெரியாது போலத் தோன்றியது. அவன் தொடர்வண்டிச்சாலையிலுள்ள ரயில்வே கரிக்கிடங்குக்குள் நுழைந்து கரிக்கட்டிகளைத் திருடி விற்பதையே அவனது தொழிலாகக் கொண்டிருந்தான்.
ஒருமுறை, காவலர் ஒருவர் அவனைப்பிடித்து அவனுடைய முகத்தின் சாயலே மாறிவிடுகிற அளவுக்கு அடித்துத் துவைத்தார்; ஆனாலும், குடிக்கும்போதெல்லாம் சிரிக்கிற அவன்,  வாய் வீங்கிக் குடிக்க முடியாமல் போனால், மூக்கு வழியாகக் குடிப்பேனென்று, அதையும் சிரித்துக்கொண்டே சொன்னான். மூளை ஏதாவது பிசகியிருக்குமோ, ஒருவேளை எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல், எல்லாவற்றையும் எளிதாகக்கொள்ளும் போக்கின் உச்சமோவென நினைக்குமளவுக்கு அப்படியொரு வித்தியாசமான மனிதன், அவன். அந்தக் குடியர்கள், அவனது முகத்தைத் தெரிந்துகொள்ள முடியாதபடி, மறந்துபோகிற அளவுக்குப் போதை ஏறும் முன்பாகவே, அவனைக் கண்டுகொண்டதற்காகக் பேரளவோ, குறைந்தளவோ எந்த அளவென்றாலும், அவன் அவர்களுக்கு எப்போதும் நன்றியோடிருப்பான்.
‘’ஹேய், அவனைப் போல ஒரு குறுகுறு பையனைப் பார்க்கும்போதெல்லாம் ஹ ஹஹ் ஹா, எனக்கு இறந்துபோன என் மகன் ஞாபகம் வந்துவிடுகிறது, ஹ ஹஹ் ஹா. அவன், இவனே இவன் அளவுக்கான குறுகுறுப்பையன். ஹ ஹஹ் ஹா. அவனும் என்னைப் போலவே அழகு, புத்திகூர்மை எல்லாமே; படுசுட்டிப்பயல். ஹ ஹஹ் ஹா. அவன் மட்டும் உயிரோடிருந்து, வளர்ந்திருந்தால் எங்கேயோ, எப்படியோ இருந்திருப்பான், ஹ ஹஹ் ஹா’’
இவனோடு ஒப்பிடும்போது, அடுத்த மனிதன் முற்றிலும் வேறுமாதிரி. அவன் போதை ஏறியபோதெல்லாம் ஊமையைப் போல அமைதியாகிவிடுவான். அவனுடைய முழுக்கைச் சட்டையின் கைகளை மடித்து உருட்டும் போது, அனது முழங்கையில் கறுப்பு நிறத்தில் பச்சைகுத்தியிருப்பது தெரியும். மரண அமைதியில் உட்கார்ந்திருக்கும்போது, சட்டென்று கத்தியை எறிந்துவிடுவான். ஒரே ஒரு முறைதான், அவன் சிரிப்பதை அந்தச் சிறுவன் பார்த்திருக்கிறான். ஒருமுறை சிறுவன், அவனுக்கு ‘’காலை வணக்கம்’’ சொன்னானோ, இல்லையோ, ஏதோ ஒன்று அவன் முகத்தைக் கடந்து விசுக்கென வெள்ளிமீன் போல மின்னிக் காற்றைக் கிழித்துச்சென்றது. அது, வாசற்கதவு நிலையில் குத்தி நின்றதையும் அதற்கும் அவன் தலைக்கும் சாண் அளவு தூரம்கூட இல்லையென்பதையும் சிறுவன் கண்டான். அது, அந்த மனிதனின் கத்திதான். கத்தியை எறிந்த வலதுகை போரில் அவன் இழந்த கைக்கு மாற்றாகப் பொருத்தப்பட்ட ஒன்று.
‘’பார், பையா.’’
அங்கே உட்கார்ந்திருந்த மனிதன், பீற்றிப் பெருமையடித்தான்.
‘’என் வலது கையைப் பார். என்ன ஒரு விரைவும் வீச்சும், பார்த்தாயா ....’’
அப்போதுதான் அந்த, அபூர்வமான, பழைய சிரிப்பு அவன் வாயில் நுரைத்துத் தெரிந்தது. அந்த ஒரே முறைதான், அவன் சிரித்து, அந்தச் சிறுவன் பார்த்தது.
அவன் மரத்திலான விளையாட்டுப் பொம்மைகள் செய்து பிழைப்பு நடத்தினான்.  அவன், மரத்தாலான படைவீரர் பொம்மைகளை இடது கையால் மட்டுமே,  செதுக்கிக்கொண்டிருந்ததை, ஒருமுறை சிறுவன் பார்த்தான்.  அது, சென்ற வருட கோடைகால மத்தியிலொரு நாள் மதியம்; தரையடிக்குடிசைக்கு வெளியே சூரியக் கதிர்கள் சுட்டெரித்துக் கொண்டிருந்தன. பொம்மைகளைச் செதுக்கிக் கொண்டிருக்கும்போது, அவன் ஆடைகளற்று முண்டக்கட்டையாகவே இருந்தான்; திடீரென்று கத்தியைத் தூக்கி, தூரத்திலிருந்த மரத்தாலான தடுப்புச்சுவர் மீது எறிந்துவிடுவான். அந்தச் சிறுவனுக்கு அது இப்போதும், அவன் கண்ணிலேயே இருக்கிறது. மரத்தடுப்புச் சுவர் மீது கிறுக்கலாக வரையப்பட்டிருந்த ஆண்களின் அந்தரங்க உறுப்புகள் அல்லது இதயங்களின் கோட்டுப்படங்களை நோக்கிக்  காற்றைக் கிழித்துக்கொண்டு, பளபளவெனப் பறந்து சென்றது, அந்தக் கத்தி.  அது, பலகையைத் துளைத்தபோது எழுந்த வீற்றொலி வெறுமையான காற்றைக் கடந்து மறைந்தது. குடிசைக் கதவின் வழியே, அவன் பார்த்த அந்த மதிய வேளையில் பூமியிலிருந்து கிளம்பிய ஆவி, சுத்திகரிக்காத பெட்ரோலிய எண்ணெயின் ஆவியைப் போலச் சூடாக, வெக்கை நிறைந்ததாக இருந்தது; அது, மூச்சுத் திணறச் செய்வதாக அந்தக் கோடையின் பைத்தியம் பிடிக்கவைக்கும் வியர்வை நாற்றத்துடன் இருந்ததோடு எந்தக் காரணமும் இல்லாமலேயே  சினமூட்டியது.
அந்த மனிதன், சிறுவனைத் தாழ்ந்த குரலில் ‘’என் மகனே’’ எனப் பிரியத்துடன் அழைத்து கத்தியைப் பிடுங்கிக் கொண்டு வருமாறு கேட்ட போதும் கூட, அந்த மனிதனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையென, அந்தக் குழந்தைப்பையனுக்குத் தெரிந்திருந்தது. அவன் சிறுவனை நோக்கியபோதெல்லாம், வெளித்தெரிகின்ற அந்த வெறுப்பு அவன் கண்களில் பளீரிட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால், ஒருமுறை அந்தச்சிறுவன் சாலைவழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த மனிதன் அவனது வேலையிடத்திலிருந்தும் தலையை நீட்டி எட்டிப் பார்த்து ரகசியக்குரலில் ஆசை காட்டினான். அவன் கையில் ஒரு மதுப்புட்டி இருந்தது. அவன் ஏற்கெனவேயே நல்ல போதையிலிருந்தான்.
‘’ஹேய், என்னுடன் கொஞ்சம் குடிக்கிறாயா? சும்மா கொஞ்சமாக, நான் சொல்வது, நேற்றைய இரவின் மதுச்சோர்வை விரட்டுவதற்குத்தான்.
சிறுவன் அந்தத் தரையடிக்குடிசைக்குள், அவனுடைய எப்போதுமான முன்னெச்சரிக்கை விழிப்புநிலையைக் கைவிட்டு, அசட்டுச் சிரிப்புடன், நுழைந்தானோ இல்லையோ, அந்த மனிதனிடம் மிச்சமாக இருந்த அந்த ஒரே இடதுகை சிறுவனின் தொண்டைக்குழியைப் பற்றிக்கொண்டு நெரிக்கத் தொடங்கியது. அந்த மனிதனின் இடதுகையின் விடாப்பிடி குரங்குப்பிடியாக இறுகிக்கொண்டேயிருக்க, சிறுவன், அந்தக்கையை பலம் கொண்ட மட்டும் கடித்தான். கையின் பிடி இலேசாகத் தளர்ந்ததுமே, அந்தச் சின்னஞ்சிறிசு, கையை விலக்கிவிட்டுச் சாலையில் பாய்ந்துவிட்டான். பின்னர், அந்த மனிதன் ஒரு முட்டாளைப் போல அடக்கமுடியாமல் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தான். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவரும் எந்த மதுக்கூடங்களிலும் ஒருவரையொருவர் நேரில் எதிர்கொள்ளவேயில்லை. அதன் பிறகு, இருவருக்கும் நடக்கும் முதல் சந்திப்பு இன்றுதான்.
‘’என் அப்பாவைத் தேடி வந்திருக்கிறேன்.’’
சிறுவனின் அடங்கிய குரல் அந்த ஒற்றைக்கை மனிதனை நோக்கியதாக இல்லாமல், கிருதாக்கள் வைத்திருந்தவனைப் பார்த்தே இருந்தது.
‘’அவரைப் பார்த்தேனே, ஹ ஹஹ் ஹா, கொஞ்ச நேரம் முன்னாலேதான் அவரைப்பார்த்தேன், ஹ ஹஹ் ஹா அவ்வளவுதான்னு நினைத்தாயா, ஹ ஹஹ் ஹா, அவரோடு நானும் சேர்ந்து குடித்தேன், ஹ ஹஹ் ஹா.’’
‘‘அம்மா,... என் அம்மா,......’’
முட்டும் அழுகை, அவனது குரலை அடைப்பது போன்ற நடிப்புடன் அவன் பேசினான்.
‘‘அவள் செத்துக்கொண்டிருக்கிறாள். அவள் இரத்த வாந்தியெடுத்ததைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேராக ஓடிவருகிறேன்.’’      
 தயங்கித் தயங்கி, அவன் மேஜையை நெருங்கினான். அவனுடைய ஒடுங்கிய, சிறு கண்கள், போதையூட்டும் உள்ளடக்கச் சேர்மத்தின் வேகக்கொதிப்பினால்   கடுமையாகச் சிவந்து நீர் கோர்த்துப் பிசின் போலப் பீளை கட்டத் தொடங்கின. மேஜையில் ஸ்படிகம் போலக் கடுந்தேறல் வீற்றிருக்கிறது. அது புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு புட்டி; அநேகமாக நிறைந்தே இருந்தது.
அந்த மதுவின் ருசி ஏற்கெனவே அவனுக்குத் தெரியும். அவன் இப்போதிருக்கும் நிலையில் அதில் ஒரு கிண்ணம் அருந்தினாலும் அது அவனிடம் எப்படிப்பட்ட ஒரு மாற்றத்தைக் கொடுக்குமென்றும் அவனுக்குத் தெரியும்.
அவன் அந்த பெஞ்சின் விளிம்பில் அமர்ந்தான். இருபக்கமும் கிருதா வளர்த்திருந்த மனிதன், வாயை முழுக்கத் திறந்து நீண்ட ஒரு கொட்டாவி விட்டதோடு, கைகால்களை நீட்டிச் சோம்பல் முறித்தான்.
‘‘இன்று இரவு நீ உன் அப்பாவைக் கண்டுபிடிக்கப் போவதில்லை.’’
‘’நான் கண்டுபிடித்து விடுவேன். அது என்னால் முடியும்.’’
சிறுவன் மிகத் தீர்மானமாகப் பேசினான்.
‘’நிச்சயமாகச் சொல்கிறேன். நான் அவரைக் கண்டுபிடித்துவிடுவேன்.’’
‘’ஹ ஹஹ் ஹா, நீ இன்று பார்க்காவிட்டாலும், நாளை பார்த்தால் பரவாயில்லையா?’’
‘’இல்லை. இன்று நான் அவரைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். என் அம்மா இறந்துகொண்டிருக்கிறாள். அவள் வாய்க்குள்ளிருந்து இரத்த வாந்தியெடுத்துக் கீழே விழுந்து கிடக்கிறாள். அவள் தான் அப்பாவைக் கூட்டி வருமாறு மிகவும் இயலாத ஒரு குரலில் சொன்னாள்.’’
சமயம் பார்த்துக் காத்திருந்த சிறுவன் மிகச்சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, மேஜையிலிருந்த மதுக்கோப்பையை எடுத்து, அவசர,அவசரமாக அதிலிருந்த மதுவை, அவன் வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டான்.
‘‘என் அப்பா ஒரு குடிகாரர், ஆனாலும் அவர் எங்களைவிட வித்தியாசமானவர், மாமா. ஆங்ஹ்! செம்பிலிருந்து அவரால் தங்கத்தை உருவாக்க முடியும். நான் தங்கம், தங்கத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.’’
அந்த ஒரு கிண்ணம் மது அவனைக் கட்டற்றவனாக்கியது. பிரிந்து செல்லும்போது, கடைசியாக விழுங்கும் ஒரு கோப்பை மதுவைப்போல, அந்த ஒரு கிண்ணம் மது அவனுக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது. அவன் உணவுக்குச்சிகளை எடுத்து அவற்றை மேஜையில் தட்டிக்கொண்டே பாடத் தொடங்கினான்.
வெகுகாலம் முன்பு,            
அழகிய மகளைப் பெற்ற ஒரு தகப்பன்,
கிராமச் சதுக்கத்தில் அறிவித்தான்.
நீ குடிக்கவும் பாடவும் முடிகிற ஒரு மருமகனாக இருந்தால்,
இங்கே வந்து ஒருமுறை முயற்சித்துப் பாரேன்!  
கிருதா மனிதன், செம்மறியாடு ஒன்று அதன் தாடிக்குள் சிக்கியிருக்கும் தாளினைத் தின்றுகொண்டிருப்பதைப்போல, எந்தவித வியப்புக்கான அடையாளமும் காட்டிவிடாமல் அமைதியாகச் சிரித்தான். அவனுடனிருந்தவனோ, உணர்ச்சிகளற்ற வெற்றுக் கண்களோடு மதுக்கூடத்தின் கூரையையே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான். அவனைத் தொல்லைப்படுத்தாமல் விட்டுவிட்டால்,  அப்படியே நாட்கணக்கில்கூட உட்கார்ந்திருப்பான் போலத் தெரிந்தான். அருமையான அந்த வாய்ப்பில், அந்தச் சிறுவன் கையை நீட்டிப் புட்டியை எடுத்துச் சரித்து, இன்னும் கொஞ்சம் மதுவை ஊற்றிக்கொண்டான்.
‘’ஒவ்வொரு முறை குடிக்கும்போதும் என் அப்பா அழுவார்.’’
யாருமே அவனைக் கவனிக்கவில்லை. கிருதா மனிதன் கூடச் சிரிப்பதை நிறுத்திவிட்டான். இரவுப் பூனை ஒன்று எங்கிருந்தோ கத்தியது; மாளாச் சோர்வும் துயரமும் கூரைக்குள்ளிருந்து கொட்டியது. மது ஊற்றிக்கொண்ட கோப்பையை  உதட்டில் பொருத்திச் சிறிது சிறிதாக நாக்கால் அதன் விளிம்பைத் தட்டித் துளாவிக்கொண்டே, கண்களை உயர்த்தி, அடுத்து என்ன நடக்குமோவெனக் கவனித்துக்கொண்டிருந்தான். மதுக்கூடப் பணிப்பெண் புகைபிடித்துக்கொண்டே அவ்வப்போது அங்கும் ஒரு பார்வையை ஓடவிட்டவாறிருந்தாள்; சந்தேகத்துக்குரிய வகையில் வித்தியாசமாகச் சேர்ந்திருந்த அந்தக் கூட்டணியிலிருந்த மூவரையும் அவள் மேலுங்கீழுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். மஞ்சள் முள்ளங்கி போல் கீழ்ப்பாகம் சுருங்கி மேற்பாகம் பெருத்துத் தோன்றிய அந்தச் சிறுவன் இப்போது விக்கிப் பேசத் தொடங்கினான்.
‘’உங்களுக்கு வேடிக்கையான புதிர் ஒன்றைச் சொல்லட்டுமா, ம்! உங்களுக்குத் தெரியுமா? சிறுநீர் கழிக்கும்போது, நாய் ஏன் ஒற்றைக் காலைத் தூக்கிக்கொள்கிறது?’’
‘’எனக்குத் தெரியாது.’’
‘’ம்ஹ்க், ரண்டு காலையும் தூக்கினால், அது விழுந்துவிடும். ம்ஹ்க்.’’
இப்போது, மது அவனது உடல் முழுவதிலும் போதை ஏற்றியிருந்தது. மிகுந்த மகிழ்ச்சியில், அவன் குடியை ஒரு விளையாட்டாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களுக்குக் கீழே எல்லாமே அவனை நீந்திக் கடந்து போய்க்கொண்டிருந்தன. அவனது உணவுக்குச்சிகளை மீண்டும் எடுத்து, மேசையைத் தட்டிக்கொண்டே, அருவருப்பான பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினான்.
நிலவின் ஒளிமிக்க இரவு ஒன்றில்,
வழுக்கையாகிப் போன மணமாகாதவன் ஒருவன் வந்தான்.
டுவைங், டுவைங், டுவைங்-டி-டிங்; உன் பிடில் கேட்க அருமைதான்,
ஆனாலும், நீ ரொம்ப அருவருப்பு; அதனால் உன்னைப் பிடிக்கவில்லை.
மதுக்கூட மூலை ஒன்றின் மேசை மீது தட்டிக் கொண்டே குடிக்கும் அந்தச் சிறுவனின் மெய்யுடல் மிகச் சிறியதுதான்; ஆனால், உயிரைக் கொடுத்துப் பாடுவதான வியத்தகு தோற்றத்தைக் கொண்டிருந்த அவனது அடவுகள், அசைவுகள் அனைத்தும் அனுபவமிக்கவை.
பையன் பாடி முடித்து, சிகரெட் புகைக்கத் தொடங்கினான். கனலும் சிகரெட் நுனி அவன் நாக்கில் பட்டு ஒருவித ஒலியெழுப்பி அணைந்தது. சர்க்கஸ் குழுவின்  கோமாளிப் பையனைப்போல் அவன் காட்சியளித்தான்.
அந்தக் கணத்தில்தான், அந்த மனிதன், தூக்கத்தில் விழித்தவனைப்போலப் பாய்ந்து எழுந்து திடீரெனக் கத்தியை உருவிக் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனின் தொண்டையை நோக்கிக் குறிவைத்தான். சிறுவன் அவனை வெற்றாகப் பார்த்து, மலங்க மலங்க விழித்தான். அந்த மனிதனின் கண்களில் மின்னல் ஒன்று தோன்றி விரிய, அவனது மடித்துச் சுருட்டிய இதழ்களில் தீமையின் அறிகுறியாகப் புன்சிரிப்பொன்று  வெண்மையாகத் தெரிந்தது.
‘’டேய், குடிகாரக் குள்ளா’’
அந்த மனிதன் உறுமினான்.
‘’வாரேய் வா, இன்றைக்கு என் கையால் உனக்குச் சுகமான சாவு.’’
சிறுவன் எப்படியாவது தடுத்துவிட முயற்சித்தான்; ஆனால், வாயைத் திறப்பது வீண்தானென்பது அவனுக்குத் தெரியும்.
‘’அசையாதே, அப்படியே நில், மாய்மாலக் குள்ளா.’’
தொண்டையைக் குறிபார்த்த அந்தக் கத்தி, அந்த மனிதனின் இடது கையில் மின்னிப்பளீரிடுவதைச் சிறுவன் கண்டான்;. தொண்டை அருகில் சிறிது வலிப்பதாக உணர்ந்தான்; தனது உயிரின் பெருமூச்சினை அவன் தன் காதாலேயே கேட்டான்.
(இழவெடுத்த தொண்டை ஏன்தான் இப்படி வலிக்கிறதோ!)
`புறப்படு` எனச் சொல்லும் அடையாளமாகத் தடகளப்பயிற்சி ஆசிரியரின் விரைத்தெழும் கை போல அந்த மனிதனின் கை உயர்ந்தது. அவனது உள்ளங்கையில் கத்தி ஒரு சிறு பறவையாக  மிளிர்ந்தது. பின்னர், சக்கிமுக்கிக்கல்லின் உரசலில் வெளிப்படும் கணநேர வெளிச்சம் போல், அந்தக் கத்தியின் மின்னல்,  வெட்டவெளியில் ஒரு கோடாக உயர்வதைப் பார்த்த சிறுவன் அதே கணத்தில் , அது காற்றைக்கிழித்த ஒலியையும் கேட்டான்; பின்னர், அந்த மனிதன், அவனது மார்பிலேயே குத்திக்கொண்டு மேசை மீது சரிந்து விழுவதைக் கண்டதும் துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டாக, மதுவகத்திலிருந்தும் பாய்ந்து ஓடினான்.
(முட்டாள், தேவடியா மகன்.)
தெரு முழுவதும் இருட்டாக இருந்தது. அது ஒவ்வொரு மூலையிலிருந்தும் பரவியது. கண்ணில் தெரிந்த வானம் உயிரற்றிருந்தது. சிறுவனுக்குக் குளிர் நன்கு பழகிப்போன ஒன்று தான். எங்கும், எப்போதும், அவன் இந்தக் குளிரோடு போராட வேண்டியதாகத்தான் இருந்தது. சந்தை வளாகம் ஏற்கெனவே காலியாகியிருந்தது. அவனுடைய மூச்சுக்காற்றாக, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியேறிய வெள்ளைப்புகை இருட்டில் கரைந்தது. விக்கல் இன்னும் நின்றபாடாக இல்லை; அவன் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். இன்று வழக்கத்தைவிட அதிகமாக குடித்திருக்கிறான்; எல்லாம் ஒன்று தான்; அப்படியொன்றும் அதிகமென்று சொல்லிவிடமுடியாது. குளிரில் விரைத்திருந்த ஒரு சுவரில் மோதி நின்று, அவனது தொங்கல் திரைகளின் பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒன்று மேல் ஒன்றாகப் பலவற்றை அணிந்து கொண்டிருந்ததால் அவனது சிறிய வெப்பநிலைக் காப்பாளனைக் கண்டுபிடித்து, வெளியே எடுப்பது கஷ்டமாக இருந்தது. சிறுநீர் கழித்து முடித்ததும் அடங்கிய குரலில் பாடத் தொடங்கினான்.
நிலவின் ஒளிமிக்க இரவு ஒன்றில்,
வழுக்கையாகிப் போன மணமாகாதவன் ஒருவன் வந்தான்.
டுவைங், டுவைங், டுவைங்-டி-டிங்; உன் பிடில் கேட்க அருமைதான்,
ஆனாலும், நீ ரொம்ப அருவருப்பு; அதனால் உன்னைப் பிடிக்கவில்லை
அவன் போகின்ற இடம் அவனுக்கு நன்கு தெரிந்த ஒன்று. அவன் எவ்வளவு குடித்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையே அல்ல; அவன் ஒருநாள் கூட வழிதவறியதே இல்லை.
(என் அம்மா இற்துகொண்டிருக்கிறாள்; என் அப்பா என்னதான் செய்துகொண்டிருக்கிறார்?)
அவன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான்; கறுப்புச் சாயம் ஒன்று உருகிப் படர்ந்திருந்தது போலிருந்தது. அவனது அப்பாவைக் கண்டுபிடிக்கும் வழி இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் அவனது கடைசி முயற்சியை விட்டுவிடுவதாக இல்லை.
 தள்ளாடிக்கொண்டே அவன் நடக்கத் தொடங்கினான். சந்தை வளாகத்தின் எல்லை முடிவில் குடிகாரன் ஒருவன் தெருவில் உடல் முழுதும் மண்பட விழுந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். சிறுவன் அருகில் நெருங்கிச் சென்று, குடிகாரனின் முகத்தை நன்கு உற்றுப் பார்த்தான்; பின்னர், அவன் சட்டைப்பைகளைத் தொட்டுத் தேடத் தொடங்கினான். அதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், விடிவதற்குள் அந்த மனிதன் குளிரில் விறைத்து இறந்துவிடுவான் போலத் தொடர்ந்து செய்தான். சட்டைப் பைகள் காலி. இடது பக்கப் பையிலிருந்து ஒரு சில சிகரெட் துண்டுகளும், காய்ந்து போன பொள்ளாக் மீன்துண்டின் மிச்சங்களும் வலப்புறப் பையிலிருந்து தெருக்கார்களில் பயணம் செய்வதற்கான இரு பயணச்சீட்டுகளுமே வெளிவந்தன.
இப்போது, அந்தச் சிறுவன் உட்புறப் பையில் தேடத் தொடங்குகிறான். அவனது விரல் காகிதப் பணம் ஒன்றை உணர்ந்தது; அவன் இரண்டு காகிதப் பணங்களைக் கடின மூச்சுகளுடன் வெளிக்கொணர்ந்தான். அவற்றோடு அவன் மீண்டும் நடக்கத் தொடங்கினான். மேற்கொண்டும் குடிக்கக் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில், அவனது இதயம் அடித்துக்கொள்ளத் தொடங்கியது. அந்த இரண்டு நோட்டுகளைக்கொண்டு, இரண்டு கோப்பைகள் போதைமிக்க மதுவை வாங்கிக் குடிக்க முடியுமென்பது அவனுக்குத் தெரியும். அந்த இரண்டு கோப்பை மதுவினை பயந்துகொண்டே அல்ல, ஆவல்தீரக் குடிக்கும்போது அவன் எப்படியாக மாறுவானென்றும் அவனுக்குத் தெரியும். அவனது இருபுறங்களிலும் எவ்வித வலியுமின்றி இறக்கைகள் தோன்றி ஒரு பறவையைப்போல எடையைக் குறைத்து, அவனை மிதக்கச் செய்யுமென்பதையும் என்பதையும் அவன் அறிவான்.
பிந்திய இரவுகளிலுங்கூடத் திறந்திருக்கும் மதுக்கூடங்களை அவன் அறிவான். ஆனால், எவ்வளவுதான் பிந்திய நேரத்திற்கு அவை திறந்திருக்குமென்றாலும், இப்போது அநேகமாக அவையும் பூட்டப்படும் நேரமாகிவிட்டிருந்தது. அதனால் அவன், ஓடத் தொடங்கினான். அந்தப் பனியடிப்புலம் முழுவதும் அவனது காலடிகள் எழுப்பும் ஓசை எதிரொலித்தது. அவன் எந்த மதுக்கூடத்தை நினைத்து ஓடிவந்தானோ அதுவும் மூடப்பட்டிருந்தது.
மதுக்கூடத்தின் முன்புறக் கதவருகில், வெளிச்சம் வடிந்திருந்த விளக்கடியில், மூச்சைப்பிடித்துக்கொண்டு ஒரு பூனையைப்போல் நின்ற அவன் கதவுப் பிளவு வழியே வந்துகொண்டிருந்த மது வாசனையை இழுத்து நுகர்ந்தான். காற்று அவன் தலைமுடியைக் கலைத்தது. அவன் உடலைக் குலுக்கிக் குறுக்கிக்கொண்டான். என்ன செய்வதென்று சிறிது யோசித்த அவன், திடமாக முடிவெடுத்துவிட்டது   போல விரைவிலேயே சன்னல் கதவைத் தட்டத் தொடங்கினான். அந்தக் கதவு, பனித்தகடு ஒன்று கீறி உடைவது போல ஒலியெழுப்பியது. அந்தக் கதவின் மீது ஏதோ ஒரு பூ வேலைப்பாடு போல உறைபனியின் வெண்மை படர்ந்திருந்தது. அச்தச் சிறுவன் மீண்டும் மீண்டுமாகச் சிறிது நேரம் தட்டிவிட்டுக் கதவோரமாகக் காதை வைத்து கவனித்துக்கேட்டான். அவன் கவனித்துக் கேட்டபோதெல்லாம் வெகுதூரத்தில் வீசும் குளிர் காற்றின் ஒலிதான் கேட்டது. சிறிது நேரத்திற்குப்பின் ஏதோ உயிர் பெற்றதான அடையாளங்கள் உள்ளுக்குள் தெரிந்தன. கடைசியாக ஒரு நபர் சன்னலருகில் வந்ததும், அவர் உள்ளுக்குள்ளிருந்தே பனிப்படலத்தைச் சுரண்டத் தொடங்கியதும் தெரிந்தது. சிறிது நேரத்தில் ஒரு நாணயம் அளவுக்கான பார்வைத் துவாரம் ஒன்று ஏற்பட்டு, அதன் வழியே கண் ஒன்று நோக்கியது.
‘’மாலை வணக்கம்.’’
சிறுவன் மிகவும் கனிவோடு பண்பட்ட முறையில் வணங்கினான். பின்னர் சுவரிலிருந்த துவாரம் ஒன்று திறக்கப்பட, அதில் மதுக்கடைப் பணிப்பெண் களைத்த முகமும் கலைந்த முடியுமாகத் தோற்றமளித்தாள்.
‘’இங்கு வரவில்லை. உன் அப்பா இங்கு வரவில்லை.’’
‘’அது எனக்குத் தெரியும்.’’
குளிர் உறைக்கவே, அவன் கைகளை உரசிக்கொண்டான்.
‘’அது எனக்கு ஏற்கெனவே, நன்றாகவே தெரியும்.’’
’’பின்னே ஏன் தூங்காமல் இங்கே வந்திருக்கிறாய்?’’
‘’இனிமேல் அப்பா எனக்குத் தேவையில்லை.’’
பையன் இறுக்கமாக, ஆனால் தெளிவாகவே பேசினான். பின்னர் அவன் கன்னத்துச் சதைகளை அசைக்க, அவையோ, அவன் கண்களில் கண்ணீர் வெடிக்கப்போவது போல், சுருங்கி இறுக்கமாகத் தோன்றின. அவன் குரல், மறையும் கதிரைநோக்கிக் கூவும் பெருவாத்து போலக் கம்மிக் கரகரத்து ஒலித்தது.
‘’அக்கா, நான் ஒரு வாய் குடிப்பதற்காக வந்தேன். ஒரே ஒரு வாய்,’’
அவன் பேச்சை நம்புமாறு கெஞ்சுவது போல அவள் முகத்தையே பார்த்தான்.
‘’குட்டீ, உனக்கென்ன புத்தி கெட்டுப் போச்சா?’’
‘’இரண்டே இரண்டு கோப்பை தான் குடிப்பேன். என்னிடம் பணம் இருக்கிறது.’’
அவன் இரண்டு நோட்டுகளைக் காட்டினான்.
‘’எனக்கு போதை வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும். என்னால் எவ்வளவு குடிக்க முடியுமென்று எனக்குத் தெரியும். இன்னும் இரண்டு கோப்பை குடித்தால், இரண்டே இரண்டு தான், அதற்கு மேல் வேண்டாம், சொப்பனம் எதுவுமில்லாமல் தூங்கிவிடுவேன். இப்படியே நிறுத்திவிட்டால், ஒன்றுமே குடிக்காமலிருப்பதை விட மோசமாக இருக்கும். என்னால் தூங்க முடியாது; அதனால்தான் சொல்கி....’’
அந்தக் குழந்தை, நன்னீர்க் குளத்து மீன் போலச் சிரித்தான். அடுக்களையிலிருந்து கையளவு அகல வெளிச்சம், துணையேதுமின்றிச் சாய்வாக அவன் முகத்தில் விழுந்தது. அந்தப் பெண் சிறிது யோசித்ததாகத் தோன்றியது. பின்னர், அவனுக்காகக் கதவைத் திறந்தாள்; அப்போதும் அவளைப் போன்ற பெண்களின் முகங்களில் எப்போதுமிருக்கும் ஒருவிதக் கலக்கம் அவளிடமும் தெரிந்தது. அவன் தள்ளாடியபடியே மதுக்கூடத்தினுள் நுழைந்தான். அந்தப் பெண் கொட்டாவியுடன் அடுக்களைக்குள் நுழைந்து, ஒரு புட்டியை எடுத்து வந்தாள்.
சிறுவன் மேசை மீது அமர்ந்தான்; மேசையும் குளிர்ந்திருந்தது. புட்டியிலிருந்த மதுவை, அவள் கோப்பையில் அவனுக்காக ஊற்றினாள். எதுவும் கலக்காத மது மண்ணெண்ணெய் வாசத்துடன் அவன் முன்பிருக்க, அவன் ஒரு நிமிடம் மூச்சினை இழுத்து நிறுத்தினான். அந்த மங்கலான வெளிச்சத்தில் கோப்பையைப் பார்த்துக்கொண்டு அவன் அமர்ந்திருந்த தோற்றம், ஏதோ ஒரு தீர்க்கமான முடிவோடிருப்பதாகத் தோன்றியது. அவன் ஒவ்வொரு முறையும் கோப்பையை உயர்த்தியபோது, வெளிச்சம், விட்டிற் பூச்சியின் வெள்ளிய சிறகுகளாகச் சிதறியது; அவனோ விதைகளைத் தூவி விதைக்கும் சிறுவனைப் போலத்தோன்றினான். ஒரு கோப்பை காலியானது; அவன் மேசையின் மீது விரல்களால் மெல்லத் தாளமிட்டான். அவள் புட்டியை உயர்த்தி, கோப்பையின் விளிம்பில் தளும்பும் வரைத் தாராளமாகவே ஊற்றினாள்.
‘’ஒவ்வொரு முறையும் என் அப்பா குடிக்கும்போது அழுவார். ஆனால், நான் அழுவதில்லை; நீங்கள் தான் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே.’’
உள் அறை ஒன்றிலிருந்து குழந்தை ஒன்று அழும் சப்தம் கேட்டது. ஆனால், அந்தப் பெண், அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அது தானாகவே அழுகையை நிறுத்திக்கொள்ளும் போலும். கோப்பையை மீண்டும் எடுத்தபோது, சிறுவனின் கரம், முடக்குவாதம் பீடித்த கை போல் நடுங்கியது; அவன் அப்படியே மதுவை விழுங்கிவிட்டான். அது ஒரு மிகக்குறுகிய நேரக் குதூகலம். சிறுவன் மெல்ல எழுந்தான்.
‘’அக்கா, நான் வளர்வதற்கு முன்னால், தயவு செய்து இறந்து விடாதே. ஆனால், அந்தப் பற்களை மட்டும் வெளிக்காட்டாதே, மூடிக்கொள்ளப் பார்.முயற்சி செய்துதான் பாரேன்.’’
அவன் வாசலின் முன்பு குனிந்து வணங்கினான். கதவைச் சாத்திய அந்தப் பெண் ஏதோ கத்தினாள்.
‘’நல்லது; ஒழிந்து போ, இனிமேல் இந்தப் பக்கம் எட்டிப் பார், தெரியும்.’’
 விசை தளர்ந்த பொம்மையாக அவன் நடந்துகொண்டிருந்தான். அவன் செல்ல வேண்டிய இடம் எதுவென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் சரிவில் ஏறத் தொடங்கினான். பாழடைந்த வீட்டின் இடிபாட்டுக் குவியலொன்று இருட்டில் ஒரு மிருகம் போல் படுத்திருந்தது. இரவுப் பூனை ஒன்று கத்தியது. இந்த நேரத்தில் எப்போதுமே ஒரு பூனை அந்த வெளிச்சமற்ற குவியலில், வானத்தில் ஒரு வலை போலத் தோன்றவைக்கும் துருவேறிய இரும்புச் சட்டங்கள் கிடக்கும் இடத்தில் கத்துகிறது.
மலைக்குன்று மீதான காற்று இன்னும் அதிகக் குளிரோடிருந்தது. காற்சட்டைப் பைக்குள் கைகளை நுழைத்தவாறே அவன் மலைச் சரிவில் ஏறிக்கொண்டிருந்தான்.
மலைக்குன்று மீதுதான் அநாதை இல்லம் இருக்கிறது. விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருந்தன; குளிரிலிருந்து காத்துக்கொள்ளச் சிறுபந்து போலச் சுருண்டுகொண்ட குழந்தைகள் தூக்கத்திலிருந்தனர். யாராவது ஒரு பையன் பல்லைக் கடித்துக்கொண்டிருக்கலாம்; வேறொருவன் எப்போதும் போல இருட்டுக்குப் பயந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருக்கலாம்.
(ஆஹ்! ஆஹ்! இந்த இரவின் நள்ளிருட்டில் என் அப்பா உண்மையிலுமே எங்கே இருப்பார்?)
அவன் சிறிது தள்ளாடினான். இப்போது போல் குடித்திருந்தாலும், சுற்றுக் கம்பி வேலியில் நுழைவுத் துவாரமிருக்கும் இடத்தை அவன் ஒருபோதும் மறப்பதில்லை.
வெல்வெட்டாக மினுமினுக்கும் இருட்டில், செவிலியிடம் பிடிபடாமல் வெதுவெதுப்பான அவனது படுக்கைக்கு எப்படிப் பாதுகாப்பாக, ஊர்ந்து செல்வதென்று ஒரு கணம் அவன் கவலைகொண்டான். இருந்தாலுங்கூட, அவன் தன்னிறைவோடு, போதையின் எளிதான நன்னம்பிக்கை முனைப்பில் தன்னை ஒப்புக்கொடுத்தான்.
மலை அடிவாரத்திலிருந்து குளிர்ந்த காற்று தூசி மணத்துடன் வீசியது. அதை நுகர்ந்த அவன், பற்களை இறுக மூடிக்கொண்டே, அடுத்த நாள் அவனது அப்பாவைத் தவறாமல் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவதென்று தீர்மானித்தான்.
  


அடவி செப்டம்பர் 2015 இதழில் வெளியானது