Showing posts with label நைஜீரியச் சிறுகதை. Show all posts
Showing posts with label நைஜீரியச் சிறுகதை. Show all posts

Friday, 18 March 2016

நைஜீரியச் சிறுகதை -பாயன் லாயி Bayan Layi by Elnathan John, Nigeria

பாயன் லாயி Bayan Layi 


ஆங்கிலம் : ஹௌசா /எல்நாதன் ஜான் (நைஜீரியா ) Elnathan John, Nigeria (Hausa language ) 


images
எல்நாதன் ஜான்(நைஜீரியா)
(நைஜீரியாவைச் சேர்ந்த எல்நாதன் ஜான் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றவர், முழுநேர எழுத்தாளராக உள்ளார். இவரது படைப்புகள் பெர் கான்ட்ரா, ஜாம் மேகசின், எவர்கிரீன் ரெவ்யூ, சென்டினெல் நைஜீரியா மற்றும் சிமுரெங்காஸ் க்ரானிகல் இதழ்களில் வெளியாகின்றன. நைஜீரிய செய்தித் தாள் ஒன்றில் அரசியல் எள்ளல் கட்டுரைகளும் எழுதிவருகிறார். தற்போது தமிழாக்கம் செய்யப்படும் பாயன் லாயி கதை 2013 ஆம் ஆண்டு கெயின் விருதுக்கான சுருக்கப்பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.)
*****
பாயன் லாயி1யிலுள்ள கூக்கா2 மரத்தின் அடியில் படுக்கும் பையன்கள், அவர்கள் செய்த கொலைகளைப் பற்றியே பெருமைபேசுவார்கள். நான் அதில் சேர்வதில்லை; ஏனென்றால் நான் எந்த மனிதனையும் கொலைசெய்ததில்லை. பாண்டா செய்திருக்கிறானென்றாலும், அவன் அதைப்பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவன் தலையே வெடிப்பதுபோலப் பேசும்போது, அவன் அமைதியாக வீவீ (கஞ்சா) புகைத்துக்கொண்டிருப்பான். கோபெதனிசா3வின் குரல் எப்போதுமே சத்தமாகத்தான் கேட்கும். அவன், கழுத்தை நெரித்துக் கொன்ற ஒருவனைப் பற்றியே, எப்போதும் பேசிக்கொண்டிருப்பான். சம்பவம் நிகழ்ந்தபோது, நானும் அவன் கூட இருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் தானென்றாலும் அவன் கதை சொல்லும்போது இடைமறிப்பதில்லை. கோபெதனிசாவும் நானும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு திருடுவதற்காக ஒரு தோட்டத்துக்குள் போயிருந்தபோது, விவசாயி திடீரென்று எங்கள் முன்னால் வந்து தொலைத்துவிட்டான். கையில் மாட்டினால் கொன்றுவிடுவேனென்று சொல்லிக்கொண்டே, அவன் எங்களைத் துரத்தியபோது, மான்களுக்காக வெட்டிவைத்திருந்த புதர்க்குழிப் பொறிக்குள் விழுந்துவிட்டான். கோபெதனிசா அவனைத் தொடக்கூட இல்லை. அங்கேயே நின்று, அவன் உயிருக்குப் போராடித் தத்தளித்துத் தத்தளித்துப் பின் தத்தளிப்பதை நிறுத்தும் வரையில் நாங்கள் கவனித்துக்கொண்டிருந்தோம்.
அந்தச் சாவு குறித்து, கோபெதனிசா சொல்லும் பொய்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை; ஆனால், சிலநேரங்களில் அவனை `வாயை மூடு` எனச் சொல்லி, அவன் வாயிலேயே அறையவேண்டுமெனத் தோன்றுகிறது. கொல்வதைப்பற்றி, அவன் பேசுகின்ற முறை, அவனுக்கு என்னவோ அதற்காகச் சுவர்க்கம் கிடைக்கப்போவதுபோல், அல்லா ஒரு நல்ல இடத்தை அங்கே அவனுக்காகவே ஒதுக்கிவைத்திருப்பது போலவும் தோன்றும். அவன் ஏன் அப்படிப் பேசுகிறானென்று எனக்குத் தெரியும். சிறிய பையன்கள் அவனைப்பார்த்து வாய் பிளக்கவேண்டும் என்பதற்காகவே அவன் அப்படிப் பேசுகிறான்; கூடவே, அவர்களைப் பயமுறுத்தவுந்தான். அவனுடைய முகமே தழும்புகளின் மொத்த வரைபடம் தான், அதிலும் தெளிவாகக் கண்ணில் முந்தித் தெரிவது, வலதுபக்கம் வாயிலிருந்து அவன் காதுவரையில் நீளமான கோடுபோலத் தெரியும் வெட்டுத்தழும்புதான். பாண்டாவோடு சண்டை போட்ட நாளில் அது அவனுக்கு எப்படிக் கிடைத்ததென்று அங்கே நீண்டகாலமாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். பாண்டாவைத் தெரிந்தவர்கள் யாரும் அவனோடு மோதமாட்டார்கள். அவனோடு வைத்துக்கொண்டால் சாவைத் தேடிக்கொள்வதாகத்தான் அர்த்தம். ‘’ உன் வேலையைப் பார்த்துவிட்டுப் போடா’’ என பாண்டா கத்துமளவுக்கு வாய்ச்சண்டை எதனால் முற்றியதென்று எனக்கு நினைவில்லை. பாண்டா அந்த அளவுக்குக் கத்தினானென்றால் விஷயம் சிறியதல்ல. பதிலாக, யாராலுமே மன்னிக்கவியலாத அவமானமாக, கோபெதனிசா, ‘’உன் அம்மாவின் —-‘’ எனச் சொன்னானென்றால், பாண்டா கொடுத்த வீவீயை அவன் அளவுக்கதிமாகப் புகைத்திருக்கவேண்டும். பாண்டா அவனைவிடப் பெரியவன். வலது கைப் புயத்தில் ஒரு தாயத்தும் கத்தி மற்றும் அம்புகள் தாக்காமல் காப்பாற்றும் மூன்று மந்திரித்த கயிறுகளும் கட்டியிருந்தான். எந்த இரும்பும், அவனைத் துளைக்கமுடியுமென்று தோன்றவில்லை.
பாண்டாவின் அம்மாவை கோபெதனிசா, அவமானப்படுத்திவிட்டதால், பாண்டா கொய்யா மரத்திலிருந்தும் இறங்கி வந்து, அவன் வாயிலேயே குத்தினான். பாண்டா வேறு, கூரான விளிம்புகளுள்ள துருப்பிடித்த மோதிரம் ஒன்றைக் கைவிரலிலேயே அணிந்திருந்தான். கோபெதனிசாவின் வாயில் இரத்தம் வரத்தொடங்கியது. அவன், தரையில் கிடந்த மரப்பலகை ஒன்றை எடுத்து, பாண்டாவின் முதுகில் அடித்தான். பாண்டா திரும்பிப் பார்த்துவிட்டு, மரத்தை நோக்கி நடந்தான். ஆனால், கோபெதனிசா வெற்றி மிதப்பில் இருந்தான். பாண்டாவைத் தோற்கடிப்பவர் யாராக இருந்தாலும், எங்களுக்கு அவனைக்கண்டு உதறல் தான். நாங்கள் அவனைத்தான் பின்பற்றுவோம். அவன் மீண்டும் ஒரு பலகையை எடுத்து பாண்டாவின் தலையில் அடிக்க முனைந்தபோது, பாண்டா பட்டெனத் திரும்பி, வலதுகையால் அடியைத் தடுத்தான். பலகை இரண்டு துண்டுகளாக முறிந்து விழுந்தது. கோபெதனிசா இரத்தம் ஒழுகும் கைகளோடு பாய்ந்து, பாண்டாவின் தாடையைத் தாக்கினான். பாண்டா அஞ்சிப் பின்வாங்கவில்லை. சண்டையில் யாராவது கொல்லப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டால், அல்லது, உண்மையிலேயே சண்டை நியாயமற்றதாக இருந்தால் தவிர பாயன் லாயியில் யாரும் சண்டையை விலக்கிவிடமாட்டார்கள். சிலநேரங்களில், அல்லா விரும்பாமல், எவரும் இறப்பதில்லையெனக் காரணம் சொல்லி, சண்டையை அப்படியே விட்டுவிடுவதுமுண்டு. பாண்டா, கோபெதனிசாவின் சட்டையைப் பிடித்து இழுத்து, முகத்தில் இரண்டு முறை குத்திவிட்டுப் பின், வலதுகையைத் திருப்பி, அவன் காற்சட்டைப்பைக்குள்ளிருந்த கத்தியை எடுத்தான். கோபெதனிசாவைத் தரையோடு சேர்த்து வலது முழங்கை முட்டியால் அழுத்திக்கொண்டு, அவன் கன்னத்தில் கத்தியால் ஒரு நீண்ட கோட்டினை இழுத்தான்.
பாயன் லாயி தெருக்களில் யாரும் விரோதம் பாராட்டுவதில்லை. கோபெதனிசாவின் முகத்தில் அந்தத் தழும்பு இப்போதும் இருக்கத்தான் செய்கிறது; ஆனாலும் அவன், பாண்டாவின் பின்னால், அவன் சொல்வதைக் கேட்டு, அப்படிக்கப்படியே நடக்கிறான். அல்லாவின் விருப்பப்படிதான் அனைத்தும் நிகழும்போது, ஒருவருக்கொருவர் ஏன் விரோதம் பாராட்டிக்கொள்ளவேண்டும்?
***
எனக்கு பாண்டாவைப் பிடிக்கும்; ஏனென்றால், வீவீ விஷயத்தில் அவன் மிகவும் தாராளம். அவன் சபோன் காரி4க்குச் செல்லும் நாட்களில் இங்கு நடந்தவற்றை நான் அவனுக்குச் சொல்லும் முறை அவனுக்குப் பிடிக்கவில்லையாம். ஒரு கதையை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லையென அவன் சொல்கிறான். ஹர்மாட்டன்5 பருவக்காற்று, புழுதியை வாரி, வீசி, வீசி அடிப்பதைப்போலத் திசைதெரியாமல் நான் பேசுகிறேனாம். எனக்கு நினைவில் வருகிற மாதிரியில் நான் சொல்கிறேன், அவ்வளவுதான். சில சமயங்களில் நீங்களாகத்தான் கதையை விவரித்து, விளங்கிக்கொள்ளவேண்டியிருக்கும். அநேகம் கதைகளுக்குள்ளும், விளக்கம், அதுவாகவே புதைந்து கிடக்கின்றது. கதையை அதன் உண்மையிலும், உண்மையான தொடக்கத்திலிருந்து, சொல்வதைத்தவிர, வேறெந்த வகையில், சொன்னால், சுவையாக இருக்கும்?
அது தேர்தல் நேரம். சிறிய கட்சிக்காகச் சுவரொட்டி ஒட்டுவதும் பெரிய கட்சியின் சுவரொட்டிகளைக் கிழிப்பதும் அல்லது நகரத்தில் யாருடைய ஊர்தியையாவது உடைப்பதுமாக, பாண்டா கையில் நல்ல காசு. பணத்தை அவன் எப்போதுமே எல்லோருடனும் பகிர்ந்துகொள்வான்; அதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதைவிட எனக்கு அதிகமாகவே கொடுப்பான். பாயன் லாயியின் பெரிய பையன்கள் கூட்டத்தில் நான் தான் மிகச் சிறியவன், பாண்டாதான் மிகப்பெரியவன். ஆனால், அவன் என்னுடைய மிகச்சிறந்த தோழன்.
கடந்த மாதம், அதுதான் ரமலான் மாதமென நினைக்கிறேன், ஒரு பையன் பாயன் லாயியில் திருட முயன்றான். பாயன் லாயியில் திருடுவதற்கு யாரும் துணிந்துவிடமாட்டார்கள். அவன் எப்படியோ, லாதிதி அம்மாவின் கடலை எண்ணெய் டப்பாக்களைக் குறிவைத்து வந்திருக்கிறான். அவளுடைய வீடு ஒரு `பா ஷிகா`; அதாவது ஆண்கள் நுழையக்கூடாத வீடு. அவனைக் கண்டதும் அவள் அலறிவிட்டாள். உடனேயே அவன் ஓடிச்சென்று வேலியைத் தாண்டிக்குதித்தான். திருடர்களைத் துரத்துவது, அதிலும் அவர்கள் பாயன் லாயியைச் சேர்ந்தவர்களில்லையெனத் தெரிந்துவிட்டால், சர்க்கரை சாப்பிடுவது மாதிரி எனக்கு மிகவும் பிடித்த விஷயம். சபோன் காரியில் ஒருமுறை இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து காலை ஒடித்துக்கொண்டாலும், இங்கே அதிவேகமாக ஓடுபவன் நான்தான். எப்படியோ, கடலை எண்ணெய்த் திருடனை நாங்கள் பிடித்து, அவன் வாழ்நாள் முழுவதற்கும் போதுமென்கிற அளவுக்கு நன்கு கொடுத்தோம். திருடனை அடிக்கும்போது கூரான ஏதாவதொன்றைப் பயன்படுத்துவது எனக்குப் பிடிக்கும். அவனைக் குத்தும்போது, இரத்தம் பீறிட்டுவரவேண்டும்; அதை நான் கண் குளிரப் பார்க்க வேண்டும். அதுதான் எனக்குப் பிடிக்கும். அதனால் அந்தப் பையனை நாங்கள் பிடித்து உட்காரவைத்து, அவன் பெயர் என்னவெனக் கேட்டோம். அவன் இடோவு என்றான். அவன் பொய் சொல்கிறானென்பது எனக்குத் தெரியும். அவன் மூக்கு இக்போ பையனின் மூக்கு போல இருந்தது. அவனுடைய உண்மையான பெயரைக் கேட்டுப் பலமுறை அவன் தலையில் என் நகங்களைப் பாய்ச்சினேன்.
‘’இடோவு! சத்தியமாகச் சொல்கிறேன், என் பெயர் இடோவுதான்,’’ என் நகம் அவன் தசையைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும் அவன் அலறினான்.
‘’உன்னோட உங்குவா6 எங்கேடா இருக்கிறது?’’ ஒற்றைக் கண் பொட்டையான அச்சிஷுரு அவன் கன்னத்தில் அறைந்து கேட்டான். இந்த ஒற்றைக்கண் பயலுக்கு எப்படி அறையவேண்டுமென்று நன்றாகத் தெரியும்.
‘’சபோன் காரிக்குப் பக்கத்தில்,’’ என்றான், அந்தத் திருடன்.
‘’எங்கேயென்று குறிப்பாகச் சொல்லுடா,’’ என்று கத்தினேன். அவன் அமைதியாக இருந்தான். அவன் கழுத்தில் என் நகத்தைப் பாய்ச்சினேன்.
‘’சபோன் லாயி.’’
அப்படியே எழுந்து ஓடினான் பாருங்கள், வானத்துப் பறவையைப் போல விசுக்கென்று பறந்துவிட்டான். இந்தமுறை அவனை எங்களால் பிடிக்கமுடியவில்லை. அவனை விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டான், பாண்டா. அவன் சபோன் லாயியைப் போய்ச் சேர்ந்திருக்கவில்லை. அன்று மாலையில் ஏதோ ஒரு கழிவுநீர்ச் சாக்கடையில் அவனது உடல் கிடந்திருக்கிறது. அல்லா அவருடைய காரியங்களை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார், பாருங்கள்! நாங்கள் ஒன்றும் அவனை அப்படி அதிகமாக அடித்துவிடவில்லை. இதைவிட மோசமாக யார்யாரையோவெல்லாம் செம்மையாக அடித்திருக்கிறோம், அவர்களெல்லாம் செத்துவிடவில்லை. ஆனால், யார் உயிரோடிருக்கவேண்டும், யார் சாகவேண்டுமென்பதை அல்லா தீர்மானிக்கிறார். நான் இல்லை. நாங்களும் இல்லை. நீங்களும் இல்லை.
சபோன் காரியிலிருந்து புலனாய்வுத்துறையுடன் எங்கள் பகுதிக்குக் காவல் துறை வரவே நாங்கள் ஓடி ஒளியவேண்டியிருந்தது. சிலர் மசூதிக்குள் ஒளிந்துகொண்டார்கள். பாண்டா, அச்சிஷுரு, தாவ்தா, நான் எல்லோரும் பாயன் லாயிக்குப் பின்னால் ஒரு பகுதியாக ஓடும் கடுனா ஆற்றின் குறுக்காக நீந்தி, அக்கரையிலிருந்த வயல்கள், புதர்க்காடுகளில் நெடுநேரம் அலைந்து திரிந்து, பின்னர், ஆற்றைக் கடந்து திரும்பிவருவதற்கு மிகவுமே பிந்திய இரவாகிவிட்டது. பாண்டா, அவனுடைய மந்திரக் கயிறுகளோடு இரவில் ஆற்றில் இறங்குவதில்லை. இரவில் அவனுடைய மந்திரக் கயிறுகள் மீது ஆற்றுத் தண்ணீர் பட்டால் அவன் சக்தியை இழந்துவிடுவானென்று சொல்கிறான். அவற்றைக் கழற்றிவைக்கவும் முடியாதாம்; அப்போதும் அதன் சக்தி மாயமாய் மறைந்துபோகுமாம். .
***
எல்லோரும் தேர்தலைப்பற்றித்தான், நிலைமைகள் எப்படி, எப்படியெல்லாம் மாறக்கூடுமென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடலை எண்ணெய் விற்பதைத்தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத லாதிதி அம்மா கூட, அவள் வீட்டுச் சுவரில் சிறிய கட்சியின் சுவரொட்டியை ஒட்டியிருக்கிறாள்; தேர்தல் பற்றிய செய்திகளைக் கையடக்க வானொலி ஒன்றில் கேட்கிறாள். எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள். சந்தையிலிருக்கும் பெண்கள், வேட்பாளரின் படம் மற்றும் கட்சிச் சின்னம் குறித்த அட்டையை அணிந்திருக்கிறார்கள். பல ஆண்களும் வேட்பாளரைப் போலவே வெள்ளை நிறத்தில் முழுநீள அங்கியும் சிவப்பு நிறத் தொப்பியும் அணிகின்றனர். எனக்கும் அந்த மனிதரைப் பிடித்திருக்கிறது. அவரொன்றும் பெரிய பணக்காரரில்லை தான்; ஆனாலும் நிறையவே உதவிகள், நன்கொடைகள் மற்றும் பிச்சை அளிப்பதோடு, எப்போதெல்லாம் ஊருக்குள் வருகிறாரோ, அப்போதெல்லாம் எல்லோருடனும் மிகச் சாதாரணமாகப் பேசிப் பழகுகிறார். அவர் அந்தச் சிவப்புத் தொப்பியை ஒருபக்கமாக எந்நேரமும் கீழே விழுந்துவிடலாமென்பதைப் போல அணிவதே ஒரு அழகுதான். எனக்கும் பணம் கிடைத்தால், அதைப்போல ஒரு தொப்பி வாங்கிவிடுவேன்; வெள்ளை நிற அங்கியும் கூடத்தான்; ஆனால் வெள்ளையைச் சுத்தமாக வைத்திருப்பது கஷ்டம்; சோப்புக்கு வேறு தனியாகச் செலவாகும். அடித்துச் சுத்தமாகத் துவைத்தாலும், ஆற்றுத் தண்ணீருக்குச் செங்காவி நிறமாகிவிடும். என்னுடைய பழைய குரான் போதகர் மாலம் ஜுனாய்டுவும் வெள்ளையே அணிவதோடு, நபி(ஸல்) அவர்களும் வெள்ளை அணிவதையே விரும்பினாரென்றும் சொல்வார். ஆனால், மாலம் ஜுனாய்டு அவரது துணிகளை, நல்ல தண்ணீரைப் பையன்களிடம் விலைக்கு வாங்கிச் சலவைசெய்யும் டனிமுவிடம் போடுகிறார். ஒருநாள், நானும் இன்ஷா அல்லா, நல்ல தண்ணீரை விலைக்கு வாங்குவதோடு, என் துணிகளை டனிமுவிடம் சலவைக்குப் போட்டு வாங்கி, என்னுடைய வெள்ளை ஆடைகளையெல்லாம் அடுக்கிவைப்பதற்காக ஒரு பெட்டியும் வாங்குவேன். சிறிய கட்சி மட்டும் ஜெயித்துவிட்டால் எல்லாமே நல்லதாகிவிடும். இன்ஷா அல்லா.
எனக்கு ஊர்வலங்கள் பிடிக்கும். சிறிய கட்சியின் ஆட்கள் பாண்டாவை நம்புகிறார்கள்; பாயன் லாயி பையன்களை அவர்கள் கட்சிக்காகத் திரட்டச் சொல்லி, பாண்டாவிடம் பணம் கொடுக்கிறார்கள். சில நாட்களில் ஆளைப் பொறுத்து, அல்லது ஊர்வலத்தைப் பொறுத்து, எங்களுக்கு 150 நைராக்கள் கூடக் கிடைத்துவிடும். அதோடு எங்களுக்குக் குடிக்கவும் சாப்பிடவும் நிறையக் கிடைக்கும்.
பாண்டாவோடு ஊருக்குள் சுற்றிவருவது எனக்குப் பிடிக்கும். எல்லோரும் அவனை மதிக்கிறார்கள். அவனைவிடப் பெரிய பையன்கள் கூட அவனைக் கண்டு பயப்படுகிறார்கள். மாலம் ஜுனாய்டுவின் மதரசாவில் குரான் பயிற்சி முடித்த நேரத்தில் பாண்டா எனக்கு நண்பனானான். நான் மதரசா படிப்பு முடித்ததும், சொகொட்டோவிலுள்ள எனது கிராமத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு மாலம் கூறினார். ஆனால், அப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருந்த அல்ஃபா, என் அப்பா இறந்துவிட்டதாகச் சொன்னான். அவன் அப்பா சொகொட்டோவில் எங்கள் அப்பாவின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறார். அப்பா எதனால் இறந்தாரென்று நான் அவனைக் கேட்கவில்லை; ஏனென்றால், அல்லா என்னை மன்னிப்பாராக, எனக்கு அதில் அவ்வளவாக அக்கறை இல்லை. என் அப்பாவைப் பார்த்து மிகப் பல நாட்களாகிவிட்டது. அவரும் என்னைப் பற்றி எதுவும் விசாரித்ததாகத் தெரியவில்லை. என் அம்மாவும் கிராமத்தைவிட்டுக் கிளம்பிப் போய் சொகொட்டோ நகரத்திலுள்ள ஜுமாஅத் மசூதி அருகில் பிச்சையெடுப்பதாக அல்ஃபா சொன்னான். எனக்கு இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கூட அல்ஃபாவுக்குத் தெரியவில்லை. அதனால், சொகொட்டோவுக்குப் போக எனக்கு மனமில்லாவிட்டாலும், மாலம் ஜுனாய்டுவிடம் சொகொட்டோவுக்குத் திரும்பிப் போவதாகக் கூறினேன். அதற்காகும் கட்டணத்தை அவர் தருவார் என்று தான் நினைத்தேன். சொகொட்டோவுக்குப் பெரிய, பெரிய மரங்களின் தடிகள் ஏற்றிச்செல்லும் கனரக ஊர்திகளின் பின்னால் ஏறிச் செல்ல சபோன் காரியிலுள்ள பூங்காவிலிருந்து முந்நூறு நெய்ரா ஆகும். அதற்கு அவர், என் அப்பா கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டிலும் கூட என்னுடைய குரான் பயிற்சிக் கட்டணமாக தானியம் எதுவும் கொண்டுவரவில்லை என்பதைச் சொல்லிக் காட்டிவிட்டு, எழுபது நெய்ராதான் கொடுத்தார். நான் சொன்னேன், எனது அப்பா இறந்துவிட்டாரென்று. அவர் ஒரு கணம் அமைதியாகிப் பெருமூச்சு விட்டபின் ‘’ இன்னலில்லாஹி வாய்ன்னா இல்லாஹி ரஜியுன்’’ என்று சொல்லிவிட்டு, இடத்தைவிட்டும் அகன்றுசென்றார். உயிரைக் கொடுப்பதும் எடுப்பதும் அல்லாதான் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லையென்றில்லை. அதனை, அவர் பாடம் நடத்தும் அதே உயிரற்ற குரலில் சொன்னவிதம்தான் என்னை வருத்தப்படச் செய்தது. ஆனால், நான் அழவில்லை. அன்று மாலை, நான் ஒரு சிகின் ஷேகெ என்று அல்ஃபா சில பையன்களிடம் சொன்னதைக் கேட்கும்வரையில் அழவில்லை. வேசிவயிற்றுப் பிறப்பு! அவன் எங்கிருந்து அப்படியொரு பேச்சினைக் கேட்டானென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள், மாலம் ஜுனாய்டு கட்டிய திறந்தவெளி மசூதி அருகிலுள்ள கிணற்றங்கரையில்தான் உட்கார்ந்திருந்தனர். அல்ஃபாவின் இடுப்பிலேயே உதைத்தேன். எங்களுக்குள் சண்டை தொடங்கியது. சாதாரணமாகவே, நான் அவனை அடித்துத் துவைத்துவிடுவேன், ஆனால், அன்று இரண்டு பையன்கள் என்னைப் பிடித்துக்கொண்டார்கள்; அதனால், அல்ஃபா என்னைத் தாக்கி, அறைந்து கொண்டேயிருந்தான்; நான் அழுது, அலறிக்கொண்டிருந்தபோது, பாண்டா அந்த வழியாக வந்தான். பாண்டா அல்ஃபாவை ஒரே அடியில் தரையில் சாய்த்து, மற்றொருவனைத் தூக்கி வீசினான். நான் அல்ஃபாவின் மீதேறி என் கை ஓயும்வரையில் அவன் வயிற்றில் குத்தினேன். மற்ற பையன்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். அந்த நாளில்தான், என் வாழ்க்கையில் அதுவரையில் அழாத அழுகைக்கெல்லாம் சேர்த்து அழுதேன். நான் பாண்டாவின் பின்னால் போனேன். அவன் வீவீ தந்தான்; நான் என்னுடைய முதல் வீவீயைப் புகைத்தேன். அதன் சுகம் ஒரு அற்புதமே தான்! கால்கள் கனம் இழந்து, இழந்து, பின்னர் ஒரு கட்டத்தில், கால்களே இல்லாமலாகிவிட்டது போல் உணர்ந்தேன். நான் காற்றில் மிதந்துகொண்டிருந்தேன்; என் இமைகள் கனத்தன; பாண்டாவைவிட, கோபெதனிசா, ஏன், கூக்கா மரத்தடிப் பையன்கள் எல்லோரையும் விடப் பெரியவனாக, அவர்களைவிட வலிமையானவனாக உணர்ந்தேன். இருமாமல் புகைக்கும் என்னுடைய பாணி, அவனுக்குப் பிடிப்பதாக, பாண்டா கூறினான். இப்படித்தான் நாங்கள் நண்பர்களானோம். அவனுடைய அட்டை விரிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்து, அவர்கள் தூங்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றான். அவர்கள் கூக்கா மரத்தின் கீழ் அட்டைகளை விரித்துப் படுத்தனர்; மழைக்காலங்களில் அல்ஹாஜி முகமதுவின் அரிசிக் கடையின் துத்தநாகக் கூரை முகப்பிற்குக் கீழேயுள்ள சிமென்ட் தரைக்கு மாறிக்கொள்வார்கள்.
பாண்டா என்னைப் போல அல்மாஜிரி7 இல்லை. அவன் மற்ற பல பையன்களைப் போலவே சபோன் காரியில் பிறந்தவன்தான்; ஆனால், குரான் பள்ளியில் படிக்கவில்லை. கூக்கா மரத்தடி பையன்களைப் பற்றி மாலம் ஜுனாய்டு எச்சரித்திருந்தார். அவர்கள் ரமலான் அல்லது ஈத் பண்டிகை நாட்களில் மட்டுமே மசூதிக்கு வருகின்றனர்; யான் தாபா8 தடியன்கள்; பாயன் லாயியில் பிரச்சினை செய்வதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. அவர்களுக்கு எங்களைப் போல குரானும் சுனா9வும் தெரியாததோடு, அவர்கள் ஐந்துமுறை தொழுவதோ, நோன்பிருப்பதோ இல்லை. அதனால் நாங்கள் அவர்களை இழிந்தவர்களாகக் கருதினோம். மாலம் சொல்வார், ‘’ ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை தொழாதவன் முஸ்லிமே கிடையாது.’’ இப்போது நானும் கூக்கா மரத்தடிக்கு வந்துவிட்டேன், எனக்குத் தெரிகிறது, தினமும் ஐந்துமுறை தொழவில்லையென்றாலும் அவர்களில் சிலர் அன்பானவர்களாக, நல்லவர்களாக இருக்கின்றனர் – அவர்கள் இதயத்தில் என்ன இருக்கிறதென்பதை அல்லா அறிவார்.
பாண்டா ஒரு வயதான பையன். அவனுக்கு என்ன வயதாகிறதென்று எனக்குத் தெரியாது, ஆனால் எங்களில் மீசை உள்ளவன் அவன் மட்டும்தான். என்னுடைய வயதை யாராவது கேட்கும்போது எனக்கு வெறுப்பாக இருக்கிறது; ஏனென்றால் எனக்கு என் வயது தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் கிட்டத்தட்டப் பத்து முறை நோன்பு நோற்றிருக்கிறேன் என்பதுதான். நான் அப்படிச் சொல்லும்போது, சிலர் புரிந்துகொள்கிறார்கள்; ஆனால், கடந்த ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது கேட்ட பெண் போலவே, வேறு சிலர் எரிச்சல்படுத்தும் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், வாக்காளர் பதிவின் போது, என் வயது பத்தொன்பது என்று சொன்னாலும், பாண்டா கொடுத்த பழைய முழுநீள அங்கியின் கைகளை மடித்துச் சுருட்டிக்கொள்ளவேண்டியிருந்தது. சிறிய கட்சியின் ஆட்கள் தான் அப்படிச் சொல்லிப் பதிவுசெய்யுமாறு, எங்கள் எல்லோருக்கும் தலைக்கு நூறு நெய்ரா கொடுத்தார்கள். பதிவுசெய்யும் அலுவலர்கள் முணுமுணுத்து, மறுத்தாலும் கடைசியில் எப்படியோ பதிவுசெய்துவிட்டார்கள். வாக்காளர் அட்டையில் என் தலை பெரியதாக இருந்ததை, பாண்டாவும் அச்சிஷுருவும் கேலிசெய்துகொண்டே, இருந்தார்கள். அச்சிஷுரு என்னைப் பார்த்துச் சிரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை; அவனுக்கு ஒற்றைக் கண்தான்; அப்படியிருக்கையில், அவன் என் தலையைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது. அவன் நிரம்பக் கஞ்சனும்கூட. வீவீயைக்கூட யாருடனும் பகிர்ந்துகொள்ளமாட்டான்.
*******
‘’நாம் தேர்தலுக்காக நிறைய வேலை செய்யவேண்டியிருக்கிறது,’’ என்கிறான், பாண்டா இருமிக்கொண்டே.
தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால், நமக்கு 1000 நெய்ரா வீதம் கூடத் தருவதாக சிறிய கட்சி உறுதியளித்திருக்கிறது. நம்மைப் போல வீடற்ற பையன்களுக்காகவும், வீட்டுக்குத் திரும்பிப்போக முடியாதவர்களுக்காகவும் பெற்றோர் இல்லாதவர்களுக்காகவும் தங்குமிடம் ஒன்று கட்டித் தருவதாகவும், அங்கு நாற்காலி செய்வது, அங்கி தொப்பிகள் தைப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்ளலாமென்றும் சொல்கிறார்கள். பாண்டா இதற்கு முன்னால் இதுபோல் இரத்தம் துப்பி, இருமியதில்லை. அவனுக்கு உடம்பு சரியில்லை என்று நினைக்கிறேன்.
அச்சிஷுரு, பாண்டா, கோபெதனிசாவோடு நானும் சபோன் காரியிலிருந்து வேறு சில பையன்களும் சிறிய கட்சி அலுவலகத்துக்கு தேர்தலில் ஜெயிப்பது குறித்துப் பேசுவதற்காகச் சென்றுகொண்டிருந்தோம். இங்கு யாருமே பெரிய கட்சியை விரும்பவில்லை. அது, ஏனென்றால் நாங்களெல்லாம் அவர்களால் தான் ஏழைகளாயிருக்கிறோம். அவர்களின் ஆட்கள் இங்கே வரத் துணியமாட்டார்கள்; ஏனென்றால் இங்குள்ள மக்கள் அவர்களைத் துரத்திவிடுவார்கள் என்பதுதான்.
பாண்டா இருமிக்கொண்டே, இன்னும் அதிகமாக இரத்தம் துப்புகிறான். எனக்குக் கவலையாக இருக்கிறது. தேர்தலுக்குப் பின், சிறிய கட்சி, பெரிய கட்சியாகும்போது, தலைநகரில் ஏராளமான பூக்களும் மரங்களுமாக இருக்கும் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கச் செலவுசெய்வார்களாக இருக்கலாம். அல்லது அல்லா விரும்பினால், மருத்துவ மனைக்கே அவசியமில்லாமல், அவன் குணமாகிவிடலாம்.
கடைசி மாலைத் தொழுகைக்குப்பின் ஒரு மணிநேரம் ஆகியிருக்கலாம். சிறிய கட்சி ஆளின் சகோதரன் முன்பக்கம் சிறிய கட்சியின் கொடி கட்டிய, திறந்த வெள்ளை டிரக்கில் அப்போதுதான் பாயன் லாயிக்குள் வந்திருந்தான். அவன் பாண்டாவின் பெயரைச் சொல்லிக் கத்தி அழைத்தான். பாண்டா கொய்யா மரத்திலிருந்தும் இறங்கினான்; நான் அவன் பின்னால் போனேன்.
‘’உங்களில் யார் பாண்டா?’’ டிரக்கின் பின்பகுதியில் உட்கார்ந்திருந்த ஒருவன் கேட்டான். அவன் முகத்தை என்னால் பார்க்கமுடியவில்லை.
‘’நான் தான்,’’ என்று பதில்சொன்னான், பாண்டா.
‘’இது, இவன் யாரு?’’
‘’ என்னுடைய நண்பன், நாங்கள் ஒரே இடத்தில் படுக்கிறோம்.’’
‘’என் பெயர் தண்டலா,’’ என்றேன், நான்.
‘’நல்லது. எங்களுக்கு பாண்டா மட்டும்தான் வேண்டும்.’’
எனக்குக் கோபமென்றாலும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
‘’உடன் வந்துவிடுவேன்,’’ வலது கை தாயத்துகளைச் சரிசெய்துகொண்டே, என்னிடம் சொல்கிறான். அவன், அவனுக்குப் பிரச்சினை எதுவுமில்லை என்பதை என்னிடம் தெரிவிக்கும் முறை அதுதான். அவன் டிரக்கின் பின்பக்கம் தாவி ஏறியதும், அவர்கள் கிளம்பிப் போனார்கள்.
***
மசூதியில் தொழுகை அழைப்புக்கான முதல் பாடலை அரபுக் குரலாளர் பாடும்போதுதான் பாண்டா வந்தான். அன்று தேர்தல் நாள். எனக்குத் தெரியும், பையன்களுக்காக பாண்டாவிடம் அவர்கள் நிறையப் பணம் கொடுப்பார்கள். அதனாலேயே, அதீத ஆர்வத்தில் என்னால் தூங்க முடியவில்லை.
‘’உன்னிடம் என்ன சொன்னார்கள்?’’ நான் விசாரித்தேன்.
‘’ஒன்றுமில்லை.’’
‘’ஒன்றுமில்லையென்றால் என்ன அர்த்தம்?’’ நான் எரிச்சலடைந்தேன். ‘’அப்படியென்றால், ஒன்றுமில்லாததற்காகவா உன்னை இரவு முழுவதும் அவர்களோடு வைத்திருந்தார்கள்?’’
பாண்டா எதுவும் சொல்லவில்லை. அவன் நீளமான இரண்டு வீவீ சுருள் பொதிகளை எடுத்து ஒன்றை என்னிடம் நீட்டினான். நாங்கள் அதை ஜம்போ, பெரியது என்போம். சடசடக்கும் நூறு நெய்ரா நோட்டு இரண்டையும் கொடுத்தான். இந்த மாதிரி சடசடக்கும் நோட்டுகளைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது.
‘’தொழுகைக்குப் பிறகு, மசூதியின் பின்னால் எல்லோரையும் கூட்டி, ஆளுக்கு நூற்றைம்பது கொடுப்போம். பின்னர், அங்கேயே காத்திருப்போம். என்ன செய்யவேண்டுமென்று அவர்கள் சொல்வார்கள். வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களுக்குக் கூடுதலாக ஒரு இருநூறு கிடைக்கும். எல்லா அட்டைகளையும் நான் வாங்கி, அவர்கள் அலுவலகத்திற்கு எடுத்துப் போகிறேன்.’’
அட்டைகளை அவர்கள் எதற்குக் கேட்கிறார்களென்று எனக்குப் புரியவில்லை. பெரிய கட்சியைத் தோற்கடிக்க உதவுமாறு கேட்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், எனக்கு அந்தக் கூடுதல் இருநூறு வேண்டும். தேர்தலில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பாயன்லாயியிலுள்ள எல்லோருக்கும் அப்படித்தான். சபோன் காரியிலுள்ளவர்களும் சிறிய கட்சியைத் தான் விரும்பினார்கள். அவர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். இன்ஷா அல்லா!
நாங்கள் வாக்களிக்கப் போவதில்லையென்றாலும் பாயன் லாயிக்கும் சபோன் காரிக்கும் நடுவிலிருந்த வாக்குச் சாவடி நோக்கிச் செல்கிறோம். அன்றைய நாள் மிவும் மெல்ல நகர்வதாகத் தோன்றியது. வெயில் வேறு காலையிலேயே கொளுத்துகிறது. வாக்குச்சாவடி அலுவலர்கள் விரைவில் வந்து, தேர்தல் உடனேயே தொடங்கிவிடுமென்றுதான் நினைக்கிறேன். ஏராளமான பெண்கள் வாக்களிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள். சிறிய கட்சி ஆட்கள்தான் எல்லா இடங்களிலும் தெரிகின்றனர். வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் குடிக்கத் தண்ணீரும் ஜோபோ10 சர்பத்தும் கொடுக்கிறார்கள். பெண்களிடம் உப்பு மற்றும் கருவாட்டுப் பொதி ஒன்றும் நெகிழிப்பைகளில் கொடுக்கிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாகச் சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரிய கட்சியின் முகவர் வெள்ளைநிற வெற்றுப் பேருந்து ஒன்றில் வந்து இறங்கியதும் அவர் அணிந்திருந்த கட்சி அடையாளங்களைக் கழற்றுகிறார். தாக்கப்படுவோமோ என்று அவர் பயப்படுவதாக நான் நினைத்தேன். சிறிய கட்சிக்காரர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தும் அவர் புகார் எதுவும் சொல்லவில்லை; சொல்ல நினைத்தாலும் முடியாது; ஏனென்றால், அப்படிச் சொன்னால், அவரை அங்கிருந்த இரண்டு காவல்துறை காவலர்களாலும்கூடக் காப்பாற்றமுடியாதென்பது அவருக்கும் தெரியும்; ஏனென்றால், பெரிய கட்சிக்காக வேலைசெய்யத் தொடங்கும் முன் அவரும் பாயன்லாயியில் இருந்தவர் தான், இப்போது சபோன் காரியில் ஒரு அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அவர் அங்கும் கூட எப்போதாவதுதான் தங்குவதாகவும் அதிக நாட்களும் அவருடைய பணம் முழுவதும் போட்டு வைத்திருக்கும் தலைநகரில்தான் இருப்பதாகவும் பாண்டா சொல்கிறான்.
வாக்களிப்பு முடியப்போகிறது. என்னுடைய வீவீ வீரியமும் குறைகிறது; ஆனாலும் காலையில் பாண்டா கொடுத்த ஜம்போ இன்னும்கூட வேலை செய்யத்தான் செய்கிறது. மீண்டும் மீண்டுமாக வழங்கப்பட்ட வெறும் ஜோபோவை மட்டும் குடித்துக் குடித்து அலுத்துவிட்டது, எனக்கு நல்ல பசி. பாண்டாவை எங்கும் காணவில்லை. அவனைத் தேடித் தெரு மூலை திரும்பிய போது, அங்கே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, குனிந்துநின்று இருமிக்கொண்டிருந்தான். நிறையவே இரத்தம் துப்பினான். நன்றாக இருக்கிறாயா என நான் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் தரையில் ஒதுக்கமாக உட்கார்ந்தான். தண்ணீர்ப் பை ஒன்று வாங்கி வந்து கொடுத்தேன். வாயைக் கழுவிக் கொப்புளித்துவிட்டு, சிறிது தண்ணீரைக் குடித்தான்.
‘’இந்தத் தேர்தலில் நாம் ஜெயிப்போம்,’’ என்றான், பாண்டா.
‘’அது சரி, அதை யார் தடுத்துநிறுத்த முடியும்?’’ – நாங்கள், இப்போது உண்மையான அரசியல்வாதிகளைப் போல, கட்சிக்காரர்களைப் போலப் பேசத் தொடங்கிவிட்டோம்.
‘’நமக்காக அந்தத் தங்குமிடத்தை அவர்கள் உண்மையில் கட்டித்தருவார்களா?’’ நான் கேட்டேன்.
‘’அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. எனக்கு வேண்டியது, வேலைசெய்யச் சொல்கிற ஒவ்வொரு முறையும் அதற்கான பணத்தைத் தந்துவிடவேண்டும். அவ்வளவுதான், தேர்தலுக்குப் பிறகென்றால், அவர்களை எங்கே பார்க்கப்போகிறாய்?’’
பாண்டா மிகவும் புத்திசாலி. கட்சிக்காரர்கள் செய்வார்கள் என எந்த ஒன்றையும் எதிர்பார்ப்பதை நானும் நிறுத்தவேண்டும். மீதியிருந்த ஜம்போவைப் பற்றவைத்துக்கொண்டே, அவனுக்கும் வேண்டுமா எனக் கேட்கிறேன்.
‘’நீ வரும் முன்புதான் நானும் ஒன்று இழுத்தேன்,’’ என்றான், அவன்.
*****
கோஷங்களும் கூச்சல்களும் கேட்டன. எண்ணிக்கை முடிந்துவிட்டது; நாங்கள் எதிர்பார்த்தது போலவே, இங்கே சிறிய கட்சிதான் வெற்றிபெற்றது. இங்கே பெரிய கட்சிக்கு இருபது வாக்குகளுக்கு மேல் கிடைத்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. நாங்கள் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து, கோஷமிடவும், காலி டப்பாக்களைத் தட்டி, ஆரவாரம் செய்து, ஆடித் தீர்க்கவுமாக எழுந்து சென்றோம்.
***
நான் மிகவும் சீக்கிரமாகவே களைத்துவிட்டேன், ஏனென்றால் நேற்று இரவு முழுவதும் பாண்டாவுக்காகத் தூங்காமல் விழித்துக் காத்திருந்தேன். நான் வேகத்தைக் குறைத்தேன். அப்போதும் உயரத்தில் தான் மிதந்தேன்; என் தலைக்குள் என்னென்னவோ சிந்தனைகள் திடீரென்று தோன்றிச் சுற்றிச்சுற்றி வருகின்றன. குரான் ஆசிரியரை விட்டுவந்த பின்னர் தொழுவதே இல்லையென்றாகிவிட்டது. சபோன் காரியிலுள்ள ஜுமாஅத் மசூதிக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டும் போகிறோம். ஏனென்றால் அங்கே நிறைய ஆட்கள் பிச்சையிடுவதோடு, இலவச உணவும் அதிகம் கொடுக்கிறார்கள். ஆனால் இதயத்து எண்ணங்களை அல்லா தீர்மானிக்கிறார். நாங்கள் பயங்கர மனிதர்கள் இல்லை. நாங்கள் சண்டையிடுகிறோமென்றால், அப்படிச் சண்டையிடவேண்டியிருக்கிறது. சபோன் காரியில் சிறிய கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே நுழைகிறோமென்றால் எங்களுக்குப் பசிக்கிறது. யாராவது இறக்கிறார்களென்றால் நல்லது, அது அல்லாவின் விருப்பம்.
பாண்டா மீண்டும் காணாமல் போகிறான். அதிகாலையில் திரும்பிவந்து, இன்று காலை தொழுகைக்குப்பின் நாம் மீண்டும் வெளியே போகவேண்டியிருக்கிறது என்கிறான்.
‘’தேர்தலில் நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்,’’ என்றான், பாண்டா பயங்கரமாக இருமிக்கொண்டே.
‘’அவர்கள் எண்களில் விளையாடியிருக்கிறார்கள். நாம் வெளியே போய்த்தானாகவேண்டும்.’’
சுற்றிலும் ஒரே கூச்சலாக இருந்தாலும் நான் தூக்கக் கலக்கத்திலிருக்கிறேன். முன்,பின் பழக்கமில்லாத பையன்கள் மசூதிக்குப் பின்னால் நின்று கத்திக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தூங்கினால் போதுமென்றிருக்கிறது. என் வயிறு சிக்கல் செய்கிறது; தலை வலிக்கிறது. இதுபோன்ற நேரத்துக்காகத்தானே எங்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள். மற்ற பையன்களைப் போல, இந்த உடைக்கிற, கொளுத்துகிற வேலைக்கெல்லாம் நான் பழக்கமானவனல்ல. கூக்கா மரத்தடியில், கொஞ்சமாவது நெருப்பும் கண்ணாடி உடைப்பும் நிகழாமல் எதுவும் முழுமையாகத் தீருவதில்லை.
‘’இந்தத் தெற்கத்தியான்கள் நம்மை ஏமாற்ற முடியாது, நாம்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். பிறகென்ன, மண்ணாங்கட்டி!’’
கூச்சல் போடுகிற பையனை எனக்குத் தெரியவில்லை; ஆனால், அவன் கையில் ஒரு அரிவாள் இருக்கிறது. ‘இங்கே தெற்கத்திக்காரர்கள் யாரும் இல்லையே,’’ என நான் நினைக்கிறேன். ‘’அவன் எதற்காக அரிவாளைத் தூக்கிக்கொண்டு நிற்கிறான்? நம் எல்லோரிடமும் தான் கத்தி இருக்கிறது.’’ என்று நான் கிசுகிசுக்கிறேன். கூட்டம் கொந்தளிக்கிறது. பாண்டா, அவன் தனியொருவனாகவே பார்த்துக்கொள்வான் போலத் தோன்றுகிறான். முன்பொருநாள் சிறிய கட்சி ஆட்கள் வந்த அதே திறந்த கூரை வெள்ளை டிரக் வந்து ஓரமாக நிறுத்தப்பட்டதும் அதனை நோக்கி நடக்கிறான். அவன் குனிந்து டிரக்கினுள் இருந்த யாருடனோ பேசுவதைக் கவனிக்கிறேன். பாண்டா வெறுமனே தலையை மட்டுமே அசைத்துக்கொண்டிருக்க, அவனிடம் அப்படியென்னதான் சொல்லித் தொலைக்கிறார்களென நினைத்துக்கொள்கிறேன். அவனுடைய பழைய பழுப்புநிற ஜலாபியா11வின் இருபுறப் பைகளிலும் கைகளை நுழைத்துக்கொண்டே அவன் திரும்பி வருகிறான்; கூட்டத்துக்கு முன் வந்ததும், அரிவாளை வெறுமனே காற்றில் வீசிக்கொண்டிருந்த பையனின் காதுகளில் ஏதோ இரகசியம் சொல்கிறான். பையன் கூட்டத்தை அமைதியாக இருக்குமாறு கத்தத் தொடங்குகிறான்.
‘’நாம் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறோம்,’’ என்கிறான், அவன். ‘’பாயன் லாயியிலுள்ள பெரிய கட்சிக்குச் சொந்தமான எல்லாவற்றையும் சிதறடிக்கப்போகிறோம்.’’
அந்தப் பையன் யாரென்று பாண்டாவிடம் கேட்க வேண்டும்.
‘’அவர்களின் அலுவலகத்தைக் கொளுத்துங்கள்,’’ என்று கத்துகிறான் கோபெதனிசா.
கூட்டம் கத்திக் கூச்சலிடுகிறது. அவர்களின் அலுவலகத்துக்குள் போய்ப்பார்க்க வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசை. அங்கு நிறையப் பணம் வைத்திருக்கிறார்களாம். நானும் கூட்டத்தோடு சேர்ந்து கத்துகிறேன்.
டிரக்கில் அரிவாள், பட்டாக்கத்தி, குத்தீட்டி மற்றும் சின்னச் சின்ன டப்பாக்களில் பெட்ரோல் எல்லாம் இருக்கின்றன என்கிறான் பாண்டா. அவர்கள் திருடிய வாக்குளைத் திரும்பப்பெற நம் ஒவ்வொருவருக்கும் இருநூறு நெய்ரா கிடைக்கும். இருநூறு என்றால் அருமையானதுதான். ரொட்டியும் பொரித்த மீனும் வாங்கலாம். மீன் சாப்பிட்டு எவ்வளவோ நாளாகிவிட்டது.
நாங்கள், இருநூறு நெய்ரா நோட்டுகளையும், பெட்ரோல், தீப்பெட்டி, அரிவாள்களையும் வாங்கிக்கொள்வதற்காக டிரக் முன்னால் அவசர அவசரமாக அணிவகுத்தோம். பணத்தைக் கொடுத்தவன் எதுவுமே பேசவில்லை. அவன் எங்கள் கண்களை மட்டும் உற்றுநோக்கிவிட்டு, நோட்டுகளை நீட்டிக்கொண்டிருந்தான். சிறிய பையன்களுக்கு ஒரு நூறு மட்டும் கொடுத்தான். அவனை நெருங்கும்போது, சிறுவனாகத் தெரியாமலிருக்க, நான் நெஞ்சை நிமிர்த்தி, விரித்து, நாடியைத் தூக்கி உயர்த்திக்கொண்டு சென்றேன். எனக்கு இருநூறு வேண்டும். அந்த மனிதன் என்னைப் பார்த்துவிட்டு நூறு கொடுப்பதா அல்லது இருநூறு கொடுப்பதா என்று சிறிது யோசித்தான்.
‘’நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம்,’’ பாண்டா என் பின்னாலிருந்து, அந்த மனிதனிடம் சொன்னான்.
அந்த மனிதனுக்குத் திருப்தியில்லை. அவன் ஒரு நூறு நெய்ரா நோட்டினை என்னிடம் நீட்டினான். நான் அதை வாங்கிக்கொண்டு – நான் ஒருபோதும் பணத்தை வேண்டாமென மறுப்பதேயில்லை – டிரக்கின் பின்னாலிருந்து ஒரு அரிவாளை எடுத்துக்கொண்டேன். பாண்டா அந்த மனிதனின் காதில் ஏதோ இரகசியமாகச் சொல்லிப் பின், ஒரு நோட்டினை வாங்கி, என்னிடம் நீட்டினான். அது இன்னொரு நூறு நெய்ரா நோட்டு. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் கண்களிலிருந்த தூக்கமெல்லாம் பறந்துவிட்டது. அதனால்தான் எனக்கு பாண்டாவைப் பிடிக்கிறது. அவன் எனக்காகச் சண்டை போடுகிறான். அவன் ஒரு நல்ல மனிதன். கருப்புநிற நெகிழித்தாள் ஒன்றில் சுருட்டிப் பொதியப்பட்ட ஏதோ ஒன்றை என்னிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னான். என்னுடைய காற்சட்டைகளின் பைகள் பெரியவை. அந்தப் பொதியிலிருப்பது பணம்தான். எவ்வளவென்றுதான் எனக்குத் தெரியாது.
நாங்கள் செய்த முதல் வேலை சந்தையின் முன்புற வாயிலில் நின்ற பெரிய கட்சி வேட்பாளரின் ஆளுயர உருவப்பலகை ஒன்றை எரித்துச் சாம்பலாக்கியது தான். அவரின் முகத்தைத் தீ நாக்குகள் பொசுக்கித் தின்று தீர்த்ததை நான் ரசித்தேன். அது அவரது உண்மையான முகமாக இருக்கக்கூடாதா என்றொரு ஆதங்கமும் எனக்குள் எழுந்தது. பெரிய கட்சியின் அலுவலகம் என் நினைவில் வந்தது. அதைத் தீ வைத்துக் கொளுத்தும் முன் அலுவலகத்துக்குள்ளும் மேசை இழுப்பறைகளிலும் முடிந்ததைச் சுருட்டிக்கொள்ளப் பீறிட்டுக் கிளம்பிய ஆர்வத்தை என்னால் அடக்கமுடியவில்லை.
பெரியகட்சியின் அலுவலகத்துக்கு முதல் ஆளாகப் போய்ச்சேர்ந்தது நான் தான். மற்றவர்கள் என்னைப் பிடித்துவிடுவதுபோல் நெருங்கிவந்தாலும் என் பின்னால்தான் வந்துகொண்டிருந்தார்கள். எல்லோருமே உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்தார்கள்; முதலாவதாக கைநீட்டிப் பணம் வாங்கியிருந்தார்கள்; அடுத்து, பெரிய கட்சியின் மீதான வெறுப்போடு, கேள்விப்பட்ட செய்தியால் பொங்கிய கோபமும் சேர்ந்துகொண்டதுதான், காரணம். வாயிற்கதவினை நாங்கள் நெருக்கித் தள்ளித் தள்ளிக் கடைசியில் அந்தக்கதவு பொருத்தியிருந்த தூண்களையும் தரையோடு தரையாக விழும்வரையில் தள்ளுகிறோம். சோகான் சோஜா என்ற கிழவன்தான் அந்த இடத்துக்குக் காவல். அவன் சில பையன்களோடு போராட முயற்சித்து, ஒரு பையனின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு, ஊதலை ஊதுகிறான். இன்னொரு பையன் அவன் வாயிலிருந்து ஊதலைப் பிடுங்குகிறான்.
‘’சோகோன் சோஜா, நீ வயதான கிழவன், உன்னோடு எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் தள்ளிக்கொள், பின்னால் போய் நில். நாங்கள் இதைக் கொளுத்தி முடிக்கிறோம்,’’ என நான் அவனுக்குச் சொல்கிறேன்.
இந்தக் காவலாள் விடாப்பிடியாக இருக்கிறான். அவன் ஒரு ஓய்வுபெற்ற படைவீரன்; எங்களைப் பயமுறுத்தி, விரட்டிவிடலாமென நினைக்கிறான். அவன் அவனுடைய நீளக்கம்பினை எடுத்து ஒரு பையனின் தோளில் அடிக்கிறான். கோபெதனிசா பட்டாக்கத்தியோடு முன்னாகப் பாய்ந்து அந்த வயதான மனிதனின் மார்பிலும் கழுத்திலும் வெட்டுகிறான். அந்தக் கிழவன், பையன்கள் எல்லோருக்கும் தெரிந்தவன் என்பதால் அவனை முதல் ஆளாக அடிக்க யாருமே விரும்பவில்லை. ஆனால், இப்போது அவன் கீழே விழுந்துகிடக்கவே பையன்கள் அவனது உடலைத் தாக்குகிறார்கள். இப்படியான ஒரு வயதான மனிதனைக் கொல்ல நேர்வது துரதிருஷ்டம் என நினைக்கிறேன். ஆனால், அவனாகத்தான் இதை இழுத்துக்கொண்டான். கோபெதனிசா, நிச்சயம் இதைப்பற்றிப் பெருமைபேசப் போகிறான்.
நான் கட்டடத்துக்குள் ஓட, எனக்கு முன்னாலேயே ஒரு பையன் முன்கதவைத் திறந்துவிட்டான். அலுவலகத்தில் கொஞ்சமாவது பணம் இருக்கும்; இல்லையென்றால், காவலாள் ஏன் ஒரு கூட்டத்தையே எதிர்க்கத் துணியப்போகிறானென்பது என் எண்ணம். நாங்கள் எல்லோரும் மேசை நாற்காலிகளை உடைத்து, இழுப்பறைகளைத் தேடிப்பார்த்து, கையிலகப்பட்ட சுவரொட்டி, காகிதங்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிந்து, உள்ளே நுழைகிறோம். நாங்கள் ஒவ்வொரு அறையாகப் போகிறோம். எனக்குக் கிடைத்தது, இழுப்பறை ஒன்றிலிருந்த கையடக்க வானொலி ஒன்று மட்டுந்தான். அச்சிஷுருவுக்கு புத்தம் புதிய ஒரு தொழுகைப் பாயும் தொப்பியும் கிடைக்கிறது. எனக்கு மிகப்பெரிய ஏமாற்றந்தான்.
பாண்டா அரை கேலன் பெட்ரோல் டப்பாவைப் பிடித்துக்கொண்டிருக்க, மசூதியின் பின்புறம் கத்தியை வீசி,வீசிப் பேசிக்கொண்டிருந்த பையனும் அப்படியே நின்றுகொண்டிருக்கிறான்.
‘’வெளியே போ, நாங்கள் இந்தக் கட்டடத்தைக் கொளுத்தப் போகிறோம்!’’ என பாண்டா உத்தரவிடுகிறான்.
கையடக்க வானொலியை, நான், எனது காற்சட்டைப் பைக்குள் வைக்க, அது தரையில் விழுகிறது. பையிலிருந்த ஓட்டை பெரியதாகியிருக்கிறது. வானொலியில் ஒரு சிறிய பிடிகயிறு இருந்தது. அதை என் கழுத்தைச் சுற்றிக் கட்டி, வானொலியைத் தொங்கவிட்டு, பட்டாக்கத்தியைக் கையில் பிடித்துக்கொண்டேன். பிற பையன்கள் பெரிய கட்சிக்குச் சொந்தமான வேறு பொருட்களைத் தேடி வெளியே செல்லும்போது, பெட்ரோல் ஊற்றிமுடியட்டுமென, நான் தீக்குச்சிகளோடு காத்திருக்கிறேன்.
‘’நிறைய ஊற்று, இன்னும் ஊற்று,’’ என அந்தப் பையனுக்குச் சொல்கிறான், பாண்டா.
‘’இல்லை, இதுவே போதும். இன்னும் நிறைய இடங்களுக்குத் தேவைப்படும். இது பெட்ரோல், மண்ணெண்ணெய் இல்லை.’’
பாண்டா ஒத்துக்கொள்கிறான். அவர்கள் வெளியே வரட்டுமென நான் காத்திருக்கிறேன். தீக்குச்சியை அழுத்தமாகக் கிழித்துப் பொருத்தி வீசுகிறேன். அந்தப் பையன் சொன்னது சரி. சாளரம் வழியாகத் தீ நாக்குகள் சுழன்று குதித்து, கூரைக்குத் தாவும் அழகினை ரசிக்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, ஒரு மூட்டை சோளக் கதிர்களை எரித்துவிட்டேனென்பதற்காக அப்பா என்னைச் செத்துவிடுமளவுக்கு அடித்ததை நினைத்துப் பார்க்கிறேன். அது, மழை, எங்கள் கிராமத்தில் பெய்வதை நிறுத்திக்கொள்வதற்கும், என் அப்பா என்னையும் என் சகோதரர்களில் பலரையும் குரான் பயிற்சிக்கு அனுப்புவதற்கும் முன்பாக நிகழ்ந்தது. என் சகோதரர்கள் இப்போது எங்கிருக்கிறார்களென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றிருக்கலாம், அல்லது என்னைப் போலவே இங்கேயே தங்கியுமிருக்கலாம்.
எரியும் கட்டடத்திலிருந்து கரிப்புகையில் மூழ்கிய நல்ல தடியான மனிதன் ஒருவன் வெளியேறி, இருமிக்கொண்டும், வழியிலிருந்த பொருட்கள் மீது தடுக்கி விழுந்து தட்டுத்தடுமாறியும், என்னை நோக்கி ஓடிவருகிறான். அவனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. பெரிய கட்சியைச் சேர்ந்தவன்.
‘’துரோகி!’’ ஒரு பையன் கூச்சலிடுகிறான்.
அந்த மனிதன் ஒரு பெண்ணைப் போல, அருவருப்பான டான் டாவ்து12 போல கைகளை உயரத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் நன்றாகக் கொழுத்துப் போயிருக்கிறான்; அதனாலேயே, நான் அவனை வெறுக்கிறேன். அவனது கட்சியை வெறுக்கிறேன்; அவர்கள் எங்களை எப்படியான ஏழைகளாக்கியிருக்கிறார்கள்! அவன் ஒரு கொழுத்த எலியைப் போல ஒளிந்திருந்ததாக, நான் வெறுக்கிறேன். அவன் என் அருகே தட்டுத் தடுமாறியபோது, அவன் கழுத்தின் பின்னால் அடிக்கிறேன். அவன் தலைகுப்புற விழுந்து முனகுகிறான். நான் மீண்டும் அடிக்கிறேன். பட்டாக்கத்தி கூர்மையாக இருக்கிறது. நான் எதிர்பார்த்ததைவிடக் கூர்மையாக, கனமில்லாமல் இருக்கிறது. எங்கிருந்துதான் இது மாதிரிக் கத்திகளை வாங்குகிறார்களோ, தெரியவில்லை! மாலம் ஜுனாய்டுவின் பட்டாக்கத்திகள் மிகவும் கனமானவை, மசூதியின் முன்புறம் அல்லது அவரது வீட்டு முன்பாக களைகளை வெட்டுவது என்றாலே எனக்கு வெறுப்பு!
அந்த மனிதன் அதிகம் அசையவில்லை. பாண்டா கேலனைத் தூக்கி, அவன் மீது பெட்ரோலை ஊற்றுகிறான். தீயைப் பொருத்துமாறு, பாண்டா என்னைப் பார்க்கிறான். நான் அந்த உடலை வெறித்துப் பார்க்கிறேன். பாண்டா தீப்பெட்டியை என்னிடமிருந்து பிடுங்கிக் கொளுத்துகிறான். நெருப்பு அவனது ஆடைகளையும் தசையையும் விழுங்கும் முன் அவனது உடல் சிறிதாக மட்டுமே அசைந்தது. அவன் ஏற்கெனவேயே இறந்துபோயிருந்தான்.
நாங்கள் அங்கிருந்து நகர்ந்தபோது, இந்த எரிப்பது, வெட்டுவது, கிழிப்பது பற்றியெல்லாம் சிறிதுகூட நினைத்துப் பார்க்கவில்லை. இந்தப் பட்டாக்கத்தி சதையை வெட்டிக்கிழிக்கும்போது என் உடலில் ஏற்படும் நடுக்கத்தை நான் விரும்பவில்லை; அதனால் தீவைப்பதில் ஒட்டிக்கொள்வதற்காக பாண்டாவிடமிருந்தும் தீப்பெட்டியை மீண்டும் வாங்கிக்கொள்கிறேன். முதலில் நாங்கள் பெரிய கட்சி ஆட்களுடைய கடைகள், சிறிய கட்சி ஆட்களுடைய கடைகள் எனப் பாகுபடுத்தினோம்; ஆனால் பின்னர், எங்களுக்குப் பசியும் தாகமும் அதிகரித்தபோது, கண்ணில்பட்ட கடை எதுவாயிருந்தாலும் உடைத்து உள்ளே நுழைந்துவிட்டோம்.
பாயன் லாயியைத் தாண்டியும் சென்றபோது, துப்பாக்கிச் சப்தம் கேட்டு, எங்கள் கூட்டம், மேற்கொண்டு நகராமல் நிறுத்தப்படுகிறது. நான் கடைசி, கடைசியாக, மிகவும் பின்னால் நின்று சிறுநீர் கழிக்க ஒதுங்கிநிற்க, கூட்டம் பின்னோக்கி ஓடிவருவதைப் பார்க்கிறேன். இரண்டு காவல்துறை வாகனங்கள் இந்தப் பக்கமாக வந்து வானத்தை நோக்கிச் சுடுகின்றன. அவை நெருங்க, நெருங்க, காவலர்கள் கூட்டத்தை நோக்கிச் சுடத்தொடங்குகின்றனர். முதல் ஆள் கீழே விழுந்ததைப் பார்த்ததும் நான் திரும்பிக்கொண்டு ஓட்டமெடுக்கிறேன். பாண்டா வருகிறானா என்று திரும்பிப் பார்க்கிறேன்; அவன் வரவில்லை. குனிந்து, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருமுகிறான். நான் நிற்கிறேன்.
உயரம் குறைந்த வேலி ஒன்றின் பின்னால் நின்று, ‘’பாண்டா, எழுந்திரு!’’ என்று அலறுகிறேன்.
எல்லோரும் அவனைக்கடந்து ஓடுகிறார்கள். காவலர்கள் தொடர்ந்து சுடுகின்றனர். அவன் எழுந்து தடுமாறி ஓடுகிறான்; மீண்டும் நிற்கிறான். காவலர்கள் நெருங்கிவிட்டனர்; பாண்டா எழுந்து ஓடவேண்டும். நானும் ஓடிவிட நினைக்கிறேன்; அவனுடைய தாயத்துகள் அவனைக் காப்பாற்றுமென்று நினைக்கத்தொடங்குகிறேன். ஆனாலும் ஒரு சிறிது தயங்குகிறேன். அவன் எழுந்து மீண்டும் ஓடத் தொடங்குகிறான். பின்னர், பின்னாலிருந்து யாரோ அடித்தது போலத் தலைகுப்புற விழுகிறான்; மேற்கொண்டு அவன் அசையவில்லை. நான் ஓடுகிறேன். குறுகலான நேர்வழியைத் தவிர்த்துவிட்டு, திறந்தவெளி மசூதியின் குறுக்காக ஓடுகிறேன். மாலம் ஜுனாய்டுவின் மக்காச்சோளத் தோட்டத்தின் குறுக்காக ஓடுகிறேன். பையன்கள் அங்கே ஒளிந்திருக்கிறார்கள். நான் நிற்கவில்லை. கூக்கா மரத்தைத் தாண்டி ஓடுகிறேன். துப்பாக்கிச் சப்தம் கேட்காவிட்டாலும் நான் நிற்கப்போவதில்லை. ஆற்றுக்குள் பாய்ந்து, வயல்களின் குறுக்காக, பாயன் லாயியிலிருந்து வெகு தூரத்துக்கு, வெகுவெகு தூரத்துக்குச் செல்லும்வரையில் நிற்கப்போவதில்லை.
குறிப்புகள்
பாயன் லாயி1 Bayan Layi – இடப்பெயர்
கூக்கா மரம்2 kuka tree – அழுவினி மரம்
கோபெதனிசா3 Gobedanisa – நாளை நிரம்பத்தூரம் என்னும் பொருள் கொண்ட ஆண்பால் பெயர்ச்சொல்
சபோன் காரி4 Sabon Ghari – நகரத்தின் பெயர்
ஹர்மாட்டன்5 Harmattan – ஆப்பிரிக்கக் கண்டத்தில் அட்லாண்டிக் கடலோரம் புழுதி வாரிவீசும் பருவக்காற்றின் பெயர்.
உங்குவா6 unguwa – கூட்டம்.
அல்மாஜிரி7 almajiri – அரபு மொழியிலிருந்து கடன் பெறப்பட்ட ஒரு சொல் – இஸ்லாம் பற்றிய அறிவினைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறிய மாணவர் என்று பொருள்படும். எனினும் நைஜீரியாவின் ஹௌசா மொழியில் அல்மாஜிரி என்ற சொல் குரான் படிக்கிற, வீட்டுக்கு வீடு பிச்சையெடுக்கும் குழந்தை அல்லது பெரியவர்களைக் குறிக்கிறது. மிகவும் இழிவான தொனியிலேயே பயன்படுகிறது.
யான் தாபா8 yan daba – கானோ மற்றும் வடக்கு நைஜீரியாவின் நகர்ப்புற குற்றப் பின்னணிப் போக்கிரிக் கும்பல்கள் யான் தாபா என அழைக்கப்படுகின்றன. இடைநின்ற பள்ளிக் குழந்தைகளும் அல்மாஜிரி நடைமுறையிலிருந்து வருகின்றவர்களுமான இளைஞர்களும்தான் இந்தக் கும்பல்களில் சேர்கின்றனர்.
சுனா9 Sunnah – முகமது நபியின் வாய்மொழிப் போதனைகள்
ஜோபோ10 zobo – உலர்ந்த புளிச்சைக் கீரை இலைகளுடன் இஞ்சி, பூண்டு, அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கொதிக்கவைத்து, இறுத்துச் சர்க்கரை, பனிக்கட்டி சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நைஜீரிய சர்பத்.
ஜலாபியா11 jallabiya – கால்வரைக்குமான முழுநீள ஜிப்பா
டான் டாவ்து12 dan daudu – பெண் தோற்றமுள்ள ஆண். ஒன்பது, மாமா என இழிவாகக் குறிக்கும் சொற்களுக்கு இணையான ஹௌசா மொழிச்சொல்.
“Bayan Layi,” in Per Contra (Online, Fall, 2012)
http://www.percontra.net/issues/25/fiction/bayan-layi

மலைகள் இணைய இதழ் Feb. 17 2016இதழ்92ல் வெளியானது.

Friday, 22 January 2016

நைஜீரியச் சிறுகதை - நீங்கள் ஒருபோதுமே சென்றிருக்காத பாதை - A WAY YOU WILL NEVER BE - BY IKE OKONTA-


 நீங்கள் ஒருபோதுமே சென்றிருக்காத  பாதை  
A WAY YOU WILL NEVER BE 
BY IKE OKONTA
ஆங்கிலம் : ஐக் ஒகான்டா ( நைஜீரியா)
தமிழில் ச. ஆறுமுகம்


(ஐக் ஒகான்டா நைஜீரியாவில் பிறந்து, பட்டம் பெற்று பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். மனித உரிமை ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர். நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர். 2005ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் புலத்தில் முனைவர் பட்டம் (D. Phil) பெற்று தற்போது அதே துறையிலேயே பணியாற்றுகிறார். இவரது Tindi in the Land of Dead என்ற சிறுகதை கெய்ன் விருதுக்கான சுருக்கப்பட்டியலில் இடம் பெற்றது.)    
அவன் உள்ளே வந்த கணத்திலேயே, மோசமாக ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறதென்று அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவன் பையைச் சாய்மெத்தையின் மீது கழற்றிவைக்கட்டுமெனக் காத்திருந்து, பின் அவன் மார்பில் நழுவி விழுந்தாள். அவனது கரங்கள் அவளைத் தழுவிக் கொள்வதை உணர்ந்தாள். எப்போதும்போல் வலிமையாக, வெதுவெதுப்பாக, பாதுகாப்பாக. அவள் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திப் பிறகு   வழக்கமான துடிப்புக்குத் திரும்பியது. பின்னர், அவன் கரங்கள் தளர்ந்து அகல்வதை உணர்ந்து மீண்டும் அவள் இதயம் வேகமெடுத்தது.
அவள் காத்திருந்தாள். அவன் எதையுமே சொல்லவில்லை. நாற்காலி கிறீச்சிட்டது. அப்படித்தான் அவன் உட்கார்ந்தான். வாசல் வழியாக இசை. கனத்த முரசுகள் ஆழமாக அதிர்ந்து, எரிச்சலூட்டும் கரகரப்பான குரல். அவள் எங்கோ வெகுதூரத்தில் நினைத்தாள் : இந்த ஜோபாஸ் அவனது ஸ்டீரியோவை சத்தம் குறைத்துக் கேட்கக்கூடாதா? பின்னர், அவள் மனம் மவுனத்துக்குத் திரும்பியது. அந்த மவுனம் பெரிதாக, அந்த அறையின் ஒவ்வொரு அணுவிலும் நுழைந்து, அறையை மூழ்கடித்தது. அது அவளை மூச்சுத் திணறச் செய்தது. அதனை ஒரு பெரிய பலூனாக அவள் உணர்ந்தாள். அதனால், அவளே அதில் ஊசி குத்தினாள்.  
‘’ களைப்பாக இருக்கிறீர்கள்.’’
அவன் தலையாட்டினான்.
‘’ அலுவலகத்தில் கடினமான நாளாக இருந்திருக்கும்.’’
‘’ ஆமாம். மிகுந்த களைப்புதான்.’’ பின்னர், அவனது மந்த நிலையை அவனே உடைத்துவிட்டதாகத் தோன்றியது. அவன் புன்னகைக்க முயன்றான். அவனது குரலும்கூட மகிழ்ச்சியானது. ‘’நேற்றைய ஜின்னில் ஏதாவது மீதி இருக்குமா?’’
லாரா, அவள் நெஞ்சிலெழுந்த குறுகுறுப்பினை ஒரு புன்னகையுடன் மூடிமறைத்தாள். ‘’ அதுசரி, நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையே, இப்போதுதான் சமையல் முடித்தேன். உங்களுக்குச் சாப்பாடு வேண்டாமா?’’
‘’என்ன சமையல்? எனக்குப் பிடித்ததா?
 ‘’ தினமும் இராத்திரிக்கு டோடோவும் பீன்சும் வேண்டுமா?’’ அவள் சிரிப்பு இப்போது வெளிப்பட்டது.
‘’ ஏன்? அப்படிச் செய்யக்கூடாதென்று நீதிமன்றத் தடையா  என்ன?
‘’ சரி. ஏதோ ஒன்று. இது உங்களுக்குப் பிடிக்குமென்று எனக்குத் தெரியும். முதலில் குளித்துவிடுகிறீர்களா?’’
‘’இல்லை. இப்போதே வேண்டும். பிடித்ததை ருசிபார்க்கக்  காத்திருப்பார்களா என்ன? அதெல்லாம் முடியாது.’’ அவன் அவள் கண்களை நோக்கியதும்  எந்தக் காரணமும் இல்லாமலேயே இருவரும் வெடித்துச் சிரித்தனர்.
அவள் குனிந்து, மேஜை நடுவில் கிடந்தவற்றை உணவுப் பாத்திரங்கள் அடங்கிய அகலத்தட்டு வைப்பதற்காக ஒதுக்கினாள். அவளது பின்கழுத்தின் அழகிய மென்மயிரைக் கண்டதும் அவனுக்குள் வெதுவெதுப்பான ஒளித்திரவம்  ஊற்றெடுத்தது. அவன் கை அதுவாகவே சென்று, அவள் கழுத்தை வருடியது. அவள் பாதி நிமிர்ந்து அவனது இதழ்களில் முத்தமிட்டாள்; அவன் கைகள் அவளைச் சுற்றித்தழுவி. இன்னும் அருகில் இழுத்தபோது நெளிந்து நழுவி, விடுவித்துக் கொண்டாள். ‘’ உங்களுக்குப் பசிக்கிறதோ இல்லையோ, எனக்குப் பசிக்கிறது.’’ சிரித்தாள்.
நசுக்கிய சேப்பங்கிழங்கு அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கிச் சூடாகப் புத்தம்புதிதாக, இருந்தது. பிட்டர்லீப் சூப்பில் கொதிக்கக் கொதிக்க ஆவி பறந்தது. அதிலிருந்து கிளம்பிய அருமையான மணம் அறை முழுதும் கமழ்ந்தது. அவர்கள் சாப்பிடத் தொடங்கியதும் மவுனம் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டது. இம்முறை இருவரும் அதை முழுவதுமாக உணர்ந்தேயிருந்தனர். மெதுமெதுவாக அது இருவருக்கும் நடுவேயான ஒரு கான்க்ரீட் சுவராக உயர்ந்து பிளவுபடுத்த, இருவரும் வேறெதுவும் செய்யமுடியாமல், சாப்பாட்டில் கவனம் செலுத்தினர்.
மவுனம் அந்த அறை முழுவதையும், அவர்களையும் கூடவே சேர்த்து விழுங்கி, அதன்  குகை போன்ற இரைப்பைக்குள் இழுத்துக்கொள்ளும் ஒரு அரக்க ஜந்துவாக  உருமாறிப் போனது. வெறுத்துப் போன, லாரா  ஏற்ற இறக்கங்கள் இல்லாத, பொருளுமற்ற பண்ணிசையான லோரக்கை, கையில் ஒரு கவளம் உணவை வைத்துக்கொண்டே முரலொலித்தாள்.
‘’ சாப்பிடவில்லையா?’’ அவன் கேட்டான்.
‘’ நீங்களுந்தான், ஏன், பசியில்லையா? அல்லது என் சமையல் பிடிக்கவில்லையா?’’
‘’அப்படியில்லையென்று உனக்குத் தெரியுந்தானே.’’
‘’அப்படியென்றால் எங்கே, என்ன தவறு? என் கணவர் தொங்கிப்போன முகத்தோடு வீட்டுக்கு வருவார். ஆனாலும் நான் கேள்வி எதுவும் கேட்கக்  கூடாது, அப்படித்தானே.’’ அவள் எழுந்து நின்றுவிட்டாள். அவள் குரலில் வழக்கத்துக்கு மாறான ஒரு தொனி புகுந்திருப்பது அவனுக்குத் தெரிந்தது.
அவன் மென்மையாகக் கூறினான். ‘’ உட்கார், லாரா. இப்போது சண்டை எதுவும் வேண்டாம்.’’ அவன் மேஜையைச் சிறிது தள்ளிவிட்டு, அவளது நாற்காலியை அவனை நோக்கி இழுத்தான். கைகளை நீட்டி அவளைச் சுற்றித் தழுவினான்; மேலும் நெருக்கி அணைத்தான். அவளுடைய மார்பின் கதகதப்பு அவனுக்குள் கசிந்து இறங்குவதாக உணர்ந்தான்.
‘’ இன்று பிற்பகலோடு என் வேலை போய்விட்டது, லாரா.’’
அவன் கைகளுக்குள்ளேயே, அவள் உடல் இறுகிப்போவதை அவன் உணர்ந்தான். அவள் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. அவள் முகம் வேறுபக்கமாகத் திரும்பிக்கொண்டது. பின்னர், அவளது தோள்கள் மெல்லக் குலுங்குவதை உணர்ந்து, அவள் அழத் தொடங்கிவிட்டாளென்பதைப் புரிந்துகொண்டான். அப்படியே அழட்டுமென்று விட்டுவிட்டான். அப்போதும் கைகளை அகற்றாமல், அவளை இறுக்கமாகத் தழுவியேயிருந்தான்.
லாரா நீண்ட நேரம் அழுதாள். பின்னர் அதிர்வுகள் குறைந்து, அவளது தோள்கள் குலுங்குவதை நிறுத்தின. முகத்தை அவன் பக்கமாகத் திருப்பினாள். அவள் கண்களில், கன்னத்தில் அப்போதுமிருந்த கண்ணீரை, அவன் குனிந்து, தன் இதழ்களால் ஒற்றித் துடைத்தகற்றினான்.
‘’ ஐயாம் சாரி.’’ என்றான், அவன். அவளோ மீண்டும் அழத் தொடங்கினாள்.
ஆனால், இம்முறை அவள் கண்ணீருடன் போராடிச் சிறிது நேரத்திலேயே அதைத் துடைத்துவிட்டு, வலிய புன்னகை ஒன்றை வரவழைத்துக் காட்டினாள்.
‘’ ஐயாம் சாரி,’’ என்றான், அவன், மீண்டும்.
‘’ அது எப்படி ஆனது?’’
‘’ பதிப்பாசிரியர் அவரது அலுவலகத்துக்கு அழைத்து, மேற்கொண்டு என் சேவை அவர்களுக்குத் தேவையில்லையென்றார்.’’
‘’ அப்படிச் சும்மா சொல்லிவிடமுடியுமா என்ன? என்னதான் நடந்தது?’’
அவன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். ‘’ நான் எழுதுவது   ஆளுநர் அலுவலகத்தில், ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லையென்று அவர் சொன்னார்.’’
அவளது கைகள் அவனைத் தழுவி இறுக்கின. ‘’ பாவம், என் கண்மணி.’’
அவன் வலிய ஒரு புன்னகையை வரவழைத்தான். அவன் தன் நினைவின்றியே  ‘’ வேறு ஏதாவது ஒரு வேலையைச் சீக்கிரமாகவே தேடிப் பிடித்துவிடுவேன். புதிய இதழ்கள், செய்தித் தாள்கள் எல்லாஇடத்திலும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றன.’’ என்றான்.  அவன் அப்படிச் சொன்னாலும் அவன் கண்கள் அவளுடைய கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தன. வேலை கிடைப்பது  அவ்வளவு எளிதானதல்லவென்று அவர்கள் இருவருக்கும் தெரிந்ததுதானே!.
லாரா எழுந்து, மேஜையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள். உணவுப் பாத்திரங்கள் அடங்கிய அகலத்தட்டினை எடுத்துவிட்டு, பூச்சாடி, இதழ்களையெல்லாம் மீண்டும் முன்பிருந்தவாறே வைத்தாள். அகலத்தட்டினைப் பின்வாசலுக்குச் சுத்தம் செய்வதற்காக எடுத்துச்சென்றாள். அவள் திரும்பி வந்தபோது, அவன் ஜின்னின் கடைசியைத் தம்ளரில் ஊற்றிக்கொண்டிருந்தான். ஸ்டீரியோ மென்மையான காலிப்சோ பண்ணிசையில் பாடிக்கொண்டிருந்தது.
இசையோடு சேர்ந்து அவனும் தலையசைக்கத் தொடங்கினான். தம்ளரிலிருந்ததில் ஒரு வாய் குடிக்குமாறு அவளிடம் நீட்டினான். அவள் தலையசைத்து மறுத்தாள். அவனது ரசிக்கும் மனநிலையோடு இணைந்திட  முயன்று புன்னகைத்தாள். ஆனால், அது புன்னகையாகவே இல்லை.  வெறுமை துரத்த, படுக்கையறைக்கு ஓடினாள். சிறிது நேரம் கழித்து, அவள் திரும்பி வந்தபோது அவன் அங்கு இல்லை.  பாட்டு அப்போதும்  கேட்டுக்கொண்டுதானிருந்தது. ஆனால், அது வேறு ஏதோ ஒன்று, துயரமும் துக்கமுமாக இருந்தது         .
       ***
அவன் ஒருகணம் வீட்டின் முன்பாக நின்று தையல்காரர் சாகா அவரது நாய்க்கு இரவு உணவு ஊட்டுவதைக் கவனித்தான். சிகரெட்டுக்காகக் காற்சட்டைப் பைக்குள் துளாவினான். இருந்த ஒன்றும் கசங்கி நசுங்கிப்போயிருந்தது. முடிந்தவரை நேராக இழுத்து, உருட்டித் தடவிச் சரியாக்க  முயன்று, பின்னர் அதைப் பற்றவைத்தான். ஆழமாக இழுத்து, அதன் சிவப்பு முனை அரை இருளில் மினுங்குவதை, வண்ண வண்ண ஆடைகள் அணிந்த இளைஞர்கள், இளமங்கைகள் கோல் தெருவின் சிவப்பு விளக்குகளை நோக்கிச் செல்ல, அவனை விரைந்து கடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
அவன்  கால்வாயைத் தாண்டிக் குறுக்காகக் கடந்து தெருவினுள் நடந்தான். அது ஒரு குளிரான இரவாக இருந்தது. அவன் சிகரெட்டை இன்னும் ஆழமாக இழுத்தான். அதன் புகை அவனுக்குள்  ஒரு உறைப்பான வெப்பப் பாதையை எரித்துச் செல்வதாக உணர்ந்தான்.
பலர் அவனைக் கடந்து சென்றார்கள். சிலர் இடித்துக்கூடச் சென்றார்கள். அவன் யாரையுமே கவனிக்கவில்லை. இருபக்கமும் இருளுக்குள் பதுங்கிக்கிடந்த சாம்பல் நிறமற்ற குடியிருப்புகளையும் கவனிக்கவில்லை. மம்மா இகோட் கொதிக்கவைக்கும் பானையின் முன் நெகிழித் தட்டும் கையுமாக அம்மணக் குழந்தைகள் கூடிநின்றனர். வெந்துகொண்டிருக்கும் பீன்சின் மணம் காற்றில் நிறைந்திருந்தது. கால்வாயில் மலம் கழித்துக்கொண்டிருந்த சின்ன  மகளை, மம்மா இகோட் திட்டிக் கூச்சலிட்டுக்கொண்டிருந்தாள்.
அவன் நடந்துகொண்டேயிருந்தான். டேண்டி லிவிங்ஸ்டனின் ஒலிப்பதிவுக் கடை அமைதியாக இருந்தது. கடை அடைத்திருந்தது; ஆனால், சிவப்பு, ஊதா  நியான் விளக்குகள் அணைவதும் எரிவதுமாகக் கண்சிமிட்டின. டேண்டி லிவிங்ஸ்டன் எங்கே போயிருப்பானென அவன் வியந்தான். அங்கே எப்போதும் கூட்டமாய்க் கூடி, மைக்கேல் ஜாக்சன் ஒலிநாடாக்களைக் கேட்டுக்கொண்டே அமெரிக்காவைப் பற்றிக் கனவுகண்டுகொண்டிருக்கும் இளைஞர்களுந்தாம்!
பப்பா அருந்தகத்துக்குத் திரும்பவிருக்கும்போது, ஒலிப்பதிவுக் கடை மூலையில் கிடந்த குப்பை மேட்டில் ஏதோ ஒன்று  திடீரென்று அசைவதைக் கண்டான். அது ஒரு நாயாக இருக்குமென்றுதான் அவன் நினைத்தான். அது மீண்டும் அசைந்தபோது அது ஒரு மனிதனெனக் கண்டான். அசைவில் ஏதோ ஒரு திருட்டுத்தனம் தெரிந்தது. அவன் நின்று கவனிக்கத் தொடங்கினான். அந்த மனிதன் ஒரு குச்சியால் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்தான். பின்னர்,  குச்சியைக் கீழே போட்டுவிட்டு பூமிக்குள் விடாமல் பற்றிக்கொண்டிருக்கும்  கனமான ஏதோ ஒன்றைப் பிடித்து இழுப்பதுபோல இழுத்தான். அது திடீரெனக் கையோடு வந்துவிடவே அவன் தடுமாறிப் பின்பக்கமாகச் சாய்ந்தான். சமாளித்து நின்றபோது மெல்லத்திட்டுவது அவன் காதில் கேட்டது. அதிலிருந்து பிய்த்துப் பிய்த்துக் கழுத்தில் தொங்கிய  நெகிழிப்பைக்குள் போட்டுக்கொண்டிருந்தான்.
வியப்பாகத் தோன்றவே, அவன் அருகில் சென்றான். வேலையில் கவனமாக இருந்த அந்த மனிதன், அவனைக் கவனிக்கவேயில்லை. அவனுடைய அரணக் காலணி ஏதோ ஒரு காலி டப்பாவில் மோத, அது கால்வாயில் போய் விழுந்தது. அப்படியே சுழன்று திரும்பிய அந்த மனிதன் ஒரு நொடி உறைந்து நின்றான். இருவருமே பேசிக் கொள்ளவில்லை. அவன் மேலும் நெருங்க, அடியெடுத்தபோது, கத்திக் கீச்சிட்ட அந்த மனிதன்,  முதுகில் நெகிழிப்பை பைத்தியம் பிடித்தது போல் அடித்துக்கொள்ள இருளுக்குள் ஓடிப்போனான்.
அவன் குப்பை மேட்டை நோக்கி நடக்க, கெட்ட நாற்றம்  மூக்கைத் துளைத்தது. பின்னர், அவன் அந்தப் பிணத்தை, பிய்த்து, மீந்துபோன, அழுகும் தசையைக் கண்டான். பாவம், அது ஒரு நாய். அவன் அந்த நாற்றத்திலிருந்தும் வெறி பிடித்த மாதிரியில் ஓடத் தொடங்கினான்.
பப்பா அருந்தகத்தின் முன்னர், மல்லம் கடையில்தான் நின்றான். இரண்டு சிகரெட்டு வாங்கினான். கறுப்பு நிறத்திலான வளர்ந்த பெண் ஒருத்தி, ஒரு மனிதனுடன் பேசிக்கொண்டிருந்தாள். பேசுவதை நிறுத்திவிட்டு அவனை வெறித்து நோக்கினாள். அவன் ஒரு சிகரெட்டை சட்டைப் பையில் போட்டுவிட்டு இன்னொன்றைப் பற்றவைத்தான். அந்தப் பெண் அப்போதும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உதடுகள் வளமான இளஞ்சிவப்பு நிறத்திலிருந்தன. அவளிடமிருந்து சுவை மென்கோந்து வாசனையோடு மலிவான முகப்பூச்சு மணமும் வந்தது. அந்த மனிதன் சில்லறையை அவளிடம் கொடுத்துவிட்டு, அவளின் பார்வை அவன் முதுகில் துளைப்பதை உணர்ந்தவாறே அகன்றான். அந்த நேரத்தில் லாரா என்ன செய்துகொண்டிருப்பாளென நினைத்துப் பார்த்தான். அப்போதும் அழுதுகொண்டிருப்பாளென அவன் நினைக்கவில்லை. ஒருவேளை, அவளுடைய நாட்குறிப்பை மீண்டும் எழுதத் தொடங்கியிருக்கலாம். பொழுதன்றைக்கும் எதைப்பற்றித்தான் எழுதுவாளோவென நினைத்து வியந்தான்.  அதில் அவன் இருப்பானென அவனுக்குத் தெரியும். ஒபா, ஜாஜா, ஜே.ஐயுங் கூடத்தான். ஆனால், அவளின் நாட்குறிப்பை அவன் ஒருநாள்கூட வாசித்ததில்லை. அவன் அப்படியான ஒரு வாக்குறுதி அளிக்குமாறு  செய்துவிட்டாள்.
லாராவை நினைத்துக்கொண்டே, அவன் திரும்பி, வீட்டுக்கு நடக்கத் தொடங்கினான். அந்த இரவுநேரத்தெருவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். லிட்டில் பாஸ்சாவின் தெருக்களிலேயே அந்தத்தெருவில் மட்டுந்தான் தெருவிளக்குகள் அப்போதும் ஒளிர்கின்றன. புல்டோசர்கள் வந்து கடைகளையும் வீடுகளையும் இடிக்கும் முன்பான யாலாத்தெருவின் விளக்குகள் அளவுக்குப் பிரகாசமாக இல்லையென்றாலும், சுவர்கள் பொரிந்து உதிர்ந்து கொண்டிருக்கும் சாம்பல் நிறக் குடியிருப்புகளையோ, சாக்கடை அசுத்தங்களையோ வெளிக்காட்டாமல் மென்மையாகத் தூயதாக இருந்தன.
வீட்டின் முற்றம் இருட்டாக இருந்தது. அவன் எழுதுமேஜை மேலிருந்த விளக்கை ஒளிரச்செய்து அலுவலகத்திலிருந்து கொண்டுவந்திருந்த இதழை வாசிக்கத் தொடங்கினான்.   என்ன  வாசிக்கிறோமென அவனுக்குப் பிடிபடவேயில்லை. வாசிப்பில் அவனால்  கவனம் செலுத்த முடியவில்லை. அவன் மனம்  அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. இதழை முன்பிருந்த அடுக்கிலேயே வைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான். படுக்கையறைக்குள் நுழைந்தான். இருட்டாக இருந்தாலும், கட்டமைவாக ஒடுங்கிய லாராவின் தோற்றத்தை அவனால் காணமுடிந்தது. அவள் தூக்கத்திலில்லையென்று அவனுக்குத் தெரியும். இருட்டிலேயே ஆடைகளைக் களைந்துவிட்டு, அவள் அருகாகப்   படுக்கையிலேறிப் படுத்தான். 
சிறிது நேரத்துக்கு இருவருமே பேசிக்கொள்ளவில்லை. வெள்ளிக்கிழமை இரவின் சத்தங்கள் தெருவிலிருந்து வீட்டுக்குள்ளும் கசிந்தன. இரண்டு நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் குரைத்தன. பாப் மார்லி தீர்க்கதரிசித் தூதர்களைப் பாடிக் கனவுகளைக் கொன்றுகொண்டிருந்தார். உச்சஸ்தாயியில் ஒரு போதைக்குரலும் அவரோடு இணைந்து கேட்டது.   சிரிப்பொன்று திடீரென வெடித்தது.
லாரா திரும்பிப் படுப்பதைக் கண்ணால் காணாவிட்டாலும், அவன் உணர்ந்துகொண்டான். உடனேயே கைகளை நீட்டி, அவளைத் தன்னோடு இழுத்தான். அவளது கூந்தலின் மணம் அவன் நாசியில் நிறைந்தது. அவள் முகம் வியர்வையில் நனைந்து சிறிது ஈரமாக இருந்தது.
‘’உனக்கு வியர்க்கிறதே. மின்விசிறியைப் போடட்டுமா?
‘’ வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்திலேயே குளிரத் தொடங்கிவிடும்.’’
மவுனம் மீண்டுமாக அவர்களிடையே வளரத் தொடங்கியது. உணவெடுத்துச் செல்லும் பெட்டிக்குள் ஒரு எலி நடமாட்டம் இருப்பதாக அவன் நினைத்தான். பின்னர் அவளது இதழ்களை அவன் கன்னங்களில் உணர்ந்தான். அவளை இன்னும் சேர்த்தணைத்தான். சிறிது நேரம் அவர்கள் அப்படியே பாப் மார்லியின் பாடலை, அந்தக் குடிகார மனிதன் பகடிக்குரலில் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த மனிதன் துக்கத்தை ஒலிப்பதாக, ஏன், ஒப்பாரி பாடுவதாகக் கூட அவன் நினைத்தான்.
‘’ அது, அந்தக் கட்டுரை தான், இல்லையா?’’
ஆமாம், இராணுவ ஆளுநருக்கு அதைப் பிடிக்கவில்லை.’’
‘’ இருந்தாலும், நீங்கள் அதை எழுதினீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி. நீங்கள்தான் என் கதாநாயகன்.’’
‘’ அதை எழுதவேண்டுமென்று தோன்றியது. அவ்வளவுதான். அதைப்போன்ற ஏதாவதொன்றை மறுபடியும் எப்போதாவது என்னால் எழுதமுடியாதுதான்.’’
‘’ எனக்குப் புரிகிறது.’’
இன்னொரு வேலை எனக்குக் கிடைக்கும். அது முந்தையதைப் போல இருக்காது.’’
‘’ ஆமாம். எனக்கொன்றும் பயமில்லை. நீங்கள் இப்போதும் என்னைக் காதலிக்கிறீர்களா?’’
‘’ நான் அப்படித்தானென்று உனக்குத் தெரியுமே.’’
‘’ மிக அதிகமாக? முதன் முதலாக, ஆரம்பத்திலிருந்த மாதிரியே?
‘’ ஆமாம். ஆரம்பத்திலிருந்த மாதிரியே.’’
‘’ உண்மையில் அதுதான் விஷயமான ஒன்று.  நமது காதல். அது மிக அழகான ஒன்று, அப்படித்தானே, இல்லையா?
‘’ ஆமாம். மிகமிகச் சிறந்தது.’’
‘’ எனக்கொன்றும் பயமில்லை. உங்களுக்கு வேறு வேலை கிடைக்கும்வரை எப்படியாவது சமாளித்துவிடலாம் . நமக்கு நம்முடைய காதல் இருக்கிறது. அதை யாரும் அசைத்துவிட முடியாது. இராணுவ ஆளுநராலுங்கூட முடியாது. எனக்கு ஒரு முத்தம் தாங்களேன்.’’
அவன், அவளை முத்தமிட்டான்.
பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து மென்மையாக விடைபெற்றது. அவள், அவளது  படுக்கைப் பக்கமாக உருண்டு படுத்தாள்.
‘’ நல்லிரவு.’’
‘’நல்லிரவு கண்ணே.’’
சிறிது நேரத்திலேயே அவளது மூச்சு சாதாரணமானதாக  ஏறியிறங்கியது. அவன் அவளைப் பார்த்தான். தூக்கத்தில், அவள் முகம் இறுக்கம் தளர்ந்திருந்தது, அவள் இதழ்களில் ஒரு புன்னகை முகிழ்த்திருந்தது. அவன் திரும்பிப் படுத்தான்.  கொசு ஒன்றின் புலம்பல் அவன் காதினை விரைந்து கடந்தது. இடைவழியில் ஏதோ காலடிச் சப்தங்கள் கேட்டன. அதைத் தொடர்ந்து ஒரு தணிவான கிளுகிளுப்புச் சப்தத்தையும் கேட்டான். ஒரு கதவு அடித்துக்கொண்டது. அவன் கூரைத் தளத்தைப் பார்த்தான். அவனால் தூங்க முடியவில்லை. பாப் மார்லியின் மற்றொரு பாடலை, மூன்று சிறுபறவைகள்  அவரது வீட்டு வாசலில் பாடிக்கொண்டிருந்ததைப் பற்றிப் பாடுவாரே, அதை, அந்தப் போதை மனிதன் பாடிக்கொண்டிருந்தான். அவன் குரல் இப்போது மகிழ்ச்சியாக, இதயத்தின் பாரம் இறங்கிவிட்டதாக இருந்தது. அவன் பாடுவதைச் சிறிது நேரம் கவனித்த அவன், எந்தக் காரணமும் இல்லாமலேயே அந்த போதை மனிதனோடு இணைந்து அதே இராகத்தை உள்மூச்சில் மென்மையாக விசிலடித்து இசைக்கத் தொடங்கினான்                                         


Source :  http://www.african-writing.com/four/ikeokonta.htm


Friday, 8 January 2016

நைஜீரியச் சிறுகதை -அப்பல்லோ (Apollo) சிமமாண்டா நகோஜி அடிச்சி

அப்பல்லோ (Apollo)  சிமமாண்டா நகோஜி அடிச்சி (நைஜீரியா)

 தமிழில் ச. ஆறுமுகம்


images (6)








(நைஜீரிய நாவலாசிரியர் மற்றும் சிறுகதை படைப்பாளரான சிமமாண்டா அடிச்சி, எனுகுவில் 15.09.1977ல் பிறந்தவர். ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு புதிய தலைமுறை வாசகர்களை ஈர்த்துக் கொண்டுவரும் இளம் ஆங்கிலமொழிப் படைப்பாளர் வரிசையில் மிக மிக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவரது தந்தை ஜேம்ஸ் நவோயே அடிச்சி, நசுக்கா நகரிலுள்ள நைஜீரியாப் பல்கலைக் கழகத்தில் புள்ளியியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்; தாயார் கிரேஸ் இஃபியோமா அதே பல்கலைக் கழகத்தின் முதல் பெண் பதிவாளராகப் பணியாற்றியவர். இவர்களது குடும்பத்தினரின் முன்னோர் கிராமம் அனம்பரா மாநிலத்தின் அபாவிலுள்ளது. புகழ் பெற்ற பெண்ணியவாதியான சிமமாண்டா அடிச்சி தற்போது அமெரிக்காவிலும் நைஜீரியாவிலுமாக வசிக்கிறார்.
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் சிறுகதை அப்பல்லோ என்ற தலைப்பிலேயே 13.04.2015 நியூயார்க்கர் ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது. ஞானம், ஒளி, கவிதை, மருந்து, கால்நடை, வில்வித்தை, வருபொருள் உரைத்தல் அனைத்துக்கும் கடவுளான கிரேக்க அப்பல்லோவின் கண்கள் கதிரைப் போலச் சிவந்து விளங்குவதால் கானா, நைஜீரியா போன்ற நாடுகளில் கண்கள் சிவந்து எரியும் கண்வலியை அப்பல்லோ எனப் பெயரிட்டிருக்கிறார்கள் போலும்.)
*******
எனுகுவில் இருக்கும் எனது அப்பா, அம்மாவைப் பார்ப்பதற்காகப் பொறுப்புள்ள ஒரு மகனாக, தட்டுமுட்டுச் சாமான்கள் அடைந்து கிடக்கின்ற, பிற்பகலிலேயே இருண்டு விடுகின்ற, அவர்களது வீட்டிற்கு மாதம் இருமுறை போய்க்கொண்டிருந்தேன். பணி ஓய்வும் சும்மாவே உட்கார்ந்திருப்பதும் அவர்களை வீழ்த்திவிட்டது; ஆம், கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருந்தது. எண்பதுகளின் இறுதியை மெதுமெதுவே கடந்துகொண்டிருந்த அவர்கள் இருவருமே உடல் சிறுத்து, கருங்காலி மரத்தின் நிறத்தில் கறுத்து, நிமிர்ந்து நிற்காமல் முன்பக்கமாக வளைந்து குனியவே விரும்பும் முதுகுமாக இருந்தனர். நாளாக, நாளாகக் காலம், அவர்களது தனித்தன்மைகளை ஒன்றுக்குள் ஒன்றாகக் குருதியோடச் செய்து மழுங்கடித்துக் கொன்றுவிட, இருவரும் பெரும்பாலும் ஒன்றுபோலவே, தோன்றினர். வாசனையும் கூட இருவரிடமும் ஒன்று போலவே – ஒருவருக்கொருவர் கைமாற்றிக்கொண்ட விக்ஸ் வேபரப் பச்சை டப்பியிலிருந்து கவனமாக எடுத்து மூக்கு நுனிகளிலும், வலிக்கும் மூட்டுகளிலும் தேய்த்துக் கொண்ட மென்தால் வாசனை எப்போதும் இருந்தது.
நான் உள்ளே நுழையும்போது, அவர்கள் வெளி வராந்தாவில் அமர்ந்து சாலையைப் பார்த்துக்கொண்டோ, சாய்மெத்தைக்குள் அமிழ்ந்து அனிமல் பிளானெட் பார்த்துக்கொண்டோ நேரத்தைக் கொல்வதைத் தான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்போது புதிதாக எதற்கெடுத்தாலும் ஆச்சரியப்படுகிற மனநிலை ஒன்றைக் கொண்டிருந்தார்கள். ஓநாய்களின் சூழ்ச்சியைக் கண்டு மலைத்தும், மனிதக்குரங்குகளின் அறிவுத்திறமையைக் கண்டு வியந்தும் ஒருவருக்கொருவர் ‘’அடேங்கப்பா! இதைப் பார்த்தியா?’’ என்று கேட்டுக்கொள்கின்றனர். நம்பமுடியாத கதைகளைக் கூட நம்மால் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கான அக்கறையுடன் கேட்டனர். எங்கள் முன்னோர்கள் கிராமமான `அபா`விலிருக்கும் எங்கள் பக்கத்து வீட்டு நோயாளி ஒருவர் உயிருள்ள வெட்டுக்கிளி ஒன்றை வாந்தியெடுத்ததாகவும், இது அவரது கெடுமதி உறவினர்கள், அவருக்கு நஞ்சினை ஊட்டியிருக்கிறார்கள் என்பதற்கு வலுவான ஆதாரம் என்றும் அம்மா ஒருமுறை என்னிடம் சொன்னாள், ‘’அந்த வெட்டுக்கிளியின் படத்தைக்கூட யாரோ காட்டினார்கள்.’’ என்றார், அப்பா. அவர்கள் எப்போதுமே ஒருவர் கதைக்கு அடுத்தவர் முட்டுக் கொடுப்பதாக இருந்தனர். தலைவர் ஒகேக்கேயின் வீட்டு இளம் வேலைக்காரப் பெண் மர்மமான முறையில் இறந்தபோது, அந்தத் தலைவர், அந்தப் பதின்வயதுச் சிறுமியைக் கொன்று, அவளது ஈரலைப் பணம்பண்ணும் சடங்கு1களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக, நகரத்தில் வலம் வந்த கதையை அப்பா என்னிடம் கூறியபோது, அம்மா சொன்னாள், ‘’அவர், அவளுடைய இதயத்தையும் கூட அதற்குப் பயன்படுத்திக்கொண்டதாக எல்லோரும் சொல்கிறார்கள்.’’
ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பென்றால், இது போன்ற கதைகளின் முகத்திலேயே என் பெற்றோர் காறி உமிழ்ந்திருப்பார்கள். அரசியல் அறிவியல் பேராசிரியரான என் அம்மா, ‘’சுத்த முட்டாள்த்தனம்’’ எனக் கடுமையாகச் சாடியிருப்பார்; கல்வியியல் பேராசிரியரான என் அப்பாவோ, ‘’த்தூஉ, இதுவெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குக் கூடப் பேசத் தகுதியானதில்லை’’ என்றிருப்பார். அவர்களுக்கேயான பழைய தனித் தன்மைகளையெல்லாம் இழந்துவிட்டு, புனிதத் தீர்த்தம் குடித்ததாலேயே நீரிழிவு நோய் குணமாகிவிட்டதென்று கதை சொல்லும் சாதாரண நைஜீரியர்களைப் போல அவர்கள் மாறியிருப்பது எனக்குப் புதிராகவே இருக்கிறது.
ஆனாலும், அவர்கள் சொல்லும் கதைகளைப் பாதி கேட்டும் கேட்காமலும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தேன். அது ஒரு எளிமையான வெகுளித்தனம்; முதுமையில் ஒரு புதிய குழந்தைமை. கடந்துசெல்லும் காலத்தினூடாகவே அவர்களும் மெதுமெதுவாக வளர்ந்து முதுமைக்கு வந்துவிட்டனர். என்னைக் கண்டதும் அவர்கள் முகத்தில் ஒரு ஒளி தோன்றித் தெரியும். அது மட்டுமல்ல, ‘’எப்போது எங்களுக்குப் பேரக்குழந்தை பெற்றுத்தரப் போகிறாய்? ஒரு பெண்குழந்தையைக் கொண்டுவந்து எப்போது என் கையில் கொடுக்கப்போகிறாய்?’’ போன்ற அவர்களின் வறுத்தெடுக்கும் கேள்விகள் கூட இப்போதெல்லாம் என் நரம்புகளை முன்பு போல இறுக்கமடையச் செய்வதில்லை. ஒவ்வொரு ஞாயிறு பிற்பகலிலும், அரிசிச் சோறும் கறிச்சாறு2மாக ஒரு மதியப் பெருவிருந்துக்குப் பிறகு, அவர்களைப் பிரிந்து செல்கையில், இதுதான் அவர்கள் இருவரையும் ஒருசேர உயிரோடு, நான் கடைசியாகப் பார்ப்பதோ, அடுத்த முறை நான் இங்கு வருவதற்கு முன்னாலேயே, உடனே புறப்பட்டு வருமாறு தொலைபேசிச் செய்தி வந்துவிடுமோ எனப் பயந்திருக்கிறேன். பழங்கால ஏக்கங்களாக என்னுள் நிரம்பும் அந்த நினைவுகள், நான் ஹார்கோர்ட் துறைமுகத்தைச் சென்றடையும் வரை எனக்குள் சுழன்றுகொண்டே இருக்கும். எனக்கும் குடும்பமென்று ஒன்று இருந்தால், அவர்களின் நண்பர்களின் மகன் அல்லது மகள் குறைப்படுவதுபோல் கல்விக்கட்டணம் ஏறுவதுபற்றிக் குறைப்பட்டுக்கொண்டு, வழக்கமான ஒரு ஒழுங்குமுறையாக இப்படி இங்கு வந்துகொண்டிருப்பதை, நான் குறைத்துக் கொள்வேனோ, அது எனக்குத் தெரியவில்லை. இதில் மாற்றம் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை.
நவம்பர் மாதத்தில் ஒருமுறை நான் இங்கு வந்திருந்த நேரத்தில், கிழக்குப்பகுதி முழுவதிலுமாக பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளையடிப்பது அதிகமாகிக்கொண்டு வருவதாக அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். திருடர்களுக்கும் தான் கிறித்துமஸ் செலவு இருக்கிறது. ஒனிட்சாவில் ஒரு கூட்டம், சில திருடர்களைப் பிடித்து, அடித்து, அவர்களின் ஆடைகளையெல்லாம் கிழித்து, அவர்களின் கழுத்துகளில் மாலையாக, பழைய டயர்களை மாட்டிப் பெட்ரோலைக் கொண்டுவா, தீப்பெட்டியைக் கொண்டுவா என்று பெரும் ஆர்ப்பாட்டம் செய்தபோது, காவல்படையினர் அங்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தித்தான் கொள்ளைக்காரர்களை மீட்டுச் செல்ல முடிந்ததை அம்மா என்னிடம் கதைகதையாக விவரித்தாள். அம்மா சிறிது நிறுத்திப் பெருமூச்சு வாங்கினாள்; அந்தக் கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கும் கடைசி மாயமந்திர வருணனைக்காக, நான் காத்திருந்தேன். அது, அவர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று சேர்ந்ததும், அந்தக் கொள்ளையர்கள், கழுகுகளாக மாறிப் பறந்துசென்றுவிட்டனர் என்பதாகக்கூட இருக்கலாம்.
‘‘உனக்குத் தெரியுமா?’’ என்ற அம்மா தொடர்ந்தாள். ‘’ ஆயுதம் வைத்திருந்த அந்தப் பயங்கரக் கொள்ளைக்காரர்களில் ஒருவன், ராஃபேல், உண்மையில் சொல்லப்போனால், அவன்தான் அந்தக் கூட்டத்துக்கே தலைவனாம்! அவன் சில வருடங்களுக்கு முன் நம் வீட்டில், வேலைக்காரப் பையனாக இருந்தான். உனக்கு அவனை நினைவிருக்காதென்று நினைக்கிறேன்.’’
நான் அம்மாவையே உறுத்து நோக்கினேன். ’’ராஃபேல்?’’
‘‘அவன் இப்படியானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவன் அப்போதே சரியாக இல்லைதான்.’’ என்றார், அப்பா.
கதை சொல்லுதலின் இடைவெளிப் பனிமூட்டமாக என் பெற்றோர் நிறுத்திய மவுனத்தில் மூழ்கியிருந்த நான், நினைவுகளின் கூர்முனைத் தாக்குதலில் தத்தளித்துக்கொண்டிருந்தேன்.
அம்மா மீண்டும் சொன்னாள், ‘‘உனக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. அப்போது நீ நிரம்பவும் சின்னப்பிள்ளை, அதிலும் அவனைப்போலப் பல பையன்கள் இருந்திருக்கிறார்களே!’’
ஆனால், எனக்கு நினைவிருக்கிறது. மற்றதெல்லாம் இல்லையென்றாலும் ராஃபேலை நன்கு நினைவிருக்கிறது.
வேலைக்காரப்பையனாக, ராஃபேல் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியபோது முதலில் எதுவுமே மாறிவிடவில்லை. அவன் எல்லோரையும் போல, பக்கத்து கிராமத்திலிருந்து வந்த சாதாரணத் தோற்றமளிக்கும் ஒரு பதின்வயது சிறுவனாகத்தான் தோன்றினான். அவனுக்கு முன்பிருந்த வேலைக்காரப்பையன் ஐஜினஸ் என் அம்மாவை அவமதித்ததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். ஐஜினசுக்கு முன்பிருந்த ஜான், அவன் வீட்டுக்கு அனுப்பப்படவில்லையென்பது எனக்கு நினைவிருக்கிறது. அவன் பாத்திரம் கழுவும்போது ஒரு சாப்பாட்டுத் தட்டினை உடைத்துவிட்டான்; அம்மாவின் கோபத்துக்குப் பயந்து, அவள் வேலையிலிருந்து வருவதற்கு முன்பாக, அவனாகவே மூட்டை கட்டிக்கொண்டு, ஓடிப் போய்விட்டான். என் அம்மாவை வெறுத்த, எல்லா வேலைக்காரப் பையன்களும் என்னையும் வேண்டா வெறுப்போடேயே நடத்தினர். ‘’தயவுசெய்து வந்து சாப்பிட்டுவிட்டுப் போ, முதலாளியம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள முடியாது.’’ என்பார்கள். அம்மா எப்போதுமே அவர்களை, வேலையில் மந்தமாக இருப்பதாக, முட்டாள்த் தனமாக நடந்துகொள்வதாக, செவிடர்கள் எனத் திட்டித் தீர்ப்பாள்; அவளது பெருவிரல் அழைப்புமணியின் சிவப்புப் பொத்தானை அழுத்தி, எழுகின்ற வீட்டை உலுக்கும் மணிச் சப்தம் கூட அவர்கள் மீதான கூச்சல் போல, `விர்`ரென்று காதைத் துளைத்து மரத்துப்போகச் செய்வதாக இருக்கும். அப்பாவுக்கு எதுவும் சேர்க்காமல் வெறுமனாகவும் அம்மாவுக்கு வெங்காயம் சேர்த்தும் முட்டைகளை விதவிதமாகப் பொரிப்பதை, தூசி தட்டித் துடைத்த ருஷ்யப் பொம்மைகளை அதே அலமாரியில் அதே இடத்தில் வைப்பதை அல்லது எனது பள்ளிச் சீருடைகளைத் ஒழுங்காக, சரியாகத் தேய்த்து வைப்பதை எப்போதும் நினைவுவைத்துக் கொள்வதென்பது, அவர்களுக்கு எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும்?
நான், எனது பெற்றோருக்கு, ஒரே பிள்ளை; பிற்காலத்தில் பிறந்த செல்லக் குழந்தை. ‘’நான் உன்னைக் கருக்கொண்ட போது, மாதாந்திரத் தீட்டு என்றே நினைத்துவிட்டேன்.’’ என்றாள் ஒருநாள், அம்மா, என்னிடம். எனக்கு அப்போது எட்டு வயதுதான் இருக்கும்; `மாதாந்திரத் தீட்டு` என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அப்பாவைப் போலவே அம்மாவும் வெடுக்கெனப் பேசுபவளாக, இருந்தாள்; அவர்கள், பிறர் சொல்வதை உடனுக்குடன் புறந்தள்ளிவிடும் இயல்பினராகவே இருந்தனர். அவர்கள் இபதான் பல்கலைக் கழகத்தில் சந்தித்து, இருவரது குடும்ப விருப்பத்துக்கும் எதிராக – அதிகம் படித்தவளென அவர் நினைப்பு, நல்ல வசதியான மாப்பிள்ளை என்பது அவள் தேர்வு – திருமணம் செய்துகொண்டவர்கள்; வாழ்க்கை முழுவதையும், யார் அதிகப் புத்தகம் எழுதி வெளியிடுவது, யார் பூப்பந்தாட்டத்தில் ஜெயிப்பது? வாக்குவாதத்தில் கடைசியாக வெல்வது யாரென ஒருவரோடு ஒருவர் கடுமையாக, உளப்பூர்வமாகப் போட்டி போட்டுக்கொண்டு கழித்தவர்கள். அவர்கள் மாலை நேரங்களில், வீட்டின் முன்னறையில் உட்காராமல், நின்றுகொண்டு, சிலநேரங்களில் மெதுவான உலவுதலாக முன்னும் பின்னுமாக நடந்துகொண்டு, ஏதோ புதியதொரு கருத்தினைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல செய்தித் தாள்களிலிருந்தோ, இதழ்களிலிருந்தோ, ஒருவர் மற்றவருக்கு உரக்க வாசித்துக் காட்டிக்கொண்டிருப்பார்கள், அவர்கள் மேட்டியஸ் ரோஸ்3 அருந்தினர்; அந்த இருண்டநிற, அழகிய புட்டி எப்போதும் அவர்கள் அருகே மேசையில் இருந்து கொண்டேயிருந்தது; அவர்கள் அருந்தி முடித்த சிவப்பு நிற எச்சத்துடன் மங்கலாகத் தெரியும் கண்ணாடிக் கோப்பைகளை மேசையின் மீது அப்படி அப்படியே விட்டுச் சென்றனர். எனது குழந்தைப்பருவ நாட்கள் முழுவதுமே, அவர்கள் என்னோடு பேசும் தருணங்களில், உடனடியாகப் பதில்பேசத் தெரியாமல் விழித்துநின்று வருந்திய நாட்களே அதிகம்.
எனது மற்றொரு கவலை, புத்தகங்கள் மீது நான் அதிகம் ஈர்ப்புகொள்ள முடியாமலிருந்தது பற்றித்தான். வாசிப்பு எனது பெற்றோருக்கு ஏற்படுத்திய கொந்தளிப்பினை அல்லது அவர்களை நேரம் போவதே தெரியாமல் அமிழ்ந்துகிடக்கும் வெற்று உயிரிகளாக மாற்றியதைப் போல, நான் எப்போது வருகிறேன், எப்போது போகிறேன் என்பதைக்கூடக் கவனிக்காத ஒரு நிலையை, எனக்கு அளிக்கவில்லை. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும், உணவின் நடுவே வந்துவிழும்– `பிப்4` பற்றி நீ என்ன நினைக்கிறாய்? ஜியுலு5 செய்தது சரிதானா? போன்ற எதிர்பாராத கேள்விகளைச் சமாளிப்பதற்காகவுமே புத்தகங்களை வாசித்தேன். பலநேரங்களில் எங்கள் வீட்டுக்குள்ளேயே நான், வேண்டாத விருந்தாளி போல, தலைகாட்டியிருக்கக்கூடாத அல்லது பொருத்தமற்ற ஒரு நபரோ என உணர்ந்திருக்கிறேன். எனது படுக்கை அறையில் வழிந்து நிறையும் புத்தக அடுக்குகளை வரிசையாக நிறுத்தி, அவற்றுக்குள் பொருந்திச் சேராதவற்றை நடைபாதையிலுமாக அடுக்கி, நான் இருக்கவேண்டிய நிலையில் இல்லையென்பதுபோல, எனது இருப்பு நிலைப்படுத்தப்படாத ஒன்றென எனக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தனர். ஒரு புத்தகத்தைப் பற்றி நான் பேசியபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட பார்வையிலிருந்து அவர்கள் ஏமாற்றமடைந்திருப்பதை உணர்ந்துகொண்டேன். ஆனாலும் நான் சொன்னதில் தவறில்லையென்றும் ஆனால், அது மிகச் சாதாரணமானதென்றும், அவர்களது அசல் முத்திரை விளங்கித் தோன்றுவதாக இல்லையென்றும் எனக்குத் தெரிந்தது. அவர்களோடு அலுவலர் மகிழ் மன்றத்துக்குச் செல்வதென்பது மிகப்பெரும் சித்திரவதையாக இருந்தது. பூப்பந்து என்னைச் சலிப்படையச் செய்வதாக, இறகுப்பந்து, முடிவற்ற ஒன்றாக, அந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவர் முழுவதும் முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியிருக்க வேண்டுமென்பது போல எனக்குத் தோன்றியது.
நான் விரும்பியது குங்ஃபூ. `என்டர் த டிராகன்` படத்தைப் பலமுறை பார்த்தேன். அதன் ஒவ்வொரு வரியும் எனக்கு மனப்பாடம். நான் புரூஸ் லீயாக விழித்தெழ வேண்டுமென விரும்பினேன். எனது கற்பனைக் குடும்பத்தைக் கொன்ற, கற்பனை எதிரிகளை அடித்துத் துவைப்பதாகக் காற்றில் உதைப்பதும் விளாசுவதுமாக இருப்பேன். என்னுடைய மெத்தையைத் தரையில் இழுத்துப் போட்டுப் பரப்பி, இரண்டு கனத்த புத்தகங்கள் (வழக்கமாகக் கனத்த அட்டை கொண்ட கறுப்பு அழகு6 மற்றும் தண்ணீர்க் குழந்தைகள்7 புத்தகங்களாக இருக்கும்) மீது நின்று, புரூஸ் லீயைப் போல `ஹாஆஆஆ` எனக் கத்திக்கொண்டு, மெத்தையில் குதிப்பேன். ஒருநாள் குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ராஃபேல், வாசலில் நின்று என்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்; திட்டுவானோ என நினைத்தேன்; காலையில் தான் எனது படுக்கையைத் தட்டி, உதறிச் சீர்படுத்தியிருந்தான்; இப்போது அறை அமளியாகிக் கிடக்கிறது. ஆனால், அவனோ சிரித்து, அவனுடைய மார்பைத் தொட்டு, அதே விரலை, இரத்தத்தைச் சுவைப்பதுபோல வாய்க்குள் வைத்தான். எனக்குப் பிடித்தமான காட்சி. எதிர்பாராத மகிழ்ச்சியின் இன்ப அதிர்ச்சியில் நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘’நான் வேலைபார்த்த ஒரு வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.’’ என்றான், ராஃபேல்.
‘’இங்கே பார்.’’
அவன் சிறிது ஊன்றி நின்று, காலை நேராக நீட்டி, உயர்த்தி, மேலாக எழும்பிக் குதித்து, அவனது மொத்த உடம்புமே திண்ணென ஒரு அழகாக, உதைத்தான். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது; அதுவரையிலும் மற்றொருவருக்குள் என்னை அடையாளங் காண்பதாக ஒருபோதும் உணர்ந்ததில்லை.
ராஃபேலும் நானும் என்வீட்டுப் பின்பக்கத்தில் உயரமான காங்கிரீட் கழிவுநீர்த் தொட்டி மீதிருந்து புல்தரைக்குக் குதித்துக் குங்ஃபூ பழகிக்கொண்டிருந்தோம். அடிவயிற்றை எக்கிக் கால்களை நீட்டி நிமிர்த்து, விரல்களைத் துல்லியமாக விரித்து விரைக்குமாறு ராஃபேல் எனக்குச் சொன்னான்; எப்படி மூச்சடக்கி, எப்படி மூச்சுவிடவேண்டுமென்று கற்றுக்கொடுத்தான். எனது மூடிய அறைக்குள்ளான முந்தைய முயற்சிகள் அனைத்தும் கருவிலேயே இறந்து பிறந்தனவாக நான் உணர்ந்தேன். இப்போது, வெளியே ராஃபேலுடன், என் கைகளால் காற்றை வெட்டிக் கிழித்தபோது, எனது பயிற்சி உண்மையானதாக, கீழேயிருந்த மெல்லிய புற்களிலிருந்து, மேலே உயர்ந்த வானம் முதல் எல்லைகளேயற்ற இந்த விண்வெளியையும் கூட என்னால் வெற்றிகொள்ளமுடியும் என்பதை உணரவைப்பதாக இருந்தது. இதுவேதான் உண்மையில் நிகழ்ந்தது. ஒருநாள் நானும் கறுப்பு பெல்ட் வாங்கிவிட முடியும். சமையலறை வாசலுக்கு வெளியே உயரமாக ஒரு திறந்த மேடைத் திண்டும் அதிலிருந்து இறங்க ஆறு படிகளும் இருந்தன. அந்த மேடையிலிருந்து அதன் ஆறு படிகளையும் தாண்டிப் பறந்து குதித்து, பறக்கும் நிலையிலேயே உதைக்கும் ஒரு முறையினைச் செய்து பார்க்க விரும்பினேன். ‘’வேண்டாம், அந்த மேடை மிகவும் உயரமானது’’ என்றான் ராஃபேல்.
வார விடுமுறை நாட்களில், அம்மாவும் அப்பாவும் என்னை விட்டுவிட்டு, அலுவலர் மகிழ் மன்றத்துக்குச் சென்றுவிட்டால், நானும் ராஃபேலும் புரூஸ் லீ காணொலிப்படங்களை, ‘’பார், பார், அதை நன்றாகக் கவனித்துப் பார்’’ என ராஃபேல், சுட்டிக்காட்டிப் பரபரத்துச் சொல்லச் சொல்லப் பார்த்துக்கொண்டேயிருப்போம். அந்தப் படங்களை அவனது கண்கொண்டு பார்க்கும்போது, அவை புதிதாகத் தெரிந்தன. நான் வெறுமனே திறமையானவை என்று நினைத்திருந்த சில அசைவுகள், அவன் `கவனித்துப் பார்` என்று சொன்னபோது ஒளிமிக்கதாக மிளிர்ந்தன. உண்மையில் எது முக்கியமானதென்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவனுடைய அறிவுநுட்பம் அவனது மேனி முழுவதிலுமே எளிதாகப் படர்ந்திருந்தது. சங்கிலிக்கட்டை8 ஆயுதத்தை புரூஸ் லீ சுழற்றும் காட்சிகளை, காணொலி நாடாவைப் பின்பக்கமாகச் சுழலச் செய்து, மீண்டும் ஓடவிட்டுக் கண்கொட்டாமல் பார்த்து, அந்த மரக்கட்டை மற்றும் உலோக ஆயுதம் பலமாகத் தாக்குகின்ற தன்மையை, அவன் உள்வாங்கிக்கொண்டிருப்பான்.
‘’எனக்கும் ஒரு சங்கிலிக்கட்டை வைத்துக்கொள்ளவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது,’’ என்றேன், நான்.
‘’அதைப் பயன்படுத்துவது மிகக் கடினம்,’’ என ராஃபேல் உறுதியாகச் சொன்னான். அப்படியொன்றின் மீது ஆசைப்பட்டதற்காக நான் சிறிது வருத்தப்பட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.
அதற்குப் பின்னர், சில நாட்களிலேயே, ஒருநாள் நான் பள்ளியிலிருந்து திரும்பியபோது, ‘’இங்கே பார்’’ என்றான், ராஃபேல். நிலையடுக்கிலிருந்து சங்கிலிக்கட்டை ஒன்றை – பழைய தரை துடைக்கும் கோலிலிருந்து வெட்டியெடுத்த இரண்டு மரக்கட்டைகளைச் சீவித் தேய்த்து, இழைத்துப் பளபளப்பாக்கி, இரண்டையும் ஒரு கம்பிச் சுருளால் பிணைத்திருந்ததை, வெளியே எடுத்தான். வீட்டு வேலையெல்லாம் செய்து முடித்துவிட்டு, ஒழிந்த நேரத்தில் குறைந்தது ஒரு வாரமாகவாவது அதைச் செய்திருக்கவேண்டும். அதை எப்படிச் சுழற்றுவதென்று எனக்குச் செய்து காட்டினான். அவனது அங்க அசைவுகள் புரூஸ் லீயைப் போலில்லாமல் அலங்கோலமாகத் தோன்றின. சங்கிலிக்கட்டையை எடுத்துச் சுழற்றினேன், ஆனால், அது நேராக எனது மார்பில் தாக்கிவிட்டுத்தான் நின்றது. ராஃபேல் சிரித்தான். ‘’கையில் எடுத்ததும் அப்படியே ஆட்டம் ஆடிவிடலாமென நினைத்தாயா? அதற்கெல்லாம் நிரம்பநாள் பழகவேண்டும்.’’ என்றான், அவன்.
பள்ளியில், வகுப்புகளில் உட்கார்ந்திருக்கும்போது சங்கிலிக் கட்டையின் வழவழப்பான மென்மையை என் உள்ளங்கைகளில் உணர்ந்தேன். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின், ராஃபேலுடன்தான் எனது உண்மையான வாழ்க்கை தொடங்கியது. நானும் ராஃபேலும் எவ்வளவுக்கு நெருக்கமாக இருந்தோம் என்பதை என் அப்பா,அம்மா கவனிக்கவில்லை. நான் வீட்டுக்கு வெளிப்பக்கமாக, விளையாடத் தொடங்கியிருந்தேன் என்பதாகவும், பின்புறத் தோட்டத்தில் ராஃபேல் களையெடுத்துக்கொண்டோ, தண்ணீர்த் தொட்டியில் பாத்திரம் கழுவிக்கொண்டோ இருந்ததாகவுந்தான் நினைத்திருந்தனர்.
ஒருநாள் பிற்பகலில், கோழி ஒன்றை உரித்து முடித்திருந்த ராஃபேல், புல்வெளியில் தனியாகக் குங்ஃபூ பழகிக்கொண்டிருந்த என்னை இடைமறித்தான். ‘’ம், அடி!’’ என்றான். இருவருக்குமான குங்ஃபூ தொடங்கியது. அவன் வெறுங்கைகளோடு; நான் எனது புதிய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு. அவன் என்னைக் கடுமையாக நெருக்கித் தள்ளினான். சங்கிலிக்கட்டையின் ஒரு முனை அவனது முழங்கையில் தாக்கியதும், வியப்படைந்ததாகத் தோன்றிய அவன், அதைச் சுழற்றும் திறமை எனக்கில்லையென்ற நினைப்பினை விட்டுவிட்டது போல் திருப்தியைக் காட்டினான். நான் மீண்டும் மீண்டுமாகச் சுழற்றினேன். அவன் விளையாட்டாக, தாக்குவதுபோல் ஏமாற்றிப் பொய்யாக உதைத்தான். நேரம் போனதே தெரியவில்லை. முடிவில் இரண்டு பேரும் மூச்சு வாங்கி, இளைத்துக்கொண்டே சிரித்தோம்.; அந்தப் பிற்பகல் மாலையில் அவன் அணிந்திருந்த அரைக்காற்சட்டை அவனுக்கு எவ்வளவு சிறியதாக இருந்ததென்றும், அவனது திண் தசைகள் கால்களோடு எப்படிக் கயிறு, கயிறாக முறுக்கிக் கிடந்தன என்பதும் எனக்கு இப்போதும் நன்கு நினைவிருக்கிறது
வார இறுதி விடுமுறை நாட்களில் நான் பெற்றோருடன் தான் மதிய உணவு சாப்பிட்டேன். நான் எப்போதுமே அவர்களுடைய தேர்வுக்கேள்விகள் என்னை நோக்கித் திருப்பும் முன் தப்பித்துவிடும் கனவுகளோடு, வேகவேகமாக உண்பேன். ஒருநாள் மதிய உணவின்போது, ராஃபேல் வேகவைத்த சேனைக்கிழங்கின் வெள்ளை வட்டுகளைக் கீரைப்படுகையின் மேலாக அடுக்கிப் பரிமாறினான்; பின்னர் கனசதுரங்களாக வெட்டிய அன்னாசியும் பப்பாளியும்.
‘‘காய்கறிகள் கல்,கல்லாக இருக்கின்றன.’’ என்றாள், அம்மா. ‘’நாங்கள் என்ன, புல் மேய்கிற ஆடுகளா?’’ அம்மா அவனை ஏறிட்டு நோக்கிவிட்டுக் கேட்டாள். ‘’உன் கண்ணில் என்னடா, கோளாறு?’’
சமையலறையில் ஏதாவது மோசமான வாடையை அவள் கண்டுவிட்டால், அவள் கேட்பாள், ‘’உங்கள் மூக்கில் என்ன இழவு பெரிதாக அடைத்துக்கொண்டிருக்கிறது?’’ இது, அதைப்போன்ற, வழக்கமான, குத்திக் காயப்படுத்தும் சாடல் இல்லையென்பதை உணர்ந்துகொள்ள எனக்கு ஒரு நிமிடம் பிடித்தது. ராஃபேலின் கண்களின் வெண்திரைகள் சிவந்து தோன்றின. வழக்கமற்ற, வேதனைமிக்க சிவப்பு. பூச்சி ஏதோ கண்ணில் விழுந்துவிட்டதென அவன் முனகினான்.
‘’இது அப்பல்லோ மாதிரி இருக்கிறது,’’ என்றார், அப்பா.
அம்மா, நாற்காலியைப் பின்பக்கமாகத் தள்ளிவிட்டு, அவன் முகத்தைக் கூர்ந்து பாத்தாள். ‘’ஆமா! அதேதான். உன் அறைக்குப் போய்விடு. அங்கேயே இரு.’’ என்றாள்.
தட்டுகளை எடுத்துவிட்டுச் சுத்தம் செய்துவிடலாமேயென, ராஃபேல் சிறிது தயங்கினான்
‘‘போய்த் தொலை!’’ ‘’அந்த இழவை எங்களுக்கெல்லாம் கொடுத்துத் தொலைக்கும் முன் போய்ச்சேர்.’’ என்றார், அப்பா.
குழம்பிப் போனவனாகத் தோன்றிய ராஃபேல், மேசையிலிருந்தும் சிறிது விலகினான். அம்மா, அவனை மீண்டும் அழைத்துக் கேட்டாள், ‘’ஏய், இங்கே வா, இதற்கு முன்னால் இது போல வந்திருக்கிறதா?’’
‘’இல்லை, அம்மை.’’
‘’இது, கன்ஜங்க்டிவா9, அதுதான் உன் கண்ணுக்கு மேலாக மூடிப் படர்ந்திருக்கும் படலத்தில் ஏற்பட்டுள்ள தொற்று.’’ என்றாள், அம்மா. அவளது இக்போ10 வார்த்தைகளின் நடுவே ` கன்ஜங்க்டிவா` அழுத்தமாகவும் அபாயமாகவும் ஒலித்தது. அம்மா தொடர்ந்தாள், ‘’உனக்காக மருந்து வாங்கப் போகிறோம். தினமும் மூன்று முறை அதைக் கண்களில் போட்டுக்கொண்டு, உன் அறையிலேயே அடைந்துகொள். முழுவதும் குணமாகும் வரை சமைக்காதே, வெளியேயும் வராதே.’’ பின்னர் என்னிடம் திரும்பி, ‘’ஒகென்வா11, அவன் அருகில் போய்விடாதே, அப்பல்லோ மிக மோசமாகத் தொட்டதும் தொற்றிக்கொள்ளக் கூடியது.’’ என்றாள். பேருக்குச் சொல்வதான அம்மாவின் தொனியிலிருந்து நான், ராஃபேலின் அருகில் போவதற்கு எந்த அவசியமும் இருப்பதாக அவள் கணித்திருக்கவில்லையென்பது தெளிவாகவே தெரிந்தது.
பின்னர், அப்பாவும் அம்மாவும் நகருக்குள்ளிருந்த மருந்தகத்துக்குக் காரில் போய், கண்ணுக்கான ஒரு புட்டி சொட்டு மருந்தோடு வந்தனர். அப்பா அதை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் வேலைக்காரப் பையன்களுக்கென இருந்த குடியிருப்பில் ராஃபேலின் அறைக்கு ஏதோ வேண்டாவெறுப்போடு போருக்குச் செல்பவரைப் போலப் போனார்.
அன்று மாலை, என் பெற்றோருடன் ஓபல்லோ சாலை13யில் இரவு விருந்துக்காக `அகாரா12 (வடை) வாங்கச் சென்றேன்; நாங்கள் திரும்பி வந்தபோது, முன்கதவைத் திறக்கவும், வசிப்பறையின் திரைகளை இழுத்து மூடவும், விளக்குகளை அணைக்கவும் ராஃபேல் இல்லாதது எப்படியோ இருந்தது. அமைதியான சமையலறையில் எங்கள் வீடு, அதன் வாழ்க்கையை இழந்து விட்டது போலத் தோன்றியது. அப்பாவும் அம்மாவும் அவர்களுக்குள்ளாகவே மூழ்கிப்போனதும், நான் பையன்களின் குடியிருப்புக்குப் போய், ராஃபேலின் அறைக்கதவைத் தட்டினேன். அது, சிறிதாகத் திறந்தேயிருந்தது. அவன் மல்லாந்து படுத்திருந்தான். அவனது சிறிய படுக்கை, சுவரினை ஒட்டி நெருக்கித் தள்ளப்பட்டிருந்தது. நான் உள்ளே வந்ததும், திரும்பி வியந்தவன் எழுந்துவிட முயற்சித்தான். அவனுடைய அறைக்குள் இதற்கு முன் நான் போனதேயில்லை. கூரையில் தொங்கிய விளக்கின் வெளிச்சம் மங்கலான நிழல்களைத் தோற்றுவித்திருந்தது.
‘’என்ன, இது?’’ அவன் கேட்டான்.
‘‘ஒன்றுமில்லை. எப்படியிருக்கிறாயென்று பார்க்க வந்தேன்.’’
அவன் தோள்களைக் குலுக்கி, மீண்டும் படுக்கையில் படுத்தான். ‘’இது எப்படி வந்து சேர்ந்ததென்று எனக்குத் தெரியாது. என் பக்கத்தில் வராதே.’’ என்றான்.
ஆனால், நான் அவனை நெருங்கிச் சென்றேன்.
‘‘தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருக்கும்போது எனக்கும் அப்பல்லோ வந்திருந்தது.’’ என்றேன். ‘’சீக்கிரம் போய்விடும், கவலைப்படாதே, இப்போது, இரவுக்குச் சொட்டு மருந்து போட்டாயா?’’
அவன் தோள்களை மட்டும் குலுக்கிவிட்டு, எதுவுமே கூறவில்லை. சொட்டு மருந்துப் புட்டி திறக்கப்படாமலேயே மேசை மேல் இருந்தது.
‘‘இன்னும் போடவே ஆரம்பிக்கவில்லையா?’’ எனக் கேட்டேன், நான்.
‘‘இல்லை.’’
‘’ஏன்?’’
அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தான். ‘’எனக்குப் போடத் தெரியாது. என்னால் முடியவில்லை.’’
ஒரு வான்கோழியைக் கிழித்துக் குடலெடுக்கிற ராஃபேலுக்கு, ஒரு மூட்டை அரிசியை ஒற்றை ஆளாகத் தூக்கிவிடுகிற ராஃபேலுக்குக் கண்ணில் சொட்டு மருந்து இட முடியவில்லை. முதலில் நான் மலைத்து வியப்புற்றேன்; பின்னர் வேடிக்கையாகத் தோன்றியது; அதற்கும் பின்னர் தான் இரக்கமாக உணர்ந்தேன். அவனது அறையைச் சுற்றிப் பார்த்தேன்; அது எவ்வளவு வெறுமையாக இருந்ததென்று அதிர்ச்சியாக இருந்தது. சுவரோடு நெருக்கிப் போடப்பட்டிருந்த ஒரு படுக்கை, நீண்டு ஒடுங்கிய ஒரு மேசை, மூலையில் இருந்த ஒரு சாம்பல் நிறத் தகரப்பெட்டி, அதற்குள் தான் அவனது அனைத்து உடைமைகளும் இருக்குமென்று யூகித்துக் கொண்டேன்.
‘‘உன் கண்ணில் நான் மருந்து போட்டுவிடுகிறேன்.’’ என்று சொல்லிப் புட்டியை எடுத்து அதன் மூடியைத் திருகித் திறந்தேன்.
‘‘என் பக்கத்தில் வராதே,’’ என மீண்டும், மீண்டும் சொன்னான், அவன்.
நான் ஏற்கெனவேயே அவனை நெருங்கிவிட்டிருந்தேன். அவன் மீது குனிந்தேன். அவன் கட்டுப்படுத்த முடியாத பயத்தில் விழிக்கத் தொடங்கினான்.
‘’குங்ஃபூ போல மூச்சு எடு,’’ என்றேன், நான்.
அவன் முகத்தைத் தொட்டு, இடது கண்ணின் கீழ்ப்பக்க இமையை மெதுவாக இழுத்து, சொட்டு மருந்தினை அவன் கண்ணுக்குள் இட்டேன். அடுத்த இமையை நான் மேலும் அழுத்தமாகப் பிடித்திழுக்கவேண்டியிருந்தது; அவ்வளவுக்கு இறுக மூடியிருந்தான், அவன்.
‘‘அவ்வளவுதான்,’’ என்றேன், நான். ‘’மன்னித்துக்கொள்’’ என்றான், அவன்.
அவன் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான்; அவனது முகத்தில் ஏதோ ஒன்று அற்புதமாகச் சுடர்விட்டது. அதற்கு முன்புவரையில், நான் அப்படியொரு போற்றுதலுக்குரிய ஒருவனாக என்னை ஆட்படுத்திக்கொண்டதில்லை; அப்படி உணர்ந்ததுமில்லை. அது எனக்கு அறிவியல் வகுப்பினை, ஒளியை நோக்கிப் பசுமையாகத் துளிர்க்கும் புதிய சோளக்கதிரை நினைவூட்டியது. அவன் எனது கையைத் தொட்டான். நான் எனது அறைக்குச் செல்வதற்காகத் திரும்பினேன்.
‘’பள்ளிக்குச் செல்லும் முன்னால், வந்து பார்க்கிறேன்.’’ என்றேன், நான்.
காலையில் அவனது அறைக்குள் மறைவாக நுழைந்து, கண்ணுக்கு மருந்து போட்டுவிட்டு, மறைவாக வெளியேறி, பள்ளிக்குச் செல்வதற்காக, அப்பாவின் காரில் போய் உட்கார்ந்துவிட்டேன்.
மூன்றாவது நாள், ராஃபேலின் அறை எனக்குப் பரிச்சயம் மிக்கதாக, என்னை வரவேற்பதாக, பொருட்களின் ஆரவாரக் கூச்சல் இல்லாததாக இருந்தது. அவனுக்கு மருந்து போடும்போதுதான், அவனைப்பற்றிய சில விஷயங்களைக் கண்டுகொண்டேன். மேலுதட்டின் மீது கருமை படரத் தொடங்கியிருந்தது; கழுத்துக்கும் தாடைக்கும் நடுவிலிருந்த இடைவெளியில் ஒரு தேமல். நான், அவனது படுக்கையின் விளிம்பில் அமர்ந்திருக்க, இருவரும் `குரங்கின் நிழலுக்குள் பாம்பு` திரைப்படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்தப்படத்தைப் பற்றி எத்தனையோ முறை பேசியிருக்கிறோம்; என்றாலும் ஏற்கெனவே பேசிய விஷயங்களை, அப்போது அவனது அறையின் அமைதியில் பேசியபோது இரகசியங்கள் போலத் தோன்றியது. எங்கள் குரல்கள் அநேகமாக, ஓசையடங்கி, மிகத் தாழ்ந்திருந்தன அவனது உடலின் வெப்பம் என் மீதும் வெப்பத்தை ஏற்படுத்தியது.
` பாம்பு` பாணிக்குச் செயல்விளக்கமளிக்க, அவன் எழுந்தான்; பின்னர், இருவரும் சிரித்தோம்; அவன் என் கைகளைப் பிடித்துக்கொண்டான்; பின்னர் என்னைப் போக அனுமதித்து, என்னிடமிருந்தும் சிறிது விலகினான்.
‘’இந்த அப்பல்லோ ஒழிந்துவிட்டது,’’ என்றான், அவன்.
அவன் கண்கள் தெளிவாக இருந்தன. அவன் இவ்வளவு சீக்கிரம் குணமாகிவிட்டானேயென்று எனக்குத் தோன்றியது.
ஒரு திறந்த வெளியில் ராஃபேல் மற்றும் புரூஸ் லீயோடு நானும் சேர்ந்து ஒரு சண்டைக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டுகொண்டிருந்தேன். நான் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகும் கண்களைத் திறக்கமுடியவில்லை. கைகளால் இமைகளை விலக்கிப் பிரித்தேன். கண்கள் எரிந்து அரிப்பெடுத்தன. இமைத்துத் திறந்த ஒவ்வொரு முறையும், வெளிறிய நிறத்தில் அருவருப்பான திரவம் சுரந்து இமைமுடிகளை நனைத்து, ஒரு படலமாகப் படிந்தது. கண் இமைகளுக்குள் சூடான வறுத்த மணல் சிக்கிக்கொண்டது போல் உறுத்தியது. என் உடலுக்குள்ளே வெப்பமாகக் கூடாத ஒன்று, வெப்பமாகிக்கொண்டிருப்பதாக நான் பயந்தேன்.
‘’இந்த இழவை எதற்காக என் வீட்டுக்குள் கொண்டுவந்தாய்? ஏன் கொண்டுவந்தாய்?’’ அம்மா, ராஃபேலைத் திட்டினாள். அவளுடைய மகனுக்கு அப்பல்லோவைக் கொடுக்கவேண்டுமென்பதற்காகவே, சதி செய்து, ராஃபேல் போய் அப்பல்லோவைப் பிடித்துக்கொண்டு வந்ததாக அவள் சொல்வது போலிருந்தது. ராஃபேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அம்மா திட்டும்போது, அவன் எந்தப் பதிலும் சொல்வதில்லை. அவள் படிக்கட்டின் உச்சியில் இருந்தாள்; ராபேல் கீழ்மட்டத்தில் நின்றிருந்தான்.
‘‘அறைக்குள்ளிருந்த அவன் எப்படி உனக்கு அப்பல்லோவைக் கொடுத்தான்?’’ அப்பா என்னைக் கேட்டார்.
‘’அது ராஃபேல் இல்லை. என் வகுப்பில் யாரிடமிருந்தோ வந்திருக்குமென்று நினைக்கிறேன்.’’ என்றேன், நான்.
‘‘அது யார்?’’ அம்மா கேட்கிறாளென்று எனக்குப் புரிந்தது. ஆனால், அந்த ஒரு கணத்தில் என் வகுப்புத் தோழர்கள் எல்லோருடைய பெயரையும் நான் மறந்திருந்தேன்.
‘’யார்?’’ அம்மா மீண்டும் கேட்டாள்.
‘’சிடி ஓபி,’’ என்று முதலாவதாக நினைவுக்கு வந்த பெயரைச் சொன்னேன். அவன் எனக்கு முன்வரிசையில் அமர்பவன். அவனிடம் எப்போதும் பழந்துணிகளின் வாடைதான் வீசும்.
‘’தலை வலிக்கிறதா?’’ எனக்கேட்டாள், அம்மா.
‘’ஆமாம்.’’
பனடால்14 எடுத்துவந்து என்னிடம் தந்தார், அப்பா. மருத்துவர் இக்போக்வேக்கு அம்மா தொலைபேசினாள். அப்பாவும் அம்மாவும் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். அப்பா கலக்கிக் கொண்டுவந்த மைலோ15 வை நான் குடிப்பதை அறை வாசலிலேயே நின்று இருவரும் கவனித்தார்கள். நான் விரைவாகக் குடித்து முடித்தேன். நான், மலேரியாவில் விழும் ஒவ்வொரு முறையும், கசக்கும் நாக்குடன் கண்களைத் திறக்கும்போதெல்லாம், அவர்களில் ஒருவர் என் பக்கத்திலேயே ஒரு நாற்காலியைப் போட்டு, அமர்ந்து ஏதாவது ஒரு புத்தகத்தை அமைதியாக வாசித்துக்கொண்டிருப்பதைக் காண்பேன். அவர்களை அந்த இக்கட்டிலிருந்தும் விடுவிப்பதற்காகவாவது, எனக்கு சீக்கிரம் குணமாகக்கூடாதாவென நினைப்பேன். இப்போது, அப்படி ஒரு கைவைத்த நாற்காலியை என் அறைக்குள் இழுத்துக் கொண்டுவந்துவிட மாட்டார்கள் என்று நம்பினேன்.
மருத்துவர் இக்போக்வே வந்து எனது கண்களில் கைமின் விளக்கொளியைப் பாய்ச்சினார். அவரது கிருமிகொல்லி மருந்து (யுடிகோலன்) நாற்றம் நிரம்பவே அதிகமாக இருந்தது. அவர் சென்றபிறகும் கூட மிக மோசமாகக் குமட்டுவதென நான் நினைக்கும் சாராய நாற்றத்தைப் போன்றதான, தலைவலியைக் கொண்டுவருகிற அந்த நாற்றத்தை உணர முடிந்தது. அவர் சென்ற பிறகு என் பெற்றோர் என் படுக்கை அருகிலேயே நோயாளிக்கான புனிதமேசை ஒன்றை – வெள்ளைத் துணி விரித்த ஒரு மேசை, அதன் மீது ஆரஞ்சு லூகோஜேடு15 புட்டி ஒன்று, நீலநிற குளுகோஸ் டப்பா ஒன்று, நெகிழித்தட்டில் புதிதாக உரித்த ஆரஞ்சுச் சுளைகள் – அமைத்தனர். அறைக்குள் அவர்கள் கைவைத்த நாற்காலியைக் கொண்டுவந்துவிடவில்லை; ஆனாலும் எனக்கு அப்பல்லோ இருந்த அந்த வாரம் முழுவதும் அவர்களில் யாராவது ஒருவர் வீட்டிலிருப்பது போல் பார்த்துக்கொண்டனர். என் கண்ணில் மருந்து ஊற்றுவதற்கு அவர்கள் முறைவைத்துக் கொண்டனர்; அம்மாவைவிட அப்பா, அநியாயத்துக்கு மோசமாக, அந்தப் பிசுபிசு திரவம் என் கன்னங்களில் வழியுமாறு ஊற்றினார். அவர்கள் ஒவ்வொரு முறையும் மருந்து போடுவதற்காக, அந்தப் புட்டியை என் முகத்துக்கு மேலாகப் பிடித்தபோதும், முதன் முதலாக ராஃபேலுக்கு மருந்து போடும்போது, அவன் கண்களில் தோன்றிய பார்வை என் நினைவுக்கு வந்து, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
அவர்கள், திரைகளை இழுத்து மூடி, எனது அறையை இருட்டாக்கினர். படுத்தே கிடந்ததில் நான் அலுத்துப் போனேன்; ராஃபேலைப் பார்க்க விரும்பினேன். ஆனால், என் நிலைமையை அவன் மோசமாக்கிவிடுவானென்று, அவனை என் அறைப்பக்கமே வரக்கூடாதென, அம்மா தடை விதித்திருந்தாள். அவன் வந்து என்னைப் பார்க்கவேண்டுமென்று நான் விரும்பினேன். ஒரு படுக்கை விரிப்பினை அப்புறப்படுத்துவதாக அல்லது குளியலறைக்கு ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வருவதான பாவனையில் உள்ளே, வந்துவிடலாம் தான். ஆனால், அவன் ஏன் வரவில்லை? அவன் ஒரு பேச்சுக்குக்கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. அவன் வார்த்தை ஒலிகளைக் கேட்டுவிட வேண்டுமென்று முயற்சித்தேன்; ஆனால், சமையலறை தூரத்திலிருந்தது; அதுவுமில்லாமல், என் அம்மாவோடு அவன் பேசும்போது, குரலை மிகவும் தாழ்த்திப் பேசுவான்.
ஒருமுறை கழிவறைக்குச் சென்றுவந்த பின், சமையலறைப் படிக்கட்டில் இறங்க முயற்சித்தேன். ஆனால், படிக்கட்டின் கீழாக அப்பா அங்கும் இங்குமாக உலவிக்கொண்டிருந்தார்.
‘’கேது16?’’ எனக்கேட்டார், அவர். ‘’சரியாகத் தானே இருக்கிறாய்?’’
‘’தண்ணீர் வேண்டும்.’’ என்றேன்.
‘’நான் கொண்டுவந்து தருகிறேன். நீ போய்ப் படுத்துக்கொள்.’’
ஒருவழியாக, என் அப்பாவும் அம்மாவும் ஒன்றாக வெளியே சென்றார்கள். தூங்கிக்கொண்டிருந்த நான், விழித்ததும், வீட்டின் வெறுமையை உணர்ந்தேன். சமையலறைப் படிக்கட்டில் ஓட்டமாக இறங்கினேன். அதுவும் வெறுமையாக இருந்தது. பையன்கள் குடியிருப்புக்குப் போயிருப்பானோ, அவன் பகலில் அங்கே போகக்கூடாதே, இப்போது அம்மா,அப்பா இல்லாததால், அங்கு போயிருப்பானோ என நான் நினைத்தேன். திறந்தவெளி மேடைத் திண்டுக்கு வந்தேன். என் பார்வையில் அவன் படும் முன்பாகவே, அவன் பேச்சுச் சப்தம் என் காதுகளில் விழுந்தது. தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில், ஒரு காலால் மண்ணில் அளைந்துகொண்டு, பக்கத்து வீட்டுப் பேராசிரியர் நவோசுவின் வீட்டு வேலைக்காரி ஜோசபினோடு பேசிக்கொண்டிருந்தான். பேராசிரியர் நவோசு, அவரது பண்ணையிலிருந்து அவ்வப்போது, முட்டைகள் அனுப்புவது வழக்கம். ஆனால், அதற்கான காசு மட்டும் பெற்றுக்கொள்ளவே மாட்டார். ஜோசபின் முட்டை கொண்டுவந்திருப்பாளோ? அவள் உயரமும் சதையுமாக இருந்தாள்; இப்போது, போகச்சொல்லிவிட்ட பிறகும் போக மனமில்லாமல் ஒட்டி, உரசுவது போன்ற மனநிலையில் இருந்ததாகத் தோன்றினாள். அவள் பக்கத்தில் ராஃபேல், வித்தியாசமாக – வளைந்து நெளியும் முதுகும், நடுங்கும் கால்களுமாக நின்றான். அவன் வெட்கத்தில் நின்றான். அவள், அவனுக்குள் அவளை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயங்களைக் காண்பதாக, ஒருவகையான அதிகாரம் செலுத்துவதான நோக்கில் பேசிக்கொண்டிருந்தாள். எனது பகுத்தறிவு மங்கி உய்த்துணர்வினை இழந்தது.
‘’ராஃபேல்,’’ நான் கத்தினேன்.
அவன் திரும்பினான். ‘’ஓ, ஒகென்வா, நீ கீழே வருவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்களா?’’
நான் ஏதோ குழந்தை மாதிரி, நாங்கள் அவனுடைய மங்கலான அறையில் சேர்ந்து, உட்காராதது போலப் பேசினான்.
‘’பசி! எனக்குச் சாப்பாடு எங்கே?’’ அதுதான் முதலில் என் வாயில் வந்தது. ஆனால், அதிகாரத்தைக் காட்டுவதற்காக உரத்துக் கத்தினேன்.
வெகுவாகச் சிரித்துக்கொண்டிருக்கையில், நடுவிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் போல, ஜோசஃபின் முகம் சிறுத்தது. ராஃபேல் என் காதுகளில் விழாதபடி ஏதோ சொன்னான்; ஆனால், அது ஏமாற்றுவதான துரோகத்தின் ரகசியக் குரலாகத் தோன்றியது. அப்பா,அம்மாவின் கார் அப்போது உள்ளே நுழையவும், ராஃபேலும் ஜோசபினும் தூக்கிவாரிப்போட்டது போலாயினர். ஜோசபின் சுற்றுச் சுவருக்கு வெளியே ஓட, ராஃபேல் என்னை நோக்கி வந்தான். அவனது சட்டையின் முன்புறத்தில் சூப்பிலிருந்த தெறித்த பாமாயில் பட்டது போல ஆரஞ்சு நிறத்தில் ஒரு கறை தெரிந்தது. அப்பா,அம்மா மட்டும் வராமலிருந்திருந்தால், நான் அங்கே நிற்பதைப் பொருட்படுத்தாமலேயே, அவன் அப்போதும் தொட்டியின் அருகிலேயே நின்று அவளோடு ரகசியம் பேசிக் கொண்டிருந்திருப்பான்.
‘’உனக்குச் சாப்பிட என்ன வேண்டும்?’’ அவன்தான் கேட்டான்.
‘’ஏன் என்னைப் பார்க்க வரவில்லை?’’
‘’உன் பக்கத்திலேயே வரக்கூடாதென்று அம்மா சொல்லியிருந்தது, உனக்குத் தெரியும் தானே!’’
இதுபோலச் சாதாரண விஷயங்களையெல்லாம், அவன் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? என்னையுந்தான், அவன் அறைக்குப் போகக் கூடாதென்று சொல்லியிருந்தார்கள். ஆனாலும், நான் போய்த் தினமும் அவன் கண்ணுக்கு மருந்து போட்டேனே!
‘’இந்த அப்பல்லோவை எனக்குத் தந்ததே, நீதான்,’’ என்றேன், நான்.
அவன், ‘‘சாரி,’’ என உயிரற்று உதிர்த்தபோது, அவன் கவனம் நிச்சயமாக வேறெங்கேயோ இருந்தது.
அம்மாவின் குரல் கேட்டது. அவர்கள் திரும்பி வந்ததிலும் எனக்குக் கோபம். ராஃபேலுடனான எனது நேரம் குறைக்கப்பட்டுவிட்டது; ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டது போலானதொரு உணர்வு எனக்குள் தோன்றியது.
‘’உனக்கு வாழைப்பழம் வேண்டுமா? அல்லது சேனைக்கிழங்கா?’’ என்னைச் சமாதானம் செய்வதற்காக அல்ல, எதுவுமே நடக்காதது போல, அவன் கேட்டான். என் கண்கள் மீண்டும் எரியத் தொடங்கின. அவன் படிகளின் மேல் ஏறி வந்தான். நான் அவனிடமிருந்து விலகுவதாக, விரைந்து மேடைத்திண்டின் விளிம்புக்குச் சென்றுவிட, எனது ரப்பர் செருப்புகள் தடுக்கி, நிலை தடுமாறிக் கீழே விழுந்தேன். குப்புற விழுந்து விடாமல் சமாளித்துக் கை கால்களை ஊன்றி நான்கு காலில் நின்றேன். எனது உடம்பின் கனத்தையே என்னால் தாங்கமுடியவில்லை; அழுகையை அடக்கமுயன்றாலும் அதையும் மீறிக் கண்ணீர் வழிவதை உணர்ந்தேன். அவமானத்தில் குறுகி, நான், அசையாமல் நின்றேன்.
என் பெற்றோர் வந்தனர்.
‘’ஒகென்வா,’’ அப்பா கத்தினார்.
என் கால் மூட்டில் கல் ஒன்று குத்திவிட, நான் தரையிலேயே நின்றேன். ‘’ராஃபேல் என்னைத் தள்ளிவிட்டான்.’’
‘’வாட்?’’ அப்பாவும் அம்மாவும் ஒருசேர, ஆங்கிலத்தில் கேட்டார்கள், ‘’வாட்?’’
நேரம் என்னவோ, இருக்கத்தான் செய்தது. அப்பா, ராஃபேலை நோக்கித் திரும்புவதற்கு முன்பாக, அம்மா, அவனை அடிப்பது போல் பாய்வதற்கு முன்பாக, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உடனே வீட்டுக்குப் போய்ச் சேரென்று கத்துவதற்கு முன்பாக, போதிய நேரம் இருக்கத்தான் செய்தது. நான் பேசியிருக்க முடியும். அந்த அமைதியைக் குலைத்து, இரண்டாக வெட்டிப் பிளந்திருக்க முடியும். அது ஒரு விபத்து எனச் சொல்லியிருக்க முடியும். நான் பொய் சொன்னதைச் சொல்லி, என் பெற்றோரை, இவன் ஏன் இப்படிச் செய்தானென்று ஆச்சரியத்தில் வாய்பிளக்கச் செய்திருக்கலாம்.♦

நன்றி : – http://www.newyorker.com/magazine/2015/04/13/apollo
குறிப்பு :-
பணம்பண்ணும் சடங்கு1 – moneymaking ritual – நரபலி கொடுத்தல் போன்றவை
கறிச்சாறு2 – stew காய்கறிகள், அவரை, போன்ற பயறுவகைகள், இறைச்சி, மீன் போன்றவை சேர்த்துச் செய்யப்படும் குழம்பு வகை
மேட்டியஸ் ரோஸ்3 – Mateus Rose போர்ச்சுக்கல் நாட்டு ஒயின்.
பிப்4 – Pip –ஏழு வயது அனாதைச் சிறுவன் வளர்ந்து பெரியவனாகின்ற கதையான, டிக்கன்ஸ் படைத்த `பெரும் எதிர்பார்ப்புகள்` (Great Expectations) நாவலின் கதைசொல்லும் பாத்திரம்.
ஜியுலு5 – Ezeulu – இக்போ மொழி பேசும் ஆப்பிரிக்க (நைஜீரியா) மக்கள் மத்தியில் கிறித்துவம் பரவிய வரலாற்றினை விவரிக்கும் சினுவா அச்செபேயின் `கடவுளின் அம்பு` (Arrow of God) என்ற யதார்த்த நாவலின் மையப் பாத்திரம்.
கறுப்பு அழகு6 – Black Beauty – அன்னா சீவெல் என்பவரால் 1877 ல் எழுதப்பட்ட ஆங்கில நாவல். 5 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்த நாவல் அதிக விற்பனை படைத்துள்ளதோடு, உலகின் அதிகம் படிக்கப்பட்ட நூல்களின் வரிசையில் 58 ஆக இடம் பிடித்துள்ளது. இந்த நாவல் விலங்குகள் நலத்தினைப் பாதுகாக்க வேண்டியது மற்றும் மனிதர்களிடத்தில் அன்பாக நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது.
தண்ணீர்க் குழந்தைகள்7 – The Water-Babies, A Fairy Tale for a Land Baby – 1862 – 63ல் ரெவரெண்ட் சார்லஸ் கிங்ஸ்லி என்பவரால் மேக்மில்லன் இதழில் ஆங்கிலத்தில் தொடராக எழுதப்பட்ட குழந்தைகள் நாவல். இங்கிலாந்தில் இப்போதும் படிக்கப்படும் இந்நாவல் குழந்தைகள் இலக்கியத்தில் அதன் இடத்தினை இன்றளவும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
சங்கிலிக்கட்டை8 – nunchaku (Japanese: “chainsticks” in English) சங்கிலி அல்லது கயிற்றால் பிணைக்கப்பட்ட இரு மரக்கட்டைகள் . இது ஒரு ஜப்பானியப் போராயுதம்.
கன்ஜங்க்டிவா9 – Conjunctiva – இமையையும் விழிக் கோளத்தையும் இணைக்கும் படலம்
இக்போ10_ Igbo – நைஜீரியாவில் பேசப்படும் ஒரு மொழி
ஒகென்வா11 – Okenwa – நைஜீரியாவின் இக்போ மொழியிலுள்ள ஆண்பாற் பெயர்களில் ஒன்று.
அகாரா12 – akara – ஊற வைத்த பீன்ஸ் பயற்றினை அரைத்தெடுத்த மாவோடு, நறுக்கிய வெங்காயம், பொடித்த மிளகு, உப்பு மற்றும் பொடியாக அரிந்த இறால் அல்லது ஏதாவதொரு உயிரிப் புரோட்டீன் கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் நைஜீரிய வகை பீன்ஸ்-எறா வடை.
ஓபல்லோ சாலை13 – Obello Road, Nsukka, Enugu, Nigeria – ஓபல்லோ சாலை, நைஜீரியாவின் எனுகு மாநிலத்திலுள்ள நசுக்கா நகரிலுள்ளது.
பனடால்14 – Panadol – வலி மற்றும் காய்ச்சல் குறைக்கும் மருந்தான பாரசெட்டமால் (மெட்டாசின்) என்பதன் கிளாக்சோஸ்மித்க்ளைன் நிறுவனத் தயாரிப்பின் வணிகப்பெயர்.
லூகோஜேடு15 – Lucozade – (Glucozade என்பதிலிருந்து உருவானது.) விளையாட்டு மற்றும் சக்திக்கான பானம்.
கேது16 – Kedu –`என்ன` என்பதற்கான இக்போ மொழிச் சொல்.
மலைகள் இணைய இதழ் மே. 02 2015,  இதழ் 73ல் வெளியாகியுள்ளது.
ச.ஆறுமுகம் - அலைபேசி 9442944347 மின்னஞ்சல் arumughompillai@gmail.com