Thursday 11 January 2018

சங்க இலக்கியத் துளிகள் - 10.

சங்க இலக்கியத் துளிகள் – 10 

தூக்கணாங்குருவிக் கூட்டுக்கு மயங்காதாரும் உளரோ! 

களவுக் காதல்; தலைவியின் ஊர் வாய்க்கு வந்தபடி அலர் பேசுகிறது. தக்க சமயத்தில் தோழி, தலைவியின் பெற்றோருக்குக் தலைவியின் காதலைத் தெரிவித்து அறத்தொடு நிற்கிறாள். காதல் விவரம் வெளிப்படத் தெரிந்ததும் தலைவன் தமரோடு வந்து தலைவியின் பெற்றோரிடம் பெண் கேட்கிறான். இந்த நல்லதொரு திருமணத்தைச் செய்து வையுங்களென ஊர் ஒன்றுபட்டுச் சொல்கிறது. முன்னர் அலர் பேசிய அதே ஊர் இப்போது நன்றுபுரி கொள்கையென ஒன்றுபட்டு நிற்பதை தூக்கணாங்குருவிக் கூடுகளை விடவும் அதிகமாக மயக்கம் தருவதான ஊர் என தோழி தலைவிக்கு தெரிவிக்கிறாள்.
பாடல் :
எந்தையும் யாயும் உணரக் காட்டி, 

ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின், 
மலைகெழு வெற்பன் தலைவந்து இரப்ப, 
நன்றுபுரி கொள்கையின் ஒன்றாகின்றே – 
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ, 
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த 
கூடினும் மயங்கிய மையல் ஊரே. 

- உறையூர்ப் பல்காயனார் (குறுந்தொகை, குறிஞ்சி, 374)

இப்பாடல் நமக்குத் தரும் செய்திகள்
1. களவுக் காதல் என்றதுமே ஊர் திரண்டு அலர் பேசுகிறது.
2. உரிய முறைப்படி பெண் கேட்டு வந்ததும் ஊர் ஒன்றுபட்டு திருமணம் செய்விக்கவேண்டுமென்ற நல்ல கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறது.
3. அறம் சார்ந்த செயலுக்கு ஆதரவளிக்கும் ஊரின் பொது இயல்பு.
4. பெண் பனையில் தூக்கணாங் குருவிகள் கூடுகள் கட்டுவதுண்டு. அக்கூடுகள் வியப்பானவைதாம்; அவற்றை விடவும் ஒன்றுபடும் ஊரின் இயல்பு அதிக வியப்புக்குரியது.

வலம்புரிச் சங்கினைக் கண்டதும் ஒரு புலவருக்கு தூக்கணாங் குருவிக்கூடு நினைவுக்கு வருகிறது.
தூக்கணங்குரீஇத் தொங்கு கூடு ஏய்ப்ப ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி (வரி 11 மற்றும் 12) புறம் 225 - ஆலத்தூர் கிழார் 


Image may contain: plant, sky, outdoor and nature  

முகநூல் பதிவு நாள் ஜனவரி 8, 2018. விருப்பம் 59, பகிர்வு 12, பின்னூட்டம் 15. 

No comments:

Post a Comment