Monday 15 January 2018

பொங்கல் நினைவுகள் - அபுனைவு - 4

பொங்கல் நினைவுகள்
எனக்கு விவரம் தெரிந்து, விவசாயிகளான எங்கள் குடும்பத்தில் தீபாவளி, பொங்கல் கொண்டாடாத ஆண்டு இல்லையென்றே கூறிவிடலாம். அப்பா 30.01. 1970 இல் இறந்து ஓராண்டுக்குள் வந்த 1971 பொங்கல் 2012.1994 இல் அம்மா இறந்ததால் 1995 பொங்கலும் தான் கொண்டாடப்படாமல் தவிர்த்ததாக இருக்கும்.
1984 வரையிலும் நாஞ்சில் நாட்டிலேயே குடியிருந்தோம். அதற்குப் பின்புதான் குடும்பத்தோடு வேலூரில் குடிபுகுந்தோம்.
நான் சிறுவனாக இருந்தபோது பொங்கலுக்கு ஒன்று, ஒன்றரை மாதம் முன்பாகவே வீட்டில் பொங்கலுக்கான முன் தயாரிப்புகள் தொடங்கிவிடும். முதலில் வீடு வெள்ளையடிப்பதற்காக சுண்ணாம்பு வாங்க வடசேரி கனகமூலம் சந்தைக்குச் செல்ல வேண்டும். சந்தை வியாழன் மற்றும் ஞாயிறுகளில் மட்டுமே கூடும். சந்தையின் முன் வாயிலிலேயே
காளவாயிலிட்டு சுட்ட சுண்ணாம்புக் கற்கள் விற்பார்கள்.
எங்கள் கிராமத்திலிருந்து தோவாளை செல்லும் சாலையில் பருப்புவிளை அருகி்ல்சாலைக்கு வலது புறமாக காளவாய் ஒன்று இருந்தது. ஆனாலும் அப்பா அங்கு சென்று வாங்குவதில்லை.
சிப்பிச் சுண்ணாம்பு வாங்கி வந்து அதை ஒரு மண் தொட்டியிலிட்டு நீர் ஊற்றினாலே போதும். அது அப்படியே கொதிக்கத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள் `பாண்ட்ஸ் ஸ்நோ` மாதிரி வெண்மை நிறத்தில் மென்மையான சுண்ணாம்பு கிடைத்துவிடும். அதை நீரில் கரைத்து சுவற்றுக்கு வெள்ளை அடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
வீட்டுக்கு வெள்ளையடிப்பது என்றால் முதலில் அறைகளை ஒவ்வொன்றாகப் பொருட்களை ஒதுங்கவைத்து, ஒழித்துக் கொடுக்க வேண்டும். வாசக் கால்கள், கதவுகள் கழுவ வேண்டும். ஜன்னல் கம்பிகள் கண்ணாடிகள், மர நாற்காலிகள், மேசைகள் எல்லாவற்றையும் சுத்தப்படுத்த வேண்டும். வெள்ளையடிப்பதற்கு இரண்டு நாட்களாகுமென்றால் அதன் பிறகும் வேலை இருந்துகொண்டேதானிருக்கும். காவிக்காக செம்மண் கொண்டு வருவதுண்டு. பழைய மண்பாண்டங்களை ஒழிப்பதற்காக புதிய மண்பாண்டங்கள் வாங்க வேண்டும். பொங்கல் பானையில் பால் பொங்கும் வரையில் பனை ஓலைத் தீ தான் போடவேண்டும். அதற்காக காய்ந்த பனை ஓலை வாங்கிவைக்கவேண்டும்.
பொங்கலுக்குப் படைப்பதற்காக காய்கறிகள் வாங்கவேண்டும். காய்கறிகளில் எதுவுமே விடப்பட்டுவிடக்கூடாது என்பதில் அப்பா மிகவும் கவனமாக இருப்பார். பொங்கல் வரும் நாளுக்கு முந்தைய சந்தை நாளில் வடசேரிக்குப் போய் இரண்டு கோணிச் சாக்கு நிறைய வாங்கி வடசேரி வண்டிப்பேட்டையில் கொண்டுபோய் வைத்துவிடுவார். அங்கிருந்து வாடகை மாட்டு வண்டியில் அன்று சாயங்காலமே வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். பூசணிக்காய், இளவங்காய், சேனை போன்றவற்றை கூடிய வரையில்சிறிதாகப் பார்த்து வாங்குவார். பொங்கலுக்கு காய்களை முழுதாகப் படைக்காமல் சிறு துண்டு படைப்பது அப்பாவுக்குச் சம்மதமில்லை. அந்தப் பருவத்தில் கிடைக்கும் கருணை, சேம்பு, பிடிகிழங்கு, சிறுகிழங்கு, காய்ச்சிக் கிழங்கு, சீனிக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு என அத்தனை வகைகளையும் வாங்குவார். சந்தைக்குச் செல்லும் போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார். வாங்குகிற ஒவ்வொரு பொருளும் முழு விளைச்சலுள்ளதாக நல்ல பொருளாக இருக்கவேண்டும். மாடத்தியக்கா தான் சொல்லுவாள் “ சங்கரனுக்கு என்று எங்க தான் கிடைக்குமோ காய்கறிகள், கண்ணைப் பிடுங்கிக்கொண்டு வந்த மாதிரி” என்பாள். அப்பா விலையைப்பற்றி அதிகம் கவலைப்படமாட்டார். வியாபாரிகளிடம் அதிகம் கசடுவதுமில்லை. எப்போதும் பதிவான வியாபாரிகள் தான் இருப்பார்கள்; அநேகமாக அப்பாவுக்குத் தெரிந்த முகமாகத்தானிருப்பார்கள். விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும் போலிருக்கிறதே என்றால் அவன் சாப்பிட்டுவிட்டுப் போகட்டும், கோட்டையா கட்டிவிடுவான் என்பார்.
பொங்கலுக்கு முதல் நாளிலேயே அம்மா, பொங்கலுக்கான கோதாவரிக் குண்டு எனப்படும் வெண்கலப் பானை, சர்க்கரைப் பொங்கலுக்கான ஈயம் பூசிய பித்தளைப் பானை, வெங்கலக் கரண்டிகள், விளக்கு, சூடந்தட்டு, சாம்பிராணிப் புகை காட்டும் தூபக்கால், நிறைநாழி, தாம்பாளம் எல்லாவற்றையும் முதலில் சாணி போட்டுத் தேய்த்துக் கழுவிப் பின்னர் புளிபோட்டு விளக்கிக் கழுவியபின்னும் விரும்பிய நிறம் கிடைக்கவில்லையெனில் உமியும் சாம்பலும் கொண்டு துலக்கித் துடைத்து வைத்துவிடுவாள். பொங்கலிடும் முற்றம் மட்டுமில்லாமல் இடைவழி, பட்டாலை, இரண்டாம் கட்டு, அடுக்களை, பெரை மட்டுமில்லாமல், பின் வாசல், மாட்டுத் தொழுவம் எல்லாவற்றையும் கழுவிக் கோலமிட்டுவிடுவாள். முற்றத்தில் தேர்க் கோலம். முன் வாசலில் இதயக்கமலம். அறைகளின் நான்கு சுவர் ஓரங்களிலும் கோலத் தொடர்களால் பார்டர் கட்டப்பட்டிருக்கும். கோலம்சா எப்மிபோதுமே மாக் கோலம் தான். சுண்ணாம்புக் கரைசலிலும் கூட கோலமிடலாம். ஆனால், கையெல்லாம் பொத்துப் போகும். படங்கள் அத்தனையையும் துடைத்து, சட்டங்களில் உருக்கிய மெழுகும் எண்ணெயும் கலந்து துணியில் தோய்த்துத் தடவி புதுச் சட்டம் மாதிரி பளிச்சென்றிருக்கும்.
பொங்கல் அன்று விடிகாலை நான்குமணிக்கு அம்மாவும் அவள் தோழிகளுமாகக் குடத்துடன் குளிக்கக் கிளம்புவார்கள். கூடவே என்தங்கைகளோடு என்னையும் எழுப்பிக் கூட்டிக்கொண்டு போவார்கள். கல்லாற்றுப் பாலத்தில் வலது பக்கமிருக்கும் துறை தான் அம்மாவுக்குப் பிடிக்கும். எங்களை ஆற்றில் முக்கியெடுத்துத் தலைதுவட்டி மேல்படியில் நிற்கவைத்துவிடுவார்கள். இடுப்பில் ஈரத் துண்டுடன் கிடுகிடுவென ஆடிக்கொண்டு பல்லைக் கடித்து நின்ற அனுபவம் இப்போதும் நினைவிலிருக்கிறது. எல்லோரும் குளித்து முடித்து குடத்தில் தண்ணீரெடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்வார்கள். வந்ததுமே பொங்கலுக்கான தயாரிப்புகள் நடக்கும். அ ம்மா ஈரச் சேலையோடேயே விளக்கைக் கொண்டு வந்து முற்றத்தில் வைத்து தலைவாழை இலையை, தும்பு விளக்கின் வலப்புறம் வருமாறு பரப்பி நிறைநாழியில் கூம்பு வடிவத்திலிருக்குமாறு நெல் முகந்துவைத்து, சாணிப்பிள்ளையார் வைத்து அதற்குத் திருநீறும் பொட்டுமிட்டு, திருவிளக்குக்கும் பொட்டிட்டு, அனைத்துக் காய்களையும் கொண்டு வந்து இலையில் படைப்பார்கள்.
பொங்கலுக்கான அடுப்புக்கட்டிகள் புதிதாகச் செய்யப் பட்டிருக்கும். அப்படியே புதிதில்லாவிட்டாலும் பழைய கட்டிகளுக்கு புதிதாக வெள்ளையடித்து காவிக் கோடிட்டுப் புனிதத்தோற்றத்துடனிருக்கும். சிலர் செங்கோட்டை ஒற்றையடுப்புகளும் பயன்படுத்துவதுண்டு. எங்கள் வீட்டில் அடுப்புக்கட்டிகள் தான்.
பானைகளுக்குத் திருநீறு குழைத்து பட்டையிட்டு குங்குமப் பொட்டு இ்டுவார்கள். விளக்குக்குத் தேங்காய் உடைக்கும் போதே தண்ணீரைத் தனியே எடுத்து வைத்திருப்பார்கள். நிறைகுடத்திலிருந்து தண்ணீர் எடுத்து வெண்கலப்பானையில் தேங்காய்த் தண்ணீருடன் சேர்த்து ஊற்றி பானையை அடுப்பில் ஏற்றுவார்கள். சர்க்கரைப் பொங்கலுக்கான பித்தளைப் பானையில் அரிசியோடு பாசிப்பருப்பும் இட்டு அடுத்த அடுப்பில் ஏற்றுவார்கள். பானைகளில் பச்சரிசி களைந்து போட்டு பனை ஓலையில் தீ போடவேண்டும். எரிய எரிய பனை ஓலையை அடுப்பில் வைக்கும் வேலை எனக்கு. அடுப்பின் பிழம்புகளில் வெளிப்படும் வெப்பம் குளிருக்கு இதமாகவும் இருக்கும். சிறிது நேரத்தில் பால் பொங்கும். அம்மாவும் ஆச்சியும் குலவையிடுவார்கள். பால் பொங்கிய பின் விறகுத்தீதான் நிதானமாக எரியவேண்டும். சர்க்கரைப் பொங்கல் பானையில் சர்க்கரை சேர்ப்பார்கள். பாலும் நெய்யும் சேர்ப்பதுண்டு.
பொங்கல் தயாராவதற்குள் ஊறவைத்த பச்சரிசி, பாசிப்பருப்பில் வெல்லம், தேங்காய் சேர்த்து காப்பரிசி கலந்து விளக்கு முன் படைப்பார்கள். பொங்கல் தயாரானதும் இறக்கி மஞ்சள் குலை கட்டி விளக்கு முன் வைப்பார்கள்.
பின் படையல் தயாரிக்க வேண்டும். வாழை இலையில் ஒரு அகப்பை பொங்கல், ஒரு அகப்பை சர்க்கரைப் பொங்கல், பழத்தை உரித்து ஒரு துண்டு, தேங்காய் துருவலில் சிறிது வைப்பார்கள். அது போல ஐந்து படையல்கள் செய்வார்கள். அத்தோடு விளக்குக்கு பூஜை. கற்பூர தீபம், சாம்பிராணி அனைத்தும் விளக்கு முன்பும் காட்டிப் பின் சூரியனை நோக்கியும் காட்டுவார்கள். ஆச்சி குலதெய்வமான சுடலைமாடனைக் கூப்பிடுவாள். அத்துடன் பூஜை முடிந்தது. ஒவ்வொருவராக வந்து சாமி கும்பிட்டு திருநீறு பூசிக்கொள்ளவேண்டும். ஆச்சி `என் குடும்பத்தை நல்லபடியா வையப்பா, சுடலை மாடா, இந்த வருசமும் வழக்கம் போல உன் ஊருக்கு வந்து பொங்கலிடுகன்` என்று சொல்லிக் கும்பிடுவாள்.
அடுத்து படையலில் ஒன்றை எடுத்து காக்காய்க்கு வைத்து அழைப்பார்கள். அது உடனேயே வந்துவிடும். இன்னொரு படையலைக் கொண்டு போய் தொழுவில் மாட்டுக்குக் கொடுப்பார்கள்.
காப்பரிசி, படையலில் மிச்சமிருப்பதை எங்களுக்குத் தருவார்கள். அடுத்தாற்போல் காலைச் சாப்பாட்டுக்காக அம்மா சிறுபயற்றம்பருப்புத் துவையலும் தேங்காய்த் துவையலும் அம்மியில் அரைப்பார்கள். வெண்பொங்கல் சோற்றில் முதலில் சிறுபயிற்றம்பருப்புத் துவையல் போட்டு கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட வேண்டும். அடுத்து தேங்காய்த் துவையலைப் போட்டு விரவி நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிடவேண்டும். அடுத்து சர்க்கரைப் பொங்கல். அவ்வளவுதான். பொங்கல் முடிந்த து.
அன்று மதியத்துக்கு எல்லாக் காய்கறிகளும் போட்டு சாம்பார் வைப்பார்கள். கூடவே கூட்டவியல். அப்பளம்.
சாம்பாரும் அவியலும் நிச்சயமாக மிஞ்சும். மிஞ்சியதை ஒன்றாக்கி அடுப்பில் ஏற்றிச் சுண்டக்கறியாக்கிவிடுவார்கள். அது கிடக்கும் நான்கு நாட்களுக்கு.
இந்தப் பொங்கலுக்கு மகன், மருமகள், பேரன், மகள், மருமகன் பேத்தி எல்லோரும் வந்திருக்கிறார்கள். இனிமையான பொங்கல்.
மதியத்துக்கு சாம்பார், அவியல், ஊரிலிருந்து கொண்டுவந்த மரச்சீனிக்கிழங்கு அப்பளம், வற்றல்.
அம்மாவும் அப்பாவும் தான் இல்லை. அவர்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கிறார்களே.
முகநூல் பதிவு 14 .01.2018   விருப்பம் 193 பகிர்வு 6 

No comments:

Post a Comment