Thursday 26 January 2017

நினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் - 4 - அவன் காட்டை வென்றான்.

நினைவை விட்டு நீங்காத கதை மாந்தர் – 4
இன்றைய (2.1.2017) தமிழ் இந்துவில் `அவன் காட்டை வென்றான்` தெலுங்கு நாவலின் தமிழாக்கத்தினை வாசித்த அனுபவத்தை தோப்பில் மீரான் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
தீண்டாத வசந்தம், ஸ்பார்ட்டகஸ் போன்ற முக்கியப் படைப்புகளைத் தமிழுக்குக் கொணர்ந்த ஏ.ஜி. எத்திராஜுலு அவர்களின் மொழிபெயர்ப்பில் அந்த நாவலை ஒரே மூச்சில் படித்த நினைவு மீண்டும் எழுகிறது.
முதல் நாளில் கள் மட்டுமே குடித்து வயிற்றை நிரப்பியிருந்த அவன் காலையில் எழுந்ததும் தான் கவனித்தான், அவனது பன்றிகளில் சினைப் பன்றி ஒன்றினைக் காணவில்லை. பன்றிகள் குட்டி ஈனும் பருவத்தில் வசதியான, பாதுகாப்பான இடம் தேடி பக்கத்துக் காட்டுக்குள் சென்றுவிடுவது அவனுக்குத் தெரியும். அப்படிச் செல்லும் பன்றி, காட்டுக்குள் பகை மிருகங்களின் தாக்குதலில், அவற்றுக்கு இரையாகிவிடுகிற, அல்லது வேற்று மனிதர்களால் வேட்டையாடப்பட்டுவிடும் அபாயமும் உண்டு. அதனாலேயே, அவன் பன்றியைத் தேடிக் காட்டுக்குள் செல்கிறான். எங்கு தேடியும் பன்றி அவன் கண்ணுக்குத் தட்டுப்படவேயில்லை.
அவன் அலைகின்ற, அடர்ந்த காடு, அவற்றின் மிருகங்கள், பெரும் வெறி கொண்டு பள்ளங்களில் குதித்துச் சாகும் எருமையினங்கள் என அவனுக்குத் தெரிந்த, மற்றும் அவனது காட்டு அனுபவங்கள் அவனுக்குள் நினைவுகளாகச் சிந்தனைகளாகக் குமிழியிடுகின்றன. எங்கு தேடியும் அவனது பன்றி கிடைக்கவில்லை. இரவுப் பொழுது நெருங்குகிறது. வயிற்றுப் பசிக்காக முயல் ஒன்றைப் பிடித்துச் சுட்டுத் தின்றுவிட்டு, மீதியை மறுநாளுக்காகத் தலைமுண்டில் கட்டித் தோளில் தொங்கவிட்டுக் காட்டுக்குள் அலைகிறான். இரவெல்லாம் காட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறான்.
மறுநாள் ஒரு நீர்க்குட்டையில் பன்றிகளின் கழுத்தில் கட்டும் மணிக் கயிறு ஒன்று மிதப்பதைக் கண்டு, அது அவனது பன்றியுடையதோ எனப் பதறுகிறான். கோல் கொண்டு பலவாறு முயன்று அந்தக் கயிற்றை இழுத்துப் பார்த்தபோதுதான் அது வேறு பன்றியுடையதென்று தெரிந்து ஆசுவாசம் கொள்கிறான்.
மூன்றாம் நாள் காலையில் ஒரு புதர் மறைவில் அவனது பன்றியைக் கண்டுவிடுகிறான். அருகிருந்த மரத்தின் மீது ஏறிப் பார்க்கிறான்; குட்டிகளை ஈன்றிருக்கிறது. அவனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எந்த மனிதனும் அல்லது எந்த உயிரும் குட்டிகளின் அருகில் செல்வதை பன்றிகள் விரும்புவதில்லை; மூர்க்கமாகத் தாக்கும் என்பது அவனுக்குத் தெரியும். தாயையும் குட்டிகளையும் வீட்டுக்கு எப்படிக் கொண்டுசெல்வதென்ற ஒரே திகைப்பு தான் அவனுக்குள்.
மரத்திலிருந்து சுற்றிலும் கவனித்தபோதுதான் புதர் மறைவுகளில் ஆங்காங்கே நெருப்புக் கண்களைக் காண்கிறான். ஆம். குட்டிகளைக் கவருவதற்காக எண்ணற்ற நாய், நரிகள் காத்துக் கிடக்கின்றன. திடீரெனத் தன் கையிலிருந்த ஈட்டியை எறிகிறான். தாய்ப்பன்றி பெரும் ஓலத்துடன் வீழ்ந்தது. அங்கேயே கொடிகளால் கூடை ஒன்றை முடைந்து, செடிகொடிகளைப் பறித்துப் போட்டு மெத்தையாக்கி அத்தனை குட்டிகளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி விரைகிறான்.
இக்கட்டான அந்தக் கணத்தில் முடிவெடுக்கும் திறம் இருக்கிறது, பாருங்கள், எதைத் தேடி வந்தானோ, ஆசையோடும் அன்போடும் வளர்த்தானோ, அந்த உயிரையே கொல்லும் முடிவெடுக்கிறானே, அந்தச் சந்தர்ப்பம், எப்படியும் தாயும் குட்டிகளும் நாய் நரிகளிடமிருந்து தப்பிக்கப்போவதில்லை. குட்டிகளையாவது காப்பாற்றும் வாய்ப்பிருப்பதை உணர்ந்து தாயை அவனே கொன்று குட்டிகளைக் காப்பாற்றிக் கொண்டு ஓடுகிறான். இந்த இடம் எனக்கு Decision Making, Options எனப் பல நிர்வாகச் சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது.
கதை மீண்டும் தொடர்ந்தது. பருந்துகள் அவனது குட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கிச்சென்று விடுகின்றன. அவன் வீட்டுக்குப் போய்க் கூடையைக் கீழே இறக்கும்போது உயிருள்ள குட்டிகள் எதுவும் அதில்   இல்லையென நாவல் முடிந்ததாக நினைவு.
அந்தக் குட்டிகள் காப்பாற்றப்பட்டுவிட்டதான சித்திரத்தை எனக்குள் நானே புனைந்துகொண்டிருக்கிறேன். .

No comments:

Post a Comment