Thursday 26 January 2017

சங்க இலக்கியத் துளிகள் - 7 Glimpses of Sangam Poetry

மா வாராதே; மா வாராதே;
எல்லார் மாவும் வந்தன; எம் இல்,
புல் உளைக் குடுமிப் புதல்வர்த் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே -
இருபேர் யாற்ற ஒரு பெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே?
- எருமை வெளியனார், புறநானூறு 273 ஆம் பாடல்
பொருள் : குதிரை வரவில்லையே! குதிரை வரவில்லையே! எல்லோர் குதிரைகளும் வந்துவிட்டனவே! குதிரைக் குடுமி போன்ற குடுமியுடைய என் புதல்வனை எனக்குத் தந்த அவன் தந்தை ஏறிச்சென்ற குதிரை இன்னும் வரவில்லையே! இரண்டு பெரிய ஆறுகள் கூடும் ஒரு பெரிய சங்கமத்தைக் குறுக்கே நின்று தடுக்கும் பெரிய மரம் சாய்ந்து வீழ்ந்தாற்போல அவனைச் சுமந்துசென்ற போர்க்குதிரையும் வீழ்ந்துவிட்டதோ?
போருக்குச் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை; அவன் குதிரையாவது வீடு வந்து சேருமே, அதுவும் வரவில்லையே, ஒரு வேளை அது போரில் வீழ்ந்து மடிந்திருக்குமோ என்று அரற்றி, அலைப்புறும் பெண்மனம் நம் நெஞ்சில் படிகிறது. கூடவே அந்தக் குதிரையின் உருவம்! அந்த வீரன் என்னவானானோ என நாம் தடுமாறுகிறோம்.
குதிரையின் மறம் பாடும் இப்பாடல் அதில் ஏறிச்சென்ற வீரனையும் நினைக்கச்செய்கிறது.

No comments:

Post a Comment