Thursday 26 January 2017

அயர்லாந்து சிறுகதை - கடிதம் - LETTER - By EVELYN CONLON

கடிதம் ( Letter ) ஆங்கிலம் – ஈவ்லின் கான்லான், அயர்லாந்து Evelyn Conlon – தமிழில் ச. ஆறுமுகம்.

download-10
                                                           ஈவ்லின் கான்லான்
ஈவ்லின் கான்லான்: ஐரிஷ் நாவல்கள் மற்றும் சிறுகதை படைப்பாளரான இவர் டப்ளினில் வசிக்கிறார். நான்கு நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுதிகளும் வெளியாகியுள்ளன. இவரது கதைகள் இத்தாலி, பிரெஞ்சு மற்றும் தமிழிலும் வெளியாகியுள்ளதாக http://evelynconlon.com/ வலைப்பக்கத்தில் குறிப்பு உள்ளது.
ஐரிஷ் பெண்மணியான ஹானரபிள் வயலெட் கிப்சன், அவரது ஐம்பதாவது வயதில் ஏப்ரல் 7, 1926 அன்று ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சுட்டுவிட்டு, தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் இருவரும் பிழைத்துக்கொண்டனர். மனநோயர் பட்டம் கட்டப்பட்ட வயலெட் இங்கிலாந்தில் நார்த்தாம்ப்டன் மனநோயர் காப்பகத்தில் மீதி வாழ்க்கையைக் கழித்து, 2, மே, 1956 இல் இறந்து போனார். அவரது இறுதி ஊர்வலத்தில் காப்பகத்தினர் மட்டுமே இருந்தனர். வேறு எவருமே கலந்துகொள்ளவில்லையென்ற செய்தியினை `முசோலினியைச் சுட்ட பெண் என்ற வாழ்க்கை வரலாற்று நூலில் ஃபிரான்சஸ் ஸடோனார் சான்டர்ஸ் பதிவு செய்துள்ளார். வயலெட் மட்டும் முசோலினியைச் சுட்டுக் கொல்லும் முயற்சியில் வெற்றிபெற்றிருந்தால் ஐரோப்பாவின் வரலாற்றை, ஏன் உலக வரலாற்றையே மாற்றியவராகப் புகழ்பெற்றிருப்பார். இது தொடர்பான நிகழ்வுகள் அடிப்படையில் புனைகதையாக ஈவ்லின் படைத்துள்ள `கடிதம்` என்ற கதை தற்போது தமிழாக்கம் செய்யப்படுகிறது.
_____________________________________________________________________________________
அன்புள்ள உனக்கு,
நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேனே, தற்போது, கடந்த முப்பது ஆண்டுகளாக நார்த்தாம்ப்டன் மனநோயர் காப்பகத்துக்குள் வலுக்கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் நான், தோட்டக்காரர் மூலமாக, இதனை எழுதுகிறேன் இது, 1950 இன் முற்பகுதி தானே, ஆம், 1927 லிருந்து நான் இங்கிருக்கிறேன். என்னை முசோலினியைச் சுட்டுக்கொன்ற ஐரிஷ் பெண் எனச் சொல்கிறார்கள்; ஏனென்றால், அது, நான்தான். அதே செயலுக்காக, ஆயிரக்கணக்கில், மேலும் ஆயிரமாயிரமாக, எத்தனையோ பேர் மரணத்தைச் சந்திக்க அனுப்பப்பட்டிருந்தாலும், அதை நிறைவேற்றிய நான் ஒரு பைத்தியமென்று இப்போதும் சொல்கிறார்கள். தொடக்கத்திலேயே அந்தச் சரியான செயலைச் செய்து முடித்ததே எனக்குப் பெருஞ்சுமையாக அமைந்திருக்கிறது.
தொடக்கத்தின் அருகிருந்தே நான் தொடங்குகிறேனே, ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கோ அல்லது மேற்கொள்ளாமலிருக்கவோ, நமது தொடக்கத்தின் எந்தத் துளிக்கூறுகள் நம்மைத் தூண்டின என்பதை அறிவது கடினமென்றபோதிலும், பெரும்பான்மை மக்கள் விஷயத்தில் எப்படியோ, அப்படியே, எந்தத் துளிக்கூறுகள் நம்மை, வெளியில் தெரிகிற பரந்த உலகத்தின் ஒரு பகுதியாக்குகின்றனவோ, பெரும்பாலும் அதே கூறுகள் தாம் உடன்பிறப்புகளை அவர்களுக்குள் ஒன்றுசேர வைப்பதும் அவர்களின் சிறுமதிக் கூடாரத்துக்குள் பின்வாங்கச் செய்வதும்
நான் ஒன்பது வயதாக இருந்தபோது, என் தந்தை அயர்லாந்தின் அதிபராக்கப்பட்டார். அதைப்பற்றிய பேச்சுக்கள் அனைத்தையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். வண்டிகள் இழுபடும் கடகடப்பொலி, இரவிலும் கூட குதிரைகள் வெளியே இழுக்கப்படும் முடிவில்லாத சப்தங்களும் என் நினைவிலெழுகின்றன. அப்போது வீட்டில் பையன்கள் தாம் அதிக முக்கியத்துவம் பெற்றார்கள் என்பதோடு நாங்கள் செய்ததைவிடவும்கூடக் குறைவாகவே சிறுமிகளிடம் எதிர்பார்க்கப்பட்டதென, ஆனால் ஏகப்பட்ட ஆடை அணிகளுடன் அழகுபடுத்தப்பட்டதாக நினைக்கிறேன்; நானொன்றும் தேவைக்கதிகமான முக்கியத்துவத்தை அதற்கு அளிக்கவில்லையென்றாலும், வேறெதுவும் செய்யத் தோன்றாமல் அதன் போக்கிலேயே போனேன். வீட்டிலேயே நாங்கள் பள்ளிப் பாடங்களைக் கற்றோம். என் அண்ணன், தம்பிகள் போரில், தேவைப்பட்டால் ஆங்கிலம் பேசப்படாத பகுதியிலும்கூட, சண்டையிடுவதற்காக அவர்களுக்காகவே கற்றுக்கொடுக்கப்பட்ட மொழிகளைக் குறிப்பாக நான் விரும்பினேன். பௌலான்-சர்-மெர் நகரில் தங்கியிருந்த காலம் முழுவதும் பட்டைதீட்டப்பட்ட என்னுடைய பிரெஞ்சு இப்போதும் மேலானதாக இருக்க, என்னுடைய இத்தாலியனோ, அது ஒரு காதலாகவே இருக்கிறது. இப்போதும், இத்தாலியர்களே மிகச் சிறந்த கவிதைகளைக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில புத்தகங்களும் இருப்பதை நான் கண்டுபிடிக்கும் வரையில் – அவற்றில் சில வில்லீயிடம் கிடைத்தவை – எதைப்படிக்கச் சொன்னார்களோ, அதையே நாங்கள் படித்தோம். வில்லீ, ஹார்ரி, எல்சீ, எட்வர்டு, விக்டர், ஃபிரான்சஸ், கான்ஸ்டன்ஸ் என்ற என்னுடைய ஏழு உடன்பிறப்புக்களில், இப்போது மூன்று பேர் மீது மட்டுமே உண்மையிலேயே எனக்கு அக்கறை என்பதையும் அது இப்போது மிக மோசமாகாமலுள்ளது என்பதையும் நான் உங்களிடம் சொல்லித்தானாக வேண்டும். நான் அக்கறை கொண்ட மூவரில் இரண்டு பேர் இப்போது இறந்துவிட்டனர்.
என்னுடைய வளர்ப்பு விவரத்துக்குத் திரும்பவும் வருவதென்றால், என்னுடைய வாசிப்புக்கு அப்பாலும், என்னால் முடிகின்ற அளவுக்குச் சிறப்பாகவே, அநேகமாகப் பொருத்தமாகவே செய்தேன். பெண்கள் வாக்களிப்பு குறித்த உரையாடலை, எப்போதாவது – அதுபற்றிய குறிப்புகளை நான் வாசித்த சிலவேளைகளில் – நான் தொடங்குவதுதான்; அது ஒருவேளை எப்போதாவது நிகழ்வுக்கு வந்தால், அதனை எப்படிச் செயல்படுத்த வேண்டுமென்பதை எங்களுக்குச் சொல்கின்ற விருப்பம் அவருக்குள் தோன்றுவதை என் தந்தை அறிந்திருந்தார்தான். நான் அதைப்பற்றிக் குறிப்பிட்ட போதெல்லாம், தூக்கிவாரிப் போட்டது மாதிரியாக என்னைப் பார்ப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். `நடந்ததெல்லாம் போதும்` எனச் சொல்லும்போதும், அவர், அதே பார்வையைப் பார்த்தார். அந்த வார்த்தைகளில் நான் கடுமையை உணர்ந்தேன். அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின் அந்த நாள் வந்தபோது, நான் எனது சகோதரியிடம் ஒருமுறையாவது மார்க்கச்சையினை அணியாமலிருக்குமாறு கூறியது என் நினைவுக்கு வருகிறது. “ எதோ, சுவர்க்கத்தின் புண்ணியத்தில் வாக்களிக்கப் போகிறோம்` என அவளிடம் நான் கூறிய போது, வழக்கமாக அப்பா எப்படிப் பார்ப்பாரோ, அதே போன்று அவளும் என்னைப் பார்த்தாள்.
ரோம் நகரத்தின் அழகுக்கு மாறாக, அதன் ஓவியங்கள், காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டு, நீலவானம் நோக்கிப் பென்சில் போல ஒல்லியாக எழுந்தோங்கும் மரங்கள், தாராளமாகப் பரந்து விரிந்த நிழற்சாலைகள், ஒளிமிகுந்த கதிர் மறையும் காட்சிகளுக்கெல்லாம் மாறாகச் சீழ்பிடித்த அவலமொன்று அந்த மனிதன் முசோலினி மற்றும் அவனது தொண்டர்களினால் பெருங்கேட்டு நச்சாகிக்கொண்டிருந்தது. அவன் ஆட்சி அதிகாரத்தைத் தன்னகங்காரப் பிடிக்குள் அழுத்தி, இத்தாலியை அழித்துக்கொண்டிருந்தான். வரைபடத்தை அதன் முழு அளவுக்கு விரித்துப பிரச்சினைகளை அதன் அடிவேர் வரை ஆராய்ந்த எங்களைப் போன்றவர்களால் அதைத் தெரிந்துகொள்ளமுடிந்தது. கண்முன் தெரிகிற கொடுங்கோலன் மற்றும் அவனது தொண்டர்களின் செய்கைகள், வன்முறைகளாகவும் பெருந்தீமையாகவும் மாறவே, நான் செயலில் இறங்கத் தீர்மானித்தேன். சில நேரங்களில் அறிவார்ந்த தேர்வான செயலில் இறங்குவதொன்றைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லையெனத் தெரிந்துகொள்ளப் போதுமான ஒரு வயதில் நான் அப்போதிருந்தேன். என்னுடைய விதியையும் முசோலினியின் விதியையும் நேருக்கு நேராக, ஒரே மூச்சுக் காற்றில் நிறுத்துவதற்காக என்னை நானே தயார்படுத்திக்கொண்டேன்.
நான் முசோலினியைச் சுட்டுக்கொன்றபோது, என் வயது ஐம்பது; அதைச் செய்வதற்கு அது ஒரு நல்ல வயது என்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான், என் குடும்பத்தை நிலைகுலையச் செய்ய உண்மையிலேயே விரும்பியிருக்கவில்லையானாலும், என் குடும்பத்தை மகிழ்ச்சியில் வைத்திருக்கவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக, நான் அதைச் செய்யாமலுமிருக்க முடியாது.
ஒப்பம், வயலெட் கிப்சன்.
Source:
http://www.theletterspage.ac.uk/documents/archive/individual-letters-archive/evelyn-conlon-letter.pdf  


No comments:

Post a Comment