Thursday 8 March 2018

பேரகத்தி

பேரகத்தி
ஒருமுறை எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு தலையில் சொட்டை சொட்டையாக இரண்டு மூன்று இடங்களில் முடிகொட்டிவிட்டது. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த அவரை நண்பர் ஒருவர் சித்த மருத்துவர் ஒருவரிடம் அனுப்பினார். அவரோ மிக எளிதாக உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அகத்தி இலை போலவே வளர்ந்து கிடக்கும் பேரகத்தி இலையில் நான்கைந்தினை உப்போடு சேர்த்துக் கசக்கி அப்படியே சொட்டையில் தேய்த்துவிட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள் பார்க்கலாமென்றார். பேரகத்தி இலையை உப்போடு சேர்த்து சொட்டையில் தேய்க்க மூன்றாவது நாளே முடி முளைக்கத் தொடங்கியது. மீண்டும் அந்த மருத்துவரைப் பாரக்கப்போகவில்லை. மிகப் பெரிய மன உளைச்சல் பைசா செலவில்லாமல் தீர்ந்து முடிந்தது. அதன் பிறகு முடி கொட்டுவதும் நின்று விட்டது.
அந்த மருத்துவர் சொன்ன பிறகுதான் இதன் பெயர் பேரகத்தி எனத் தெரிய வந்தது. அது வரையிலும் ஏதோ காட்டுச் செடி என்றுதான் நினைத்திருந்தேன். உங்கள் பகுதியிலும் இந்தப் பேரகத்தி செழித்து வளரலாம்.
அகத்தி போலிருப்பதால் பேரகத்தி எனப் பெயரிட்டிருக்கிறார்கள் போலும். இது மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இங்கு வந்த்தென்பதால் சீமையகத்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இதைப் போல் சிற்றகத்தி என்ற ஒரு மரத்தைச் சில வீடுகளில் வளர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். அதன் பூக்கள் கருநீலத்திலிருக்கும். அந்தப் பூக்களை தலைக்குத் தேய்க்கும் தேங்காயெண்ணெய்க்குள் போட்டு வைத்திருப்பார்கள்.
சிற்றகத்தி இலைகளைப் பறித்து, உரலில் இட்டுச் சாறு பிழிந்து, அந்தச் சாற்றை தேங்காயெண்ணெஞோடு சேர்த்து காய்ச்சி, தினமும் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயாகப் பயன்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன்.
சாதாரணமாக நாம் சமையலுக்குப் பயன்படுத்துவதும் மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவதும் தனி வகை.

இது தவிர மணிலா அகத்தி என்றொரு பசுந்தாள் உர வகையும் இருக்கிறது. 

(முகநூல் பதிவு 21.02.2018) விருப்பம் - 131, பகிர்வு 110 பின்னூட்டம் 32.

No comments:

Post a Comment