Thursday 17 November 2016

சங்க இலக்கியத் துளிகள் - 1 Glimpses of Sangam Poetry - 1

சங்க இலக்கியத் துளிகள் - 1 Glimpses of Sangam Poetry - 1

கோயில் மலர்களினும் நன்றாம் கானம்; பிடிமிடை களிற்றின் தோன்றும் குன்றம்
                                                          ------******.------------
வாள்வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணியவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர்வீஅம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
கண்டிசின் வாழியோ - குறுமகள்! - நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை, களிற்றின் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே!
- பாலை பாடிய பெருங்கடுங்கோ
அகநானூறு பாடல் எண் 99.
தலைவியைத் தமர் அறியாமல் உடன்போக்கில் அழைத்துச் செல்லும் தலைவன் தலைவிக்குச் சுட்டிக் காட்டும் காட்சிகளைக் கூறும் இப்பாடலின் சுருக்கம் :
அழகிய பெண்ணே, நீ, வாழ்வாயாக!
முள்முருங்கையின் சிவப்பு மலர்களோடு, கோங்கின் மஞ்சள் மலர்களும் காட்டுமல்லியின் வெள்ளைப் பூக்களும், பாதிரி உதிர்த்த மலர்களும் வெ்ண்கடம்பின் பூக்களும் சிதறிப் பரந்து கிடக்கும் கானம், தெய்வம் வழிபடப்படுகின்ற கோயிலில் மணக்கும் பூக்களைவிட நன்றாக உள்ளது; விரும்பத்தக்கதாகவும் இருப்பதைக் காண்பாயாக;
குறுமகளே, உன் தந்தையின் போர்க்களத்தில் பாய்ந்து, பாய்ந்து, தந்தங்கள் சிதைந்த களிறு பெண்யானைகள் சூழ நிற்பது போல் தோன்றுகின்ற குன்றமும் உள்ளதே! அதையும் நீ காண்பாயாக!
மலர்களைச் சிறப்பித்து, இக்கவிதை கூறும் உவம உவமேயங்கள் புகைப்படங்களில் குறிப்புகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இப்பாடலின் சிறப்பு அதன் உளவியல் கூறுதான்!
காதலி குடும்பத்தை விட்டுப் பிரிந்து காதலனுடன் வந்துவிடுகிறாள். அவளது பதற்றத்தைத் தணிக்கும் வகையில் காட்சிகள் மிக அருமையாகச் சுட்டப்படுவது சிறப்பானது.
காட்டுமலர்கள் பற்பல வண்ணங்களில் சிதறிக்கிடப்பது இயற்கை; காதலன் அவற்றிலிருந்து வதங்கிய சிவப்பு, மஞ்சள், வெண்மை எனப் பதற்றத்தைத் தணிப்பதும் உற்சாகமூட்டுவதான வண்ண மலர்களைத் தேர்ந்து சுட்டிக்காட்டுகிறான். அதனுடன் கோயிலையும் தெய்வத்தையும் கூறுவதுடன் கோயில் மலர்களின் மணத்தைவிடவும் காடு சிறந்திருப்பதைக் கூறும்போது அல்லல்படும் மனம் அமைதி கொள்வதும் எண்ணங்களும் நினைவுகளும் வேறுபுறமாகத் திரும்புவதும் இயல்பு.
அடுத்து குன்றம் யானைகளைப் போல் தோன்றுவதாகக் கூறுவதோடு, அதிலும் காதலியின் தந்தையின் பெருமை வெளிப்படும் விதமாக அவரது போர்யானை, பிடிகள் சூழ இருப்பதுபோல என விதந்து கூறும் போது, பெண்ணுக்கு அவளது தந்தை மதித்துப் போற்றப்படுதலைக் கேட்பதாகிறது. அவளது துயரம் மறைந்து மகிழ்ச்சி அரும்புவது திண்ணம்.
உவமைகளிலும் உளவியல் கூறுகள் நிறைந்துள்ளன. பெண்ணின் மதர்த்த எழிலும் அவள் மாட்சிமை மிக்க அணிகளை அணிந்திருப்பதும் அவளது மார்புகளை கோங்கு மலருக்கு ஒப்பிடுவதும் எந்தப் பெண்ணுக்கு மகிழ்வினைத் தராது போய்விடும்.
குன்றுகள் வெள்ளை யானைகளைப் போல் தோற்றமளிப்பதாக எர்னஸ்ட் ஹெமிங்வேயின் Hills like White Elephants என்ற புகழ்பெற்ற கதையிலும் குறிப்பிடப்படுகிறது. அது மட்டுமல்ல; அவ்வாறு குறிப்பிடுவது மகிழ்ச்சிக்கான முனைப்பு என்றும் சுட்டப்படுகிறது.
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment