Saturday 5 November 2016

நினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் - 1

நினைவை விட்டு நீங்காத கதைமாந்தர் – 1

ருஷ்யப் படையில் டிரக் ஓட்டுநரான கதைசொல்லியும்  போர்க்கைதியாக மாட்டிக்கொண்ட ருஷ்யப் படைவீரர் அணி ஒன்றினை ஜெர்மானியத் துப்பாக்கிப் படையினர் ஆடுமாடுகளைப் போல் அடித்துத் தங்கள் நாட்டுக்கு ஓட்டிச்செல்கின்றனர். நடக்க முடியாமல் விழுந்தாலோ, தப்பி ஓட முயன்றாலோ உடனேயே சுட்டுக் கொல்கின்றனர். மழை வேறு கொட்டுகிறது. கைதிகள் அனைவரும் தொப்பலாக நனைந்துவிடுகிறார்கள். இரவாகிறது. வழியில் ஒரு சிற்றூர் எதிர்ப்படுகிறது. குண்டுகள் விழுந்து கோபுரம் தகர்ந்த மாதா கோயில் ஒன்றில் கைதிகளை அடைத்துக் கதவை வெளிப்புறமாகத் தாளிட்டுக் காவல் காக்கிறார்கள். இருட்டுக்குள் அகப்பட்ட கிடை ஆடுகளாகக் கைதிகள் நடுங்கும் குளிரில் விரிப்பு ஏதுமில்லாத கல் தளத்தில் கைதிகள் படுத்த நிலையிலும் சிலர் உட்கார்ந்த நிலையிலுமாக உழன்றுகொண்டிருக்கிறார்கள்.
நள்ளிரவில் கதைசொல்லியின் கையைத் தொட்டு, ”காயம் பட்டிருக்கிறதா, தோழா?” எனக் கேட்கிறான், ஒருவன். எதற்காகக் கேட்கிறாய்?” என எதிர்க் கேள்வி கேட்கிறான் கதைசொல்லி.
“நான் ஒரு மருத்துவன். ஏதாவது ஒரு வகையில் உனக்கு உதவக்கூடும்.”
“இடது தோள் வீங்கிப்போய் விண்விண் என்கிறது; வலி உயிர் போகிறது.”
“மேல்சட்டை, உள் சட்டை இரண்டையும் கழற்று.” என்கிறான் மருத்துவன்.
மெல்லிய விரல்களால் கதைசொல்லியின் தோளைத் தடவிப்பார்க்கத் தொடங்குகிறான், மருத்துவன். கதைசொல்லிக்கு வலி உயிர்போகுமளவுக்கு அதிகமாகிறது. “ ஏய், நீயெல்லாம் ஒரு டாக்டராடா, மாட்டு வைத்தியனாகத் தான் இருப்பாய், வலிக்கிற தோளைப்போட்டு இந்த அழுத்து, அழுத்துகிறாயே, பாவி” எனக் கடுகடுக்கிறான். தோள்ப்பட்டையில் நெருடிக்கொண்டேயிருந்த மருத்துவன், “ பல்லைக் கடித்துக்கொள், ஒரு டாக்டரிடம் இப்படியா பேசுவாய்? கொஞ்சம் பொறுத்துக்கொள், இப்போது இன்னும் அதிகமாக வலிக்கும் பார்,” என்று பேச்சுக்கொடுத்துக்கொண்டே கையைச் சுண்டி இழுக்கிறான். கதைசொல்லியின் கண்களில் பொறி பறந்தது; ஒரு கணம் நினைவு மயங்கித் தெளிந்ததும், ”பாசிஸ்ட் தேவடியா மகனே, கணுக்கணுவாய் வலிக்கிற கையைப் போய் இப்படி வெட்டி இழுக்கிறாயே” எனச் சீறிவிழுகிறான், கதைசொல்லி.
மருத்துவன் களுக்கென்று சிரிப்பது கதைசொல்லிக்குக் கேட்கிறது.
“நான் இடது கையை வெட்டி இழுக்கும்போது, உன் வலக்கையால் என் கன்னத்தில் அறைந்து விடுவாயோ என்றுதான் நினைத்தேன், பரவாயில்லை, நீ ஒரு சாதுதான். உன் கை முறியவில்லை, தோள் மூட்டு பிசகிக் கழன்றிருந்தது, இப்போது சரிசெய்துவிட்டேன், இப்போது வலி குறைந்திருக்குமே,” என்கிறான்.
கதைசொல்லி நன்றிகூற, மருத்துவன் எதுவும் பேசாமல்,  நகர்ந்து செல்கிறான்.
“தோழர்கள் யாராவது காயம் பட்டிருக்கிறீர்களா? நான் ஒரு மருத்துவன், நான் என்னாலான உதவியைச் செய்யமுடியும் “ என ஒவ்வொருவரிடமாகச் சென்று மெல்லக் கேட்பது கதைசொல்லியின் காதுகளில் விழுகிறது.
மருத்துவரென்றால் இவரல்லவோ மருத்துவர்! போர்க்கைதியாகச் சிறைப்பட்டிருந்தபோதும் அந்த மையிருட்டில் பெரும்பணியாற்றிக் கொண்டிருந்த அந்த மருத்துவத் தோழன் கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக என் நினைவில் வந்து அவ்வப்போது நலம் விசாரித்துச் செல்கிறான்.
இந்த டாக்டர், நோபெல் விருதாளர் மிகயீல் ஷோலகவின் `அவன் விதி’ என்ற குறுநாவலில் ஒரு மீச்சிறு துணைப் பாத்திரம்.







மிகயீல் ஷோலகவ் நினைவுச்சின்னம்



மிகயீல் ஷோலகவ் 

No comments:

Post a Comment