Thursday 17 November 2016

சங்க இலக்கியத் துளிகள் - 3 Glimpses of Sangam Poetry

பருவமழை பொழியட்டும்; பட்டி பெருகட்டும்; வாழ்வு சிறக்கட்டும்;
பல்லோர் உவந்த உவகை எல்லோர் நெஞ்சிலும் பரவட்டும்.

நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி, 
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை,
 பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந்தற்றே -
-கபிலர்
அகநானூறு 42ம் பாடலில் 5-11 வரிகள்

பொருள் : கோடைகாலம் நீடித்து நின்ற பசுமையற்ற காலம்; மழையின்மையால் நாட்டில் வறுமை மிகுந்து, கலப்பைகள் யாவும் தொழிலற்று உறங்கிக் கிடந்தன; குன்றுகளைப் போல் தோற்றம் கொண்ட கரைகளை உடைய குளங்களில் வெயில் காய, வறட்சியுற்று, நீர்ப்பறவைகள் அங்கு தங்குதலை விட்டு வெளியேறிவிட்டன. அந்தக் குளங்கள் யாவும் நிறையுமாறு இரவெல்லாம் பெரும்பெயலென மழை பெய்து ஓய்ந்த வைகறைப் பொழுதில் நீர்நிரம்பிய குளங்களைக் கண்ட ஊரவர் உவந்த உவகை எல்லாம் எ்ன் நெஞ்சில் பெய்ததே!
படங்கள் ; எங்கள் கிராமத்து ஏரி மூன்றாவது படத்தில் காணப்படும் படகு உண்மையல்ல; photoshop.

No comments:

Post a Comment