Thursday 25 February 2016

சீன நாட்டுப்புறக்கதை - துறவியும் சீடனும் - Chinese Folktale - The monk and the student


சீன நாட்டுப்புறக்கதை Chinese Folktale
துறவியும் சீடனும் The monk and the student
தமிழில் ச. ஆறுமுகம்

ஒரு பள்ளிக்கூடத்தில் துறவி ஒருவர் ஆசிரியராக இருந்தார். ஏதாவது ஒரு தின்பண்டம் தின்றுவிட்டுப் பின் தூங்குவதையே அவர் அதிகமும் விரும்பினார். பாடம் நடத்துவதற்கு முன் ஒவ்வொரு முறையும், அவர் அசைய முடியாத அளவுக்குச் சாப்பிட்டார்.
பாடம் தொடங்கியதுமே அவர் தூங்கத் தொடங்கி, பாடவேளை முடிந்ததற்கான மணிச் சப்தம் கேட்கும்வரையிலும் தூங்கினார்.
கிராமத்து ஏழை ஒருவரின் மகனும் அந்தப் பள்ளியில் ஒரு மாணவராக இருந்தான். அவன் பெயர் லீ. ஒருமுறை லீ துறவியிடம் கேட்டான் :
-    அய்யா, எங்கள் பாடவேளைகள் எல்லாவற்றிலும் நீங்கள் ஏன் தூங்குகிறீர்களென்று நான் கேட்கலாமா?
-    நண்பரே – எந்தச் சங்கடமும் இல்லாமல் துறவி பதில் சொன்னார். – அது அப்படித் தோன்றுகிறது. அந்தக் கணங்களில் நான் புத்தரைச் சந்தித்து அவரது அறிவார்ந்த போதனைகளைக் கேட்கிறேன். அதனாலேயே நான் எவ்வளவு அதிகமாகத் தூங்க முடியுமோ அந்த அளவுக்குத் தூங்க முயற்சிக்கிறேன்.
ஒரு முறை லீ, நோய்ப்படுக்கையிலிருந்த அவனது அப்பாவை இரவு முழுவதும் கவனிக்கவேண்டியிருந்தது. அதனால் பள்ளியில் காலை வகுப்பிலேயே தூங்கிவிட்டான். பாடவேளை முடிந்த மணிச்சப்தம் துறவியை எழுப்பிவிட்டது. அந்தச் சத்தம் கேட்காதவனாக லீ தூங்கிக்கொண்டிருந்தான்.
தூங்கும் லீயைக் கண்டதும் துறவிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. லீயின் காதைப் பிடித்து முறுக்கி, கத்தத் தொடங்கினார்:
-    அற்ப மரநாயே! என் வகுப்பில் தூங்குவதற்கு உனக்கு எவ்வளவு துணிச்சல்?
-    அய்யா – என்ற லீ - அது அப்படித் தோன்றுகிறது. அந்தக் கணங்களில் நான் புத்தரைச் சந்தித்து அவரது அறிவார்ந்த போதனைகளைக் கேட்கிறேன்.
-    அனைத்து சக்தியும் மிக்க புத்தர் உன்னிடம் என்ன கூறினார்?

-    அனைத்து சக்தியும் மிக்க புத்தர் என்னிடம் கூறினார் : என் வாழ்க்கையில் ஒருபோதும் உன்னுடைய ஆசிரியரைச் சந்தித்ததேயில்லை.

http://www.worldoftales.com/Asian_folktales/Asian_Folktale_2.html

No comments:

Post a Comment