Sunday 3 January 2016

அமெரிக்கச் சிறுகதை - இன்னொன்று - Another by Dave Eggars

இன்னொன்று

அமெரிக்கச் சிறுகதை – டேவ் எக்கர்ஸ்               தமிழில் ச.ஆறுமுகம்

,









 செய்தி கொண்டு செல்லும் ஆளாக, நான் எகிப்துக்கு எளிதாகச் சென்றிருந்தேன். நான் எடுத்துச் சென்றிருந்த கட்டினை விமான நிலையத்தில் ஒரு இளைஞனிடம் ஒப்படைத்ததோடு என் பொறுப்பு முடிந்து முதல்நாள் மதியமே விட்டுவிடுதலையாகி விட்டேன். கெய்ரோவில் தங்குவதற்கு அது மோசமான நேரமாக இருந்தது; அந்தக் காலகட்டத்தில் அங்கிருப்பது புத்திசாலித்தனமல்ல; எங்கள் நாட்டுக்கும் அந்தப் பகுதி முழுவதற்குமே அரசாங்க உறவுகள் கெட்டிருந்தன; ஆனாலும் நான் அங்கு வந்ததற்குக் காரணம், என் வாழ்க்கையின் அந்தக் கட்டத்தில், அங்கே ஒரு சன்னல் திறப்பு மட்டுமே, அது எத்தனை சிறியதாக இருந்தாலும் எந்த அளவுக்கு அதைரியமளிப்பதாக இருந்தாலும் நான் வெளியே –
நான் வேலைகளைச் செய்துமுடிக்கத் தொந்தரவளிக்கும் நினைவுகளைக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் பெரும் மன உளைச்சல், மனத்தளர்ச்சி என்ற வார்த்தைகளே எனக்குப் பொருத்தமானவையாக இருந்தன. அதனால் வழக்கமாக நான் விரும்புகிறவற்றில்கூட விருப்பமற்றிருந்தேன். ஒரு கிண்ணம் பாலைக்கூட என்னால் பெரும் தயக்கமின்றி அருந்தி முடிக்க இயலவில்லை. இருந்தாலும் நான் சிந்திப்பதையோ பெருத்த சிரமத்துடன் முன்செல்வதையோ நிறுத்திவிடவில்லை. அதன் காரணகாரியங்களை ஆராய்வது ஒன்றும் சுவாரஸ்யமாக இருக்கப்போவதில்லை.
நான் இருமுறை திருமணம் செய்திருந்தேன். என் நண்பர்கள் மத்தியில் நான் நாற்பது வயது கடந்தவன்.
எனக்கென்று தனி விருப்பங்கள் இருந்தன. எனக்கென வெளியுறவுத்துறையில் முடித்துக் கொடுக்கும் பணிகள் இருந்தன. அதற்காக என்னிடம் பணியாளர்கள் இருந்தனர். இவையெல்லாம் முடிந்து பல வருடங்களுக்குப் பின்னால், மே மாதம் ஏதோ ஒரு நாளில் எங்கள் அரசின் அறிவுறுத்தலையும் மீறி இலேசான வயிற்றுப்போக்கும் தனிமையுமாக, நான் எகிப்தில் இருப்பதை உணர்ந்தேன்.
அங்கே எனக்குப் பழக்கமாகாத புதுவகை வெப்பம், மிகுந்த புழுக்கத்தோடு மூச்சுத் திணறச் செய்வதாகவும் இருந்தது. சின்சின்னாட்டி, ஹார்ட்ஃபோர்ட் போன்ற தணுப்பான இடங்களிலேயே நான் வசித்திருந்தேன். அங்கேதான் மக்கள் ஒருவருக்கொருவர் வருந்துபவர்களாக, வருத்தம் தெரிவிப்பவர்களாக இருப்பதை நான் உணர்ந்தேன். எகிப்திய வெம்மையைச் சமாளித்து உயிர்வாழ்வது புத்துணர்ச்சி தருவதாக இருந்தது. அந்த வெயில் வாழ்க்கை என் எடையைக்குறைத்து, பிளாட்டினம் போல் உறுதியானவனாக ஆக்கியது. ஒருசில நாட்களிலேயே பத்து பவுண்ட் எடை குறைந்துவிட்டேன்; ஆனாலும் நான் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன்.
ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் லக்சாரில் சில பயங்கரவாதிகள் எழுபது சுற்றுலாப்பயணிகளைக் கொன்றிருந்தனர். அதனாலேயே எல்லோரும்  நடுக்கத்திலிருந்தனர். நியூயார்க்கில் எம்பயர் கட்டிடத்தில் இளைஞன் ஒருவன் சுட்டதில் ஒருவர் இறந்திருக்க, ஒரு சில நாட்களிலேயே நான் அந்தக் கட்டிடத்தின் உச்சிக்குச் சென்றிருந்தேன். நான் ஒன்றும் சிக்கல்களைத் தேடி வேண்டுமென்றே பின் தொடர்ந்து கொண்டிருக்கவில்லை; அப்படியானால் நான் என்ன இழவுக்குத்தான் போய்க்கொண்டிருந்தேன் _
ஒரு செவ்வாய்க்கிழமையில் நான் பிரமிடுகளின் அருகாகக் கண்களைச் சுருக்கித் தூசிப்படலத்தை நேசித்துக் கொண்டு நடந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் இரண்டாவது கறுப்புக் கண்ணாடியையும் தொலைத்திருந்தேன். கீஸே பீடபூமியில் கூவித்திரியும் வியாபாரிகள், உலகத்திலிருக்கின்ற உண்மையிலேயே மிகக் குறைந்த கவர்ச்சியுள்ள கவர்ச்சிக்காரர்களில் சிலரான அவர்கள், சின்னச்சின்ன விளையாட்டுப் புனித வண்டுகள், சூஃபி சாவிக்கொத்துச் சங்கிலிகள், (சூஃபி, கூஃபு, சியோப்ஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு அரசர் அல்லது பார்ரோ எகிப்தை கி.மு.2589 – கி.மு.2566 வரை ஆண்டதாகவும் அவர் தான் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் கீஸா பிரமிடுகளைக் கட்டுவித்தவர் என்றும் நம்பப்படுகிறது. அவரது உருவம் பொறித்த சங்கிலிகள்), நெகிழிக் காலணிகள் என ஏதாவது ஒன்றை என் தலையில் கட்ட முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பத்துப் பன்னிரண்டு மொழிகளில் இருபது வார்த்தைகளாவது பேசினார்கள்; என்னிடம் ஜெர்மன், ஸ்பானிஷ். இத்தாலி மற்றும் ஆங்கிலத்தில் பேசமுயன்றனர். நான் வாய்பேசாப்பாசாங்கில், வேண்டாமென்றேன். அவர்களுக்கு ஃபின்னிஷ் மொழி தெரிந்திருக்காதென்ற நம்பிக்கையில் ‘பின்லாந்து’ எனச் சொல்லும் வழக்கத்தை, மேற்கொண்டேன்.   ஒருவன்  ‘குதிரை சவாரி போகலாமா’ என அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்கும்வரை அப்படித்தான் இருந்தேன். அவன் ‘ர்’ எழுத்தை அப்படியொரு ஆபாசமாகக் கொக்கி போட்டு இழுத்தான். உண்மையில் அவர்கள் புத்திசாலியான வேசைமகன்கள். நான் ஏற்கெனவே அதிகபட்சச் செலவில் ஒரு சிறிய ஒட்டகச்சவாரி செய்திருந்தேன். அது ஒன்றுக்கும் உதவாததாக இருந்தது. நிதானமான நடைக்கு மேலான வேகத்தில் நான் ஒருபோதும் குதிரையை ஓட்டியதில்லையென்றாலும், நான் உண்மையில் குதிரை சவாரியை அப்போது விரும்பவில்லை. ஆனாலும் அவனோடு நான் நடந்தேன்.
‘’ பாலைவனத்தின் ஊடாக’’ என்று அவன், ஸ்விஸ் நாட்டு முதியவர்களை இறக்கிக்கொண்டிருந்த ஒரு வெள்ளிநிறச் சுற்றுலாப் பேருந்தைக் கடந்து, எனக்கு வழிகாட்டினான். நான் அவனைத் தொடர்ந்தேன். ‘’ நாம் போய்க் குதிரையை எடுப்போம். நாம் சிவப்புப் பிரமிடுக்கு சவாரி போவோம்’’ என்றான், அவன். நான் அவனைத் தொடர்ந்தேன். கடைசியாக, நான் கேட்காத கேள்விக்குப் பதிலாக, ‘’ உங்கள் குதிரையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.’’ என்றான்.
அந்தச் சிவப்புப் பிரமிடு தற்போதுதான் மீண்டும் திறந்ததாக, அல்லது திறக்கப்படவிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அதை ஏன் சிவப்பு என அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. பாலையின் ஊடாகக் குதிரைச் சவாரி செய்ய நான் விரும்பினேன். இலேசான தவிட்டு நிறப் பற்களும் விரிந்த கண்களும் காவல் மீசையுமாக இருந்த அந்த ஆள் என்னைக் கொல்ல முயற்சிப்பானா என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும். என்னைக் கொல்ல விரும்பும் எகிப்தியர்கள் ஏகப்பட்டவர்கள் இருந்தார்கள். நான் சாகவேண்டுமென விரும்பிய யாருடனும் ஏதாவது ஒரு வழியில் இணைந்துகொள்ள நான் நிச்சயமாகத் தயாராக இருந்தேன். நான் தனியாக, அசட்டையாக, அதேநேரத்தில் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், ஆனால் சீக்கிரமே வெகுண்டெழுபவனாகவும் இருந்தேன். அப்போது நல்ல அழகிய நாட்களாக, நிகழ்பவை எல்லாமே மின்சாரம்போல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன. எகிப்தில் நான் பலராலும் கவனிக்கப்பட்டேன்; சிலர் ஊளையிட்டு உமிழ்ந்தார்கள்; மற்றவர்கள் அணைத்துக் கொண்டனர். ஒரு நாள், பாலத்தின் அடியில் வசிக்கும் நல்ல உடையணிந்த ஒருவர் எனக்கு இலவசமாக கரும்புச்சாறு தந்தார்; அமெரிக்க உறைவிடப் பள்ளி ஒன்றில் நான் ஆசிரியராக வேண்டுமென அவர் விரும்பினார். அவருக்கு என்னால் உதவ முடியாது. ஆனால் அது என்னால் நிச்சயமாக முடியுமென்று மக்கள் கூட்டம் நிறைந்த கெய்ரோவில், பழச்சாற்றுக் கடையின் முன்பு எல்லோரும் என்னை வெறுமையாக நோக்கிக் கொண்டிருக்கையில் என்னோடு உரக்கப்பேசிக்கொண்டிருந்தார். நான் அங்கே ஒரு நட்சத்திரமாக, வேற்று மதத்தினனாக, ஒரு பகை மனிதனாக, ஒரு பொருட்டாகக் கருதப்படாதவனாக இருந்தேன்.
கீஸேயில் அந்தக் குதிரைக்காரனுடன் – அவனிடம் எந்த வாடையுமில்லை – சுற்றுலாப் பயணிகள், பேருந்துகள், அனைத்துக்கும் அப்பால் பீடபூமியிலிருந்தும் இறங்கிக்கொண்டிருந்தேன். கடினப் பெரு மணல் மென்மணலாகியது. தரைக்கும் கீழே ஒரு குகையிலிருந்த ஒரு பழங்கால நபரைக் கடக்கும்போது, அவர் புகழ்பெற்ற நபரென்றும்,  அந்தக்குகையின் உரிமையாளரென்றும், அதனால் அவருக்கு `பகஷீஸ்` ஏதாவது தருமாறும் எனக்குச் சொல்லப்பட்டது. நான் அவருக்கு ஒரு டாலர் தந்தேன். குதிரைக்காரனும் நானும் தொடர்ந்து ஒரு மைல் தூரம் நடந்து பாலைவனம் ஒரு சாலையைச் சந்திக்கும் இடத்திற்கு வந்தபோது அவன் அவனுடைய கூட்டாளியை, அணிந்திருந்த நைந்துபோன சட்டையிலிருந்தும் வெடித்துவிடுவது போல் பருத்திருந்த அந்த மனிதனை அறிமுகப்படுத்தினான். அவனிடம் இரண்டு அரபுக் குதிரைகள் கறுப்பு நிறத்தில் இருந்தன.
அந்த இரண்டில் சிறிய குதிரை மீது நான் ஏறிக்கொள்ள அவர்கள் உதவி செய்தார்கள். அந்த மிருகம் எப்போதும் சுறுசுறுப்பாக ஆனால் அமைதியற்றிருந்தது. அதன் பிடரி மயிர் வியர்வையில் ஊறிச் சொதசொதவென்றிருந்தது. நான் அதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே, அதுவும் சாலையோர நான்காவது ஜூலைக் கண்காட்சியின் போது, பாதி போதையில் குதிரையிலேறி நடைபாதையைச் சுற்றி ஒரே ஒரு சுற்று மட்டும் நடந்திருக்கிறேன் என்ற விவரத்தை அவர்களுக்குச் சொல்லவில்லை. அப்போது நான் என்னை ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளராக எண்ணிக்கொண்டு அரிஜோனாவில் டைனோசர் எலும்புகளைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தேன். நான் ஏன் அப்படிச் செய்துகொண்டிருந்தேனென்று இப்போதும் எனக்குத் தெரியவில்லை.
‘’ஹிஷாம்’’ என்ற குதிரைக்காரன், அவனுடைய கைப்பெருவிரலால் மார்புக்குழியில் சுட்டிச் சுட்டி குத்திக்கொண்டான். நான் தலையாட்டினேன்.
நான் அந்தச் சிறிய கறுப்புக் குதிரையில் அமர்ந்தேன். நாங்கள் அந்தப் பருத்த குண்டு மனிதனை  விட்டுப் புறப்பட்டோம். ஹிஷாமும் நானும் புதிதாகப் பாவப்பட்டிருந்த அந்தக் கிராமியச் சாலையில் பண்ணைகளைக் கடந்து ஐந்து மைல் தூரத்துக்கு நிதானமாகத் துள்ளுநடையில் சென்றோம். வாடகை வண்டிகள் ஒலிப்பான்களை உரத்து ஒலித்துக்கொண்டு எங்களை விரைந்து கடந்தன. கெய்ரோவில் எப்போதும் வாகன ஒலிப்பான்களின் சப்தமே! ஓட்டுநர்கள் இடது கையாலேயே நன்கு ஓட்டிக்கொண்டு வலதுகையால் ஒலிப்பான்களில் அவர்களது உணர்வுகளின் ஒவ்வொரு நிலையையும் வெளிப்படுத்த முடிந்தது. நான் அமர்ந்திருந்த சேணம் சிறியதாக, எளியதாக இருந்தது. அது குதிரையில் எவ்வாறு பொருத்தப்பட்டுள்ளதென்றும் நான் எவ்வாறு அதனோடு இணைக்கப்பட்டுள்ளேன் என்றும் சிறிதுநேரம் காட்சிப்படுத்த முனைந்தேன். அது குதிரையின் ஒவ்வொரு எலும்பையும் தசையையும் குருத்தெலும்புப் பாளங்களையும் ஒருசேரக் கட்டுப்படுத்துவதை என்னால் உணர முடிந்தது. நான் அதன் கழுத்தை ஒரு அபிமானத்தோடு தட்டிக் கொடுத்தபோது அது என் கையை உதறித் தள்ளியது. அதற்கு என் மீது ஆர்வமில்லை.
நாங்கள் சாலையிலிருந்தும் திரும்பி ஒரு ஒடுக்கமான சந்தைக் குறுக்காகக் கடந்தபோது முடிவேயில்லாத பாலை எங்கள் முன் விரிந்தது. அதன் மாபெரும் கம்பீரத்தையும் இணங்கவைக்கும் தன்மையையும் சந்தேகப்பட்டிருந்த நான் அப்போது ஒரு வேசைமகனைப் போல் உணர்ந்தேன். அதன் மீது கால் வைக்கவே எனக்கு வெட்கமாக இருந்தது; ஒன்றன் மீது ஒன்றான வெல்வெட் அடுக்குகளால் அப்படியொரு கவனமாக அது உருவாக்கப்பட்டிருந்தது.
மணலில் குதிரையின் முதல் காலடி பட்டதுமே ஹிஷாம், ‘’ யெஸ்’’ என்றான். நான் தலையாட்டினேன்.
அப்படியே என் குதிரையைச் சவுக்காலடித்து, அவன் குதிரையைக் கத்தி விரட்டினான். சஹாராவில் ஒரு நான்குமாடிக் கட்டிட உயரத்துக்கிருந்த மணல் குன்றின் உச்சி நோக்கி நாங்கள் நான்கு கால் பாய்ச்சலில் விரைந்து கொண்டிருந்தோம்.
நான் நான்கு கால் பாய்ச்சலில் முன்னர் எப்போதும் சென்றிருந்ததே இல்லை. எப்படிச்  சவாரி செய்ய வேண்டுமென்றும் எனக்கு எதுவும் தெரியாது. என் குதிரையோ பறந்து கொண்டிருந்தது. அப்படிப் பறப்பதை அது விரும்பியது போலிருந்தது. முன்பு நான் ஏறியிருந்த குதிரை விடாமல் கடித்துக் கொண்டேயிருந்தது. இந்தக் குதிரை, ஓட்டத்துக்கு இசைவான ஒரு ஒழுங்கோடு தலையை முன்பக்கமாக நீட்டி, நீட்டிச் சென்றது.
நான் சேணத்தின் பின்னாக நகர்ந்து மீண்டும் முன்பக்கத்துக்கு உந்திக்கொண்டேன். லகானைக் கைக்குள்ளேய உருட்டி, இழுத்துக் குனிந்து குதிரையின் உடம்போடு ஒட்டிக்கொண்டேன். ஆனால் ஏதோ ஒன்று அல்லது எல்லாமே தவறாக இருந்தது. அனைத்துப் பக்கமும் நான் இடிபட்டுக் கொண்டிருந்தேன். அது, இத்தனை வருட அனுபவங்களில் அதிகமான வன்முறைக்குள் அகப்பட்டதாக இருந்தது.
நான் தத்தளிப்பதைக் கண்ட ஹிஷாம் வேகத்தைக் குறைத்தான். நான் நன்றியோடு நோக்கினேன். உலகம் அமைதியாக நகர்ந்தது. லகானை மீண்டும் கைக்குள் இழுத்துப் பற்றி, சேணத்தின் மீது என் இருப்பைச் சரிசெய்து, முன்பக்கமாகக் குனிந்தேன். குதிரையின் கழுத்தை மெல்லத் தட்டினேன். ஆனால் அதன் பற்களிலிருந்து நூலிழையில் தப்பித்தேன். அது என் விரல்களைத் தின்ன முயன்றுகொண்டிருந்தது. நான் மீண்டும் தயாராகிவிட்டதாக உணர்ந்தேன். இப்போது நான் கொஞ்சம் தெரிந்தவனாகிவிட்டேன். ஆனால் அடுத்த புறப்பாடு பயங்கரமாக இருந்தது; ஏனென்றால் அது அத்தனை திடீரென நிகழ்ந்தது.
‘’யெஸ்?’’ என்றான், ஹிஷாம்.
நான் தலையாட்டினேன். அவன் காட்டுமிராண்டித்தனமாக என் குதிரையை அடித்ததும் நாங்கள் தலைதெறிக்கப் பறந்தோம்.
முதலாவது மணல்குன்றின் உச்சிக்கு ஏறி முடித்தோம். அந்தக்காட்சி ஒரு வெற்றிவீரனுக்கேயானது பெருங்கடல்களுக்கு மேல் பெருங்கடல்களாகப் பல கோடி சாய்தளச்சரிவுகளாக விளிம்புகள்.. நாங்கள் குன்றிலிருந்தும் அதே பாய்ச்சலில் இறங்கி அடுத்ததில் ஏறினோம். குதிரை, அதன் வேகத்தைக் குறைக்கவே இல்லை. சேணம் என் முதுகுத்தண்டில் இடித்துத் தண்டித்துக்கொண்டேயிருந்தது. ஆசனவாய் கடுத்தது. நான் குதிரையின் ஓட்டத்தோடு ஒருமைப்பட்டிருக்கவில்லை. நான் முயற்சித்தேன்; ஆனால் நான் பின்தொடர்ந்துகொண்டிருந்த அந்தக் குண்டு மனிதனோ அல்லது வாடையற்றவனோ எந்த அசைவும் காட்டவில்லை. என்னுடைய முதுகுத் தண்டு சேணத்தின் மீது பயங்கர வேகத்தில் ஒரே விதமாக இடித்துக்கொண்டேயிருந்தது.  ஆனால், சீக்கிரமே வலி மரத்துப் போய் உணர்ச்சியற்று உருக்கி வார்த்தது போலானது., எனது ஆசனவாய் நூறு அடி உயரத்திலிருந்து என் மொத்த கனமும் தாங்க  ஒரு பளிங்குக் கல்லின் மீது மீண்டும் மீண்டும் விழுந்துகொண்டிருந்தது.
நான், ஹிஷாமிடம் நிறுத்துமாறு அல்லது வேகத்தைக் குறைக்குமாறு அல்லது என் முதுகுத்தண்டுக்கு ஓய்வு கொடுக்குமாறு சொல்லியிருக்கலாம்தான். எனக்குள் ஏதோ ஒன்று மீண்டும் சரிசெய்ய முடியாதபடி உடைந்துபோனதாக நான் நிச்சயமாக நம்பினேன். ஆனால், ஒய்வுக்கு வழியே இல்லை. என்னால் ஒரு வார்த்தை கூடப் பேசமுடியவில்லை. மூச்சினை உள்ளிழுக்க முடியாமல் தவித்தேன். சேணத்துக்கும் மேலாகத் தூக்கிக்கொண்டு உட்கார முயற்சித்தேன்; என்னால் குதிரையை நிறுத்தவும் முடியவில்லை. ஏனெனில் ஹிஷாமிடம் நான் வலிமையானவன் என்றும் எளிதில் விட்டுவிலகிவிடமாட்டேன் என்றும் காட்டிக்கொள்ள விரும்பினேன். அவன் அவ்வப்போது திரும்பி என்னை நோக்கிப் பார்வையை வீசும்போது, நான் கண்களைச் சிமிட்டி என் வலிமையையெல்லாம் திரட்டிப் புன்னகை காட்டினேன்.
சீக்கிரமே அவன் வேகத்தைக் குறைத்தான். சில நிமிடங்களுக்கு நிதான நடையிலேயே சென்றோம். என் முதுகுத்தண்டின் மீதான இடி நின்றது. வலி குறைந்தது. நான் மிகுந்த நன்றியோடு நோக்கினேன். எவ்வளவு முடியுமோ அவ்ளவுக்கு மூச்சுக் காற்றை உள்வாங்கினேன்.
ஹிஷாம், ‘’ யெஸ்’’ என்றான்.
நான் தலையாட்டினேன்.
அவன் என் குதிரையை மீண்டும் அடித்தான், நாங்கள் நான்குகால்களில் பாய்ந்தோம். வலி மீண்டும் தொடங்கியது, முன்னைவிடவும் அதிகமாகப் புதியபுதிய இடங்களில் எங்கெல்லாமோ சுருட்டிச் சுருட்டி  இழுத்து இடுப்பெலும்புகளில், அக்குள்களில், கழுத்தில், என்று புதியதாக வலி எழும்பியது. புதிதான இந்த வேதனையின் தன்மையை, உள்ளுக்குள்ளிருந்து வேலைசெய்யும் இந்தச் சதியை நான் புரிந்துகொண்டு ஒருவிதத்தில் அதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டிருப்பேன்; ஆனால் அதன் திடீர்த் தாக்குல் என்னை அதிலிருந்தும் நான் தேவையான தூரத்துக்கு விலகுவதைத் தடுத்துவிட்டது.
இந்த எகிப்தியக் கிறுக்கனுக்கு ஈடாக என்னால் சவாரி செய்யமுடியுமென நான் நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கிருந்தது. இங்கே நாங்கள் இருவரும் சமமென்கிறபோது, நான் வேதனையை விழுங்கித்தான் தீரவேண்டும். நான் தண்டிக்கப்படலாம்; நான் அந்தத் தண்டனையை எதிர்பார்த்தேன்; அவன் விரும்பிய அளவுக்கு, எவ்வளவு நீண்ட நேரத் தண்டனை வழங்கினாலும், என்னால் அதைத் தாக்குப்பிடிக்க முடியும். நல்லதான அல்லது சரியற்ற நூறு காரணங்களுக்காக நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் வெறுத்தாலும் சகாராவின் குறுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்தே சவாரி செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடரும் சங்கிலித்தொடர்ச்சியில் நானும் ஒரு கண்ணிதான். எதுவுமே மாறிவிடவில்லை. எனக்கு ஏனோ இது சிரிப்பை வரவழைத்தது. வரலாற்றின் எந்தக் கட்டத்திலும் யாரும் செய்திருக்கக்கூடியதைப் போலவே நானும், சவாரி செய்தேன். ஏதோ நானும் அவனும் மணலும் குதிரையும் சேணமும் தான் என்பது போல – என்னிடம் வேறெதுவுமில்லை பித்தான்-திறப்பு வெள்ளைச் சட்டையும் அரைக் காற்சட்டையும் காலணிகளும் – கூடவே யேசு, நாம் எவ்வளவு தான் வெறுத்தாலும், நமக்கிடையேயான இடைவெளி எவ்வளவுதான் தவறாக இருந்தாலும், நாம்தான் உண்மையிலேயே உயரப் பறக்கிறோம்.
நான் மேலும் கவனித்துக்கொண்டிருந்தேன். குதிரையின் குளம்புகள் மணலைப் பறித்தன. குதிரை சுவாசத்தை இழுத்தது. நானும் மூச்சை இழுத்தேன். பிடரி மயிர் என் கைகளில் அடித்தது. என் கால்கள் முழுதுமாக மணல் பரந்து தெறித்தது. வெறுமையான என் கரண்டைக் காலில் துப்பியபடியே அந்த மனிதன் குதிரையோடு எப்படி இயங்குகிறானென நான் கவனித்துக் கொண்டிருந்தேன். குதிரை அதன் முழு வேகப் பாய்ச்சலில் பறந்துகொண்டிருக்க, இருபது நிமிடங்கள் தொடர்ந்து கிடைத்த இடிக்குப் பின்னால் ஏதோ ஓரிடத்தில் நான் கற்றுக்கொண்டேன். குதிரை என்னைத் தூக்கித்தூக்கிப் போடுவதை அனுமதிக்கும்போதே, ஒவ்வொரு முறையும் அப்படித் தூக்கிப்போடும் உயரத்தைக் குறைக்கும் நம்பிக்கையில் சேணத்துக்கு மேலாகத் தூக்கி உட்கார முயற்சித்துக்கொண்டிருந்தேன். ஆனால் வலியை மொத்தமாகவே இல்லாமல் செய்வதற்கான வழிகள் இருந்தன.
நான் கற்றுக் கொண்டேன். குதிரையின் ஓட்டத்தோடு இசைந்து இயங்கினேன். கடைசியாக அப்படி அந்தப் பாழாய்ப் போன குதிரையோடு முழுச் சமரசத்தில் கூட்டணியாகத் தலையை முன்பக்கமாக நீட்டிநீட்டி அசைத்துக்கொண்டு இசைவாக இயங்கத் தொடங்கியதும் வலி போய்விட்டது. குதிரையோடு குதிரையாகத் தாழ்ந்து, என் தலை அதன் பிடரிமயிருக்குள் மூழ்கியிருக்குமாறு பொருந்தி, நான் அந்தத் தெய்வீகமான முட்டாள் குதிரையை ஓட்டிக்கொண்டிருந்தேன். மேலும் நான் –
நான் மேற்கொண்டு எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் தொடர்வதை ஹிஷாம் கவனித்தான். நாங்கள் மேலும் வேகமாக ஓட்டினோம். தலைக்குமேலே முழு வெயிலோடு நாங்கள் சவாரி செய்தோம். ஒரு பெரிய காற்று எங்கள் முகத்தில் அடித்தபோது. இந்த உலகம் தாங்கிக்கொண்ட அத்தனை பெரிய போர்ப்படைகளிலும் நானும் இருந்து போராடியதாக உணர்ந்தேன். நீங்கள் கொல்ல விரும்பிய ஒரு மனிதனை எப்படி நேசிப்பீர்களோ அப்படியேதான், நான் பின்தொடர்ந்து சென்ற அந்த மனிதனை, நானும் நேசித்தேன். அவ்வாறு நான் அவன் மீது முழுமையான நேசம் கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த மணற்குன்றுகளிலேயே கொஞ்சம் முழுமை குறைந்த உச்சிகொண்டிருந்த ஒன்றுக்குள்ளிருந்து பிரமிடு ஒன்று எழும்பியது.
சிவப்புப் பிரமிடில் நாங்கள் அதன் பக்கவாட்டில் ஏறினோம். அதன் ஒவ்வொரு படியும் ஐந்து அடி உயரமுள்ள மிகப்பெரிய சதுரக் கற்கள்; ஒவ்வொன்றிலும் எம்பி எம்பி ஏறினோம். ஐம்பதடி உயரத்தில், நுழைவாயிலில் நின்ற அந்த மனிதன் பிரமிடின் நடுவில் அமைந்திருந்த உள் அறைக்குச் செல்லும் ஒரு சிறிய கறுப்பு நுழைவழியைச் சைகை மூலம் எனக்குக் காட்டினான். அவனைப் பின்தொடர்ந்து நான் இறங்கி உட்சென்றேன். வழி செங்குத்துச் சரிவாக, ஒடுங்கி இருட்டும், ஈரக் கசிவுமாக, எங்களைவிடப் பெருத்தவர்களுக்கானால் செல்லவே முடியாதபடிச் சிறியதாக இருந்தது. கீழே செல்வதற்கு வசதியாக ஒரு கயிறு தொங்கியது. நான் அதைப் பிடித்துக்கொண்டு இறங்கினேன்; அங்கே படிக்கட்டுகள் இல்லை. உள்ளே சுண்ணாம்பு நாற்றம் வீசியது. காற்று அடர்த்தியாக உள்ளிழுக்கக் கடினமாக இருந்தது. எனக்கு முன்னால் அந்த மனிதன் கையில் பிடித்திருந்த கைவிளக்கு ஒரு துண்டு வெளிச்சத்தை இருளிலிருந்தும் வெட்டியெடுத்திருந்தது.
சரிவின் அடிப்பகுதியில் நாங்கள் நின்றோம். இன்னொரு அறைவழிக்குத் திரும்பிச் சமதளத்தில் சென்று விரைவிலேயே ஒரு வாயிலைக் குனிந்து கடந்து, ஒரு கல்லாலான பெட்டிக்குள்ளே சென்றோம். அந்த அறை முழுக்க முழுக்க எந்த அலங்காரமும் இல்லாமல் உயர்ந்த கூரையுடன் மிகச் சரியான ஜியோமிதி அளவுகளில் இருந்தது. ஹிஷாம் அளவற்ற பெருமை பூரிக்க, அறையைச் சுற்றிக் கைகளை வீசி நின்றான். அவன் கைவிளக்கை அறையின் ஒருபக்கமாகக் கொண்டு சென்று ஒரு நீளமான கற்பெட்டியைக் காட்டி, ‘’ அரசரின் வீடு ‘’ என்றான். அது ஒரு கல்லறை. அதைத் தவிர்த்தால் அந்த அறை காலிதான்; ஏதேனும் அடையாளமோ, ஆபரணங்களோ, கட்டிட வேலைப்பாடுகளோ இல்லை. இதுபோன்ற அறைகள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக முடிவேயின்றிக் கொள்ளையடிக்கப்பட்டு, இப்போது மிச்சமிருப்பது, வழவழப்பான வெற்றுச் சுவர்கள் மட்டுமே எவ்வித அடையாளங்களும் இல்லாமல் –
உள்ளிருந்த காற்று தூசி நிறைந்து கனத்திருந்தது. அங்கே நீண்ட நேரம் தங்கினால், நாங்கள் மூச்சமுட்டிச் செத்துவிடுவோமென நான் உணர்ந்தேன். அவன் என்னைக் கொல்ல முயல்வானா? கொள்ளையடிக்க? நாங்கள் தனியாகத்தான் இருந்தோம். நான் கவலைப்படாதிருந்தேன். அதற்குக் காரணங்கள் ஏதும் இல்லை. நாங்கள் அறைக்குள்ளேயே ஒருவரையொருவர் உறுத்து நோக்கிக் கொண்டோம். நாங்கள் இருந்த பெட்டி எங்களில் யாரையும் கவர்ந்து ஆழமான எண்ணம் எதையும் தோற்றுவித்துவிடவில்லை.  இருந்தபோதிலும் அந்த நிமிடம் இருவருமே மிகுந்த ஆவலும் பயமும் புனிதமும் ஆச்சரியமும் கலந்த ஒரு மரியாதை உணர்வோடிருப்பதாகப் பாசாங்கு செய்தோம். இந்த அறைகளுக்குள் அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாதென எனக்குத் தெரியுமென்றாலும், எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த இடம் ஒருகாலத்தில் எப்படி இருந்திருக்குமென எனக்கு விரிவாகச் சொல்லத் தெரியவில்லை; ஆனால் அது எப்போதாவது ஏதாவதொன்றாக இருந்திருக்குமென்பதற்கு எந்தச் சான்றும் அங்கு இல்லை; ஆனால் இது, இந்த மணல் கோபுரம், இதன் மெய்மைத்தோற்றம் என்னைத் துயரம் கொள்ள வைத்தது. வெளித் தோற்றம் அத்தனை மாட்சிமையோடு, ஆனால் உட்புறம் அத்தனை வெறுமை. ஹிஷாம் விளக்கை அவன் முகத்துக்கு அருகாகப் பிடித்துக்கொண்டு என்னைக் கவனித்தான். அந்தக் குறைந்த வெளிச்சத்தில் அவன் என்னைத் தான் பார்த்தானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
அவன் உரத்துப் பெருமூச்செறிந்தான். அவன் முகத்தில் உணர்ச்சிகளின் ஊடான அசைவுகளில்  - செருக்கு, தன்முனைப்பு, சலிப்பு, எரிச்சல்.  நான் அங்கே இருக்க விரும்பும் வரை அவனும் இருந்தே ஆக வேண்டிய கடப்பாட்டு நிலை. நான் அங்கே மேலும் தாமதிக்க விரும்பவில்லை. ஆனால், மிகச்சிறிய அளவென்றாலும் கூட அவன் இம்சையைக் காண எனக்குப் பிடித்திருந்தது.
பிரமிடு எதன் வழியாக வானத்தைக் குடித்துக் கொண்டிருந்ததோ அந்தக் குறுகியச் சன்னல் ஒளியை நோக்கி நாங்கள் படிகளில் ஏறினோம். வெளியே வந்து மீண்டும் தரைப் பகுதியை அடைந்ததும் அவன் சொன்னான், ‘’ அங்கே இன்னொன்று இருக்கிறது.’’ நான் அதன் பெயரைக் கேட்டேன். அதை வளைந்த பிரமிடு என்பார்கள் என்று அவன் சொன்னான்.
நாங்கள் மீண்டும் குதிரைகளின் மீது அமர்ந்தோம்.
‘’ யெஸ்? ’’ எனக் கேட்டான், அவன்.
நான் தலையாட்டினேன். அவன் உள்ளங்கையால் என் குதிரையை ஓங்கி அடித்தான். சீக்கிரமே வெள்ளிநிற வானத்திற்கெதிராக ஒரு கறுப்பு ஆவியாக மாறிப்போன அவனை நான் பின்தொடர்ந்தேன். எங்கள் குதிரைகள் கோபத்திலிருந்தன; அவை மூச்சிறைத்து நீரியல் வெடிப்புகளாக நுரை கக்கின. ஹிஷாமுக்கு நான் எவ்வளவுதான் பணம் கொடுப்பதாக இருந்தாலும், அதற்காக மட்டுமே அவன் இதைச் செய்யவில்லையென நான் இப்போது உணரத்தொடங்கினேன். சிவப்புப் பிரமிடுக்குப் பிறகு எந்தவொரு நடைக்கும் என்னோடு கூலி பேச வேண்டுமேயென அவன் கவலைகொள்ளவில்லை. நாங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பது வேறு ஏதோ ஒன்று; அதை நாங்கள் இருவருமே அறிந்திருந்தோம். அவன் என்னைக் கொல்லமாட்டான் என்பது எனக்கு இப்போது உறுதியானது. அவனுக்கு அப்படியொரு திட்டமே இல்லை; எனக்கென்ன திட்டமோ அதற்கும் அதிகமாக அவனிடம் எதுவுமில்லை.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, நாங்கள் வளைந்த பிரமிடில் இருந்தோம். இது பெரியது; ஆனால் பாதுகாப்பற்றது. போதாக்குறைக்கு வெளிச்சம் வேறு போய்விட்டது. நாங்கள் அதன் நுழைவாயிலுக்கு ஏறி உள்ளே இறங்கினோம். சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு புனித அறைக்குள் நாங்கள் இருப்பதை உணர்ந்தோம். அது இப்போது வெறுமையாக இருந்தாலும் அது ஒரு அரசியை அல்லது பார்ரோவை உள்ளே வைத்திருந்திருக்கும். அந்த மனிதனும் நானும் அந்தக் கனத்த காற்றைச் சுவாசித்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவருக்கு அல்லது எதன்மீதும் எவ்வித நேசமும் இல்லாமல் ஒருவரையொருவர் உறுத்து நோக்கினோம்.
என்ன எதிர்பார்த்தாய்? அவன் கண்கள் என்னைக் கேட்டன.
ஒரு மூட்டைப்பூச்சியைப் போலச் சாகமாட்டேனென்பதை அறிய விரும்பியதாக நான் சொன்னேன்.
ஒரு பேச்சுக்காகக் கொஞ்சம் வருத்தம் தெரிவித்தான், அவன். இந்த மனிதர்கள் இறந்தனர்; தைலங்கள்  தேய்த்துப் பாதுகாக்கப்பட்டனர்; திருடப்பட்டுவிட்டனர். அவர்களை மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றிப் பலரும் விற்றனர். அவர்களின் ஒவ்வொன்றையும், அவர்களின் எலும்புகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் தங்கத்துக்காக விற்றுவிட்டனர். நீங்களும் அப்படித்தான் இருந்திருப்பீர்கள்; அதற்கு மேலானதாக இருந்திருக்கப் போவதில்லை.
இந்தப் பிரமிடுகளுக்குள் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றேன்.
இல்லை, உண்மையிலேயே இல்லைதான், என்றான் அவன்.
நாம் அதற்குள்ளே உட்புறத்தில் கற்றுக்கொள்ள எதுவுமேயில்லை, என்றேன் நான்.
எதுவுமில்லையென்று அவன் சொன்னான்.
இந்த அரசர்கள் நம்பிக்கையோடு இருந்திருந்தால், ஏன், இந்தக் கனத்த கற்களுக்குக் கீழே, இந்தப் பகட்டற்ற பெட்டிகளுக்குள் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்?
ஹா! ஆனால், அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, என்றான் அவன்.
இது அதைத்தான் விளக்கமாய்ச் சொல்கிறதென்றேன், நான்.
நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு, பிரமிடின் வெளியில் அடிப்பக்கம் தரைக்கு வந்து மீண்டும் நின்றோம். நாங்கள் குதிரைகளில் ஏறியமர்ந்த போது இருட்டிவிட்டது. காற்றை முழுதும் அனுபவிப்பதற்காகக் கைகளைச் சுற்றிலுமாக வீசி ஊஞ்சலாட்டினேன்.
‘’வெளிப்புறம் இப்போது அருமை’’ என்றேன், நான்.
அவன் புன்னகைத்தான்.
‘’ அங்கே இன்னொன்று இருக்கிறது.’’ என்றான், அவன்.
‘’ எனக்கு அங்கே போக வேண்டும்’’ என்றேன், நான்.
‘’யெஸ்?’’
நான் தலையசைத்தேன். அவன் என் குதிரையை அடித்தான். நாங்கள் பறந்தோம். 
Image result for dave eggers

டேவ் எக்கர்ஸ் : சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் அமெரிக்க எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாளர். 12.03.1970ல் பிறந்தவர். இவரது தாயார் இரைப்பைப் புற்று நோயாலும், தந்தை நுரையீரல் புற்றுநோயாலும் 1991ல் மரணமடைந்தனர். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட வேண்டியதாயிற்று. அவரது எட்டு வயதுத் தம்பியை அவரே வளர்த்து ஆளாக்கினார். அவரது சொந்த அனுபவங்களையே வாழ்க்கைக் குறிப்பாகச் சிறிது புனைவும் கலந்து A HEART BREAKING WORK OF STAGGERING GENIUS என்ற பெயரில் 2000 ல் வெளியிட்டார். அது அந்த ஆண்டில் அதிக விற்பனை படைத்துச் சாதனை புரிந்தது. மேலும் அந்த ஆண்டுக்குரிய புலிட்சர் பரிசு தேர்வுப்பட்டியலிலும் இடம் பெற்றது. MIGHT என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். 2002ல் அவரது முதல் நாவல் You Shall Know Our Velocity வெளியானது. அவரது சிறுகதைகள் How We Are Hungry என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. 2005ல் Surviving Justice : America`s wrongfully convicted and exonerated என்ற பெயரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் முழுவதுமாகக் குற்றத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்களின் பேட்டிகளை மற்றொரு மருத்துவருடன் சேர்ந்து வெளியிட்டார். அதே ஆண்டில் பிரௌன் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் (Honorary Doctor of Letters) வழங்கி கவுரவித்தது. அவரது அடுத்த நாவல் What is What : The Autobiography of Valentino Achack Deng 2006 ல் வெளியானது. அது அந்த ஆண்டின் புனைவுகளுக்கான தேசிய புத்தகத் திறனாய்வுப் பரிசுக்கான தேர்வுப் பட்டியலிலும் இடம் பிடித்தது. ஆறு முதல் பதினெட்டு வயதானவர்களுக்கு எழுத்து மற்றும் பயிற்சிகள் அளிப்பதற்காக லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்றை 826 Valencia என்ற பெயரில் ஏற்படுத்தி நடத்திவருகிறார். தனிநபர்களின் அசாதாரணச் சாதனைகளுக்காக வழங்கப்படும் Heinz award 2,50,000 டாலர்களுடன் 2007 செப்டம்பரில் அவருக்கு வழங்கப்பட்டது. 2008 ல் உட்னே ரீடர் இதழ் அவரை ‘’ உலகை மாற்றும் 50 திறமையாளர்கள்’’ பட்டியலில் ஒருவராகச் சேர்த்தது.


•••

தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது சிறுகதை How we are Hungry என்ற தொகுப்பில்     “ ANOTHER” என்ற பெயரிலுள்ளது. எகிப்திய, பொதுவாக அரபியப் பகுதி முழுவதற்குமே அமெரிக்க அரசாங்க உறவுகள் சீர்கெட்ட நிலையில் அமெரிக்க இளைஞன் ஒருவன் எகிப்து நாட்டுக்குச் சென்று கெய்ரோவில் பிரமிடுகளைப் பார்வையிட வாடகைக் குதிரையில் குதிரைக் காரன் ஒருவனுடன் செல்கிறான். அந்த எகிப்தியக் குதிரைக்காரன் தன்னைக் கொல்ல விரும்புவான் என்ற அச்ச உணர்வோடு எதிர்மறை மனநிலையில் அமெரிக்க இளைஞன் பயணிக்கிறான். அந்த மனநிலையிலிருந்து படிப்படியாக இருவரும் ஒரே அலைவரிசைக்கு மாறுவதுதான் கதை. குதிரைச் சவாரி, சகாரா பாலைவனம், பிரமிடுகள் குறித்த படைப்பாளியின் பதிவுகள் ஆர்வமூட்டுபவை. 

மலைகள் இணைய இதழ் 2012 ஜூன் 03 ல் வெளியானது.
அடவி இதழிலும் வெளியாகியுள்ளது.

,

No comments:

Post a Comment