Saturday 16 January 2016

ஜப்பானியச் சிறுகதை - அவள் நகரம், அவள் ஆடுகள் - ஹாருகி முரகாமி Haruki Murakami

  


  
  அவள் நகரம், அவள் ஆடுகள்   Her town, her sheep
 ஜப்பான் : ஹாருகி முரகாமி haruki murakami 
ஆங்கிலம் : கிக்கி 
தமிழாக்கம் : ச. ஆறுமுகம்




அவள் நகரம், அவள் ஆடுகள்
ஜப்பான் : ஹாருகி முரகாமி
ஆங்கிலம் : கிக்கி
தமிழாக்கம் : ச. ஆறுமுகம்
அந்த வருடத்download (10)தின் முதல் பனி, வடக்கு ஜப்பானின் சப்போரா நகரத் தெருக்களில் விழத்தொடங்கியது. அது மழையாகத்தான் ஆரம்பித்தது. பின்னர் பனியாக மாறியது. அது மீண்டும் மழையாக மாறுவதற்கு நீண்ட நேரமொன்றும் ஆகவில்லை. அது எப்படி இருந்தாலும் சப்போராவின் தெருக்களில் பனி ஒன்றும் கிளர்ச்சியூட்டுவதாக இருப்பதில்லை. ஒரு முக்கியமற்ற உறவினராகத்தான் அது வரவேற்கப்படுகிறது. அன்று வெள்ளிக்கிழமை. அக்டோபர், 23.
நாரிட்டா வானூர்தி நிலையத்திலிருந்து 747-ல் நான் டோக்கியோவுக்குக் கிளம்பியபோது, டி-சர்ட் மட்டுமே அணிந்திருந்தேன். என்னுடைய வாக்மென்னில் 90நிமிட ஒலிச்சுருளைக் கேட்டு முடிக்கும் முன்பாகவே பனிபெய்யத் தொடங்கியது.
‘’ அதில் புதிதாக எதுவும் இல்லை. வழக்கம் போலத்தான் தெரிகிறது.’’ என்று சொன்ன எனது நண்பன் ‘’ பொதுவாக, வருடத்தின் முதல் பனி இங்கு இப்போதுதான் பெய்கிறது, பிறகு குளிராக மாறுகிறது.’’ என்றான்.
‘’உண்மையிலேயே குளிர்கிறது, இல்லையா, என்ன?’’
‘’கொஞ்சமாக இல்லை. நன்றாக, நன்றாகவே குளிர்கிறது.’’
நாங்கள் மேற்கு ஜப்பானின் கோப் நகரத்தின் அமைதியான ஒரு சிறிய காலனிப்பகுதியில் வளர்ந்தவர்கள். எங்கள் வீடுகளைப் பிரித்த இடைவெளி ஒரு ஐம்பது மீட்டர் இருக்கும், அவ்வளவுதான். உயர்நிலைப் பள்ளியின் இளநிலை, முதுநிலை வகுப்புகளில் நாங்கள் ஒன்றாகவே படித்தோம். பள்ளிச் சுற்றுலாக்களுக்கும், அவரவர் தோழிச் சந்திப்புகளுக்கும் இணைந்தே சென்றோம். அதிகமாகக் குடித்துவிட்டு, வாடகைக்காரில் ஒருமுறை, கதவுதிறந்துகொண்டபோது இருவரும் ஒன்றாக உருண்டு விழுந்திருக்கிறோம். உயர்நிலைப்பள்ளிப் படிப்பில் வெற்றி பெற்றபின் நாங்கள் வேறு வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவிட்டோம். அவன் ஹொக்கைடோவுக்குச் சென்றான். நான் டோக்கியோவுக்குச் சென்றேன். டோக்கியோவிலுள்ள என் வகுப்புத் தோழிகளில் ஒருவரை மணந்துகொண்டேன். அவன், அவனுடைய வகுப்புத்தோழிகளில் ஹொக்கைடோவின் ஒதாரு நகரத்திலிருந்த ஒருவரைத் திருமணம் செய்தான். அதது, அப்படித்தான் வாழ்க்கையில் நடந்துவிடுகிறது. நாங்கள், காற்றில் வெடித்துச் சிதறிய விதைகளானோம்.
அவன் டோக்கியோவில் கல்லூரிப்படிப்பு படித்து, ஹொக்கைடோவுக்கு நான் சென்றிருந்தால், எங்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறிப்போயிருந்திருக்கும். ஒருவேளை நான் சுற்றுலா முகமைக்காக உலகம் முழுதும் சுற்றித் திரிந்துகொண்டிருப்பேனாக இருக்கலாம். அவன் டோக்கியோவில் ஒரு எழுத்தாளராக இருந்திருக்கலாம். ஆனால், விதி என்னை நாவல்களை எழுதுமாறு கொண்டுசெலுத்த, அவன் பாதை சுற்றுலா முகமைக்கு இட்டுச்சென்றது. அதோடு, இன்றுவரை எல்லாநாளும் ஒளிமயம் தான்.
என் நண்பனுக்கு ஆறுவயதில் ஹொகுதோ என்ற மகன் இருக்கிறான். மகனின் மூன்று படங்களை எப்போதும் அவன் பணப்பைக்குள் சுமந்து திரிவான். – உயிர்க்காட்சிச் சாலையில் ஆடுகளோடு விளையாடும் ஹொகுதோ; வாடைப் பருவத்தின் சிச்சிகோசன் குழந்தைகள் விழாவுக்கான உடைகள் அணிந்திருக்கும் ஹொகுதோ; விளையாட்டு மைதானத்தில் ராக்கெட்டில் சவாரி செய்யும் ஹொகுதோ. நான் ஒவ்வொரு படத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக, மூன்றுமுறை உற்றுப் பார்த்துவிட்டு அவனிடம் திருப்பிக்கொடுத்தேன். நான் என்னுடைய பீரை ஒரு கையிலெடுத்துக்கொண்டு, ஹொக்கைடோவின் அற்புத நற்சுவைகளில் ஒன்றான பனிக்கட்டியாகக் குளிர்ந்துவிட்ட `ரூய்ப்` வறுவலில் கொஞ்சத்தை அள்ளினேன். (ரூய்ப் – மிகப்பொடியாக அரிந்த சல்மான் மீன், மிளகுத்தண்ணீர், சோயாப்பாகு கொண்டு சமைக்கப்படும் ஒரு வறுவல்.)
‘’ அது சரி, `பி` எப்படி இருக்கிறான்.’’ என என்னிடம் கேட்டான்.
‘’ நிரம்பவும் நன்றாக.’’ என்றேன், நான். ‘’ இப்பத்தான், ஒருநாள், அவனைத் தெருவில் கண்டதும் பிடித்துக் கொண்டேன். அவன் விவாக ரத்து பெற்றுவிட்டான். இப்போது வேறொரு இளைய பெண்ணோடு வசிக்கிறான்.’’
‘’ `க்யூ` என்னவானான்?’’
‘’அவன் ஒரு விளம்பர முகமையில் பணிபுரிகிறான். சும்மா, பயங்கரமாக எழுதிக் குவிக்கிறான்.’’
‘’ அது ஒன்றும் எனக்கு ஆச்சரியமல்ல……’’
இப்படியாக. இப்படியாக, இதுபோல இன்னும்பல.
பில்லுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு, விடுதியிலிருந்து கிளம்பினோம். மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருந்தது.
‘’சொல்லு, சமீபத்தில் கோபுக்குப் போயிருந்தாயா?’’
‘’ப்ச், இல்லை.’’ என்றான் தலையை அசைத்துக்கொண்டு. ‘’அது வேறு நிரம்பத் தூரம். உன் கதை எப்படி?’’
‘’நானா, நானுந்தான் இல்லை. மீண்டும் அங்கே திரும்பிப் போக உண்மையில், பெரிய அளவில் ஆசை ஒன்றும் இல்லை.’’
‘’ஹேய்.’’
‘’ வருடக் கணக்காகிவிட்டது. காலனி உண்மையிலேயே நிரம்பவும் மாறியிருக்குமென்று நினைக்கிறேன்’’
சப்போராவின் தெருக்களில் மேலும் பத்து நிமிடங்களே நடந்தோம். அதற்குள் பேச வேண்டிய விஷயங்கள் தீர்ந்துபோய்விட்டன. நான் என்னுடைய விடுதிக்குத் திரும்பினேன். அவன் அவனுடைய சிறிய அடுக்ககத்துக்குச் சென்றான்.
‘’ அந்நியன் மாதிரி இருந்துவிடாதே. உடம்பைப் பார்த்துக்கொள். பத்திரம்.’’
‘’நீயுந்தான்.’’
நாளை, நாங்கள் மீண்டும் 500 கி.மீ தூரம் பிரிக்கப்பட்டுவிடுவோமென்ற மாற்றத்தின் ஒலி திடீரென்று வலுத்து, உறைத்தது. இன்னும் ஒருசில நாட்களில் நாங்கள் மீண்டும் வேறுவேறு தெருக்களில் நடந்து கொண்டிருப்போம். எங்கள் சலிப்புமிக்க வழக்கமான பணிகளில் போய் விழுவோம். எலிப்பந்தயத்தின் போட்டியாளர்களாக எந்த இலக்குமற்று மேல் நோக்கிய தீராத தவிப்பில் தொடரப்போகிறோம்.
என் விடுதியறைக்கு வந்ததும் தொலைக்காட்சிப்பெட்டியைத் தட்டி உள்ளூர் பொதுச் சேவை நிகழ்ச்சி ஒன்றைக் கவனிக்கத் தொடங்கினேன். காலணிகளைக் கழற்றாமலேயே படுக்கை மீது ஏறி உட்கார்ந்து, அறைக்குப் பரிமாறப்பட்ட பீரையும் வாட்டிய சல்மான் பொதியப்பத்தையும் போட்டுத்தாக்கத் தொடங்கினேன். ஆழ்மனமின்றிக் கண்கள் மட்டும் திரையை நோக்கிக்கொண்டிருந்தன.
திரையின் நடுவில் இருண்ட நீலநிறத்தில் உடையணிந்த ஒரு இளைய பெண் மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தாள். ஒரு மாமிச உண்ணியைப்போலப் புகைப்படக் கருவி மிகுந்த பொறுமையுடன் அவளை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தது. அது அவளது குறிப்பிட்ட பிம்பத்துக்குத் தக்கவாறு அசைவின்றி இருத்தப்பட்டிருந்தது. புகைப்படக் கருவியின் கோணம் எந்தப்பக்கத்துக்கும் மாறவில்லை. கோடார்டு படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன்,
‘’ நான், ஆர் நகர உள்ளாட்சியின் விளம்பரப்பிரிவில் பணிபுரிகிறேன்.’’ என்றாள் அந்தப்பெண். அவள் பேச்சில் உள்ளூர் உச்சரிப்பு இலேசாகத் தலைகாட்டியது. அவள் குரலில் சிறிதாகப் பிசிறு தட்டியது. அவள் சிறிது உணர்ச்சி வயப்பட்டதால் அப்படி இருக்கலாம். ‘’ எங்கள் ஆர் நகரம், சுமார் 7500க்குள் மட்டுமே மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நகரம். அந்தக் குட்டிநகரிலிருந்து புகழ்பெற்ற நபர்கள் யாருமே இல்லை. அதனால் உங்களில் யாருமே எங்கள் நகரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்க முடியாதென்றே நினைக்கிறேன்.’’
இது நிரம்பவும் அநியாயமென்று எனக்குத் தோன்றுகிறது.
‘’ எங்கள் முக்கியத் தொழில் விவசாயம், பால்பண்ணை, கால்நடை வளர்ப்பு. நெல்தான் எங்கள் முக்கியப் பயிராக இருந்தது. ஆனால் பார்லி, கோதுமை, பெருநகரங்களுக்கான காய்கறிகள் என ஒரு பெரிய மாற்றத்தை அரசு மானியக்கொள்கைகள் அண்மையில் வலிந்து திணித்துவிட்டன. நகரின் வெளிப்புறத்தில் நூறு குதிரைகள், நூறு செம்மறியாடுகள் எனத் தலைக்கணக்குக்கு இருநூறு கால்நடைகளுடன் மேய்ச்சல் வெளியும் இருக்கிறது. இப்போது கால்நடை இனப்பெருக்கம் தொடர்ச்சியாகப் பல்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் கால்நடை உற்பத்தி மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கிறோம்.
உண்மையிலேயே அந்தப்பெண் அழகாயிருப்பதாக, நான் விவரித்துக் கூறமாட்டேன். அவளுக்கு இருபது வயதிருக்கலாம். உலோகச் சட்டமிட்ட கண்ணாடி அணிந்திருந்தாள். அவள் பழுதான ஒரு குளிர்பதனப் பெட்டி போலச் சிரித்தாள். இருந்தாலும் அவள் அற்புதமானவள் என நான் நினைத்தேன். கோடார்டு-பாணித் தொழில்நுட்பத்தில் அந்தப் புகைப்படக்கருவி அவளின் ஆகச்சிறந்த உருவத்தன்மைகளைப் படம்பிடித்துவிட்டது. அதோடு, அவளை இயலுகிற அளவில் அதிகபட்ச வெளிச்சத்தில் காட்டி அந்தச் சிறப்புத் தன்மைகளைத் தொடர்ந்து ஒளிவிடுமாறு காட்டியது. அந்தப் புகைப்படக் கருவியின் முன் நம்மில் யாராவது ஒரு பத்து நிமிடங்கள் பொறுமையாக நிற்க முடிந்தால் நாமும் அதைப்போல அற்புதமாகத் தோற்றமளிக்க முடியும். அப்படித்தான் நான் அதைப் பார்த்தேன்.
‘’ பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் எங்கள் சிறுநகருக்கருகில் ஓடும் `ஆர்` நதியில் தங்கத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் நாங்கள் சிறிய ஒரு `தங்கத்துகள் ஏற்ற`த்தைக் கண்டோம். ஆனால், மலையில் எண்ணற்ற பாழுங் குடிசைகள், பாதைகளை உண்டாக்கிவிட்டு, தங்கத்துகள் விரைவிலேயே காணாமல் போய்விட்டது. இது உண்மையிலேயே பெரிய துயரம் தான்.’’
வாட்டிய சல்மான் பொதியப்பத்தின் கடைசிக் கடியை என் வாய்க்குள் திணித்து அரைத்து, கடைசி மிடறு பீர்கொண்டு விழுங்கி உள்ளே தள்ளினேன்.
‘’நகரம்… ம்ம்….நகரத்தின் மக்கள்தொகை ஒருசில வருடங்களுக்கு முன் உச்சத்துக்குப் போய்ப் பத்தாயிரத்தைத் தொட்டது. இருந்தாலும் இப்போது சமீபமாக விவசாயத்தைக் கைவிடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பிரச்னை. எங்கள் இளைஞர்கள் ஊரைவிட்டுத் தப்பித்துப் பெருநகரங்களுக்குச் செல்கிறார்கள். என் வகுப்புத் தோழர்களில் பாதிப்பேருக்கு மேல் ஏற்கெனவேயே போய்விட்டனர். ஆனால், அங்கேயே இருப்பதென முடிவெடுத்து விட்டவர்கள் எங்கள் ஊருக்காக அவர்களால் இயன்றதைச் செய்கிறார்கள். அதுவே பெரிதாக இருக்கிறது.’’
அவள், அந்தப் புகைப்படக்கருவி என்னவோ எதிர்காலத்தைக் கணித்துக்கூறும் மாயக்கண்ணாடி என்பதுபோல அதையே வெறித்துக்கொண்டிருந்தாள். அவள் என்னை நேரடியாக வெறிப்பதாக எனக்குத் தோன்றியது. குளிர் பெட்டியிலிருந்து இன்னொரு பீரை எடுத்து, அதன் மூடியை இழுத்து, ஒரே மூச்சில் பெருமளவு குடித்தேன்.
அந்தப் பெண்ணின் நகரம்.
அவளின் சிறுநகரைக் கற்பனை செய்வதில் எனக்கு ஏதும் பெரியளவு இடர்பாடு இல்லை. ஒரு நாளைக்கு எட்டு முறை மட்டுமே தொடர்வண்டி நிற்கும் இத்தனூண்டு நிலையம் ஒன்று. நிலையத்தின் காத்திருப்போர் அறைக்குள் காற்றை வெதுவெதுப்பாக்க ஒரு சிறிய சூடேற்றி. பேருந்துகள் வந்து மக்களை ஏற்றிச் செல்கிற, வேறெந்தப் பயனுமற்ற ஒரு சிறு சுற்றுவட்டப் பகுதி. பாதிக்கு மேலும் அழிந்து, சரியாகத் தெரியாமலிருக்கும் நகர வழிகாட்டுவரைபடப் பலகை ஒன்று. பொன்மலர்ப் பாத்தி ஒன்று. காட்டு அசோக மரங்களின் வரிசை ஒன்று. வாழ்வதில் களைப்புற்ற நாட்டுரக வெள்ளை நாய் ஒன்று. பள்ளிச் சீருடைகள் மற்றும் தலைவலி நிவாரணி விளம்பரங்கள். ஜப்பானிய இராணுவப் பிரிவுகளுக்கான ஆள் சேர்ப்புத் தேவை விளம்பரம் ஒன்று. விதவிதமான அனைத்து ரகப் பொருட்கள் விற்கும் மூன்று மாடிப் பல்வகை அங்காடி ஒன்று. ஒரு சிறிய பயண ஏற்பாட்டு முகமை. ஒரு விவசாயக் கூட்டுறவு சங்கம், வனத்துறை நிலையம் ஒன்று, கால்நடை பராமரிப்புக் கட்டிடம் ஒன்று. வானத்தை நோக்கித் தனியாக நிமிர்ந்து நிற்கும் சாம்பல்நிற ஒற்றைப் புகைபோக்கியுடனான, நகரத்தின் பொதுக் குளியலறை. முக்கியத் தெருக்கள் இடைவெட்டும் முன்பாகவே இடதுபுறம் திரும்பி, இரண்டு கட்டிடங்கள் தாண்டியதும் அவள் பணிபுரியும் நகர அரங்கக் கட்டிடம். அங்கே மக்கள் தொடர்புப் பிரிவில் அலுவலக மேசைமுன் அவள் அமர்ந்திருப்பாள். ஆமாம். நிச்சயமாக அது ஒரு சலிப்பூட்டும் நகரம் தான்.வருடத்தில் பாதியும் பனிதான் மூடியிருக்கும். அவள் அலுவலக மேசைமுன் அமர்ந்து அவளுடைய கோப்புகளை எழுதிக்கொண்டிருப்பாள்:
‘’ நாங்கள் வெகு விரைவிலேயே ஆடுகளுக்கான கிருமிநீக்க மருந்து விநியோகிக்க இருக்கிறோம். தேவைப்படுபவர்கள், உரிய படிவங்களை நிரப்பி, உடனேயே அலுவலகத்தில் தாக்கல் செய்வீர்.’’ சப்போரா விடுதியில் என்னுடைய சிறிய அறைக்கு மீண்டு வந்த நான், அந்தப் பெண்ணின் வாழ்க்கையோடு எனக்கும் தொடர்பு இருப்பதைத் திடீரென்று கண்டுணர்ந்தேன். அவளின் இருத்தலை என்னோடு பொருத்திப் பார்த்தேன். பெரும்பகுதி ஒத்திருந்தாலும் ஏதோ ஒன்று இடறுகிறது. எனக்குச் சரியாகப் பொருந்தாத ஆடையைக் கடன் வாங்கி அணிந்திருப்பதுபோல ஒரு உணர்வு. நான் இயல்பான இருப்பமைதி இல்லாததாக உணர்கிறேன். என் கால்கள் கட்டப்பட்டுள்ளன. முனை மழுங்கிய கைக்கோடாரி போன்ற ஒரு கத்தியால் அந்தக் கயிற்றை அறுப்பது குறித்து நினைக்கிறேன். அப்படி அறுத்துவிட்டால், நான் எப்படித் திரும்பி வருவேன்? அந்த நினைப்பு என்னைக் குலைக்கிறது. எப்படியானாலும் நான் அந்தக் கட்டை அறுத்தேயாகவேண்டும். அதிகமாக பீர் குடித்துவிட்டேன், அதனால் இப்படித் தோன்றலாம். பனியும் அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் அவ்வளவுதான். மெய்ம்மையின் இருண்ட சிறகுகளுக்கடியில் மீண்டும் நழுவி விழுந்தேன். என் நகரம். அவள் ஆடுகள்.
இப்போது அவளுடைய ஆடுகளைப் புதிய மருந்தால் கிருமிநீக்கம் செய்ய, அவள் தயார்படுத்த வேண்டும். நானுந்தான். குளிர்காலத்துக்காக என் ஆடுகளைத் தயார்படுத்த வேண்டும். தீவனம் சேகரிக்கவேண்டும். மண்ணெண்ணெய்க் கிடங்கினை நிரப்ப வேண்டும். அந்தச் சாளரம் பழுதுபார்க்க வேண்டும். குளிர்காலம் பக்கத்து மூலைக்கு வந்தே விட்டது.
‘’ இதுதான் என் நகரம்,’’ தொலைக்காட்சியில் அந்தப்பெண் தொடர்ந்துகொண்டிருந்தாள். ‘’ இது ஒன்றும் ஆர்வமூட்டுவதாக இல்லை ஆனாலும், என் சொந்த ஊர். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டுமானால் எங்கள் ஊருக்கு ஒரு வருகை புரியுங்கள். உங்களுக்கு, எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் நாங்கள் அளிக்கிறோம்.’’
பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சும்மாக் கண்ணிமைப்பதுபோல் அவள் திரையிலிருந்தும் மறைந்துவிட்டாள். நான் அதை மூடிவிட்டு, மீதியிருந்த என் பீரைக் குடித்து முடித்தேன். அவள் ஊருக்குச் சென்று வருவதைப்பற்றி நினைக்கத்தொடங்கினேன். அவள் எனக்கு உதவலாம். ஆனால், அப்படிச் செல்வதைப்பற்றி நினைக்காமலே இருந்திருக்கலாம். அதுபோல எத்தனையோ விஷயங்களைத் தூக்கித் தூர எறிந்திருக்கிறேன், நான். வெளியே இன்னும் பனி பெய்துகொண்டிருக்கிறது. ஒரு நூறு ஆடுகள், இருட்டுக்குள் கண்களை மூடிக்கொண்டன.
*******




மலைகள் இணைய இதழ், ஜனவரி 03, 2013 இல் வெளியானது. 

மக்கள் புதுமுரசு (ஏப்ரல் 2013) தமிழ்ப் புத்தாண்டு இதழிலும் வெளியானது.








No comments:

Post a Comment