Tuesday 19 January 2016

ஸ்பானியச் சிறுகதை (சிலி) - என்ரிக் லின்னுடன் சந்திப்பு (Meeting with Enrique Lihn) மரணமுற்ற ஒரு கவிஞனைச் சந்திக்கும் கனவு Dream of meeting a dead poet ஸ்பானியம் – இராபர்ட்டோ பொலானோ Roberto Bolano (Chile)

என்ரிக் லின்னுடன் சந்திப்பு (Meeting with Enrique Lihn) மரணமுற்ற ஒரு கவிஞனைச் சந்திக்கும் கனவு Dream of meeting a dead poet 

ஸ்பானியம் : இராபர்ட்டோ பொலானோ Roberto Bolano (Chile) 

ஆங்கிலம் : க்ரிஸ் ஆண்ட்ரூஸ் Chris Andrews

 தமிழில்  ச.ஆறுமுகம்


download (6)
1999ல் வெனிசுலாவிலிருந்து திரும்பியபின், கற்பனை நகரத்துக்கும் உண்மையான நகரத்துக்குமாக எப்போதும் நிரந்தரமாக, பூமியின் ஏதோ ஒரு அடியடுக்கில் தெரிகிற சாயலில் சிலியும் சான்டியாகோவும் நரகத்தின் சாயலில் இருந்தது என்பதை மனதில்கொண்டு, சிலியாகத்தான் இருக்க முடியுமென நன்றாகத் தெரிகிற ஒரு நாட்டில், சான்டியாகோ நகரமாகத்தான் இருக்கமுடியுமென நன்றாகத் தெரிகிற ஒரு நகரத்தில், என்ரிக் லின்னின் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கனவு ஒன்று கண்டேன். லின் இறந்துவிட்டார் என்பது எனக்குத் தெரியும் தான்; ஆனால், நான் சேர்ந்திருக்கும் ஆட்கள், அவரைச் சந்திக்க என்னை அழைத்துச் செல்வதாகக் கூறியபோது, எந்தவிதமான தயக்கமும் இன்றி ஒப்புக்கொண்டேன்.
அவர்கள் கேலியாக, விளையாடுவதாக அல்லது அப்படியான அற்புதம் ஒன்று நிகழக்கூடியதுதானென, நினைத்திருந்தேனோ என்னவோ? ஆனால், சரியாக யோசிக்காமலோ, அல்லது அவர்களது அழைப்பினைத் தவறாகப் புரிந்துகொண்டதாலோ கூட இருக்கலாம். அது எப்படியானாலும், நாங்கள், வெளிறிய மஞ்சள் வண்ணப்பூச்சு முகப்புடைய ஒரு ஏழு மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில், ஒரு நீளமான கொடுக்கல் வாங்கல் மேடையும் பல தனியறைகளும் கொண்டதான ஒரு நல்ல பெரிய அளவிலான மதுவகத்திற்கு வந்தோம். எனது நண்பர்கள்(அவர்களை அப்படிக் குறிப்பிடுவது வித்தியாசமாகத் தோன்றுவதால், அந்தக் கவிஞரைச் சந்திக்க என்னை அழைத்துச்செல்ல முன்வந்த அவர்களை ஆர்வலர்கள் என்றே அழைப்போம்) ஒரு தனியறைக்கு இட்டுச் சென்றனர்; அங்கே இருந்தார், லின். முதலில், அவரை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை; புத்தகங்களில் நான் பார்த்திருந்த முகமல்ல அது; மெலிந்து இளமையாகி, அழகாகியிருந்தார்; அவரது கண்கள் மார்பளவு கறுப்பு-வெள்ளைப் புகைப்படக் கண்களைவிடவும் அதிகப் பிரகாசமாகத் தெரிந்தன.
உண்மையில் லின், லின் மாதிரித் தோன்றவேயில்லை; அவர் ஒரு ஹாலிவுட் நடிகரைப் போலிருந்தார்; தொலைக்காட்சிப்படங்களில், அல்லது ஐரோப்பியத் திரையரங்குகளில் ஒருபோதும் காண்பிக்கப்படாமல், நேராகக் காணொலிக்குச் செல்லும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்கும் பி – பட்டியல் நடிகரைப் போலத் தோன்றினார். ஆனால், அதேநேரத்தில் அவர் லின்னாக இருந்தார்; எனக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆர்வலர்கள் அவருக்கு வணக்கம் கூறி, நெருங்கிய நட்பினைக்காட்டும் ஏமாற்றுக் குரலில் அவரை, என்ரிக் எனப் பெயர் சொல்லி அழைத்து, என்னால் புரிந்துகொள்ளமுடியாத கேள்விகளைக் கேட்ட பின்னர், எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினர். உண்மையைச் சொல்வதானால், நான் அவருக்கு அறிமுகம் செய்யப்படவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஒரு குறுகிய அளவிலான காலத்துக்கு, நான் அவருடன் கடிதத்தொடர்பு கொண்டிருந்தேன். ஒருவிதத்தில் சொன்னால் அவருடைய கடிதங்களால் தான் இன்று நான் உயிரோடிருக்கிறேன்.
நான் 1981 அல்லது 1982 பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்; அப்போது நான் காசு இல்லாமல், பிழைப்புக்கு எந்த வழியுமில்லாமல் ஜெரோனாவுக்கு வெளியே ஒரு வீட்டில், தன்னந்தனியாகத் தனிமைப்படுத்தப்பட்டவனைப் போல் ஒதுங்கி வாழ்ந்திருந்தேன்; இலக்கியமோ குறிப்பிட்ட ஒரு சில (விரல்விட்டு எண்ணிச் சொல்கிற அளவுக்கு மிகக் குறைவாக) செவ்வியல் படைப்பாளிகள் தவிர, பகைவர்களால் ஆட்கொள்ளப்பட்ட, விரிந்து பரந்த ஒரு சுரங்கவெளியாக இருந்தது. எந்தவொரு தவறான நகர்வும் மரணத்தை விளைத்துவிடும் ஆபத்துள்ளதான அந்தச் சுரங்கவெளிக்குள் ஆர்க்கிலோக்கஸின் கவிதைகள் மட்டுமே துணையாக, நான் ஒவ்வொரு நாளும் சென்றுவரவேண்டியிருந்தது. இளம் படைப்பாளர்கள் எல்லோருக்கும், இதுதான் நிலை. அப்படியான ஒரு நேரம், வழிநடத்துபவர்களை விடுங்கள், நண்பர்களிடமிருந்து கூட எந்த ஆதரவுமில்லாமல், உதவிக்கரம் நீட்ட யாருமேயில்லாத ஒரு நேரம்; திரும்பத் திரும்ப `ஆமாம் அய்யா` போடுபவர்களுக்கு, அல்லது, அதிகார வர்க்க இலக்கியர்களைப் புகழும் கூட்டத்துக்கு, ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனை குறித்த அவர்களது பார்வையாலேயே தனித்துத்தெரிகின்ற முடிவேயில்லாத அந்தக் கூட்டத்துக்கு – அவர்களது கண்களுக்கு எதுவும் தப்புவதேயில்லை என்பதோடு அவர்கள் எந்த ஒன்றையும் மன்னிப்பதுமில்லை – மட்டுமே விழாக்கள், வெளியீடுகள், விருதுகள், நல்கைகள் எல்லாமேயென நிர்ணயிக்கப்பட்டிருந்தன. வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில், ஏதாவது ஒரு வகையில், இளம் எழுத்தாளர்கள் எல்லோருமே நான் சொல்வது போல், உணர்கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் எனக்கு வயது இருபத்தெட்டு; என்னாலேயே என்னை ஒரு இளம் படைப்பாளி என எந்த விதத்திலும் கருதிக்கொள்ள இயலாதிருந்தது. நான் காற்றிலடித்து வரப்பட்ட ஒரு காகிதமாக இருந்தேன்.
ஏதோ ஒரு அரசு மானியப் புண்ணியத்தில் ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் வகைப்பட்டவனாக இல்லை, நான். அடையாளம் ஏதுமற்ற நான், அதனைக் காட்டிக்கொள்ளவோ, கருணை கோரி இரந்து நிற்கவோ விரும்புபவனாகவும் இல்லை. அப்போதுதான் என்ரிக் லின்னுடன் நான் கடிதத் தொடர்பினை மேற்கொண்டேன். இயல்பாகவே, நான்தான் முதலில் தொடங்கினேன். அவரது பதிலுக்காக நானொன்றும் நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டி, ஏற்படவில்லை. அது, ஒரு நீண்ட விசித்திரக் கடிதம்; நாங்கள் சிலியில் கூறுவது போல சோர்வோடு எரிச்சலுமூட்டும் ஒரு நீண்ட கடிதம்.
பதிலுக்கு நான் எழுதிய கடிதத்தில், எனது வாழ்க்கை, ஜெரோனாவுக்கு வெளியேயுள்ள மலைக்குன்றுகளில் ஒன்றின் மீதிருந்த எனது கிராமத்து வீடு, அதன் முன்னால் தெரிகிற மத்தியகால நகரம், கிராமியக் காட்சி அல்லது அதன் பின்னிருந்த வெறுமை அல்லது வெற்றிடம் என எல்லாவற்றையும் அவருக்கு எழுதினேன். எனது நாய் லைக்காவைப்பற்றியும் ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத் தவிர சிலியன் இலக்கியமென்பது வெறும் மலக்கழிவுதான் என்ற எனது அபிப்பிராயத்தையும் அவருக்குத் தெரிவித்திருந்தேன். நாங்கள் ஏற்கெனவே நண்பர்களாகிவிட்டோம் என்பது அவரது அடுத்த கடிதத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. தொடர்ந்தது என்னவென்றால் ஒரு புகழ்பெற்ற கவிஞர் அடையாளமற்ற ஒருவரோடு நண்பராகும்போது கண்கூடாக என்ன நிகழுமோ, அதுவே நிகழ்ந்தது.
அவர் என் கவிதைகளை வாசித்ததோடு, சிலவற்றை, சிலியன் – வட அமெரிக்கப் பயிலகம் ஒன்றில் இளந் தலைமுறையினரின் படைப்புகளை அறிமுகம் செய்வதற்காக, அவர் ஏற்பாடு செய்த கவிதை வாசிப்பு வகையான நிகழ்வொன்றிலும் இடம்பெறச் செய்தார். அவரது கடிதத்தில், நம்பிக்கை விடிவெள்ளிகளென, அவர் கருதிய சிலரை, 2000 ஆம் ஆண்டின் சிலியக் கவிதையில் ஆறு புலிகளாக இருப்பார்களென்று குறிப்பிட்டிருந்தார். பெர்டோனி, மேக்யீய்ரா, கோன்ஸலோ முனோஸ், மார்ட்டினெஸ், ரோட்ரிகோ லிரா மற்றும் நான் ஆகியவர்களே, அந்த ஆறு புலிகள் என நினைக்கிறேன். அது ஏழு புலிகளாகவும் இருக்கலாம். ஆனால், ஆறே பேர்தான் என்று நினைக்கிறேன்.
இரண்டாயிரத்தில் நாங்கள் ஆறுபேரும் அப்படி ஏதாவது பெரிதாகச் சாதிப்பதும் மிகச்சிரமமான ஒன்றாகத்தான் இருக்கும், ஏனென்றால் அப்போதே ரோட்ரிகோ லிரா, தற்கொலை செய்துகொண்டான்; அவனது மிச்சம் மீதியெல்லாம் ஏதாவது ஒரு கல்லறையின் கீழ் ஆண்டுக்கணக்கில் அழுகிக்கொண்டிருக்கலாம், அல்லது சாம்பலாகித் தெருவெல்லாம் பரந்து, சான்டியாகோவின் அருவருப்புக் குப்பையோடு குப்பையாகக் கலந்திருக்கலாம். புலிகள் என்பதைவிடப் பூனைகள் என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். எனக்குத் தெரிந்து, ஒரு வகை ஹிப்பி வாழ்க்கை வாழும் பெட்ரோனி, கடற்கரையில் சோழி, கடற்பாசி பொறுக்கி உயிர் பிழைக்கிறான். மேக்யீய்ரா, கார்டினல் மற்றும் கரோனெல் உர்ட்டெச்சோவின் வட அமெரிக்கக் கவிதைத் தொகுப்பு குறித்து மிகுந்த அக்கறையுடன் ஒரு ஆய்வினை எழுதியதுடன் இரண்டு நூல்களை வெளியிட்டுவிட்டு, குடிப்பதற்காக அமர்ந்துவிட்டான்.
கோன்ஸலோ முனோஸ் மெக்சிகோ சென்று அங்கே காணாமற்போனதாக, நான் கேள்விப்பட்டவரையில் லோரியின் ஆங்கிலேயத் தூதுவர் போல் சாராயத்தின் ஆழ்மடிமறதி மூழ்கடிப்பில் அன்றி விளம்பரத்துறையில் காணாமற்போனான். மார்ட்டினெஸ் ‘’டுச்சாம்ப்பின் கையொப்பம்’’ பற்றிப் பகுப்பாய்வுத் திறனாய்வு ஒன்றினைச் செய்துவிட்டுப் பின்னர் இறந்தான். ரோட்ரிகோ லிராவைப் பொறுத்தவரையில் அவனுக்கு என்ன விடிந்ததென்று நான் ஏற்கெனவேயே விவரித்துவிட்டேன். பூனைகளைப் போல புலிகள் அதிகமில்லையென்றாலும், நீங்கள் அவற்றை ஆழ்ந்துபார்க்க விரும்புகிறீர்கள். தொலைதூர மாநிலத்தின் பூனைக்குட்டிகள். எல்லாமாக நான் சொல்லவந்தது என்னவென்றால், லின்னை எனக்குத் தெரியும் என்பதுதான். அதனால், அறிமுகம் என்ற ஒன்று தேவையில்லாதது. இருந்தபோதிலும், மிகை ஆர்வலர்கள் என்னை அறிமுகப்படுத்த முற்பட்டார்கள்; அதனை நானோ, லின்னோ ஆட்சேபிக்கவுமில்லை. ஆகவே, நாங்கள் ஒரு தனியறையினுள் அமர்ந்திருக்க, இது இராபர்ட்டோ பொலானோ எனக் குரல்கள் ஒலிக்கவும் நான், அந்தத் தனியறையின் இருளில் அமிழ்ந்து கிடந்த என் கையை எடுத்து, நீட்டி லின்னின் கையை, சில நொடிகளுக்கு என்கையைப் பிழிந்து இறுக்கிய, இலேசாகக் குளிர்ந்திருந்த அவரது கையை – ஒரு சோகமனிதரின் கையைப் பற்றிக்கொள்ள, அந்தக்கையும் கைகுலுக்கலும், என்னைத் தெரிந்து கொண்டதான எந்தவித அடையாளத்தையும் காட்டாமல் என்னைக் கூர்ந்து ஆய்வுசெய்துகொண்டிருந்த முகத்துக்கு மிகச் சரியாக இணைசேர்ந்து ஒத்திசைவதாக நான் நினைத்தேன்.
அந்த ஒத்திசைவு உடல் ரீதியாகக் குறிப்புணர்த்தும் அசைவியக்கம் தொடர்பானதென்றாலும், எதையும் சொல்லித் தொடங்குவதற்கில்லாத, குறைந்தபட்சம் எனக்கு எந்தச் செய்தியுமில்லாத, ஒரு மறுபேச்சுக்கிடமில்லாத உரையாடல் திறனுடனேயே வழிதிறந்தது. ஒருவழியாக அந்தக் கணம் முடிந்தபின், ஆர்வலர்கள் மீண்டும் பேசத்தொடங்க, அமைதி கலைந்தது; அவர்கள் எல்லோரும் லின்னிடம் முற்றிலும் தொடர்பற்ற பிரச்னைகள் மற்றும் நிகழ்வுகளில், அவரது கருத்தினைக் கேட்டுக்கொண்டிருக்க, அந்த நேரத்தில் அவர்கள் மீதான எனது இகழ்நோக்குப்பார்வை ஆவியாகிப்போனது. ஏனெனில், நான் ஒருகாலத்தில் எப்படியிருந்தேனோ, அப்படியே அவர்களும் இருப்பதை உணர்ந்தேன்: எந்தவித ஆதரவுமில்லாத இளம் கவிஞர்கள், சிலியின் இப்போதய புதிய நடுநிலை – இடதுசாரி அரசினால் கதவு மூடப்பட்ட குழந்தைகளாக, ஆதரவோ புரவலர் அணைப்போ ஏதுமற்று, இருப்பதெல்லாம் லின் மட்டுமே என்ற நிலை.
அதுவும் அவரது நூல்வெளியீட்டுப் புகைப்படங்களில் தோன்றிய மாதிரியான உண்மையான என்ரிக் லின்னாக இல்லாமல், மிகமிக அழகானவர் போல், அவரது கவிதைகள் பிரதிபலிக்கின்ற லின்னாக, அவர்களின் வயதுக்கு ஏற்றமாதிரியான லின்னாக, அவரது கவிதைகளை ஒத்தமாதிரியான ஒரு கட்டிடத்தில் வசிப்பவராக இருந்ததுடன், அவரது கவிதைகள் சில நேரங்களில் நடை நயம் மற்றும் உறுதிப்பாட்டில் மறைந்துவிடுவது போல் மறைந்துவிடுபவராகவும் இருந்தார். நான் இதனைக் கண்டுணர்ந்த போது, எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது, நான் சிறிது நல்லபடியான உணர்வு மீதூரப் பெற்றேன். நான் சொல்லவருவது, அந்தச் சூழ்நிலையினை நான் நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியதோடு, அது மகிழ்வானதென்றும் உணர்ந்தேன். நான் எதைக் கண்டும் பயப்படத் தேவையில்லை: நான் வீட்டில், நண்பர்களோடு, எப்போதுமே நான் வியந்து போற்றிய ஒரு படைப்பாளருடன் இருந்தேன்.
அது ஒன்றும் திகில் படம் அல்ல. அல்லது முழுக்க முழுக்கத் திகில் நிறைந்த படமல்ல; ஆனால், துயர நகை புட்டி, புட்டியாகக் கொட்டிக் கலக்கப்பட்டு நொதித்துக் கொண்டிருக்கும் ஒரு திகில் படம். துயர நகைச்சுவை பற்றி நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே, லின் அவரது சட்டைப்பைக்குள்ளிருந்து ஒரு மாத்திரைப் புட்டியை வெளியே எடுத்தார்; நான், இதை மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடவேண்டியிருக்கிறது என்றார். ஆர்வலர்கள் மீண்டும் அமைதியானார்கள். பரிமாறும் பணியாளர் ஒருவர் கண்ணாடி தம்ளரில் தண்ணீர் கொண்டுவந்தார். மாத்திரை பெரிதாக இருந்தது. அது தண்ணீர்த் தம்ளருக்குள் விழுவதைக் கண்டபோது, நான் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், உண்மையில் அது பெரியதல்ல; அடர்த்தி மிகுந்ததாக இருந்தது. அதை, லின் ஒரு கரண்டியால் உடைக்கத் தொடங்கவும் தான், பல்வேறு அடுக்குகளைக்கொண்ட ஒரு வெங்காயம் போல, அது தோன்றுவதாக உணர்ந்தேன்.
நான் முன்பக்கமாகக் குனிந்து தம்ளருக்குள் உற்று நோக்கினேன். ஒரு கண நேரத்துக்கு, அது ஒரு முடிவேயில்லாத மாத்திரையாக இருந்ததென நான் நிச்சயமாகக் கூறுவேன். கண்ணாடித் தம்ளரின் வளைபரப்புக்குக் கண்ணாடிவில்லை போல உருப்பெருக்கும் தன்மை இருந்தது: உள்ளே, அந்த வெளிறிய இளஞ்சிவப்பு மாத்திரை பால்வெளி மண்டலத்தை அல்லது பேரண்டத்தைத் தோற்றுவிப்பது போலச் சிதைவுற்றுக்கொண்டிருந்தது. ஆனால், விண்மீன் திரள்கள் திடீரெனத் தோன்றுவது அல்லது மறைவதாக (எதுவென்பது எனக்கு மறந்துவிட்டது), அந்தத் தம்ளரின் வளைபரப்பு வழியாக நான் பார்த்த காட்சியின் அறிந்திராத ஒவ்வொரு படிநிலையும், மெல்ல விரிந்து புலனாகிப் பின், உள்நோக்கிச் சுருங்கிமறைதலின் ஒவ்வொரு அசைவுகள் மற்றும் அப்போதய அதிர்வு நடுக்கத்தினை மெதுமெதுவான இயக்கநிலைப்படமாக என்னால் காணமுடிந்தது.
பின்னர், சோர்வாக உணர்ந்து, பின்னால் சாய்ந்து, நிமிர்ந்து அமர்ந்து, மருந்திலிருந்தும் என் பார்வையை அகற்றி லின்னின் பார்வையினைச் சந்திப்பதற்காகக் கண்களை உயர்த்தினேன். அவரது பார்வை, இதில் கருத்து எதுவும் சொல்வதற்கில்லை, மூன்று மணி நேரத்திற்கொருமுறை இந்த வேதிக்கரைசலைக் குடித்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது, இதில் எந்தவிதமான குறியீட்டுப் பொருளையும் காண முயற்சிக்கவேண்டாம் – தண்ணீர், வெங்காயம், விண்மீன்களின் மெதுவான அணிவகுப்பு எனச் சொல்வது போலத் தோன்றியது. ஆர்வலர்கள் எங்கள் மேஜையை விட்டும் அகன்றார்கள். சிலர் மதுக்கூடத்தில் இருந்தனர். மற்றவர்களைக் காணமுடியவில்லை. ஆனால், லின்னை நான் மீண்டும் நோக்கியபோது, அவருடன் ஒரு ஆர்வலர் இருந்ததைக் கண்டேன். அவர் அங்கிருந்து வெளியேறி, அந்த அறையைச் சுற்றிலுமாகச் சிதறி அமர்ந்திருந்த அவரது நண்பர்களைக் கண்டுபிடிக்கச் செல்லும் முன் லின்னின் காதில் எதையோ இரகசியமாக முணுமுணுத்ததையும் கண்டேன்.
அந்தக் கணத்தில் லின்னுக்கு, அவர் இறந்துவிட்டது தெரியுமென எனக்குத் தெரிந்தது. என் இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது. அப்படியான ஒன்று இப்போது இல்லையென நான் நினைக்கிறேன், என்றார், அவர். இங்கே ஏதோ ஒன்று சரியாக இல்லையென நான் நினைத்தேன். மாரடைப்பால் அல்ல அவர் இறந்தது; புற்றுநோயால். மாளாத் துயரம் ஒன்று என்மீது கவிந்தது. அதனால் நான் எழுந்து, கால்களைச் சிறிது அசைத்து, நீட்டிமடக்கி ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காகச் சென்றேன்; ஆனால், அது மதுவகத்தினுள் அல்ல; நான் வெளியே, தெருவுக்குச் சென்றேன். நடைபாதைகள் சமமற்று மேடுபள்ளமாகச் சாம்பல் நிறத்தில் இருந்தன. வானம் கறைகள் ஏதுமற்ற ஒரு கண்ணாடியைப் போலத் தோன்றியது; அந்த இடம், எல்லாவற்றையும் பிரதிபலித்துக் காட்டவேண்டிய ஒன்று, ஆனால் எங்கே?, முடிவில் எதுவுமேயற்றிருந்தது. எனினும், சாதாரணமான ஒரு இயல்நிலை உணர்வு தோன்றித் திசையெங்கிலும் ஊடுருவி நிலைத்தது.
போதுமான புத்துணர்வினைப் புதிய காற்றினைப் பெற்றுவிட்டதாகவும் அதுவே நான் மதுக்கூடத்தினுள் செல்வதற்குத் தக்க தருணமென்றும் எனக்குத் தோன்றியபோது, நான், வாசற்கதவு வரையிலும் உயர்ந்திருந்த படிகளில் ( கருங்கல் போன்ற உறுதியும் வைரம் போல ஒளி உமிழும் மேற்பரப்புமுடைய ஒற்றைக்கல் படிகள்) ஏறி, என்னைவிட உயரம் குறைவாக, ஐம்பதுகளின் அடிதடிக்கும்பலில் ஒருவனைப் போல உடையணிந்து, மெய்யான கொலைகாரத் தோற்றமுள்ள கேலிச்சித்திரத்துக்கு ஒப்புமையான ஏதோ ஒன்றினைக் கொண்டிருந்தவனும், அவனுக்குத் தெரிந்த யாரோ ஒருவராக என்னையும் நினைத்து, முகமன் சொல்லி வரவேற்றவனிடம் போய்ச் சேர்ந்தேன். அவனை எனக்குத் தெரியாதென்பதும் அவன் தான் தவறாகப் புரிந்துகொண்டானென்பதும் முதலிலியே எனக்கு நிச்சயமாகத் தெரியுமென்றபோதிலும் அவனை எனக்குத் தெரிந்தது போலவும், அவனைப் போலவே அவனை எனக்குத் தெரிந்த யாரோ ஒருவராக நினைத்து, நடந்துகொண்டதோடு அவனது வரவேற்புக்கும், நான் பதில் சொன்னேன். ஆக, நாங்கள் இருவருமே அந்தப் பளபளக்கும் (ஆனாலும், மிகுந்த அடக்கத்துடன்) கல் படிகளில் ஏற முயற்சிக்காமலேயே ஒருவருக்கொருவர் முகமன் பரிமாறிக்கொண்டோம்.
ஆனால், அந்தக் கொலைகார அடியாளின் குழப்பம் மிகச் சில கணங்களுக்கே நீடித்ததுடன், விரைவிலேயே அவன் தவறாகப் புரிந்துகொண்டதை உணர்ந்ததுடன், நான் அவனைத் தவறாகப் புரிந்துகொண்டேனோ என அவன் தன்னைத் தானே, கேட்டுக்கொள்வதாக, அல்லது அதற்கு மாறாக, முதலிலிருந்தே நான்தான் அவனைத் தவறாக எடுத்துக்கொண்டதாக என்னை வேறுவிதமாக நோக்கத் தொடங்கி, சந்தேகத்துடன் கடுமையாகவும் மாறியதால் (அவனுக்கேயான முரண்பட்ட தன்மையில் கூர்மை குறையாமலிருந்தாலும்), இதழ்களில் இகழ்நோக்குப் புன்னகையுடன் என்னை யாரென அவன் கேட்க, அட ச்சே, ஜாரா, நான் பொலானோ என, நான் பதில் சொல்ல, அவன் ஜாரா இல்லையென்பதை அவனது புன்னகையிலிருந்து எவரும் புரிந்துகொள்வார்களென்றாலும், ஏதோ திடீரென ஒரு பொறி தட்டுப்பட்டது போல் ( நிச்சயமாக நான், இல்லவேயில்லை, லின்னின் கவிதை எதையும் என்னுடையதை விடக் குறைவானதாகக் குறிப்பிட்டுவிடவில்லை) யாரென்றே தெரியாத அந்த ஜாராவாக ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு வாழ்ந்துகாட்டுவதென்ற விபரீத நோக்கில், அந்த இடத்தில் தவிர, ஜாராவாக எப்போதுமே இருக்க முடியாத அவன், அந்தப் பளபளக்கும் படிகளின் மேல்மட்டத்தில் அப்படியே நின்றுகொண்டு, என் வாழ்க்கையைப் பற்றி என்னைக் கேட்பதாக, என்னை யாரென(தடித்த குரலில், முட்டாள்தனமாக)க் கேட்டு, அவன் ஜாராவே தானென்று ஒப்புக்கொண்டு, ஆனால் பொலானோ என்ற மனிதனை முழுவதுமாக மறந்துவிட்ட ஜாராவாக மாற, அது மிகச்சரியாகப் புரிந்துகொள்ள இயலுகிற ஒன்றுதானே, பிறகென்ன, நான் யாரென அவனுக்கு விளக்கிச் சொல்ல, அவனும் அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு எனக்கும் அவனுக்கும் பொருந்துகிற மாதிரியான ஒரு ஜாராவை – சாத்தியமற்ற, அறிவார்ந்த, தைரியமான, பணக்கார, தாராளமனமுள்ள, ஒரு அழகான பெண்ணைக் காதலிக்கும் துணிச்சலுள்ளதோடு, அந்தப் பெண்ணாலும் பதிலுக்குக் காதலிக்கப்பட்ட ஜாரா – உருவாக்கிக் காட்டி, அந்த அடியாள் புன்னகைத்து, நான் அவனை முழுமையாக நம்பிவிட்டதாகவும்,
ஆனாலும் அந்த அத்தியாயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவர இயலாமல் தவிப்பதாவும், நான் அவனுக்காகக் கட்டமைத்த பிம்பத்தில் அவன் திடீரென விழுந்துவிட்டதாகவும் முற்றுமுழுதான முடிவுக்குவந்த அவன் ஜாராவைப்பற்றி மட்டுமல்லாமல் அவனது நண்பர்கள், ஜாராவுக்கே இது மிவும் அதிகமென்று படக்கூடிய அளவுக்கு விரிந்த அவனது உலகம், அந்த மகத்தான ஜாராவை அந்தப் பளபளக்கும் படிகளில் மரணிக்கும் ஒரு எறும்பாக, எப்போதுமே பொருட்படுத்தாத உலகத்தைப் பற்றிப் பேசுமாறு உற்சாகப்படுத்த, ஒருவழியாகக் கடைசியில் அங்கு வந்துசேர்ந்த அவனது நண்பர்கள், விரிந்த மார்பும் இருவரிசைப் பொத்தான்களும் அமைந்த வெளிர் நிறக் கோட்டு அணிந்த உயரமான இரண்டு கூலிக்கொலை அடியாட்கள், என்னையும் அந்தப் போலி ஜாராவையும் நான் யாரென்பது போலப் பார்க்க, அவன், வேறுவழியின்றி, இது பொலானோ எனக் கூற, அந்தக் கொலைக்கூலிகள் இருவரும் என்னை வரவேற்று முகமன் கூற, நான், அவர்களின் கைகளை, மோதிரங்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், முழங்கைத் தங்க வளைகளோடு குலுக்கினேன். அவர்கள் என்னை அவர்களோடு மது அருந்துமாறு அழைத்தபோது, முடியாது, நான் நண்பர் ஒருவரோடு வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே, ஜாராவைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக உள்ளே சென்றுவிட்டேன். லின் அப்போதும் அந்தத் தனியறைக்குள் இருந்தார்.
ஆனால், கண்ணுக்கெட்டியவரையில் ஆர்வலர்கள் யாரையும் காணமுடியவில்லை. தம்ளர் காலியாக இருந்தது. அவர் மருந்தினைக் குடித்துவிட்டுக் காத்திருந்தார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல், நாங்கள் அவரது குடியிருப்புக்குச் சென்றோம். அவர் ஏழாவது தளத்தில் வசித்தார். நாங்கள் மின்னேற்றிக்குள் நுழைந்தோம். முப்பது பேர் ஏறிக்கொள்ளுகின்ற அளவுக்கு மிகப் பெரிய மின்னேற்றி. அவரது குடியிருப்போ சிறியது, அதுவும் ஒரு சிலியன் எழுத்தாளரின் குடியிருப்பு, என்ற போதிலும் அங்கு புத்தகங்கள் இல்லாமல் இருந்தது குறித்து நான் கேட்ட ஒரு கேள்விக்கு, மேற்கொண்டு அவருக்கு வாசிக்கவேண்டிய தேவை ஏற்படுவதேயில்லை என்றார்; ஆனாலும் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன எனவும் கூறினார்.
அந்த அறையின் தளம் கண்ணாடியாலானது போல, அவரது குடியிருப்பிலிருந்து மதுவகத்தைக் காண முடிகின்றமாதிரி இருந்ததால் நான் சிறிது நேரம் முழங்காலில் நின்று, கீழே ஆர்வலர்கள் அல்லது அந்தக் கொலைக்கூலிகள் மூவரும் தெரிகிறார்களா எனத் தேடியபோது, எனக்கு அறிமுகமற்ற மனிதர்கள் தாம் குடித்துக்கொண்டும் தின்றுகொண்டும், அநேகமாக ஒரு மேசையிலிருந்து இன்னொன்றுக்கு நகருவதும் மதுவகத்தினுள் மேலும் கீழுமாக அலைவதுமாக, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியைச் சேர்ந்த நாவலில் போல பதற்றம் நிறைந்தவர்களாக இருந்ததைக் காணமுடிந்தது.
சிறிது நேரம் சென்றதும்தான், ஏதோ ஒன்று தவறாகியிருந்தது என்ற முடிவான உணர்வுக்கு வந்தேன். லின்னின் குடியிருப்புத் தளமும் மதுவகத்தின் மேற்கூரையும் கண்ணாடியால் செய்யப்பட்டதாக இருந்தால் மீதி இரண்டு முதல் ஆறு தளங்களும் என்னவாக இருந்தன? அவைகளும் கண்ணாடித்தனங்ளா? பின்னர் நான் மீண்டும் கீழ்நோக்கிப் பார்த்தபோதுதான், முதல் தளத்திற்கும் ஏழாவது தளத்திற்கும் இடையில் எதுவுமேயில்லாமல் காலி வெளிதான் இருந்ததென்பதைத் தெரிந்துகொண்டேன். இந்தக் கண்டுபிடிப்பு என்னை விரக்தியில் தள்ளியது. அட சேசுவே, லின், என்னை எங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்களென, நினைத்த நான், பின்னர், சேசுவே, லின், உங்களை எங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்களென்று நினைக்கத் தொடங்கினேன். நான் மிகக் கவனமாக எழுந்துநிற்கத் தொடங்கினேன்; எனக்குத் தெரியும், இயல்பான உலகம் போலின்றி, இங்கே பொருட்கள் மனிதர்களை விடவும் எளிதில் உடையும் தன்மை கொண்டவை.
நான் லின்னைத் தேடிப் பார்வையைச் செலுத்தியபோதுதான், அவர் மறைந்துபோன அந்தக் குடியிருப்பின் பல்வேறு அறைகளும் சிறியவையாகத் தோன்றாமல், ஒரு ஐரோப்பிய எழுத்தாளருடையதைப்போல், பரந்து விரிந்தனவாக, மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த சிலியன் எழுத்தாளருடையதைப் போல மலிவான வீட்டுவேலையாளும், பெரும் விலைமதிப்பும் நுட்பமுடையதுமான பொருட்களும் கொண்டதுமான இடம் மாறும் நிழல்களும் அரையிருட்டு அறைகளுமான குடியிருப்பில், வழவழப்பான கல்லைப் போன்ற செவ்வியல் நூல் ஒன்றும் மலக்கழிவு போலக் காலவரையற்றதான நவீன நூல் ஒன்றுமாக இரண்டு புத்தகங்களை நான் கண்டபின்னர் மெதுவாக லின்னைத் தேடத் தொடங்கியதும் தான், எனக்கும் குளிரத் தொடங்கி நடுக்கமும் பித்துப்பிடிப்பதான உணர்வும் தொற்றிப் பெருகத் தொடங்கியது.
அந்தக் குடியிருப்பு ஒரு கற்பனையான அச்சு அடிப்படையில் சுழல்வதுபோல நான் தலைக்கிறக்கமாக உணரத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒரு கதவு திறக்க, நீச்சல் குளத்தில் லின் நீந்திக்கொண்டிருப்பதைக் கண்டேன். அகவெப்பத்தோடு இயல்பாற்றலும் குறைவது குறித்துப் பேசுவதற்காக, நான் வாயைத் திறப்பதற்குள், அவர், உயிரோடிருப்பதற்காகச் சாப்பிடும் அவரது மருந்தின் மோசமான குணம் அந்த மருந்து நிறுவனம், அவரை ஒரு கினியாப் பன்றியாக மாற்றிக்கொண்டிருப்பதுதான் என எனக்குக் கேட்கும் அளவுக்குச் சொல்ல, எல்லாமே ஒரு நாடகம் போல் தோற்றமளிக்க, திடீரென்று நான் பேசவேண்டிய வசனமும் சகநடிகர்களின் வசனமும் என் நினைவுக்குவர, பின்னர், லின் நீச்சல்குளத்திலிருந்தும் வெளிவர, நாங்கள் இருவரும் கூட்டம் மிகுந்திருந்த மதுவகம் வழியாகத் தரைத்தளத்துக்குச் செல்கையில், லின், புலிகளின் காலம் முடிந்துவிட்டது,
அந்தக் காலம் இனிமையானதாக இருந்தது, சொன்னால் நீ நம்பமாட்டாய், பொலானோ, ஆனால், இந்த ஊர்ப்பகுதியில் மட்டும்தான் இறந்தவர்கள் நடைப்பயிற்சிக்குச் செல்கிறார்கள், என்றார். அதற்குள் நாங்கள் மதுவகத்தின் முன்பக்கத்தை அடைந்து, ஒரு சாளரத்தில் நின்று, இறந்தவர்கள் சுற்றிலுமாக நடந்துசெல்லும் அந்த விசித்திரமான ஊர்ப்பகுதியின் தெருக்களையும் கட்டிட முகப்புகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் பார்க்கப் பார்க்க, கட்டிடமுகப்புகள் வேறொரு காலகட்டம் சேர்ந்ததாக, நடைபாதையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்துகளும் மவுனித்துக் கிடந்த, ஆனாலும் நகர்ந்துகொண்டிருந்த வேறுகாலகட்டத்துக்குரியனவாக (அது நகர்வதை லின் கவனித்துக்கொண்டிருந்தார்)த் தோன்றின. அந்தப் பயங்கரமான காலம் நிலவியதற்குச் செயலற்றிருப்பதைக் குணாம்சமாகக் கொண்ட தன்மை தவிர வேறு காரணம் ஏதுமில்லை.
http://www.newyorker.com/magazine/2008/12/22/meeting-with-enrique-lihn 
மலைகள் இணைய இதழ், நவம்பர் 18, 2015, இதழ் 86 இல் வெளியானது.

No comments:

Post a Comment